Saturday, May 30, 2026

'திணையியம். தமிழின் ஆதி மெய்யியல்' புத்தகத்தின் வாசிப்பு அனுபவம்.


 திரு.பாமயன் ஐயா அவர்கள் எழுதிய 'திணையியம்' எனும் புத்தகத்தை வெயில் வாட்டும் வேனில் கால நண்பகல் பேருந்து பயணத்திலே வாசிக்கக் கையில் எடுத்தேன். நிறுத்தம் ஒன்றில் அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமெடுக்க ஆரம்பித்தது பேருந்து. சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் சலசலப்பு. "படியில் தொங்காதே", "மேலே சாயாதே", "உள்ளே தள்ளி நில்", "சில்லறை இல்லையா? " போன்ற கலவையான குரல்கள் செவியில் வந்து விழுந்தன. சூழலின் வெம்மை மனிதர்களின் குரலிலும் வெளிப்பட்டது. ஆச்சரிய படத்தக்க வகையில் இந்த புத்தகத்தின் பேசு பொருளும் அதுவாகவே இருந்தது. 

 ஏதோ ஒரு தேடலில் உந்துதலால்தான் ஒரு புத்தகத்தை வாசிக்கின்றோம் . சிறு வயது முதற்கொண்டு கணிதம், இலக்கணம், இலக்கியம், விலங்கியல், தாவரவியல், புவியியல், சூழலியல் என பல பாட புத்தகங்களை படித்து வந்துள்ளோம். பின்னர் பொறியியல், மருத்துவம், மனோ தத்துவவியல் என தொழில் சார்ந்து படித்தோம். ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த புத்தகங்களை படித்தனர். அத்தனையைப் படித்தும் இந்த தேடலின் முடிவில் கசடற கற்றோமா? கற்றது பயன் தந்ததா? ஞானத்தை கண்டறிந்தோமா? என்றால் ஒரு மிகப்பெரும் கேள்விக்குறியே மனதில் எஞ்சி நிற்கிறது. 

கேள்விகளுக்கான விடையை அறிவியல் நோக்கில் தேடுவது விஞ்ஞானம். விஞ்ஞானம் பொருள்களை ஆராய்கிறது. மெய்ஞானம் பொருளின் தத்துவத்தை ஆராய்கிறது. பொருள் என்பது தனித்த ஒன்று அல்ல, அது மற்றவற்றுடன் கொண்டுள்ள உறவின் காரணமாகத்தான் பொருளாக அறியப்படுகிறது என்று இந்தப் புத்தகம் விளக்குகிறது. 

 நாம் அறிந்த வகையில் தமிழ்க் இலக்கணத்தின் முதல் நூலான தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று 3 அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இதில் பொருள் அதிகாரம் என்பது மக்களின் அக (காதல்) மற்றும் புற (வீரம், போர், ஆட்சி) வாழ்க்கை முறை, மற்றும் செய்யுள் இலக்கணம் பற்றிய விதிகளை எடுத்துரைக்கும் பகுதியாகும். இதில் பாட்டுக்கு உரிய தலைவர்களின் ஒழுக்கத்தை பாடல் பொருளாக பாடுவதை 'திணை' என்றார்கள்.  இந்த வகையிலேயே தான் நமக்கு திணை என்பது பரிட்சயம். ஆனால் இது ஒரு மெய்யியல் கோட்பாடு எனும் கருத்தை இப் புத்தகத்தின் ஆசிரியர் முன்வைக்கிறார். ஆச்சரியப்படத்தக்க வகையில் நாம் இதுவரை கற்று வந்துள்ள பல அறிவியல், சூழியல், மெய்யியல் கோட்பாடுகள் அனைத்தையும் திணையியம் ஒரே உறவியல் பார்வையில் வாசிக்க உதவுகிறது.

 இதற்கிடையில் அடுத்த நிறுத்தத்தில் இன்னும் அதிக கூட்டம் பேருந்தில் ஏறியது. நண்பகல் உச்சம் கண்டது. கூச்சல்கள் அதிகரித்தது. ஆனால் எனது அருகில் அமர்ந்திருந்த இளைஞனை இந்த கூச்சல்கள் பாதித்ததாக தெரியவில்லை. அவன் தனது அலைபேசியில் மூழ்கி இருந்தான். 
  தொல்காப்பியர் கட்டமைத்த விதிகளை எனது அருகில் இருந்த அந்தத் தலைவனோடு பொருத்திப் பார்த்துக் கொண்டேன். 
முதற்பொருள் நிலமும் பொழுதும் என்கிறார் தொல்காப்பியர். இதில் நிலத்தை முதலில் கொண்டு வருவதில்லையே பிணக்கு ஏற்பட்டு விட்டது.
 நான் இருப்பது எவ்வகை நிலம்?

 சுற்றிலும் கான்கிரீட் காடுகள். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் இதில் எதிலும் இந்த கான்கிரீட் காடுகள் அடங்காதே?
 இந்த நிலத்தை பாலையாகக் கொள்ளலாமா?
 பாலைக்கென்று நிலமில்லை என்கிறார்களே?

 இதற்கான விடையையும் புத்தகத்திலேயே வழங்குகிறார் ஆசிரியர். நகரத்திணை என்றும், விருச்சுவல் உலகம் எனும் தனித்தனியாகவும் திணைகளை விரித்துக்கொண்டே செல்வதற்கு இந்த திணையத்தில் இடம் இருக்கிறது என்று இந்த மெய்யியலின் செழுமையை ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

 குறிஞ்சித் திணையில் பல தடைகளைத் தாண்டி தலைவன் தலைவியை சந்தித்தான். ஆனால் இங்கே எனது அருகில் இருக்கும் தலைவன், நொடிப் பொழுதில் பல தலைவிகளின் ப்ரோஃபைல்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான். இந்தத் தலைவனும், அவன் தொடர்பு கொள்ள விரும்பிய தலைவியும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. இருந்தும் செம்புலப் பெயல்நீர் போல் அன்புடை நெஞ்சம்தனை இணைக்கும் எண்ணம் கொண்டு, அவன் தனது விரிச்சுவல் உலகில் காதல் வலையை வீசியபடி இருந்தான். 

 அந்த மெய்நிகர் உலகில் அந்தத் தலைவன் தொடர்பு கொள்ளும் தலைவி உண்மையில் தலைவிதானா? இல்லை fake id யா? என்பதே மிகப் பெரும் கேள்விக்குறி.

 எனவே அந்த மெய்நிகர் திணையின் உரிப்பொருள் உண்மை அன்பை தேடலும் தேடல் நிமித்தமாகவும் இருப்பதை காண முடிகிறது.

 திணை என்பது முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் ஆகிய முக்கலன்களின் கூட்டணைப்பு. இது நிலவியல், சூழலியல், மனத்தியல், அறிவியல் தன்மைகளால் பின்னப்படுகின்றது என்கிறார் ஆசிரியர்.

