நெய்தல் நிலம்
காலம்: புதிய கற்காலம்
இடம்: காவிரியின் கழிமுகம்
“நம் மக்கள் தங்க நிரந்தர உணவு தரும் இடத்தினைத் தேடி இந்நிலப்பரப்பு முழுவதும் அலைந்தாயிற்று. இந்த எல்லைக்கு மேல் பரந்து விரிந்த நீர்ப்பரப்பு மட்டுமே உள்ளது. இதற்கு மேல் நிலமும் இல்லை. நாம் வாழ வழியும் இல்லை.”
“ஏன் நண்பா அப்படி சொல்கிறாய்? நாம் வாழ இங்கே வழியேதும் கிட்டாதா என்ன?”
“இந்த மணலைப் பார் நண்பா. பாலை நிலத்து மணற்துகள்கள் போலவே உள்ளது. இங்கு மரங்களும் வரப்போவதில்லை, நாம் வாழ்வதற்கு வழியும் கிடைக்கப்போவதில்லை.”
“இங்கே வேறு எந்த உயிரும் வாழவில்லையா என்ன? உன்னை சுற்றியுள்ள சூழலை கவனி நண்பா! கூட்டம் கூட்டமாய் பறவைகள் பல கூடிக் களிக்கின்றனவே, உன் கண்களுக்கு தெரியவில்லையா என்ன?”
நெய்தல் நிலம்
காலம்: புதிய கற்காலம்
இடம்: காவிரியின் கழிமுகம்
“நம் மக்கள் தங்க நிரந்தர உணவு தரும் இடத்தினைத் தேடி இந்நிலப்பரப்பு முழுவதும் அலைந்தாயிற்று. இந்த எல்லைக்கு மேல் பரந்து விரிந்த நீர்ப்பரப்பு மட்டுமே உள்ளது. இதற்கு மேல் நிலமும் இல்லை. நாம் வாழ வழியும் இல்லை.”
“ஏன் நண்பா அப்படி சொல்கிறாய்? நாம் வாழ இங்கே வழியேதும் கிட்டாதா என்ன?”
“இந்த மணலைப் பார் நண்பா. பாலை நிலத்து மணற்துகள்கள் போலவே உள்ளது. இங்கு மரங்களும் வரப்போவதில்லை, நாம் வாழ்வதற்கு வழியும் கிடைக்கப்போவதில்லை.”
“இங்கே வேறு எந்த உயிரும் வாழவில்லையா என்ன? உன்னை சுற்றியுள்ள சூழலை கவனி நண்பா! கூட்டம் கூட்டமாய் பறவைகள் பல கூடிக் களிக்கின்றனவே, உன் கண்களுக்கு தெரியவில்லையா என்ன?”
“ஆம், அவை கயல் உண்டு களித்து இருக்கின்றன. மீன் ஒரு அற்புத உணவாயிற்றே! குட்டைகளில் நாம் மூன்றுமுனை கொண்ட ஈட்டியால் குத்திப்பிடித்த மீன்களின் சுவையை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா என்ன?”
“இந்த மீன்களை நாம் ஏன் பிடித்துச் சுவைக்கக் கூடாது? அற்புத உணல்லவா அவை?’
“சுவைக்கலாம் தான், ஆனால் அலைகள் வீசும் கரையைத் தாண்டி, பறந்து சென்று மீன்பிடிக்க நமக்கு பறவைகள் போல் சிறகுகள் இல்லையே?”
“உண்மைதான். ஆனால் இந்த மீன்களை எப்படியேனும் பிடிக்கும் உபாயம் அறிந்தால், என்றுமே வற்றாத இந்த பரந்த குட்டையிலிருந்து நமக்கு வாழும் மட்டும் உணவு கிட்டும் அல்லவா? நாம் வேறெங்கும் உணவைத் தேடி அலைய வேண்டிய அவசியமும் இல்லையே”
“ஆனால் இந்த கடலுக்குள் நாம் எப்படி நீந்திச் செல்வது?”
“இதோ உன் அருகில் தேங்கியிருக்கும் இந்த நீரைப்பார். அதில் மிதக்கும் இந்த பூச்சிகளுக்கு இறகுகள் ஏதுமில்லை, அவை நீருக்குள் நீந்தவும் இல்லை. ஆனால் நீர்ப்பரப்பில் எவ்வளவு விரைவாக நகர்கின்றது பார்த்தாயா? நாமும் இதுபோல் மிதந்தாலே போதுமே.”
“அவற்றின் உடல்வாகு தக்கையைப் போல் மிதப்பதற்கு தக்கவாறு உள்ளது. நாம் இவ்வுடல் கொண்டு எவ்வாறு தக்கையைப் போல் மிதக்க முடியும்?”
“தக்கை போல் உடல்வாகு எதற்கு? தக்கை ஒன்றின் மேலேயே மிதந்து செல்லலாமே? அப்பூச்சியின் கால்களைப்போலே குச்சிகளைக் கொண்டு தக்கையை நகரச் செய்யலாமே?”
“மிதக்கும் தக்கையின் உதவியுடன் கடலில் செல்லலாம் தான், ஆனால் வற்றிய குட்டைகளில் மீன்களை மும்முனை சூலத்தால் எளிதில் பிடிக்க முடிந்தது. இந்த கடலின் அளப்பரியா நீரின் ஊடே செல்லும் மீன்களை எவ்வாறு பிடிக்க முடியும்?”
