Friday, June 26, 2026

இயற்கையின் குரல் - புத்தகத் திறனாய்வு

ஒரு மொழியை கற்பதற்கு இதுவரையிலும் நாம் பல புத்தகங்களை படித்திருப்போம்.  நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு அது போன்றதொரு புத்தகத்தை படித்திருக்கிறேன். அது ஒரு கையடக்க புத்தகம். புத்தகத்தின் தலைப்பு '30 நாட்களில் ஹிந்தி பாஷை'.

 கால்நடை மருத்துவத்தில் உயர் படிப்பு படிக்க, வட இந்தியா சென்ற பொழுது நான் வாங்கிச் சென்ற புத்தகம் அது.  அந்தப் புத்தகத்தின் உதவியால்  ஹிந்தி மொழியில் சில வினா வாக்கியங்களை அமைக்க கற்றுக்கொண்டேன்.   வேறு எந்த வகையிலும் அந்த புத்தகம் எனக்கு பயன்படவில்லை.  

சிகிச்சைக்காக கால்நடைகளை அழைத்து வரும் விவசாயிகள் ஹிந்தி மற்றும் போஜ்பூரியை  தங்கள் தொடர்பு மொழியாகக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் அறவே தெரியாது.  இருப்பினும்  அங்கே எனக்கு ஹிந்தி பெரிதாகத் தேவைப்படவில்லை. ஏனெனில் எனது நோயாளிகள் வாயில்லா ஜீவன்கள். எனது நோயாளிகளால் ஹிந்தியை பேசி விட முடியாது. 

 பிறகு எதற்கு எனக்கு ஹிந்தி?  

மாட்டிற்கு என்ன வியாதி என்று மாட்டின் உரிமையாளர்கள் சொல்வதற்கு முன்னமே மாட்டின் துயரம் மிகு கண்கள்  என்னிடம் பேசி விடுகிறதே? பிறகு எதற்கு எனக்கு மற்றொரு மொழி?

  விலங்குகளின் துன்பங்களை அறிவதற்கு எந்தவித  பாஷையும் தேவையில்லை.  Empathy என்கின்ற ஒரு அடிப்படை பண்பு இருந்தால் மட்டுமே போதுமானது.  சக உயிர்கள் மீது அன்பு செலுத்தும் எந்த ஒருவருக்கும், தனது உணர்வுகளை கடத்துவதற்கு; வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட மொழி என்பது அவசியமற்றது.  இதுவே கால்நடை மருத்துவத்தின் பால பாடம்.

நிற்க . Chat gpt, google translate போன்ற செயலிகள் வந்த பிறகு, பிற மொழிகளை கற்பது என்பது கிட்டத்தட்ட தேவையற்றதாகிவிட்டது. இருப்பினும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு மொழியை கற்கும் நோக்கில், மற்றுமொரு புத்தகத்தை வாசிக்க கையில் எடுத்தேன். 

ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்தை இவ்வளவு சுவாரசியமாக படிப்பேன் என நான் நினைத்துப் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புத்தகம் தான் நான் படிப்பதற்கு தேர்ந்தெடுத்த புத்தகம். 

அப்படி என்ன மொழியை அந்த புத்தகம் கற்பிக்கிறது என்று நீங்கள் கேட்க கூடும். 

அது அனுதினமும் நம்மைச் சுற்றி பேசப்பட்டு வரும் ஒரு மொழி! 

நம்மை சுற்றிலும் பேசப்பட்டு வந்தாலும் நாம் கேட்க மறந்த ஒரு மொழி!! 

அது மண்ணுலகின் மறக்க பட்ட உயிர்ப்பின் மொழி!!! 

 நாம் அறிந்த வரையில் , சுவாசத்தை குரல்வளையால் அதிர வைத்து, ஒரு ஆன்மாவின் எண்ணத்தை மற்றொரு ஆன்மாவுக்கு குரல் வழியாக கடத்துவதே மொழி எனப்படுகிறது. 

அப்படிப் பார்த்தால் சில்வண்டுகளின் ரீங்காரங்கள் குரல்வளையால் எழுப்பப்படும் ஒலி அல்லவே?  அது குரலோசை கிடையாதே? அப்படியானால் அது மொழி என்ற பிரிவிற்குள் வராதா? 

நிச்சயமாக இல்லை. 

