Sunday, July 19, 2026
ஆதியோகி - ஆங்கில பேட்டியின் மொழிபெயர்ப்பு
Thursday, July 9, 2026
உணவு எந்திரம்
“கொக்கரக்கோ…”
அலாரத்தின் சேவல் குரல் கேட்டு முருகன் கண் விழித்தான்.
“பாட்டி, எத்தனையோ அழகான பாடல்கள் இருக்கும்போது ஏன் இந்த வித்தியாசமான சத்தத்தை அலாரமா வைச்சிருக்க?” என்றான் சோம்பல் முறித்தபடி.
பாட்டி புன்னகைத்தாள். “ இது ஒரு பறவையின் குரல். அந்த காலத்தில் இந்தப் பறவைதான் எங்களை எழுப்பும். மிருகக்காட்சிசாலையில் தலையில் கொண்டை வைத்த பறவை ஒன்றை பார்த்தியே… அதன் குரல் தான் இது .”
முருகன் உடனே Food App-ஐ திறந்து, பிரீமியம் செக்ஷனுக்குப் போனான். அங்கு “Heritage lab meat” என்னும் வார்த்தைகள் பளிச்சென்று இருந்தது.
அதில் பறவை மாமிசம் என்னும் பிரிவின் பிரீமியம் பகுதியில் அந்த சேவல் படம் இருந்தது.
அந்த அட்டவணையின் கடைசியில் இருந்தது Standard Protein Tissue. அதுதான் அவர்கள் வழமையாக உண்ணும் இறைச்சி.
அதன் கீழ் இவ்வாறு அச்சிடப்பட்டிருந்தது
Protein: 24 g
Fat: 8 g
Zero pathogens
முருகன் ப்ரீமியம் கேட்டகிரியின் கீழ் இருந்த சேவலின் படத்தை கிளிக் செய்தான்.
Original Aseel flavour
Omega-3 Enriched
Micronutrient Edition
Heritage Nutrition Series
Natural Myoglobin Premium
என்று புரியாத வார்த்தைகளில் அதன் கீழ் எழுதியிருந்தது.
அந்த மாமிசத்தின் விலை ஒரு நடுத்தரக் குடும்பத்தின் மாதச் சம்பளத்தைவிட அதிகம்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது முருகன் அவனது தந்தையிடம் அதை வாங்கச் சொல்லி கேட்பான். அவனது அப்பா எப்பொழுது கேட்டாலும் கூறும் அதே பதிலை மந்திரம் போல் திரும்ப உச்சரிப்பார்.
"அடுத்த தீபாவளிக்கு வாங்கலாம்..."
தீபாவளி ஆண்டுதோறும் வந்தது; ஆனால் அந்த உணவு அவர்களது மேசைக்கு ஒருபோதும் வந்ததில்லை.
சேவலின் படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த முருகனின் தலையை பாட்டி மெலிதாக கோதிவிட்டபடி பேசத் தொடங்கினார், " முன்பு இந்த கிராமம் பசுமையாக இருந்தது, எங்களின் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு மாடாவது இருந்தது."
"உண்மையான மாடா?" என்று ஆச்சரியத்துடன் முருகன் கேட்டான்.
"ஆமாம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மாடு. சில கோழிகள். குறைந்தபட்சம் இரண்டு ஆடுகள்."
பாட்டி ஜன்னலுக்கு வெளியே பரந்து விரிந்திருந்த பழுப்பு நிற நிலப் பகுதியைக் காட்டினாள்.
"அங்கே ஓர் சிற்றோடை ஓடிக் கொண்டிருந்தது, அதில் பூவரச மரத்தின் பூக்கள் மிதந்து கொண்டிருந்தன. அதன் அருகே இருந்த வரப்பின் மீது பசுமையான புற்கள் இருந்தன. அதன் மீது வெறும் கால்களுடன் நாங்கள் நடப்போம். நடக்கும் போது பாதத்தின் மீது ஜில்லென்று பனித்துளிகள் படும் உணர்வு மிகவும் அலாதியானது."
பேசிக்கொண்டே நானும் பாட்டியும் காய்ந்து கிடந்த அந்த நிலத்தினை அடைந்தோம்.
"ஒரு காலத்தில் இந்த மண்ணுக்கு உயிர் இருந்தது ."
"அதன் பின்னர் என்ன ஆனது?"
"மக்கள் கால்நடைகளை வளர்ப்பதை நிறுத்திவிட்டார்கள். விலங்குகள் இல்லாமலேயே இறைச்சி தருகிறோம் என்று ஆய்வகங்கள் வாக்குறுதி கொடுத்தபோது, மக்கள் தங்கள் மாடுகளையெல்லாம் விற்றுவிட்டார்கள். மாடுகள் மறைந்த பிறகு சாணம் இல்லாமல் போனது. உரமாகும் மக்கும் பொருட்கள் இல்லாமல் போனது."
"மண்புழுக்கள் மறைந்துபோயின.சாண வண்டுகள் காணாமல் போயின."
" மண்ணின் பசிக்கு உணவு இல்லாமல் போனது.மண் செயலிழக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் விளைச்சலில் எந்தக் குறையும் தெரியவில்லை. அதன் பின்னர் தொழிற்சாலைகள் இரசாயன உரங்களைத் தயாரித்தன."
" பின்னர் மேலும் அதிகமாக மண்ணில் உரம் இடப்பட்டது.
