Thursday, February 26, 2026

ஏர் முன்னது எருது - 10 - பெரும்பொழுது

 பெரும்பொழுது

காலம்: 21ம் நூற்றாண்டு

இடம்: ஐரோப்பா

"எவ்வளவு நேரம்டா தூங்குவ? எந்திரிடா."

"நேத்து தானே பிளைட்டில் இருந்து வந்தேன். Jet lag  இன்னும் இருக்கு நண்பா. அது மட்டும் இல்ல, ஊரே ஜில்லுன்னு இருக்காஅதான் தூக்கம் அசத்துது."

  "உண்மைதான். வெயிலே தெரியல, ஊரே ஏசி போட்ட மாதிரி ஜில்லுனு இருக்கு நண்பா. எங்க அம்மா என்னை, வெயில்ல போகாதடாகருத்துருவன்னு சொல்லுவாங்கஇவனுங்க என்னடான்னா வெயிலுக்காக பீச்சுல படுத்துக் கிடக்கிறான்னுங்க. கேட்டா சூரியக்குளியல்விட்டமின்டிகிடைக்கும்ன்னு சொல்றாங்கசொர்க்கபூமிடா இது."

எனக்கு பித்த உடம்பு அதுனால வைத்தியர் சந்திரக் குளியல் தான் எடுக்கனும்னு சொல்லியிருக்காரு. அது மட்டும் இல்ல பகல்ல வெளிய சுத்தாம, சாய்ங்காலத்துக்கு மேல தான் ஊர் சுத்தனும்னு சொல்லி இருக்காரு

நீ எதுக்காக நைட்டு ஃபுல்லா ஊர் சுத்துனன்னு ஊருக்கே தெரியும்டா. இங்க ஜில்லுன்னு தானே இருக்கு. வாடா சுத்தலாம்.”

" தலைவலி தாங்க முடியல. என்னைக் கொஞ்சம் தூங்க விடுறியா?"

"வெளிநாட்டிலிருந்து இருந்து நம்ம நாட்டுக்கு எல்லாம் பறவைகள் பறந்து வருதே அதுங்களுக்கெல்லாம் ஜெட்லாக் வருதா என்னஅது மாதிரி நீயும் இருக்கக் கத்துக்கணும் நண்பா.

-------------

இந்தப் படத்தைப் பாருங்களேன். இந்தப் பழத்தின் ஒரு பகுதி மட்டும் கனிந்துள்ளது மற்ற பகுதிகள் இன்னும் கனியவில்லையே ஏன்?


"இதென்ன கேள்வி? வெயில்படும் பாகம் கனிந்துள்ளது வெயில் படாத பாகம் கனியவில்லை."

அப்போ அனைத்து பாகங்களிலும் வெயில் பட என்ன செய்ய வேண்டும்.

"பழத்தின் நடுவே குச்சியை சொருகி யாரேனும் தந்தூரி சிக்கன் போல் வெயிலில் நாள் முழுவதும் சுழற்ற வேண்டியதுதான்."

அப்படி சுழற்றினாலும் பருத்திருக்கும் நடுப்பாகம் அதிக வெயில் பெறுமே? பழத்தின் அடியிலும் நுனியிலும் வெயிலின் அளவு குறையுமே?

"உண்மைதான்  அதற்கு என்ன செய்யலாம்? "

பழத்தை விடுங்கள் நமது பூமியும் இதேபோல்தான் சுழன்று கொண்டிருக்கிறது.

செங்குத்தான நேர் அச்சில் தந்தூரி சிக்கன் போல் சுழன்றால், மத்தியில் இருக்கும் பூமத்திய ரேகையின் மீதுதான் வருடம் முழுவதும் அதிக வெயில் படும். அப்படி இருந்திருந்தால் வருடம் முழுவதும் ஒரே பருவம்தான் இருந்திருக்கும்.

"பிறகு எப்படி வருடத்தின் சில மாதங்களில் நமக்கு குளிர்கிறது? சில மாதங்களில் வெயில் சுட்டெரிக்கிறது? "

அதற்குக் காரணம் பூமி சுழல்வது நேரான அச்சில் அல்ல, 23.5 டிகிரி சாய்வான அச்சில் அது சுழல்கிறது.

அதனால் தான் வருடத்தின் சில மாதங்களில் பூமியின் வடபாகம் அதிக வெயில் பெறுகிறது, தென்பாகம் சில மாதங்களில் அதிக வெயில் பெறுகிறது. புதன் கிரகத்தின் சாய்வு கிட்டத்தட்ட பூஜ்ஜியம். எனவே அங்கு பருவ காலங்களே கிடையாது.

பூமியின் 23 டிகிரி சாய்வு காரணமாக ஆறுமாதங்கள் வட அரைக்கோளம் சூரியனை நோக்கிச் சாய்ந்திருக்கிறது.  அடுத்த ஆறு மாதங்கள் சூரியனை விட்டு விலகி இருக்கிறது. சூரியக் கதிர்கள் நேராக விழுந்தால் கோடை. கொஞ்சம் சாய்வாக விழுந்தால் குளிர்காலம்.




பூமியில் நிலப்பரப்பும் அதனைச்சுற்றி நீர் பரப்பும், இரண்டுக்கும் மேலே போர்வையை போர்த்தியது போல  காற்றும் இருக்கிறது.

சூரியனின் வெப்பம் நிலத்தின் மீதும் நீரின் மீதும் ஒரே சமயத்தில்தான் படுகின்றது.

நிலம் முன்கோபி போல உடனே சூடாகி விடுகிறது. விளைவு நிலத்தின் மேல் உள்ள காற்றை சூடாக்கி அதை மேல் எழும்பச் செய்கிறது. காற்று மேலே போன உடன் அங்கே காற்றழுத்தம் குறைகிறது.

ஆனால் கடல் சூடானால் நீராவி ஆகிவிடுகிறது. அதனால் கடலின் மேல் உள்ள காற்று குளிராகவும்; அழுத்தம் கூடியதாகவும் நீராவி கொண்டதாகவும் உள்ளது .

பூமியின் நிலநடுக்கோட்டுக்கு மேல் இருக்கும் இந்தியாவில் ஜூன் மாதத்தில் அதிக வெப்பம் படுகிறது. அதேசமயம் கடல்மிகுந்த பூமியின் தென்பாகம் குளிர்ந்திருக்கும்.

ஜூன் மாதத்தில் இந்தியாவில் ராஜஸ்தான் தொடங்கி அருணாச்சல பிரதேசம் வரை இருக்கும் பகுதியில் ஏற்படும் அதிக வெப்பசலனம், குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையை (low pressure)  உருவாக்குகிறது.

சமநிலையைப் பேண விரும்புவதல்லவா நம் இயற்கை? அது சும்மா இருக்குமா என்ன?

ஏசி அறையை திறந்தவுடன், குளிர்ந்த ஏசி அறைக்காற்று, அருகில் இருக்கும் வெப்ப அறைக்குள் நுழைவது போல, பூமியின் தென்பகுதியில் இருக்கும் குளிர்ந்த 'ஹை பிரஷர் காற்று' இந்தியாவை நோக்கி வர ஆரம்பிக்கும்.


அவற்றை இடையிலேயே நிப்பாட்டி மழை வசூலிக்கத்தான் மேற்குத்தொடர்ச்சி மலைகள் உள்ளனவே. இப்படியாக கேரளத்தில் ஜூன் மாதம் தென்மேற்குப்\பருவமழை தொடங்குகிறது.

இப்பருவக்காற்றின் ஒருபாகம் கேரளா தொடங்கி மும்பை வழி வடஇந்தியாவை அடைகிறது. மற்றொரு பாகம் மேகாலயா அருணாச்சலபிரதேசம் வழி சென்று வட இந்தியாவை அடைகிறது. அங்கே இமயமலையில் மோதி மழையாய்ப் பொழிகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மழை மறைவு பிரதேசமாகிய தமிழகம், அந்த சமயத்தில் மழையின்றி காய்ந்து கொண்டிருக்கிறது. மேலும் ஈரக்காற்றானது மழையை கேரளாவிற்குத் தந்துவிட்டு, வெறும் வறண்ட, வேகம்கொண்ட காற்றாய் தமிழகத்தை நோக்கி வருகிறது. அந்த வறண்ட ஆடி காற்றின் வேகம் அம்மியையும் பறக்கவிடும் என்றனர் தமிழர்கள்.

படம்: மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுத்து நிறுத்தப்பட்ட மழை மேகங்கள்.

இவ்வாறு காய்ந்த தமிழகத்தில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வுநிலை   உருவாகிறது.

 அதே சமயம் வடஇந்தியா மழையால் குளிர்ந்து கிடக்கிறது.

வடஇந்தியாவிலிருந்து குளிர்ந்தகாற்று வங்காளவிரிகுடாவின் ஈரத்தை அள்ளிக்கொண்டு ஆடியில் அடித்த காற்றுக்கேற்ப; ஐப்பசியில்  மழைப்பொழிவை தமிழகமெங்கும் தொடங்குகிறதுதாழப் பறக்கும் தட்டான்கள்களின் முன்னறிவிப்போடு தமிழகத்தில் குணதிசை எனப்படும் வடகிழக்கு பருவமழை பொழிவது இப்படித்தான்.

 "தட்டான்கள் தாழப் பறந்தால் மழை  வருகிறதேஇது என்ன வகை மந்திரம்? "

வாருங்கள் தாழப் பறக்கும் தட்டான்களை பின் தொடர்ந்து விடை அறிவோம்.

இந்த தட்டான்களை பாருங்களேன்.

 “பாவம் இறக்கைகள் மடங்கியுள்ளதே. ரொம்ப தூரம் பயணம் செய்திருக்கும் போல.”

உண்மைதான் நெடுந்தொலைவு பயணம் தான் அது.

 இந்தத் தட்டான்களின் பெயர் wandering glider.

இதன் குஞ்சுகள் நீர்வாழ் உயிரி. அதன் முக்கிய உணவு கொசுவின் லார்வா மற்றும் முட்டைகள். எனவே இதன் இனப்பெருக்கத்திற்கு நீர் அவசியம்.

பருவமழை பொழியும் வழியெங்கும் பின்தொடர்ந்து சென்று, தேங்கியிருக்கும் மழை நீரில்  முட்டையிட்டு பெருகிவரும் பூச்சி இனம் இது.

அடுத்து மாலதீவு, ஆப்பிரிக்கா என பருவக்காற்று செல்லும் வழியெங்கும் தொடரும் தொடர்பயணம். பல மில்லியன் ஆண்டுகளாய் லட்சோபலட்சம் தட்டான் தலைமுறைகள் பின்பற்றிய வழி அது.

இதே சமயம் பூமியின் வடபாகத்தில் பனி நிரம்பிய  குளிர்காலம் தொடங்குகிறதுஅதனால் அங்கே உணவுப்  பற்றாக்குறை. எனவே பனியை சமாளிக்க முடியாத உயிரிகள், குளிர்த்தூக்கம் போடுகின்றன. பாலைநிலத்தில் நத்தைகள் வெயில் தூக்கம் போடுவதை பார்த்தோமே அதேபோல் இவை குளிர் தூக்கம் போடுகின்றன.

"அனைத்து உயிர்களுமா?"

இல்லை.

செம்மறி ஆடு போன்ற விலங்குகள் கம்பளியின் துணையுடன் குளிரை எதிர்கொள்கின்றன.

"அப்போ பறவையினங்களின் கதி? "

இறக்கை இருக்க பயம் எதற்கு?

தமிழகத்தின்  மழைக்காலத்தில் உருவாகியுள்ள நன்னீர்சூழலில்; தட்டான் போன்ற பூச்சிகளின் பெருக்கம் மற்றும் இங்கு நிலவும்  மிதமான  சீதோஷ்ணநிலை  போன்றவை அவற்றை வசீகரிக்கின்றன.

வந்தாரை வாழவைக்கும் பூமி  எனும் கூற்றுக்கு ஏற்ப அந்தப் பறவைகள் இங்கேயே தங்கி குழந்தை குட்டிகளோடு அவைகளின் வாழிடம் செல்லும்வரை அடைக்கலம் அளிக்கிறது தமிழகம்.

பூமியே ஒரு பெரிய சூழியல் மண்டலம் என்பதை இவற்றின் செயல்கள் உணர்த்துகின்றன. வெப்பத்தைத் தணிக்கவும், உயிர் பெருக்கத்தை  கட்டுப்பாட்டுக்குள்  வைக்கவும், கண்டங்கள் தாண்டி காற்று, நீர்  மற்றும் உயிரினங்கள் அனைத்தும் வந்து சமன்பாடு பேணுவதை நோக்கினால் பூமியே சமன்பாடு பேணும் பேருயிர் என்பதை உணரலாம்.

"எல்லாம் சரிபறவைகள் பனிக்காலத்திலும் பறந்து வந்து நம்மூரில் இனப்பெருக்கம் செய்கிறது, பனியோடு போராடிய செம்மறி ஆடு எப்பொழுது, எப்படி இனப்பெருக்கம் செய்யும்?"

அதுவும் பனியின் போது தான் இனப்பெருக்கம் செய்யும்.