 முதற்பொருளே அடித்தளம்... நிலமும் பொழுதுமே அனைத்து உயிர்களின் அடித்தளம். கருப்பொருட்கள் வாழ்மைக்கான கூறுகளை கொண்டவை. உரிப்பொருள் என்பது உணர்வு கூறுகள் என்பதை பல சங்க பாடல்களின் வழி ஆதாரத்தோடு விளக்குகிறார் ஆசிரியர். 

 உரிப்பொருள் என்பது சப்ஜெக்டிவ் எலமெண்ட்ஸ் எனும் அக உணர்வுகளின் வெளிப்பாடாகும். ஆசிரியரின் பல்வேறு படைப்புகளின் வழி அது நீருக்கும் பொருந்தும் என்ற செய்தி ஆழ்ந்த சிந்தனைக்கு நம்மை ஆட்படுத்துகிறது.

 உதாரணத்திற்கு தலைவன் தலைவியை பிரிவது பாலையின் உரிப்பொருள் . அங்கே நீரும் நிலத்தை விட்டு பிரிகிறது. குறிஞ்சியில் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் உரிப்பொருளாக வருகிறது. அங்கேதான் நீர் நிறை மேகங்கள் மலையோடு புணர்ந்து நிலத்தில் அருவியாக ஆர்ப்பரிக்கிறது. 

"காதலி அருமை பிரிவில்.
மனைவியின் அருமை மறைவில்.
நீரின் அருமை அறிவாய் கோடையிலே. " எனும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் நினைவுக்கு வருவதை இந்த இடத்தில் தவிர்க்க இயலவில்லை. 

இது மட்டுமல்லாமல் அகத்திணை மற்றும் புறத்திணையில் வரும் உரிப்பொருட்களையும் இணைத்தே பார்க்கிறார் ஆசிரியர்.

 குறிஞ்சியின் உரிப்பொருளான உள்ளம் கவர்தல் மற்றும் வெட்சியின் உரிப்பொருளான நிறை கவர்தல்... இவ்விரண்டும் ஒரே வகையான உணர்வின் வெளிப்பாடு என்கிறார். இந்த கண்ணோட்டத்தோடு பார்க்கையில் ஒவ்வொரு புறத்திணையும் அகத்திணையோடு உரிப்பொருள் அடிப்படையில் பொருந்திப் போகிறது. 
 கைக்கிளை மற்றும் பெருந்திணை இரண்டுமே இயற்கைக்கு புறம்பானது. எனவே அதற்கு நிலமில்லை என்கிறார் ஐயா பாமயன். ஒழுக்கமற்ற செயல்களை செய்வதற்கு பூமியில் இடம் இல்லை என்பது எத்துணை நுண்ணிய பகுப்பு?
இப்பாகுபாடுகளை பகுத்தவர்(கள்) மக்கள் நிச்சயம் இந்த கொள்கைகளை தங்கள் வாழ்வியலோடும் சூழியலோடும் பின்பற்றி வாழ வேண்டும் என்ற நோக்கிலேயே எழுதியிருக்க வேண்டும் என்பது திண்ணம். இதுவரையிலும் இலக்கியத்தின் அடிப்படையிலேயே படிக்கப்பட்டு வந்த திணை பாகுபாடு, ஆசிரியரின் எழுத்தில் ஒரு புதிய பரிமாணத்தை நமக்கு காட்டுகிறது. 

ஐந்திணை எனக் குறிப்பிடுவதால் ஐந்து வகை நிலம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். பாலை என்பது பொழுதால் மட்டுமே அமைவது எனவே அதற்கு நிலம் இல்லை. எனவே நான்கு நிலங்கள் மட்டுமே கணக்கில் வருகிறது.
ஆனால் திணையியத்தை விளக்க முற்பட்ட பல ஆசிரியர்கள் இந்த நிலப்பாகுபாட்டில் முரண்படுவதையும் நாம் காண முடிகிறது.
 எவ்வகை நிலமாயினும் அங்கே அன்பே உரிப்பொருள். பாலை நிலமாயினும் அங்கேயும் அன்பு வெளிப்படும். எனவே ஐந்திணை என்பது 'அன்பின் ஐந்திணை'யைத்தான் குறிப்பிடுகிறது என்று நிறுவுகிறார் பாமயன் அவர்கள்.

 இவற்றை அனைத்தையும் புரியும் வகையில் ஆதாரத்தோடு கூறிவிட்டு 'அன்பின் வழியது உயிர்நிலை' எனவே அன்பே திணை கோட்பாட்டின் ஊற்றுக்கண் என்று இம்மாபெரும் மெய்யியலை ஒரே வரியில் விளக்குகிறார். 
 எந்த ஒரு அறிவியல் கருதுகோளாகட்டும் மாபெரும் கணித சமன்பாடாகட்டும் உலகை காக்கும் அறக்கோட்பாடாகட்டும், அவை அனைத்தையும் ஒரு வரியில் நாம் சுருக்கி கூறிவிடமுடியாவிட்டால்... அது இன்னும் முழுமை பெறாத, அல்லது புரிந்து கொள்ளாத ஒரு கருதுகோளாகத்தான் கருதப்படும்.

' உயிர்' என்பது இன்னும் அறிவியலால் முழுதாக புரிந்து கொள்ளப்படாத ஒன்று. உயிரினை 'அறிவு' (consciousness) எனும் பொருள்படவே தமிழர்கள் கூறியுள்ளனர். ஆனால் தமிழர்களின் உயிரைப் பற்றிய புரிந்துணர்வு மிகவும் எளிதானது.

 அன்பின் வழியது உயிர்நிலை. என்பதே தமிழர்களின் புரிதல்.

 அன்பே உயிரின் அடிநாதம். அதுவே திணை கோட்பாட்டின் அடித்தளமாகவும் விளங்குகிறது. 

 ஆனால் உயிரை விட ஒழுக்கத்திற்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் என்பது தமிழர்களின் கொள்கை.

 ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்கிறார் வள்ளுவர்.

 அந்த ஒழுகலாறு தான் திணையியம் என்று புத்தகம் முழுவதுமே நிறுவிக் கொண்டு வருகிறார் பாமயன் ஐயா. 
 இது போன்ற கருத்துக்களை ஒரு வரியில் சொன்ன வள்ளுவரை, குறிப்பிட்ட இன மத பிரிவுக்குள் அடைக்க பல முயற்சிகள் நடக்கப்பட்டு வருவதை அறிகின்றோம். அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதையும் ஆங்காங்கே இந் நூலின் ஆசிரியர் தரவுகளைக் கொண்டு நிறுவுவதையும் பார்க்க முடிகிறது.