 சில்வண்டிற்கு அந்த ரீங்காரமே தொடர்பு கொள்ளும் சாதனம். எனவே அந்த ரீங்காரமே சில்வண்டின் மொழியாகும். 

சப்வேயில் துண்டை விரித்து தூங்கிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி உங்களிடம் எந்த வார்த்தையையும் பேசவில்லை.  இருப்பினும் நீங்கள் ஏன் அவருக்கு யாசகம் அளித்தீர்கள்? 

உங்களை யாசகம் அளிக்கத் தூண்டியது யாருடைய குரல்? 

அது எவ்வகை மொழி? 

கணித வாத்தியாரின் கோபம் மிகு கண்கள்,  காதலியின் கடைக்கண் பார்வை, கை தூக்கி விடும் நண்பனின் கரங்கள்,  இவை அனைத்தையும் நம்மால்  கோபம் என்றும், காதல் என்றும், நட்பு என்றும் மொழிபெயர்க்க முடிந்திருக்கிறது. 

ஆனால் தொட்டாசிணுங்கியின் சுணக்கத்தை எப்பொழுதாவது நாம் மொழிபெயர்த்திருக்கிறோமா? 

குறைந்தபட்சம் அந்த தாவரத்தை உயிருள்ள ஒரு ஜீவன் என்ற வகையில் அணுகி இருக்கிறோமா? 

உண்மையில் தாவரங்களால் தங்களை உண்ண வருபவர்களின் குரலை கேட்க முடியும். அண்டை தாவரங்களின் மணத்தை நுகர முடியும். தங்களை நேசிப்பவர்களின் வடிவத்தை போல மாற்றிக் கொள்ள முடியும் என்ற உண்மையை இந்த புத்தகம் எனக்கு போதித்தது. 

நான் படித்த அந்த புத்தகத்தின் பெயர் 'இயற்கையின் குரல்'.அதன் ஆசிரியர் அய்யா பாமயன். 


இயற்கை நம்மிடம் தினமும் பேசிக்கொண்டே இருக்கிறது.
வெறும் வார்த்தைகளால் அது நம்மிடம் பேசவில்லை; அசைவுகளால், ஒளியால், மணத்தால், காலத்தின் மாற்றங்களால் அது நம்முடன் உரையாடிக்கொண்டிருக்கிறது.

மகுடியின் இசைக்கு பாம்பு அசைவது போல, சூரியனின் பயணத்தை நோக்கி சூரியகாந்தி மலர் திரும்புவது போல, இயற்கையின் மெல்லிய சமிக்கைகளுக்கு ஏற்ப நமது உடலும் தனது இயக்கங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது.

நாம் உறக்கத்தில் இருந்தாலும், விடியலின் வருகையை இயற்கை நமக்கு அறிவித்துவிடுகிறது. பறவைகளின் கீதங்கள், காற்றின் தட்பவெப்ப மாற்றங்கள், வெளிச்சத்தின் மெல்லிய தீண்டல், இவை அனைத்தும் நமது கண்கள், காதுகள், சருமம் போன்ற புலன்களின் வழியாக மூளையை அடைந்து, “இது பகலின் நேரம்” என்று உடலுக்குச் சொல்லுகின்றன. அதற்கேற்ப விழிப்பு, செயல்பாடு, ஆற்றல் ஆகியவற்றை இயக்கும் ஹார்மோன்களை நமது உடல் சுரக்கத் தொடங்குகிறது.

இயற்கையோடு இசைந்து வாழ்வதற்காகவே நமது உடல் பரிணமித்திருக்கிறது.

ஆனால், இன்று மனிதன் இயற்கையிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள முயல்கிறான்.
நாம் எழுப்பிய சுவர்கள் பறவைகளின் பாடல்களை நம்மிடமிருந்து ஒதுக்கி வைக்கின்றன.
நாம் அமைத்த சாளரங்கள் சூரியனின் ஒளியைத் தடுக்கின்றன.
குளிரூட்டப்பட்ட அறைகள் காலத்தின் வெப்பத்தையும், பருவங்களின் மாற்றத்தையும் நம்மிடம் இருந்து பிரித்து வைக்கின்றன.

நிலத்தோடும், பொழுதோடும், பருவங்களோடும் இணைந்து வாழ மறுக்கும் இந்த வாழ்க்கை முறை உண்மையில் நமக்கு நன்மை தருகிறதா?