"ஏன் பனியில் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? பொறுமையாக புற்கள் நிறைந்திருக்கும் சமயத்தில் இனப்பெருக்கம் செய்யலாம் அல்லவா "

அதன் கர்ப்பகாலம் 151 நாட்கள் எனவே பகல் சுருங்கிய, வெளிச்சம் குறைவான நாளானது (winter solstice) இயற்கையாகவே மூன்றாம் கண்ணின் துணையுடன் செம்மறி ஆட்டின் பருவத்தை தூண்டிவிடும். அந்த கர்ப்பகாலம் முடிந்ததும், வசந்தகாலத்தில் குட்டிகள் உலகைக் காணும். அந்த குட்டிகள் அங்கே வசந்தகாலத்தில் எளிதாக உயிர்வாழும். செம்மறி ஆடும் செழித்த புற்களை உண்டு நிறைய பால் கொடுக்கும். வருடத்தில் இந்த பொழுதில் குட்டிபோட்டால் மட்டுமே அதன் சந்ததி தழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதாலேயே இந்த ஏற்பாடு.

ஆதவனின் ஒளி, விழிவழி ஊடுருவி மூளையில் பினியல் சுரப்பியின் மெலட்டோனின் ஆட்டத்தால் இந்தப் பருவம் தூண்டப்படுகிறது.

இருட்டில் பல்பு ஒளிகொண்டு முட்டைக் கோழிகளை  ஏமாற்றி முட்டையிடத் தூண்டி அவற்றை exploit செய்வதும் இதே அடிப்படையில்தான்.

 மழையின் போது மயில் அகவுவதும், மார்கழியில் நாய்கள் குலாவுவதும், மழை உங்களை காதல் கவிதை எழுதத் தூண்டுவதும் இதே காரணத்தினால்தான். நீங்கள் உறங்கினாலும் உங்கள் மூன்றாம் கண் சூழலை அவதானித்தவாரே இருப்பதால் தான் இவை நிகழ்கின்றன.

ஏறி இறங்கும் சூரிய ஒளியை; நாம் விழிகளால் பார்த்து; அதன்பின் தூக்கம் பகலின் வேலைகள் போன்றவற்றை எப்படி நாம் நிகழ்த்துகிறோமோ, அதே போல் நமது உயிரானதும் பினியல் சுரப்பியின் மூலம்; நம்மை சூழ்ந்திருக்கும் இந்த அண்டத்தை பார்த்தறிந்து நம்மை வழிநடத்துகிறது. இதனால் தான் இதனை மூன்றாம் கண் என்றழைத்தனர்.

சூரியஒளி தான் உலகின் உயிர்களுக்கு பிரதானம்பருவகால மாற்றங்களுக்கேற்ப ஏறியிறங்கும் சூரிய வெளிச்சத்தின் அளவை உணர்ந்துகொண்டு; உடல் இயக்கத்தை மாற்றிக்கொண்டு சிறப்பாக வாழ்கின்றன உயிரினங்கள்.

எந்தப்பருவத்தையும் சமாளித்து குழந்தையை வளர்க்கும்  திறன் இருந்ததால், மனிதர்கள் சீசன் பார்த்து கூடவில்லை. என்றாலும் சித்திரையின் வெயில்  சிரமத்தை குழந்தை அனுபவிக்கக் கூடாதென ஆடியிலே பிரித்து வைத்தனர் தமிழ் நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த நம் முன்னோர்கள்.

சந்ததிப் பெருக்கமே உயிரினங்களின் நோக்கம். சந்ததியைத் தழைத்தோங்கச் செய்ய பருவத்தோடும் வாழும் நிலப்பரப்போடும் பொருந்தி வாழ்தல் அவசியம் என்பதை இவை அனைத்தும் உணர்த்துகின்றன.

சந்ததிப் பெருக்கத்திற்கு அடிப்படையானது காதல் எனும் உரிப்பொருள். தலைவியின் காதலில் பெரும்பொழுதிற்கும் முக்கியமான பங்கு இருந்திருக்கிறது என்பதை பின்வரும் பாடலின் மூலம் அறியலாம்.

தலைவன் முன்பனிக்காலத்தில் வருவதாகக் கூறிசென்றான். முன்பனிக் காலம் எப்பொழுது வரும்? என்ற தவிப்பில் தலைவி இருக்கிறாள். அப்போது சான்றோர் ஒருவர் உஞ்சவிருத்தி வேண்டி இரவல் கேட்டு வருகிறார்.

ஆசில் தெருவில் நாயில் வியன்கடைச்

செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது

ஓரிற் பிச்சை ஆர மாந்தி

அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்

சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே

மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை

எக்கால் வருவ தென்றி

அக்கால் வருவரெங் காத லோரே

இல்லத்தில் தலைவன் இல்லாதபோது இரவலர்க்குப் பிச்சை இடலாகாது என்பது அக்கால மகளிர் பின்பற்றி  வந்த  வழக்கம். கேட்பவர்க்குஇல்லைஎனலாகாது என்பதும் அக்காலத்திய பண்பாடு. இல்லை எனச் சொலாதவளே இல்லாள் அல்லவா?

என்ன செய்வது என்று அறியாமல் திகைத்த தலைவி, இரவலரிடம்ஐயனே எம்பட தலைவன் வாடைக்காலத் தொடக்கத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறார். வாடைக்காலம்  எப்போது வரும் ? ” என்று வினவினாள்.

தாயே ! இன்னும் இரு திங்களில் வாடைக்காலம் வந்து விடும். தலைவன் நலமுடன் திரும்பிவருவான். கவலை கொள்ளாதே ! வாழ்வாங்கு வாழ்வாய் ! “ என்று வாழ்த்தினார் !

ஐயனே ! அதோ அந்த வீட்டில் கிடைக்கும் நல்ல இரவலை உண்டுவிட்டு வாருங்கள், குடிப்பதற்காக முன்பனிக் காலத்திற்கு இதமான வெந்நீரை தங்கள் செப்புக் குவளையில் நான் தருகிறேன்என வாழ்த்துகிறாள் !

(வெப்பத் தண்ணீர் - வெந்நீர்; தண்ணீர் என்பது தண்மை பொருந்திய குளிர் நீர், அதை வெப்பப் படுத்தி கொடுக்க விழைகிறாள் தலைவி.

அற்சிரம் - முன்பனிக் காலம்; இஃது அச்சிரம் எனவும் வழங்கப்படும்)

அவர் எவ்வாறு இரு திங்களில் வாடைக்காலம் வந்து விடும் என்றார்? அவர்கள் எவ்வகை நாட்காட்டியைப் பயன்படுத்தினர்?

 வாருங்கள் பார்ப்போம்

சந்ததிப்பெருக்கம் ஒரு ஆடம்பரச்செயல் என்பார்கள். உண்மைதான், பஞ்சத்திலிருக்கும் வரியவர்களது குழந்தை பிழைத்தல் கடினமல்லவா? நல்ல ஆரோக்கியமான மனிதர்களே குழந்தை பெற்றுக்கொள்ள தகுதியானவர்கள்.

ஆரோக்கியமாய் இருக்க என்ன செய்ய வேண்டும்?

"பூஸ்ட் பருகவேண்டும்."

 சரி உங்ககிட்ட ஒரு கேள்வி ?

வெயில் காலத்துல நம்மூர்ல கிடைக்கிற பழங்கள் பேரெல்லாம் சொல்லுங்க பாப்போம்?

"தர்பூசணி, வெள்ளரிப் பழம், கிர்ணிப் பழம் ...."

அடுத்த கேள்வி... வறண்ட வெய்யிலில் அலையும் ஒரு குரங்குக்கு என்ன தேவை ?

"வேர்வையினால் இழக்கப்பட்ட உப்புச்சத்தும் நீர்ச்சத்தும் தேவை."

பில்குல் சஹி ஜவாப். இப்பழங்களில் இச்சத்துக்களே நிரம்பி உள்ளன.

தாவரங்களும் உயிரினங்களும் ஒன்றாகவே பரிணமித்தவர்கள். உயிரினங்களுக்கு எந்தக் காலநிலையில், எந்தப் புவிப்பரப்பில், என்னென்ன தேவை என்பதை அறிந்து, அச்சத்துக்களை நமக்கு அளிப்பதன் மூலம், ஆரோக்கியமாய் நம்மை வைத்து, நமது இருப்பையும் அதன் இருப்பையும் தாவரங்கள்  உறுதி செய்து கொள்கிறன.

இதனால் நாம் பெறப்படும் செய்தி யாதெனில்... உங்கள் சுற்றுப்புறத்தில், ஒவ்வொரு காலநிலையில் விளையும் தாவரங்கள் தரும் உணவு, உங்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நிலத்திலும் அந்த காலநிலைக்கு ஏற்பகுறிப்பிட்ட வகைத் தாவரங்கள் நன்றாக வளரும். அதை அறிந்து கொண்டு பருவத்தே பயிர் செய்வதுதானே அறிவார்ந்த செயல்.

அதுபோல நிலத்திற்கு மற்றும் பருவத்திற்கு ஏற்ற பயிர்களை தமிழர்கள் எளிதில் விளைவித்ததிருந்தனர். அதன் காரணமாய் அந்தந்த கால நிலைக்கும்  நில அமைப்பிற்கும் தேவைப்பட்ட சத்துக்கள் அவர்களுக்கு கிடைத்தது. இது அனைத்திற்கும் அடித்தளமாய் இருந்தது அவர்களுக்கு கிட்டிய பருவமழை.

ஆனால் பருவமழை என்பது அதுவரை வெள்ளையர்கள் பார்த்தறியாத ஒன்று. 'மான்சூன்' என்ற பதமே வெள்ளையர்கள் இந்தியாவிற்கு வந்த பொழுது வைத்த பெயர். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சூரியன் அருகில் வரும் பொழுது 'சம்மர்', அதன்பிறகு இலைகள் ஆட்டம்கண்டு  விழும் காலமாகிய 'ஆட்டம்', சூரியன் தொலைவில் இருக்கும் பொழுது 'வின்டர்', குளிர் உறக்கத்திலிருந்து ஸ்பிரிங்கைபோல் உயிரினங்கள் துள்ளி எழும் 'ஸ்பிரிங்'.

ஆனால் நமக்கோ ஆறு பெரும்பொழுதுகள்.

எவ்வாறு மற்றும் ஏன் பெரும்பொழுதுகள் ஆறாக வகுக்கப்பட்டன?”

பழங்காலம் தொட்டே பொழுதுகளும் அதற்கேற்ப வானில் நிகழும் மாற்றங்களும் மனிதர்களால் அவதானிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதில் மனிதர்களால் முக்கியமாக அவதானிக்கப்பட்டதுகுளிர்நிலவு’. சூடான சூரியன் தன்னைச்சுற்றிலும் இருக்கும் நட்சத்திரங்களை பார்க்கவிடாமல் பிரகாசமாகத்தெரிவதோடு மட்டுமல்லாமல், அதனை தொடந்து அவதானிப்பவர்களின் கண்ணை கூசச்செய்கிறது. எனவே குளிர் இரவின் குளுமையோடு எளிதாக நிலவையும், நட்சத்திரங்களையும் அவதானித்தனர் மனிதர்கள்.

  வானில் பல நட்சத்திரக் கூட்டங்கள் உண்டு. நிலவானது ஒரு நாளில் ஒரு நட்சத்திரக் கூட்டத்திற்கு அருகே இருக்கும். இதுபோல 27 நாட்களுக்கு 27 நட்சத்திர கூட்டங்களை நிலவானது கடந்து செல்லும். அதில் 12 நட்சத்திரங்களுக்கு அருகில் வரும் பொழுது தான் முழு நிலவு தோன்றுகிறது. முழுநிலவாய் கார்த்திகை என்னும் அறு மீன் கூட்டத்தில் காட்சியளிக்கும் நிலவானது 12 மாதம் கழித்துத்தான் திரும்பவும் கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தில் முழுநிலவாய் காட்சியளிக்கும். இதன் அடிப்படையில் தான் ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள்  என்ற கணக்கு உருவானது. இந்த நிலவு நாட்காட்டி பாலை நிலங்களான அரேபிய நாடுகளிலும், திபெத்திய நாடுகளிலும் பின்பற்றப்பட்டன.

நிலவின் இந்தச்சுழற்சி  கடல் அலைகள், விவசாயம், உயிரினங்களின் இனப்பெருக்க சுழற்சி மற்றும் பூமியில் உள்ள அனைத்து அமைப்புகளையும் பாதிக்கின்றன. பண்டைய சமூகங்கள் இவற்றைப் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டிருந்தன.

சந்திரனானது பூமியின் எடையில்  1/6 எடையைக் கொண்டது, இது பூமியின் 56% அலை ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இந்த அலை விசை கடல் உயிரிகளது வாழ்வில் தாக்கத்தை உண்டுபண்ணுகிறது; எடுத்துக்காட்டாக, சிப்பிகள் போன்ற நீரை வடிகட்டி உணவை உண்ணும் கடல் வாழ் உயிரிகள் அதிக அலையின் போதே அதிகம் உணவு பெறுகின்றன. பவளப்பாறைகளும் சந்திரனின் சுழற்சியை நம்பியுள்ளன.

பௌர்ணமியை ஒட்டி அதிக பசுங்கன்றுகள் பிறக்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் பெண்களின் மாதவிடாய் சுழற்சிகள் பெரும்பாலும் சந்திர சுழற்சியுடன் பொருந்துகின்றன. 2014 ஆம் ஆண்டு 8,000 க்கும் மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த கருதுகோள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பொழுதை வகுக்க சந்திரனை மட்டுமே முழுமையாக நம்பியவர்கள் பாலை நில மக்கள்.