“அளப்பரியா காற்றின் ஊடே பறக்கும் பூச்சிகளை, சிலந்தி 'வலை' கொண்டு வடிகட்டி பிடிக்கவில்லையா? வா நண்பா வலை செய்து கடலை வடிகட்டி மீன் பிடிப்போம்.”
“அற்புத உபாயம். இதைப் பரீட்சை செய்துபார்க்க இந்த இடம் ஏற்றதல்ல. அலைகள் குறைவான பகுதியில் இவ்வுபாயத்தை முயற்சித்துப் பார்க்கலாம். அதோ அங்கே கடலின் ஓரம் உள்ள அந்தக் காடு அலைகளை ஆற்றிக்கொண்டிருக்கிறது. அங்கே மீன் வளமும் நிரம்ப உள்ளது. வா நண்பா அங்கிருந்து நாம் துவங்குவோம்.”
…. .. . …. …. .
"அது என்ன கடலில் அலைகளை ஆற்றும் காடு? காடு என்பது கடலில் சாத்தியமா? மரங்கள் உப்புநீரில் எவ்வாறு முளைக்கும்? "
முளைக்கும்.
அப்படிப்பட்ட நிலப்பரப்பு ஒன்றை பார்க்கலாமா நண்பர்களே?
சதுப்புநிலம் என்பது கடல்நீர் மற்றும் நன்னீர் ஆகிய இரண்டும் கலப்பதால் ஏற்படும் என்றும், இதில் சில குறிப்பிட்ட வகை தாவரங்கள் மட்டுமே வளரும் என்றும் நற்றிணை பதிவு செய்துள்ளது.
கடலிலிருந்து வான் முகந்த நீர் குறிஞ்சியில் மோதி, நதிகளாய் பெருகி, நிலத்தில் தவழ்ந்து, திரும்ப கடலைச் சேரும் நதிமுகத்துவாரத்தில் வீற்றிருக்கின்ற அலைகளை ஆற்றவல்ல காடுகளாகிய ‘அலையாத்திக்காடுகள்’. இவை கடலுக்கும் நிலத்துக்கும் இடையில் ஒரு பாலமாய் விளங்குகின்றன. இவை ஆர்ப்பரித்து வரும் அலைகளை அடக்கி வைக்கின்றன. இவை எல்லா நாடுகளிலும் இருப்பதில்லை நம்மைப்போல் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
இங்குள்ள மரங்களுக்கு மற்ற மரங்களைக் காட்டிலும் சில சிறப்பியல்புகள் உள்ளன. சவால்களுக்கு பயந்த சாதாரணமானவன் சராசரி மனிதனாய் இருக்கிறான். ‘ஜங்கில் புக்’ படம் பார்த்தோமே… தாய் தந்தை யாருமில்லா குழந்தை ஒன்று வனவிலங்குகள் துணையோடு சவால்களைச் சந்தித்து வளர்ந்ததல்லவா? அது போல சவால்களை உறுதியோடு சந்திப்பவன்தான் சரித்திரம் படைக்கிறான். இங்குள்ள மரங்களின் சிறப்புகளுக்கு காரணம் அவை இங்கு சந்திக்கும் சவால்கள்.
சவால் ஒன்று- கலங்கலான நீர்- மற்றும் நீரில் குறைந்த அளவே உள்ள பிராணவாயு.
தீர்வு: ஏரியல் வேர்கள். ஆலமரம் போன்று கிளைகளில் இருந்து இறங்கும் வேர்கள், ஒரு வலைப்பின்னலைபோல் நிலத்தில் பதிந்து, சல்லடை போல கலங்கல் நீரிலிருந்து நல்ல நீரை வடிகட்டுகின்றன, மேலும் வேர்களின் மூலம் அவை சுவாசிக்கின்றன.
சவால் 2- ஏறி இறங்கும் நீர்மட்டத்தில் விதைகள் மூழ்கி செத்துபோகும் அபாயம் .
தீர்வு: கூரிய ஈட்டி போன்ற வால் முளைத்த விதைகள். விதைகள் விழுந்தவுடன் கூர் முனை கொண்ட வால் மண்ணில் நங்கூரமிட்டுவிடும். விதை, நீரின் மேலே இருக்குமாறு ஒரு அமைப்பு.
.
பின்னர் மேல் உள்ள ஓடு கழன்று செடி முளைக்க ஆரம்பிக்கும், இது அவிசென்னா தாவர வகையில் உள்ள சிறப்பு.
மேலும் சிலவகைச் செடிகள் குறிப்பிட்ட அளவுவரை குட்டிச்செடிகளை தாய்ச்செடியிலேயே வளர விட்டு, நீர் மட்டத்திற்கு வெளியே மண்டையை நீட்டி வளரும் அளவுக்கு பெரிய பையனானதும், அவற்றை நீரில் வளர அனுமதிக்கும். அதாவது இது குட்டி போடும் வகை தாவர இனம்.
சவால் 3- அதிகப்படியான உப்பு நீர்.
தீர்வு: அதிகப்படியான உப்புநீரை சில இலைகளில் தேக்கி, அவற்றை பழுத்து விழச்செய்கின்றன.
