Tuesday, July 29, 2025

நஞ்சேயமுதாய் நயந்தவன் (ஆதியோகி: அத்தியாயம் 7)

ஒரு அந்தி வேளையில், சிவன் பொருநையின் கரையில் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் படுத்திருந்த அந்த நிலம் செப்புத் தாதுக்கள் நிறைந்ததாக இருந்தது.அவனது நாடி, பதற்றமான பறவையின் இறக்கைகள் போல படபடத்தது. தரைக்கு கீழ் இருந்து ஒரு காந்தப்புலன் அவனைத் தூண்ட அவனது மூன்றாவது கண் துடித்தது.

 பூமியில் உள்ள காந்தப் புலனை உணரும் இந்த ஆற்றல் பலருக்கு தெய்வ சக்தியாக தோன்றலாம்.

 ஆனால் வில்சன் நோயுடன் பிறந்த சிவனுக்கு இது ஆபத்தின் எச்சரிக்கை.

 செம்பினை போர் கடவுளின் உலோகம் என்பார்கள். ஆனால் அது அவனுக்கு பித்தத்தை தூண்டியது, அவனது இரத்தத்தில் நெருப்பைப் போல பாய்ந்தது, நரம்புகளை எரியச் செய்தது.

  வயது அதிகமாக அதிகமாக, அவனுக்கு வில்சன் நோயின் நரம்பு சம்பந்தமான அறிகுறிகள் வேறு வெளிப்படத் தொடங்கின. அவனின் இந்த வாத  அறிகுறிகள் மிகவும் கொடுமையானவை.

 அவன் அந்த மணல் பரப்பு முழுவதும் அலைந்து திரிந்தான். கால் வைக்கும் இடமெங்கும் செம்பின் துடிப்பை உணர்ந்தான். நரம்புகளுக்குள் நெருப்பு படர்ந்தது போல் இருந்தது.

 ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவன் பேரமைதியை உணர்ந்தான். அந்த இடத்தில் தன் உள்ளங்கையை மண்ணில் பதித்தான். அங்கு அவனது மூன்றாவது கண்ணின் துடிப்பு அடங்கியது. அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த அழல் அமைதியடைந்தது. அவனது புலன்கள் கூர்மையாகின. அவன் அந்த சூழலை உற்று கவனித்தான்.
 அந்த இடம் முழுவதும் ஊமத்தைச் செடிகள் பூத்துக் குலுங்கின.

 பலருக்கு அவை விஷச் செடிகள். உயிரினங்கள் அவற்றை ஒருபோதும் தீண்டத் துணியாது. ஆனால் அவை பூமியில் கலந்திருக்கும் அளவுக்கு அதிகமான உலோகத்தை தம்முள் இழுத்து வைத்து பூமியை தூய்மைப்படுத்துபவை.பிற்காலத்தைய அறிஞர்கள் இதை phytoremediation என்று அழைப்பார்கள்.

பலருக்கு பிடிக்காத ஊமத்தை சிவனுக்கு உகந்ததாக இருந்தது. அது அவனுக்கு புனிதமான ஒன்று.

 "இவை விஷத்தை குடிக்கின்றன. இவை நிலத்தை தூய்மைப்படுத்துகின்றன,” என்று தனக்குள் அவன் கூறிக் கொண்டான் .
 அந்தக் க்ஷணத்தில் அவனுக்கு இயற்கையின் ரகசியம் ஒன்று புலப்படத் தொடங்கியது. விஷம் என அழைக்கப்படுவது மருந்தாகலாம். மருந்தென அழைக்கப்படுவது விஷமாகலாம். 

 விஷத்திற்கும் மருந்திற்கும் இடையேயான சமநிலைக் கோட்டை அவன் புரிந்து கொள்ளத் துவங்கினான். அழிவுக்கும் இணக்கத்திற்கும் இடையே இருக்கும் மெல்லிய கோடு அது என்று அவனுக்கு உணர்த்தப்பட்டது . 

 சிவனுக்கு தற்போது இரண்டு தேவைகள் இருந்தன ஒன்று வலிமையான உலோகம் மற்றொன்று அவனது நரம்பியல் அறிகுறிகளுக்கான மருந்து.

 மின்னலென தோன்றி மறையும் பழைய நினைவுகளால் வழிநடத்தப்பட்ட அவன் உலைகளையும் ஊதுகுழல்களையும் உருவாக்கி பலவகை தாதுக்களை உருக்க ஆரம்பித்தான்.

 அவன் அந்த நிலப்பரப்பு முழுவதும் தேடி அலைந்தும் செப்பின் தாதுக்கள் மட்டுமே அவனுக்கு கிட்டின. அதில் ஒரு தாதுவை கையில் எடுக்கும் போது அவனுக்கு சற்றே வித்தியாசமாக ஏதோ ஒன்று புலப்பட்டது.

 அவன் கண்டெடுத்தது ஒரு விசித்திரமான கல். அது பச்சை கோடுகளுடன் இருந்தது. பாறைகளின் கீழ் உள்ள ஒரு ஓடையில் இருந்து அதை எடுத்திருந்தான், விளக்க முடியாத ஒரு உள்ளுணர்வால் வழிநடத்தப்பட்ட அவன் அதை உலையில் எறிந்தான்.நெருப்பு சீறியது. நாகங்கள் தப்பி ஓடுவது போல நெருப்புப் பொறிகள் நாற்புறமும் பறந்தன. கலவை உருகியபோது, அது இயல்புக்கு மாறாக உயிர்ப்புடன் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்தது. அவன் அதை திரிசூல வடிவ அச்சில் ஊற்றியபோது, அது திரவ ஆவி போல ஓடியது.

 அது குளிர்ந்தபோது, அவன் திகைத்தான். அவன் செய்த அந்தத் திரிசூலம் செம்பினைப் போல் சிவப்பாக இல்லை—அது வெள்ளி விளிம்புடன் ஒளிர்ந்தது, அவன் இதற்கு முன் உருவாக்கிய எதையும் விட கடினமாக, கூர்மையாக, துல்லியமாக இருந்தது. 
அவன் ஆர்சனிக்கல் வெண்கலத்தை உருவாக்கியிருந்தான்.
 

அவன் அதை சோதித்தான். முழு பலத்துடன் வீசப்பட்ட அந்தத் திரிசூலம் ஒரு மென்மையான கல்லைப் பிளந்தது. 
 அதை பிரியத்துடன் தனது அருகிலேயே வைத்துக் கொண்டான். அதன் ஆற்றலில் குறை ஏதுமில்லை. ஆனால் அதை அருகில் வைத்திருக்கும் பொழுது அவனது இரவுகள் அமைதியின்மையால் நிறைந்தன. அவன் கனவுகளில் இருமினான். அவனது உறுப்புகள் நடுங்கின. அவனது இதயம் இயல்புக்கு மாறான தாளங்களுடன் துடித்தது. அவனுள் உள்ள நாடிகள் அவனை தெளிவாக எச்சரித்தன.

“இது சமநிலை இல்லை. இது ஒரு விஷம்.”

அர்சனிக் ஒரு விஷம். அது வாத நோயை உண்டாக்கும். பல நூற்றாண்டுகளுக்குப் பின் வரப்போகும் அறிவியல் அறிஞர்கள்; இந்த உலோகம் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் வாத அறிகுறிகளை 'ஆர்சனிக்கோசிஸ்' என்று அழைக்கப் போகின்றனர் . 

 உலகம் முழுவதும் கற்காலத்திற்கு அடுத்தபடியாக செம்பின் காலம் தொடங்கியது. உலகம் முழுவதும் செம்பு யுகத்தின் காலம் மிக நீண்டு காணப்பட்டது. இதற்கடுத்து துவங்கிய காலம் வெண்கல யுகத்தின் காலம் .செம்புடன் இயற்கையாக கிடைக்கும் ஆர்சனிக்கை செம்புடன் சேர்த்து உருக்கும்பொழுது அர்சனிக்கல் வெண்கலம் கிடைக்கும்.

 ஆர்சனிக்கல் வெண்கலத்தை மக்கள் கண்டுபிடித்த பிறகு அதன் பாதிப்பை உணர்வதற்கு அவர்களுக்கு பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன.

 கடவுளர்களின் கதைகள் என மக்களால் பேசப்படுபவை அனைத்தும் ஒரு காலத்தில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்த மக்களின் கதைகளே.

  நெருப்பு மற்றும் உலோகத்துடன் தொடர்புடைய மேலை நாடுகளின் கடவுள்களில், கிரேக்க கடவுள் ஹீஃபஸ்டஸ் மற்றும் ரோமன் கடவுள் வல்கன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் வாத அறிகுறியுடையவர்களாகத்தான் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றனர். வானத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டதன் விளைவாக இப்படி ஆனார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. இருப்பினும், இவர்கள் கடவுள்களுக்கு ஆயுதங்கள் மற்றும் கவசங்களை உருவாக்கும் வல்லமை பெற்றவர்களாக விளங்கினர். 

 பல நாகரீகங்களில்  “வாத நோயுடன் இருக்கும் உலோகக் கலைஞன்” என்ற உருவம் ஏன் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு ஒரு சாத்தியமான விஞ்ஞான விளக்கம் ஆர்செனிக் நச்சுத்தன்மை (Arsenicosis) அல்லது உலோக நச்சுத்தன்மை என்பதாகும்.

 பழமையான உலோக உருக்க நடவடிக்கைகளில் ஆர்செனிக், நாகம் (lead) போன்ற நச்சுக் கனிமங்கள் அதிகமாக இருந்தன. இவைகள் உடலில் தேங்கி, நரம்பியல் பாதிப்புகள், தசை சிதைவு, போன்ற உடல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய பாதிப்புகள் நிறைந்த அந்தக் அந்த காலத்தைய உலோகக் கலைஞர்களைை  புனிதப்படுத்தும் வகையில் புராணங்களில் வாத நோய் உடைய கடவுள்கள் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
 
ஆனால் தென்னிந்தியாவில் உருவாகிக் கொண்டிருந்த இந்தக் கடவுள் பிரபஞ்சத்துடன் பேசியவன். தனக்கு உள்ளே கடந்து சென்று தன் உயிருடன் பேசியவன். உலகத்தையும் உடலையும் மூன்றாம் கண் கொண்டு பார்த்தவன்.
 அவனது பேராற்றலால் கற்காலத்திலிருந்து செம்பு காலத்தையும் வெண்கல காலத்தையும் விரல் விட்டு எண்ணுவதற்குள் தமிழகம் கடந்து விட்டது.

 சிவன் என நாம் அழைக்கும் அவன் இன்னும் கடவுள் பதவியை அடையவில்லை. அதை அடையும் மட்டிலும் அவன் தனது அலைச்சலை நிறுத்தப் போவதில்லை.

அவன் மீண்டும் ஒரு வலிமையான உலோகத்தை தேடி அலைந்தான். இந்த முறை அவனது சாபத்தின் பரிசான மூன்றாம் கண்ணால் வழிநடத்தப்பட்டான். அவன் மனிதக் கண்களுக்கு கட்புலனாகும் ஒளி அலை வரிசைகளுக்கு உட்பட்ட வெளிச்சத்தைக் கொண்டு தேடவில்லை. உணர்வால், பூமிக்கு அடியில் உள்ள உலோகங்களின் காந்த ஓட்டத்தை பின்தொடர்ந்தான்.

 அலைச்சலின் விளைவாக மழை ஆசிர்வதித்த மலைகளில், அவன் தகரத்தைக் கண்டான்.அதிலிருந்து, அவன் தகர வெண்கலத்தை உருவாக்கினான். ஆனால் அவன் ஆர்சனிக்கை முற்றிலும் கைவிடவில்லை. மாறாக, அதை ஆராய்ந்தான். சமநிலைப்படுத்தினான். மாற்றினான். சிறிய அளவுகளில் அவற்றை விஷச் செடிகள் என அழைக்கப்படும் ஊமத்தை எருக்கம் செடி போன்றவற்றின் இலையுடன் தேய்த்து, புனித சாம்பலுடன் கலந்து—அவன் மாத்திரைகளை உருவாக்கினான்.

 அர்சனிக் எனப்படும் வெண் பாஷாணம் வாதத்தைத் தூண்டக்கூடியது. ஆனால் வெண் பாஷாணத்தைக் கொண்டு அவனது வாத அறிகுறிகளை மட்டுப்படுத்திக் கொண்டான்.

 முள்ளை முள்ளால் எடுத்தான்.

 அவனிடம் தற்பொழுது வாதத்தை மட்டுப்படுத்தக்கூடிய மருந்தும் இருக்கிறது, ஆற்றல்மிகு  உலோக ஆயுதமும் இருக்கிறது.

 யாராலும் எதிர்க்க முடியாத ஒரு சூலத்தை உருவாக்கிய பெருமிதத்தில் சிவன் தனது பசுக் கூட்டத்திற்கு அருகில் அவற்றை கண்காணித்தபடியே உலவி வரத் தொடங்கினான். அவனைப் போலவே பேராற்றலுடன் வலம் வந்து கொண்டிருந்த அந்த வெள்ளைக் காளை சிவனை இன்னும் நம்பியது போலத் தெரியவில்லை. சிவனை ஒரு சந்தேக கண்ணுடனே அது பார்த்துக் கொண்டிருந்தது.

 ஒரு நாள் சிறிய கன்று ஒன்று அரவம் தீண்டி வாயில் நுரை தள்ள துடிதுடித்துக் கொண்டிருந்தது . அதன் உறுப்புகள் இறுகின. அதன் மூச்சு மெலிந்தது.
சிவா அமைதியாக மண்டியிட்டான். அவன் ஒரு கருப்பு மாத்திரையை நசுக்கி, கன்றின் நாக்கின் கீழ் வைத்தான்.

 சிவன் நஞ்சுக்களின் கடவுள். நஞ்சுக்கள் அவனது பேச்சிற்கு கட்டுப்பட்டு நின்றன. நஞ்சினை அமுதமாக்கும் வித்தை தெரிந்தவன் அவன்.

 சிவனின் கரம் பட்ட அந்த கன்று அசைந்தது. பின்னர் மூச்சு விட்டது. எழுந்து நின்று அசைந்து சென்று தனது தாயின் மடியில் பாலைக் குடித்தது.

 இவை அனைத்தையும் தூரத்திலிருந்து அந்த வெள்ளை நிறக் காளை பார்த்துக் கொண்டே இருந்தது.

 இந்நிகழ்விற்கு பிறகு சிவனை அது சந்தேகத்துடன் பார்க்கவில்லை.

ஆண்டுகள் செல்லச் செல்ல, சிவனின் கண்டுபிடிப்புகள் மேலும் அதிகரித்தன. அவன் ஈயத்தைக் கண்டறிந்தான்.
 அதைத் தொட்ட பொழுது அவனது புலன்கள் பின்வாங்கின. அதுவும் ஒரு விஷம். ஆனால் பல்வகை உலோகங்களை சேர்த்து செய்யப்படும் கலவைகளில் அதன் விஷம் மட்டுப் பட்டது. 

அவன் தங்கத்தைக் கண்டான். ஒளிரும் இயல்புடைய, என்றுமே மங்காத அந்த உலோகம் கட்டமைப்பில் வலிமையற்றது, ஆனால் ஆன்மீகமாக ரீதியில் ஆற்றல் உடைய உலோகம் அது என்று உணர்ந்து கொண்டான்.  அது அதிர்வுகளை அமைதிப்படுத்தியது. உலோக கலவைகளை உறுதிப்படுத்தியது. ஆன்மாவை மயக்கியது.

ஒரு நாள், அவன் இன்னும் பெரிய ஏதோ ஒன்றினை கால்களுக்கு கீழ் உணர்ந்தான். அது அவனது நரம்புகளை எல்லாவற்றையும் தூண்டியது, பூமிக்கு அடியில் மின்னல் ஊர்வது போல அவனுக்குத் தோன்றியது . 

 முல்லை நிலத்திற்கு அப்பால் இருந்த மனித குடியிருப்புகள் நிறைந்த மருத நிலத்தில் அந்த உணர்வு மையம் கொண்டது.

 அந்த உலோகத்தை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் அவன் தயாராகவில்லை. அந்த உலோகத்தை உருக்குவதற்கு முன் அவன் சில புயல்களை சந்திக்க வேண்டி இருந்தது.

 சிவன் உலோகவியலை வெறும் ஆற்றலுக்கு பயன்படும் கருவிகளை உருவாக்க மட்டும் பயன்படுத்தவில்லை. அவனுக்கு, அது ஒரு சடங்கு, மருந்து. 
சமநிலை பேண உதவும் ஒரு அற்புதக் கலையாக உலோகவியல் அவனுக்கு இருந்தது.

 அவனைப் பொறுத்தவரையில் உலை ஒரு கோயில். பட்டறை, ஒரு பலிபீடம்.நெருப்பு, ஒரு தூய்மைப்படுத்தி.

அவனது கலவைகள் வெறும் போர்க் கருவிகள் இல்லை. அவை எதிர்காலத்தின் மருந்துகள்.
அவனது சின்னங்களான திரிசூலம், பாம்பு, பிழம்பு போன்றவை வெறும் புராணக் கதைகளில் வரும் குறியீடுகள் அல்ல. அவைகளே தமிழக நாகரிகத்தின் ஆணிவேர்.

இந்த புனித நெருப்பின் கரங்களில் இருந்து தான் தமிழகம் முன்னேறியது. மற்ற நாகரீக மக்கள்  இருளில் தடுமாறும்போது, அவனது மக்கள் உடலையும் உள்ளத்தையும் இயற்கையையும் அவனது வழிகாட்டுதல்களால் சமநிலைப்படுத்தினர். மூலிகைகளாலும் பஸ்பங்களாலும் நோய்களை குணப்படுத்தினர், அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒரே தராசில் நிறுத்தினர் .

 இதன் விளைவாக தமிழகம் உலகுக்கே வழிகாட்டியாக விளங்கியது.

 வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த அவனை வானுறையும் தெய்வத்துக்குச் சமமாய் வைத்துத் தொழுதது தமிழகம்.
---------

இருள்கெட அருளும் இறைவா போற்றி 
 தளர்ந்தே னடியேன் தமியேன் போற்றி 
களங்கொளக் கருத அருளாய் போற்றி 
அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி 
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி 

----

Friday, July 25, 2025

மாற்றரும் கணிச்சி மணிமிடற்றோன் (ஆதியோகி: அத்தியாயம் 6)

அது ஒரு சுட்டெரிக்கும் பகல் பொழுது. சுற்றிலும் புதியதோர் உலகம். 

சிவா எல்லாவற்றையும்  புதிதாகப் பிறந்த கன்றைப் போலப் பார்த்தான்.

ஒவ்வொரு ஒலியின் அதிர்வு, காற்றில் தவழ்ந்து வரும் மணம், ஒளியின் கீற்று, வெப்பத்தின் சூடு  ஆகியவை அவனுக்கு மிகவும் அந்நியமாகவும், புதியதாகவும் இருந்தன. 