அரேபியர்கள் மற்றும் திபத்தியர்கள்  சந்திர நாட்காட்டியை பயன்படுத்தினர்ஒரு முழு நிலவிலிருந்து அடுத்த முழு நிலவு வருவதற்கு 29.53 நாட்கள் ஆகின்றது. எனவே அவர்கள் ஒரு சந்திர மாதத்திற்கு 29.5 நாட்களாக எடுத்துக் கொண்டனர்

 ஒரு மாதத்திற்கு 29.53 நாட்கள் அப்பொழுது ஒரு வருடத்திற்கு 354 நாட்கள். எனவே பன்னிரண்டு சந்திர மாதங்கள் சுமார் 354 நாட்கள் ஆகும். பூமி சூரியனைச் சுற்றி வர எடுக்கும் 365 நாட்களை விட சந்திரநாட்காட்டி குறைவான நாட்களைக் கொண்ட நாட்காட்டி. எனவே 3 ஆண்டுகளுக்குப் பிறகு, சந்திர நாட்காட்டி சூரிய நாட்காட்டியோடு சுமார் ஒரு மாதத்தைக் குறைவாகக்கொண்டிருக்கும்.

ஜூன் மாதம் 22 ஆம் தேதி வாக்கில் தென் மேற்குப்பருவ மழை தொடங்கினால் 365 நாட்கள் கழித்து திரும்பவும் ஜூன் மாதம் 22 ஆம் தேதி மழையை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் சந்திர நாட்காட்டியில் மழை வருவதை கணிக்க இயலாது.

இன்று நாம் பயன்படுத்தும் சூரிய கிரகோரியன் நாட்காட்டியிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. பூமி சூரியனை முழுவதுமாக சுற்றி முடிக்க தோராயமாக 365.2422 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. 365 நாட்களையே இந்நாட்காட்டி கணக்கில் எடுத்துக்கொள்வதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 0.2422 நாள் (சுமார் 6 மணிநேரம்) கணக்கில் வராமல் எஞ்சி இருக்கிறது. இந்த சிறிய வேறுபாடு காலப்போக்கில் பெரிதான மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. இப்படி நிகழ்ந்தால் பருவங்கள் மாதங்களுடன் ஒத்திசைக்காமல் மாறும். எனவே லீப் வருடங்கள் தவறுகளை  சரிகட்டப் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு கூடுதல் நாள் (பிப்ரவரி 29) காலெண்டரில் சேர்க்கப்படுகிறது அதுவே லீப் வருடம் எனப்படுகிறது. ஆனால் அதிலும் சில சில்லறை மணித்துளிகள் துருத்திக்கொண்டு இருக்கின்றன. அதனால்  சுமார் 3216 ஆண்டுகள் கழித்து அச்சிறு மணித்துளிகள் ஒரு நாள் வித்தியாசத்தைக் காட்டுமளவிற்கு மாறிவிடும்.

ஆனால் இதுபோலல்லாமல் சந்திர நாட்காட்டிகளில் வருடத்திற்கு 2 வினாடிகள் மட்டுமே பிழை இருக்கும். இதனால் இவ்விரு மணித்துளிகள் ஒரு நாள் வித்யாசத்தை 31,250 ஆண்டுகள் கழித்தே ஏற்படுத்தும். சந்திர நாட்காட்டி இன்றைய கிரிகோரியன் நாட்காட்டியை விட பத்து மடங்கு துல்லியமானது.

எனவே மழையின் துல்லிய வரவை அனுமானிக்க நாம் சந்திர மற்றும் சூரிய நகர்வை இரண்டையும் அனுமானித்திருக்கிறோம். வங்காள மற்றும் கேரள மக்கள் இருவரும் இதே முறையைத் தான் பின்பற்றுகின்றனர்.

மேற்கூறிய காரணத்தால் ஆங்கில நாட்காட்டி வகுத்த நாற்பருவ பகுப்பு போலல்லாமல் பருவத்தோடு உறவாடி வாழ்ந்துவந்த நம் முன்னோர்கள், பெரும்பொழுதை ஆறாய்  வகுத்தனர். ஒவ்வொரு   பருவத்திற்கும் இரண்டு மாதங்கள். பருவத்தை ஒட்டி வகுத்துக் கொண்ட அந்த மாதங்களுக்கு ஏற்ப தமது வாழ்வியலை, பண்பாட்டை, பண்டிகைகளை கட்டமைத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்.

ஆனி மாதம் உச்சி வெயில், ஆடி மாதம் வறட்சியை அதிகரிக்கும் அதிவேக காற்று. இந்தப் பருவம் முதுவேனில் என்றழைக்கப்பட்டது. ஆடியின் காற்றுக்கு ஏற்ப ஐப்பசியில் மழை பொழியும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். அப்போ அதற்கு முன்னமே நிலம் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா? எனவே மழைநீர் நிலத்தில் இறங்கும்  வகையில் சித்திரையில் பொன்னேர் உழப்பட்டது. சித்திரை மாத ஆரம்பத்தில் இரண்டு நாள் செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, ஒரு வாரம் நிலத்தைக் காயவிட்டனர். கோடை உழவு அடிப்பதால் மண் இறுக்கம் நீங்கி பொலபொலப்பாகிவிடும். இதனால், மழை பெய்யும்போது நிலத்தில் விழும் மழை நீர் ஆவியாகாமல் தடுக்கப்படுவதோடு மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும். மேலும் மண்ணுக்குள்ளே இருக்கும் கூட்டுப்புழுக்கள் எல்லாம் வெளியில் வந்து, சூட்டில் செத்துவிடும்.

வைகாசியில் நிலம் சீர் செய்யப்பட்டது. ஆனி மாதத்தில் நல்ல விதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன, முளைப்பாரியில் அடையாளம் காணப்பட்ட நல்ல விதைகள், ஆடிப்பட்டத்தில் தேடி விதைக்கப்பட்டன. மேலும் ஆடிக்காற்று மகரந்த சேர்க்கைக்கும் உதவியது. ஆவணியிலும் சுழற்சிப்பயிர்களுக்கான உழவு செய்யப்பட்டது. பொன் உருகக்காயும் புரட்டாசியில் விதைமுளைக்கத் தேவையான ஒளி கிட்டியது. ஐப்பசியில் மழை துவங்கி பயிர்கள் வளர்ந்தன. கார்த்திகையில் அடித்த மழை களைகளை  நீக்கியது. மேலும் கார்த்திகையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, அந்த வெளிச்சத்தில் பூச்சிகள் வசீகரிக்கப்பட்டு எரிக்கப்பட்டன (கார்த்திகை விழா, அறுமீன் விழா என பண்டைய தமிழர்களால் அழைக்கப்பட்டது).  மேலும் கார்த்திகையில் மாவளி சுற்றப்பட்டு அதன் சாம்பல் நிலத்தில் தூவப்பட்டன. மார்கழியில்  பயிர்களின் விளைச்சல். தையில் அனைத்துக்கும் முதல்வனான பகலவனுக்கும், உழவிற்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றி சொல்லி அறுவடை செய்யப்பட்டது. மாசி பங்குனியில் கொழுஞ்சி, கரந்தை, அவுரி போன்ற செடிகள் முளைத்து நிலத்தில் ஈரத்தை தக்க வைத்தன மேலும் மண்ணரிப்பைத் தடுத்தன. அடுத்த உழவில் அவை மண்ணுக்கு உரமாகும் வண்ணம் உழப்பட்டது. மேலும்  உளுந்து பயிறு வகைகள் பயிர்சுழற்சி முறையில் நிலத்தில் நடப்பட்டு நைட்ரஜன் சத்து நிலத்தில் நிலை நிறுத்தப்பட்டன. இவ்வாறு பொழுதைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் விளைச்சலானது குன்றாமல் அடுத்தடுத்த போகத்திலும் அறுவடை குறையாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.

பொழுதோடு ஒட்டி வாழும் இந்தத்தெளிவும் அறிவும் நம் முன்னோர்களுக்கு எப்படிக் கிட்டியது?

இவை அனைத்தையும் இறைவன் என்பவர் நமக்கு போதித்தாரா? இல்லை மற்ற குடிகளைவிட நாம் அறிவில் சிறந்தவர்களா? இல்லை ஆற்றலில் சிறந்தவர்களா?

இது எதுவும் இல்லை.

ஜாதி, குல, மத, இன, நிற அடிப்படையில் தாழ்ச்சி உயற்சி நவில்வது அறிவின்மை. On a lighter note… ‘உலகத்துல உன்னைவிட யாரும் பெரியவன் இல்லை, அதுனால நீ யாருக்கும் பயப்படாதேஅதே மாதிரி உன்னைவிட சின்னவன் யாரும் இல்லை, அதுனால யாரையும் தாழ்வா நினைக்காதேஎனும் அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியப்பெருமாள் சந்திரனின் வாக்குக்கு ஏற்ப, நாம் பாகுபாடு பாராட்டாமல் வாழ்தல் வேண்டும்.

ஆற்றலிலும் அறிவிலும் ஒரு மனிதக்குழு சிறக்கக் காரணம் அதன் இனம் அல்ல, அவை இருக்கும் சூழல் தான் காரணி என்கிறார் அறிஞர் ஜேர்ட் டைமண்ட். உலகின் மனிதர் அனைவரும் ஒரே மூதாதையரிடம் இருந்தே தோன்றியவர்கள். கல் தோன்றி மண் தோன்றிய பின், பல மில்லியன் வருடம் கழித்து ஆப்பிரிக்காவில் வாலோடு பின்தோன்றிய அவர்கள், வால் இழந்த பின்னர் நிமிர்ந்த நடை கொண்டு பூமி முழுவதும் பரவினர். அவர்கள் புகுந்த ஒவ்வொரு இடத்தின் தனித்தன்மையான நிலமும் பொழுதும், அவர்களை சிறுகுழு வேட்டையாடி சமூகமாகவோ, பரதவர் சமூகமாகவோ, மேய்ச்சல் சமூகமாகவோ, மருத நிலத்து பெரும்சமூகமாகவோ இருக்கப் பணித்தது.

எண்ணிக்கையில் ஒரு இனம் பெருகுவதற்குத் தேவை, நிரந்தர உணவு வழங்கும் ஒரு தொழில். வேட்டையாடிபேலியோவாழ்வுமுறையானது எண்ணிக்கையில் பெருகுவதற்கேற்ற வாழ்வுமுறை அல்ல. நாகரிகத்தின் முதல்படி, அலைந்து திரியும் வேட்டையாடி வாழ்வில் இருந்து, நிலத்தின் நிரந்தர விவசாயக் குடியாக மாறுவது. விவசாயக் குடியாக மாறுவதற்கான முதற்தேவை உயர் மாவுச்சத்தை கொண்ட தானியத்தைக் கண்டறிதலாக இருந்தது. அடுத்து அவை வளர்வதற்கும் சேமிப்பதற்கும் ஏற்ற பெரும்பொழுதான காலநிலை ஒரு முக்கியக் காரணியாக இருந்தது. அந்த நிலத்தில் இருக்கும் வன விலங்குகளை; வீட்டு விலங்குகளாகப் பழக்கப்படுத்துதல் தான் அதற்கடுத்த முக்கியக் கட்டம்.

பழக்கிய வீட்டு விலங்குகள் பல வகையில் சமூகம் முன்னேற உதவின. காவலுக்கு நாய்கள் உதவின, உணவுக்கும், நிலத்தை வளப்படுத்தவும் ஆடு, மாடுகள் உதவின, குதிரைகள், எருதுகள் போன்றவை உழைப்பை நல்கின.

இதன் மூலம் சமூகங்களுக்கு இரு நன்மைகள் விளைந்தன. ஒன்று உணவு, மற்றொன்று உழைப்பு. இதன் பயன், நேரம் மிச்சமாதல். மிஞ்சிய நேரத்தில் அறிவினை விசாலமாக்குதல், புதியன கண்டுபிடித்தல் என சமூகம் முன்னேற்றம் காணத்துவங்கியது.

வரலாற்றில் இந்த உலகையே அடையும் அளவிற்கு படைபலம் கொண்டவர்கள் யார் யார்?”

அலெக்சாண்டர், நெப்போலியன், செங்கிஸ்கான், இரு சோழர்கள், சைரஸ், சார்லிமக்னி, ஹன்ஸ், கடைசியாக மேற்கத்திய காலனி ஆதிக்கம் கொண்ட நாடுகள்.

இவர்கள் அனைவருமே யுரேசிய கண்டத்தவர்கள்.

ஏன் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா கண்டத்தவர்கள் யாரும் இந்தப் பட்டியலில் இல்லை?”

காரணம்வீட்டு விலங்குகள்எனப்படும் கால்நடைகள்.

யுரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா) என்பது ஒரே நிலப்பரப்பு. இங்கே 45 கிலோவிற்கு மேல் உடல் எடை கொண்ட மொத்தம் பதிநான்கு விலங்குகள் வீட்டு விலங்குகளாக்கப்பட்டன. இப்பெரும் நிலப்பரப்பில் ஓரிடத்தில் பழக்கப்படுத்தப்பட்ட வீட்டுவிலங்குகள் மறுமுனையில் இருக்கும் நாகரிகத்தை எளிதில் அடைந்தன.

கிமு 9300 குதிரைகள் இந்தியாவில் அழிந்துவிட்டன என்று ஏற்கனவே பார்த்தோம். அதனால் பழக்குவதற்கு ஆதி இந்தியர்களுக்கு குதிரைகள் இல்லை. இருப்பினும் ஆரியர்கள் மூலம் இந்தியர்களுக்கு குதிரையின் அறிமுகம் ஏற்பட்டது.