அதன்பிறகு இன்னும் வீரியமான உரங்கள்...
பயிர்கள் வளர்ந்தன...
ஆனால் அவற்றின் கீழிருந்த மண் மெதுவாக உயிரை இழந்தது. கடைசியில் இந்த மண் வெறுமனே செடியை தாங்கி நிற்கும் ஒரு ஜடப் பொருளாக மாறியது; "
"நான் சிறுமியாக இருந்தபோது, உன் கொள்ளுத்தாத்தா கோழிகளை வீட்டுத் தோட்டம் முழுவதும் சுதந்திரமாகச் சுற்றவிடுவார். அவை பூச்சிகளைத் தின்றன...மண்ணைக் கிளறின... எச்சமிட்டன."
"எங்கள் தோட்டக் காய்கறிகளின் சுவை மிக அலாதியாக இருந்தது. முட்டைகளின் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தன. பண்டிகையின் போது சமைக்கப்படும் கோழியின்..."அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.
"அது சமைக்கும்போது வீசிய மணம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. உணவோடு சேர்த்து எனது அன்னை அன்பையும் பரிமாறினாள்... நான் இருக்கும் இதே பூமி உயிர்களாலும் அன்பாலும் இணைந்து பிணைந்து இருந்தது. "
"உனது கொள்ளுத் தாத்தாவிடம் பெரிதாக பணப்புழக்கம் இருந்ததில்லை. இருப்பினும் நாங்கள் இப்பொழுதைக் காட்டிலும் அப்போது திருப்தியாக உண்டோம். மகிழ்ச்சியாக இருந்தோம். எங்களுக்குத் தேவையான அனைத்தும் எங்களைச் சுற்றி இருந்தது."
"அப்போது யாரும் ஒமேகா–3 பற்றி பேசியதில்லை ."
"செலினியத்தின் அளவை யாரும் கணக்கிடவில்லை."
"வைட்டமின் K₂ எவ்வளவு இருக்கிறது என்று யாரும் அளக்கவில்லை."
"உயிருள்ள மண்ணிலிருந்து வந்த உணவைச் சாப்பிட்டோம். அவ்வளவுதான்."
"மனித உடலுக்குத் தேவையான அனைத்தும் அதில் இருந்தன.
ஆனால் இப்பொழுது நாம் உண்ணும் உணவில், மருத்துவர்கள் தொடர்ந்து புதிய ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கின்றனர்.
இயற்கை, மனிதனால் இன்னும் கண்டறிய முடியாத எண்ணற்ற நன்மைகளை நமக்கு வழங்கிக் கொண்டிருந்தது. அது நமக்கு வழங்கியதை எந்த ஒரு தொழிற்சாலையாலும் ஈடு செய்ய முடியாது." பேசிக்கொண்டே பாட்டி ஒரு கைப்பிடி உலர்ந்த மண்ணை எடுத்தாள்.
" நாம் இழந்தது வெறும் உயிரினங்களை மட்டுமல்ல... நம்மை உயிரோடு வைத்திருந்த சூழலையும் இழந்து விட்டோம். " என்று கூறியபடி அவள் மண்ணை விரல்களுக்கிடையே நசுக்கினாள்.
" கால்நடைகள் உணவை மட்டும் உற்பத்தி செய்ததாக நாம் நினைத்தோம். உண்மையில் அவை உயிர்ப்பு மிக்க மண்ணை உருவாக்கிக்கொண்டிருந்தன."
"மண் உயிரை இழந்தபோது... அனைத்தும் நம் கையை விட்டுச் சென்று விட்டது ."
அவள் கையில் இருந்த மண் தூளாக உதிர்ந்து காற்றில் கலந்தது.
ஐயா பாமயன் எழுதிய 'உணவு எந்திரம் ' புத்தகத்தை படித்த தாக்கத்தால் எழுதிய கதை இது. இயற்கையின் சுழற்சி முறையைப் புறந்தள்ளி, நேர்கோட்டு வளர்ச்சியே உண்மையான முன்னேற்றம் என்று உலகை நம்பவைக்கும் கார்ப்பரேட் அமைப்புகளின் அடுத்த இலக்கு... தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மாமிசமும் பாலும்.
பற்பசை, சோப்பு போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில் தொடங்கி நம் தற்சார்பை நாம் ஏற்கனவே நமது வாழ்வியலில் பெரும் அங்கு இழந்துவிட்டோம். ஆனால் உணவின் தற்சார்பை இழப்பதே நம் சமூகத்தின் மீது விழவிருக்கும் மிகப் பெரிய இறுதி அடியாக அமையக்கூடும்.
"உயிர்களைக் கொல்லாத மனிதநேயம்", "உணவுப் பாதுகாப்பு", "சுற்றுச்சூழல் பாதுகாப்பு", "மீத்தேன் உமிழ்வைக் குறைத்தல்" போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களால் அலங்கரிக்கப்பட்ட ஜிகினா காகிதத்தில் சுற்றி, சந்தைக்குள் நுழையக் காத்திருப்பவை செயற்கை இறைச்சியும் செயற்கை பாலும். இவ்வாசகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதையும், அதன் சமூக, பொருளாதார, வேளாண் விளைவுகளையும் இந்த நூல் ஆழமாக ஆராய்கிறது.