உறவுகளின் வலையாக இயங்குகிறது இந்தப் பேரண்டம் என்பதே தமிழர்களின் புரிதல், அதையேதான் குவாண்டம் இயற்பியலும் வழிமொழிகிறது. எனவே பகிர்வு, கூட்டணி, ஒப்புரவு , சமத்துவம் ஆகியவற்றின் வழியே மட்டும்தான் மனித சமூகம் நிலைத்திருக்க முடியும் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் நாம் அறிய முடிகிறது.

  காதல் வீரம் தவிர மேலும் பல விழுமியங்களை சங்க இலக்கியங்கள் எடுத்துக் கூறுகிறது என்பதை ஒவ்வொரு தலைப்பின் கீழ் அழகாக இப் புத்தகம் விளக்குகிறது.

 வெறும் மனனம் செய்யும் திறனை வைத்து மட்டுமே மாணவனை மதிப்பிடும் தற்போதைய சமூகத்தில், அறிவு என்பது எது என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அறிவு என்பது அளவீடுகளோ தரவுகளோ அல்ல. 
 'அப்பொழுது அறிவு என்பது என்ன?' என்ற கேள்விக்கு மிக அழகாக பதிலை இந்த புத்தகம் தருகிறது.

 தெய்வம் என்பது என்ன? உண்மையிலேயே தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா? என்பதும் ஒரு குழப்பமான கேள்வி. தெய்வம்... இறை... கடவுள்... இவற்றைப் பற்றியும் இந்த புத்தகம் தெளிவான விளக்கத்தை கொடுக்கிறது.

 மேலும் 'எவ்வாறு இத்தகைய மெய்யியல் நம் தமிழ் நிலத்தில் தோன்றி இருக்கக் கூடும்?' என்கின்ற மிகப்பெரிய கேள்விக்கும் இந்த புத்தகத்தில் விடை கூறப்பட்டிருக்கிறது. 

 மேற்குலகின் கோட்பாடுகள் மெய்யியல்கள் எந்த வகை மனநிலையில் இருந்து எழுப்பப்பட்டவை? அதனை காட்டிலும் திணையியம் எவ்வாறு சிறந்தது? ஏன் இது உலகம் முழுமைக்குமான ஒரு மெய்யியல் என்பதை ஆணித்தரமாக இந்த புத்தகம் நிறுவுகிறது.  இந்த மெய்யியலை நாம் இவ்வளவு காலம் தீண்டாமல் வைத்திருக்கிறோம் என்பதே ஒரு குற்ற உணர்வை தருகிறது.

 எனவே இந்த மெய்யியலை ஒவ்வொருவரும் தமது துறையில் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. 

இந்த புத்தகத்தை படித்து முடிக்கையில் தமிழனது மெய்யியலை உலகம் முழுவதும் உணரச் செய்ய வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது என்பதையும் இந்த புத்தகம் நமக்கு புரிய வைக்கிறது. இதன் மூலம் நாம் விரும்பத் தகுந்த மாற்றத்தையும் தனி மனித அளவிலும் உலக அளவிலும் கொண்டுவர இயலும்.  

மாற்றம் முரண்பாடுகளால்.
நடைபெறலாம், உடன்பாடுகள் மூலமாகவும் நடைபெறலாம். ஆனால் உடன்பாடுகள் மூலமாக ஏற்படும் மாற்றம் மட்டுமே நீடித்திருக்கத்தக்கது . முரண்பாடுகளை உடன்பாடு ஆக்குதலை பற்றி இசைவியல் என்னும் தலைப்பில் மிக அருமையாக விளக்கி இருக்கிறார் பாமயன் அவர்கள். Pattern and rhythm எனும் பாங்கு மற்றும் இசைவோட்டம் ஆகியவற்றை, நிலத்துடனும் பொழுதுடனும் பொருத்தி, இணக்கமான சமநிலையை உருவாக்குதலை பற்றி அத்தலைப்பில் விவரிக்கிறார். 

 இதன் மூலம் நீடித்திருக்கத்தக்க ஒரு மாற்றத்தை அனைத்து துறைகளிலுமே நாம் கொண்டுவர இயலும். எனவே இது அனைவருக்குமான ஒரு புத்தகமாக இருக்கிறது. ஆகவே இதை அனைவரும் அனைத்து மொழிகளிலும் படிப்பதற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டியது தமிழர்களின் கடமை.

 சில ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்ந்து பழகி வந்த வாழ்வு முறைகளை... அறநெறிகளை... தமிழர்களின் ஆதி மெய்யியலை ஒரே புத்தகத்தில் நாம் படிக்க இருக்கிறோம் என்பதை மனதில் கொண்டே இந்த புத்தகம் வாசிக்கப்பட வேண்டும். ஒரு புதினத்தை போல் இலகுவாக வாசிப்பதற்கு இந்த புத்தகம் ஏற்றதல்ல. 
இந்த புத்தகத்தின் பக்கங்களை எளிதாக புரட்டி விட முடியாது. 

இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு வரியும் உலக வரலாற்றையும், அறிவியல் உண்மைகளையும், ஆசிரியரது  ஞானத்தையும், ஒரு பொதுப் பார்வையில் விளக்கி... அதை திணையியலோடு தொடர்பு படுத்தி... அது எவ்வாறு தமிழரின் வாழ்வியலாக இருந்தது என்று முடிக்கிறார். அந்த வாழ்வியலை இப்பொழுது பின்பற்றுவதன் மூலம் உலகம் எவ்வாறு சமநிலை அடையும் என்கின்ற நமது அனுமானத்தையும் தூண்டி விட அவ்வரிகள் தவறுவதில்லை.

 உதாரணத்திற்கு பொழுதினை பற்றி விளக்கும் போது, காலத்தை அறிவியல் எவ்வாறு பார்க்கிறது என்பதை விளக்குவதோடு மட்டுமல்லாமல், புத்த மதம் தொடங்கி பல்வேறு மத நிறுவனங்கள் அதை மாயையாகவும் தெய்வமாகவும் அணுக முற்பட்டதையும் விளக்குகிறார். பின்னர் காலம் என்ற வார்த்தை தமிழில் எவ்வாறு உருவாகி இருக்கக்கூடும் என்று தரவுகளோடு விளக்குகின்றார். காற்றுக்கும் அதற்கும் என்ன தொடர்பு, பொருள் நிகழ்வு என்று ஒன்று நடக்கும் பொழுதுதான் நாம் காலத்தை உணர்கிறோம் என்பதையும் தொல்காப்பியரின் வார்த்தைகள் வழி விளக்குகிறார். 