விவசாயத்தின் மீதான குற்றச்சாட்டு; விவசாயம் வந்த பிறகு வனவிலங்குகளும், அவை இருந்த வனங்களும் அழிக்கப் பட்டுவிட்டன என்பதே. இதுவே உலகின் ஆறாவது பெரும் ஊழி எனப்படுகிறது. இந்தியாவின் ஆதி மாட்டினம் வனத்தில் அழிந்துவிட்டதைப்பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம். அவற்றின் சந்ததிகள் காங்கேயம் உம்பளச்சேரி மாடுகள் வடிவில் மருதநிலத்தில் வாழ்கின்றன. மருதநிலம் என்பது தரம் உயர்த்தப்பட்ட பாலை நிலம். ஆதிகாலத்தில் வனத்தில் இருந்த காங்கேயத்தின் மூதாதைய இனம் வனத்தில் உலவியது போலவே உலாவுவதற்கான வாய்ப்பு; வீட்டுவிலங்காக ஆக்கப்பட்ட காளைகளுக்கும் இருந்தன.

எப்படி?”

கோயில் காளைகள் கோயில் காட்டில் மூர்க்கத்தோடு உலவ அனுமதிக்கப்பட்டன. மூர்க்கமுடன் ஆண்மைத் திமிரில் திரியும் காளைகளே வனத்தில் பெண்காளைகளோடு இணைசேர்ந்து இனவிருத்தி செய்யுமல்லவா? அந்த வாய்ப்பு கோயில் காளைகளுக்கும் வழங்கப்பட்டன.

 மனிதர்களோடு பழகும் வண்டியிழுக்கும் மாடுகள் விதை நீக்கப்பட்டு மூர்க்கம் குறைக்கப்படுகின்றன. பால் கொடுக்கும் மாடுகள் மருத நிலம் முழுதும் உலவும் வகையில் கிடை போடப்பட்டன. நமது மாடுகள் எப்பொழுதும்  intensive system of rearing  எனப்படும் முறையில் வளர்க்கப்பட்டவை அல்ல. பகல் முழுவதும் உலவுவதற்கு அவற்றிற்கு உரிமை இருந்தது. மாலை வீட்டிற்கு வந்ததும் அவற்றிடம் இருந்து பால் பெறப்பட்டது.

இவை semidomesticationனின் சற்றே முன்னேறிய வடிவம் எனக்கொள்ளலாம்.

அது என்ன semidomestication?

குறிஞ்சி நிலத்திலே தோடர்களைப் பார்த்தோமே. தோடர்களின் எருமைகள் பகல் முழுதும் வனத்தில் உலவுபவை. இரவு அவை தானாகவே வீடடையும். வனவிலங்குகளிடம் தம்மை பாதுகாக்கும் தோடர்களுக்கு (மட்டும்) அவை பால் சொரியும்.

பாகுபலி படத்தில் பல்வால் தேவனாலேயே அடக்கமுடியா ஒரு காட்டு மாட்டை காட்டுவார்களே. அதையே semidomestication பண்ணிமிதுன்எனும் மாட்டினம் வடகிழக்கு இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வனத்தைப் பொருத்தவரை மூர்க்கமான விலங்குகளே ஆண்மையின் அடையாளம். மூர்க்கத்தின் அடிப்படையிலே தான் ஆண்மை அடையாளம் காணப்பட்டு இணைசேருதல் நிகழும். மூர்க்க விலங்கின் சந்ததியே நல்ல உடல்நலத்துடன் இருக்கும். மூர்க்கம் எனும் வனத்தின் பண்பை  கோயில்காடுகளிலும், கிடாய் சண்டைகளிலும், சேவல் சண்டைகளிலும் ஆண் உயிரினங்கள் வெளிப்படுத்தி, தகுதியான ஆண் உயிரினங்களின் சந்ததிகள் பெருக வகை செய்யப்பட்டது. இவ்வாறு வனமும் மனிதர்களும் விலங்குகளும் தமது வன இயல்பை மறக்காமல் கூட்டு வாழ்வு வாழும் முறை தான் இந்தியர்கள் பின்பற்றிய முறை.

ஆப்பரிக்காவில் பல விலங்குகள் இருந்தாலும் அவை பழக்குவதற்கு எளிதாய் இல்லை. உதாரணத்திற்கு யுரேசியர்கள் குதிரைகளைப் பணிய வைத்தது போல் அவர்களால் வரிக்குதிரைகளை பணிய வைக்க இயலவில்லை. இந்தியர்கள் யானையைப்பழக்கி மற்ற நாட்டினரை போரில் கதறவிட்டனர். ஆனால் ஆப்ரிக்கர்கள் யானையைப் பழக்கவில்லை.

 அவர்களில் ஒருசில குடிகள் மாடுகளை மற்றும் ஆடுகளைப் பழக்கினாலும் பாலைவனம், மலைகள், காடுகள், புல்வெளிகள், சவானாக்கள் என நிலத்தாலே துண்ணாடப்பட்டு வாழ்ந்துவந்த தனித்தனிக்குழுக்கள் அனைவரிடமும் அவை சென்று சேரவில்லை அதனாலேயே அவர்கள் எளிதில் ஐரோப்பியர்களால் அடிமைப் படுத்தப்பட்டனர் என்பது ஜேர்ட் டயமண்ட் அவர்களின் வாதம்இதில் சில மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும். இது ஒரு முக்கியமான கருதுகோள். ஒற்றுமையாக இல்லாமல் துண்டாடப்பட்டு இருந்தால் எளிதில் எதிரிகள் வசப்பட்டு விடுவோம் என்பது உண்மை. ஒன்றியமாக இருப்பதே பலம். அதுபோல் ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை பாதுகாப்பது தான் ஆள்வோரின் கடமை.

மிகப்பெரும் நிலப்பரப்பைக் கொண்டிருந்த அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்களில் பழக்கப்படுத்தத் தக்க வனவிலங்குகள் இருந்தன. ஆனால் அங்கே சிறுசிறு குழுக்களாக பிரிந்து வாழ்ந்து வந்த மக்கள்  நியாண்டர்தால் மக்கள் பண்ணிய அதே தவறைச் செய்தனர். அம்மக்கள் அவற்றை வேட்டையாடுவதிலேயே குறியாய் இருந்தனர். அவர்கள் மருத நில வாழ்வினை பெரிதாக முன்னெடுக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் 250 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் குழுவினர் இருந்தனர். (ஆங்கிலேயர்கள் புகுந்த பின்னர் அவர்களின் எண்ணிக்கை 3.8%ஆகக் குறைந்தது. ஆதே போல் தான் அமெரிக்க பழங்குடிகளுக்கும் நேர்ந்தது). இவர்கள் யாரும் 45 கிலோவிற்கு மேல் எடை உள்ள ஒரு வனவிலங்கைக்கூட வீட்டு விலங்காக்கப் பழக்கவில்லை. தென் அமெரிக்கர்கள் மட்டும் இலாமாவைப் பழக்கினர். வீட்டு விலங்குகளைப் பழக்காததினால் அவர்களால் நாகரிகத்தின் அடுத்த கட்டதிற்கு நகரமுடியாமல் சிறுகுழுக்களாகவே இருந்தனர். விளைவு அவர்கள் நிலம் அனைத்தும் எளிதில் வெள்ளையர் வசம் சென்றது. இது போன்ற பல சிறு குழுக்களைக் கொண்டது தான் மங்கோலிய இனக்குழுக்கள். ஆனால் அவர்களிலிருந்து செங்கிஸ்கான் எனும் உலகிற்கே சவால் விட்ட பேரரசன் தோன்றி இருந்தான். காரணம் அவர்கள் வேட்டையாடிக்குழுக்கள் அல்ல. அவர்கள் ஆயர் நாடோடிக்  குழுக்கள். இது போன்ற நாடோடிகள் தான் சீரிய இடைவெளியில் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்தனர். இது நமக்கு, பழக்கப்படுத்திய கால்நடைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தமிழர்களின் அளப்பரிய வளர்ச்சிக்கு அவர்கள் பழக்கப்படுத்திய வீட்டு விலங்குகள் மட்டும் அல்ல காட்டு விலங்குகளும் உதவின என்பதை கோயில்காடுகள் மற்றும் உயிர்வேலிகளைப் பற்றிக்காணும் போது விரிவாகப் பார்த்தது நினைவிருக்கலாம்.

வீரம் எனும் புற ஒழுக்கம் நாகரிகத்தின் ஒரு முக்கியக்கூறு. வீரம் எதிரிகளிடம் இருந்து தம் மக்களைக் காப்பாற்றுகிறது. அதே போல் அறமும் நாகரிகத்தின் ஒரு முக்கியக் கூறு. தனது ஆளுமை பிற உயிர்களிடத்தும், சக மனிதர்களிடத்தும், மற்ற நாடுகளிலும் இருக்க வேண்டும் எனும் பேராசை, சிந்தனை ஆற்றல் பெற்ற மனித உயிர்களுக்கு இருப்பது இயற்கையானது. //ஒருவனை யொருவ னடுத்தலும் தொலைதலும் புதுவதன்றிவ் உலகத்தியற்கைபுறநானூறு//அந்த எண்னம் பழங்காலம் தொட்டே இருந்து வந்துள்ளது.

சிந்தனை பெற்ற மனித குலத்தினர் பெரும்பாலும் சிந்தனை ஆற்றலை அழிவுக்கே பயன்படுத்தினர் எனும் கருத்தைநிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வைதலைப்பின் கீழ் ஏற்கனவே பார்த்தோம். சமுதாய அமைப்பினை அழிவுப்பாதைக்கு இதுபோன்ற பேராசையால் விளையும் போர்கள் இட்டுச் செல்லும் என்பதை கல்வியில் சிறந்த சான்றோர்கள் அறிந்து வைத்திருந்தனர். போர்களைத் தடுத்தல் சான்றோர்களாகிய புலவர்களால் இயலாத காரியம். (இருப்பினும் இரண்டு புலவர்கள் சங்க காலத்தில் இரண்டு போர்களை நிறுத்தியுள்ளனர்). ஆனால் பேரழிவைத்தவிற்கும் நோக்கில் போரில் அறம் மீறப்படாமல் இருக்க சான்றோர்கள் மன்னர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர்.

//அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை. குறள்//

நோயுற்றோர், பசுக்கள், பெண்கள் ஆகியோர் மீது போர் தொடுத்தல், இரவில் போர் தொடுத்தல், சரணடைந்தவர்களிடம் வீரம் காட்டுதல், புறமுதுகிட்டவரிடம் வீரம் காட்டுதல் முதலியன கூடவே கூடாதென்பதை நெட்டிமையார், முடிநாகராயர் முதலிய பல புலவர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர்.

சண்டைனு ஒருத்தன் வந்துட்டா, புறமுதுக மட்டும் என்னைக்கும் காட்டி விடாதே, அது பெரியதொரு அவமானம்’, என அவர்கள் ஆப்போசிட் பார்ட்டிகளுக்கும் அறிவுறுத்தத் தவறவில்லை.

ஆனால் இந்த அறம் எதுவும் நிலத்தை அபகரிக்க போர் தொடுத்த ஆங்கிலேயர்களால் பின்பற்றப் படவில்லை. அவர்கள் அமெரிக்கப் பழங்குடி மக்களை "நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளாக" பார்த்தார்கள், ஆஸ்திரேலிய பழங்குடியின மக்களை இயற்கையின் மீது இருக்கும் ஒட்டுண்ணிகளாகக் கருதினர், அவர்களின் கலாச்சாரங்களை முற்றிலும் எதிர்மறையான சொற்களில் வரையறுத்தனர். தமது இனமே உயர்ந்தது எனும் அவர்களின் எண்ணமே, பழங்குடிகளை தடம் தெரியாமல் அவர்களின் வாழ்விடங்களிருந்து துடைத்தெறிய காரணியாய் இருந்தது.

இது போன்ற தவறுகளை, பெருமித மிதப்பில் மன்னர்கள் செய்துவிடக் கூடாதென, ‘பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்எனும் மனிதநேயத்தையும் தாண்டி உயிமநேயம் எனும் உட்சபட்ச அறத்தை போதித்தனர் நமது சான்றோர்கள்.

சரி நம்ம கதைக்கு வருவோம்

இந்தத்தெளிவும் அறிவும் நம் முன்னோர்களுக்கு எப்படிக் கிட்டியது?’ என்ற கேள்விக்கு விடை இன்னும் கிட்டவில்லையே.

அதற்கான விடைஇயற்கையை அவதானித்தல்.

இயற்கையை அவதானித்து, முதற்பொருளாகிய நிலத்தையும் பொழுதையும் உறவாட வைத்து, கருப்பொருளையும் உரிப்பொருளையும் அவர்கள் சிறக்க வைத்தனர்.

நம் முன்னோர்கள் குடியேறிய தமிழ் நிலத்தில் இருந்த பன்முகத்தன்மை கொண்ட நால்வகை நிலமும் தனித்தன்மையன. மேலும் அவை பருவத்திற்கேற்ப பல மாறுதல்களைச் சந்தித்தன. அதனால் அந்த நிலத்தில் புகுந்த ஆதிமனிதர்களின் தொடக்ககாலம் பல சவால்களை உள்ளடக்கியிருந்தது.

அங்கே தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் உயிரினங்கள், தங்கள் முன் இருந்த சவாலை எப்படி சமாளித்தன என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினர். எனவே அந்நிலத்தில் இருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் முதலிய கருப்பொருட்கள், பொழுதுக்கேற்ப எப்படி தங்களைத் தகவமைத்துக்கொண்டன என்பதை ஆழ்ந்து அவதானிக்க ஆரம்பித்தனர். விளைவு மற்ற நாகரிகங்களுக்குத் தெளிவாக வெளிப்படாத இயற்கை, தமிழர்களுக்கு தனது புதிர்களை ஒவ்வொன்றாக அவிழ்க்கத் தொடங்கியது.

