Sunday, July 20, 2025

அன்பினில் விளைந்த ஆரமுது (ஆதியோகி: அத்தியாயம் 4)

 பொதிகையில் சிவாவின் நாட்கள் அமைதியாலும் மகிழ்ச்சியாலும்  நிரம்பியிருந்தன. அவனது தோலில் இருந்த காயங்கள் மெல்ல மெல்ல ஆறத் துவங்கி இருந்தன. அவனது தோல் இப்பொழுது சுட்டெரிக்கும் சூரியனால்   வெந்து போகவில்லை, அவனது காதுகள் கொடூரமான வார்த்தைகளைக் கேட்கவில்லை, எந்தக் கண்களும் அவனை வஞ்சத்துடனும் ஏளனத்துடனும்  பின்தொடரவில்லை. 

 பனி போர்த்திய பொதிகை மலை சிகரத்தின் உச்சியில்  வாழ்ந்து வந்த அவனது குடும்பம், ஒரு மென்மையான வாழ்க்கையை அவனுக்கு உருவாக்கித் தந்தது. 

 அவர்களது வாழ்வு மிக எளிமையானதாக இருந்தது. அவர்கள் குளிர்ந்த பொருநை நீரில் மீன்பிடித்து, ஈரமான மண்ணில் தினை வளர்த்து, பழங்களை சேகரித்து எளிய வாழ்வு  வாழ்ந்தனர். 

 சிவாவின் இயல்பு அவர்களின் உலகத்தை மேலும் மென்மையாக்கியது. விலங்குகள் மீதான அன்பு, நட்சத்திரங்களின் மீதான ஆச்சரியம், தாயின் கதகதப்பு, தந்தையின் அரவணைப்பு, சிவனின் செல்ல குறும்புகள் இவற்றினால் ஆன ஒரு அழகிய உலகம் அன்பினை அச்சாகக்   கொண்டு அங்கே சுழன்று வந்தது. அங்கு எந்தக் குழந்தையும் அவனைப் பரிகசிக்கவில்லை. அந்த புனிதமான இடத்தில், அவன் தன்னை ஆசீர்வதிக்கப்பட்டவனாக  உணர்ந்தான்.

 இருப்பினும் கோடைகாலத்தில், பொதிகையின் மென்மையான வெப்பம் கூட அவனது அறிகுறிகளை மோசமாக்கியது. கையில் அணிந்திருந்த செம்புக் காப்பு அவனது வேர்வையோடு வேதிவினை புரிந்து உடலுக்குள் மெல்ல மெல்ல ஊடுருவத் தொடங்கியது. அது அவனுக்குள் உறங்கிக் கிடந்த அழலைத் தூண்டியது. அவனது இரத்தத்தில் உள்ள தாமிரம் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையைப் போல அதிகம் வெளிப்படாமல் புகைந்து கொண்டிருந்தது . 

 வனவாசிகளுக்கு காடு எப்பொழுதும் தனது ரகசியங்களை எளிதில் வெளிப்படுத்தி விடும். காட்டின் ரகசியங்களை அறிந்த சிவனது அன்னை  சில மூலிகை இலைகளை நசுக்கி, அதன் சாற்றை அவனுக்கு அளித்து, அவனது உடலை குளிர்வித்தார். அது அவனது நோயை மட்டுப்படுத்த  உதவியது. 

 துன்பத்தின் முக்கியமான நன்மை யாதெனில் அது தன்னை அனுபவிப்பவருக்கு பாடங்கள் பல கற்றுக் கொடுக்கும். சிலசமயம் பரிசுகள் கூட வழங்கும்.

சிவனுக்கு நேர்ந்த துன்பங்கள் உடல் ரீதியிலானவை. அதன் காரணமாக அவன் தனது உடலை படிக்கத் தொடங்கினான். அவன் படித்தது உடலின் இயக்கத்தையும் அதன் மாறுதல்களையும். 