அவனது கரம் தமருகப்பறை கட்டப்பட்டிருந்த திரிசூலத்தை இறுகப் பற்றியிருந்தது. அது அவனது மறந்துபோன வாழ்க்கையின் மிச்சமிருக்கும் ஒரே எச்சம்.

சூரியன் அவனது வெளிறிய தோலை எரித்தது.
 
பசியோ அவனது வயிற்றைக் கிள்ளியது. 

திடீரென, மங்கலான ஒரு உருவம் எரியும் நெருப்பின் நடுவில் இருந்து மகனே என்று கத்தியது போன்ற உணர்வு அவனுக்குள் எழுந்தது ... அதைத்தொடர்ந்து முகத்தை நோக்கி பாயும் ஒரு புலியின் உருவம்... 

அவன் தடுமாறிப் பின்வாங்கினான், மூச்சு அதிகரித்தது. திரிசூலத்தை இறுகப் பற்றினான். நதியின் அலைகள் அவனது கால்களை தீண்டியபடி இருந்தன. திடீரென்று மின்னலைப் போல் நீரிலிருந்து ஒரு மீன் தாவியது.

 கானகத்தின் பழம்பெரும் வேட்டையாடிகளின் வாரிசான அவன் உள்ளுணர்வு உந்துதலால் கையில் இருந்த சூலத்தை மீனை நோக்கி விட்டெறிந்தான்.

அதன் மழுங்கிய முனைகள் மீனைக் கொல்லத் தவறின. 

பசி நீடித்தது.

 அப்போது காற்றில் இருந்து சுகந்த மணம் ஒன்று அவனைச் சுண்டி இழுத்தது. அந்த மணம் அருகில் இருந்த மாமரம் ஒன்றிலிருந்து வந்தது. அவன் மாமரத்தை உற்று நோக்கினான். அந்த மரத்தில் இலைகளுக்கு நடுவில் பச்சை நிறத்தில் இலைகளைப் போலவே மாங்காய்கள் இருந்தன. அவை தன்னை யாரும் தீண்டக் கூடாது என்று உருமறைப்பில் இருந்தன. அவற்றை சிவன் புசித்த பொழுது புளிப்புச் சுவை நாவில் ஏறியது.  

 அவன் மாமரத்தை உற்றுப் பார்த்தான். தங்க நிறத்தில் சில பழங்கள் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு சுகந்த மணத்தால் அவனை ஈர்த்தது. கண்களால் பார்த்ததை கைகளால் பறித்தான். கண்களுக்கு கீழ் இருந்த நாசியினால் மாம்பழத்தை நுகர்ந்தான். தன்னை புசி என்று சுகந்த மணத்தால் மாம்பழம் அவனை அழைத்தது. வாயில் எச்சில் சுரந்தது. அதை ஆவலுடன் கடித்தான் மதுரம் நாவைத் தீண்டியது. வயிற்றில் எரிந்து கொண்டிருந்த அழலுக்கு அந்த மாம்பழம் உணவாக அமைந்தது. அவனது உடல் உயிர் பெற்றது.

  எது பாதுகாப்பானது, எது பாதுகாப்பற்றது என்று அவனுக்கு உள்ளுணர்வு அறிவுறுத்தியது. மனதில் ஆழத்தில் எங்கோ ஒரு மூளையிலிருந்து அந்த அறிவானது அவனுக்கு வெளிப்பட்டு தூண்டப்பட்டது. நினைவிலிருந்து அல்ல, சிந்தனையை விட பழமையான ஒரு இடத்திலிருந்து அது கிளர்ந்து எழுந்தது .

  பழைய நினைவுகள் அவனை முற்றிலுமாக கைவிடவில்லை. அவ்வப்போது ஏதோ ஒன்று அவனுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்தது. இருப்பினும் அவன் உலகை புதிதாக படிக்கத் தொடங்கினான்.

 அவன் அந்தச் சூழலை உற்று கவனித்தான். அந்த முல்லைவனம் பல்வகை உயிரினங்களால் நிரம்பி இருந்தது. அந்த விலங்குகள் ஒவ்வொன்றையும் அவன் உற்று நோக்கினான்.

 குரங்குகளுக்கு அவனைப் போல் கைகள் இருந்தன. பறவைகளுக்கு கைகளுக்கு பதில் இறக்கைகள் இருந்தன.

 மரங்களும் செடிகளும் தங்கள் நுனியில் தருவதை  இவ்விரு வகை உயிர்களும் உண்டன. மேய்வன எல்லாம் இலைகளை உண்டன. கொல்லுண்ணி விலங்குகள் இவை அனைத்தையும் வேட்டையாடி உண்டது.

 வயதான மரங்களும் செடிகளும் பறவைகளும் விலங்குகளும் மடிந்து பூமியில் விழுந்தன.

 உயிரிழந்த அனைத்தையும் பூமி உண்டது. அந்த பூமியில் இருந்து மீண்டும் உயிர்கள் ஜனித்தன. 

இந்த சுழற்சி புனிதமானது. இதுவே இந்த உலகை நிலையாக சுழல வைக்கிறது என்பதை சிவன் புரிந்து கொண்டான்.

ஒவ்வொரு காலையும் சிவனுக்கு ஒரு புதிய பிறப்பாக இருந்தது. அங்கே அவனுடன் பேசுவோர் யாரும் இல்லை, வழிநடத்துவாரும் யாருமில்லை. அவன் தன்னிடமே பேசிக் கொண்டான். தன்னைத்தானே வழிநடத்திக் கொண்டான். தனக்குத்தானே கற்பித்துக் கொண்டான்.

சிவன் அந்த காட்டில் வெறுமனே உயிர் பிழைத்திருப்பவனாக இருந்திருக்கவில்லை. மனிதர்கள் காண மறந்த புதியதொரு பரிணாமத்தின் வழி அவன் இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

 அவன் கற்கத் தொடங்கினான். அவனுக்கு அவனே கற்பித்துக் கொள்ளவும் தொடங்கினான்.

 அவனது கற்பிதங்கள் புதிதானவை. அவனது கற்பிதங்கள் புரட்சிகரமானவை. 

 அவன் கற்ற அந்தக் கற்பிதங்கள் இந்த உலகை வழி நடத்தப் போகிறது . அந்த கற்பித்தங்கள் ஆயிரம் ஆயிரமாண்டுகளாக மனிதர்களின் வாழ்வில் எதிரொலிக்கப் போகிறது .

ஆனால் இப்போதைக்கு, அவன் உடலிடமும் இந்த பிரபஞ்சத்திடமும் பாடங்களை கேட்டுக் கொண்டிருந்தான்.
நாட்கள் செல்லச் செல்ல, அவன் உள்நோக்கி திரும்பினான்—அவனது உடலை கவனித்தான்: அதன் நடுக்கங்கள், துடிப்புகள், தாளங்கள் ஒவ்வொன்றும் அவனுக்கு புரிபடத் தொடங்கியது.

அவன் உண்ட பழங்கள்தான் அவனுக்கு உயிர் ஊட்டின. அந்த உணவே அவனது உடலின் எரிபொருளாக இருந்தது. அதிலிருந்து அவனுக்கு அழல் என்னும் ஆற்றல் கிடைத்தது. ஆனால் அந்த அழல் சூரியனிடமிருந்து வந்தது. பூமி நீர் காற்று இவை அனைத்தும் ஒன்றிணைந்து உணவை உருவாக்கின. உணவானது சூரியனின் பிழம்பை அதற்குள் பிடித்து வைத்திருந்தது.

 வானில் எரியும் அதே பிழம்பு தனக்குள்ளும் கொழுந்துவிட்டு எரிவதை அவன் உணர்ந்தான்.

 பிரபஞ்சத்தால் அவன் வாழ்ந்தான் . அவனால் பிரபஞ்சமும் வாழ்ந்தது .

 அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்திலும் இருக்கிறது பிண்டத்தில் இருப்பது தான் அண்டத்திலும் இருக்கிறது என்ற பேருண்மையை அவன் உணர்ந்தான்.

அவன் ஓடும்போது, வெப்பம் உருவாகியது.அவனது மூச்சு அதிகரித்தது. அழல் அவனது மார்பில் பாய்ந்தது. இந்த நெருப்புக்கு பித்தம் என பெயர் வைத்தான் அந்த பித்தன்.

 அந்தப் பித்தமானது சூரியன் உச்சிக்கு வரும் பொழுது உடலில் உச்சம் கண்டது. அவன் போராடும் பொழுதும், அவன் ஆவேசம் கொள்ளும் பொழுதும் அது தூண்டப்பட்டது. இரவின் பொழுதும், தூக்கத்தின் பொழுதும், மௌனத்தின் பின்பும் அது மட்டுப்பட்டது. 

பருவங்கள் மாறும்போது, அவனது உடலில் சமநிலையும் மாறியது.உணவு, இயக்கம், உணர்ச்சி— அனைத்தையும் அவன் தனது உடலின் அழலைக் கொண்டு மதிப்பிடத் தொடங்கினான்.

 அந்த அழலை குளிர்விக்க, அவன் ஆற்று சேற்றை நெற்றியில், மார்பில், தோள்களில் முழுவதும் பூசினான்.

 அப்பொழுது எழுந்த உணர்வு அவனுக்கு பழக்கப்பட்ட உணர்வாக இருந்தது.
 "சேற்றுடலோன்... மாயாவி... " என்ற சிறுவர்களின் கெக்களிப்பு அவனது கபாலத்திற்குள் ஒலித்தது. அவனது விலாக்கள் நினைவில் இறுகின. முகங்கள், குரல்கள், நிழல்கள் அவனது மனதில் அலையாடின.  அவனது கடந்த காலம் இலைகளின் வழியாக உடைந்த ஒளி போல மின்னியது.ஆனால் எதுவும் அவனுக்கு தெளிவாக நினைவில்லை. 

 ஏதோ ஒரு இனம் புரியாத வலி அவனுக்குள் எழுந்தது.
இருப்பினும், அவன் முன்னோக்கி நடந்தான். ஆனால் இந்த முறை, அவன் தெளிவாக இருந்தான். அவனது நடையில் எந்தத் தடுமாற்றமும் இல்லை.

வெளியே உள்ள வெப்பமும், உள்ளே உள்ள அழலும் —எதிரிகள் இல்லை. அவை தான் உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றன எனும் உண்மையை அவன் உணர்ந்து கொண்டான்.

 கற்களை எடுத்து காய்ந்த கருக்குகளை குவித்து நெருப்பினை மூட்டினான்.

தோலை சுட்டெரிக்கும் அதே நெருப்பு உணவை சமைத்தது, உலோகத்தை வடிவமைத்தது, நட்சத்திரங்களை ஒளிரச் செய்தது.அவனது கடந்த காலத்தை எரித்த அதே பிழம்பு இப்போது அவனது பாதையை ஒளிரச் செய்தது.

இவை தான் இந்த உடலின் விதிகள் என அவனுக்கு புரிந்தது. இந்த விதிகள் கல்லில் செதுக்கப்படவில்லை, ஆனால் அவனது சதையில் மூச்சில் குருதியில் பிரித்தறிய முடியாதபடி கலந்து அந்த விதிகள் அவனை வழி நடத்தியபடி இருந்தன.

அவன் மூச்சை ஆராய்ந்தான். அது நெருப்புக்கு எரிபொருளாக இருந்தது. அந்த எரிபொருள் உடலில் அதிகமாக எரியும் பொழுது அவனது கை மணிக்கட்டில் உள்ள தமணி வித்தியாசமாக துடித்தது. அதன் துடிப்பு அவனது தமருகப்பறையின் தாளத்துடன் பொருந்தியது. அவன் தனது பறையை இசைக்க ஆரம்பித்தான்.

அவன் அதை வாசிக்கும்போது, எழுத்துக்கள் அவனது கண்ணில் மின்னின. அந்த எழுத்துக்கள் அவனுக்கு மிகவும் பழக்கமானவை... அவை மிகவும் பழமையானவை.

ஒரு நாள், வியர்வை அவனது செப்புக் காப்புடன் கலந்தது. செம்பு அவனது உடலுக்குள் தோல் வழி ஊடுருவியது.
ஒரு விசித்திரமான வெப்பம் அவனது கையில் ஒரு உயிருள்ள புழு போல ஊர்ந்தது. அதை நாடி என்று அவன் அழைத்தான்.
 
சிலவற்றை உண்ணும் பொழுது அந்த நாடி துடித்தது. சிலவற்றை உண்ணும் பொழுது அந்த நாடி தணிந்தது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அவன் ஆராய முற்பட்டான்.

 செம்புக் காப்பு வியர்வையில் நனையும் பொழுதெல்லாம் அவனுக்கு பித்தம் அதிகரித்தது.அந்த செம்பை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் ஒரு பிம்பம் அவனது மனதில் நிழலாடியது —அவனது தந்தை அதை உருக்குவது, சுத்தியால் அடிப்பது, வடிவமைப்பது....

 பதறிய அவன், காப்பை கழற்றினான். ஒரு காலத்தில் பாதுகாப்பின் சின்னமாக இருந்த செப்பு, இப்போது உள்ளே எரியும் நெருப்பை தூண்டியது. அது இனி அவனுக்கு உதவப் போவதில்லை —அது அவனை பலவீனப்படுத்தியது.

ஆனால் அவன் இன்னுமொரு உலோகத்தை அணிந்திருந்தான்.  நாகத்தின் உருவத்தை கொண்ட ஒரு வெள்ளி வளையம் அவனது கழுத்தை சுற்றியிருந்தது. அவனது தந்தை அவனுக்கு அணிவித்த அன்பின் அடையாளம்.

 அது அவனை குளிர்விக்கத் தவறவில்லை. ஆனால் அவனது வெளிறிய தோலில், விசித்திரமான மாற்றத்தை அது ஏற்படுத்தியிருந்தது.

 அவன் செப்புக்காப்பை அணிந்திருந்த கையில் பச்சை நிற கறை ஒன்று தோலின் மேல் படிந்திருந்தது
, காலப்போக்கில் அந்தக் கறை மெதுவாக மறைந்தது. 

ஆனால் வெள்ளியினால் ஏற்படுத்தப்பட்ட கறை ஆழமானது. ஒரு நுட்பமான நீல நிறம் அவனது தோலில் படிய ஆரம்பித்தது.

 எவ்வளவு கழுவினாலும் தோலை விட்டு நீங்காத நீல நிறக் கறை அது.

 இதை தற்போதைய மருத்துவர்கள் கண்டால் localized argyria என்று அழைப்பார்கள். அது தீங்கற்ற ஒரு தழும்பு என்று கூறி விடுவார்கள்.

 ஆனால் அக்காலத்தைய மனிதர்களுக்கு நீல நிறம் என்பது மிகவும் அரிதான ஒன்று.

 கழுத்தில் இருக்கும் இந்த நீலக்கரையின் காரணமாக நீலகண்டன், மணிமிடற்றோன், மிடற்றண்ணல் என்று பல்வகை பெயர்களால் அவனை  அழைக்க போகிறார்கள்.

 உலோகங்களுக்கும் அவனுக்கும் இடையிலான தொடர்பை பக்கங்களால் விளக்கி விட முடியாது.

 செம்பு காப்பினை அவன் தவிர்த்து விட்டான் ஆனாலும் அவன் கையில் ஏந்தி இருந்த திரிசூலமும் செம்பால் ஆனது. 
  அது தணிக்க வேண்டிய பிழம்பை அவனுள் தூண்டியது. மேலும் அது வளைந்து காணப்பட்டது. அது..
அவனது பழைய வாழ்வில் நேர்ந்த  துன்பத்தின் அடையாளமும் கூட.

 அதை இனிமேலும் சுமக்க அவன் தயாராக இல்லை. அவனுக்கு இன்னும் உறுதியான உலோகம் தேவைப்பட்டது.

 செம்பு மட்டும் அவனுக்குள் இருந்த பித்தத்தைத் தூண்டவில்லை. சிலவகை உணவுகளும் அவனது பித்தத்தைத் தூண்டின.

புளிப்பு, உப்பு, மிகுந்த உணவுகளை அவன் சுவைக்கும்போதெல்லாம், அவனது நாடி எச்சரிக்கை முரசு போல துடித்தது. அதிக மூத்திரம் சயம் முதலியவன் உண்டானது.
அவனது வெளிரிய தோல் மஞ்சள் நிறமாக மாறியது.அவனது கண்கள் மங்கின. தூக்கம் மெல்லியதாகவும் அமைதியற்றதாகவும் ஆனது. தினவெடுத்த அவனது தோள்களில் இருந்து வலிமை நழுவியது.
அவனது வாய் புளித்தது. அவனது புலன்கள் இருளாக மங்கின.
அவன் அறிகுறிகளை அடையாளம் கண்டான்: அவை சமநிலையின்மையின் குறியீடுகள்.

 அவனை இந்த அறிகுறிகள் அச்சப்படுத்தவில்லை.
 அவனது உடல் இந்த அறிகுறிகளால் தோல்வி அடையவில்லை.  

அவன் கேட்கத் தொடங்கினான். அவன் சமநிலையை பாவிக்கத் தொடங்கினான்.

தசைகள் மூச்சுக்காற்றை கொண்டு உணவை எரித்த பொழுது உடலில் அழல் உயர்ந்தது எனவே, அவன் தனது வழக்கங்களை மாற்றிக்கொண்டான்.
சூரியனின் கீழ் அவன் தனது உணவுகளை உண்டு விட்டு பகலில் இளைப்பாறினான். 

அவன் நிலவின் கீழ் நகர்ந்தான்—குளிர்ந்த, அமைதியான, இரவினையே அவன் மிகவும் விரும்பினான்.
 அவன் ஒரு இரவாடியாக மாறினான்.
 இரவு அவனது எரியும் தோலை ஆற்றியது.காற்று ஒரு புதிய மொழியில் பேசியது.நட்சத்திரங்கள் ரகசியங்களுடன் மின்னின.மௌனம் குரல்களை விட உரத்து பாடியது.

 காரிருளில் அவன் கண்களால் பார்ப்பதை விட புலன்களால் அந்த வனத்தை  அறிய முற்பட்டான்.

 வௌவால்களைப் போல, அவன் காதுகளால் உலகைப் பார்த்தான்.

பாம்புகளைப் போல, அவன் அதிர்வுகளை உணர்ந்தான்.

யானைகளைப் போல, அவன் தொலைவில் உள்ள நீரை முகர்ந்தான்.

அவனது புருவங்களுக்கு இடையே உள்ள காயம் இப்பொழுது குணமாகிவிட்டது. அது மூடி இருக்கும் ஒரு கண்ணைப் போல் தோற்றம் அளித்தது. இதன் காரணமாக நெற்றிக்கண்ணன்,
நுதற்கண்ணன், கண்ணுதல் என மக்கள் அவனை அழைக்கப் போகின்றனர்.

 மற்ற புலன்களால் அவன் பார்க்கும் பொழுது அவனது மூன்றாவது கண் மெல்லிதாக அதிர ஆரம்பித்தது.
 தமருகப்பறையின் அதிர்வினை அது வெளிப்படுத்தியது. 