தற்போதைய பால் மற்றும் மாமிச உற்பத்தி, அவற்றின் பயன்பாடு, செயற்கை மாற்றுகளால் சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள், கால்நடை வளர்ப்பிலும் வேளாண்மையிலும் நிகழக்கூடிய மாற்றங்கள், சுற்றுச்சூழலின் மீதான விளைவுகள் ஆகிய அனைத்தையும் அறிவியல் ஆதாரங்களுடன் விரிவாக அலசுகிறது இந்த நூல்.
இது விவசாயிகளுக்கான நூல் மட்டுமல்ல. அறிவியலாளர்கள், கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணையாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், பால் கூட்டுறவுச் சங்கங்களைச் சார்ந்தவர்கள், கொள்கை வகுப்போர், மேலும் உணவு குறித்து அக்கறை கொண்ட ஒவ்வொரு நுகர்வோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
வேப்பங்குச்சியிலிருந்து மண்பானை வரை நம் கைகளிலிருந்து நழுவிச் சென்றவற்றின் பட்டியலில், உணவும் சேர்ந்துவிடக் கூடாது. கார்ப்பரேட்டுகளின் ஆக்டோபஸ் கரங்கள் நம் உணவுத் தட்டை முழுமையாக ஆக்கிரமிப்பதற்கு முன்பே, அந்த ஆபத்தை வெளிச்சமிட்டுக் காட்டிய ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த நூல் அதிகமான வாசகர்களைச் சென்றடைய வேண்டும். அது ஒரு புத்தகத்தின் வெற்றி மட்டுமல்ல; நமது உணவுச் சுதந்திரத்தைப் பற்றிய ஒரு முக்கியமான சமூக உரையாடலின் தொடக்கமாகவும் அமையும்.
ஆசிரியர்: பாமயன் Pamayan
வெளியீடு: தாளாண்மை
விலை: ரூ. 120/-
தொடர்புக்கு:
செகதீசன் கிருஷ்ணன்
9842048317
Monday, July 6, 2026
ஏர் முன்னது எருது 12 - பித்தம்
இந்தப் பட்டாம்பூச்சி ஏன் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது?
சூடு கொண்ட உடலாக இருப்பதன் பயன் என்ன?
உடல் சூடு எங்கிருந்து பெறப்படுகிறது?
அடுப்பு எரிப்பது போல் உடலுக்குள் ஏதேனும் தகனம் நடக்கிறதா?
--------
"உந்துவளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
செந்தீ சுடரிய ஊழியும்
பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும்."
— பரிபாடல்
நமது முன்னோர்கள் இயற்கையை ஐம்பூதங்களின் அடிப்படையில் புரிந்துகொண்டனர்.
ஐம்பூதங்கள் :
விலகி அசைவது காற்று; கரைத்து எடுத்துச் செல்வது நீர் ; அனைவரையும் தாங்குவது நிலம்; பரந்து விரிந்தது ஆகாயம்; ஆற்றலை வெளிப்படுத்துவது நெருப்பு.
இந்த மாற்றங்கள் அனைத்தின் மையத்தில் இருப்பது வெப்பமாகும். விதை முளைப்பதிலிருந்து நட்சத்திரங்கள் ஒளிர்வது வரை, செல்களில் உள்ளே நடக்கும் வேதிவினைகளிலிருந்து புவியியல் நிகழ்வுகள் வரை வெப்பத்தின் பங்கு உள்ளது.
நெருப்பை கட்டுப்படுத்தி பயன்படுத்தக் கற்றது முதல்தான் மனித இனம் தனது முன்னேற்றத்தைத் தொடங்கியது.
நெருப்பு உணவைச் சமைத்தது; நோய்க்கிருமிகளை அழித்தது; இருளை அகற்றியது; குளிரிலிருந்து பாதுகாத்தது; உலோகங்களை உருக்கியது.
வெப்பம்:
இதே வெப்பம் தான் உயிரினங்களின் உடலிலும் இடைவிடாமல் செயல்படுகிறது. நாம் உண்ணும் உணவானது உடலில் வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு ஆற்றலாக மாறுகிறது. இந்த வளர்சிதை மாற்றங்களின் போது உருவாகும் வெப்பம் தான் நமது உடலின் செயல்பாடுகளை நடத்துகிறது. இதயத்தின் துடிப்பு, தசைகளின் இயக்கம், செரிமானம், போன்ற அனைத்திற்கும் வெப்பம் மிகவும் அவசியம். எனவே நமது உடல் வெப்பத்தை தொடர்ந்து உருவாக்கி, பயன்படுத்தி, கட்டுப்படுத்தும் ஒரு இயக்கமிகு அமைப்பாகும்.
உடலுக்குள் நடக்கும் வளர்சிதை மாற்றங்கள் வெப்பத்தை உருவாக்குகின்றன; குருதியானது அந்த வெப்பத்தை அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கிறது. அதிகப்படியான வெப்பத்தை உடலானது மூச்சு, வியர்வை போன்றவற்றின் மூலம் வெளியேற்றுகிறது. இவ்வாறாக வெளிப்புற சூழலுக்கு ஏற்ப உடல் தனது வெப்பநிலையை தொடர்ந்து சரிசெய்துக்கொள்கிறது. இந்த சமநிலையே உயிர் வாழ்வின் அடிப்படையாகும்.