 சிவன்  புரிந்துகொள்ளத் தொடங்கினான்: பருவங்கள் மாறுவதையும் அந்த பருவங்களுக்கு ஏற்ப அவன் உடல் மாறுவதையும் அவன் உடலைப் போல நிலமும் பருவத்திற்கு ஏற்ப மாறுதல்கள் கொள்வதையும் அவன் ஆழ்ந்து அனுமானிக்கத் தொடங்கினான்.

காற்றின் வடிவங்கள், மழைக்கு முன் பறவைகளின் நடத்தை, வனத்தின் சமிக்கைகள், பறவைகளின் இடப்பெயர்ச்சி, ஆற்றின் வெள்ளப்பெருக்கு, கூதல் காற்றின் வேகம், நட்சத்திரங்களின் நகர்வு, பருவத்தின் மாறுதல்கள் அனைத்தும் ஒரு ஒழுங்கில் நடப்பது அவனுக்கு புரிய வந்தது.  வெளியில் நிகழும் இது போன்ற மாற்றங்கள்  அவனுக்குள் ஏற்படுத்திய மாற்றங்களை ஆழ்ந்து கவனிக்கத் தொடங்கினான். 

 இப்பொழுதோ  சிவனின் தந்தைக்கு ஒரு பெரும் கூட்டத்தை நடத்த வேண்டிய தலைமை பொறுப்பு ஏதுமில்லை. சிவனின் ஆர்வமும் கூர்ந்து கவனிக்கும் திறனும் அவன் தந்தையையும் தொற்றிக் கொண்டது.

 அவர்கள் இருவரும் பூமியுடன் பேசத் தொடங்கினர். பூமி தனது ரகசியத்தை ஒவ்வொன்றாக அவர்களுக்கு வெளிகாட்டியது. அதில் முக்கியமானது செம்பு தாதுக்கள்.

மலைப் பாறைகளில் மறைந்திருந்த செம்பின்  தாதினை அவர்கள் சேகரிக்கத் தொடங்கினர். 

அவர்கள் ஒரு எளிய குழி உலையை அமைத்தனர், வெப்பத்தைப் பிடித்து வைக்க களிமண்ணால் அதைப் பூசினர். உலர்ந்த கிளைகளை எரித்து கரி தயாரித்தனர், இது கிளைகளையும் எருவையும்   விட அதிக வெப்பத்தை அளித்தது.நெருப்பினை தீவிரப்படுத்த  ஊதுகுழல்களை உருவாக்கினர்.  ஊதுகுழல்களால், அவர்கள் நெருப்பை உக்கிரமாக எரியச் செய்தனர். பலவித முயற்சிகளுக்கும் பிழைகளுக்கும் பிறகு அவர்களுக்கு அது கைவந்தது.

 பல்வேறு முயற்சிகளின் முடிவில் சிவப்பு கல் ஒளிர்ந்து அதிலிருந்து செம்பு இரத்தம் போல் வழிந்தது . சிவா, கண்கள் பிரகாசிக்க பார்த்தான்.

“இது என்ன  அப்பா?”

" இது மற்ற கற்களைப் போல அல்ல மகனே. இது ஒரு உலோகம். உன் கையில் இருக்கும் காப்பு இந்த உலோகத்தால் தான் செய்யப்பட்டது மகனே".

 "இதன் பெயர் என்ன அப்பா ?"

"இதை நான் தாமிரம் என்று அழைப்போமா?" என்றார் அத்தன்.

" நிச்சயமாக அப்பா... அப்போ தாமிரத்தைத் தந்த இந்த ஆறும் தாமிரபரணி ஆகட்டும்,” என்று சிவா அறிவித்தான்.

அவனது தந்தை சிரித்தார். 

 ஓரு நாள் அவன் ஒரு சதுரத்திற்குள் ஒரு சதுரத்தை மணலில் வரைந்து கொண்டிருந்தான் .




“இது என்ன?” என்று அவனது தந்தை கேட்டார்.