அந்த இலைகள் மக்கி, ஒரு organic சூழ்நிலையை அந்த இடத்தை சுற்றி உருவாக்குகின்றன, அவை சின்னஞ்சிறிய உயிரினங்களை வசீகரிக்கின்றன. மேலும் காற்றில் இருக்கும் காரியமிலவாயுவானது இவ்வாறு மட்கும் இலைகள் மூலம் நிலத்திற்கு திருப்பி அளிக்கப்படுகிறது. எனவே இவ்வகை காடுகளை சிறந்த கார்பன் scrubber என்கின்றனர். சுரபுன்னை கண்டல் போன்ற மரங்கள் இருக்கும் காடுகள் வழியாக வேகமாக வரும் புயல் காற்று; வேர்ப்பின்னல்களுக்கும் செடிகளுக்கும் ஊடாக வரும்பொழுது, வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது. சுனாமி போன்ற பேரலைகளின் வேகமும் இவற்றால் குறைக்கப்படுகிறது.
மேலும் இங்குதான் கடலின் நுரையீரலாகக் கருதப்படும் பவளப்பாறைகள் அதிகம் உள்ளன. நாம் வெளியேற்றும் கரியமிலவாயுவில் 30% பவளப்பாறைகளால் தான் உறிஞ்சப்படுகின்றன. மேலும் கடலில் உள்ள உயிரினங்களில் கால்பங்கு இங்கு தான் வசிக்கின்றன. பல வகை உயிரினங்கள் இங்கு வசிப்பதால் பல வகை வேட்டையாடும் உயிரினங்கள் இங்கு உலாவும். அவற்றிடமிருந்து தப்பிக்க, மீன் குஞ்சுகள் அருகிலிருக்கும் அலையாதிக்காடுகளில் தஞ்சம் புகும். இங்கே அவை கிட்டத்தட்ட ஏழு மடங்கு பெரிதாக ஆன பின்னர்தான் பவளப்பாறைகளுக்குத் திரும்பும்.
படம்: வேட்டையாடி பறவைகள் நெருங்க முடியா வலைபின்னல் வேர்களுக்குள் மீன்குஞ்சுகள்.
படம்: மட்க்கிகொண்டிருக்கும் இலைகளால் ஒரு ஆரோக்கியமான organic சூழலில் மீன் குஞ்சுகள் .
அலையாத்திகாடுகள் இருக்குமிடத்தில் அருகிலுள்ள பவளப்பாறைகளின் வளர்ச்சியும் அதை சார்ந்த உயிரினங்களின் வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கும்.
-------------------------
நீர்தான் உயிர்களின் பிறப்பிடம். இந்த உலகில் நீர்தான் பெரும்பான்மை உயிர்களின் வாழ்விடம். நீர் ஒரு அற்புதப்பொருள், உயிர்கள் ஜனித்திருக்கத் தேவையான பண்புகள் நிரம்ப உண்டு அதனிடம். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால்; நிலத்தில் இருக்கும் மரங்களைக் காட்டிலும் கடல் உயிரிகள் தான் அதிக ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. ஓரிடத்தில் குவியும் சூரிய வெப்பத்தை உலகம் முழுவதும் பகிர்ந்தளிக்கும் வேலையையும் கடல்கள் செய்கின்றன. இதன் விளைவாலேயே நமக்கு பருவமழை கிட்டுகிறது.
வளமிகு குறிஞ்சி நிலத்தில், மினரல் மிக்க நிலத்தை ஆதாரமாகக் கொண்டு சூரியனை எட்ட அணியணியாய் அணியணியாய் செங்குத்தாய் விரவியுள்ளன மரங்கள் மற்றும் அதை சார்ந்த உயிர்கள். ஆனால் நீரில் கரைக்கப்பட்ட மினரல்கள் சமமாய் பரவியிருக்க, கிடைமட்டமாக பரவியுள்ளன கடல்வாழ் உயிர்கள். அதன் காரணமாய் பரந்துபட்ட நீர்பரப்பு பல்வகை உயிரினங்களைக் கொண்டுள்ளது.
சூரியமண்டலத்தில் பூமி மட்டுமே (தரவுகள் அடிப்படையில்) அதிகளவு நீரைக் கொண்டுள்ளது. அதன்காரணமாகவே உயிர்கள் இங்கே தோன்றின. நீரின் சிறப்பியல்புகள் பல. நீரின் பாகுத்தன்மை அதிகம். அதனால் அது உராய்வினை வெகுவாகக் குறைக்கிறது. காற்றுஊடகத்தில் பறவைகள் பறப்பதை விட, நீர் ஊடகத்தில் மீன்கள் நீந்துவதற்கு குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது. நீருக்கு, மேற்பரப்பு அழுத்தம் அதிகம். அதனால்தான் பொருட்கள் மிதப்பதற்கு வசதியாக உள்ளது, இதன் காரணமாகத்தான் நாம் கப்பலை நீரின் மேல் எளிதாகச் செலுத்த முடிகிறது.
நிலம் எளிதில் வெப்பம் அடையும், ஆனால் நீர் அப்படியல்ல. அதிக வெப்பம் நீரில் படும்பொழுது நீர் ஆவியாகி விடும். ஆவியான நீர் குளிர்ச்சியடையும் பொழுது நீராகி விடுகிறது, அதிகக் குளிர்ச்சியின் பொழுது பனிக்கட்டி ஆகிவிடுகிறது. நீரும் பனிக்கட்டியும் வேதியியல் அடிப்படையில் வேறு வேறு அல்ல. ஆனால் பனிக்கட்டி நீரின் மேல் மிதக்க வல்லது. பூமியின் நன்னீரில் பெரும்பகுதி இவ்வாறு பனிக்கட்டியாய் சிறைபட்டுள்ளது. பூமியின் துருவப் பகுதியில் சிறைபட்டுக் கிடக்கும் பனிக்கட்டிகள் உருகிவிட்டால் உலகின் பல நாடுகளின் கடற்கரை நகரங்கள் அழிந்துவிடும்.