உடலின் வெப்பத்தைத் தாமாகவே உருவாக்கும் திறன் விலங்குகளின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான முன்னேற்றமாகும். தவளைகள் போன்ற இருவாழ்விகள், மீன்கள், பெரும்பாலான ஊர்வன மற்றும் பெரும்பாலான பூச்சிகள் சுற்றுப்புற வெப்பத்தையே சார்ந்து வாழ்கின்றன. இதனால் அவற்றிற்கு குறைந்த உணவே போதுமானதாக இருக்கிறது; எனவே அவற்றால் நீண்ட நாட்கள் உணவின்றி உயிர்வாழ முடியும். ஆனால் குளிரான சூழலில் அவற்றின் தசைகள் - நரம்புகள் போன்றவற்றின் செயல் வேகம், செரிமானம் மற்றும் உடலின் அனைத்து செயல்பாடுகளும் மந்தமடைகின்றன. அதனால் அவை குறைவாக நகரும், அவற்றின் வேட்டையாடும் திறனும் குறையும், இனப்பெருக்கமும் வளர்ச்சியும் மெதுவாகும்.
தவளைகள் குளிர்காலத்தில் சுறுசுறுப்பை இழக்கின்றன; பல்லிகள் வெயிலில் காய்ந்து உடல் வெப்பத்தை உயர்த்திக்கொள்கின்றன; பெரும்பாலான மீன்களின் நீந்தும் வேகமும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்தே அமைகிறது. பூச்சிகளும் குளிர் இரத்தப் பிராணிகளே; இருப்பினும் தேனீக்கள், வண்டுகள் போன்ற சில பூச்சிகள் பறப்பதற்கு முன் தங்களின் பறக்கும் தசைகளை அதிரவைத்து தற்காலிகமாக வெப்பத்தை உருவாக்குகின்றன.
வேகமாக நீந்தும் சில சுறாக்கள் உடலின் சில பகுதிகளை சுற்றுப்புற நீரை விட வெப்பமாக வைத்துக்கொள்ளும் திறனை பரிணாம வளர்ச்சியில் பெற்றன.இதன் காரணமாக அவற்றால் குளிர்சூழலில் அதிகம் நகராமலிருந்த மற்ற உயிரினங்களை எளிதாக வேட்டையாட முடிந்தது.
இதற்கு மாறாக, பறவைகளும் பாலூட்டிகளும் அதிக வளர்சிதை மாற்றத்தின் மூலம் உடலின் வெப்பத்தை எப்போதும் நிலையாக வைத்திருக்கின்றன. இதனால் அவற்றின் தசைகள் வேகமாகச் செயல்படுகின்றன; நரம்புத் தகவல்கள் விரைவாகக் கடத்தப்படுகின்றன; செரிமானமும் நோய் எதிர்ப்பும் திறம்பட நடைபெறுகின்றன. எனவே பகல், இரவு, கோடை, குளிர்காலம் என்ற வேறுபாடின்றி தொடர்ந்து இயங்கி, வேட்டையாடி, நீண்ட தூரம் இடம்பெயர்ந்து, குட்டிகளைப் பராமரித்து, துருவப் பகுதிகளிலிருந்து பாலைவனங்கள் வரை பல்வேறு வாழிடங்களில் இவற்றால் வெற்றிகரமாக வாழ முடிகிறது. இதன் காரணமாகவே இவை வெப்ப இரத்தப்பிராணிகள் எனப்பட்டன.
இவ்வாறாக பரிணாமத்தில் இரண்டு வெற்றிகரமான உத்திகள் உருவாகின: குறைந்த ஆற்றலைச் செலவழித்து சுற்றுப்புற வெப்பத்தைச் சார்ந்து வாழும் குளிர் இரத்த முறை, மற்றும் அதிக ஆற்றலைச் செலவழித்தாலும் தொடர்ந்து உயர் செயல்திறனுடன் வாழ வழிவகுக்கும் வெப்ப இரத்த முறை.
பித்தம்:
இப்பொழுது நாம் சித்த மருத்துவம் கூறும் பித்தம் எனும் கருதுகோளைப் பற்றி பார்ப்போம்.
பித்தம், தூய தமிழில் 'அழல்' என்று அழைக்கப்படுகிறது. அழல் என்றால் சூடு என்று நாம் அறிவோம்.
உணவின் முதல் நோக்கம் எரிசக்தி. இதில் மாவுச்சத்தும் கொழுப்புச்சத்தும் எரிசக்தியை அடிப்படையாகக் கொண்டவை. புரதம் உடலின் கட்டுமானத்திற்கு உதவுகிறது, ஒரு நாளைக்கு ஒரு கிலோவிற்கு சராசரியாக 0.8 கிராம் புரதம் தேவைப்படுகிறது.
புரதத்தின் முதன்மை பணி கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு. ஆனால் தேவைக்கு அதிகமான புரதத்தை நாம் எடுத்துக்கொண்டால், அதன் அமினோ அமிலங்கள் உடைக்கப்பட்டு, மீதமுள்ள கார்பன் அமைப்பு எரிக்கப்பட்டு ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது.
அமினோ அமிலங்களில் இருக்கும் நைட்ரஜன் யூரியாவாக சிறுநீர் வழி வெளியே தள்ளப்பட்டு விடுகிறது. மீதம் இருக்கும் மூலக்கூறுகள் உடலுக்கு எரிசக்தியாக பயன்படுகிறது.