 அப்பொழுது அவனது மனதில் ஒரு எழுத்து எதிரொலித்தது: 
 
அது ழகரம்.

 "மகனே நாவால் மேல் அண்ணத்தைத் தொட்டு இந்த எழுத்தை உச்சரி." மூளைக்குள் அவனது அன்னையின் குரல் ஒரு அசரீரி போல ஒலித்தது...

அவன் ழகரத்தை உச்சரித்தான் .உள்ளே ஏதோ மின்னல் போன்ற ஒன்று துடித்தது. அது அவனை வழிநடத்தியது.

அவன் இந்தப் பிரபஞ்சத்தை மூன்றாவது கண்ணால் பார்க்க ஆரம்பித்தான்.

 பூமியின் கீழ் இருக்கும் உலோகங்கள்; அதிர்வுகள் மூலம் அவனுக்கு தங்களது இருப்பிடத்தை அறிவித்தன . 

 அவனது கண்கள் வலசைப்பறவைகளைப்போல காந்தப்புலனை காணத்தொடங்கியது. அதிலும் அவனது மூன்றாவது கண் கிட்டத்தட்ட  மடகாஸ்கர் ஸ்விஃப்ட் உயிரினத்தின் மூன்றாவது கண்ணைப் போல இயங்கியது. 

 அந்த மூன்றாம் கண்ணானது அவனுக்கு ஒரு திசைகாட்டி, ஒரு கடிகாரம், ஒரு நாட்காட்டி, ஒரு மாய உணர்கருவி. 

அவனது மூன்றாவது கண்ணில் உடலின் அழலானது மையம் கொண்டு ஜோதி போல எரியத்துவங்கியது.

 நெருப்பு அவனது உடலுக்குள் மட்டும் மாற்றங்களைக் கொண்டு வரவில்லை.

நெருப்பு அவனது வெளி உலகையும் ஆட்சி செய்தது.

அது அவனது நாட்களை வடிவமைத்தது, அவனது வலிமையைச் சோதித்தது, எதிர்கொள்ளப்பட வேண்டிய ஒரு கடவுளைப் போல மீண்டும் மீண்டும் அவனது வாழ்வில் எதிர்பட்டது.

ஒரு நாள், புதர்களில் கோபமான கடவுள்களின் மூச்சு போல ஒரு காட்டுத் தீ பரவியது.

 அந்த நெருப்பைக் கண்டதும் அவனது மனதில் மறைந்திருந்த நினைவுகள் மின்னின. அவனது அன்னையின் கூச்சல்... துடியர்களின் குடியிருப்பில் படர்ந்த அக்கினி...

ஆனால் இந்த முறை, அவன் நெருப்பைக் கண்டு அஞ்சவில்லை. நெருப்புக்குள் ஓடினான்.

 உள்ளே ஒரு கன்று சிக்கியிருந்தது.

அவன் அதை விடுவித்தான்.

 அந்தக் கன்று ஒரு பசுவை நோக்கி ஓடியது.

பசு நன்றியின் மிகுதியால்  அவனது முகத்தை நக்கியது. அவன் அதன் அருகில் படுத்தான்—அந்த வெப்பத்தில், அவன் தனது தாயின் கதகதப்பை  மீண்டும் உணர்ந்தான். இப்பொழுது கன்று பசுவிடமிருந்து பாலைக் குடித்தது. இதைக் கண்ணுற்ற அவனும் அந்த பசுவிடமிருந்து பாலைக் குடித்தான் 

இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளின் புனித ஒன்றிணைப்பாக அந்தப் பால் விளங்கியது . 

அவன் அந்தப் பசுக்களின் சுவாசத்தின் கீழ் தூங்கினான்,

 பசுக்கள் பகலில் மேய்ந்து இரவில் அசை போட்டன. அவனைப் போலவே இரவு முழுவதும் அவை விழித்திருந்தன.

 அவை அவனுக்கு இரவுத் தோழனாக விளங்கின.

கூட்டம் அவனை ஏற்றுக்கொண்டது.வார்த்தைகள் இல்லை. கேள்விகள் இல்லை. வெறும் தொடுதலும் நம்பிக்கையும் மட்டுமே அங்கே நிலவி வந்தது.

கூட்டத்தை ஒரு மூத்த பெண் பசு வழிநடத்தியது—அதன் கண்கள் காலத்தால் ஆழமானவை, அதன் இருப்பு நிலவைப் போல அமைதியானது.

அது அவனுக்கு கொடிச்சியையும் அவனது அன்னையையும் நினைவூட்டியது, ஒரு மின்னல் வடிவ பிம்பமாக...

அந்த மின்னல்கள் கனவுகளைப் போல அவனது மனதில் அடிக்கடி தோன்றின,

அது ஒரு தரிசனமா? 
மற்றொரு வாழ்க்கையா?
 பூர்வ ஜென்ம நினைவுகளா?

அவனுக்குத் தெரியவில்லை.

ஆனால் அந்த பிம்பம் மேலெழும்போதெல்லாம், அவன் மனதில் அமைதி திரும்பியது.

ஆனால், இந்தக் காட்டில் அமைதி நீண்ட நேரம் தங்குவதில்லை.

காட்டின் நிழல்களில் இருந்து ஒரு பெரிய காளை வந்தது—அது பெண் பசுக்களைச் சுற்றி பாதுகாப்பது போல அலைந்தது...

 அது தனது கண்களில் புயல்களின் பாரத்தைச் சுமந்தது.
அதன் கோபம் பழமையானது. 
அதன் பாதங்கள் இடியாக ஒலித்தன.
 அது ஒரு  இயற்கையின் சக்தி.

 சிவனோ பித்தத்தின் மறு உருவம் 

 ஆனால் அந்தக் காளையோ  வாதத்தின் பிரதிநிதியைப் போல தோற்றமளித்தது.

  சிவன் அந்த கூட்டத்தில் இருப்பதை அது விரும்பவில்லை.

 வாதமும் பித்தமும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.

காளை  மணலின் ஆழம் வரை  கொம்புகளைப் பதித்து,  நெம்பி எடுத்து மணலை  நாற்புறமும் விசிறி அடித்தது, கோபத்துடன் அவனைப் பார்த்து உறுமியது.

சிவன் ஓடவில்லை. 

மிருகம் கர்ஜித்து முன்னேறியது.சிவா பாய்ந்தான், கொம்புகளுக்குள் சிக்கி விடாமல்  காளையின் திமிலைப் பிடித்தான்.அது அவனைப் புழுதியிலும் முள் செடிகளிலும்  இழுத்துச் சென்றது.அவனது பிடி இறுகியது. 

 இரு வீரர்களும் சமமானவர்கள் என்பதை ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டனர்.

 காளையின் வேகம் குறைந்தது .

 சிவனின் பிடியும் தளர்ந்தது.
 
காளை திரும்பி சிவனை உற்று நோக்கியது.

 இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன.

அவர்களுக்கு இடையில் ஏதோ கடந்தது.

 அது பயம் அல்ல.

சவாலும் அல்ல.

 ஒரு அங்கீகாரம்.

 உயிர்களை நேசிப்பவனான சிவன் அந்த விலங்குக்கு எந்த தீங்கினையும் செய்ய விரும்பவில்லை.

அவன் மீண்டும் தனிமையைத் தேர்ந்தெடுத்து, கூட்டத்தை விட்டு வெளியேறினான். அங்கே மீண்டும் அமைதி திரும்பியது.

 ஆனால் அவனது உடலின் வெப்பம் தணிவதாகத் தெரியவில்லை. அவன் உடல் சுடும்போதெல்லாம் உடலை குளிரச் செய்யும் வெள்ளி வளையத்தை கைகளால் தொட்டுப் பார்ப்பான்.

 செம்பினால் தூண்டப்பட்ட அழலை வெள்ளி தணித்துக் கொண்டிருந்தது. 

 வெள்ளியைப் போல்  வேறொரு உலோகம் அவனது சமநிலையின்மைக்கு தீர்வு அளிக்கக்கூடும் என்ற எண்ணம் சிவனுக்கு  மேலோங்கியது. மேலும் அவனுக்கு பாதுகாப்பளிக்கக் கூடிய ஆயுதமாகவும் ஒரு புது உலோகம்  அவனுக்குத் தேவைப்பட்டது.

அவனது மூன்றாவது கண் மீண்டும் அவனை வழிநடத்தியது.

 அது துடித்தது. 

அவன் தேடினான்.
வளையாத உலோகத்திற்காக.
உடையாத ஆயுதத்திற்காக.
 சமநிலையை மீட்டெடுக்கும் மருந்திற்காக.
ஆன்மாவை தாங்கக்கூடிய உடலுக்காக.

அவன் இனியும் சிறுவன் அல்ல. அந்தப் பிறைசேர் சடையான் ஒரு சரித்திரமாக மாறிக் கொண்டிருந்தான். அந்த மாற்றத்தை அவனது சடைக்கு மேல் ஒளிர்ந்து கொண்டிருந்த நிலவு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.


**************

இதன் முந்தைய பாகத்தை படிக்க

1.

2.

3.

4.

5


Wednesday, July 23, 2025

அந்தம் நடுவாகி அல்லான் (ஆதியோகி: அத்தியாயம் 5)

அந்த ஆண்டு கோடை கொடூரமாக இருந்தது. மழை பெரிதாக இல்லை.

சில நாட்களுக்கு முன் வரை நிறைசூல் கொண்டிருந்த பொருநை ஆறு இப்போது அபலைப் பெண் போல காட்சி அளித்தாள்.

பொருநையின் நீர் களைப்புடன் மந்தமாக ஓடியது. வெளியில் பரவி இருந்த வெப்பம் சிவனுக்குள் இருந்த அழலை அதிகரித்தது. அவனது வில்சனின் நோய் அவனுக்குள் மெளனமாக கொதித்துக் கொண்டிருந்தது .

அந்தக் காலை அமைதியாக இருந்தது—வினோதமான அமைதி. சூரியன் உயிரற்ற பூமியின் மீது உதித்தது.

 காற்று வெப்பத்துடன் கனமாக வீசியது.பறவைகள் மௌனமாகின.
 வெளியே நடந்து கொண்டிருந்த சிவனின் கால்களுக்குக் கீழ் உலர்ந்த இலைகள்  நொறுங்கின. 

 பணம் இழந்தவனை நண்பர்கள் கைவிட்டு நீங்குவது   போல, விலங்குகள் காட்டின் தொலைவில் உள்ள நீரை நோக்கிச் சென்று விட்டன . 

 நண்பர்களின் நினைவுகளிலிருந்து நாம் நீங்கினாலும் பகைவர்கள் நம்மை எப்போதும்  மறப்பதில்லை. அவர்கள் நம்மைத் தேடி எப்படியும் வந்து விடுவார்கள்... பழைய பகையை முடிக்க.

 அனல் தகிக்கும் அந்தக் காட்டிலே பகை விலங்கு ஒன்று மெல்ல இவர்கள் இருப்பிடம் நோக்கி நகர்ந்து வந்தது. 

அது ஒரு வரிப்புலி. 

பசி மற்றும் வெப்பத்தால் அதன் குரூரம் அதிகரித்திருந்தது. அதன் விலா எலும்புகள் தோலில் தெரிந்தன, அதன் மூச்சு சூடாகவும் கரடுமுரடாகவும் இருந்தது. ஒவ்வொரு  புற்றையும், கைவிடப்பட்ட பாதையையும் அது முகர்ந்தது.
 
 இறுதியாக தான் தேடியதை அது கண்டடைந்தது. 

 தனியாக சிவா, வழக்கம்போல, வனத்தை வலம் வரத் தொடங்கினான். அவனது பெருமைமிக்க கண்டுபிடிப்பான செப்புப் பற்களைக் கொண்டிருந்த பலமுனை சூலத்தை அவனது கை அலட்சியமாக பற்றி இருந்தது. அதில் தமருகப்பறை கட்டப்பட்டிருந்தது.
அவனது பாதங்கள் கவலையற்றவை, அவனது இதயம் நேற்றைய மகிழ்ச்சியின் நினைவில்  இன்னும் நடனமாடியது. ஆனால் அவனுக்கு பின்னால், இறந்து போன புதர்களுக்கு இடையே, புலி மெதுவாக நெருங்கிக் கொண்டிருந்தது .

தொலைவில், அவனது தந்தை அவரை விதைகளை சேகரித்த படி நின்றிருந்தார். 

 திடீரென்று ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த அந்தச் செயலை அப்படியே நிறுத்தினார்.

 வழமைக்கு மாறான அமைதி. 

 அவருக்கு மிகவும் பழக்கமான அரிதான ஒரு மணம் காற்றில் வீசியது.

 அவர் திரும்பி, கற்கள் மீது வெறுங்காலுடன் ஓடினார், “சிவா!” என்று கூவினார்.

ஆனால் புலி ஏற்கனவே பாய்ந்து விட்டது.

 சிவன் சடாரென்று திரும்பினான்.

 அவன் கண்கள் விரிந்தன.

 விலங்குகளின் அரசன் முன்னங்கால்களை விரித்தபடி, நகங்கள் சூரிய ஒளியில் மின்ன, அவனை நோக்கி காற்றில் மிதந்து வந்தது.

 அனிச்சையாக அவன் தனது ஈட்டியை உயர்த்தினான்.

 நிச்சயம் அது அந்தப் புலியின் மீது பட்டது.

 ஆனால் அந்தக் கொடிய விலங்கினை அத்தாக்குதல்  பெரிதாக பாதித்தது போல் தெரியவில்லை 

சிவன் தப்பிவிட்டான்... ஆனால் இம்முறை அது தனது இலக்கை துல்லியமாகக் குறி வைத்து பாயத் தயாரானது 

 சிவன் தனது ஈட்டியை பார்த்தான். அதன் முனைகள் சில வளைந்து ஒடிந்து விட்டன. வெறும் மும்முனை கொண்ட சூலமாக அது காட்சியளித்தது.

 மூன்று கூர்மையான பற்கள், அதற்கு மேல் ஒன்றும் இல்லை. 

செப்பு ஆயுதம் புலிக்கு ஈடாகவில்லை...

புலி மீண்டும் பாய்ந்தபோது, அவனது தந்தையின் குரல் நினைவுக்கு வந்தது: “தேர்ந்த வீரன் தன் பலத்தை மட்டுமே நம்புவான் ஆயுதங்களை அல்ல...”

அந்த கணத்தில், அவர்களது மூதாதையரின் தைரியம் அவனுள் பாய்ந்தது. அவன் தனது திரிசூலத்தை உறுதியாகக் கையில் ஏந்தினான். அங்கே திரிசூலத்துடன் நின்றிருந்தது ஒரு சிறுவன் அல்ல. புலிகளை கைகளால் சமர் செய்தவர்களின் வழிவந்த ஒரு தேர்ந்த வனவாசி.

 புலியும் சிவனும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டனர். இம்முறை அதன் பாய்ச்சலில் துல்லியமும் வேகமும் அதிகரித்திருந்தன. சிவன் தனது சூலத்தை அதன் பஞ்சு போன்ற குரல்வளைக்கு அருகே சொருகி விட வேண்டும் என்று உறுதி கொண்டான்.

 ஆனால் அவனது தந்தை அங்கே சரியான நேரத்தில் வந்தார். வனத்தின் மௌனத்தை உடைப்பது போல மிருகத்திற்கும் சிறுவனுக்கும் இடையில் பாய்ந்தார். காட்டைப் பிளப்பது போல ஒரு கர்ஜனையுடன், அவர் புலியின் முகத்தில் நேராக முஷ்டியால் குத்தினார் . 
 புலியின் தாடையில் முஷ்டியானது பட்டவுடன் கற்கள் நொறுங்குவது போன்ற ஒரு சத்தம் எழுந்தது.

 புலி தடுமாறி விழுந்தது.

“ஓடு!” என்று அவனது தந்தை கத்தினார்.
 சிவா ஓடவில்லை. அவனது கால்கள் நகர மறுத்தன. அவன் உறைந்து நின்றான், திரிசூலம் அவன் பிடியில் நடுங்கியது, இதயம் அவனது விலாக்களுக்கு எதிராக ஒரு முரசு போல அதிர்ந்தது.

 சிவனின் தந்தை அவனை ஆழமாக கண்களுக்குள் ஊடுருவி பார்த்தார். 
 அந்தக் கண்களில் பெருமிதம் மின்னியது. 

 "இன்று நீ வெளிப்படுத்திய துணிச்சல் அசாதாரணமானது. உன்னை எண்ணி பெருமை கொள்கிறேன் மகனே."
 என்று அவர் உறுதியான குரலில் கூறினார். 

 பின்னர் அவர் மிருகத்தை நோக்கி திரும்பினார், அவரது உடல் எங்கும் இரத்தம் கசிந்தாலும் அவரது கண்களில் தைரியம் பிரகாசித்தது.

 இரு புலிகளை ஏற்கனவே கைகளால் கொன்ற பெருவீரன் அவர். 

 அந்தப் பெருவீரனும், பசியால் ஆவேசம் கொண்ட புலியும் இறுதி யுத்தத்திற்கு தயாரானார்கள்.

 இதை கண்ணுற்ற சிவனின் உடல் நடுங்கின. நடுங்கும் கைகளால் கற்களை உரசி அவனது இடுப்பில் கட்டப்பட்ட உலர்ந்த மாவளிக் கருக்கை பற்ற வைத்தான். 

 அவன் அதை ஆவேசமாக சுழற்றியபடி புலியை நோக்கி ஓடினான் , காற்றுக்கு எதிராக தீப்பிழம்பு எரிந்தது.
ஆனால் காற்று அவனுக்கு எதிராகத் திரும்பியது.

மாவளியில் இருந்து; சிறு சிறு பொறிகள்  ஒரு  விடுவிக்கப்பட்ட சாபம் போலப் பறந்தன. பொறிகள் ஆவிகளைப் போல உலர்ந்த வனம் முழுவதும் பரவியது.

 கூச்சலைக் கேட்டு ஓடி வந்த அவளது அன்னை அந்த நெருப்பின் கரங்களுக்குள் அடைபட்டுக் கொண்டாள். 

 அவளைச் சுற்றிய உலர்ந்த செடிகள் தீப்பற்றின. தரையில் இருந்து ஒரு நெருப்பு சுவர் எழுந்து, அவளை ஒரு தீக் கூண்டாக சூழ்ந்தது.
அவள் அவனை அடைய முயன்றாள், வெப்பத்தின் வழியாக கைகளை நீட்டினாள். அவளது ஆடை தீப்பற்றியது. இருப்பினும், அவள் புகையால் குருடாகி, அன்பால் உந்தப்பட்டு முன்னோக்கி வர தடுமாறினாள். அவளது குரல் உடைந்தது. அது சன்னமான ஒரு இறுதி பிரார்த்தனையைப் போல சிவனின் பெயரை உச்சரித்தது. 

 பின்னர் நெருப்பு அவளை எடுத்துக் கொண்டது.

 இக்காட்சியினால் கவனம் சிதைந்த சிவனின் தந்தை இவர்களை நோக்கி பார்வையை திருப்பிய அதே வேளையில். புலியின் நகங்கள் அவரது நெஞ்சிலே ஒரு ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.