எனது தொழில் கால்நடை மருத்துவம். அது உயிர்களின் அவத்தையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டது. விலங்குகளின் துன்பத்தையும், மனிதர்களின் துன்பத்தையும் ஒரே உயிரியல் பார்வையில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அந்த எண்ணத்திலிருந்து, இந்த புத்தகம் எனக்குள் எழுப்பிய சிந்தனையை ஒரு ஒப்பீடாக பார்க்க விரும்புகிறேன்.

நிலத்தோடும் காலத்தோடும் இயைந்து வாழும் ஒரு எளிய உயிரினத்தோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்போமா?

ஒரு பட்டாம்பூச்சியின் வாழ்க்கையையும் நமது நகர வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

நாம் வாழும் நகரங்களில் உணவு, உடை, உறைவிடம் என அனைத்து வசதிகளும் குவிந்து கிடக்கின்றன. ஒரு சொடக்கில் உணவு வீடு தேடி வருகிறது. குளிரூட்டப்பட்ட அறைகள், மென்மையான படுக்கைகள், வசதியான வாழ்க்கை என இயற்கை வழங்காத பல வசதிகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் ஒரு பட்டாம்பூச்சி தனது உணவிற்காக மலர்கள் தோறும் பறக்க வேண்டும். அதன் உணவு உறுதி செய்யப்பட்டதல்ல. மலர்கள் வழங்கும் மது மட்டுமே அதன் வாழ்வாதாரம்.

ஆயினும், நாம் அன்போடு வளர்க்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளும், பெரியவர்களுக்கு நீரிழிவு நோயும் அதிகரித்து வருவதை நாம் காணமுடிகிறது.

ஆனால் வாழ்நாள் முழுவதும் மலர்களின் மதுரத்தை மட்டுமே சுவைக்கும் பட்டாம்பூச்சிக்கு எந்த ஊட்டச்சத்துகுறைபாடும் வருவதில்லை. மதுமேகம் அதை அண்டுவதில்லை.
ஏனெனில் இயற்கை அதற்குத் தேவையானதை, சரியான அளவில், சரியான நேரத்தில் வழங்குகிறது.

அந்தப் பட்டாம்பூச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தாவரங்கள் அன்போடு வழங்குகின்றன. அதற்கு பதிலாக, அந்தப் பட்டாம்பூச்சி தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் துணை நிற்கிறது.

வனத்தால் பட்டாம்பூச்சி வாழ்கிறது.
பட்டாம்பூச்சியால் வனமும் வாழ்கிறது.

இதுவே இயற்கையின் சமநிலை.

இவ்வாறு இயற்கையோடு இணைந்து வாழ்வதே நலமான வாழ்வு என்பதை இந்த புத்தகம் முன்வைக்கிறது. இயற்கையிலிருந்து மனிதன் விலகிச் செல்வதால் ஏற்படும் விளைவுகளை அறிவியல் ஆதாரங்களுடன் இந்த நூல் விளக்குகிறது.

ஆனால், இயற்கையை விட்டு விலகிய மனிதன் இன்று நுகர்வு வெறியிலும், முடிவில்லாத போட்டியிலும் சிக்கி, தனது நலனையும் சூழலின் நலனையும் ஒருசேர இழந்து கொண்டிருக்கிறான்.

இயற்கையிலிருந்து மனிதனின் பிரிவு உருவாக்கும் முக்கியமான விளைவுகளில் மன அழுத்தமும் பதட்டமும் முன்னிலை பெறுகின்றன என்பதை ஆசிரியர் தெளிவாக எடுத்துரைக்கிறார். இயற்கையற்ற சூழலில் வளரும் குழந்தைகள் மனச்சோர்வு, எதிர்மறை சிந்தனைகள் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். மண்ணைத் தொடுதல், வெட்டவெளியில் ஓடுதல், இயற்கையின் மத்தியில் விளையாடுதல் போன்ற அனுபவங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன.

வெயிலிலும் மண்ணிலும் விளையாடுவது என்பது ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் ஒரு செயல். அனால் வெறும் மண்ணில் குழந்தைகளை நாம் விளையாட விடுவதில்லை.

 உண்மையில் மண் என்பது வெறுக்கப்பட வேண்டிய ஒன்றா?

கண் பேசும் வார்த்தைகளை புரிந்துகொள்ள முடியாமல் காதலர்கள் தவிக்கும் போது, மண் பேசும் மொழியை இந்த புத்தகம் நமக்குக் கற்றுத் தருகிறது.