இந்த உடல் சூடு எவ்வாறு பெறப்படுகிறது என்பதை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வேதிவினை செயல்பாடு விளக்குகிறது. சர்க்கரை ஆக்சிஜனோடு வினைபுரிந்து கார்பன்டையாக்சைடாக உடைக்கப்பட்டு ஆற்றல் வெளியிடப்படுவதை இந்த வேதிவினை விளக்குகிறது.உணவை ஆற்றலாக எரிப்பதில் தகனமேடையாம் மைட்டோகாண்ட்ரியா தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பின்வரும் படத்தைக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.
நீங்கள் பட்டினியாய் இருக்கும் போது glycogen அதன் பின்பு கொழுப்பு முதலியன தகனமேடையாம் மைட்டோ கான்ட்ரியாவில் எரிக்கப்பட்டு, ஆற்றலாம் அழலை உற்பத்தி செய்து, உடல் சூட்டைப்பேணுகின்றன.
ஒரு கிராம் கார்ப், அல்லது ஒரு கிராம் புரதம் எரிக்கப்படும் போது 4 கிலோ கலோரி ஆற்றல் பெறப்படுகிறது. ஆனால் ஒரு கிராம் கொழுப்பை எரித்தால் 9 கிலோ கலோரி ஆற்றல் கிடைக்கிறது. சிறுகுடலில் கணைய மற்றும் பித்த நொதிகள் துணையுடன் தான் ஆற்றல் மூலக்கூறுகள் பிரித்து உறிஞ்சப்பட்டு பின் தகனம் நடக்கிறது. எனவே மேற்கூறிய நொதிகள்தான் தகனத்தின் அடிப்படை. ஆதலால் அழலில் குறியீடாக பித்தம் குறிக்கப்பட்டிருக்கிறது எனலாம்.
உணவானது உணவுப் பாதையில் பயணிக்கும் பொழுது சிறு குடலுக்கு அருகில் மஞ்சள் நிற திரவம் கலக்கிறது என்பதை பிணங்களை அறுத்து ஆய்வு செய்தால் யார் வேண்டுமானாலும் கண்டுபிடித்து விடலாம். வெள்ளை நிற பரோட்டா வாய் வழியாக சென்று பின்னர் மஞ்சள் நிற மலமாக வெளியேறுவதற்கு அந்த மஞ்சள் நிற திரவமே காரணம் என்பதை எளிதாக அறிந்து விடலாம். இதை அக்காலத்தில் தமிழர்கள் கண்டுபிடித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஆனால் சித்தர்கள் எனப்பட்டவர்கள் எந்தெந்த உணவுகளை உண்டால் பித்தம் அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அந்த உணவுகளில் ஐந்து பூதங்களின் எவற்றின் சாராம்சம் மிகுந்து இருக்கிறது என்பதையும் பகுத்து இருக்கிறார்கள். எந்தெந்த சுவை பித்தத்தை தூண்டும் என்பதையும் கண்டறிந்து இருக்கிறார்கள். இங்குதான் சித்த மருத்துவம் ஒரு மேம்பட்ட அணுகு முறையை கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது.
நவீன அறிவியல் 'குறைப்பியம்' என்னும் முறையை கையாள்கிறது. இது பகுப்பாய்வை ஊக்குவிக்கிறது. 'பகுப்பாய்வு அறிவியல்' அனைத்தையும் எந்திரத்தின் பகுதிகளாக பார்க்கச் சொல்கிறது. அது உடலையும் எந்திரமாகத் தான் பார்க்கிறது.
அது உடலின் ஒவ்வொரு பகுதியையும் நுணுக்கமாக ஆராய்கிறது. ஆனால் சித்த மருத்துவம் உடலை முழுமையான ஒன்றாக அணுகுகிறது. எதையும் குறைக்காமல் விளக்காமல் முழுதாக அணுகும் முறைக்கு 'முழுமை' - wholeness என்று பெயர்.
சித்த மருத்துவம் உடலையும், உணவையும், உலகையும் ஐம்பூதங்களின் கலவையாகத்தான் பார்க்கிறது. அண்டத்தில் இருப்பதைக் கொண்டு வளர்ந்த உயிர் மற்றும் உணர்வினை கொண்ட பூதமாகத்தான் உடல் இருப்பதாக சித்த மருத்துவம் கருதுகிறது.
"உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும்
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும்
அவ்வவ் பூத வழி அவை பிறக்கும்- மணிமேகலை"
அந்த உடலில் இருக்கும் மூன்று குற்றங்களில் ஒன்றான அழலைப் பற்றித்தான் நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சூரியன் உற்பத்தி செய்த அதே வெப்பம் தான்; செடிகள் வழியாக உங்களை அடைந்து உங்கள் உடலில் அழலாக இருக்கிறது.
அழல் செரிமானத்தோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. நொதிகள் மற்றும் ஹார்மோன்கள் உதவியுடன் உணவை செரித்துப்பெறப்படும் ஆற்றலே அழல் எனப்படுகிறது. எனவே உணவை ஆற்றலாக மாற்றும் முழு மாற்றச்செயலின் குறியீடாக பித்தத்தை பார்க்கலாம்.
நாமெல்லாம் வெப்ப இரத்தப் பிராணிகள். நமது உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். அதற்குக் கீழே போனாலும் பிரச்சனை தான், மேலே போனாலும் பிரச்சனை தான்.