“பெரிய சதுரம் நம் வீடு. சிறிய சதுரம்… அது நீங்கள் தான் அப்பா, நீங்கள் இந்த வீட்டின் கோன் . " என்றான்.

சிவா தனது தந்தையின் ஈட்டி அவரிடம் இல்லாததைக் கவனித்தான்.

“நீங்கள் ஏன் உங்கள் ஈட்டியை கோடனுக்கு கொடுத்தீர்கள்?”

“அது குலத்தின் தலைவனுக்கு சொந்தமானது. நான் இனி குலத்தின் கோன் இல்லை.”

“நீங்கள் நம் இல்லத்தின் கோன்." என்றான் சற்றும் தாமதிக்காமல்.

அவனது தந்தை புன்னகைத்தார். “ஆம், என் மகனே. நான் இல்லத்தரசன்.”

சிவா அவருக்கு ஒரு  வலிமையான ஈட்டியை  உருவாக்குவதாக உறுதியளித்தான். 

 அவன் மலை எங்கும் அலைந்து  பலவகை தாமிர தாதுக் கற்களை கண்டெடுத்தான். தந்தையின் உதவியுடன் அவற்றை உருக்கி பலமுனை கொண்ட ஈட்டி ஒன்றை அவன் உருவாக்கினான்.

  அது ஒற்றை-முனை ஈட்டியை விட மீன்களை சிறப்பாகப் பிடித்தது.

ஒற்றை முனை ஈட்டியானது வேகத்திற்கு ஈடு கொடுத்தது. ஆனால் அதன் தாக்குதலில் இருந்து மீன்கள் நழுவின. இந்தப் பலமுனை ஈட்டியில் மீன்கள்  தப்புவதற்கு வழி ஏதுமில்லை.

 பலமுனை ஈட்டியை இலாவகமாக எறிந்து அவன் மீன்பிடித்த வேகத்தை பார்த்த அவனது தந்தை, அவனுக்கு  கொம்பு மகுடத்தை அணிவித்தார்.

“நீதான் உண்மையான வேட்டைக்காரன்,” என்றார். “ இனி இங்கே நீ தான் தலைவன்.

 கொம்பு கிரீடம் அணிந்து பலமுனை ஈட்டியை கையில் ஏந்திய அந்த உருவம் வரலாற்றில் நிலைத்தது.

 பின் நாட்களில் ஹரப்பர்கள் அவர்களின்  கடவுளாக இந்த உருவத்தை நினைவு கூர்ந்தனர். அவர்களின் சித்திர  எழுத்துக்களில் இந்த உருவம் அடிக்கடி இடம் பெற்றது.

                              


 பிரிதொரு நாள் தந்தை வைத்திருந்த துடிப்பறை பயன்படுத்தப்படாமலேயே இருப்பதை கண்ட அவன் தனக்கென ஒரு சிறிய துடிப்பறையை உருவாக்கினான்.  

 அந்த சிறிய துடிப்பறை அவனால் மேலும் மேம்படுத்தப்பட்டது. காட்டு விதைகளை மணிகளைப் போல் கயிற்றில் கோர்த்து பறையின் இடுப்பில்  கட்டினான்.  மணிக்கட்டை அசைப்பதன் மூலம் அதில் ஒலி எழும்புமாறு  மாறுதல்களை செய்தான். அந்தத் துடிப்பறையை தமருகப் பறை என்று அவன் அழைத்தான்.   




அந்த தமருகப் பறையை  தனது பலபல் ஈட்டியில் பொருத்தினான். ஈட்டியை லாவகமாக அசைக்கும் பொழுது அந்த தமிருகப்பறை விரைவாக பேசத் தொடங்கியது. அது அவனது சொந்த கண்டுபிடிப்பு.

 பகலில் சூரியனின் கோபக் கண்கள்  அவன் மீது வெப்பத்தை மட்டுமே உமிழ்ந்தது . ஆனால் இரவின் கண்ணான சந்திரனோ அவனுக்கு குளிர்மையை காட்டியது.