நீர் இவ்வாறு வெப்பத்தை எடுத்துக்கொண்டு மேகமாகி, மேகம் குளிர்ந்து மழையாய் நிலத்தில் பொழிவதால்தான் நிலத்தில் நமது இருப்பு உறுதி செய்யப்படுகிறது.
மேலும் நீர் ஒரு நல்ல கரைப்பான். பல்லாயிரம் வருடங்களாக நிலத்திலிருந்து நீர் கரைத்த மினரல்கள் மற்றும் உப்புகள் தான் கடலில் நிறைந்துள்ளன. உப்புத்தன்மை என்பது கடல் நீரில் நிறைய உள்ளது. ஆனால் ஆறு குளம் குட்டை போன்ற நன்னீரில் அவை மிகவும் குறைவு. ஆயினும் நன்னீரில் வாழும் மீன் மற்றும் ஈரிடவாழ்விகளான தவளைகள் வெளியிடும் நைட்ரஜன் சத்து மிகுந்த கழிவுகளை அந்த நீர் கொண்டுள்ளது.
இடைக்கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் ஆற்று ஓரங்களிலும், மலை அடிவாரங்களிலும் வாழ்ந்தார்கள் என்பது கருவிகள் கிடைக்கும் இடங்களை வைத்துக்கொண்டு உய்த்துணரவேண்டியிருக்கிறது. இப்பொழுது கூட பழனிக்கு அருகே அவர்கள் பல குழிகளை நோண்டி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிக உயர்ந்த மலைகளுக்கு இவர்கள் செல்லவில்லை. திருநெல்வேலிக் கடற்கரையில் கிடைக்கும் கருவிகளை வைத்தும், அதேபோல வடக்கே பம்பாய்க்கு அருகில் இக்கருவிகள் கிடைக்கும் இடத்தை வைத்தும் ஓரளவுக்கு இவர்கள் கடல் ஓரங்களில் வாழ்ந்து, மீன் பிடிக்கும் தொழிலையும் மேற்கொண்டிருந்தார்கள் என்று சொல்லலாம்.
இந்தியாவில் காணப்படும் கடைக்கற்கால நிலைகளில் திருநெல்வேலி நிலைகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. முதன்முதலாக வில்லும் அம்பும்வழக்கத்துக்கு வந்தது இந்தக் காலத்திலேயே. இதற்கு முன்னால் வேல்கள்தான் வழக்கத்தில் இருந்திருக்க முடியும். ஆய்வாளர்கள் இவர்கள் காட்டுத் தானியங்களை அறுத்துப் பயன்படுத்தினார்கள் எனக்கருதுகின்றனர். இலங்கையிலும் திருநெல்வேலிக் கடற்கரையிலும் கிடைக்கும் இது போன்ற கருவிகளின் ஒற்றுமையை வைத்து ஒருவேளை இந்த இரண்டு பகுதிகளுக்கும் கடல் மூலமாகத் தொடர்பு இருந்ததோ என்று உய்த்துணரவும் இடமிருக்கிறது என்று ஆல்சின் அம்மையார் கருதுகிறார். அல்லது கடற்கோள் நிகழ்வதற்கு முன்பு இரண்டு நிலப்பகுதிகளும் ஒன்றிணைந்து இருந்திருக்க வேண்டும் எனவும் அனுமானிப்பதற்கு இடம் உள்ளது. மீன்கள் தான் ஹரப்பர்களின் முக்கிய உணவு என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது.
நெய்தல் நிலத்தில் குடியேறிய பரதவர்களின் முக்கிய உணவு மீன். மேலும் கடல்தந்த உப்பின் துணைகொண்டு மீனை, கருவாடாக ஆக்கியும் அவர்கள் பதப்படுத்தி உண்டனர். மீன்பிடிக்க இயலாத புயல் காலங்களில் கூட பதப்படுத்திய அந்த உணவு அவர்களுக்கு ஊட்டமளித்தது. தமிழர்களின் நிலையான உணவுக்கான கனவு இவ்வாறு நெய்தல் நிலத்தில் நிறைவேறத் தொடங்கியது.
உண்டது போக மீதமுள்ள கழிவுகளைக் குவித்த இடங்களில் செடிகள் செழிப்பாக வளர்வதை அம்மக்கள் கண்டனர். தங்களுக்கு விருப்பமான பழம்நல்கும் தாவரங்களை, மீன் கழிவுகளையும் நைட்ரஜன் சத்துநிறைந்த நீரையும் கொண்டு வளர்க்க ஆரம்பித்தனர் பரதவப்பெண்கள்.
பயிர்களை விளைவித்து விளைச்சலைக் கொள்ளும் வழக்கம் குறிஞ்சியிலேயே இருந்தது. ஆயினும் குறிஞ்சி நிலம் நல்ல மண்வளத்தை கொண்டுள்ளதால் மிகுந்த பிரயாசம் இன்றி விளைச்சலை விளைவித்திருந்தனர் மலைவாழ்மக்கள். இதை 'தொய்யாது வித்திய துளர் படு துடவை’ அதாவது உழாது விளைந்த நல்ல விளைநிலம் என்கிறது கடைச்சங்கநூலான மலைபடுகடாம்.