 இதை படிக்கையில் மனம் பல்வேறு வகையில் அலைபாய்கிறது...
நாம் காலமாகாமல் இருக்க 'கால்' எனும் மூச்சே காரணம் என்ற எண்ணம் தோன்றுகிறது. 'அப்போ காலம் தான் எமனா ?' என்ற கேள்வி மனதில் சுழன்றாடுகிறது.
 காலம் என்பதை எழுத்துக்களை உச்சரிப்பதை பற்றி படிக்கும் பொழுது படித்திருக்கிறோமே?
 எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது எடுத்துக்கொள்ளும் கால அளவு... கண் இமைக்க அல்லது கை நொடிக்க ஆகும் கால அளவு ஒரு 'மாத்திரை'... இதைத்தான் ஒரு நொடி என்கிறார்களோ?  
இப்படி எண்ண அலைகளால் மனம் நிலை கொள்ளாமல் அலை பாய்கிறது. அடுத்த பத்தியை வாசிப்பதற்கு தடை ஏற்படுகிறது. பக்கங்கள் நகர மறுக்கின்றன.
 வாசகர்களுக்கு படிக்கும் பொழுது இந்த அனுபவம் நிகழும் என்பது ஆசிரியருக்கு தெரிந்தே இருக்கிறது. எனவே அதை முன்னுரையிலேயே தெளிவு படுத்தி விடுகிறார். இதை ஒரு அடிப்படை நூல் என்று அவர் குறிப்பிடுகிறார். சூழல் கருதி குறைவான பக்கங்களில் இதை எழுதி இருப்பதாக அவர் ஒப்புக் கொள்கிறார். திணை பற்றிய அடிப்படை தரவுகளை எடுத்துக்காட்டினால் போதும் என்ற நிலையில் இந்த நூலை உருவாக்கியதாக அவர் குறிப்பிடுகிறார். எனவே இந்த நூல் பல திறப்புகளுக்கும் திறனாய்வுகளுக்கும் மறுப்பாடல்களுக்கும் வழிவகுக்கும் என்று அவர் நம்புவதாக ஒப்புக்கொள்கிறார்.  இதன் மூலம் அவர் தன்னையும் செழுமைப்படுத்திக் கொள்ள முடியும் என்று; இன்னும் கற்றல் நிலையிலேயே தனது மனநிலை இருப்பதையும் வெளிப்படுத்துகிறார். அதே மனநிலை புத்தகத்தை வாசிக்கும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

 இந்த உலகில் பற்பல நாகரிகங்கள் இருந்து வந்திருக்கின்றன. ஒவ்வொரு நாகரிகங்களும் தமக்கென ஒரு வாழ்வு முறையை கொண்டிருந்திருக்கின்றன. அந்த நாகரிகங்கள் பலவும் அழிந்து விட்டன. 
காலநிலை மாற்றம், காற்று, உணவு, நீர் ஆகியவற்றில் அதிகரிக்கும் நச்சுத்தன்மை, ஆற்றல் பற்றாக்குறை, ஆற்றலுக்கான போட்டி மற்றும் உயிர்களை ஆதரிக்கும் நிலத்தின் திறனின் திரிபு போன்ற சவால்கள் வரும்காலத்தில் சமூகங்களை மேலும் சீர்குலைக்கும். மேலும் நுகர்வு கலாச்சாரத்தாலும் மேற்கத்திய வாழ்வு முறை தாக்கத்தாலும் தனிமனித வாழ்விலும் பற்பல பிரச்சனைகள் நேருகின்றன. உறவு சிக்கல்கள் தலைதூக்குகின்றன. இவை அனைத்திற்குமான தீர்வினை திணையியல் மெய்யியல் கோட்பாடு வழங்குகிறது. 

அன்பையும் அருளையும் அடிப்படை பண்பாகக் கொண்டு, உயிர்மநேயம் பாராட்டினால் மட்டுமே நமது இருப்பு இங்கே உறுதி செய்யப்படும். திணைக்கூறுகளோடு இணைந்து வாழும் பொழுது தற்சார்பு தானாக விளைகிறது. இது மீறப்படும் பொழுது வருங்காலத்தினரின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகிறது. இதுபோல் நாம் தற்பொழுதும் வருங்காலத்திலும் எதிர்கொள்ள இருக்கும் அனைத்து சவால்களுக்குமான   தீர்வை இந்த மெய்யியல் நமக்கு வழங்குகிறது.

 எனவே இது நம் அனைவருக்குமான புத்தகம்.

Wednesday, May 20, 2026

ஏர் முன்னது எருது

  கருப்பொருள் - 2

உணவு:

ஐம்பூதங்களால் ஆனதே இப்பூமி. இப்பூமியில் உலாவும் நம் உடலும் இந்த ஐம்பூதங்களால் ஆனதே. இந்த ஐம்பூதங்களும் ஐம்புலன்கள் வழி உடல் வளர்க்கின்றன. இவ்வாறு உடலைக் காக்கவும் உடலை வளர்க்கவும் புலன்கள் நமக்குத் துணைபுரிகின்றன.

எவ்வாறு இந்த ஐந்து பூதங்களும் உடலாய் ஆனது?”

சுற்றியிருக்கும் கருப்பொருட்களின் உதவியுடன் பெறப்பட்ட உணவால் உடல் உருவானது.

உணவு என்பது என்ன?”

ஒவ்வொரு நிலத்திற்கும் அங்கிருக்கும் காலத்திற்கும் ஏற்ப; விலங்குகளின் தேவையை அனுசரித்து; அவைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை நிலம் மற்றும் நீரின் துணை கொண்டு வழங்குகின்றன தாவரங்கள். அதை எடுத்துக்கொண்டு தமது உடல் வளர்க்கின்றன தாவரஉண்ணிகள். அவற்றை ஊன்உண்ணிகள் வேட்டையாடி உண்ணுகின்றன. உணவுச் சங்கிலியில் இதுபோல ஒவ்வொரு படிநிலையில் இருக்கும் விலங்குகள் தமக்கான உணவை பெறுகின்றன. எனவே தமிழர்களைப் பொருத்தமட்டில் உணவு என்பது நிலத்தொடு நீரே.

உணவே உயிர் வளர்க்கும் சாதனம். அது சூழலில் இருக்கும் கருப்பொருட்களின் துணையுடனே பெறப்பட வெண்டும். உணவு என்பது சூழலில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற கருப்பொருட்களால் பெறப்படுகிறது

அறிவியலும் உணவை உண்ணத்தக்க உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களாகத்தான் பகுக்கிறது.

உயிருள்ள உணவுகள்: தாவரம், பூஞ்சை, ஈசல் போன்ற பூச்சிகள், விலங்குகள், விலங்கு தரும் பால் முதலியவை.

உயிரற்ற உணவாகும் பொருட்கள்: உப்பு, சுண்ணாம்பு முதலிய மினரல்கள், வினிகர், நீர்... போன்றவை..

நவீன அறிவியல், உணவு என்பதை மேக்ரோ என்றும் மைக்ரோ என்றும் பகுக்கிறது. 

 மைக்ரோ என்பவை அளவில் குறைவாகத் தேவைப்படுபவை. மேலும் மைக்ரோக்கள் உடல்நலம் பேணுவதற்கு இன்றியமையாதவை.