 இரவு நிலவுக்கு தலை காட்டும் வழக்கமுடைய சிவன் அந்தப் பழக்கத்தை பொதிகையிலும்  மாற்றிக் கொள்ளவே இல்லை. இரவின் மீது இப்பொழுது அவனுக்கு துளியும் பயம் இல்லை. ஏனெனில் அவன் கொம்பு அணிந்த காட்டின் தலைவன். கையில் ஆயுதம் ஏந்தியவன். அவனைக் காட்டிலும் அவன் கையில் இருக்கும்  ஆயுதத்தின் மீது அவனுக்கு மிகவும் நம்பிக்கை அதிகம்.

 இரவில் பிறை நிலா ஒரு படகைப் போல் பொருநை ஆற்றில் மிதப்பதை அவன் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பான். இரவின் கண்ணான நிலவைத் தான் அவன் அதிகம் விரும்பினான். பகலில் வானில் தெரிந்தது ஒரே ஒரு கண்தான். ஆனால் இரவுக்கு ஆயிரம் கண்கள் இருந்தது அவனுக்கு வியப்பைத் தூண்டியது.

ஆற்றிலும் சரி வானத்திலும் சரி...இரண்டிலும் மீன்கள் இருந்தன. "நீரில் உள்ள மீனை 'நீர் மீன்' என்றழைக்கிறோம் அப்பொழுது வானத்தில் உள்ள மீனை 'விண்மீன்' என்று அழைப்போமா? " என்றான் சிவன்.

 அன்னையும் சரி, தந்தையும் சரி, அவன் விருப்பத்திற்கு மறுப்பேதும் கூறுவதில்லை. அன்றிலிருந்து அவர்கள் விண்மீனை ரசிக்கத் தொடங்கினர்.

 அவன்  கற்களை வட்டமான வடிவங்களில் அடுக்கத் தொடங்கினான், நட்சத்திரங்களின் இயக்கங்களையும், சூரியனின் பாதைகளையும் அவன் கூர்ந்து அவதானிக்கத் தொடங்கினான்.

 இதுபோல நட்சத்திரத்தையும் நிலவையும் சேர்த்தே அவதானிக்கத் தொடங்கிய பொழுது அவனுக்கு முக்கியமான ஒன்று புலனாகியது.

நட்சத்திர கூட்டங்களுக்கு நடுவில் இருக்கும் நிலவானது, சில சமயம்  கடலில் விளையாடும் சிறுபறவை போன்ற தோற்றம் கொண்ட ‘எழுமீன்’ (stars of Ursa major Charles wain) நட்சத்திரக்கூட்டத்திற்கு அருகில் இருந்தது. 

 ஏழு மீன்கள் இருந்தால் எழுமின் ஆறு மீன்கள் இருந்தால் அறுமீன் என்று அழைக்க தொடங்கினான் சிவன்.


“அம்மா,” என்றான், “நம் மக்கள் சூரியனை மட்டுமே பார்த்தனர். ஆனால் இரவும் கற்பிக்கிறது.

 சில சமயம் அறுமீன் கூட்டத்திற்கு அருகில் முழு நிலவு தோன்றியது. அப்போது சொல்லிவைத்தாற்போல் ஒவ்வொரு வருடமும், மழை முடியும் சமயமாக இருந்தது.

   மேகங்கள் கூடி, கொண்டல் மேகம் வானத்தை உடைக்க, மழை பெய்தது. மழையின் சமயம்  தும்பிகள் தாழப்பறந்தன , உலகம் உயிர் கொண்டது —தவளைகள் கத்தின, பாம்புகள் நெளிந்தன, மயில்கள் நடனமாடின. அவன் பூமியின் தாளத்தை அறிந்து கொள்ள ஆரம்பித்தான் .

 அந்த மழையின் சமயம் காற்று ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே நகர்வதையும் அவன் அவதானிக்க தவறவில்லை. 