 அவரது இரத்தம் வானில் இருந்து உதிர்ந்த நட்சத்திரங்களைப் போல பூமியில் பரவியது. 

 ஆனால் அவனது தந்தை எதிர்த்து போராடினார்.

“ஓடு!” என்று அவர் கடைசியாகக் கத்தினார்.

 சிவனின் கண்களை அவர் ஆழமாக ஊடுருவிப் பார்த்தார்.

அவர்களது கண்கள் சந்தித்துக் கொண்டன .

 அந்தத் தந்தையின் இறுதிப் பார்வையில், பயமோ வலியோ இல்லை. பெருமையும் அன்பும் மட்டுமே நிரம்பி இருந்தது.

பின்னர் தனது வலு அனைத்தையும் ஒன்று திரட்டி, அவர் புலியின் மீது பாய்ந்தார் .

 புலியும் அவரும் ஒன்றாக,  பாறை விளிம்புக்கு அப்பால் விழுந்தனர். 

 ஒரு பெரும் மௌனம் அங்கே சூழ்ந்தது.

 காட்டின் நெருப்பில் சுள்ளிகள் எரியும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.
 மரங்கள் நொறுங்கின. வானமே பின்வாங்குவது போலத் தோன்றியது. காடு அழுதது.

 சிவன் நெருப்புக்கு மத்தியில் நின்றிருந்தான் . அவனது  திரிசூலம் ரத்தத்தால் நனைந்திருந்தது . அவனது கைகள் நடுங்கின . அவனது ஆன்மா உடைந்து சிதறியது.

 அவனது தாய் நெருப்பினால் விழுங்கப்பட்டு விட்டாள். அவனது தந்தை ஆழமான பள்ளத்தாக்கில் கரைந்து விட்டார்.

 சிவாவின் உலகம் நொடிப் பொழுதில் உடைந்து விட்டது. அவனது உடல் நடுங்கியது. வில்சனின் நோய் அதன் அடுத்த கொடூர கட்டத்திற்கு உயர்ந்தது. அவனது உறுப்புகள் கட்டுப்பாடில்லாமல் துடித்தன. அவனது தொண்டையில் இருந்து யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு கூச்சல் எழுந்தது. 

 அவன் தனது திரிசூலத்தை இரு கைகளாலும் உயர்த்திப் பிடித்துக் கொண்டு நெருப்புக்கு மத்தியில் கூச்சலிட்டுக்கொண்டு அரற்றினான். தமருகப்பறையின் ஒலி காடு முழுவதும் எதிரொலித்தது.  

 சேயோன் அவன் மீது இறங்கியது போல நெருப்புக்கு மத்தியில் நடனம் ஆடினான்.
 அப்படியே அவன் நிலை தடுமாறி பொருநை நதியில் விழுந்தான். அவனது நெற்றி நதியில் இருந்த ஒரு கூர்மையான பாறையில் மோதியது. நெற்றிக்கு நடுவில் இருந்து குருதி கொப்பளித்தது. நதி அவனை கீழ்பள்ளத்தாக்கிற்கு உருட்டிச் சென்றது.
 

மயக்கத்தில், அவன் மிதந்தான்.
நீரோட்டம் அவனை மலைகளில் இருந்து சமவெளிகளில் பரவி இருந்த ஒரு முல்லைக் காட்டின் ஆற்றுப் படுகைக்கு அருகே ஒதுக்கி தள்ளியது.  

 அவன் முல்லை நிலத்தை அடைந்தான்—புல்வெளிகளின் அடர்ந்த காடுகள் புனித ஆற்றங்கரையைச் சந்திக்கும் இடம் அது.
அவன் நீரருகில் உடைந்து கிடந்தான். திரிசூலம் அவனருகில் மின்னியது. அதில் கட்டப்பட்டிருந்த பறையின் மீது நீரின் அலைகள் மோதி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. 

 அவனுக்கு மேலே, பாருக்கழுகுகள் வட்டமிட்டன. அவனது நெற்றியின் மையத்தில் இருந்து இரத்தம் மெதுவாக வடிந்து கொண்டிருந்தது. அது அவனது மூன்றாம் கண் அழுவது போல காட்சியளித்தது.

 அசைவற்றுக் கிடந்த அந்த உடலின் மீது ஒரு நாகம் படர்ந்தது. மெதுவாக அவனது கழுத்தைச் சுற்றி படம் எடுத்து நின்றது.

 அந்த நாகம் மெதுவாக சீரியது.

 சட்டென்று அவன் கண் விழித்தான்.

  இங்கே வெயில் காய்ந்தது. அவனது 
  தோல் எரிந்தது. 

 அவன் கண் விழித்தான்.

 சுற்றி இருந்த உலகம் அவனுக்கு புதிதாக இருந்தது.

 பலவீனமான குரலில் "நான் எங்கே இருக்கிறேன்?” என்று மெதுவாகக் கேட்டான். 

“நான்… யார்?”

அவனுக்கு எதுவும் நினைவில்லை.

நெருப்பு இல்லை. புலி இல்லை. தந்தையோ தாயோ இல்லை. அவன் யார் என்றே அவனுக்கு நினைவில் இல்லை.

 சுத்தமாக துடைக்கப்பட்ட ஒரு பலகையைப் போல... புதிதாக பூத்த புது மலரைப் போல அவன் காட்சியளித்தான்.

 அவன் புயல்களால் வீசி எறியப்பட்டவன். நெருப்பின் சாம்பலில் இருந்து உதித்தவன் 

 அவனைச் சுற்றி காடு உயிர்ப்புடன் இருந்தது. அவன் தன்னை புதியவனாக உணர்ந்தான்.

 இந்த உலகம் இனி அவனை சுயம்பு என்றே அழைக்கப் போகிறது. 

அவனது வாழ்க்கையின் தொடக்கம் எது என்று யாருக்குமே தெரியாது. 

அது ஒரு மறக்கப்பட்ட கதை. 

 அவனுக்கு ஆதி என்பதே இல்லை. அதேபோல் அவனுக்கு அந்தமும் இல்லை.

 அவன் முதலும் அற்றவன்.

 முடிவும் அற்றவன். 

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரென முல்லைக் காட்டின் மத்தியில்  நின்றிருக்கும் இந்தச் சிறுவனுக்கென்று இப்போது யாரும் இல்லை. அவனுக்கு போக்கிடமும் ஏதுமில்லை. அந்த சிறுவனிடம் பாசம் காட்டுவார்  என்று யாரும் இல்லை. அந்தச் சிறுவனுக்கு எவரிடமும் எந்த பற்றும் இல்லை.

 உறுதி இழந்த உடலோடும், நினைவுகள் இழந்த உயிரோடும், சூரியக் கதிர்களால் பொசுக்கப்பட்ட தோலோடும், நடுங்கும் நரம்புகளோடும், முனை மழுங்கிய பயனற்ற ஆயுதத்தோடும் நடுக்காட்டில் நிற்கதியாய் நின்றிருந்தான் அந்தச் சிறுவன். 

அவனுக்கு முன்னே உள்ள பாதைகள் வலி நிரம்பியவை. கடவுள்கள் அவனை மென்மேலும் சோதிப்பார்கள். அச்சோதனைகளைத் தாண்டி பெருஞ்சோதியாய் உருவெடுத்து,   அனைவரையும் ஆட்கொள்ளும் அன்பின் பேரூற்றாய் அவன் நிச்சயம் விளங்குவான்.
------

இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
**************

இதன் முந்தைய பாகத்தை படிக்க

1.

2.

3.

4.





 

Sunday, July 20, 2025

அன்பினில் விளைந்த ஆரமுது (ஆதியோகி: அத்தியாயம் 4)

 பொதிகையில் சிவாவின் நாட்கள் அமைதியாலும் மகிழ்ச்சியாலும்  நிரம்பியிருந்தன. அவனது தோலில் இருந்த காயங்கள் மெல்ல மெல்ல ஆறத் துவங்கி இருந்தன. அவனது தோல் இப்பொழுது சுட்டெரிக்கும் சூரியனால்   வெந்து போகவில்லை, அவனது காதுகள் கொடூரமான வார்த்தைகளைக் கேட்கவில்லை, எந்தக் கண்களும் அவனை வஞ்சத்துடனும் ஏளனத்துடனும்  பின்தொடரவில்லை. 

 பனி போர்த்திய பொதிகை மலை சிகரத்தின் உச்சியில்  வாழ்ந்து வந்த அவனது குடும்பம், ஒரு மென்மையான வாழ்க்கையை அவனுக்கு உருவாக்கித் தந்தது. 

 அவர்களது வாழ்வு மிக எளிமையானதாக இருந்தது. அவர்கள் குளிர்ந்த பொருநை நீரில் மீன்பிடித்து, ஈரமான மண்ணில் தினை வளர்த்து, பழங்களை சேகரித்து எளிய வாழ்வு  வாழ்ந்தனர். 

 சிவாவின் இயல்பு அவர்களின் உலகத்தை மேலும் மென்மையாக்கியது. விலங்குகள் மீதான அன்பு, நட்சத்திரங்களின் மீதான ஆச்சரியம், தாயின் கதகதப்பு, தந்தையின் அரவணைப்பு, சிவனின் செல்ல குறும்புகள் இவற்றினால் ஆன ஒரு அழகிய உலகம் அன்பினை அச்சாகக்   கொண்டு அங்கே சுழன்று வந்தது. அங்கு எந்தக் குழந்தையும் அவனைப் பரிகசிக்கவில்லை. அந்த புனிதமான இடத்தில், அவன் தன்னை ஆசீர்வதிக்கப்பட்டவனாக  உணர்ந்தான்.

 இருப்பினும் கோடைகாலத்தில், பொதிகையின் மென்மையான வெப்பம் கூட அவனது அறிகுறிகளை மோசமாக்கியது. கையில் அணிந்திருந்த செம்புக் காப்பு அவனது வேர்வையோடு வேதிவினை புரிந்து உடலுக்குள் மெல்ல மெல்ல ஊடுருவத் தொடங்கியது. அது அவனுக்குள் உறங்கிக் கிடந்த அழலைத் தூண்டியது. அவனது இரத்தத்தில் உள்ள தாமிரம் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையைப் போல அதிகம் வெளிப்படாமல் புகைந்து கொண்டிருந்தது . 

 வனவாசிகளுக்கு காடு எப்பொழுதும் தனது ரகசியங்களை எளிதில் வெளிப்படுத்தி விடும். காட்டின் ரகசியங்களை அறிந்த சிவனது அன்னை  சில மூலிகை இலைகளை நசுக்கி, அதன் சாற்றை அவனுக்கு அளித்து, அவனது உடலை குளிர்வித்தார். அது அவனது நோயை மட்டுப்படுத்த  உதவியது. 

 துன்பத்தின் முக்கியமான நன்மை யாதெனில் அது தன்னை அனுபவிப்பவருக்கு பாடங்கள் பல கற்றுக் கொடுக்கும். சிலசமயம் பரிசுகள் கூட வழங்கும்.

சிவனுக்கு நேர்ந்த துன்பங்கள் உடல் ரீதியிலானவை. அதன் காரணமாக அவன் தனது உடலை படிக்கத் தொடங்கினான். அவன் படித்தது உடலின் இயக்கத்தையும் அதன் மாறுதல்களையும். 

 சிவன்  புரிந்துகொள்ளத் தொடங்கினான்: பருவங்கள் மாறுவதையும் அந்த பருவங்களுக்கு ஏற்ப அவன் உடல் மாறுவதையும் அவன் உடலைப் போல நிலமும் பருவத்திற்கு ஏற்ப மாறுதல்கள் கொள்வதையும் அவன் ஆழ்ந்து அனுமானிக்கத் தொடங்கினான்.

காற்றின் வடிவங்கள், மழைக்கு முன் பறவைகளின் நடத்தை, வனத்தின் சமிக்கைகள், பறவைகளின் இடப்பெயர்ச்சி, ஆற்றின் வெள்ளப்பெருக்கு, கூதல் காற்றின் வேகம், நட்சத்திரங்களின் நகர்வு, பருவத்தின் மாறுதல்கள் அனைத்தும் ஒரு ஒழுங்கில் நடப்பது அவனுக்கு புரிய வந்தது.  வெளியில் நிகழும் இது போன்ற மாற்றங்கள்  அவனுக்குள் ஏற்படுத்திய மாற்றங்களை ஆழ்ந்து கவனிக்கத் தொடங்கினான். 

 இப்பொழுதோ  சிவனின் தந்தைக்கு ஒரு பெரும் கூட்டத்தை நடத்த வேண்டிய தலைமை பொறுப்பு ஏதுமில்லை. சிவனின் ஆர்வமும் கூர்ந்து கவனிக்கும் திறனும் அவன் தந்தையையும் தொற்றிக் கொண்டது.

 அவர்கள் இருவரும் பூமியுடன் பேசத் தொடங்கினர். பூமி தனது ரகசியத்தை ஒவ்வொன்றாக அவர்களுக்கு வெளிகாட்டியது. அதில் முக்கியமானது செம்பு தாதுக்கள்.

மலைப் பாறைகளில் மறைந்திருந்த செம்பின்  தாதினை அவர்கள் சேகரிக்கத் தொடங்கினர். 

அவர்கள் ஒரு எளிய குழி உலையை அமைத்தனர், வெப்பத்தைப் பிடித்து வைக்க களிமண்ணால் அதைப் பூசினர். உலர்ந்த கிளைகளை எரித்து கரி தயாரித்தனர், இது கிளைகளையும் எருவையும்   விட அதிக வெப்பத்தை அளித்தது.நெருப்பினை தீவிரப்படுத்த  ஊதுகுழல்களை உருவாக்கினர்.  ஊதுகுழல்களால், அவர்கள் நெருப்பை உக்கிரமாக எரியச் செய்தனர். பலவித முயற்சிகளுக்கும் பிழைகளுக்கும் பிறகு அவர்களுக்கு அது கைவந்தது.

 பல்வேறு முயற்சிகளின் முடிவில் சிவப்பு கல் ஒளிர்ந்து அதிலிருந்து செம்பு இரத்தம் போல் வழிந்தது . சிவா, கண்கள் பிரகாசிக்க பார்த்தான்.

“இது என்ன  அப்பா?”

" இது மற்ற கற்களைப் போல அல்ல மகனே. இது ஒரு உலோகம். உன் கையில் இருக்கும் காப்பு இந்த உலோகத்தால் தான் செய்யப்பட்டது மகனே".

 "இதன் பெயர் என்ன அப்பா ?"

"இதை நான் தாமிரம் என்று அழைப்போமா?" என்றார் அத்தன்.

" நிச்சயமாக அப்பா... அப்போ தாமிரத்தைத் தந்த இந்த ஆறும் தாமிரபரணி ஆகட்டும்,” என்று சிவா அறிவித்தான்.

அவனது தந்தை சிரித்தார். 

 ஓரு நாள் அவன் ஒரு சதுரத்திற்குள் ஒரு சதுரத்தை மணலில் வரைந்து கொண்டிருந்தான் .




“இது என்ன?” என்று அவனது தந்தை கேட்டார்.

“பெரிய சதுரம் நம் வீடு. சிறிய சதுரம்… அது நீங்கள் தான் அப்பா, நீங்கள் இந்த வீட்டின் கோன் . " என்றான்.

சிவா தனது தந்தையின் ஈட்டி அவரிடம் இல்லாததைக் கவனித்தான்.

“நீங்கள் ஏன் உங்கள் ஈட்டியை கோடனுக்கு கொடுத்தீர்கள்?”

“அது குலத்தின் தலைவனுக்கு சொந்தமானது. நான் இனி குலத்தின் கோன் இல்லை.”

“நீங்கள் நம் இல்லத்தின் கோன்." என்றான் சற்றும் தாமதிக்காமல்.

அவனது தந்தை புன்னகைத்தார். “ஆம், என் மகனே. நான் இல்லத்தரசன்.”

சிவா அவருக்கு ஒரு  வலிமையான ஈட்டியை  உருவாக்குவதாக உறுதியளித்தான். 

 அவன் மலை எங்கும் அலைந்து  பலவகை தாமிர தாதுக் கற்களை கண்டெடுத்தான். தந்தையின் உதவியுடன் அவற்றை உருக்கி பலமுனை கொண்ட ஈட்டி ஒன்றை அவன் உருவாக்கினான்.

  அது ஒற்றை-முனை ஈட்டியை விட மீன்களை சிறப்பாகப் பிடித்தது.

ஒற்றை முனை ஈட்டியானது வேகத்திற்கு ஈடு கொடுத்தது. ஆனால் அதன் தாக்குதலில் இருந்து மீன்கள் நழுவின. இந்தப் பலமுனை ஈட்டியில் மீன்கள்  தப்புவதற்கு வழி ஏதுமில்லை.

 பலமுனை ஈட்டியை இலாவகமாக எறிந்து அவன் மீன்பிடித்த வேகத்தை பார்த்த அவனது தந்தை, அவனுக்கு  கொம்பு மகுடத்தை அணிவித்தார்.

“நீதான் உண்மையான வேட்டைக்காரன்,” என்றார். “ இனி இங்கே நீ தான் தலைவன்.

 கொம்பு கிரீடம் அணிந்து பலமுனை ஈட்டியை கையில் ஏந்திய அந்த உருவம் வரலாற்றில் நிலைத்தது.

 பின் நாட்களில் ஹரப்பர்கள் அவர்களின்  கடவுளாக இந்த உருவத்தை நினைவு கூர்ந்தனர். அவர்களின் சித்திர  எழுத்துக்களில் இந்த உருவம் அடிக்கடி இடம் பெற்றது.

                              


 பிரிதொரு நாள் தந்தை வைத்திருந்த துடிப்பறை பயன்படுத்தப்படாமலேயே இருப்பதை கண்ட அவன் தனக்கென ஒரு சிறிய துடிப்பறையை உருவாக்கினான்.  

 அந்த சிறிய துடிப்பறை அவனால் மேலும் மேம்படுத்தப்பட்டது. காட்டு விதைகளை மணிகளைப் போல் கயிற்றில் கோர்த்து பறையின் இடுப்பில்  கட்டினான்.  மணிக்கட்டை அசைப்பதன் மூலம் அதில் ஒலி எழும்புமாறு  மாறுதல்களை செய்தான். அந்தத் துடிப்பறையை தமருகப் பறை என்று அவன் அழைத்தான்.   




அந்த தமருகப் பறையை  தனது பலபல் ஈட்டியில் பொருத்தினான். ஈட்டியை லாவகமாக அசைக்கும் பொழுது அந்த தமிருகப்பறை விரைவாக பேசத் தொடங்கியது. அது அவனது சொந்த கண்டுபிடிப்பு.

 பகலில் சூரியனின் கோபக் கண்கள்  அவன் மீது வெப்பத்தை மட்டுமே உமிழ்ந்தது . ஆனால் இரவின் கண்ணான சந்திரனோ அவனுக்கு குளிர்மையை காட்டியது.