மேக்ரோ: மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் அமினோஅமிலங்களை அடிப்படையாகக் கொண்ட புரதங்கள்

மேக்ரோ என்பவை அளவில் அதிகம் உண்ணப்படுபவை. ஆற்றல் மற்றும் கட்டுமானத்திற்கானவை. இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

மாவுச்சத்து:

கீழ்காணும் படத்தில் இருக்கும் ஒவ்வொரு அறுகோண டப்பாவும் ஒரு சர்க்கரை மூலக்கூறு. இதில் கிளைகோஜன் என்பது விலங்குகள் உடலில் எதிர்காலத்தேவைக்காக பொதித்துவைக்கப்பட்ட சர்க்கரைப் பொதி. இந்த செல்லுலோஸ் என்பது தான் நார்சத்து. இதைப்பற்றி தாவரங்கள் பரிணாமத்தைப் பற்றி பார்க்கும் போது நாம் படித்தோமேஞாபகம் இருக்கிறதா? இவற்றையே மாடுகள் முக்கிய உணவாகக் கொள்கின்றன.நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தின் பேப்பர்கூட இதே செல்லுலோசால் ஆனது தான். ஸ்டார்ச் என்பது செடிகள் கிழங்கு வடிவில் சேர்த்து வைக்கும் மாவுச்சத்து. இவற்றில் கிளைகளற்ற சங்கிலி தான் அமைலோஸ். இவற்றை உடைக்கும் நொதியே அமைலேஸ்.


பேப்பரை எரித்தால் சில மணித்துளிகளே எரியும். காரணம் அதில்  ஆற்றல் சிறிதளவே அடங்கியுள்ளது.

கொழுப்புச் சத்து:

செல்லுலோஸ் கொண்ட பச்சைப் புற்களைத் தின்று; வெள்ளைப்பால் தரும் பசுவை; புலி உண்கிறது. பசுவின் ஊனில் கொழுப்பும் புரதமும் மிகுந்து உள்ளது. பாலிலும் நெய்யிலும் ஊனிலும் உள்ள கொழுப்பு; புற்களின் செல்லுலோசிடம் இருந்து பெற்ற ஆற்றலைக் கொண்டு  உருவாக்கப்பட்டது. அது இன்னும் அதிக ஆற்றலை அடர்த்தியாகக் குவித்து வைத்துள்ளது. கொழுப்பையோ நெய்யையோ எரித்தீர்கள் என்றால் அது நாள் முழுக்க எரியும்.  இதன் மூலம் நாம்  கொழுப்பின் ஆற்றல் அடர்த்தியை  அறிந்து கொள்ளலாம்.

புரதச் சத்து:

புரதம் என்பது உடல் கட்டுமானத்திற்கு அவசியமான ஒரு மேக்ரோ

எவ்வாறு வெறும் ABCD… எனும் 26 எழுத்துக்களைக் கொண்டு  பெரும்புத்தகத்தை எழுதுகிறோமோ அதே போல் , நம் உடலும் 20 அமினோ அமிலங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது 

இது போன்ற மேக்ரோ மற்றும் மைக்ரோக்களால் ஆன உணவானது வாய் எனும் குழாயின் ஒருபகுதி ஓட்டை வழியாக உள்தள்ளப்பட்டு, ஆசனவாய் எனும் மறுஓட்டை வழியாக வெளியேறுகிறது. உணவானது வாயால் அரைக்கப்பட்டு, சிறுகுடலில் பித்தம் மற்றும் கணைய நொதிகளால் குளுக்கோஸ் போன்ற அடிப்படை சர்க்கரை மூலக்கூறுகளாகவும், அமினோ அமிலங்களாகவும், கொழுப்பு அமிலங்களாகவும் பிரிக்கப்பட்டு, உறிஞ்சப்படுகிறது. மீதம் இருக்கும் குடல் கழிவுகள், பெருங்குடலுக்குச் சென்று கழிவில் இருக்கும் நீர்சத்து மற்றும் உப்புச்சத்து முதலியன பெருங்குடலில் உறிஞ்சப்படுகிறது. மேலும் குடல் வாழ் நன்மை செய்யும் கிருமிகள் கழிவில் இருக்கும் நார்சத்தின் துணை கொண்டு, பல நல் விட்டமின்களை உருவாக்குகிறது. இறுதியாக ஐம்புலன்கள் வழி நுழைந்த உணவானது  நமது உடலாய் உருவெடுக்கிறது. உறிஞ்சப்பட்டது போக மீதம் உள்ளவை மலமாகிறது. அந்த மலமே நிலத்தில் இருக்கும் சிற்றுயிர்களுக்கான  உணவாகிறது. அதைக் கொண்டு தாவரங்கள் வளர்கின்றன. 


உடலுக்குள் செல்லும்  உணவை உடல் மூன்று விதமாக கையாளுகிறது,

1.       சக்கை (கரும்பு, முருங்கை, பனங்கிழங்கு இவற்றைத்தின்னும் போது நாம் துப்புவது)

2.       சத்து (துப்பியது போக உடலுக்குள் சென்றவை அன்னரசமாய் மாற்றப்பட்டு உடல  உறிஞ்சுவது)

3.       மலம் - மீதம் கழிவுகளாக வெளித்தள்ளப்படுவது.

இவ்வாறு உடலால் உறிஞ்சப்பட்ட ஜீவசக்தியுள்ள இரசாயனப்பொருட்கள் தான், வளி எனும் பிராணவாயுவால் எரிக்கப்பட்டு, உடல் இயங்குவதற்கான ஆற்றலைப் பெருகிறது. இந்நிகழ்ச்சியேதகனம்எனப்படுகிறது. இதை கீழ்காணும் படம் விளக்குகிறது.

இதனால்  சக்தி எனும்அழல்உடலுக்குக் கிடைக்கிறது. இந்த தகனத்தை செய்யும் தகன மேடையாகமைட்டோகான்ட்ரியாஉள்ளது. உணவு சிறுகுடலில் உறிஞ்சப்பட்டு குருதி வழியாக செல்களை அடைந்து அவை செல்களில் தகனம் செய்யப்படுவதை கீழ்காணும் படம் விளக்குகிறது.

ஜீவசக்தியுள்ள இரசாயனப்பொருட்கள் வளியின் துணையுடன் எரிக்கும் இந்நிகழச்சிதான் உயிர்களின் அடிப்படை வேதிவினை. இதே டெம்ப்ளேட் தான் நம் போன்ற அனைத்து ஜீவராசியின் உடல் செல்லுக்குள்ளேயும்  நடக்கிறது.

 இந்த வேதிவினையின் முடிவில் வெளித்தள்ளப்படும் கரியமில வாயுவும் நீரும் தாவரங்களின் சமையலுக்கான மூலப் பொருட்கள். இதைக் கொண்டுதான் அவைகள் உணவை உற்பத்தி செய்கின்றன.