Ecotone என்பது இருவேறு சூழல்கள் அருகருகே இருக்கையில், அவற்றிற்கு இடையில் இருக்கும் இருசூழலையும் இணைக்கும் வண்ணம் தகவமைப்பு கொண்ட பிரதேசம் என்பதை குறிஞ்சியிலேயே கண்டோம். இதுவும் அதுபோன்ற ஒரு இடமே. ஒரு சூழலின் ஓரத்தில் இருந்து அடுத்த சூழலலுக்கு மாறும் Edge effect எனப்படும் 'ஓர விளைவு' நடைபெறும் இடம் இது.
நதி கலக்கும் நன்னீர் பகுதியாம் கழிமுகங்களில் விளைச்சலுக்குத் தேவையான நல்லநீர் மற்றும் அதிக வண்டல்மண் இருக்க, நிலத்தை வளமாக்கும் மீன் கழிவுகள் துணையோடு வேளாண்மைக்கான அடித்தளம் நெய்தலில் ஓரவிளைவு நடக்கும் இடங்களில் இடப்பட்டது.
‘நெய்தல் நிலத்தில் மழை பெய்தால் நெல் விளையும். மழை பெய்யாவிட்டால் உப்பு விளையும்.’ என்று நற்றிணை குறிப்பிடுவதைக் கொண்டு இவ்விடங்களில் விவசாய முன்னெடுப்புகள் நடைபெற்றதை நாம் அறியமுடிகிறது.
நன்னீரும் கடல்நீரும் இணையும் இந்தப்பகுதிகள் உற்பத்தித் திறனைப் பெருக்க வல்லவை. சங்க காலங்களில் மீன்கள் நீந்தும் நன்னீர் சூழலில் விவசாயம் செய்வது வழக்கில் இருந்துள்ளது.“ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல்” எனும் ஆண்டாளின் வரிகள் இதை நமக்கு மெய்ப்பிக்கின்றன.
வயல் அருகில் உள்ள மாமரத்திலிருந்து, பழுத்துத் தானாக விழுகின்ற இனிய பழங்களைக் கவ்வி உண்ணும் வாளை மீன்கள் வாழும் ஊரை உடைய தலைவன் என்ற பாடலின் மூலம் மீன் வளம் மருதநிலம் முழுவதும் இருந்ததை நாம் அறிய முடிகிறது.
“கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்”
வயல் முழுதும் இருந்த கயல்கள் அவர்களுக்கு புரதம் அளித்து வந்திருக்கிறது. இது போல இருவேறு வேளாண் முறைகளின் கூட்டுபண்ணைய முறைகளுக்கான அடித்தளம் இங்கே இடப்பட்டது. இந்த கூட்டுபண்ணைய முறையை ‘பழனம்’ (rice fish culture) என்று சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.
மீன்கள் பூச்சித்தாக்கத்தை கட்டுப்படுத்துவதோடு தமது கழிவால் நிலத்தையும் வளமாக்கியது. இதே முறையில் நிலத்தின் வளம்கூட்டி பயிரை விளைவித்தால், பரந்துபட்ட நிலப்பரப்பை நிரந்தரமாய் உணவுவழங்கச்செய்து ஒரு பெரும் சமூகமாய் வாழலாம் என்பதை இந்த ஆரம்பகால விவசாய முன்னெடுப்புகள் தமிழர்களுக்கு உணர்த்தி இருக்கக்கூடும்.
நிரந்தரமாய் ஓரிடத்தில் தங்குவதில் இருந்த நன்மைகள் பல. மனித உயிர்களுக்கு குழந்தை வளர்ப்பிற்கு அதிக நாள் தேவைப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம். நாடோடிகளாய் இருந்த சமூகத்திற்கு, அலைச்சல் காரணமாக ஐந்து வருடங்களுக்கு ஒரு குழந்தை என்கின்ற அளவிலேயே மனிதப்பெருக்கம் இருந்தது. ஆனால் நிரந்தரமாய் ஓரிடத்தில் தங்குவதன் மூலம் குழந்தைவளர்ப்பு மனிதர்களுக்கு எளிதாய் இருந்தது. அதனால் 2 வருடத்திற்கு ஒரு குழந்தை என்கின்ற அளவில் மனிதப்பெருக்கம் அதிகரிக்கத் துவங்கியது. அந்தகாலங்களில் மனிதப்பெருக்கம் என்பது ஒவ்வொரு சமூகத்தின் கட்டாயமாக இருந்தது. ஃபெர்டிலிடி ரேட் எனப்படும் மனித இனப்பெருக்கத்தைக் குறிக்கும் எண்ணின் அளவு 2.5 க்கும் மேல் இருந்தால் தான் ஒரு இனம் அழிவில் இருந்து காக்கப்படும். இதன்காரணமாய் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் பெண்கள் போற்றுதலுக்கு உரியவராகக் கருதப்பட்டனர். ‘மக்களைப் பெற்ற மகராசி’ என்கின்ற கிராமவழக்கு ஒன்றினை இந்தக் கருத்தோடு ஒப்பிட்டு நோக்கலாம். மக்களுக்காக உயிர் நீத்த வீரர்களை வழிபட்டது போலவே, பிள்ளை பேரின் போது உயிரை விட்ட பெண்களும், பல மக்களை பெற்றெடுத்த பெண்களும் போற்றுதலுக்கு உரியவர்களாக ஆக்கப்பட்டனர். தாய்தெய்வ வழிபாடு இவ்வாறாக உருவாக ஆரம்பித்தது.