தெற்கில் இருந்து வீசிய மென்மையான காற்று தென்றல் போல தாலாட்டியது . 

 மேற்குத் திசையிலிருந்து காற்று வீசிய பொழுது அவனது உடல் அனலாகத் தகித்தது.  குடக்குக்  காற்று பொதுவாக வெப்பமாக இருந்ததை அவன் உணர்ந்து கொண்டான் .

வானின் இரண்டு கண்களாகிய சூரியனும் சந்திரனும் சில முழுநிலவு நாட்களில் ஒன்றாகத்  தெரிவதையும் அவன் அவதானிக்கத் தவறவில்லை.

 அப்படிப்பட்ட ஒரு நாளில் அவனது இடது கண் சந்திரனை பார்க்க ஆவல் கொண்டு திரும்பியது, ஆனால் வலது புறமும் சூரியன் இருந்ததால்  வலது கண் சூரியனைப் பார்க்க ஆவல் கொண்டது.

அவனது கண்களில் பிரகாசமாக தாமிர வளையம் உருவாகி இருந்தது அந்த சூரிய சந்திர வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது. 

பருவங்கள் மாறி மாறி வந்தன. பகல் நீண்டது. பகலோடு சேர்ந்து அவனது உடலின் அழலும் அதிகரித்தது. பின்னர் பகல் சுருங்கி இரவு நீண்டது. அவனது உடலின் அழலும்  குறையத் தொடங்கியது.

 அவன் தனது உடலை பிரபஞ்சத்தோடு ஒத்திசைந்து கவனிக்க ஆரம்பித்தான்.

கொண்டலின் வருகையை ஒட்டி வனம் செழித்தபின், கொண்டல் மேகங்கள் வானில் வலம் வந்தது போலவே, கருப்புநிற பேருயிர்கள் அந்த வனம்வழியே வலம் வருவதைக் கண்டான். பழமையான பாதைகளில் மலைகளில் இருந்து இறங்கி, மெதுவாக நகரும் மலைகளைப் போல அவை காட்டைக் கிழித்துப் பாதைகளை ஏற்படுத்தி நகர்ந்து கொண்டிருந்தன . 

 அந்தப் பேருயிர்களின் ஆகிருதி  அவனுக்கு அச்சமூட்டியது. அவற்றை விரட்ட எண்ணிய சிவன் காய்ந்த கருக்குகளை பிணைத்து கயிற்றினால் கட்டி; தழல் மூட்டி  எரிய வைத்து, அவற்றை சிலம்பு போல் சுழற்றிக் கொண்டே அந்தப் பேருயிர்களுக்கு பயம் காட்டினான். அவன் சுழற்றிய வேகத்தில்  சிறு சிறு பொறிகளும் வட்ட வடிவில் பெரிதாகத் தோன்றின. அந்தப் பெரிய ஒளியை மாவளி என்று அவன் அழைத்தான்.

படம் : மாவளி சுற்றும் மனிதன்
நன்றி:திரு.சுகவன முருகன், திரு பாலபாரதி.

" அவற்றை அச்சப்படுத்தாதே சிவா...

 யானைகள் வனத்தின் சமநிலையை பாதுகாக்கும் தெய்வக் குழந்தைகள் அவை ஒருபோதும் உனக்கு தீங்கு செய்யாது ,” என்று ஆயி மென்மையாகக் கூறினார். “அவை காட்டைப் பாதுகாக்கின்றன.”

ஆனால் சிவாவின் பயம் நீடித்தது, இருளில் ஒரு வேட்டையாடிக்கு பலியாகிய  கொடிச்சியின் முகம் அவ்வப்பொழுது  அவன் மனதில் நிழலாடியது  . 

" சரி அம்மா நான் யானைகளை ஒருபோதும் பயமுறுத்த மாட்டேன். நாம் மா ஒளியை புலிகளை பயமுறுத்த பயன்படுத்துவோம்.”