 தாவரங்களும் விலங்கினங்களும் இவ்வாறு இந்த வேதி வினையை எதிரெதிர் பக்கத்தில் நிகழ்த்தி உலகின் சமநிலையை பேணுகின்றன. 

இந்த வேதிவினை நடப்பதற்கு ஆதாரமான ஜீவசக்தியுள்ள இரசாயனப்பொருட்களை உறிஞ்சும் வேலையை ஜீரணமண்டலம் செய்கிறது. பிராண வாயுவை உடலுக்குள் கொண்டுசென்று கரியமில வாயுவை வெளியேற்றும் வேலையை நுரை-ஈரல் செய்கிறது. பிராணவாயு மற்றும் ஜீவசக்தியுள்ள இரசாயனப்பொருட்களை உடல் முழுவதற்கும் கொண்டு செல்லும் வேலையை இரத்தம் செய்கிறது. இந்த இரத்தத்தை தமனி எனும் பைப்புகள் வழியாக அனைத்து செல்களுக்கும் பாய்ச்சும் வேலையை இதயம் எனும் பம்ப் செய்கிறது. இதில் ஈரல் என்னும் உறுப்பு நச்சுப் பொருட்களை உடலில் இருந்து நீக்க பாடுபடுகிறது.

கரியமிலவாயு தவிர்த்த மற்றனைத்து நீரில் கரையும் கழிவுகளையும் சிறுநீரகம் வெளியேற்றுகிறது. அதிகசக்தி தேவைப்படும் பதட்டப்பொழுதில் தகனத்தை அதிகமாகச் செய்யவும், உண்டபின் சீரணிப்பதை பதட்டமல்லா பொழுது  செய்யவும் மூளை மற்றும் ஹார்மோன்கள் வேலை செய்கின்றன. மொத்தமாக இவ்வனைத்து உறுப்புக்களும் சிதறிவிடாதபடி தோல் எனப்படும் பையில் பொதித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வனைத்து மண்டலங்களையும் கட்டுக்கம்பி; சிமெண்ட் வைத்து கட்டியது போல உருவம் கொடுக்கவும் நகர வைக்கவும்; நரம்பு மண்டலத்தின் கட்டளைப்படி  ‘எலும்பு-தசை மண்டலங்கள்வேலை செய்கிறன.

கூறுவேன் தேகமது என்னவென்றால்

        குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி

      மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு

         வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி

      தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி

          தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி

      ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி

           அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே

அந்த வாய்வு போச்சு என்றால், ‘படையப்பன் மூச்சு நின்னு போச்சுஎன்று அர்த்தம்.

இந்த தேகமெனும் பைக் ஓடுவதற்கான பெட்ரோல்தான் உணவு. அந்த உணவிற்கு மூன்று முக்கியமான வேலைகள் உள்ளன.

1.                சக்தி அளிப்பது

2.                உடலின் வளர்சிக்கான வளர்சிதை மாற்றங்கள் மற்றும் உடலின் தேய்மானத்தை சரிசெய்யும் பட்டி டிங்கரிங்க் வேலைகள் செய்வது.

3.                உடலைக் காக்கும் வேலையைச் செய்வது.

 

இந்த மூன்று வேலைகளைப்பற்றிய புரிதல், பழங்கால சித்தமருத்துவத்தை எழுதியவர்களுக்கும் நவீன அறிவியலாலர்களுக்கும் தெளிவாக இருந்திருக்கிறது.

சரி மைக்ரோக்களின் கதைக்கு வருவோம். மைக்ரோக்கள் சிறிதளவே உடலுக்குத்தேவை என்றாலும் அவை உடலுக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள்

மைக்ரோகளை கண்டுபிடித்தது அறிவியல் அறிஞர்கள் மட்டும்தானா? பண்டைய மக்களுக்கு இதைப் பற்றி அறிவு என்பது இல்லையா?”

இந்தப் பெயர் வைத்தது மட்டும்தான் அவர்கள். இதைப் பற்றிய புரிதல் மக்களுக்கு இருந்திருக்கிறது.

அறிவியலாலர்கள்; வெண்ணை, பால் முதலியனவற்றை உண்டால் பார்வை மேம்படுகிறது என்றுணர்ந்தனர். உயிர்வாழ அத்தியாவசியமானவை எனும் பொருள் பட விட்டமின் என பெயர் அந்த சக்திக்கு பெயர் சூட்டினர். விட்டமின் வை அறிவியல் இவ்வாறு கண்டறிந்தது.

பழங்களை பலநாட்களுக்கு பாதுகாத்து வைக்க முடியாது. அந்த காலத்தில்; நொடுந்தூர கடல் பயணங்களில்; பழங்கள் இல்லா உணவை உண்டுவந்த கடல் பிரயாணிகளுக்கு பல் ஈறுகளில் இரத்தம் கசிய ஆரம்பித்தது. எலுமிச்சம்பழத்தை உண்பதன் மூலம் இந்நோய் தவிர்க்கப்படுவதை உணர்ந்த அறிஞர்கள் எலுமிச்சம்பழத்தில் இருக்கும் ஒரு சத்துதான் இதற்கு காரணம் என்று அந்த சத்துக்குவிட்டமின் சிஎன்று நாமகரணம் சூட்டினர். அதுவரை மாவுசத்து, புரம், கொழுப்புச்சத்து மட்டும் தான் கணக்கில் இருந்தது. சில சத்துகள் உணவில் குறைந்தால்  உடல்நலிவுறும் என்ற புரிதல் இவ்வாறு நவீன அறிவியலுக்கு கிட்ட ஆரம்பித்தது. அவற்றிற்கு , பி,சி, டி என பெயர்சூட்ட ஆரம்பித்தனர்.

பனிப்பிரதேசத்தில் பழங்களே இல்லை. அங்கே இருக்கும் எஸ்கிமோக்களுக்கு பல் ஈறுகளில் இரத்தம் கசியும் நோய் இல்லை. காரணம் அவர்கள் சீல்களை வேட்டையாடி உண்ணும்போது அவற்றின் கிட்னியைச் சுற்றி உள்ள கொழுப்பை பச்சையாக உண்டனர். அதை ஆராய்ந்து பார்த்த போது அதில்விட்டமின் சிஇருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு பெயரிடாமலேயே அதைப்பற்றி அறிந்து வைத்திருந்தனர் எஸ்கிமோக்கள்.

சமச்சீரற்ற உணவு  உண்ட பொழுது உடல் தனக்கு என்ன தேவை என்று கேட்கும்.

அதன் அடிப்படையில் அவற்றின் பெயர் தெரியா விட்டாலும் அந்த அத்தியாவசியமான சத்தைஉதாரணத்துக்குவைட்டமின் சியை உடம்பு வேண்டி கேட்டுக்கொள்ளும். மாசமாய் இருக்கும் பெண்கள் புளிப்பான பொருளாய் சாப்பிட விரும்புவது இதன் காரணமாகத்தான். (சாம்பல் cravingகிற்கான காரணம், மினரல்கள் தேவையை உடல் பெறுவதற்காக).