 இரவு நிலவுக்கு தலை காட்டும் வழக்கமுடைய சிவன் அந்தப் பழக்கத்தை பொதிகையிலும்  மாற்றிக் கொள்ளவே இல்லை. இரவின் மீது இப்பொழுது அவனுக்கு துளியும் பயம் இல்லை. ஏனெனில் அவன் கொம்பு அணிந்த காட்டின் தலைவன். கையில் ஆயுதம் ஏந்தியவன். அவனைக் காட்டிலும் அவன் கையில் இருக்கும்  ஆயுதத்தின் மீது அவனுக்கு மிகவும் நம்பிக்கை அதிகம்.

 இரவில் பிறை நிலா ஒரு படகைப் போல் பொருநை ஆற்றில் மிதப்பதை அவன் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பான். இரவின் கண்ணான நிலவைத் தான் அவன் அதிகம் விரும்பினான். பகலில் வானில் தெரிந்தது ஒரே ஒரு கண்தான். ஆனால் இரவுக்கு ஆயிரம் கண்கள் இருந்தது அவனுக்கு வியப்பைத் தூண்டியது.

ஆற்றிலும் சரி வானத்திலும் சரி...இரண்டிலும் மீன்கள் இருந்தன. "நீரில் உள்ள மீனை 'நீர் மீன்' என்றழைக்கிறோம் அப்பொழுது வானத்தில் உள்ள மீனை 'விண்மீன்' என்று அழைப்போமா? " என்றான் சிவன்.

 அன்னையும் சரி, தந்தையும் சரி, அவன் விருப்பத்திற்கு மறுப்பேதும் கூறுவதில்லை. அன்றிலிருந்து அவர்கள் விண்மீனை ரசிக்கத் தொடங்கினர்.

 அவன்  கற்களை வட்டமான வடிவங்களில் அடுக்கத் தொடங்கினான், நட்சத்திரங்களின் இயக்கங்களையும், சூரியனின் பாதைகளையும் அவன் கூர்ந்து அவதானிக்கத் தொடங்கினான்.

 இதுபோல நட்சத்திரத்தையும் நிலவையும் சேர்த்தே அவதானிக்கத் தொடங்கிய பொழுது அவனுக்கு முக்கியமான ஒன்று புலனாகியது.

நட்சத்திர கூட்டங்களுக்கு நடுவில் இருக்கும் நிலவானது, சில சமயம்  கடலில் விளையாடும் சிறுபறவை போன்ற தோற்றம் கொண்ட ‘எழுமீன்’ (stars of Ursa major Charles wain) நட்சத்திரக்கூட்டத்திற்கு அருகில் இருந்தது. 

 ஏழு மீன்கள் இருந்தால் எழுமின் ஆறு மீன்கள் இருந்தால் அறுமீன் என்று அழைக்க தொடங்கினான் சிவன்.


“அம்மா,” என்றான், “நம் மக்கள் சூரியனை மட்டுமே பார்த்தனர். ஆனால் இரவும் கற்பிக்கிறது.

 சில சமயம் அறுமீன் கூட்டத்திற்கு அருகில் முழு நிலவு தோன்றியது. அப்போது சொல்லிவைத்தாற்போல் ஒவ்வொரு வருடமும், மழை முடியும் சமயமாக இருந்தது.

   மேகங்கள் கூடி, கொண்டல் மேகம் வானத்தை உடைக்க, மழை பெய்தது. மழையின் சமயம்  தும்பிகள் தாழப்பறந்தன , உலகம் உயிர் கொண்டது —தவளைகள் கத்தின, பாம்புகள் நெளிந்தன, மயில்கள் நடனமாடின. அவன் பூமியின் தாளத்தை அறிந்து கொள்ள ஆரம்பித்தான் .

 அந்த மழையின் சமயம் காற்று ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே நகர்வதையும் அவன் அவதானிக்க தவறவில்லை. 

தெற்கில் இருந்து வீசிய மென்மையான காற்று தென்றல் போல தாலாட்டியது . 

 மேற்குத் திசையிலிருந்து காற்று வீசிய பொழுது அவனது உடல் அனலாகத் தகித்தது.  குடக்குக்  காற்று பொதுவாக வெப்பமாக இருந்ததை அவன் உணர்ந்து கொண்டான் .

வானின் இரண்டு கண்களாகிய சூரியனும் சந்திரனும் சில முழுநிலவு நாட்களில் ஒன்றாகத்  தெரிவதையும் அவன் அவதானிக்கத் தவறவில்லை.

 அப்படிப்பட்ட ஒரு நாளில் அவனது இடது கண் சந்திரனை பார்க்க ஆவல் கொண்டு திரும்பியது, ஆனால் வலது புறமும் சூரியன் இருந்ததால்  வலது கண் சூரியனைப் பார்க்க ஆவல் கொண்டது.

அவனது கண்களில் பிரகாசமாக தாமிர வளையம் உருவாகி இருந்தது அந்த சூரிய சந்திர வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது. 

பருவங்கள் மாறி மாறி வந்தன. பகல் நீண்டது. பகலோடு சேர்ந்து அவனது உடலின் அழலும் அதிகரித்தது. பின்னர் பகல் சுருங்கி இரவு நீண்டது. அவனது உடலின் அழலும்  குறையத் தொடங்கியது.

 அவன் தனது உடலை பிரபஞ்சத்தோடு ஒத்திசைந்து கவனிக்க ஆரம்பித்தான்.

கொண்டலின் வருகையை ஒட்டி வனம் செழித்தபின், கொண்டல் மேகங்கள் வானில் வலம் வந்தது போலவே, கருப்புநிற பேருயிர்கள் அந்த வனம்வழியே வலம் வருவதைக் கண்டான். பழமையான பாதைகளில் மலைகளில் இருந்து இறங்கி, மெதுவாக நகரும் மலைகளைப் போல அவை காட்டைக் கிழித்துப் பாதைகளை ஏற்படுத்தி நகர்ந்து கொண்டிருந்தன . 

 அந்தப் பேருயிர்களின் ஆகிருதி  அவனுக்கு அச்சமூட்டியது. அவற்றை விரட்ட எண்ணிய சிவன் காய்ந்த கருக்குகளை பிணைத்து கயிற்றினால் கட்டி; தழல் மூட்டி  எரிய வைத்து, அவற்றை சிலம்பு போல் சுழற்றிக் கொண்டே அந்தப் பேருயிர்களுக்கு பயம் காட்டினான். அவன் சுழற்றிய வேகத்தில்  சிறு சிறு பொறிகளும் வட்ட வடிவில் பெரிதாகத் தோன்றின. அந்தப் பெரிய ஒளியை மாவளி என்று அவன் அழைத்தான்.

படம் : மாவளி சுற்றும் மனிதன்
நன்றி:திரு.சுகவன முருகன், திரு பாலபாரதி.

" அவற்றை அச்சப்படுத்தாதே சிவா...

 யானைகள் வனத்தின் சமநிலையை பாதுகாக்கும் தெய்வக் குழந்தைகள் அவை ஒருபோதும் உனக்கு தீங்கு செய்யாது ,” என்று ஆயி மென்மையாகக் கூறினார். “அவை காட்டைப் பாதுகாக்கின்றன.”

ஆனால் சிவாவின் பயம் நீடித்தது, இருளில் ஒரு வேட்டையாடிக்கு பலியாகிய  கொடிச்சியின் முகம் அவ்வப்பொழுது  அவன் மனதில் நிழலாடியது  . 

" சரி அம்மா நான் யானைகளை ஒருபோதும் பயமுறுத்த மாட்டேன். நாம் மா ஒளியை புலிகளை பயமுறுத்த பயன்படுத்துவோம்.”

 அறுமீன் வானில் தோன்றும் சமயம்; காடே செழிப்பில் இருக்கையில்; யானைகள் காட்டின்வழி வலசை செல்லத் துவங்க, பெருவேட்டையை எதிர் நோக்கி வரிப்புலிகளும் விழிப்புடன் அங்கே உலாவின.

 "கவலைப்படாதே,” என்று ஆயி புன்னகைத்தார். “உன் தந்தை இங்கு இருக்கும்போது, பயப்பட ஒன்றுமில்லை.”சிவா தனது தந்தையிடம் பலமுனை  ஈட்டியைக் கொடுத்தான். “அப்பா, இது உங்களுக்கு புலியைக் கொல்ல உதவும்.”

ஆனால் அவனது தந்தை அவனது தோளில் கை வைத்தார். “ஆயுதங்கள் கருவிகள், சிவா. ஆனால் ஒரு தேர்ந்த வீரன் தன் பலத்தை மட்டுமே நம்புவான் ஆயுதங்களை அல்ல. அதை ஒருபோதும் மறக்காதே.”

சிவா அந்த வார்த்தைகளை இதயத்துக்கு அருகில் வைத்தான்.

  தந்தையைப் போலவே ஒரு திறன் மிகுந்த வீரனாக புலியை ஈட்டியை கொண்டு எதிர்ப்பதாக அவன் கற்பனை செய்தான். அவன் கற்பனைக்கு உருவம் கொடுத்தது போல் வானில் ஒரு காட்சி தோன்றியது.

   ஒரு வேட்டைக்காரனைப் போல தோற்றமளிக்கும் ஒரு நட்சத்திரக் கூட்டம்.

 ஒரு தேர்ந்த வீரன் மானை வேட்டையாடுவது போல அது தோன்றுகிறது என்றார் அப்பா. 

 ஆயி புன்னகைத்து, கேட்டுக்கொண்டிருந்தார். “ஆனால் எனக்கு,” என்று அவர் மென்மையாகக் கூறினார், “அந்த நட்சத்திரங்கள் நமது சிவன்  நடனமாடுவது போலத் தோன்றுகிறது."


 அதைக் கேட்டதும் சிவன் மகிழ்ச்சியுடன் நடனமாடினான், அது பிரபஞ்சத்தின் நடனம் போல இருந்தது.

 பொருநை  பெருக்கெடுக்கும் பொழுது அவர்கள் விளைவித்திருந்த பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதில் சிரமமாக இருந்தது. 

சிவா பொருநையின் கரைகளில்  ஒரு புத்திசாலித்தனமான எல்-வடிவ பாதையை செதுக்கினான். அது  ஆற்றின் வேகத்தை மட்டுப்படுத்தி விரைந்து ஓடிய தண்ணீரை செடிகளுக்கு இடையே நடை பயில வைத்தது. இதன் முன்னேறிய வடிவம் தான் ஹரப்பர்களால் பயன்படுத்தப்பட்ட கபர் பந்து. அந்தக் கபர்பந்தின் நீட்சி தான் கல்லணை.

 படம்: gabarband மற்றும் கல்லணை.

ஒரு நாள், செப்பின் தாதுவை தேடிச் செல்லும் பொழுது , அவனும் அவனது தந்தையும் ஒரு விசித்திரமான தாது ஒன்றைக் கண்டனர். அது கனமானது. அதை அவர்கள் நெருப்பிலிட்டு உருக்கினர்.  உருக்கும் குழியின் நெருப்பு மெதுவாக அணைந்து,  குளிர்ந்தபோது,  மீதம் இருந்த  கசட்டில் ஒரு விசித்திரமான விஷயத்தைக் கவனித்தார்கள். இருண்ட சாம்பலுக்கும் இணைந்த கல்லுக்கும் இடையில், ஒரு மங்கலான நிலவு வண்ண ஒளிர்வு காணப்பட்டது. அது செப்பின் சூடான ஆரஞ்சு ஒளிர்வு அல்ல, ஆனால் ஏதோ ஒன்று… பளிச்சிடும் நிலவொளி போல. 

அவனது தந்தை ஆர்வத்துடன் உற்று கவனித்தார் . “இது செப்பு இல்லை,”  என்று முணுமுணுத்தார். “இதற்குள் வேறு ஏதோ மறைந்திருக்கிறது…”தந்தை நெருங்கி, கண்களைச் சுருக்கி, ஒரு கட்டியை விரல்களால் எடுத்து, அதைச் சுத்தப்படுத்தினார். அது மென்மையாக இருந்தது… குளிர்ந்தது… அவர்கள் இதற்கு முன் வடிவமைத்த எதையும் விட வித்தியாசமாக இருந்தது, அது சிவாவின் சூடான உடலில் குளிர்ச்சியைப் பரப்பியது.

“ஆ… நிலவின் குளிர்ச்சி,” என்று அவர் மெதுவாக முணுமுணுத்தார். “ இவள் நிலவின் சகோதரி. அவள் செப்புக்கு பின்னால் மறைகிறாள், ஆனால் சில நேரங்களில் தன்னை வெளிப்படுத்துகிறாள்.”

அவர் அந்த வெள்ளிக் கட்டியை இரு கைகளிலும் பவித்திரமாக எடுத்தார் . “ இது ஆயுதங்களுக்கானது அல்ல சிவா... இது உனது ஆன்மாவிற்கானது, இது உன் அழலைத் தணிக்கும்".

 இரவு, மலைகளுக்கு மேல் நட்சத்திரங்கள் விழித்தெழுந்தபோது, தந்தை ஒரு சிறிய உருக்குழியில் அந்த சிறு வெள்ளிக் கட்டியை உருக்கினார். கொம்பு மற்றும் கல்லால் உருவாக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி, களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட ஒரு சுருள் பள்ளத்தில் அதை ஜாக்கிரதையாக ஊற்றினார்—ஒரு மெல்லிய வளையம், கழுத்தினை சுற்றி அணிவப்பதற்கு ஏற்ப பாம்பின் வடிவில் வடிவமைத்தார். 

அது குளிர்ந்தபோது, அவர் மென்மையான மரப்பட்டையாலும் ஆற்று மணலாலும் அதைப் பளபளப்பாக்கினார், அது நிலவின் துளி போல ஒளிர்ந்தது.அவர் சிவனை நெருங்கினார், அவன் நெருப்புக்கு அருகில் முழங்கால்களை அணைத்தவாறு, அவனது செப்பு ஈட்டியைப் பிடித்திருந்தான். தந்தை அவனுக்கு பின்னால் மண்டியிட்டு,  வெள்ளி வளையத்தை தனது மகனின் கழுத்தில் பொருத்தினார் .

 "இது இந்த மலையின் பரிசு என் மகனே. இந்த வளையமும் இந்த இன்பமான நாட்களும் என்றென்றும் உன் இதயத்திற்கு அருகிலேயே இருக்கட்டும் என் மகனே."

 சிவன் குளிர்ந்த வளையத்தைத் தொட்டான், அவனது விரல்கள் நடுங்கின.  அப்பொழுது வானம் அவனது இதயத்தில் கை வைத்தது போல இருந்தது.

 அவனது தந்தை  அதை ஒரு பாம்பு அதன் வாலை கடிப்பது போல ஒரு கழுத்து வளையமாக உருவாக்கி இருந்தார் 


 "ஏன் அப்பா இதை நாகத்தின் வடிவில் உருவாக்கினீர்கள் " என்றான் சிவன்.

" நாகங்கள் ஒருபோதும் இறப்பதில்லை,” என்று அப்பா மெதுவாகக் கூறினார். “அவை தோலை உரித்து மீண்டும் உயிர்த்து  எழுகின்றன.” அதனால்தான் நாம் அவற்றை தொழுகிறோம்.

 மேலும் சிறிய தோடு ஒன்றையும் செய்து சிவனின் காதில் மாட்டினார்.

 நாள், சிவா பொருநையின் கரையில் ஒரு காலி ஆமை ஓடு ஒன்றைக் கண்டான். ஆர்வமுள்ள அவன், அதை ஒரு  படகாக செதுக்கி, நீரில் மெதுவாக வைத்து, நீரோட்டத்துடன் அதில் பயணித்தான்.

  அவனது தந்தை எச்சரித்தார், அவரது குரல் உறுதியாகவும் ஆனால் மென்மையாகவும் இருந்தது. “ஆற்றின் கீழே நிறைய மக்கள் வசிக்கின்றனர்.  அவர்கள் உன்னைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.” என்றார் அவர்.

அவர் தவறியும் கூட தனது மகன் மக்களால் காயப்படுத்தி விடப் படக்கூடாது  என்பதில் உறுதியாய் இருந்தார்.

  அவனது தந்தை புயல்களால் செதுக்கப்பட்டவர் புலிகளுக்கு அஞ்சாதவர் கல்லை போல உறுதியானவர் ஆனால் இப்பொழுது அவரது உலகம் சிவனை மட்டுமே சுழன்று இருந்தது அவர் மென்மையாகி விட்டார் அவர் ஒருபோதும் தனது மகன் மனம் சுனங்குவதை சகிக்க தயாராக இல்லை. அவரது மகனின் கண்களில் இனி கண்ணீர் விழ அனுமதிக்க மாட்டார்.

 இருந்தபோதிலும் பழைய வாழ்க்கையின் வலிகள் சிவனை கனவில் தொடர்ந்தபடி இருந்தன.

 நெருப்பு மற்றும் இழப்பின் வலிகள் அவனுக்குள் ஆழமாக ஊடுருவி இருந்தன. சில நாட்கள் கனவில் அவன் அதை நினைத்து பிதற்றுவதுண்டு.

ஆயி அவனது நெற்றியில் முத்தமிட்டு மெதுவாக முணுமுணுப்பார், “அன்பு காலத்தையும் குணப்படுத்தும், சிவா.”

அந்த பேருண்மையை அவன் இருக பற்றிக் கொண்டான்.  தாயின் காதலுக்கும்  தந்தையின் தைரியத்திற்கும் இடையில், சிவனின் வாழ்க்கை ஒரு முழு நிலவாக வளர்ந்து பிரகாசித்து வந்தது. அவனது வாழ்வின் முதல் ஐந்து ஆண்டுகள் நெருப்பு மற்றும் பயத்தால் நிழலிடப்பட்டிருந்தன, ஆனால் இப்போது, இந்த அமைதியான குளிர் மிகுந்த பொதிகை மலை உச்சியில் சிறு செடி என இருந்த சிவன்; வேர் விட்டு வளர தொடங்கினான்  

இது என்றென்றும் நீடிக்கும் என்று சிவன்  நம்பினான்.

ஆனால் கடவுள்கள் அமைதியில் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் புயல்களால் செதுக்கப்படுகிறார்கள். சிவனது வாழ்வில் பல புயல்கள் வீசியபடி இருந்தன  ஆனால் அவன் அதை  எதிர்த்து நின்று  பெரிய ஆலமரமென வளர்ந்து நிழல் பரப்பி நின்றான். 

 அப்படி அவன் நின்றபொழுது அவனது முழு ஆகிருதியையும்  காண மற்ற கடவுளர்களால் இயலவில்லை.

 --------

இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்

இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு 

எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்

உடல் கடந்து நின்ற மாயம் யாவர்காண வல்லரோ.


**************

இதன் முந்தைய பாகத்தை படிக்க

1.

2.

3.

4.