 அறுமீன் வானில் தோன்றும் சமயம்; காடே செழிப்பில் இருக்கையில்; யானைகள் காட்டின்வழி வலசை செல்லத் துவங்க, பெருவேட்டையை எதிர் நோக்கி வரிப்புலிகளும் விழிப்புடன் அங்கே உலாவின.

 "கவலைப்படாதே,” என்று ஆயி புன்னகைத்தார். “உன் தந்தை இங்கு இருக்கும்போது, பயப்பட ஒன்றுமில்லை.”சிவா தனது தந்தையிடம் பலமுனை  ஈட்டியைக் கொடுத்தான். “அப்பா, இது உங்களுக்கு புலியைக் கொல்ல உதவும்.”

ஆனால் அவனது தந்தை அவனது தோளில் கை வைத்தார். “ஆயுதங்கள் கருவிகள், சிவா. ஆனால் ஒரு தேர்ந்த வீரன் தன் பலத்தை மட்டுமே நம்புவான் ஆயுதங்களை அல்ல. அதை ஒருபோதும் மறக்காதே.”

சிவா அந்த வார்த்தைகளை இதயத்துக்கு அருகில் வைத்தான்.

  தந்தையைப் போலவே ஒரு திறன் மிகுந்த வீரனாக புலியை ஈட்டியை கொண்டு எதிர்ப்பதாக அவன் கற்பனை செய்தான். அவன் கற்பனைக்கு உருவம் கொடுத்தது போல் வானில் ஒரு காட்சி தோன்றியது.

   ஒரு வேட்டைக்காரனைப் போல தோற்றமளிக்கும் ஒரு நட்சத்திரக் கூட்டம்.

 ஒரு தேர்ந்த வீரன் மானை வேட்டையாடுவது போல அது தோன்றுகிறது என்றார் அப்பா. 

 ஆயி புன்னகைத்து, கேட்டுக்கொண்டிருந்தார். “ஆனால் எனக்கு,” என்று அவர் மென்மையாகக் கூறினார், “அந்த நட்சத்திரங்கள் நமது சிவன்  நடனமாடுவது போலத் தோன்றுகிறது."


 அதைக் கேட்டதும் சிவன் மகிழ்ச்சியுடன் நடனமாடினான், அது பிரபஞ்சத்தின் நடனம் போல இருந்தது.

 பொருநை  பெருக்கெடுக்கும் பொழுது அவர்கள் விளைவித்திருந்த பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதில் சிரமமாக இருந்தது. 

சிவா பொருநையின் கரைகளில்  ஒரு புத்திசாலித்தனமான எல்-வடிவ பாதையை செதுக்கினான். அது  ஆற்றின் வேகத்தை மட்டுப்படுத்தி விரைந்து ஓடிய தண்ணீரை செடிகளுக்கு இடையே நடை பயில வைத்தது. இதன் முன்னேறிய வடிவம் தான் ஹரப்பர்களால் பயன்படுத்தப்பட்ட கபர் பந்து. அந்தக் கபர்பந்தின் நீட்சி தான் கல்லணை.

 படம்: gabarband மற்றும் கல்லணை.

ஒரு நாள், செப்பின் தாதுவை தேடிச் செல்லும் பொழுது , அவனும் அவனது தந்தையும் ஒரு விசித்திரமான தாது ஒன்றைக் கண்டனர். அது கனமானது. அதை அவர்கள் நெருப்பிலிட்டு உருக்கினர்.  உருக்கும் குழியின் நெருப்பு மெதுவாக அணைந்து,  குளிர்ந்தபோது,  மீதம் இருந்த  கசட்டில் ஒரு விசித்திரமான விஷயத்தைக் கவனித்தார்கள். இருண்ட சாம்பலுக்கும் இணைந்த கல்லுக்கும் இடையில், ஒரு மங்கலான நிலவு வண்ண ஒளிர்வு காணப்பட்டது. அது செப்பின் சூடான ஆரஞ்சு ஒளிர்வு அல்ல, ஆனால் ஏதோ ஒன்று… பளிச்சிடும் நிலவொளி போல. 