வெளியே பத்து டிகிரி குளிர் இருந்தாலும் உடல் எவ்வாறு முப்பத்தியேழு டிகிரியில் இருக்கிறது என்றால் தைராய்டு ஹார்மோன் தான் காரணம். உடலின் கொழுப்பையோ கிளைக்கோஜன் போன்ற சர்க்கரை மூலக்கூறுகளையோ எரித்து; அது உடலின் வெப்பநிலையை நிலை நிறுத்துகிறது.
உடலின் வெப்பநிலையை நிலையாக வைத்திருப்பதில் தைராய்டு ஹார்மோன்கள் மட்டுமல்ல, உடலில் இருக்கும் ஒரு சிறப்பு கொழுப்பு திசுவும் (Brown fat – பழுப்பு கொழுப்பு) பங்கு வகிக்கிறது.
நாம் பொதுவாக கொழுப்பை உடலின் சேமிப்பு கிடங்கு என்று நினைக்கிறோம். ஆனால் பழுப்பு கொழுப்பு ஒரு சிறிய “அக்னிக்கூடு” போல செயல்படுகிறது. குறிப்பாக குளிர்ச்சியான சூழலில், இது சேமித்து வைத்துள்ள கொழுப்பை எரித்து வெப்பத்தை உருவாக்குகிறது.
நமது செல்களின் உள்ளே இருக்கும் மைட்டோகாண்ட்ரியா (Mitochondria) என்பவை உணவிலிருந்து கிடைக்கும் மூலக்கூறுகளை எரித்து ATP எனப்படும் ஆற்றலை உருவாக்கும் தகன மேடைகள் போன்றவை. ஆனால் பழுப்புக் கொழுப்பில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியாக்களில் ஒரு சிறப்பு செயல்முறை உள்ளது. இதற்கு “மைட்டோகாண்ட்ரியல் இணைப்பு தளர்வு” (Mitochondrial uncoupling) என்று பெயர்.இதன் மூலம் உடல் குளிரை எதிர்த்து தனது வெப்பநிலையை பாதுகாக்கிறது.
குளிரான சூழலை உணரும் போது, மூளையின் ஹைப்போதலாமஸ் அதனை உணர்ந்து, நரம்பு மற்றும் ஹார்மோன் வழியாக உடலுக்கு தகவல் அனுப்புகிறது. அதன் தொடர்ச்சியாக தைராய்டு ஹார்மோன்களும், பழுப்பு கொழுப்பின் செயல்பாடுகளும் அதிகரித்து, உடலின் “அழல்” நிலையை பராமரிக்க உதவுகின்றன.
இதுவே
இயற்கை உருவாக்கிய நுண்ணறிவு.
வெளியில் குளிர் இருந்தாலும், உள்ளே உள்ள நெருப்பு அணையாமல் காக்கும் அமைப்பு.
வெப்பம் ஆற்றலின் வெளிப்பாடு.
அதிக ஆற்றலை கொண்ட விலங்கே வனத்தில் வெற்றியாளராக கருதப்படும். அந்த ஆற்றலை உடலில் நிலை நிறுத்த பரிணாம வளர்ச்சியில் பல படிநிலைகளைத் தாண்டி தகவமைப்பை பெற்று இருக்கின்றன பாலூட்டி விலங்குகள்.
வனத்தில் விலங்குகளின் தேவை மூன்றே மூன்று தான்.
உணவு (Food)
இணை (Mate / Reproduction)
இருப்பிடம் (Shelter / Territory)
இந்தத் தேவைகளைப் பெறுவதற்கு விலங்குகள் பெரும்பாலும் வன்முறை அல்லது போட்டி (competition & aggression) மூலமே முயல்கின்றன. இதனால் இரண்டு முக்கிய உணர்ச்சி நிலைகள் உருவாகின்றன:
கோபம் / ஆக்ரோஷம் (Anger / Aggression) – எதிரியை எதிர்கொள்ள
பயம் / தப்பி ஓடல் (Fear / Flight) – ஆபத்திலிருந்து தப்பிக்க
ஆபத்தை எதிர்கொள்ளவும் சரி; தப்பி ஓடவும் சரி; உடல் அதிக ஆற்றலை கோருகிறது அதை நிகழ்த்த உடல் அதிகமாக தகனம் செய்யத் தொடங்குகிறது
ஆனால் மருத நிலத்தின் மனிதர்கள் சண்டையைக் கொண்டு எதையும் பெறுவதற்கான அவசியம் அற்றவர்கள். மருத நிலம் என்பது மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழும் சமத்துவ பூமி. அங்கே கோபம் வன்முறை முதலியவை அவசியமற்றது. வன்முறை என்பது மனிதன் எனும் சிந்திக்கத் தெரிந்த உயிரி சிந்தனையை மேற்கொள்ளாததின் வெளிப்பாடு.
ஆனால் நவீன மனிதனின் தேவைகள் நகரத்திற்குள் பல்வகையில் இருக்கின்றன இந்த கோபம் ஆக்ரோஷம் முதலியன பல வகைகளில் ஏற்பட இங்கே வாய்ப்புள்ளது
கோபம் (Acute Anger) → உடனடி உணர்ச்சி வெளிப்பாடு
வஞ்சம் (Chronic Resentment) → இருப்பு வைக்கப்பட்ட சினம்
சோகம் / ஆற்றாமை (Depression / Helplessness) → தீர்க்க முடியாத கோபத்தின் விளைவு
சினம் ஒரு சேர்ந்தாரைக் கொல்லி என்கிறார் வள்ளுவர்.அது உயிரியல் ரீதியாகவும் உண்மை. சினமும் அதை சார்ந்த மற்ற உணர்ச்சிகளும் சிம்பதட்டிக் நரம்பு மண்டலத்தை தூண்டி, உடலை தொடர்ந்து “உயர் ஆற்றல்” நிலையில் வைத்திருக்கின்றன.