Saturday, July 19, 2025

சந்திரசூடன் (ஆதியோகி: அத்தியாயம் 3 )

 முழு நிலவின் ஒளி மல்லப்ப கொண்டா மலையின் மீது கவிழ்ந்தது, நிலவானது அந்தப் புனித மலையை  குளிரில்  குளிப்பாட்டியது. மல்லப்ப கொண்டா... மல்லர்கள் கூடும் மலை. அந்த மலையின் காற்றில் முரசின் ஒலிகளும்,  உச்சாடனங்களும் ஒருவித புனித அதிர்வினை பரப்பியபடி இருந்தன.

குரவம், தளவம், குருந்து, முல்லை போன்ற மலர்களால் செய்யப்பட்ட மாலை சேயோனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்தது. 

 சேயோன் முன் இடித்து மாவாக்கிய கருங்கால் வரகு, இருங்கதிர் தினை மாவு இவை இரண்டும் தேனுடன் குழைத்து வைக்கப்பட்டிருந்தது , கொள்ளு மற்றும் அவரை ஆகியவை அவித்து வைக்கப்பட்டிருந்தன.

அனைத்து திசைகளில் இருந்தும் வந்திருந்த துடியர்கள்  பறையர்கள் பாணர்கள் கடம்பர்கள் போன்ற ஆதி குடிகள் அங்கே கூடி இருந்தனர்.

பெண்கள் குலவை சத்தம் எழுப்ப வெறியாடல் தொடங்கியது.

 செங்குருதி நிறத்துச் சேயோனின் ஆவியும் அணங்கின் ஆவியும்  அங்கே குழுமியிருந்த மக்களின் மீது  இறங்கியது. ஆவி இறங்கியவர்கள் ஆவேச கூச்சலிட்டனர். அந்த ஆவியால் பீடிக்கப்பட்டவர்கள் வெறிகொண்டு கூச்சலிட்டு ஆடினர்.

வெறியாட்டம் என்பது இடியில் பிறந்த ஒரு பிரார்த்தனை. 

வெறியாட்டம் ஒரு விடுதலை.

மனதை அழுத்தும் துயரத்தின் வடிகால்.மாபெரும் சக்தியின் முன் சரணாகதி அடைதலின் மாற்று வடிவம் அது. 

 வரையாடு செம்மறியாடு மற்றும் சேவல் போன்றவை அங்கே பலியிடப்பட்டுக் கொண்டிருந்தன.பலியிடப்பட்ட ஆட்டின் குருதி கனமான மணத்தை காற்றில் பரப்பியது.பலியிடப்பட்ட வரையாட்டின் தோலினை  சாமியாடிகள் உரித்துக் கொண்டிருந்தனர் . 

 இவற்றிற்கு மத்தியில் சிவனின் தந்தை சேயோனை தொழுது கொண்டிருந்தார். அங்கே புலித் தோலை அணிந்து கொண்டிருந்த வெகு சிலரில் அவரும் ஒருவர். அங்கேயிருந்த சில மூப்பர்கள் சிவனின் தந்தையை நோக்கி சுட்டிக்காட்டி இரண்டு புலிகளைக் கொன்ற மாவீரன் அவன் தான் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். "மல்லர்களில் சிறந்த மல்லன் இவன், இவனே மல்லப்பா எனும் பட்டத்தை சுமப்பவன். இந்த முறையும் இவனை இங்கு எதிர்க்க யாரும் இல்லாததால் அவனே இன்னும் 12 வருடங்களுக்கு மல்லப்பாவாகக் கருதப்படுவான். சேயோன் அவரது வம்சத்தை காக்கட்டும்", என்று அத்தனை அவர்கள் ஆசீர்வதித்தனர்.

 அங்கே புலி ஆடையை அணிந்திருந்த மற்றொருவரும் இருந்தார். அவர் பார்ப்பதற்கு அச்சு அசல்  சிவனின் தந்தையைப் போலவே தோற்றம் கொண்டிருந்தார். அவர் அத்தனின் இளைய சகோதரர். வடக்கே இருக்கும் கானகத்தின் பெருவீரர் அவர். இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணுற்றனர். பாச மிகுதியால் தழுவிக் கொண்டனர். அவர் அத்தனை மல்லண்ணா என பாசமிகுதியால் அழைத்தார்.

 அவருக்கு அருகில் அவரது கால்களை தழுவிய படி கூர்மையான  கண்களுடன் ஒரு சிறுவன் நின்றிருந்தான்.  அவனை ஒட்டி ஒரு சிறிய செம்மறி ஆட்டுக்குட்டியும் இருந்தது. அந்த குட்டிக்கு அவன்  புங்கை மரத்து இலைகளை   உண்ணுவதற்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அங்கும் இங்கும் ஓடித் திரியும்  இயல்புடைய அவனின் பாதங்களில் புழுதி படிந்திருந்தது. பார்ப்பதற்கு கருப்பு நிற சிவனைப் போல் இருந்தான்.

   “இவன் பத்ரா, நாங்கள் வீரையன் என்று அழைப்போம் ,” என்று சகோதரர் கூறினார், அவரது கை சிறுவனின் தலைமுடியை கோதிவிட்டபடி இருந்தது . “ இவனும் இவன் சகோதரி எல்லாம்மாவும்  பலியிடுவதற்காக பிடித்து வைக்கப்பட்ட செம்மறி ஆடுகளின் பின்னாலே சுற்றுவதை வழக்கமாகக் கொண்டவர்கள்."

" எல்லம்மா இங்கே வரவில்லையா?" என்றார் அத்தன்.

 அவளுக்கு தனது ஆடுகள் அறுக்கப்படுவதை கண் கொண்டு காண இயலவில்லை. அதனால் வரமாட்டேன் என்று கூறிவிட்டாள். "

சிவாவின் தந்தை, பத்ரன் ஒரு ஆட்டுக்குட்டியிடம் மெதுவாக பேசுவதைப் பார்த்தார், அது அவனது காலடியில் அமர்ந்திருந்தது. அவரது முகத்தில்  மேகம் கடந்து செல்வது போல ஒரு புன்னகை தோன்றியது. அவருக்கு சிவனின் நினைவு வந்தது. "சிவனும் இவனைப் போல் தான் மிருகங்களின் மீது அளவுகடந்த பாசம் உடையவன்." என்று அத்தன் கூறினார்.

  “சிவா ஏன் இங்கு வரவில்லை?” என்று சகோதரர் கேட்டார்.

 வலி நிரம்பிய புன்னகை ஒன்றை மட்டுமே அத்தனால்  பதிலாகத் தர முடிந்தது.  அத்தனின் கண்ணில் தோன்றிய வலியின்  நிழலை கண்ட இளைய சகோதரர்  தனது இடுப்பில் தொங்கிய தோல் பையில் இருந்து ஒரு செப்புக்காப்பை எடுத்தார்.

"வடக்கு கணவாய் வழியாக வந்த ஒருவர் இதை எனக்கு புலியின் பற்களுக்கு மாற்றாக கொடுத்து விட்டுச் சென்றார் இதை நான் சிவனின் மணிக்கட்டில் அணிவிக்க விரும்புகிறேன். சிவன் இதை நிச்சயம் விரும்புவான்" என்று அதை மெதுவாக தனது அண்ணனின் கையில் வைத்தார். 

 மேலும் பச்சை நரம்புகள் நிறைந்த,  செப்புத் தாதின் ஒரு துண்டை அவர் தனது அண்ணனிடம் காட்டினார் . “அவன் இது போன்ற தாதுவை  நெருப்பில் உருக்கி, மோதிரங்கள், பாத்திரங்கள், கருவிகள் முதலியவற்றை உருவாக்குகிறான். இதை பூமியின் இருதயத்தில் இருக்கும் பொக்கிஷம் என்கின்றான் அவன் "

 அத்தன் அந்த கல்லின் கரடுமுரடான விளிம்பை தனது கட்டைவிரலால் தடவினார், அவரது கண்களில் ஆர்வம்  பிரகாசித்தது. “அற்புதம்,” என்று மெதுவாக முணுமுணுத்தார். “நம் மலைகளிலும் இப்படிப்பட்ட கற்களைப் பார்த்திருக்கிறேன்… இதை நானும் உருக்க முயற்சிக்கிறேன். பூமி நமக்கு பரிசுகளை அளிக்கிறது என்றால், நாம் அவற்றை வடிவமைக்க  கற்றுக்கொள்ள வேண்டும்". அத்தனின் குரலில் ஆர்வம் கொப்பளித்தது.

மலைகளின் தாளம் பள்ளத்தாக்குகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

 மெல்ல மெல்ல தாளங்கள் மௌனத்தை நோக்கி திரும்பின. புனித சடங்குகள் முடிவுக்கு வந்தன. அத்தனின் குழுவினர் மற்ற குழுவினருடன் பிரியாவிடை பெற்று தங்களின் வனத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

 அத்தனின் குழுவினர் தங்கள் இருப்பிடத்தை நெருங்குவதற்கு முன்னர் ஒரு பேராபத்து அவர்கள் குடியிருப்பை நெருங்கியது.

 சிவன் வெயிலை வெறுத்தவன். குளிர் இரவு அவனுக்கு உகந்தது. நிலவின் இரவுகள் அவனுக்கு  விருப்பமானது. எப்போதும் நிலவின் குளிர்ந்த கரங்களால் ஈர்க்கப்பட்டவன் அவன்.  நிலவின் குளிரில் மட்டுமே அவன் இயல்பாக இருந்தான். நிலவினை எப்பொழுதும் தனது தலையின் மேல் வைத்திருக்க விரும்பினான். நிலவுக்கு தலைகாட்டிய படி சுற்றும் அவனை அவனது அன்னை செல்லமாக சந்திர சூடன் என்று அழைப்பாள்.

 அப்படிப்பட்ட ஒரு நிலவின் இரவில், குடியிருப்பில் வீரர்கள் அனைவரும் இல்லாத அந்த சமயத்தில், வெள்ளி வானத்தின் கீழ், சுதந்திரமாக சிவன் சுற்றிக் கொண்டிருந்தான். காற்று அவனுக்கு மட்டுமே கேட்கக்கூடிய ஒரு தாளத்தை முணுமுணுத்தது, மரங்கள் கூட அவனது பெயரை மெதுவாக உச்சரிப்பது போலிருந்தது.

 அந்தக் குளிர் இரவில் பசியுடன் திரிந்த இரண்டு பளபளப்பான கண்கள் அவனை உற்று நோக்கிக் கொண்டிருந்ததை அவன் அறியவில்லை.

 காரிருளில் பதுங்கியபடி நகர்ந்து வந்து கொண்டிருந்தது ஒரு வேட்டையாடி. அது இருளின் நிறத்தை ஒத்திருந்தது — அது ஒரு கருப்பு சிறுத்தையாக இருக்கக் கூடும்  அல்லது அதைவிட பழமையான ஏதோ ஒன்று... நிறுத்தி நிதானமாக அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.

 காற்றில் வேட்டையாடியின் மனத்தை சிவா உணர்ந்து கொண்டான்.

 சிவா ஓடினான், வேர்களில் தடுமாறி கீழே விழுந்த படி முட்களின்  கீறல்களை பொருட்படுத்தாமல் மிக விரைவாக ஓடினான்.  அவனது கூச்சல்கள் பள்ளத்தாக்கில் எதிரொலித்தன, ஒரு பறவையின் இறுதி குறிப்பு போல கூர்மையாகவும் மெல்லியதாகவும் இருந்த அந்த கூச்சல் இருளை கிழித்தது. கிராமத்தில் வீரர்கள் யாரும் இல்லை.

 ஆயி மற்றும் கொடிச்சி இருவரும் சிவனை காக்க விரைந்தனர். கண்ணில் கருணையையும் நெஞ்சில் வீரத்தையும் கொண்டிருந்த கொடிச்சி, மரணத்திற்கும் சிவனுக்கும் இடையில் தன்னை தயக்கமின்றி  நிறுத்திக் கொண்டாள்.  

 பொழுது விடிந்த பொழுது கொடிச்சி உயிருடன் இல்லை.

 வீரர்கள் வீடு திரும்பி இருந்தனர், துக்கம் அவர்களை மௌனமாக்கியது.

 கோடன்  மௌனத்தை கலைத்தான் . “இந்தப் பையன்... மீண்டும்! இவன் துரதிர்ஷ்டத்தைத் தருகிறான். முதலில் நெருப்பு, இப்போது மரணம். இது முடிவுக்கு வர வேண்டும். இவன் இந்தக் குடியிருப்பில் இருக்கத் தகுதியற்றவன் .” அவன் அனைவரும் கேட்கும்படி தனது குரலை உயர்த்தினான். ஆனால் இப்போது கோடனை அமைதிப்படுத்த கொடிச்சி இல்லை. 

அத்தனும் ஆயியும் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர்.

 சிவனின் உடலில் இன்னும் குருதி வழிந்தபடி இருந்தது. அவனது கண்கள் சூனியத்தை வெறித்தபடி இருந்தன. திடீரென்று சிவன் சரிந்தான். அவனது உடல் நடுங்கத் தொடங்கியது கண்கள் மேல் சொருகின.

 அவனது உதடுகளில் இருந்து நுரை மட்டுமே வந்தது. கிராம மூப்பரான ஆதன் என்பவர் சிவனின் முன் விரைந்தார்.  நோய்களைப் பற்றியும் மூலிகளைப் பற்றியும்  ஞானமுள்ளவர் அவர்.  

 அவர் அனைவருக்கும் கேட்கும்படி கூறினார், " இவனது கண்கள் மஞ்சள் பூத்துள்ளன... இவனது மூச்சு பலவீனமாக உள்ளது."

 அவரால் இயன்ற மூலிகை கசாயங்களை அவனுக்கு புகட்டினார். சிவன் மெல்லிதாக மூச்சுவிட்டு அரை மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தான்.

  "இவனை கைவிட்டு விடுவதே சிறந்தது. இவன் அதிக காலம் வாழ மாட்டான் ." மூப்பர்  அத்தனைப் பார்த்து மெதுவான குரலில் கூறினார்.

 சிவனுக்கு தோன்றிய அறிகுறிகள் அவனது இரத்தத்தில் மறைந்திருந்த அழலின்  முதல் அறிகுறியாகும். அதன் காரணம் வில்சனின் நோய், ஆனால் அக்காலத்தில் அதைப்பற்றி அறிந்தோர் யாரும் இல்லை.

 அன்று இரவு சிவனின் தந்தை ஒரு முடிவு எடுத்தார். குலத் தலைவராக இருந்த அவர் தனது பதவியில் இருந்து விலகினார். தனது ஈட்டியை கோடனிடம் ஒப்படைத்தார். தூக்க முடிந்தவற்றை மட்டும் எடுத்துக்கொண்டார். ஆயி மற்றும் புலித்தோலில் சுற்றப்பட்ட துவண்டு கிடந்த சிவனுடன், அவர்கள் தெற்கு நோக்கி பயணமானார்கள்.

 நீண்ட நெடிய பயணம் அது. இளைப்பாற அமர்ந்த ஒவ்வொரு இடமும் சிவனின் அழலை தூண்டி விட்டது. 

 இறுதியில் அவர்கள் பொதிகை மலையின் உச்சியை அடைந்தனர்.  அது ஒரு குறிஞ்சி நிலம். அந்த நிலம் பகலில் கூட நிலவொளியில் குளித்தது போல குளிர்ந்து இருந்தது.

 அங்கே எப்பொழுதும்  ஒரு மென்மையான குளிர் மரங்களைச் சுற்றி வந்தது, வானமே பூமிக்கு அருகில் மண்டியிட்டது போல காணப்பட்டது. அங்கே இருந்த கற்கள் வெப்பத்தை தக்கவைக்கவில்லை. அங்கே மேகக் கண்ணீரில் பிறந்த ஆறுகள், வெள்ளிப் பாம்புகள் போல பாறைகளுக்கு மத்தியில் வளைந்து சென்றன.

 "இந்த இடம் நம் மகனுக்கு உகந்த இடம். இங்கே நம் மகனுக்கு ஒருபோதும் வெயில் தெரியாது. நாம் ஒரு புது வாழ்க்கையை இங்கே துவங்குவோம்." அத்தனின் இந்த வார்த்தைகளை சிவனின் தாய் முழு மனதுடன் ஆதரித்தாள்.

 அவர் சிவனுக்கு அருகில் மண்டியிட்டு செப்புக் காப்பை எடுத்து அவனது மணிக்கட்டில் பொருத்தினார்.   சிறுவன் அதை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

 அந்த செம்பு மெல்ல அவனது உடலில் ஊடுருவி அவனுக்குள் ஏற்படுத்த போகும் மாற்றங்களை சிவன் அறிய மாட்டான்.

 இது அவனது உடலில் நிகழப்போகும் மறைமுகமான போரின் ஒரு தொடக்கமாகும். 

   அந்த செம்பு காப்பானது; ஒரு நாள் அவனது வாழ்க்கையை மட்டுமல்ல, அவனை வணங்கியவர்களின் விதியையும் மாற்றப் போகிறது.

  இதைப் பற்றி ஏதும் அறியாத அவர்கள்  பொதிகை மலையின் குளிர்ந்த சரிவுகளில், புனித பொருநை ஆற்றுக்கு அருகில், காட்டு மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு சோலைக்கு இடையே,  கல்லாலும் மௌனத்தாலும் ஒரு இல்லத்தைக் கட்டினர்.கருப்புப் பாறைகளால் அடுப்புக்குழிகளை   வடிவமைத்து, காற்றை தாங்கும் கூரைகளை பின்னினர். சிவனும் ஆர்வத்துடன் வீடு கட்டுவதில் தாய் தந்தைக்கு உதவினான்.

 அது அவர்களால் கட்டப்பட்ட வீடு. அது அவர்களுக்கேயான வீடு. அது அன்பின் இல்லம். அன்னையின் அன்பும் தந்தையின் உறுதியும் குழைத்துக் கட்டப்பட்ட அன்னை இல்லம் அது.

 அந்த இல்லத்திற்கு பாதைகள் ஏதுமில்லை. மலைகள் அனுமதித்தால் மட்டுமே அவர்களை மற்றவர்கள் அணுக முடியும்.

 அந்தப் பொதிகையில் பொருநை நதியோரம்,  கடுஞ்சொற்களுக்கும் வஞ்சத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு உலகில்,  கடவுள் ஒருவன் மெதுவாக வளரத் தொடங்கினான். 

அவன் குளிர்நிலவை தலையில் சூடியவன். அவன் ஒரு சந்திரசூடன்.

******************

இதன் முந்தைய பாகத்தை படிக்க

1.

2.

3.

Thursday, July 17, 2025

அதிர்துடியன் (ஆதியோகி: அத்தியாயம் 3)

 பண்டைய தென்னிந்தியாவின் அடர்ந்த காடுகளின் இதயத்தில், குறிஞ்சி மலர்கள் பதினான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் மலைகளுக்கு இடையில் இருந்த முல்லை நிலத்தில்,  புல்லாங்குழலின் ஊடாக காற்று நுழைந்து இசையை எழுப்புவது போல சிவனின் அன்னை 'ஆயி'   ஒரு தாலாட்டை இசைத்துக் கொண்டிருந்தாள். 