அவனது தந்தை ஆர்வத்துடன் உற்று கவனித்தார் . “இது செப்பு இல்லை,”  என்று முணுமுணுத்தார். “இதற்குள் வேறு ஏதோ மறைந்திருக்கிறது…”தந்தை நெருங்கி, கண்களைச் சுருக்கி, ஒரு கட்டியை விரல்களால் எடுத்து, அதைச் சுத்தப்படுத்தினார். அது மென்மையாக இருந்தது… குளிர்ந்தது… அவர்கள் இதற்கு முன் வடிவமைத்த எதையும் விட வித்தியாசமாக இருந்தது, அது சிவாவின் சூடான உடலில் குளிர்ச்சியைப் பரப்பியது.

“ஆ… நிலவின் குளிர்ச்சி,” என்று அவர் மெதுவாக முணுமுணுத்தார். “ இவள் நிலவின் சகோதரி. அவள் செப்புக்கு பின்னால் மறைகிறாள், ஆனால் சில நேரங்களில் தன்னை வெளிப்படுத்துகிறாள்.”

அவர் அந்த வெள்ளிக் கட்டியை இரு கைகளிலும் பவித்திரமாக எடுத்தார் . “ இது ஆயுதங்களுக்கானது அல்ல சிவா... இது உனது ஆன்மாவிற்கானது, இது உன் அழலைத் தணிக்கும்".

 இரவு, மலைகளுக்கு மேல் நட்சத்திரங்கள் விழித்தெழுந்தபோது, தந்தை ஒரு சிறிய உருக்குழியில் அந்த சிறு வெள்ளிக் கட்டியை உருக்கினார். கொம்பு மற்றும் கல்லால் உருவாக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி, களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட ஒரு சுருள் பள்ளத்தில் அதை ஜாக்கிரதையாக ஊற்றினார்—ஒரு மெல்லிய வளையம், கழுத்தினை சுற்றி அணிவப்பதற்கு ஏற்ப பாம்பின் வடிவில் வடிவமைத்தார். 

அது குளிர்ந்தபோது, அவர் மென்மையான மரப்பட்டையாலும் ஆற்று மணலாலும் அதைப் பளபளப்பாக்கினார், அது நிலவின் துளி போல ஒளிர்ந்தது.அவர் சிவனை நெருங்கினார், அவன் நெருப்புக்கு அருகில் முழங்கால்களை அணைத்தவாறு, அவனது செப்பு ஈட்டியைப் பிடித்திருந்தான். தந்தை அவனுக்கு பின்னால் மண்டியிட்டு,  வெள்ளி வளையத்தை தனது மகனின் கழுத்தில் பொருத்தினார் .

 "இது இந்த மலையின் பரிசு என் மகனே. இந்த வளையமும் இந்த இன்பமான நாட்களும் என்றென்றும் உன் இதயத்திற்கு அருகிலேயே இருக்கட்டும் என் மகனே."

 சிவன் குளிர்ந்த வளையத்தைத் தொட்டான், அவனது விரல்கள் நடுங்கின.  அப்பொழுது வானம் அவனது இதயத்தில் கை வைத்தது போல இருந்தது.

 அவனது தந்தை  அதை ஒரு பாம்பு அதன் வாலை கடிப்பது போல ஒரு கழுத்து வளையமாக உருவாக்கி இருந்தார் 


 "ஏன் அப்பா இதை நாகத்தின் வடிவில் உருவாக்கினீர்கள் " என்றான் சிவன்.

" நாகங்கள் ஒருபோதும் இறப்பதில்லை,” என்று அப்பா மெதுவாகக் கூறினார். “அவை தோலை உரித்து மீண்டும் உயிர்த்து  எழுகின்றன.” அதனால்தான் நாம் அவற்றை தொழுகிறோம்.

 மேலும் சிறிய தோடு ஒன்றையும் செய்து சிவனின் காதில் மாட்டினார்.