Winter Solstice சின் போது செம்மறி ஆடுகள் பருவத்திற்கு வருகின்றன எனப் பார்த்தோம். பலமில்லியன் வருடகாலமாக ஒரே இடத்தில் வாழ்ந்து வரும் அவற்றிற்கு சூரிய நகர்வை உள்ளுணர்வால் உணருவதற்கான பரிணாம உள்ளொளி தகவமைப்பு உதவுகிறதுஆனால் புதிதாகப் புகுந்த நிலங்களில் ஏற்படும் பருவ மாற்றத்தை ஆதிமனிதர்கள் உள்ளொளி கொண்டு உணர வாய்ப்பேதும் இல்லையல்லவா? பிறகு இதற்கு என்ன தான் தீர்வு?

சூழலை அவதானிப்பதே தீர்வு.

 நமது மக்கள் முதன் முதலில் அவதானித்தது சூரியனை.

கற்களை நட்டு சூரிய அவதானிப்பு செய்வது, கற்கால மனிதர்கள் அனைவரிடமும் இருந்த ஒரு வழக்கம். அது இங்கும் பின்பற்றப்பட்டதை காளையார் கோயிலில் உள்ள வானியல் ஆய்வுக்கான கல் அமைப்புகள் உறுதிப்படுத்துகின்றன என்பதை இலந்தக்கரை இரமேஷ் மற்றும் பாலபாரதி போன்ற ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து தினமும் சூரிய உதயத்தை கவனித்து வந்தால், அது ஒரு ஆண்டில்  வடகிழக்கில் (Summer solstice) மற்றும் தென்கிழக்கில் (Winter Solstice) அதிகபட்சமாக ஒரு குறிப்பிட்ட இடம்வரை சென்று திரும்பிவிடும். இதற்கு நடுப்பட்ட இடத்தை Equinox என்பார்கள். இதை வைத்து எந்தவொரு இடத்திலும் சில கற்களையோ குச்சிகளையோ நட்டு வைத்து சூரியனின் போக்கை நாமே கணக்கிட்டு விடலாம்.  

ஒரே இடத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் சூரிய உதயத்தை படம் பிடித்துள்ளார்கள் அதில் நீங்கள் சூரியனின் நகர்வை அவதானிக்கலாம்.

படம்: ஒரு வருடத்தில் பகல் நீண்டு பின் பகல் சுருங்குதலை விளக்கும் படம்

 அப்படி பிடிக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் சூரியன் வடகிழக்கில் இப்டிக்கா போயி பின் தென்கிழக்கில் அப்டிக்கா வருவதை அனுமானிக்க முடியும். சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலத்தை உத்தராயணம் என்றும், வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் காலத்தை தட்சிணாயணம் என்றும் அழைப்பார்கள்.

டிசம்பரில் பகல் சுருங்கி இரவு நீண்டுள்ளது. அதன் பின்பு கொஞ்சங்கொங்கமாய் பகல் நீளத்துவங்கி  மார்ச் 22 இல் சம இரவு சம பகல் வருகிறது, பின்னர் பகல் நீண்டு வெயில் தாக்கம் அதிகரித்து ஜூன் 22 இல் நீண்ட பகல் வருகிறது. அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுமையத்தை ஏற்படுத்தி தென்மேற்குப்பருவ மழைக்கு அச்சாரமிடுகிறது. பின் பகல் சுருங்கத் தொடங்குகிறது, செப்டம்பர் 22 இல் சம இரவு சம பகல் வருகிறது. இதைத்தாண்டி வரும் ஐப்பசியில் வடகிழக்குப் பருவமழை தமிழகத்தை அடைகிறது, பின்னர் இரவு; பகலை விட அதிகரித்து டிசம்பர் 22 இல் நீண்டஇரவு பதிவாகி பனிக்காலம் உச்சம் தொடுகிறது. அதன் பின்னர் மறுபடியும் பகல் நீளத்துவங்குகிறது.

காளையார்கோவில் அருகில் வானவியல் ஆய்வுகளுக்காக நடப்பட்டுள்ள கற்களில் மேற்படி சூரியனின் நகர்வுகளை கணிக்க நான்கு பெரிய அளவிலான கற்கள் நடப்பட்டு இருந்தாலும், அவற்றை சுற்றி பல இடங்களில் நிலவின் பல்வேறு தோற்றங்களில் செதுக்கப்பட்ட கற்கள் உள்ளன... இவை நிலவின் போக்கையும் அவதானிக்க வேண்டி தமிழர்களால் நடப்பட்டவை என்று எளிதாக சொல்லிவிடலாம்.

 சூரியனைப் போல் பௌர்ணமி நிலவும் ஒரே இடத்தில் இல்லாமல் ஒரு ஆண்டில் பல்வேறு இடங்களில் உதயமாகும். சூரியன் காலையில் தென்கிழக்கில் உதயமானால் அந்த மாத முழு நிலவு அதற்கு எதிராக வடகிழக்கில் மாலையில் உதயமாகும். அப்படியே Equinox நாட்களில் வரும் பௌர்ணமி நேர் கிழக்கே உதயமாகும். மேற்படி முழு நிலவு உதயமாகும் இடங்களை குறிப்பிடும் வகையில் பல கற்கள் காளையார் கோயில் பகுதியைச் சுற்றி நடப்பட்டு உள்ளன என்கின்றனர் மேற்கூறிய ஆய்வாளர்கள்.

இதுபோலத்தான் தமிழ் நிலத்தில் புகுந்த நம் முன்னோர்கள் வானத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர் என்பது நமக்குப் புலனாகிறது. பரிதியின் போக்கையும், திங்களின் வளர்தல் தேய்தலையும் கண்டு நாள், வாரம், திங்கள் (மாதம்) என்று காலங்களைப் பகுத்தனர்.

இயற்கையை உரிப்பொருளோடு இணைத்தே இரசிப்பது அவர்கள் பண்பாடு அல்லவா? எனவே அதன்படி முதலில் விசும்பை அவதானிக்கத்தொடங்கினர். இரசனை மிகுந்த அவர்களுக்கு வானம் ஒரு முகமெனத் தோன்றியது. அந்த முகத்தில் இரண்டு கண்கள் இருக்கக் கண்டனர். ஒன்று சூரியன், மற்றொன்று சந்திரன். //மயங்கிருங் கருவிய விசும்புமுக னாகஇயங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரியவளியிடைய வழங்கா வழக்கரு நீத்தம் - மார்க்கண்டேயனார்//

படத்தில் சூரியன் சந்திரனை குறிக்கும் புலிப்படவு வானியல் குறியீட்டு ஓவியங்கள்.


ஒரு கண்ணு பகல்ல தெரியுது, ஒரு கண்ணு ராத்திரி தெரியுது. பகலில் தெரியும் கண்ணுக்கு பரிதி (சூரியன், ஞாயிறு) எனப் பெயரிட்டனர். இரவில் தெரிந்த பெரிய கண்ணிற்கு மதி (நிலவு) எனப் பெயரிட்டனர். நிலவு அல்லாமல் இரவுக்கு ஆயிரம் கண்கள் இருந்தது அவர்களுக்கு வியப்பளித்தது. அதில் சில கண்களைத்தவிற மற்ற அனைத்து கண்களும் மின்னிக்கொண்டே இருந்தன. மின்னாத கண்களை கோள்கள் என்றழைத்தனர். சூரியனின் ஒளியைக் கொண்டு ஒளிரும் அவற்றிற்கு  திங்கள் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனி என பெயரிட்டனர்.

இரவு முழுதும் ஒளிரும் மற்ற கோள்களைப் போல் அல்லாமல், பூமியின் துணைக் கோளாகிய நிலவு வளர்வதையும் தேய்வதையும் அவதானித்தனர். நிலவின் வளர்ச்சி 14 நாட்களைக் கணக்கிட்டு அதை ஒளிப்பக்கம் என்றனர். அதேபோல் தேயும் 14 நாட்களை இருட்பக்கம் என்றனர்.

திங்களைப் பார்த்து 14 நாட்களையும், அதிற்பாதியான 7 நாட்களையும் முதலிரண்டு கண்ணாகிய சூரியன், திங்கள், ஆகியவற்றின் பெயராலும், மீதியை மற்ற கோள்களின் பெயராலும் அழைக்க ஆரம்பித்தனர். இவ்வாறு நாட்களும் வாரமும் உருவாகியது.

பகலின் கண்ணான சூரியன் வலம்வரும் பாதையை ஞாயிற்று மண்டலம் என்றழைத்தனர்.

ஞாயிற்று மண்டைத்தில் நமது கண்ணுக்குத் தெரியும் 27 நாள்மீன்களையும், அதைச் சார்ந்த விண்மீன்களையும் உடுக்கூட்டங்கள் என்றழைத்தனர். ஞாயிற்று மண்டலப்பாதையை 12 ஓரைகளாகத் தமிழர் பிரித்தனர். ஓர் ஓரையிலிருந்து மற்றோர் ஓரைக்கு சூரியன் புகும் நேரத்தை மாதப் பிறப்பாகக் கணித்தனர். இவ்வாறு மாதங்கள் உருவாகின.


இயற்கையை கணிக்க இவ்வாறு பஞ்சாங்கத்தை உருவாக்கினர்.

நம்மிடம் இருவகை பஞ்சாங்கங்கள் உள்ள்ன. ஒன்று சுத்த வாக்கிய பஞ்சாங்கம் மற்றொன்று திருக்கணித பஞ்சாங்கம்.  

எதற்கு இரண்டு பஞ்சாங்கங்கள்?”

பூமியின் அச்சு நிலையானது அல்ல; அது சுழலும் பம்பரத்தைப் போல தள்ளாடுகிறது. இந்த தள்ளாட்டம் ஒரு சுழற்சியை முடிக்க சுமார் 25,772 ஆண்டுகள் ஆகும். எனவேதான் போலாரிஸ் சிலஆயிரம் ஆண்டுக்குப் பிறகு துருவநட்சத்திரமாக இருக்காது.

மேலும் பூமியின் அச்சு வருடத்திற்கு சுமார் 50.3 ஆர்க் விநாடிகள் நகர்கிறது. 72 ஆண்டுகளில், இந்த இயக்கம் தோராயமாக 1 டிகிரி அளவிற்கு மாற்றம் ஏற்படுத்த வல்லது (72 × 50.3 ஆர்க் விநாடிகள் = 3619 ஆர்க் விநாடிகள் ≈ 1 டிகிரி) ஆகும். இந்தச்சாய்வு வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்த வல்லது.

எழுதிய காலத்திலிருந்து இன்று வரை மாறாமல் இருக்கும் பஞ்சாங்கம் சுத்த வாக்கிய பஞ்சாங்கம். 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு டிகிரி சாய்வையும் சேர்த்துக் கணக்கு போட்டு வானிலையைக்கணிக்க பயன்பட்டது திருக்கணித பஞ்சாங்கம்.

இந்த அளவிற்கு துல்லியமாக கணித்ததால் தான் பொழுதோடு பொருந்தி வாழ்ந்து மருத நிலத்தை அட்சயப்பாத்திரமாக்க முடியும். இவ்வனைத்தையும் வெறும் சூரிய சந்திரனின் நகர்வினை; நட்சத்திர மற்றும் சனி வியாழன் கோள்களின் நகர்வோடு ஒப்பிட்டு கணித்திருக்கின்றனர்.

இதற்கான அடித்தளம் நெய்தல் நிலத்தில் இடப்பட்டது.

வானின் இரண்டு கண்களாகிய சூரியனும் சந்திரனும் சில முழுநிலவு நாட்களில் ஒன்றாகத்தெரிவதை நெய்தல் நிலத்தவர்கள் அவதானித்தனர். //உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து, இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் புன்கண் மாலை மலைமறைந் தாங்கு - கழாஅத் தலையார்//

இதனை மிகவும் நுட்பமாக அவதானிதவர்கள் பரதவர்கள். காரணம் இது போன்ற உவா நாட்களில் கடல் பொங்குவது அவர்களுக்கு தங்கள் தொழிலை மேற்கொள்ளுவதில் சிரமத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அந்தநாளை தங்கள் தெய்வத்தை பரவுவதற்கு ஏற்ற நாளாகக்கருதினர் என்று பட்டினப்பாலையில் பாடப்படிருப்பதைக்கொண்டு அறியமுடிகிறது.

கடல்மீதான காதலின் விளைவால், அவர்கள்தான் விசும்பை கடலாகவும் நட்சத்திரங்களை மீன்களாகவும் உருவகித்தனரோ என எண்ணத்தோன்றுகிறது.