மரங்களுக்கு மட்டுமல்ல, மண்ணுக்கும் அறிவு உண்டு என்பதை ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த பகுதி  “இயற்கையின் நுண்ணறிவு” என்ற தலைப்பு.
அதன் கீழ் மண்ணின் மதி, அதன் நினைவு, அதன் உயிர்ப்புத் தன்மை குறித்து ஆசிரியர் விளக்கியிருப்பது, இயற்கையை ஒரு வளமாக அல்லாமல்; ஒரு உயிருள்ள உறவாக பார்க்கச் செய்கிறது.

இயற்கை நம்மைச் சுற்றி இருப்பதல்ல.
நாம் இயற்கையின் ஒரு பகுதி.

அதை உணர்ந்தால் மட்டுமே மனிதன் மீண்டும் முழுமையான வாழ்வை நோக்கி திரும்ப முடியும்.


யாரையேனும் திட்டும் போது கூட மண்ணோடு ஒப்பிட்டு திட்டும் வழக்கமுடைய நமக்கு, மண் ஒரு ஞானி என்பதை  எடுத்துரைக்கிறார் ஆசிரியர். மண் உயிருள்ளது, மனிதர்களைவிட எண்ணிக்கையில் நிறைய உயிரினங்களைக்கொண்டது. நமது கணிணி நெட்வொர்க்கைக்காட்டிலும் மேம்பட்ட நெட்வொர்க்கை கொண்டது மண். மண் மீள்திறன் மிக்கது. அறிவாற்றல் மிக்கது என்று ஆசிரியர் நமக்கு புரியும்படி எளிதாக விளக்குகிறார்.

ஆறாம் அறிவு... செயற்கை நுண்ணறிவு... என அறிவின் எல்லைகளை நாம் விஸ்தரித்துக் கொண்டிருக்கும் வேளையிலே, அறிவு என்பது மனித மனங்களுக்கோ அல்லது தொழில்நுட்ப அமைப்புகளுக்கோ மட்டும் சொந்தமானது அல்ல என்பதை மண் உள்ளிட்ட இயற்கையின் ஒவ்வொரு கூறும் நமக்கு நினைவூட்டிகொண்டு இருக்கின்றது.
இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் ஒன்றோடொன்று இணைந்து,  ஒத்துழைத்து,  தகவமைந்து இயங்குகிறது.  இவை அழிவன அல்ல. மீள் உருவாக்கம் பெற வல்லவை.இவ்வாறு தனக்கே உரிய ஞான வடிவங்களை இயற்கை கொண்டுள்ளது  என்று ஆசிரியர் நமக்கு அறிவிக்கும் போது; அறிவு என்பது என்னவென்று தெரியாமலேயே வெறும் புத்தகங்களில்  மட்டுமே அறிவை தேடுகிறோமே என்று நமக்கே நம் மீது கழிவிறக்கம் வருகிறது. 

ஒன்றுக்கொன்றான ஒத்துழைப்பு மூலமே வாழ்க்கை செழித்து வளர்கிறது என்பதை,  மண் உட்பட இயற்கையின் அனைத்து கூறுகளும் நமக்கு கற்பிக்கின்றது.மனித குலம் பூமியின் உயிருள்ள அமைப்புகளுக்குள் தமக்கான இடத்தை புரிந்து கொள்வதற்கு மண்ணின் இந்த ஞானம் உதவும் என்கிறார் ஐயா பமையன்.

ஒவ்வொரு உயிரினமும் இந்த இயற்கையில் இருந்தே பிறக்கிறது. இயற்கையின் துணை கொண்டே உயிர் வளர்க்கிறது. பிரிதொரு நன்னாளில் இயற்கையோடு கலந்து இயற்கை எய்துகிறது. பின்னர் அந்த உயிர் புதைவுற்ற இடத்திலிருந்து இன்னொரு உயிர் பிறக்கிறது. இயற்கையில் இறந்துபட்ட உடலோ, சாணமோ, எதுவும் கழிவு அல்ல. இயற்கையில் ஒன்றன் 'கழிவு மற்றொன்றின் உணவு'. 

                                                One man's trash is another man's treasure. 