உதாரணத்திற்கு சூலி (சூலம் தரித்தவள்/கர்ப்பவதி) என்கிற முச்சூலி/திரிசூலி. மூன்று குலங்களை தோற்றுவித்த மூத்தவள். மூன்று மக்களைப்பெற்று வளர்த்தெடுத்தவள். அல்லது ஒரே பேறில் மூன்று பிள்ளைகளைப்பெற்று ஆளாக்கியவள். பெற்ற மூன்று குலங்களை காட்டில் எதிரிகளிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் காக்க மூர்க்கத்துடன் போராடி பெருக்கியவள்.
கிட்டத்தட்ட இதே போல் ஒரு தோற்றம் கொண்ட பெண் தெய்வம், வடஇந்தியாவில் வழிபடப்பட்டு வந்துள்ளது. அவளின் பெயர் பீம காளி. கோப உருவம் கொண்ட அவளுக்கு நான்கு கைகள். அவளது ஒரு கையில் கதிர் அரிவாள் உள்ளது. இன்னொரு கையில் வெட்டுப்பட்ட ஆணின் தலை ஒன்று உள்ளது. அதில் வழியும் இரத்தத்தை இன்னொரு கையில் வைத்திருக்கும் கபாலத்தில் பிடித்துக் கொண்டிருப்பது போல உக்கிர உருவமைப்பு கொண்ட தெய்வம் அவள்.
தக்ஷினகாளி என்று ஒருவர் இருக்கிறார் அவர் சிவனை நெஞ்சில் ஏறி மிதித்தபடி காட்சியளிக்கிறார்.
தமிழகத்தில் நாடார்கள் பத்ரகாளியை வழிபடுகின்றனர். இவர் ஒரு செவிலித் தாயாக இருந்திருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். பேய்ச்சியம்மன் வழிபாடும் தமிழகத்தில் பச்சிளம் குழந்தையை காப்பாற்றி வளர்க்கும் கதைகளை ஒட்டியே வருகிறது. பேச்ய்சியம்மனும் ஒரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து, குடலை கையில் ஏந்திய படியும் ஒரு ஆணின் நெஞ்சில் காலை வைத்தவாரே கையில் குழந்தையை ஏந்தியபடி காட்சியளிக்கிறார் .
Oggu கதையில் மகாகாளி ஒருவர் வருகிறாள். அவள் உஜ்ஜெயினியின் அரசி. வீரபத்திரன் எனும் வீரப்பாவிடம் சகோதரன் போல் பாசம் காட்டுகிறாள். மருத நில அரசியான காளியின் நிலத்தை வீரப்பரின் மேய்ச்சல் சமூகம் பலப்படுத்தி, அதனால் வீரப்பர் நற்பெயர் பெற்று இருக்கக்கூடும்.
சகோதரரிடம் இருந்த பாசமிகுதியால்; வீரப்பாவை உஜ்ஜைனியின் அரசனாக ஆக்க விரும்பிய அவள்; வீரப்பாவிடம் ”அரசனாக விருப்பமா?” எனக்கேட்கையில், தனது கடமை மேய்ச்சல் புரிவதுதான் என்று அக்கோரிக்கையை மறுத்து விடுகிறார் வீரபத்திரர்.
காளியின் கையில் ‘கதிர் அருவாள்’ எனும் விவசாய ஆயுதம் உள்ளதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இவற்றைக் காணும்பொழுது இக்கதைகள் அனைத்தும், மருதநில குடிகளாக மக்கள் நாகரிக முன்னேற்றம் அடைந்த பொழுது நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளவை எனக் கருதத் தோன்றுகிறது.
மேற்கூறிய அனைத்து கதைகளிலும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், காளி என்பவள் பெரும் வீரமும் பெரும் கோபமும் கொண்டிருந்தாலும், அடிப்படையில் தாயன்பு கொண்டவளாக காட்சியளித்திருக்கிறார்.
போரில் இறந்தால் நடுகல், தாயன்பு கொண்டவருக்கு நடுகல், பிள்ளைப் பேற்றில் இறந்தால் சுமைதாங்கிக் கல் என சமூகம் தழைத்தோங்க அரும்பாடுபட்ட ஆண்களைப் போற்றியது போலவே பெண்களையும் போற்றுதலுக்கு உரியவர்களாய்க் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறது நம் சமூகம் என்பது இதன் மூலம் நாம் பெறும் செய்தி.
……..
நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க நெய்தல் நிலம் பயன்பட்டதை மறுக்க இயலாது. ஆனால் நெய்தல் நிலம், பெரியஅளவில் உணவு இருப்பைக்கொண்ட நீரையும், சிறிய அளவில் பாலை நிலத்தை ஒத்த மணற்பரப்பையும் கொண்டது. அது பெரும் சமூகத்தைக் கொள்ளும் அளவிற்கு பரந்த நிலமல்ல.
‘பெரு நீர் விளையுள் எம் சிறுநல் வாழ்க்கை’ எனும் தலைவியின் வரிகள் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கிறது.