பல்மீன் நடுவண் பால்மதி போல். (பல மீன்களுக்கு நடுவில் இருக்கும் நிலவு போல…)

(சிறுபாபாவரி 217-220)

இதுபோல நட்சந்திரங்களையும் நிலவையும் அவதானித்த அவர்களுக்கு ஒன்று புலனாகியது. நட்சத்திர கூட்டங்களுக்கு நடுவில் இருக்கும் நிலவானது, சில சமயம்  கடலில் விளையாடும் சிறுபறவை போன்ற தோற்றம் கொண்டஎழுமீன்’ (stars of Ursa major Charles wain) நட்சத்திரக்கூட்டத்திற்கு அருகில் இருந்தது. //கைதொழு மரபின் எழுமீன் போல//. சில சமயம் அறுமீன் கூட்டத்திற்கு அருகில் முழு நிலவு தோன்றியது. அப்போது சொல்லிவைத்தாற்போல் ஒவ்வொரு வருடமும், மழை முடியும் சமயமாக இருந்தது (இந்த அறுமீன் பல பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலவின் இந்த வருகையைக் கார்த்திகை தீப விழாவாகக் கொண்டாடினர் தமிழர்கள்). அதனால்தான் மழையை(கார்) நம்பி இருந்த குறிஞ்சி நில தலைவனுக்கு, கார்த்தி-சேயன் என்ற பெயர் சூட்டப்பட்டது, இதுதான் கார்த்திகேயன் என மருவியது என்பது ஐயா .சோ.விக்டர் அவர்களின் கூற்று.

இவ்வாறாக நிலவின் வீடுகளாக 27 விண்மீன்களைக் கணக்கிட்டனர். (இதைக் கணக்கிட்டது கணியன் பூங்குன்றனாரின் குடும்பத்தினர் என்கின்றனர். ஒருமுறை நடக்கும் வானியல் நிகழ்வு எத்தனை வருடம் கழித்து நடக்கும் என அனுமானிப்பதற்காக விண்ணைப்பற்றிய ஞானத்தைப் பெற தலைமுறை தலைமுறையாக ஆராய வேண்டியிருந்திருக்கிறது. விண்ணை பற்றிய ஞானத்தின் அறிவே அறிவியலில் சிறந்த அறிவாதலால் அறிவியலுக்கு விஞ்ஞானம் என்று பெயர் வந்ததாக அய்யா சாரங்கபாணி குறிப்பிடுகிறார்)

இதுபோல இரண்டு கண்களையும் வருடம் முழுவதும் அவதானித்தவாறே இருந்த அவர்களுக்கு, வருடத்தின் வேறு சில நாட்களில், சூரியன் மறைந்த பின்னே, கிழக்கே முழு நிலவு தோன்றியது ஆச்சர்யத்தைத் தந்தது.//விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்திநன்னாகனார்//

சிவப்பு நிறம் நம்மவர்களுக்கு மிகவும் உவப்பு அளித்திருக்கிறது. ஏனெனில் சிவப்பு அவர்களுக்கு சிவனை நினைவுபடுத்தியது. இந்த இரண்டு கண்கள் உவமையையே அவர்கள் சிவனுடன் தான் ஒப்பிட்டுள்ளனர். பின் வரும் சிவவாக்கியரின் பாடலைப் பாருங்களேன்

இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்

இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு

எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்

உடல் கடந்து நின்ற மாயம் யாவர்காண வல்லரோ.

சீனர்களின் இன் யாங் தத்துவமும் இதுபோன்ற ஒரு உருவகமே. இரண்டு எதிரெதிர் சக்திகளான யின் மற்றும் யாங் எவ்வாறு ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளது என்றும் எவ்வாறு இரண்டும் இணைந்து சமநிலை பாவிக்கிறது என்றும் விவரிக்கிறது இந்த தத்துவம். கிட்டத்தட்ட ஒரு கண்ணில் காதலும் மறு கண்ணில் வீரமும், ஒரு பக்கம் ஆண் மறுபக்கம் பெண்மை என்னும் சிவ  சக்தி  தத்துவம் போலத்தான் சீனர்களின் தத்துவமும்.


வானியலில் இவ்வாறு வாழ்க்கை தத்துவத்தை சித்தர் எனப்பட்டோர் மறைபொருளாய் போதித்து வந்தனர்.

இவ்வளவு கண்டுபிடித்தார்கள் அல்லவா. அதை கற்றுக் கொண்ட ஒரு சாரார் ஜாதகம் ஜோசியம் என பயமுறுத்த ஆரம்பித்தனர். காசு பார்க்க ஆரம்பித்தனர்.

அறிவியல் இதைப்பற்றி என்ன சொல்கிறது என்றால் கடந்த காலம் , நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் இவையெல்லாம் கால வரைபடத்தில் வெவ்வேறு புள்ளிகள். காலம் என்று ஒன்று (பின்னணியில்) நகர்வதே இல்லை. அது முன்னமே நிர்ணயிக்கப்பட்ட ஒரு GRAPH என்கிறது. ஒரு வரைபடத்தில் எப்படி எல்லாப் புள்ளிகளும் முதலிலேயே குறிக்கப்பட்டு விடுகின்றனவோ அதே போல காலமும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு (நான்காவது) பரிமாணம். மனித மூளையின் சில வரம்புகள் (limitations) காரணமாக நமக்கு காலம் வெளியில் (SPACE) இருந்து வேறுபட்ட ஒன்றாகத் தெரிகிறது. ஆம் நம் மூளை காலவெளியை கற்பனை செய்யும் படி வடிவமைக்கப்படவில்லை.

Arrow of Time தெரியுமில்லையா? காலம் - unidirectional. ----> . (நமது) கடந்த காலமென்பது - irreversible; முடிந்தது முடிந்ததுதான். ஒன்றுமே செய்ய முடியாது. அப்பறம் Theory of relativity வந்தது. காலம் - relative term என்றானது. காலம் நம்மை கடந்து (flow) செல்வதில்லை. நாம்தாம் காலத்தை கடக்கிறோம். இதற்கு முன்னரும் இப்படித்தான் இருந்தது, இப்பொழுதும் அப்படியே இருக்கிறது, இனியும் அப்படிதான் இருக்கும். அதற்கு direction என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. நாம் "observe" செய்வதாலேயே காலத்திற்கு பல அர்த்தங்களை கொடுக்கிறோம். Time is an illusion. மற்றபடி மனித ஜந்துக்கள் பற்றியெல்லாம் காலத்திற்கு ஒரு எழவு அக்கறையும் கிடையாது. அதுபாட்டுக்கு இருந்துகொண்டேயிருக்கும். (இக்கருத்துதான் ஆசீவக மதத்தின் அடிநாதம். அதைப்பற்றி பின்னே காண்போம்).

அதனால் தான் சித்தர்கள் காலத்தை எண்ணி கவலை கொள்ளவேண்டாம் என்றனரோ என எண்ணத் தோன்றுகிறது. பின் வரும் பாடலை நோக்கவும்,

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!                                                                                 

நாளும் கோளும் நம்மை ஒன்றும் செய்யாது. பேடிக்க வேண்டாம் மக்களே சிவனிருக்க பயமேன்? என சித்தர்கள் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

நீ இப்படி செக் வைக்கிறியா என எண்ணிய ஒருசாரார்... பாடலைப் பாடியவர் என்ன சொன்னாரு? சாமிய நம்ப சொன்னாரு. ஒழுங்கா கோயிலுக்கு வந்து தட்சணை போடுங்க என்றனர்.

கடுப்பான சித்தர்கள்... விவேக் போல்எலே, உன்ன பார்த்தா 2000 வருஷம் வாழ்றவன் மாதிரி தெரியுது... அவன் பேச்சை கேட்காதஎன்று பொருள் படுமாறு

உள்ளமே பெருங்கோயில் ஊணுடம்பு ஆலயம்' ஒழுங்கா உடம்பை பேணு என்றனர். மேலும்

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்

பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே

கள்ள மனமுடைக் கல்வி இலோரே!

உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள்.  உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்று ஏசினர்.

நிற்க.  சந்திரனும் சூரியனும் உடலென உருவகப்படுத்தப்பட்டதல்லவா, அவ்வுருவகம் உண்மைதான். இரவு பகல் எனும் இரு வேறு பொழுதுக்கு ஏற்ப நம் உடலும் மனமும் இருவேறு வகையில் செயல்படுகிறது. இதைப்பற்றி விரிவாக சிறுபொழுது பற்றிக் காணும் போது பார்ப்போம். தற்போது வானியல் அனுமானங்களைப் பற்றி தொடர்வோம்.

வானை உற்று அவதானித்த தமிழர்களுக்கு சில சமயம் சூரியன், மாலைப்பொழுதில், சற்றுநேரம் மட்டும் தலைகாட்டிவிட்டு சட்டென மறைவதைக்கண்டனர். அதுவும் குளிர் சமயங்களில் இந்த நிகழ்வு திரும்பத்திரும்ப ஒவ்வொரு வருடமும் நிகழ்வதை புரிந்து கொண்டனர். வானம் கண்ணடிப்பது போல் அவர்களுக்கு இந்த நிகழ்வு தோன்றியது. //மழைகழி விசும்பின் மாறி விழித்திமைப்பது போல…//

சில சமயம் வானம் முழுதும் மேகம் நிறைந்திருக்க, சூரியனையே அவர்களால் பார்க்க முடியவில்லை.//கதிர் மருங்கு அறியாது அஞ்சுவர-ஞாயிறு உள்ள இடம் இதுவென அறியப்படாமையின் உலகம்// 

வானம் முழுதும், சூரியனை மேகம் மறைத்த சமயம், வானமும் பூமியும் மழையால் இணைக்கப்பட்டதை கவனித்தனர். //நிலனும் விசும்பும் நீரியைந்தொன்றி//

அந்த மழையின் சமயம், காற்று தென்திசையை நோக்கி நகர்வதை உணர்ந்தனர்//வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை,விசும்பு உரிவதுபோல்வில் இடத்து ஒழுகி,மங்குல் மா மழைதென் புலம் படரும்//

ஆகாஅப்ப காத்தையும் கவனிக்கனுமாஎன எண்ணி காற்றையும் அவதானிக்க ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு திசைகளில் இருந்தும், வருடத்தின் சிலசமயங்களில் சொல்லி வைத்தாற்போல் காற்று வீசுவதையும், அதற்கேற்றார் போல் சூழலில் மாற்றம் நேர்வதையும் கண்டுகொண்டு அவற்றை பல்வேறு பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தனர்.

 தெற்கில் இருந்து வீசிய மென்மையான காற்று தென்றல் எனப்பட்டது. வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை  எனப்பட்டது. மேற்குத் திசையிலிருந்து வீசுவது கோடைக் காற்று. மேற்குத் திசையைக் குடக்கு என்றும் அழைப்பர். அதன் காரணமாகவே அது கோடைக் காற்று என அழைக்கப்படுகிறது. கோடைக் காற்று பொதுவாக வெப்பமாக இருந்தது.

கிழக்குத் திசையிலிருந்து வீசும் காற்றுக்குப் பெயர் கொண்டல் காற்று. இதற்கு மழைக்காற்று என்ற மற்றொரு பெயரும் உண்டு. கிழக்கிற்கு குணதிசை என்ற பெயரும் உண்டு. இந்த குணதிசைக்காற்று (கொண்டல் காற்று) தான் தமிழகத்தின் நீர்த் தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த கொண்டலின் சமயம் கருமேகங்கள் அல்லது கொண்டல் மேகங்கள் வந்து மலையில் மோதுவதால்தான் மழைபொழிகிறது என்பதை அவர்கள் கவனித்தறிந்தனர். //கொண்டல் ஆற்றி விண்தலைச் செறீஇயர், திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி, நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை//

மேகம் மலைமேல் மோதி மழைபொழியும் நிகழ்வு, அவர்களைப் பலவாறு பரவசமூட்டியது. மேகங்களிடம் இருந்து மழையை வசூலிக்கும் வேலைகளை மலைகளே செய்தது என்பதும் அவர்களுக்குப் புலனாகியது.

//கழைவிரிந் தெழுதரு மழைதவழ் நெடுங்கோட்டுக் கொல்லி- பதிற்றுப்பத்து

மழை விளையாடும் வளங்கெழு சிறுமலைஅகநானூறு

மழை கணம் சேர்க்கும் மாமலைபுறநானூறு//

இந்த மேகம் எனும் பிள்ளைத்தாய்ச்சி, மழை எனும் குழந்தையை மறுபடியும் ஈனுவதற்கு முந்நால் திங்கள் (முன் நான்கு திங்கள் 3 x 4 =12 மாதம்) ஆகிறது எனக் கண்டறிந்தனர். //முந்நால் திங்கள் நிறைபொறுத்து அசைஇ ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக் கடும்சூல் மகளிர் போல…// இவ்வாறாக ஓராண்டிற்கு 12 மாதங்கள் என பகுக்கப்பட்டன.  

தமிழர்கள் காற்றைம் மழையையும் பனியையும் வெயிலையும் அவதானித்து ஆண்டின் சுழற்சி வளையத்தையும் அனுமானித்து அதனை முன்பனி, பின்பனி, இளவெயில், முதுவெயில், மழைக் காலம், கூதிர் காலம் எனப் பிரித்துக்கொண்டனர். இவையே பெரும்பொழுது எனப்பட்டன.

சூரியன் ஓர் ஆண்டின் வான் நடுவரைக்கும் வடக்கில் சென்று பிறகு தெற்கு நோக்கி நகருதலையும் அவர்கள் அவதானிக்கத் தவரவில்லை. சூரியன் தெற்குநோக்கி நகரும்போது கார்காலம், கூதிர்காலம், முன்பனி ஆகியவை வருவது அவர்களுக்குப் புலனாகியது. சூரியன் இப்படி நகருவதால் தோன்றப்படுவதே பருவ மாற்றங்கள் என்ற புரிதலை அவர்கள் பெற்றனர். இதற்கு அடிப்படை பூமியின் சாய்கோணம் எனும் தெளிவும் அவர்களுக்கு இருந்தது.