கடுமையான பதட்டம் – அட்ரினலின் (Adrenaline / Epinephrine)
படபடப்பு மற்றும் பதட்டத்தின் போதும் நம்மை யாரேனும் திட்டும் போதும் சிம்பதட்டிக் நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது என்று பார்த்தோம்.
புலி முன் தோன்றுவது, முதலாளி “வேலையை விட்டு தூக்கி விடுவேன்” என்று மிரட்டுவது, அல்லது காதலி “என் கண் முன்னால் முழிக்காதே” எனக் கூறுவது, இவை அனைத்தும் உடலுக்கு உடனடி ஆபத்து சமிக்ஞையாகப் பதிவாகின்றன.
இவை அனைத்தும் நமக்கு பெரும் பதட்டத்தை தூண்டும். அப்போது சுரப்பது அட்ரினலின். அது ஒரு வனவாசியை வனத்தில் தப்புவிக்க செய்த ஒரு ஆதார செயல்பாடு. இது மில்லியன் ஆண்டுகளாக வன விலங்குகளை உயிர் பிழைக்க உதவிய அதே பழங்கால உடலியக்க முறை.
மில்லியன் வருடங்களாக உங்களை காப்பாற்றி வந்த இந்த ஹார்மோன்களுக்கு, உங்கள் முன்னால் நிற்பது காதலியா முதலாளியா என்றெல்லாம் தெரியாது. எப்படியேனும் உங்களின் உடலின் ஆற்றலை அதிகரித்து உங்களை அந்த ஆபத்தில் இருந்து தப்புவிக்க வைக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருக்கிறது.
மிதமான / நீடித்த பதட்டம் – கார்டிசோல் (Cortisol)
இது போன்ற பெரும் பதட்டம் மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறு சிறு பதட்டச் சூழலும் நமது வாழ்வில் அடிக்கடி நேருகின்றது.
காட்டில் இருக்கும் பொழுது சிறு புதரில் ஏற்படும் அசைவு ஒரு வனவாசியை ஓடச் செய்யவில்லை என்றாலும் வருவது 'புதருக்குள் இருப்பது புலியாக இருக்குமோ?' என்கின்ற சிறு பதட்டத்தை அவனுக்குள் தூண்டிவிடும்.
“என்ன தம்பி ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்குற” என முதலாளி சொல்வது, “என்ன ஒழுங்கா ரிப்ளை பண்ண மாட்டேங்குற”என காதலி சொல்வது - இவை அனைத்தும் மிதமான பதட்டத்தைத் தூண்டக்கூடியது. இந்த மிதமான பதட்டம் விரைவாக தப்புவிக்க செய்ய அல்லது சண்டையிடுவதற்கு உங்கள் உடலை தயார் செய்கிறது. சர்க்கரையையும் உப்பையும் குருதியில் அதிகப்படுத்துவதே இதன் வேலை.
இந்த மிதமான பதட்டத்தின் விளைவாக கார்டிகோ-ஸ்டீராய்டுகள் எனப்படும் ஹார்மோன்கள் அட்ரினல் சுரப்பியின் பட்டையிலிருந்து சுரக்கும். ஓடுவதற்குத் தேவையான குளுக்கோசை உடலில் அதிகரிப்பதும், உப்பின் மூலம் பிரஷரை அதிகரிப்பதும் இவற்றின் வேலை. உப்பானது இனிப்பை உடலுக்குள் அனுப்பும் வேலையை செய்கிறது. உப்பும் இனிப்பும் நட்பு சுவைகள்.
உப்பு நேரடியாக உடலில் வெப்பத்தை உருவாக்குவதில்லை. ஆனால் உடலின் நீர்–உப்பு சமநிலை, இரத்த அழுத்தம் மற்றும் செல்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த வகையில், உப்பு தனியாக “அழலை உருவாக்கும் பொருள்” அல்ல; மாறாக, உடலின் உள் சமநிலையை பராமரிக்கும் ஒரு துணை காரணியாக செயல்படுகிறது. உடலின் நரம்பு–ஹார்மோன் அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் போது, உயிர் இயக்கத்தை (metabolic activity) நிலைநிறுத்துவதில் பங்கு பெறுகிறது.
சித்தமருத்துவப் பார்வையில் கூறப்படும் “உப்பு அழலைத் தூண்டும்” என்ற கருத்தை, நவீன அறிவியல் மொழியில் பார்க்கும்போது, உடலின் திரவ சமநிலை, நரம்பு தூண்டல் மற்றும் மாற்றச்செயல் செயல்பாடுகளுடன் உப்பின் தொடர்பு இருப்பதாக புரிந்து கொள்ளலாம்.
சூழலானது குளிர்காணும் பொழுது; மூளையின் ஹைப்போதலாமஸ் அதை உணர்ந்து கொண்டு பிட்யூட்டரியிடம் அது தகவல் சொல்கிறது. பிட்யூட்டரி தைராய்டைத் தூண்டி உடலின் அழலை அதிகரிக்கிறது. நரம்பும் ஹார்மோனும் இவ்வாறு இணைந்து வேலை செய்வதை நியூரோ எண்டோகிரைன் செயல்பாடு என அறிவியல் அழைக்கிறது. நரம்பை வலுப்படுத்தும் கசப்பு பொருட்கள் இவ்வாறு நரம்பின் மூலம் அழலை உருவாக்குவதில் துணை புரிகின்றன.