தமிழகத்தில் குறிஞ்சிக்கும் கடலுக்கும் இடையே பரந்துபட்ட நிலப்பரப்பு இருக்கிறது. அங்கே நெய்தலில் பழகிய விளைச்சல் முறையை பரீட்சித்துப் பார்க்கலாம். ஆனால் வருடத்தில் சில மாதங்களில் மட்டுமே நீரைக் காணக் கூடியவை அந்த நிலங்கள். அந்த நிலத்தில் நீரை எப்படியேனும் வருடம் முழுவதும் நிலைப்படுத்திக் கொள்ளும் உபாயம் பழகினால் நிலத்தை நம் சொல் கேட்க வைக்கலாம் அல்லவா?
அப்படிப்பட்ட அரிய நீர்மேலாண்மை வித்தையில் விற்பனர் ஆனார்கள் சங்ககாலத் தமிழர்கள். அதன் காரணமாய் உறங்கிக்கிடந்த தமிழகத்தின் வறண்ட நிலங்கள் சிலிர்த்து எழுந்தன. கூடவே எழுந்தது தமிழ்க்குடியும் பல்லுயுர் கூட்டமைப்பும்.
சங்ககால அரசுகளில் ஒன்று பாண்டிய அரசு. அவர்கள் மருத நிலத்தைப் போற்றிய அதேவேளையில், நெய்தல்நிலத்தை ஒதுக்கிவிடாமல் அந்நிலத்தின் துணைகொண்டு அரசினை வளப்படுத்தினர். அதன் காரணமாய் ‘கயல்’ அவர்கள் கொடியில் குடியேறியது. முத்துக்குளியல் பாண்டியநாட்டு பரதவர்களின் சிறப்புத்தொழிலாய் இருந்தது.
கடலில் வழித்தடங்களை அறிய வானியல் மற்றும் பொழுதினைப் பற்றிய புரிதல் மிக அவசியம். இதை பல பரதவ நாகரிங்களின் முன்னேற்பாடுகளால் நாம் அறியலாம். உதாரணத்திற்கு டோலமி போன்ற பண்டைய வானியலாளர்களால் போலரிஸ் துருவ நட்சத்திரம் அறியப்பட்டிருந்தது, ஆனால் அதன் முக்கியத்துவம் இடைக்காலத்திலும் அதற்கு அப்பாலும் தான் வளர்ந்தது. டோலமி போலாரிஸை "வடக்கு நட்சத்திரம்" என்று அங்கீகரிக்கவில்லை, ஏனெனில் உத்தராயண காலங்களில் அது மெதுவாக முன்னோக்கி செல்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளில் மட்டுமே போலரிஸ் உண்மையான வடக்கு நிலைக்கு அருகில் இருந்தது. அதனாலேயே அதனை திசை அறிய பயன்படுத்தினர் ஆங்கிலேயர்கள். இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் துருவநட்சத்திரம் வட நட்சத்திரமாக இருக்காது; அது வேகா போன்ற பிற நட்சத்திரங்களால் மாற்றப்படும். அது ஏன் என்பதைப்பற்றி பிறகு காண்போம்.
பறவைகள் மற்றும் விலங்குகள் காந்தப் புலனை பார்க்க அல்லது உணர வல்லவை. ஆர்டிக் டர்ன் என்னும் பறவை ஒரு வருடத்தில் உலகையே சுற்றி வந்துவிடும். இது எப்படி அச்சிறிய பறவைக்கு சாத்தியப்படுகிறது என நாம் வியப்படையக்கூடும்.
ஆமைகள் பறவைகள் போன்றவை காந்தப் புலனை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் வலசை செல்கின்றன. பாலைவன எறும்புகள் சூரியனை மட்டும் வைத்து திசைகளை அறிந்துகொண்டு, இரையை சேகரித்து, பிறகு பத்திரமாக கூடு திரும்புகின்றன.
இந்த செய்திகள் உங்களை ஆச்சரியமூட்டி இருக்கலாம். ஆனால் பின்வரும் நிஜங்கள் வியப்பின் எல்லைக்கு உங்களை கொண்டு சென்று விடும்.
சாலமன் மீன்கள் நன்னீர் ஏரிகளில் முட்டை இடுகின்றன. முட்டைகளில் இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கு தனது தாய் யார், தந்தை யார் என்று தெரியாது. தன்னிச்சையாக வளரும் அவை தனது உள்ளுணர்வின் உந்துதலால், நதி வழியாக கடலை அடைகின்றன. பெரியவனான பின்பு யாரும் சொல்லாமலேயே நதியின் போக்கை எதிர்த்து, தாம் பிறந்த ஏரிகளை அடைந்து, முட்டைகளை இட்டுவிட்டு செத்துப் போகின்றன. காந்தப்புலன் அடிப்படையிலான வரைபடம் அதன் மரபணுவிலேயே பதிந்திருக்கிறது போலும். ஆமைகளின் பிறப்பும் வளர்ச்சியும் கிட்டத்தட்ட இது போலவே நிகழ்கிறது. இவற்றிற்கு அடிப்படை காந்தப்புலன் என்பது அறிவியலின் மூலம் ஓரளவிற்குத் தெரியவருகிறது. இயற்கையோடு ‘மூன்றாவது கண்ணை’ இணைத்து விட்டால், காந்தப்புலன் முதற்கொண்டு அனைத்தையும் உணர்ந்து கொள்ளலாம் என தமிழர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். அறிவியலின்படி இந்த காந்தப்புலனை அறிந்து கொள்வதற்கு ‘மூன்றாவது கண்’ மிகவும் உபயோகமாக இருக்கிறது. மூன்றாவது கண் எனும் செல்லப் பெயரால் அழைக்கப்படுவது பினியல் சுரப்பி.