//பெரும்பெயல் பொழிந்த தொழில எழிலி

விரிகதிர் மண்டிலம் தெற்கு//

பெரும்பொழுதில் அவர்கள் மிகவும் எதிர்பார்த்தது கார்காலத்தை தான்.

கொண்டல் மலையில் மோதியதால் 12 மாதத்திற்கு ஒருமுறை பிறந்தமழைஎனும் குழந்தையானது  மலையிலிருந்து நிலம் வருகையில் பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்லுவதைக் கண்டனர். //கல்பொரு திரங்கும் கதழ்வீழ் அருவி நிலங்கொள் பாம்பின் இழிதரும்குறுந்தொகை//

நிலம் வழிந்த நீர், காட்டினைச் செழிக்கச் செய்து, செம்மண்ணாகிய முல்லை நிலம் மேய்ச்சலுக்கேற்ற நிலமாய் மாறியதைப் பற்றி முல்லைப்பாட்டில் மிக அழகானதொரு பாடல் இயற்றப்பட்டுள்ளது.

கொண்டல் மீது இருந்த காதலால் அவர்கள் கருமை நிறத்தில் எதைப்பார்த்தாலும் கொண்டலோடு ஒப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களின் வணங்குதலுக்குரிய மேய்ச்சல்  நில ஆயர்குலத்தலைவன் மாயோனே கரேர்னு கருப்பாத்தான் இருந்தாரு. அவரையும் கொண்டல் வண்ணன் என்று தான் அழைத்தனர்.

//கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை//

கொண்டலின் வருகையை ஒட்டி வனம் செழித்தபின், கொண்டல் மேகங்கள் வானில் வலம் வந்தது போலவே, கருப்புநிற பேருயிர்கள் அந்த வனம்வழியே வலம் வருவதைக் கண்டனர். // பெருங்களிற்றுத் தடக்கை புரையக் கால்வீழ்த்து இரும்பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ//

மேலும் வனம் செழித்து நீர் நிலைகள் நிறைந்த பின்னர் ஆற்றங்கரையில் புதிதாக இமயம் தாண்டி இங்கே சில அன்னச்சேவல் பறவைகள் வந்து அயிரை மீனை மேய்வதைக்கண்டனர். // குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயின் இடையது.//

தற்போதும் அவைகள் வருகை தருகின்றன. அவற்றின் பெயர்  bar headed goose. அவை தாம் உலகிலேயே மிக உயரமாக பறக்கக் கூடிய பறவை. (இவற்றின் எல்லைக்குள் நாம் ஊடுருவியதால் தான் பறவைக்காய்ச்சல் வந்தது. எனவே பாதுகாக்கப்பட்ட கோயில் வனங்களுக்குள் நாம் நுழையக்கூடாது. மேலும் இவற்றையும் நாம் வேட்டையாடக்கூடாது).

சங்க இலக்கியங்களில் அயல்நாட்டுப் பறவைகள் வலசை வருவதும் போவதும் குறிப்பிடப்பட்டுள்ளதுஎடுத்துக்காட்டாக;

     புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு

     மெய்யிவ ணொழியப் போகிஅவர்

     செய்வினை மருங்கில் செலீஇயரென் உயிரே.  [அகநானூறு - 113]

தான் பெயர்ந்து போக எண்ணிய புலத்தடத்துப் பறவை புறப்பட்டுச் சென்றாற் போல, என் உடல் இங்கிருக்க எனது உயிர் புலம் பெயர்ந்து என் தலைவனை நாடிச் செல்கிறது என்று தலைவி தோழியிடம் கூறுவதாக அகநானூற்றுப் பாடல் காட்சி குறிப்பிடுகிறது.

தமிழ்நாட்டுக்கு வரும் பறவைகளை மண்ணிற்குப் புதியவை என்பதைக் குறிக்க விருந்து, வம்பு ஆகிய உரிச்சொற்கள் கொண்டு குறிப்பிட்டனர்விருந்து பறவை //விருந்தின் வெண்குருகு ஆர்ப்பின்' - நற்றிணை 167] என்றும்;  'வம்பப்புள்' வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு// - அகநானூறு 181  என்றும் கூறினர். புலம்பெயராது அதே நிலத்தில் வாழும் பறவைகள்,  'வதி பறவைகள்' //வதி குருகு உறங்கும் இன்நிழல் புன்னை- குறுந்தொகை 5]// எனத் தமிழிலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது

வம்பநாரை போன்ற பல வலசை வரும் பறவைகள் குறிப்பாக இந்த பருவத்தில் வருவதையும். சொல்லிவைத்தார்போல் அவை கோடை காலத்தில் நம் நிலத்தை நீங்குவதையும் பார்த்தறிந்து கொண்டனர்.

நவம்பர் - பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலவும் இதமான தட்ப வெப்ப நிலையால் ஈர்க்கப்பட்டு தமிழகப் பகுதிகளுக்கு வலசை வரும் பற்பல வகை நாரைகள், கொக்குகள், நீர்க் காகங்கள், நீர்க்கோழிகள் என 200க்கும் மேற்பட்ட வகைப் பறவைகள் நீர்வாழ் பறவைகளாகும். இவற்றில் சில  மழைக்காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்து இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டு அடைகாக்கும். கோடையின் போது இங்கு பசுமை இருக்காது, எனவே பணம் நீங்கியதும் நம்மை நீங்கும் சுற்றமென அவையும் நம் நாட்டை விட்டு கோடைக்கு முன்னமே கிளம்பி விடுகின்றன.

கோடை வந்தபின் தண்ணீர் வற்றத் தொடங்குகிறது. வேனில் காலத்தில், கோடைக்காற்று வீசும்போது, யானை வானத்தை நோக்கி தன் துதிக்கையை உயர்த்தி ஒலி செய்தவாறே அலையும் எனும் குறிப்பு, நிறைய பாடல்களில் காணமுடிகிறது //வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து யானைப் பெரு நிரை வானம் பயிரும்//, //நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன் நிலம் செல//

யானைகளால் நீர் இல்லாமல் அதிகபட்சம் இரண்டு நாட்கள் தாக்குப்பிடிக்க முடியும். அவைகள் பேருயிர்கள் அல்லவா, அதனால் அவற்றின் நீர்த்தேவையும் அதிகம். மேலும் அவற்றிற்கு குறிப்பிடும் படியான இரு ஆற்றல்கள் இருந்தன. ஒன்று ஞாபக சக்தி, மற்றொன்று நுகரும் சக்தி. நீரைத் தனது துதிக்கை கொண்டு நுகர்ந்து; கோடை சமயம் அவை நீரை நோக்கி வலசை செல்லத் துவங்கும். ஐப்பசியில் பெய்யும் வடகிழக்குப் பருவமழை தமிழகத்தின் முக்கிய நீராதாரமாய் இருந்தாலும், ஜூன் மாதம் கேரளத்திற்கு மழை தரும், தென்மேற்கு பருவக் காற்று தேனிப்பக்கம் சாரல் வீசுவதால், அந்த மாதங்களில் தேனி-கோவை பக்கம் பசுமை  நிறைந்திருக்கும்.

இருவேறு இடங்களில் இருவேறு சமயங்களில் நிகழும் மழைப்பொழிவு, அதனைத்தொடர்ந்து அதிகரிக்கும் வனத்தின் வளத்தை அனுமானித்து, மகளிர் கல்லூரிகள் வழியாக காலையும் மாலையும் வலசை செல்லும் வாலிபர் தம் பைக்குகள் போல நமது யானைகள் கூட்டமும் வருடந்தோறும் வனப்பு நாடி வலசை செல்கின்றன

வலசைப் பாதைகளை அவற்றின் ஞாபக சக்தியின் துணையால் அவை மறப்பதில்லை. அடர்ந்த வனங்களை கிழித்து அவை நடை பாதைகளை அமைக்கின்றன. அவைதான் சிறு விலங்குகளுக்கு மேய்ச்சல் நிலமாக  விளங்குகின்றன. அவை போகும் இடமெங்கும் சாணமிட்டுச் செல்கின்றன. அந்த சாணம் வனம் முழுவதையும் வளமாக்குகின்றன. விதைகளைப் பரப்புகின்றன. அவற்றின் சாணத்தை நம்பி வாழும் பூஞ்சைகள் மற்றும் பூச்சிகள் ஏராளம். அந்த பூச்சிகளை நம்பி வாழும் லிஸ்ட் மிகப்பெரியது. பல்லிகள், பறவைகள், ஆமைகள் என பெரும் உணவுச்சங்கிலிக்கு அடித்தளமாய் அவற்றின் சாணம் இருக்கிறது. அவைதான் காட்டின் சமநிலை பேணும் key stone species. இவ்வாறு யானையின் சாணம் வளத்தின் குறியீடாக இருந்தது. அதனால் தான் சாணியையே யானைக் கடவுளாய் பிடித்து வைத்து சாணப் பிள்ளையாராய் பிடித்து வைத்து வணங்க ஆரம்பித்தனர்.

யானை ஆற்றல்மிகு பேருயிராய் இருந்தாலும்; அவற்றிற்கும் எதிரிகள் உண்டு. அதில் இரு எதிரிகள் முக்கியமானவர்கள். முதலாம் எதிரி வரிப்புலி. இரண்டாம் எதிரி மனிதர்கள்.

நாகரிகம் தொடங்கிய காலத்தில், தினைகளை பயிர் செய்ய ஆரம்பித்ததும், பயிர்களை நாடி வரும் யானைகளைக் கண்டு மனிதர்களுக்கு யானையின் மீதான அச்சம் அதிகரிக்க ஆரம்பித்தது.

அதே போல் புலியைக் கண்டு யானைகளும் மனிதர்களும் மிகுந்த அச்சம் கொண்டிருந்தனர். அதிலும் ஆயர்குடிகளாகிய பின்னர் காலையில் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச்சென்ற தலைவனுக்கு ஒவ்வொரு நாளும் போர்க்களமாய் இருந்தது. கால்நடைகளைப் பின்தொடர்ந்து வரும் வரிப்புலிகளிடம் போராடுவதே அவனது முதல் சவாலாய் இருந்தது.

வாழ்வாங்கு வாழ்வதற்கு அடிப்படை அகமும் புறமும் என்னும் எண்ணம் மேய்ச்சல் சமூகத்தில் இருந்தே தோன்றியிருக்க வேண்டும். ஏனென்றால்  கால்நடைகள் மற்றும் தலைவியிடம் அன்பு பாராட்டுவதிலும், எதிரி விலங்குகளிடம் வீரத்தை காட்டுவதிலும் தான் மேய்ச்சல் சமூகத்தின் தலைவனின் பிழைப்பு அடங்கி இருந்தது. இதன் காரணமாகவே மேய்ச்சல் சமூகத்தில் இருந்து  அன்பை போதித்த நல்ல மேய்ப்பரும், பெருங்காதல் பெருவீரம் கொண்ட  கோபாலனும் தோன்றினரோ என எண்ணத் தோன்றுகிறது.

வாழ்வாங்கு வாழ்ந்தவரை தெய்வமாக்குதல், அவரின் நினைவாய் விழா எடுத்தல் போன்ற நமது கலாச்சாரம் அச்சமூகத்திடம் இருந்தே தோன்றியது. தருமபுரியைச் சுற்றிஉள்ள பல புலிகுத்தி வீரர்களின் கல்லும், மாண்டவர் பாறை ஓவியங்களும், அவர்களுக்கென விழா எடுக்கப்படதைப் பற்றிய காட்சிகளும் காணக்கிடைக்கின்றன. இன்றும் குடகு நாட்டில்புலி மங்களம்விழா தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. குடியாத்ததிற்கு அருகில் உள்ள சென்னராயனப்பள்ளி பாறை ஓவியத்தில் புலியைக் கொன்ற வீரனின் தலையைச்சுற்றி ஒளிவட்டம் இடப்பட்டுள்ளதை முனைவர் P.S. இராசேந்திரன் பதிவு செய்துள்ளார்.

வீரர்களுக்கு ஒளிவட்டம் இருக்கும் இந்தப் படம் அய்யா பாலபாரதி பதிவு செய்தது.

கொல்லப்பட்ட புலிகளின் நகங்களை ஆபரணமாய் அணிவதும், அதன் தோலைப் பயன்படுத்துவதையும் புலியை வென்றவர்கள் வழக்கமாக கொள்ள ஆரம்பித்தனர்.

ராட்டில் பாம்புகளின் சட்டைகளை மென்று அணில்கள் உடல்முழுவதும் பூசிக்கொள்வதை நீங்கள் நேச்சுலர் ஜியாகிரஃபி சேனலில் கண்டிருக்கலாம். அந்த வாசனைக்கு பயந்து எதிரி விலங்குகள் தம்மை நெருங்காதிருக்க அவை அப்படிச் செய்கின்றன.

படம்: பாம்புத்தோலை மென்று உடலில் பூசும் அணில்.


நுகரும் சக்தி கொண்ட யானைகளுக்கு புலிகளின் வாசம் ஆகாது. அதுமட்டுமல்ல புலிகளுக்குமே மற்றொரு புலியின் வாசனை ஆகாது. இணை சேரும் காலம் தவிர்த்து புலிகள் மற்ற நேரங்களில் தனித்தே இருக்க விரும்பும். விவசாயக் குடிகளான பின்னர், விளைச்சலை பங்கு கேட்க வரும் யானைகள் புலியின் பாகங்களை அணிகலனாகவும், தோலை ஆடையாகவும் அணிந்திருந்த வீரர்கள் அருகில் வருவதில்லை. அப்படிப்பட்ட வீரர்களே வனத்தில் தலைவனாகப் போற்றப்பட்டனர். இப்படியாக தலைவனைத் தீர்மானிப்பதில் இருந்த புலியின் தாக்கத்தின் விளைவு சோழதேசத்தின் கொடியில் போய் முடிந்தது.