 அவளைச் சுற்றி, பழங்குடியின பெண்கள் ஒரு புனித வட்டத்தில் கூடினர். கொடிச்சி... அவர்களின் தலைவி, உறுதியும் ஞானமும் கொண்டவள். அவள் அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினாள். அவர்களின் முகங்கள் நடுவில் பிரகாசமாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பின் சுவாலையில்  பெருமிதமாக ஒளிர்ந்தன.


 இம் மக்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அருகிலுள்ள முல்லை நிலங்களில் அமைந்த துடியர் இனப் பழங்குடியினர். அந்த இனத்தின் பெண்கள் நெருப்பின் காப்பாளர்களாகவும், நினைவுகளின் நெசவாளர்களாகவும், நீதியினை தங்களது நெஞ்சில் தாங்குபவர்களாகவும் இருந்தனர். காடு அவர்களை துடியன் குலம் என்று அழைத்தது. அவர்களின் இரத்தம் உலகின் எந்த ஒரு அரசர் குலத்தைக் காட்டிலும்  பழமையானது.


 சிவன் தனது முதல் ஐந்து ஆண்டு கால வாழ்க்கையை நிலத்தின் துடிப்பை தங்கள் கைகளில் தாங்கிய துடியர் குல பெண்களின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தான்.


 அவனது தாய் ஆயி. அந்தக் குல பெண்களில் மிகவும்  மதிக்கப்பட்டவள். அவளது நாவில் பழந்தமிழ் பாட்டுக்கள் தாண்டவம் ஆடும். துடிப்பறை இசையிலும் அவள் வல்லவள்.


 துடிப்பறை என்பது மணல் கடிகார வடிவிலான இந்த பழங்குடியினருக்கே உரித்தான ஒரு வகை முரசு ஆகும். அந்தப் பறை இசை மூலமாகத்தான் தூரத்தில் இருக்கும் அவர்களது உறவினர்களுடன் அவர்கள் பேசிக் கொள்வார்கள்.




 தற்பொழுது அவள் தனது மகனான சிவனுடன் அமர்ந்திருந்தாள். அவளது கையில் பழமையான ஒரு துடிப்பறை இருந்தது. அதன் தோல் இன்னும் மழையின் ஈரத்தைக் கொண்டிருந்தது. அதனால் அதை அவள் இசைக்கும் பொழுது இன்னும் கூர்மையான ஒலியை அது எழுப்பியது.


 “ஒவ்வொரு அசைவும் ஒரு தாளம், சிவா,” என்று அவள் மெலிதாகச் சொல்வாள், அவளுடைய குரல் பள்ளத்தாக்கை செதுக்கும் ஆறு போல உறுதியாக இருந்தது. “நீ பேசும்போது, உன் மிடற்றால் காற்றை அதிரச்செய்து நாவை அசைத்து ஒலிகளை எழுப்புகிறாய்.”

 ஒவ்வொரு ஒளியையும் நாவை அசைத்து அவள் தனது மகனுக்கு சொல்லிக் கொடுப்பாள். அந்த ஒளி; முரசால் எப்படி ஒலிக்கப்பட வேண்டும் என்பதையும் கூடவே சொல்லிக் கொடுப்பாள்.


 சிவனால் அவளுக்கு இணையாக ஒலிகளை எழுப்ப இயலவில்லை. அச்சிறுவனால் கவனத்தை குவிக்க இயலவில்லை.  


 அவன் உச்சரிப்பில் தடுமாற்றங்கள் நிறைந்திருந்தன. 


 ஆனால் ஆயி பொறுமை நிறைந்தவள். ஒவ்வொரு காலையும், அவள் அவனருகில் மண்டியிட்டு, அவனது சிறிய கைகளை துடிப்பறையின் மீது வழிநடத்தி, அவனது தயங்கும் விரல்களிலிருந்து மிருதுவான தாளங்களை வரவழைத்தாள். 


அவனுக்கு மிகவும் பிடித்த ஒலி, புனிதமான தமிழ் எழுத்தான ழகரம்.


 வடக்கே பிராகுயி இன மக்கள் தொடங்கி முண்டாரி இன மக்களைத் தாண்டி தெற்கே வாழும் இவர்களைப் போன்ற பல குடியின மக்கள் தங்கள் வார்த்தைகளுக்குள், ஒலிகளுக்குள், சப்தங்களுக்குள் ஒற்றுமையை பாவிக்க முடியும். ஏனெனில் அவர்கள் அனைவரும் சகோதர இன மக்கள், ஒரே கிளையிலிருந்து பிரிந்து பல்வேறு இடங்களில் வாழ்ந்து வருபவர்கள். ஆனால் இந்த ழகரம் இவர்களுக்கேயான தனித்துவமான ஒரு ஒலி.


 அந்த ழகரத்தை உச்சரிக்க ஆயி அவனுக்கு கற்றுக் கொடுத்தாள்.


  அவன் தன் நாக்கை மேல்அண்ணத்துடன் அழுத்தி ழகரத்தை உச்சரித்தான்.


 அதை உச்சரித்த போது அவனது கண்கள் விரிந்தது... விரல்களால் தனது புருவ மத்தியை தொட்டான்.

“ஆயி,” என்று அவன் மெலிதாக விளித்தான்.

“நான் இந்த எழுத்தை உச்சரிக்கும் பொழுது… என் கண்களுக்கு இடையில் மின்னல் போல ஒரு உணர்வு வருகிறது.”

ஆயி மென்மையாகச் சிரித்து, அவன் முகத்தில் இருந்த வெளிர் கூந்தலைத் துடைத்து “ இதை சொல்லும் பொழுது உனக்குள் ஏற்படும் உணர்வு தனித்துவமானது. எனவே இந்த எழுத்தை அடிக்கடி உச்சரித்துப் பார் மகளே ” என்று அவள் கூறினாள். 

" புருவ மத்தியில் ஒரு மின்னல் கீற்று நெளிவது போல் உள்ளது", என்றான் சிவன்.

“ அப்படியா! அப்படியானால் அந்த மின்னல் உன்னை வழிநடத்தட்டும். " ஆயியின் குரல் அசரீரி போல் ஒலித்தது.

"ழ என்பது நமது கடவுள் சேயோன் உச்சரித்த எழுத்து. அது மிகவும் புனிதமானது. அதை உன் குரலில் நெருப்பைப் போல பாதுகாப்பாயாக என் அன்பு மகனே.”


ஆனால் சிவாவின் ஆரம்பகால வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை. அவனது அல்பினிசம் அவனை சூரியனுக்கும் சந்தேகத்திற்கும் இலக்காக்கியது. அவனது வெளிர் தோல்; சுள் என்று தாக்கும் சூரியனின் வெப்பத்தில் வெந்தது, மற்ற குழந்தைகள் அவனது விசித்திரமான தோற்றத்தை கேலி செய்தனர். வெப்பத்திலிருந்து தப்பிக்க அவன் நீரில் முங்கியபடியே இருப்பான். குளிர் மரங்களின் நிழலை நாடி இருப்பான். வெப்பத்தை தவிர்ப்பதற்கு அவன் பின்பற்றாத முறைகளே இல்லை எனலாம்.


ஒரு மதியம், ஒரு எருமை குளிர்ந்த சேற்றில் நெற்றியை நனைப்பதைப் பார்த்த அவன்  ஈரமான சேற்றை அள்ளி, தன் நெற்றியிலும்  தோலிலும் பூசினான். இச்செயலாளர் அவனுக்கு சூரிய ஒளிச் சூட்டில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைத்தது, ஆனால் பின்னால் வந்த மற்ற குழந்தைகளின் சிரிப்பு கொடுமையாக இருந்தது.“சேற்றுத்தோலோன்... வெண்ணிற மாயாவி!” என்று அவர்கள் சிவனை பார்த்து கூவினர். அவர்களின் கேலிகள் சூரியனின் சூட்டைக் காட்டிலும்  ஆழமாக காயங்களை அவன் மனதில் ஏற்படுத்தின. 


ஆனால் ஆயி, அவனருகில் குனிந்து, அவனது கண்ணீரைத் துடைத்தாள். “ அவர்களின் வார்த்தைகள் உன்னை அழ வைப்பதை நோக்கமாகக் கொண்டு உச்சரிக்கப்படுபவை. நீ அழுது அவர்களை வெற்றி பெறச் செய்து விடாதே மகனே” என்று அவள் மென்மையாகச் சொன்னாள். “நீ பூமியின் தாளம். உன்னை காப்பதன் மூலம் பூமி தன் உரிமையைப் பாதுகாக்கும்.”


ஒதுக்கப்படுதலின் வலியை மீறி, சிவா வெறும் தோற்றத்தில் மட்டுமல்லாமல் தனித்துவமான செயல்களின் மூலமாக தனது குழுவில் இருக்கும் மற்ற குழந்தைகளை காட்டிலும் வேறுபட்டவனாக இருந்தான். 


மூன்று வயதில், அவன் மலைக்காற்றில் சிக்கிய இலை போல நடனமாடினான். அவனது கால்கள் மணலின்  மீது மெலிதாகப் பேசின, அவனது கைகள் நீர் அலைகள் போலப் பாய்ந்தன. 

அவன் பாடும்போது, கானகம் செவி மடுத்தது.

 அவனது ஓவியங்கள் உயிருடன் துடித்தன. 

 அந்தப் பழங்குடி மக்கள் அவனது முதுகுக்குப் பின்னால் பேசத் துவங்கினர்: "இந்தப் பையனின் கைகள் நெருப்பால் ஆசிர்வதிக்கப்பட்டவை."

 ஆனால் பொறாமை கொண்ட கோடன் இதை வேறு விதமாக பாவித்தான்.  அவன் சிவாவின் தந்தையை,  நீண்ட காலமாக வெறுத்தான். சிவனின் தந்தையைப் போல கோடனும் ஒரு வேல் வீரன் தான்.  ஆனால் அத்தனின் வீரத்திற்கு அவர்கள் கூட்டமே தலைவணங்கியது கோடனுக்குப் பிடிக்கவில்லை.

கோடனின் ஈட்டி விரைவாக இருந்தது, ஆனால் அவனது நாக்கு அதைவிட கூர்மையாக இருந்தது.“இந்தக் குழந்தை,” என்று அவன் அடிக்கடி முணுமுணுத்தான், “மிகவும் விசித்திரமானவன். அவன் நம்மைப் போல இல்லை.” இவ் வார்த்தைகளை ஒரு மந்திரம் போல அடிக்கடி உச்சரித்து வந்தான் கோடன்.

 பழங்குடியினரின் குடிசை குடியிருப்புகள் வட்ட வடிவில் இருந்தது. அங்கே பல்வகை மக்கள் இருந்தனர். வேட்டைக்காரர்கள், உணவு சேகரிப்பவர்கள், முரசு அடிப்பவர்கள், பானை செய்பவர்கள், அவர்கள் குடியிருப்பின் மையத்தில் புனித நெருப்பைச் சுற்றி எளிய குடிசைகளில் வாழ்ந்தனர்.

 அந்த நெருப்பு கொடிச்சியை போன்ற மூத்த பெண்களால் பகலும் இரவும் பராமரிக்கப்பட்டது. அவர்கள் நாகரீகத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்த மக்கள். அவர்கள் கல் ஆயுதப் பயன்பாட்டாளர்கள். கத்திகள், சுரண்டிகள், அம்புகள் போன்றவற்றை கற்களில் செதுக்குபவர்கள். அந்தக் கூட்டத்தில் பிறந்த குழந்தைகள் எண்ணுவதற்கு முன்பே கற்களைத் தீட்டவும் வடிவமைக்கவும் கற்றனர். அவர்களின் களிமண் பாண்டங்கள், ஆழமற்ற களிமண் குழிகளில் சுட்டு உருவாக்கப்பட்டவை. வேட்டையாடுதலே அங்கு உணவுக்கான முக்கிய வழி.  அவர்கள் கூட்டத்தில் வேட்டையாடுதல் ஒரு கூட்டுச் சடங்காக இருந்தது. 

 பறைகளின் மூலம் தூரத்தில் இருப்பவர்களுடன் பேசிக் கொள்வதும், கானகத்தின் பிற உயிர்களுக்கு கேட்காத வண்ணம் சமிக்கைகள் மூலம் பேசிக் கொள்வதும்  அவர்களின் உயிர்வாழ்வு மொழியாக இருந்தன. 

ஒரு கூட்டம் ஒரு காட்டெருதின்  தடமறிந்து; அவற்றின் பின்னர் கானகத்தின் பிற உயிர்கள் அறியா வண்ணம் மெதுவாகச் செல்லும். மிருகத்தின் பழக்கங்களை அறிந்து, அதன் தாகத்தை முன்னறிந்து அவற்றின் பாதையை அடியொற்றி அந்தக் கூட்டம் செல்லும். அதன் இருப்பிடத்தை அறிந்ததும்; அதை சுற்றி வளைக்க ஏதுவான இடத்தை தேர்வு செய்ததும், துடிப்பறையின் மூலம் சகக்குழுவினருக்கு இந்தச் செய்தி அறிவிக்கப்படும். அத்தனின் தலைமையில் ஒரு குழு அதை வேட்டையாட அவர்கள் தடத்தை ஒற்றி பின் செல்லும். ஒரு வெற்றிகரமான வேட்டை அனைவருக்குமான  வெற்றியாக இருந்தது. 

 கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சி வீட்டிற்கு கொண்டு வரப்பட்டபோது, அதை தன் மக்களுக்குப் பிரித்து தரும் வேலையை திறம்பட செய்தவள் கொடிச்சி.

 நெருப்பினை சுற்றி வட்ட வடிவில் அமர்ந்து கொண்டு அந்த இறைச்சியை அவர்கள் பகிர்ந்து உண்பார்கள். அப்படி ஒரு நிகழ்வில் சிவா தனிமையில் அமர்ந்து இறைச்சியை உண்ணாமல் அதை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

 ஆயி இதைக் கவனித்து, அவனருகில் அமர்ந்து, அவனது தோளில் இருந்த சாம்பலைத் துடைத்தாள். “ஏன் தனியாக இருக்கிறாய், சிவா?” என்று அவள் மென்மையாகக் கேட்டாள். அவன் தலையை ஆட்டினான். “ஏன் அவற்றைக் கொல்ல வேண்டும், ஆயி? அந்த எருது புல்லை உண்ணவும், தன் குட்டிகளைப் பாதுகாக்கவும் மட்டுமே விரும்பியது. அதன் பசி நம்முடையதை விட ஏன் குறைவாக மதிக்கப்படுகிறது?” அவனது குரல் நடுங்கியது, பயத்தால் அல்ல, ஒரு விசித்திரமான கருணையால். 

ஆயி ஆச்சரியத்துடன் தலை சாய்த்தாள். “பிறகு நீ என்ன சாப்பிடுவாய், குட்டி?” என்று கேட்டாள். சிவா ஆற்றை நோக்கிப் பார்த்தான், அங்கு விரால் மீன்கள் ஆழமற்ற நீரில் நடனமாடின. “மீன் எனக்கு போதும்,” என்று அவன் உறுதியாகச் சொன்னான். “அவை இறக்கும்போது கத்துவதில்லை.” ஆயி அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

 அப்படியானால் நீ மீன்களைப் பிடித்துக் கொண்டு வா உனக்கு நான் சமைத்து தருகிறேன் என்றாள் சிவனின் அன்னை.

 சிவன் தனது தந்தையின் ஈட்டியை போலவே சிறிதான ஒன்றை செய்து கொண்டு மீன் வேட்டையாட கிளம்பினான். ஒற்றை முனை கொண்ட ஈட்டியால் மீன்களை எளிதாக சிவனால் வேட்டையாட முடியவில்லை. தோல்வியுடன் திரும்பிய அவனை அந்த தாய் பாசத்தோடு அணைத்துக் கொண்டாள்.

கொடிச்சி எல்லாவற்றின் மையத்தில் அமர்ந்திருந்தாள்—மூப்பு  மிகுந்தவள் அவள்,ஆனால் வளையாதவள், அவளது சுருக்கம் நிறைந்த தோலில் பூக்கள் பல வடிவில் பச்சை குத்தப்பட்டிருந்தது. அவளது கத்தி, ஆற்றால் மெருகூட்டப்பட்ட கற்களால் செய்யப்பட்டது. அந்தக் கல் அவளது மனதைப் போலவே கூர்மையாக இருந்தது. அவள் அந்தப் பழங்குடியின் ஆன்மா, காட்டின் சட்டதிட்டத்தின் உயிர் மூச்சு, இணக்கத்தின் காப்பாளர்.

“ஏன் அவள் நமது கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறாள்?” என்று ஒருமுறை சிவா கேட்டான். “ஏனெனில் அவள் கேட்கிறாள்,” என்று ஆயி பதிலளித்தாள். “ அவள் தான் அனைத்தையும் கவனிக்கிறாள்...  "

 "நீயும்தான் கவனிக்கிறாய். என்னையும் இந்த கூட்டத்தின் தலைவனான நம் தந்தையையும் கவனிப்பவள் நீதானே அம்மா."

"என்னைப் போன்ற தாய்களை கவனிக்கும் தாய் அவள். அவளே நமது குழுவின் மையச் சரடு. அந்த சரடினைச் சுற்றியே வண்ண மலர்களான நாம் அனைவரும் மாலையாக கோர்க்கப்பட்டிருக்கிறோம்."

 தெளிந்த நீரோட்டம் போல சென்று கொண்டிருந்த அந்த குழுவினரது வாழ்க்கையில் ஒரு துர் சம்பவம் நிகழ்ந்தது. ஒரு இரவு,  சமையல் குழியில் இருந்து ஒரு தீப்பொறி குடிசையின் கூரையைப் பற்றியது. புலி போல பாய்ந்து, கிராமத்தின் பாதியை ஆற்றால் தணிக்கப்படுவதற்கு முன் விழுங்கியது. 

 வருத்தத்தில் மௌனமாக இருந்த  குழு மக்களுக்கு இடையே  கோடனின் குரல் உயர்ந்தது. “இந்தப் பையன்!” என்று அவன் குற்றம்சாட்டும் விரலால் சுட்டிக்காட்டினான். “அவனது விசித்திரம் இந்த சாபத்தை கொண்டுவந்தது! அவன் ஒரு கெட்ட சகுனம்!” அவனது வார்த்தைகள் இடி போல உடைந்தன. சிவா உறைந்து நின்றான், அவன் தோலில் மண், அவன் கண்களில் தீயின் ஒளி. 

அவனது தந்தை முஷ்டிகளை மடக்கி முன்னேறினான், ஆனால் ஆயி அவனைத் தொட்டு தடுத்தாள்.“காற்றைக் குறை சொல், குழந்தையை அல்ல,” என்று அவள் சொன்னாள். 

பழங்குடி மக்களின் உதடுகள் முணுமுணுத்தன. கொடிச்சி எழுந்தாள். “இந்தத் தீ யாருடைய தவறும் இல்லை,” என்று அவள் சொன்னாள். “பயம் எனும் தீயால் எரியாதவற்றை எரிக்கத் துணியாதீர்கள்.” அவளது வார்த்தைகள் அந்த மக்களிடையே நிலைத்தன, ஆனால் கோடன் ஏற்படுத்திய வார்த்தைகளின் தழும்பு சிவனின் மனதில் நீங்காத தழும்பாகத் தங்கியது. 