அதேபோல் எகிப்தியர்கள் மாலைக்கண் நோயை சரிசெய்ய ஈரலை உண்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ஈரலில் உள்ள ஏதோ ஒரு சத்து குறைவதால் மாலைக்கண் நோய் வருகிறது என்பதைப் பற்றிய புரிதல் அவர்களுக்கு இருந்தது.

ஆறிவியலாலர்கள் உணவில் உள்ள மைக்ரோக்களை இதுபோல ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்க ஆரம்பித்தனர். இந்த கண்டுபிடிப்புகள் நமக்கு நன்மை அளித்ததை விட முதலாலிகளுக்குத் தான் அதிகம் நன்மை விளைவித்தது.

இதுகாறும் உணவு என்பதுஒவ்வொரு நாகரிகத்திலும் முழுதான ஒரு பண்டமாய் தான் பார்க்கப்பட்டது.

அரிசி என்பது முழு உணவு. முழு அரிசியை விற்றால் லாபம் குறைவு. அப்ப லாபம் அதிகரிக்க என்ன பண்ணலாம்?

அரிசியில் உமியை நீக்கி, குருணையையும் நீக்கி, பட்டை தீட்டி மதிப்புகூட்டி(மதிப்புக் குறைத்து) விற்கப்பட்டது. அதில் உடைந்த விற்பனையாகாத அரிசி கோழிகளுக்கு தீவனமானது. உமியில் இருந்து எண்ணை பிழியப்பட்டு  bran oil  என விற்கப்பட்டது. உமியின் சக்கை குதிரைகளுக்கு உணவாக்கப்பட்டது. ஒத்தை அரிசியில் பலவகை இலாபம் என முதலாளிகள் மகிழ்ந்தனர்.

ஆனால் பட்டை தீட்டிய அரிசியை உண்ட மனிதர்களுக்கோபெரி பெரிநோய் வர ஆரம்பித்தது. கோழிகளுக்குபாலினியூரைட்டிஸ்எனும் வாத நோய் வர ஆரம்பித்தது. கடைசியாக இவ்வனைத்து நோய்களுக்கும் காரணம்  ‘விட்டமின் பி1’ (தையமின்) குறைபாடு என்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டமின் பட்டியலில் மற்றுமொரு விட்டமின் சேர்க்கப்பட்டது.

உமியை குதிரைக்கு கொடுத்தார்களே அது மட்டும் தப்பித்ததா?

பாஸ்பரஸ் அதிகம் இருந்த உமியை உண்டதால் அதன் மண்டை வீங்க ஆரம்பித்தது. இதன்பின்னர் தான் கால்சியமும் பாஸ்பரசும் உடலுக்குத்தேவை, அதிலும் ஒரு விகிதாச்சாரத்தில் தான் அவை உட்கொள்ளப்படவேண்டும் எனும் புரிதல் அவர்களுக்கு வந்தது.

இக்காலகட்டத்தில் தான் உணவைப்பற்றிய ஆராய்ச்சிகள் நிறைய தலைதூக்க ஆரம்பித்தன. ஒரு ஆய்வாளர்; பாலின் புரதம், கொழுப்பு போன்றவற்றை தனித்தனியாக ஒரு எலிக்கூட்டத்திற்கும், ‘பாலைபாலாகவே மற்றுமொரு எலிக்கூட்டத்திற்கும் கொடுத்து பரிசோதித்தார். விளைவு தனித்தனி உணவாக பாலின் கூறுகளை உண்ட எலிகள் செத்து மடிந்தன. ஆனால் பாலை முழு உணவாக உண்ட எலிகள் நல்ல ஆரோக்கியமாக இருந்தன. பாலை எலிக்கு கொடுத்து சாவடித்த பிறகாவது திருந்தினார்களா என்றால் இல்லை. அனைத்தையும் பிரித்து; தனித்தனியாக அவற்றை எவ்வாறு விற்பது என்பதே அவர்களது குறிக்கோளாய் இருக்கிறது

ஆங்கில மருத்துவம் இன்னும் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களை பற்றியும் தெளிவான புரிதலைக் கொண்டிருக்கவில்லை.

 ஒரு உணவை முழுமையாகவே அவர்கள் பார்ப்பதில்லை. உணவு என்பது முழுமையாக உணவு மட்டும் தான். பழங்களிலும் காய்கறிகளிலும் இருப்பவற்றை  phyto nutrients என்கின்றனர். phyto nutrients பற்றிய ஆய்வுகள் பெருமளவில் நடந்துவருகின்றன. இவை புற்றுநோயை கூட எதிர்க்க வல்லவை. எனவே அவற்றையும் தனியாகப்பிரித்து துணைஉணவுகள் எனும் பெயரில் விற்க ஆரம்பித்துவிட்டனர்.தற்பொழுது இவை ஆங்கில மருத்துவத்தில் nutraceuticals என துணை உணவுகளாகவும் மேலும் மருந்துகளாகவும் உபயோகப்படுத்தப் படுகின்றன.

ஆனால் சித்த மருத்துவம் உணவையும் மருந்தையும் தனித்தனியாக பார்ப்பதில்லை. சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை உணவு தான் மருந்து, மருந்து தான் உணவு.

உடலுக்கு சக்தி அளிப்பது, உடலை பராமரிப்பது மற்றும் உடலைக் காப்பது தான் உணவின் முக்கியமான நோக்கங்களாகும்.

 அந்த நோக்கங்களை உணவு எவ்வாறு பூர்த்தி செய்கிறது எனும் அடிப்படையில் தான் சித்த மருத்துவத்தில் உணவு பாகுபாடானது பகுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பருவத்தின் மாற்றத்தால் எந்த சுவை உடலுக்கு அதிகம் தேவைப்படும் என்பதில் மாற்றம் நேரலாம். அதையும் பூர்த்தி செய்யும் நோக்கில் தான் சித்தமருத்துவத்தின் உணவுப் பாகுபாடு அமைக்கப்பட்டுள்ளது.

நிலத்தில் பயன்படுத்திய அதே அடிப்படை கருதுகோளான மூன்றாம் பரிணாமமாகிய பொழுதினையும் உணவோடு இணைத்தே பார்த்தது சித்தமருத்துவம்.

இந்தப் பாகுபாட்டில் மேக்ரோக்கள் மைக்ரோக்கள் முதற்கொண்டு அனைத்து ஊட்டச்சத்துகளும்  மருந்துகளும் அறுசுவை உணவில் அடங்கி விடுகின்றன. இந்த அறுசுவை உணவு ஒழுங்காக எடுக்கப்படாவிட்டால்; ஊட்டச்சத்துக்குறைபாடு    நேரிடலாம்.