புலியின் மீதான பயம் நமது கலாச்சாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. தற்போது ஆடப்பட்டுவரும் தமிழரின் புலிநடனம் கூட ஆதிதமிழனின் புலிமீதான அவதானிப்பின் வெளிப்பாடே ஆகும்.

பசுபதியின் அச்சிலே கூட மீன், யானை மற்றும் புலி இருப்பதை நீங்கள் அவதானித்திருக்கக் கூடும். விலங்குகள் சூழ இருப்பதாக காட்சிப்படுத்தப்பட்ட பசுபதியும் புலித்தோலை ஆடையாக அணிந்தவர் தான்.  ஹரப்ப நாகரிகத்தின் சின்னங்களில் மீன்கள் அடிக்கடி காணப்படுகின்றன. மீன்கள் ஹரப்பர்களின் முக்கிய உணவாகும். ஹரப்பர்களும் கடலை ஆண்டிருக்கின்றனர். எனவே அவர்களும் நட்சந்திரங்களை விண்ணின் மீன்களாகத்தான் உருவகித்திருந்திருக்கின்றனர் என உறுதியாகச் சொல்லலாம்.

கீழிருக்கும் படத்தில் ஏழு கோடுகளும் ஒரு மீனும் உள்ளது. எழுமீன் எனப்படும் சப்த ரிஷி மண்டலத்தை இது குறித்திருக்கலாம். அந்த விலங்குக்குக் கீழ் இருக்கும் சின்னம் துடிப்பறை போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதும் வியப்பளிக்கிறது.

படம்: எழுமீன் சின்னம்


அறுமீன் வானில் தோன்றும் சமயம்; காடே செழிப்பில் இருக்கையில்; யானைகள் காட்டின்வழி வலசை செல்லத் துவங்க, பெருவேட்டையை எதிர் நோக்கி வரிப்புலிகளும் விழிப்புடன் அங்கே உலாவின. அவற்றை விரட்ட அங்கிருந்த மனிதர்களுக்கு உதவியதுநெருப்பு’. நெருப்பைக் கண்டு அஞ்சாத விலங்குகளே இல்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகுந்தம் பாறை ஓவியத்தில் மனிதர்கள் நெருப்பினைக் கொண்டுமா ஒளிசுற்றி, தம்மைச்சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும் காட்சியைக் காணலாம்.(நன்றி:திரு.சுகவன முருகன்).

படம்: மாவளி சுற்றும் மனிதன்

தற்போதும் மாவளி சுற்றுதல் கார்திகை மாதத்தில் பின்பற்றப்பட்டு வருவதைக் காணமுடியும். ஆனால் நாகரிகம் அடைந்த போது கார்த்திகையை விவசாயப் பண்டிகையாக கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

இருப்பினும் நாகரிகம் அடையாத சில லூசுகள், இன்னும் நெருப்பைக்கொண்டு யானைகளை அச்சமூட்டிக் கொண்டு இருக்கின்றன.

மருதநில நாகரிகங்கள் முளைத்த பின்னர் நமது மக்களின் நரப்புற மற்றும் கிராமப்புற அமைப்புகள் நீரினை ஒட்டி மேட்டு நிலத்தில் அமைக்கப்பட்டதைப் பற்றி மருதத் திணையில் விரிவாகக் கண்டோம். தெளிவாகத் திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்ட அந்த நகரங்கள் யானைகளின் வலசைப்பாதையில் குறுக்கிடவில்லை.

காட்டை வளப்படுத்த யானைகள் வலசை சென்றதை பற்றிப் பார்த்தோம். மருதநில நாட்டை வளப்படுத்த யாரை வலசை செல்லச் சொல்லலாம்? மேலும் நாடு எனும் நவ நாகரிக பூமியில் பொழுதின் மாற்றத்தை எவ்வாறு அறிவது?

காடுகளைவிட்டு நீங்கி பெரும் நாகரிகநகரங்களில் வாழ ஆரம்பித்த பின்னர்; காட்டைவிட்டு நீங்கிய நம் மக்களுக்கு; காலநிலை மாற்றத்தை அறிந்து கொள்ள உதவியவை மலர்கள். நிலத்தை மலர்களின் பெயரால் அழைத்த நம் முன்னோர்கள், மலர்களைக்கொண்டே காலத்தையும் அறிந்து கொண்டனர். உதாரணத்திற்கு கூதாளி மலர் மலருங்காலம் கூதிர் காலம் என்று அறிந்து கொண்டனர்.

//கூதிர் கூதளத்து அலரி நாறும் (நற்றிணை).//

குரவு அரும்பினால் பின்பனி. மா, வேம்பு, நுணா போன்றவை இளவேனில் வருகையை பறை சாற்றுபவை, இதே போல் சிறுபொழுதுகளின் காலத்தையும் மலர்கள் கொண்டு அறிந்து கொண்டனர் என்பதைவைகறை மலரும் நெய்தல் போலஎனும் ஐங்குறுநூற்றுப்பாடல் மெய்ப்பிக்கிறது. முன்பனிக்காலத்தின் மாலைப்பொழுதில் பிடவ மலர்கள் மலரும் எனும் பாடல் வரி, ஒவ்வொரு பெரும்பொழுதின் சிறுபொழுதை பல்வேரு மலர்களின் வருகைக் கொண்டு அறிந்துகொண்டதை உணர்த்துகிறது. மேலும் அவர்கள் நாழிகைகளை கணிக்க நீர்க்கடிகாரங்களையும் பயன்படுத்தி உள்ளனர் என்பதை

//‘‘பொழுது அளந்தறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண்கையர; தோன்ற வாழ்த்தி
குறுநீர்க் கன்னல் இணைத்து என்று இசைப்ப’’// எனும் பாடல் கொண்டு அறியமுடிகிறது.

வெளிநாட்டு செம்மறி ஆடுகள் அந்நிலத்திற்கும் காலத்திற்கும் தகவமைந்து வருடத்தின் வசந்தகாலத்தில் பிள்ளை பெற்றுக்கொள்கிறது எனக்கண்டோம். நம் நாட்டு செம்மறி ஆடுகளுக்கு குளிர்தாக்க பயம் ஏதும் இல்லை. நமது வெயில் சூழலுக்கு ஏற்ற இராமநாதபுரம் வெள்ளை இன ஆடுகளை இதற்கு உதாரணமாகக்கொள்ளலாம். வெளிநாட்டு ஆடுகள் கம்பளிக்காக வளர்க்கப்பட்ட போது, நமது ஆடுகள், வாத்துகள் மற்றும் கிடைமாடுகள் நிலத்தை வளப்படுத்த வளர்க்கப்பட்டன. யானை வலசைப்பாதையைப் போலவே இவற்றை மேய்க்கும் குழுவினர் மழைப்பொழிவை உத்தேசித்து மழைக்குமுன் தயார் படுத்தப்பட்டிருக்கும் நிலத்தை வளமாக்கவும், களைகளை நீக்கவும், நிலத்தை அடுத்த விளைச்சலுக்கு தயார் செய்யவும், மழை செல்லும் பாதையை ஒட்டி இவைகளை ஓட்டிச்சென்று கிடை போடுகின்றனர்.

யானைகள் மற்றும் வெளிநாட்டுப் பறவைகள், இயற்கை சமன்பாட்டை நிலைநிறுத்த வலசை சென்றது போல், இயற்கையை பாவித்து கால்நடைகள் மற்றும் பறவைகளைக் கொண்டு செய்யப்படும் வலசை இது.

இதனை அடிப்படையாகக் கொண்டு முல்லை நில ஆயர்குழுக்கள் மருதத்தை வளப்படுத்த பொழுதின் பாதையில் ஒத்திசைந்து வலம்வந்து நிலத்தை வலப்படுத்தினர். வெள்ளையர்கள் நிலத்தை வளப்படுத்து ஒருவருடம் முழுவதும் நிலத்தில் பயிரேதும் செய்யாமல் அங்கே கால்நடைகளை மேயச்செய்தனர் எனக்கண்டோம். ஆனால் நாம் பொழுதோடு ஒத்திசைந்த கால்நடைகளின் வலசையால் நிலத்தை தொடந்து பயன்படுத்தும் வகை செய்தோம். இவை அனைத்தையும் நோக்கும் போது நமது நாகரிகம் எவ்வாறு இயற்கையை அவதானித்து, நிலத்தையும் பொழுதையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கியது என தெளிந்துகொள்ளலாம்.

குறிஞ்சியிலும் முல்லையிலும் வாழ்ந்த மக்கள் பருவத்தின் பிடியில் வாழ்ந்து வந்தனர். அப்பருவம் தந்த மழையை அடிப்படையாகக் கொண்டு வனத்தின் உயிர்களின் வரவையும், மலர்களின் தோற்றத்தையும் கொண்டு கால நிலையைக் கணக்கிட ஆரம்பித்தனர். அதனாலேயே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்ந்த குறிஞ்சியின் பெயரை, முதலாம் திணைக்கு சூட்டினர். இந்த அவதானிப்பு இயற்கையின் பல புதிர்களை அவர்களுக்கு விடுவித்தது. ஆனால் பொழுதானது பொய்த்த பொழுது தம் நல்லியல்பைத் தொலைத்து களவுத் தொழில் மேற்கொள்ளும் நிலைக்கு ஆளானார். இப்படி வாழ வேண்டாம் என எண்ணிய மக்கள் நிரத்தர உணவு வேண்டி நெய்தல் புகுந்தனர். நெய்தலில் வளைஞர்கள் பொழுதை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தனர். வெயிலும் புயலும் மழையும் மாறி மாறி வந்த காலநிலையைப் பழகினர். அதனடிப்படையில் இயங்க ஆரம்பித்தனர். இதன் விளைவாக பொழுதைப் பற்றிய நுட்ப அறிவினைப் பெற்றனர். அதற்கேற்ப தமது வாழ்வு முறைகளை கட்டமைத்துக் கொண்டனர். காதல் மற்றும் வீரம் இரண்டிலும் அவர்கள் உச்சம் பெற்றிருந்தனர். ஆயினும் அவர்கள் குடியிருந்த இடம் அபாயகரமானதாக இருந்தது, மேலும் பெரும் சமூகமாய் வாழ்வதற்கேற்ற நிலப்பரப்பினையும் அது கொண்டிருக்கவில்லை. இதே போல ஒரு சூழலில் வாழ்ந்த ஸ்கேண்டினேவிய மக்கள் வைக்கிங்குகளாக மாறி கடலையே கதறவிட்ட கதைகள் மேற்கத்திய உலகில் மிகப்பிரசித்தம். ஆனால் நமக்கு கடலைக் கதற விடவேண்டிய அவசியம் இல்லை. காரணம் நம்மிடம் இருந்த மிகப்பெரும் சமநிலம். அதைப் பெரும்பொழுதோடு உறவாடவைக்கும் கலையைப் பழகிவிட்டால் வாழ்வாங்கு வாழலாம் என்ற எண்ணமே நமது சமூகத்தை இன்றுவரைக் கட்டிக்காத்துக் கொண்டிருக்கிறது. இச்சிந்தனையின் விளைவாய் பிறந்ததே மருதத் திணை.

இந்த எண்ணத்தோடு மருதநிலத்தில் புகுந்த மக்கள் ஆறு பொழுதையும் அவர்களுக்கு உகந்ததாய் மாற்றினர். அவர்களோடு முல்லையின் மேய்ச்சல் சமூகமும், பாலையின் மறவர் சமூகமும், கடலாளும் பரதவர் சமூகமும் ஒன்றிணைய, பழங்குடி தமிழர்கள் அனைத்து வளத்திற்கும் அடிப்படையான குறிஞ்சியை தாயென பாதுகாக்க,    நிலமும் பொழுதும் உறவாடி 'விளைச்சல் வேகம்' என்னும் மூன்றாம் பரிணாமம் உச்சம் தொட, குறிஞ்சியில் கிடைத்த அதே அறுசுவை உணவு பாலை நிலத்திலும் வருடம் முழுவதும் பெறப்பட்டது.  

இதனால் வேளாளரது ஏரின் பின்னே நமது தமிழ்உலகம் நிலையாய் சுழலத்தொடங்கியது .

ஆனால் வெள்ளையர்களுக்கு பொழுதின் முக்கியத்துவம் பற்றிய பிரக்ஞை இருந்திருக்கவில்லை. காரணம், அவர்கள் வசித்து வந்த நிலப்பரப்பு அத்தகையது. அதனால் தாங்கள் பயன்படுத்தும் ரசாயனங்கள், உலகின் பருவநிலையை மாற்றுவதை அவர்கள் புரிந்துகொள்ள நிறைய காலம் எடுத்துக்கொண்டது. அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிய பொழுது நிலைமை கைமீறி இருந்தது.

பூமியின் பருவநிலை மட்டும் தற்பொழுது மாறவில்லை. மேற்கத்திய வாழ்வு முறையின் தாக்கம் நமது உடலின் பருவநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

ஏர் முன்னது எருது - 10 - பெரும்பொழுது

  பெரும்பொழுது காலம் : 21 ம் நூற்றாண்டு இடம் : ஐரோப்பா " எவ்வளவு நேரம்டா தூங்குவ ? எந்திரிடா ." " நேத்து தானே ப...