இந்த 'ஊட்டச் சுழற்சி'யில் பூகோள வலை பின்னல் முழுவதும் ஆற்றலும் பொருளும் தொடர்ந்து பரிமாற்றம் செய்யப்படுகின்றன . இவ்வாறு இயற்கை 'கழிவில்லா வாழ்க்கை' என்ற கொள்கையை நமக்கு கற்றுத் தருகிறது அது 'அழிவில்லா வாழ்வு'க்கும் வழிகாட்டுகிறது என்கிறார் நூல் ஆசிரியர்.

ஆனால் இது போல் அல்லாமல் இயற்கையின் மூலங்களை சுரண்டி எடுத்தல், பொருட்களை உருவாக்குதல், நுகர்தல், கழிவுகளைக் கொட்டி வைத்தல் என்ற அணுகுமுறையை இந்த இன்றைய தொழில்மய வளர்ச்சி மாதிரிகள் பின்பற்றுகின்றன என்கின்றார் ஆசிரியர். இந்த 'நேர்கோடு வளர்ச்சி' மாதிரியானது இயற்கையை எல்லையற்ற கிடங்காகவும் கழிவுகளை கொட்டும் முடிவற்ற இடமாகவும் கருதுகிறது என்கின்றார்  ஆசிரியர்.

மனிதனின் இடம்பெயர்வு இன்று கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி நகர்கிறது. நகரம் என்ற பெரும் குழந்தையின் முடிவில்லாத பசியைத் தீர்க்க இயற்கையின் மடியில் இருக்கும் வளங்களால் மட்டும் இனி தீனி போட முடியாத நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் நகரம் என்பது மனிதன் உருவாக்கிய 'நேர்கோட்டு அமைப்பு'; ஆனால் இயற்கை என்பது சுழற்சியின் அடிப்படையில் இயங்கும் ஜீவனுள்ள அமைப்பு. இயற்கை தனித்தன்மையை அழிப்பதில்லை; பன்மயத்தை அரவணைத்து இயங்குகிறது. அங்கு வெற்றி என்பது மற்றொன்றை அழிப்பதில் இல்லை; ஒன்றோடு ஒன்று இணைந்து வாழ்வதில் உள்ளது. இயற்கையின் உலகில் போட்டியை விட கூட்டுறவு மேலோங்குகிறது. ஒரு காடு என்பது தனித்தனி மரங்களின் கூட்டம் மட்டுமல்ல; வேர்கள், பூஞ்சைகள், நுண்ணுயிர்கள், விலங்குகள், நீர், காற்று என அனைத்தும் இணைந்து உருவாக்கும் ஒரு உயிரியல் சமூகமாகும் என்பதை ஆசிரியர் நமக்கு தெளிவுற புரிய வைக்கிறார்.

நகர வாழ்க்கை மனிதனுக்கு பல வசதிகளை வழங்கியுள்ளது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம், தொழில்நுட்பம் போன்றவை மனித வாழ்வை எளிதாக்கியுள்ளன. இவை அனைத்தும் மனிதனின் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளங்கள்.

ஆனால், இந்த முன்னேற்றங்களோடு இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பழங்குடி சமூகங்களின் அறிவையும் நாம் மறந்துவிட முடியாது. அவர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ கற்றுக்கொண்டவர்கள்.

ஆசிரியர் பழங்குடி வாழ்க்கையை உயர்த்திப் பேசவும் இல்லை; நவீன அறிவியலை மறுக்கவும் இல்லை. மனித அறிவியலும், இயற்கையோடு வாழ்ந்த மக்களின் அனுபவ அறிவும் ஒன்றோடு ஒன்று இணைந்தால் மட்டுமே முழுமையான முன்னேற்றம் சாத்தியம் என்பதையே வலியுறுத்துகிறார்.

மனிதன் தனது ஆறாம் அறிவால் பல கண்டுபிடிப்புகளை செய்துள்ளான். ஆனால் இயற்கை கோடிக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவாக்கிய தீர்வுகள் நமக்கு இன்னும் பல பாடங்களை கற்றுத் தருகின்றன.

உதாரணமாக, கரையான் புற்றுகள் மிகக் குறைந்த ஆற்றலை பயன்படுத்தி உள்ளே காற்றோட்டத்தையும் குளிர்ச்சியையும் பராமரிக்கின்றன. இதை ஆராய்ந்த மனிதன், இயற்கையை பின்பற்றி நிலையான கட்டிட வடிவமைப்புகளை உருவாக்கினான்.