சூழியலில் இருக்கும் கருப்பொருட்களைக் கொண்டும்; வாழியல் சார் உணவு முறைகளைக் கொண்டும், உடல் நலத்தை பேணும் வழிவகை செய்வதால் தான்  சித்த மருத்துவம் அனைவருக்குமான  சிறந்த மருத்துவமாக இருக்கிறது.

மருத்துவம் என்பது பிணியை சரி செய்யும் வழிமுறைகள். பிணிகளில் முதன்மையானது பசிப்பிணி. அதுதான் வாழ்வில் அனுதினமும் நம்மை வாட்டும் பிணியும் கூட.

அது மட்டுமல்லாமல் வாந்தி, பேதி, இரத்த சோகை, மஞ்சள் காமாலை, தொற்று நோய்கள் முதலிய பல் வகைப் பிணிகள் நம்மை வாட்டுகின்றன.

பிணிகளின் அறிகுறிகள் என்னென்ன, அவை எவ்வாறு நம் உடலைத்தாக்குகின்றன, இதை நாம் எவ்வாறு சரிசெய்துகொள்வது, என்பது மனிதனாகப்பிறந்த அனைவரின் மனதையும் உறுத்தும் கேள்விகளாகும்.

இந்தக்கேள்விகளுக்கான பதிலை; பண்டைய கால மக்கள் எவ்வாறு கண்டறிந்தனர் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பித்தம், இரத்தம், சளி முதலியன அதிகரிப்பதும் மற்றும் வெளியேறுவது உடலின் பிணியைக் குறிப்பது என்ற அறிவு கிட்டத்தட்ட பண்டைய மக்கள் அனைவருக்கும் இருந்திருக்கிறது. கண்களின் இமைகளை கீழிறக்கிப்பார்த்தாலே காமாலை, இரத்தசோகை போன்றவற்றை mucous membrane காட்டிக்கொடுத்துவிடும்.

இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்த பண்டைய மக்களுக்கு; சாவு என்பது விலங்குகள் வடிவிலோ, விஷத்தின் வடிவிலோதான் பெரும்பாலும் நிகழ்ந்திருக்கிறது. இவற்றினால் ஏற்படும் மரணங்கள் உடனடி மரணங்கள்.

காய்ச்சல், சளி, வாந்தி பேதி போன்றவற்றாலும் மக்களுக்கு மரணம் நிகழ்ந்துள்ளது.  இவை உடனடி மரணத்தை சம்பவிக்காமல் சில நாட்களுக்கு உடலைவாட்டி, இதன் காரணமாய் உடலின் சமநிலை தவறி, பின் மரணத்தை சம்பவித்திருக்கிறது.

 நீண்ட ஆரோக்கிய வாழ்வு பின்னர் வேண்டாத நிகழ்வுகளால் உடனடி சாவு. இவ்வகை சாவுதான் அக்காலங்களில் அதிகம் நிகழ்ந்து வந்திருக்கிறது.  உடனடி இறப்புகளான அரவம்தீண்டி இரத்தம் உறையாமல் வெளியேறி இறப்பது, பித்தவாந்தி எடுத்து உடல்நலிவுற்று மரணம் நிகழ்வது,  சளி மூச்சுத்திணறல்  போன்றவற்றால் ஏற்படும் இறப்புகள், போன்ற சம்பவங்கள் மனிதமனத்தை கலங்கச்செய்திருக்கும் என்பது திண்ணம். இது போன்ற வண்ண திரவங்களின் வெளியேற்றம் மக்களை பெரும் சிந்தனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த ஜலம் அல்லது திரவங்கள் உடலில் மிகுதலே நோய்க்காண முக்கிய காரணியாக பண்டைய காலங்களில் அவதானிக்கப்பட்டது.

  கிரேக்கர்கள் நான்கு ஜலத்தைப் பற்றி (humo[u]rs) குறிப்பிட்டுள்ளனர். blood, phlegm(சளி/கபம்), yellow bile (பித்தம்), மற்றும் black bile. நமது மருத்துவமுறையிலும் இது போன்ற ஜலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் ‘வளி’ என்ற ஒரு கருதுகோளும் நம் மருத்துவ முறைகளில் கூடுதலாக இடம்பெறுகிறது.

வளி (வாத தோஷம்) என்பது ஜலமல்ல, வளியைப்பற்றி  hippocratic corpus புத்தகத்தில் குறிப்புகளேதும் இல்லை. வளி என்பது காற்றை மட்டும் தான் குறிக்கிறதா என்றால் இல்லை. வள்ளுவர் சித்தமருத்துவத்தைப் பற்றிக்குறிப்பிடும் போது ‘வளி முதலாய்’ என்று தான் குறிப்பிடுகிறார். வளியைப் போன்ற ஒரு கருதுகோள் சீனமருத்துவத்திலும் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நமது சித்தமருத்துவத்தின் ‘நாடி’ போன்ற ஒரு கருதுகோள் அது. அதை அவர்கள் “Qi” என்றழைக்கின்றனர். Qi சமநிலை தவரும் போது நோய் உருவாகிறது என்பது அவர்களின் கொள்கை. யிங் மற்றும் யாங் எனும் இரு எதிர் ஆற்றல்கள் இணைந்து Qi வின் சமநிலையைப் பேணுகின்றன. இரு எதிர் துருவங்கள் இணைந்து ‘இரட்டையில் ஒற்றுமை’ சமநிலை பேணுவதே இந்தத்தத்துவத்தின் அடிப்படைக் கூறாகும்.

புத்தமருத்துவத்தின் பாடல்களிலும் ‘சரக சம்ஹிதா’ நூலிலும் வாத பித்த கப தோஷங்கள் பற்றியும், தாதுக்கள் பற்றியும், மலம் எனும் கழிவுகளைப்பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. Samkhya-karika  எனும் நூல் உணவின் குணங்களாக ‘சத்வ தமஸ் ரஜோ’ என்பனவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது. சித்த மருத்துவமும் இதே கருதுகோள்களின் அடிப்படையில் தான் இயங்குகிறது. உற்று நோக்கினால் இந்திய மருத்துவமுறைகள் அனைத்தின் அடிப்படையும் ஒன்றுபோலவே உள்ளன.

“பித்தம், கபம் போன்ற ஜலங்களும் வளி போன்றவையும் என்ன? அவற்றிற்கும் உணவுக்கும் என்ன தொடர்பு? “


'திணையியம். தமிழின் ஆதி மெய்யியல்' புத்தகத்தின் வாசிப்பு அனுபவம்.

 திரு.பாமயன் ஐயா அவர்கள் எழுதிய 'திணையியம்' எனும் புத்தகத்தை வெயில் வாட்டும் வேனில் கால நண்பகல் பேருந்து பயணத்திலே வாசிக்கக் கையில்...