 நாள், சிவா பொருநையின் கரையில் ஒரு காலி ஆமை ஓடு ஒன்றைக் கண்டான். ஆர்வமுள்ள அவன், அதை ஒரு  படகாக செதுக்கி, நீரில் மெதுவாக வைத்து, நீரோட்டத்துடன் அதில் பயணித்தான்.

  அவனது தந்தை எச்சரித்தார், அவரது குரல் உறுதியாகவும் ஆனால் மென்மையாகவும் இருந்தது. “ஆற்றின் கீழே நிறைய மக்கள் வசிக்கின்றனர்.  அவர்கள் உன்னைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.” என்றார் அவர்.

அவர் தவறியும் கூட தனது மகன் மக்களால் காயப்படுத்தி விடப் படக்கூடாது  என்பதில் உறுதியாய் இருந்தார்.

  அவனது தந்தை புயல்களால் செதுக்கப்பட்டவர் புலிகளுக்கு அஞ்சாதவர் கல்லை போல உறுதியானவர் ஆனால் இப்பொழுது அவரது உலகம் சிவனை மட்டுமே சுழன்று இருந்தது அவர் மென்மையாகி விட்டார் அவர் ஒருபோதும் தனது மகன் மனம் சுனங்குவதை சகிக்க தயாராக இல்லை. அவரது மகனின் கண்களில் இனி கண்ணீர் விழ அனுமதிக்க மாட்டார்.

 இருந்தபோதிலும் பழைய வாழ்க்கையின் வலிகள் சிவனை கனவில் தொடர்ந்தபடி இருந்தன.

 நெருப்பு மற்றும் இழப்பின் வலிகள் அவனுக்குள் ஆழமாக ஊடுருவி இருந்தன. சில நாட்கள் கனவில் அவன் அதை நினைத்து பிதற்றுவதுண்டு.

ஆயி அவனது நெற்றியில் முத்தமிட்டு மெதுவாக முணுமுணுப்பார், “அன்பு காலத்தையும் குணப்படுத்தும், சிவா.”

அந்த பேருண்மையை அவன் இருக பற்றிக் கொண்டான்.  தாயின் காதலுக்கும்  தந்தையின் தைரியத்திற்கும் இடையில், சிவனின் வாழ்க்கை ஒரு முழு நிலவாக வளர்ந்து பிரகாசித்து வந்தது. அவனது வாழ்வின் முதல் ஐந்து ஆண்டுகள் நெருப்பு மற்றும் பயத்தால் நிழலிடப்பட்டிருந்தன, ஆனால் இப்போது, இந்த அமைதியான குளிர் மிகுந்த பொதிகை மலை உச்சியில் சிறு செடி என இருந்த சிவன்; வேர் விட்டு வளர தொடங்கினான்  

இது என்றென்றும் நீடிக்கும் என்று சிவன்  நம்பினான்.

ஆனால் கடவுள்கள் அமைதியில் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் புயல்களால் செதுக்கப்படுகிறார்கள். சிவனது வாழ்வில் பல புயல்கள் வீசியபடி இருந்தன  ஆனால் அவன் அதை  எதிர்த்து நின்று  பெரிய ஆலமரமென வளர்ந்து நிழல் பரப்பி நின்றான். 

 அப்படி அவன் நின்றபொழுது அவனது முழு ஆகிருதியையும்  காண மற்ற கடவுளர்களால் இயலவில்லை.

 --------

இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்

இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு 

எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்

உடல் கடந்து நின்ற மாயம் யாவர்காண வல்லரோ.


**************

இதன் முந்தைய பாகத்தை படிக்க

1.

2.

3.

4.





No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

ஓங்காரன்

தனது தாய் தந்தையரை இழந்து, இந்த முல்லை நிலத்திற்கு வந்த பிறகு, கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக சிவன் யாருடனும் பேசவில்லை.  ஆனால் இப்போது, முதல் ம...