நாட்கள் வேகமாக நகர்ந்தன 14 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் குறிஞ்சிப் பூ மலை முழுவதும் மலர்ந்து, மலைகளைப் போர்த்தத் தொடங்கியது. மலைகள் குறிஞ்சியின் நிறத்திற்கு மாறின. காற்று குறிஞ்சியின் மகரந்தத்தை பரப்பியது... தேனீக்கள் பாடல்களால் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தன.

 இது தென்னிந்தியாவில் இருக்கும்  அனைத்து பழங்குடியினரும் ஒன்று கூடும் ஒரு நிகழ்ச்சியின் தொடக்கம். 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி மலரும் பொழுது இந்த ஒன்று கூடல் நடக்கும்.

மல்லப்பக் கொண்டா என இப்பொழுது நம்மால் அழைக்கப்படும் ஒரு இடத்தில் இந்த நிகழ்வு நடக்க இருக்கிறது. அங்கே சேயோனுக்கான வழிபாடும், அணங்கு வெறியாடலும்,  உயிர் பலிச் சடங்கும் நடத்தப்படும்.

 இச்செய்தியை தென்னகம் முழுவதும் காற்றிலே பறையர்களின் பறை ஒலி பரப்பியது. பறையர்களின் பறை இசை ஒலி சற்றே ஆழமானது, அது மலைகளைத் தாண்டி  பயணித்தது. ஒவ்வொரு மலையிலும் வசிக்கும் பறையர் இனக் குழுக்கள் அந்தச் செய்தியை தென்னகம் முழுவதும் பரவச் செய்தனர்.

 ஆண்கள் அனைவரும் தங்கள் சுற்றத்தாரையும் நண்பர்களையும் மீண்டும் சந்திக்கும் சந்தோஷத்தில் பயணத்திற்கு தயாராக ஆரம்பித்தனர். சிவனின் தந்தை புலித்தோலை ஆடையாக அணிந்து கொண்டார். அவரது தலை உச்சியை காட்டெருதின் கொம்பு அலங்கரித்தது. அதற்கு மேல் மயிர் பீலி அசைந்தாடியது. கோடன் தான் வீழ்த்திய புள்ளி மான் ஒன்றின்  தோலை ஆடையாக அணிந்திருந்தான்.

 சிவா தனது தந்தையை நோக்கி ஆசையுடன் முன்னேறினான், அவனது வெளிர் கண்களில் நம்பிக்கை மின்னியது." அப்பா நானும் உங்கள் கூடவே வருகிறேன்" என்றான் சிவன்.

 ஆனால் அவனது தந்தை தயங்கினான்,  “ அங்கே வருபவர்கள் உன்னை புரிந்து கொள்ள மாட்டார்கள் சிவா” என்று அவன் அமைதியாகச் சொன்னான். “ அவர்கள் உன் மனதை பார்ப்பதற்கு முன் உன் நிறத்தைத் தான் பார்ப்பார்கள். நீ இங்கு இருப்பதே நலம்.” 

 அவர்களின் பயணம் அதிகாலையில் தொடங்கியது. சிவா அவர்கள் மலைகளின் வழியாக  செல்வதை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான், அவர்களின் நிழல்கள் மூடுபனியாலும் மரங்களாலும் விழுங்கப்பட்டன. அவர்கள் சிவனின் பார்வையில் இருந்து மறைந்து விட்டனர்.

தனியாக அவன் கிராமத்தைக் காக்கும் பெரிய ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, தன் விரலால் மணலின் மேல் உருவங்களை வரைந்து கொண்டிருந்தான். 

காற்றில் அடித்து வரப்பட்ட குறிஞ்சி மலரின் இதழ்கள் மென்மையாக அவனைச் சுற்றி விழுந்தன. அரிதாக மலரும் அந்த மலரின் அழகை ஆராதிக்க அங்கு யாரும் இல்லை.

**************************

இதன் முந்தைய பாகத்தை படிக்க

1.

2.

Sunday, July 13, 2025

அந்திவண்ணன் (ஆதியோகி: அத்தியாயம் 2 )

காட்டின் சுவாசம் மரங்களிடையே நுழைந்தபடி இருந்தது. அந்த முல்லை நிலத்தின் இதயத்தில்—பழமையான இலுப்பை, புன்னை, குருக்கத்தி, நாவல் போன்ற மரங்களின் அடர்ந்த இருப்புக்கு இடையே, நேற்றிரவு பெய்த மழையின் மணம் இன்னும் பூமியில் மணம் பரப்பியபடி இருந்தது. ஈரமான அந்த மண்ணில் துடியர்களின் பாதங்கள் எழுப்பிய மெல்லிய ஒலி, சுவர் கோழியின் ரீங்காரத்தோடு இணைந்தது. அந்த வேட்டைக் குழு அகலமான ஒரு வளைவில் முன்னேறியது. அவர்களின் நிழல்கள் மரங்களுக்கு இடையே அமைதியாக நகர்ந்தன.


அவர்கள் வேட்டையாடிகள், ஆனால் அதற்கும் மேலாக அவர்கள் துடியர்கள், துடிப்பறை எழுப்பும் தாளத்தின் பாதுகாவலர்கள். அவர்களின் கையில் இருக்கும் ஈட்டியும், கணிச்சியும், ஆற்றின் படுக்கைகளுக்கு அருகில் சேகரிக்கப்பட்ட கற்களால் செய்யப்பட்டவை.

அவர்களின் தலைவன் அத்தன். காட்டின் மண்ணைப் போல கருமையான தோலும், அகலமான மார்பும் கொண்டவன். அவன் தனது குழுவை திறம்பட வழி நடத்திக் கொண்டிருந்தான். அவனது ஒவ்வொரு அசைவும் அவரது கூட்டத்தினரால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

உறுதியாகவும் அழுத்தமாகவும் அதே சமயம் ஓசை எழுப்பாமலும் நகர்ந்து கொண்டிருந்த அவனது பாதம் நகர மறுத்து அழுத்தமாக தரையில் ஊன்றி நின்றது. அவன் திடீரென்று தனது கையை உயர்த்தினான். அவனது முழு குழுவும் அந்த கட்டளைக்குப் பணிந்து நின்றது. அவன் மண்டியிட்டு தரையில் அமர்ந்து, உடைந்த ஒரு கிளையைத் தொட்டான். மேற்கு நோக்கி ஒரு பார்வை பார்த்து, “கடமான்... அருகில் உள்ளது,” என்று மெதுவாக முணுமுணுத்தான். மற்றவர்கள் அவன் கூறியதை கூர்ந்து கவனித்தனர் .


சடாரென்று ஒரு கடமான் அவ்வழியே பாய்ந்தது. தயாராக இருந்த அவர்கள் அந்த மானை கிழக்கு நோக்கி விரட்டினர், மலைகளுக்குப் பின்னால், செதுக்கப் பட்ட கல்லால் ஆன ஈட்டிகளை ஏந்திய ஒரு சிறிய குழு அம்மானை வளைத்தது. அந்தமான் சிறிது கூட தப்ப வாய்ப்பு இல்லாதது போல் அவர்களின் திட்டம் அமைந்திருந்தது. இவர்களின் இந்தத் திட்டம் காட்டைப் போலவே பழமையானது.

முழு முனைப்போடு வேட்டையை அவர்கள் துவங்கிய அதே வேளையில், திடீரென காற்றைக் கிழிக்குமாறு எழுந்த ஒரு உருமல் அனைவரையும் உறைய வைத்தது. அழையா விருந்தாளி ஒன்று அவர்களின் வேட்டையின் குறுக்கே வந்தது.

அது ஒரு வரிப்புலி. மரங்களின் ஊடே நுழைந்து வரும் சூரிய ஒளி; செம்மண்ணைத் தீண்டியது போல தோற்றமளிக்கும்  செவ்வரிகள் அதன் உடலில் இருந்தது. அது மண்ணில் பதித்த பாதத்தடங்கள் மலர்ந்த ரோஜாவினைப் போல் இருந்தது.

அது துரத்தி வந்தது தனக்கான  வேட்டையைத்தான் , ஆனால் அது இப்போது கண்டறிந்திருப்பது வேட்டையாடிகளை.

இருபுறமும் பதட்டம் பரவியது.

பதட்டமும் பயமும் காட்டின் பரிபாஷைகள். ஆனால் அத்தனின் முகத்திலோ பயத்தின் ரேகைகள் சிறிதும் வெளிப்படவில்லை.

அவன் உறுதியாக நின்றான். அவன் ஓடவில்லை. தனக்கு சமமான எதிரியை கண்டறிந்த திருப்தி அவனது முகத்தில் தெரிந்தது. புலியின் முகத்திலும் அதே உணர்வு பிரதிபலித்தது போலத் தோன்றியது.

புலியின் பின்னங்கால்கள் பூமியில் அழுத்தமாகப் பதிந்தன, வில்லிலிருந்து புறப்படும் நாணை போல காற்றைக் கிழித்துக்கொண்டு புலி அத்தனை நோக்கிப் பாய்ந்தது. அத்தனின் கால்கள் ஆச்சா மரத்தின் வேர்கள் போல பூமியில் அழுத்தமாக ஊன்றி இருந்தன, ஆனால் அவனது உடலோ அம்பைப்போல் போல் வளைந்து புலியின் தாக்குதலை தவிர்த்தது. அவனது உடல் கீழ்நோக்கி வளைந்தாலும் ஈட்டியை பிடித்திருந்த கை உயர்ந்திருந்தது. அது புலியின் கீழ்நெஞ்சில் ஒரு ஆழமான காயத்தை ஏற்படுத்தி விட்டது.

  வலியினால் புலி தரையில் விழுந்து கர்ஜித்துத் துடித்தது.

அத்தனின் கை இடுப்பில் இருந்த கணிச்சியை அனிச்சையாக உருவியது. காயம் பட்டப் புலியும்... கடும் வேகத்துடன் அத்தனும்... ஒருவரை ஒருவர் நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தனர். அந்த ஒரு க்ஷணத்தில் காட்டின் சுவாசம் நின்றது, இலைகள் அசைய மறுத்தன, அத்தனின் குழுவினரின் கண்கள் அனைத்தும் இக்காட்சியை நோக்கி உறைந்திருந்தன.

நீரைத் தீண்டிய ஒளி விலகிப் பாய்வது போல, கானகத்தின் தரைக்கு மேலே சில அடிகள் உயரத்தில் புலியும் அத்தனும் நெருங்கிய அந்த வேலையில் அத்தன் சிறிதே விலகி இலாவகமாக கணிச்சியை புலியின் தொண்டையில் இறக்கினான்.

சூடான இரத்தம் அவனது கைகளை நனைத்தது. அவன் வெற்றியுடன் நின்றான், அவனது மார்புக்கூடு ஏறி இறங்கியது, காடு அவனைச் சுற்றி அமைதியானது. 

அந்த அமைதியை கிழிப்பது போல் ஒரு தாள ஓசை முல்லை நிலமெங்கும் எதிரொலித்தது.அது துடிப் பறையின் அழைப்பு. 

பள்ளத்தாக்குகளுக்கு அப்பால், தொலைவில் ஒரு “துடிப் பறை" ஒலித்தது—ஒரு துடிப்பு, பின்னர் இடைவெளி, வரிசைக்கிரமமாக துடிப்பு ஒளி காற்றில் செய்தியை சுமந்து வந்தது.

பேசுதலை குறிக்கப் பயன்படும் பறைசாற்றுதல், பறைதல், போன்ற வார்த்தைகளின் வேர்ச்சொல்லை தேடி பயணப்பட்டீர்கள் என்றால் அது இந்த துடிப்பறையின் அதிர்வில் தான் வந்து முடியும்.

 பறை இசை கேட்ட அனைவரும் அசையாது நின்றனர் .ஒரு புதிய உயிர் உலகில் நுழைந்ததை அந்தத் துடிப்பறை அறிவித்திருந்தது. அத்தனின் துணைவி ஒரு குழந்தையை பெற்றிருந்த செய்தியை அது அறிவித்தது. அனைவரும் இந்த சந்தோஷமான செய்தியை எதிர்கொள்ள தங்கள் இருப்பிடத்தை நோக்கி வேகமாக நடந்தனர். 

 செல்லும் வழியில் அத்தனின் ஒரு குழுவினன் கீழ்மண்ணில் கிடந்த ஒரு விசித்திரமான பொருளை எடுத்தான். அது ஒரு பெண் காட்டு எருமையின் கொம்பு. கருப்பாகவும், உறுதியாகவும் அது இருந்தது. அந்த வேட்டையாடி அதை எடுத்து, முத்தமிட்டு, வானத்தை நோக்கி உயர்த்திக் காட்டினான்.

 புலியின் தோலையும் வெற்றிவாகை சூடிய தன் தலைவனின் தலையை அலங்கரிக்கும் விதமாக காட்டெருமை கொம்பையும் பொருத்தியபடி அவர்கள் ஆனந்தம் கொண்டு தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினர். அவர்கள் பழங்குடி குடியேற்றத்தை அடைந்தபோது, பெண்கள் மகிழ்ச்சியிலும் பயபக்தியிலும் குலவை சத்தம் எழுப்பினர்.

ஒரு சிறிய குடிசையின் உள்ளே, அத்தனது துணைவி களைப்புடன்புதிதாகப் பிறந்த குழந்தையைத் தழுவியபடி  படுத்திருந்தாள்.

 அத்தன் உள்ளே நுழைந்தான். மற்றவர்கள் விலகினர். ஆவலுடன் அவனது குழந்தையைக் காண அவன் தனது துணைவியை நெருங்கினான். திடீரென்று அவனது கண்கள் வியப்பால் சுருங்கின... கூடே வந்திருந்த அனைவரின் கண்களும் தான். 

 அந்தக் குழந்தையினுடைய தோல் பௌர்ணமி நிலவைப் போல் வெளிரி இருந்தது. அந்தக் குழந்தை தனது தந்தையைப் பார்த்து கண்களை சிமிட்டியது.

 தமிழகத்தின் காடுகளில் வாழ்ந்து வந்த அந்தப் பூர்வ குடிகள் பூமியின் கருமையான பாறையைப் போல தோலுடையவர்கள், இப்படி ஒரு குழந்தையைப் இதுவரையிலும் அவர்கள் பார்த்ததில்லை.

 அங்கே சிறிது சலசலப்பு நிலவியது. அந்தக் கூட்டத்தில் ஒருவன் சற்றே குரலை உயர்த்தினான். அவனது பெயர் கோடன்... வேட்டையில் குறைவான திறனுடையவன் ஆனால் பேச்சிலே விரைவானவன். அத்தனுக்குக் கிடைத்த புகழினால் மனம் வெம்பிய அவன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டான். அனைவருக்கும் கேட்கும் படியாக தனது குரலை அவன் உயர்த்தினான்...

" கடவுளர்கள் கோபமடைந்துள்ளனர். இங்கே இருப்பது புலியின் இரத்தத்தில் இருந்து பிறந்த ஒரு வெளிர் குழந்தை... இது ஒரு சாபத்தின் வெளிப்பாடு. "

 மற்றவர்கள் சற்றே பயத்தில் பின்வாங்கினர். அவர்களின் பழைய மூடநம்பிக்கைகள் கிளர்ந்தன. வனத்தை பொருத்தமட்டிலும் வெளிர் விலங்குகள் சமநிலையின்மையின் அடையாளங்கள். அதன் காரணமாக அனைவரும் அந்தக் குழந்தையை சற்றே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 ஆனால் அந்தக் குழந்தையின் தாய் மெலிதாகப் புன்னகைத்தாள். குழந்தையின் நிறம் அவளுக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. 

 அந்த சிறிய குழந்தை தனது மெல்லிய விரல்களால் காற்றில் இசைப்பது போல கைகளை ஆட்டிக் கொண்டிருந்தது. அத்தனோ ஒரு குழப்பமான மனநிலையில் இருந்தான். இருப்பினும் அந்தக் குழந்தையின் வாத்சல்யம் அவனுள் பாசத்தை தூண்டி விட்டது. அவன் புலியின் தோலை எடுத்து, மெதுவாக அந்தக் குழந்தைக்கு அருகில் வைத்தான். காட்டெருதின் கொம்பினை அந்த குழந்தையின் தலைமாட்டிற்கு அருகில் சற்றே ஜாக்கிரதையாக அத்தன் வைத்தான். 

 ஒளிரும் வெளிச்சத்தில், காட்டு எருமை கொம்பு மகுடம் அவனருகில் பளபளத்தது.

 மரங்களின் வேர்கள் பயத்தில் நடுங்கும் அளவிற்கு அந்த அமைதியை குலைக்கும் வண்ணம் திடீரென்று ஒரு இடி வானை கிழிப்பது போல சப்தம் ஏற்படுத்தியது. 

 அந்த ஒலியைக் கேட்டதும் குழந்தை பயத்தில் அழ ஆரம்பித்தது, அந்தக் குழந்தையின் சிறிய உடல் நடுங்கியது.

 பால் வண்ணத் தோலைக் கொண்ட அந்தக்  குழந்தையின் முகம் பயத்தில் சிவந்து  அந்திவானின் நிறத்தை வெளிப்படுத்தியது.

 அந்தக் குழந்தையின் சிவந்த முகம் வசந்தத்தில் புதிதாக பூத்த செம்மல் மலரின் தீவிர நிறத்தை ஒத்திருந்தது. 

 அனிச்சையாக அந்தத் தாய் தனது மகனை இறுக்கி தழுவினாள். அவனது கண்ணீரை மென்மையான விரல்களால் துடைத்து, அவனது கன்னங்களின் நிறத்தை உற்று நோக்கினாள். ஒரு மென்மையான, ஆனால் உறுதியான புன்னகை அவளது உதடுகளைத் தொட்டது. " அன்றலர்ந்த செம்மல் மலர் போல... செக்கச் சிவந்த நமது கடவுள் சேயோன் போல்...,” அவள் மெதுவாக முணுமுணுத்தாள், அவளது குரல் சற்றே உயர்ந்தது. “இவ்வளவு பிரகாசமாக, இவ்வளவு உயிர்ப்புடன் அந்திவானம் போல இருக்கும் என் அருமை மகனே... செஞ்சந்தனத்தின் எழிலைக் கொண்டவனே... நீ சிவந்தவன்.... நீ சிவன். "


 இந்த உலகம் அவனை பல்வேறு பெயர்களால் வருங்காலத்தில் தொழப்  போகிறது. ஆனால் அவனுக்கு அவன் அன்னை சூட்டிய ஆசைப் பெயர் 'சிவன்'. 


 இதன் முந்தைய பாகத்தை படிக்க 


வீரபத்திரன் (ஆதியோகி: அத்தியாயம் 15)

சிவன் நந்தனுடன் மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி சென்றார். அங்கு மலைகள்  கடலாக விரிந்தன. ஈரமான மரப்பட்டையின் மணமும், காட்டு இஞ்சியின் நறுமணமு...