எனவே உப்பு கசப்பு இரண்டுமே அழல் என்னும் பித்தத்தை தூண்டவல்லவை எனும் சித்த மருத்துவத்தின் கருதுகோள் அறிவியல் உண்மைகளுக்கு மிக அருகில் உள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது.
சிவன் உப்பு, சக்தி கசப்பு என்று பார்த்தோம். இவை இரண்டும் இணைந்து உயிர் வளர்ப்பன. உப்பு அதிகமானால் வரும் விஷக்காய்ச்சலுக்கு கசப்பே மருந்து. சிவத்தின் சூட்டை சக்தி தணிக்கிறது என இதை நம் மக்கள் உருவகமாக வர்ணித்தனர்.
இப்படித்தான் உப்பு அதிகரிப்பதால் வரும் அம்மை முதலிய நோய்களை வேப்பிலை மஞ்சள் போன்ற கசப்புகளின் துணையோடு நாம் வெற்றிக் கொண்டிருக்கிறோம். வெயில் காலங்களில் மாடுகளுக்கு வரும் கோமாரி நோயை இன்னும் தமிழகத்தின் பல இடங்களில் கசப்பு என்றுதான் அழைக்கின்றனர்.
தமிழர் பார்வையில் 'அழல்' என்பது வெறும் வெப்பநிலை அல்ல; உயிரை உருவாக்கும் ஆற்றல். அது காமத்தோடு தொடர்புடையது. பூப்படைதல் அந்த ஆற்றலின் எழுச்சி; திருமணச் சேர்க்கை அந்த ஆற்றலை ஒழுங்குபடுத்தி, குடும்பம் மற்றும் சந்ததியினூடாக சமூகத்திற்கு வழிநடத்தும் சடங்கு என்கிறார் brenda எனும் பிருந்தா அம்மையார்*(இவர் ஒரு கனடிய மானுடவியலாளர்).
அதாவது ஆவுடையோடு இணைந்து காமத்தீயை இலிங்கம் தணிக்கும் பொழுது, உடல் தானாக குளிர்ந்துவிடும். அதனால் தான் பருவம் எய்தும் நிகழ்வு 'சமைதல்' என்றும், திருமணச் சேர்க்கை நிகழ்வு, குளிர்விக்கும் பொருள்படும் 'சாந்திமுகூர்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது என்பது இவர் முன்வைக்கும் ஆய்வு முடிவுகள் ஆகும்.அழல் என்பது இவ்வாறாக நம் உடலைப்பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட அழல் மிகினும் குறையினும் உடலுக்கு நல்லதல்ல.
அழல் அதிகமானால் உடல் உருகிவிடும், அழல் குறைந்தால் உடல் பெருக்கும். இதன் காரணமாகத்தான் தைராய்டு குறைபாடு உள்ளவர்களின் உடல் குண்டாக இருக்கிறது. மேலும் அவர்களுக்கு உடல்சூடும் கம்மியாக இருக்கிறது.
ஆனால் அதிகரிக்கும் உடல் சூடு மூளையை பாதித்து வலிப்பை வரவைக்க வல்லது. பித்த நீர் உடலில் அதிகரித்தாலும் இறுதியில் மூளையை பாதிக்க வல்லது. இதுபோல உடலின் அழலை அதிகம் உடையவர்கள் உடலை சமநிலைப்படுத்த வேண்டி, ஒவ்வொரு பொருளையும் சுவைத்து உணர்ந்து, உடலை சமநிலைப்படுத்தி, சித்த மருத்துவத்தின் இந்தக் கொள்கைகளை கண்டறிந்திருக்க நிறைய வாய்ப்பு உள்ளது.
* Colour and Heat in South Indian Ritual. Brenda E.F. Beck. 1969 .
A qualitative study of adolescent girls' experiences of menarche and menstruation in rural Tamil Nadu, India. Int J Qual Stud Health Well-being. Gold-Watts A, Hovdenak M, Daniel M, Gandhimathi S, Sudha R, Bastien S. 2020
வாதம்
வாதம் கொழுப்போ, சர்க்கரையோ, அமினோ அமிலமோ எதுவாகிலும் அது உணவின் வழியாகவே உடலுக்குள் பெறப்பட்டது. இந்த ஆற்றல் மூலக்கூறுகள் ‘வளி’ எனு...
-
face book ல ஒரு மயில் பறக்குற போட்டோ போட்டுருந்தாங்க , அதுக்கு பல லைக் , பல share , அடப்பாவிங்களா மயில் பறக்...
-
வடநாட்டில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு வந்தது , நல்ல கல்லூரி , இயற்கை எழில் கொஞ்சும் இடம் , ஆனால் பாஷை புரியாது ,வாயினால் வில்லுவண்டி ஓட்ட...
-
என்னோட நண்பனை ஒரு மொக்கை figure ரோட வச்சு ஓட்டுவோம், அவள பத்தி பேசுனாலேயே நண்பனுக்கு B.P ஏறிடும் . ஒரு நல்ல ஞாயித்து கிழமை அன்று கா...