அதேபோல், மீன்கொத்தியின் அலகு வடிவம் தண்ணீரில் வேகமாக நுழையும் போது ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு அதிவேக ரயில்களின் வடிவமைப்பும் மேம்படுத்தப்பட்டது.


இதனால் இயற்கை என்பது வெறும் வளங்களை தரும் இடம் மட்டுமல்ல; அது நமக்கு அறிவையும் ஞானத்தையும் வழங்கும் ஒரு ஆசிரியர்.

ஆனால் இயற்கை நமக்கு கற்றுத் தருவது மட்டுமல்ல, சில நேரங்களில் நம்மை பாதுகாக்கவும் செய்கிறது.

2004-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் சுனாமி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. நவீன கருவிகள் கடலின் ஆழத்தில் ஏற்பட்ட மாற்றங்களை உடனடியாக உணர முடியாத நிலையில், இயற்கையுடன் நெருக்கமாக வாழ்ந்த சில பழங்குடி சமூகங்கள், கடலின் பின்வாங்கல், விலங்குகளின் அசாதாரண நடத்தை, இயற்கையின் மாற்றமான ஒலிகள் போன்ற அறிகுறிகளை கவனித்து ஆபத்தை உணர்ந்தனர்.

அவர்களின் தலைமுறை அனுபவ அறிவு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர உதவியது.


மனித அறிவும் இயற்கை அறிவும் இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டியதன் அவசியத்தையும் பகரும் ஒரு எடுத்துக்காட்டு இந்நிகழ்வு. நவீன அறிவியல் கருவிகள் இயற்கையின் மாற்றங்களை அளவிட உதவுகின்றன; ஆனால் இயற்கையோடு நீண்ட காலம் வாழ்ந்த சமூகங்களின் பாரம்பரிய அறிவு, அந்த மாற்றங்களை உணர்ந்து கொள்ளும் நுண்ணுணர்வை வழங்குகிறது.

இயற்கை நமக்கு வெறும் பாடங்களை மட்டும் கற்பிப்பதில்லை; அது நம்மை பாதுகாக்கும் ஒரு உயிருள்ள அமைப்பு. அதை கேட்கவும், புரிந்துகொள்ளவும் கற்றுக்கொண்டால், இயற்கையின் ஞானமும் மனிதனின் அறிவியலும் இணைந்து எதிர்காலத்தை பாதுகாக்க முடியும். 


பழங்குடி அறிவு அமைப்புகள் ஆதிக்கத்திலிருந்து கூட்டுறவுக்கும், சுரண்டலிலிருந்து பகிர்வுக்கும், துண்டிக்கப்பட்ட பார்வையிலிருந்து முழுமையான புரிதலுக்கும், தனிமனித மையத்திலிருந்து சமூக மையத்திற்கும் நம்மை அழைத்துச் செல்கின்றன. இது தமிழருக்கு புதிதான சிந்தனை அல்ல; அள்ளித்தந்த பூமியை அன்னையாகவும், சொல்லித்தந்த வானத்தையும் தந்தையாகவும் பார்த்த மரபில் வந்தவர்கள் தமிழர்கள்.

சங்க இலக்கியத்தில் வெளிப்படும் 'திணை சிந்தனை'யின் தொடர்ச்சியே இந்த சிந்தனை என்கிறார் ஆசிரியர். நிலம், காலம், உயிர்கள், மனித உணர்வுகள் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் அந்த வாழ்வியல் பார்வை, இன்று உலகம் எதிர்கொள்ளும் சூழலியல் சிக்கல்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும் என்பதை ஆசிரியர் இந்தபுத்தகத்திலும் நிறுவுகிறார்.

ஆசிரியரின் முந்தைய நூலான “திணையியம்” வரலாற்று ஆதாரங்கள், சங்க இலக்கிய சான்றுகள் மற்றும் உலகின் மெய்யியல் கோட்பாடுகளோடு தமிழரின் சிந்தனையை ஒப்பிட்டு, ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் ஒழுகலாறை விளக்கும் ஒரு ஆழமான ஆய்வு நூலாக அமைந்திருந்தது. அந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் கனமான சிந்தனைகளை சுமந்திருந்தது. ஒவ்வொரு வரியும் புதிய கேள்விகளை எழுப்பி, வாசகனை சிந்தனையின் ஆழத்திற்கு அழைத்துச் சென்றது.

ஆனால் இந்த நூல் வேறொரு தன்மை கொண்டது. இது வாசிப்பதற்கு எளிதானது; ஆனால் சிந்தனையில் ஆழமானது. இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் கேட்க மறந்த இயற்கையின் குரலை ஆசிரியர் நமக்குக் கேட்க வைக்கிறார். அதன் பரிபாஷைகளை நமக்கு புரிய வைக்கிறார். நாம் புறக்கணித்த அந்தக் குரல் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கான பதில்களையும், நாளை எதிர்கொள்ளப்போகும் சவால்களுக்கான விடைகளையும் பகன்று கொண்டிருப்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.

ஆசிரியரின் எழுத்துகளில் ஒரு தனித்தன்மை தெரிகிறது. அவர் மனிதர்களிடம் உரையாடியதை விட இயற்கையிடம் அதிகம் உரையாடியிருக்கிறார் என்பதை புத்தகத்தின் ஒவ்வொரி வரியிலும் நாம் உணர முடிகிறது. இயற்கை அவரிடம் தனது ரகசியங்களைப் பகிர்ந்திருக்கிறது; தனது மகிழ்ச்சியையும், வேதனையையும்,  எச்சரிக்கைகளையும் அவரிடம் வெளிப்படுத்தியிருக்கிறது. அந்த உரையாடலை மிக எளிய மொழியில் இந்த புத்தகத்தில் நமக்குக் கடத்தியிருக்கிறார் ஆசிரியர். அதுமட்டுமல்லாமல் நம்மையும் இயற்கையோடு உரையாடத் தூண்டுகிறார் ஆசிரியர்.

இயற்கையோடு கொண்ட உறவிலிருந்தே உண்மையான அறிவு பிறக்கிறது என்பது ஆசிரியரின் எழுத்துகளின் அடிப்படைச் செய்தியாக உள்ளது. இயற்கை என்பது வெறும் வளங்களின் களஞ்சியம் அல்ல; அது ஒரு உயிருள்ள ஆசிரியர். அது மனிதனுக்கு தகவலை மட்டும் வழங்குவதில்லை; வாழ்வதற்கான ஞானத்தையும் வழங்குகிறது என்பதை தனது நூன்முகத்திலேயே தெளிவுபடுத்திவிடுகிறார் ஆசிரியர்.

மனிதனின் ஆறாம் அறிவும் அறிவியல் முன்னேற்றங்களும் பல சிக்கல்களைத் தீர்த்துள்ளன. ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவான இயற்கையின் தீர்வுகள் இன்னும் ஆழமான அறிவையும், சமநிலையையும், நிலைத்த வாழ்விற்கான ஞானத்தையும் நமக்கு கற்றுத் தருகின்றன.

இயற்கையை வெல்ல வேண்டிய ஒன்றாக அல்லாமல்; புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாக, இணைந்து வாழ வேண்டிய ஒன்றாகப் பார்க்கும் பார்வையை நமக்கு உணர்த்துவதே  இந்த நூலின் நோக்கமாக நான் புரிந்து கொள்கிறேன்.

 
அறிவு என்பது கட்டுப்படுத்த விரும்புகிறது ஆனால் ஞானம் என்பது இணைந்து வாழ கற்றுக் கொடுக்கிறது. அந்த ஞானத்தை பெற நாம் இயற்கையோடு உரையாட வேண்டும். இயற்கையின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். மண்ணின் மொழியை மனிதன் மறந்த நிலையில் மீண்டும் இயற்கையுடன் உரையாட துவங்கும் சிறு முயற்சியே இந்த நூல் என்கிறார் ஆசிரியர். 

எனவே சக மனிதர்களின் மொழியை கற்றுக் கொள்வதை விட, தேவ பாஷைகளை படிப்பதை விட, கணினி மொழிகளை மனனம் செய்வதை விட, இயற்கையின் மொழியை நாம் முதலில் புரிந்து கொள்ளத் துவங்க வேண்டும். அந்த இயற்கையின் குரலை புரிந்து கொள்ள எண்பதே பக்கங்களைக் கொண்ட இந்த சிறு புத்தகம் நமக்கு மிகவும் அழகாக  வழிகாட்டுகிறது. 



No comments:

Post a Comment

இயற்கையின் குரல் - புத்தகத் திறனாய்வு

ஒரு மொழியை கற்பதற்கு இதுவரையிலும் நாம் பல புத்தகங்களை படித்திருப்போம்.  நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு அது போன்றதொரு புத்தகத்தை படித்திருக்கிறே...