பாரிட்டல் கண் (மூன்றாவது கண், பினியல் கண்) என்பது சில முதுகெலும்பு பிராணிகளில் உள்ள எபிதாலமஸின் ஒரு பகுதியாகும். மூன்றாவது கண் தலையின் உச்சியில் உள்ளது; இது பினியல் சுரப்பியுடன் தொடர்புடையது. இது சர்க்காடியன் சுருதிலயம் மற்றும் உடல்வெப்ப சமநிலைக்கான ஹார்மோன் உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது.’மடகாஸ்கர் ஸ்விஃப்ட்’ எனும் பிராணியின் பாரிட்டல் கண்ணானது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தால் சூழப்பட்டுள்ளது. இது "மூன்று கண்கள்" இருப்பது போன்ற தோற்றத்தை அந்த உயிரிக்கு அளிக்கிறது. எகிப்து நாகரிகத்திலும், பண்டைய சித்த முறைகளிலும் இந்த மூன்றாவது கண்ணை விழிப்படைய வைத்து இறைநிலையோடு இணைதல் பற்றிய குறிப்புகள் மறைபொருளாக அறியக்கிடைக்கின்றன.
படம்: மடகாஸ்கர் ஸ்விஃப்ட்
இருவாழ்விகளான கடல்ஆமைகள், முட்டையிட நிலத்தையே நாடியுள்ளன. அதன் காரணமாய் நீரில் இருக்கும் அவை, மேற்கூறிய வகைகளில் காந்தப்புலனை அறிந்து கொண்டு கடலின் நீரோட்டத்தைப் பயன்படுத்தி எளிதான வழிகளில் நிலத்தை அடைந்து இனப்பெருக்கம் செய்யும் பழக்கம் கொண்டவை.
ஆஸ்ட்ரோனேசியர்கள் ராபா நுய், ஹவாய், மார்குவேஸ் மற்றும் மடகாஸ்கர் தீவுகளை அந்த காலத்திலேயே எப்படி கண்டடைந்தனர் என ஆய்வாளர்கள் ஆய்வு செய்த பொழுது, ஆஸ்ட்ரோனேசியர்கள் கடல் ஆமைகளின் இடம்பெயர்வு முறைகளைப் பற்றிய புரிதலைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொலைதூர மற்றும் அறியப்படாத தீவுகளைக் கண்டறிய இந்த அறிவைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனும் முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.
தமிழர்களும் இவ்வாறே ஆமைகளின் வழித்தடங்களினைப் பின்பற்றி எளிய கடல்வழிகளை அறிந்துகொண்டு நாடுகள் பலவற்றில் நாவாய் மீதேறி கால் பதித்தனர். நாவாய்க் கொண்டு பயணித்தலை அடிப்படையாக கொண்டே ‘Navigation’ எனும் சொல் உருவானது. ஆரியர்களுக்கு அவர்கள் சமூகம் கடல்பயணங்களை தடை செய்திருந்த அதேவேளையில், திரைகடலோடி திரவியம் தேடி வணிகம் வளர்த்தனர் தமிழர்கள். வணிகம் வளர துறைமுகங்கள் உதவின. தமிழர்களின் வாணிபம் பழங்காலம் தொட்டு இருந்து வருவதற்கான சான்றுகள் பல உள்ளன.
970 - 931 BC இல் வாழ்ந்த சாலமன் அரசன் தமிழர்களுடன் வாணிபத்தொடர்பில் இருந்தார் என பழைய ஏற்பாடு குறிப்பிடுகிறது. [‘அரசரின்’ வணிகக் கப்பல்கள்,ஈராமின் கப்பல்களோடு சென்று கடல் வாணிபம் செய்தன. வணிகக் கப்பல்கள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பொன், வெள்ளியையும் தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றையும் கொண்டு வந்தன’] (1 அரசர்கள் அதிகாரம் – 10 – திருவிவிலியம்) இதில் ஹீப்ரூவில் மயில் என்பதை tuki என எழுதியுள்ளனர். இது தோகை எனப்படும் தமிழ் வார்த்தையிலிருந்து பெறப்பட்ட சொல்லாகும்.
துமிழகத்துக்கும் எகிப்துக்குமிடையே ஏற்பட்டிருந்த வாணிகத் தொடர்பு மிகப் பழைமையானதாகும். அது எப்போது தொடங்கியிருக்கும் என்னும் கேள்விக்குப் பலவாறான விடைகள் அளிக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட 'எரித் திரியக் கடலின் பெரிப்ளூஸ்” என்னும் நூலை டபிள்யூ. எச். ஸ்காபி என்பார் பதிப்பித்துள்ளார். தம் பதிப்புரையில் அவ்வாசிரியர் கிரேக்க மக்கள் அநாகரிகத்தினின்றும் விழித்தெழுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே எகிப்தும் பண்டைய இந்திய நாடுகளும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தன என்று கூறுகின்றார்.
உலகம் முழுவதும் இருந்த பரதவர்கள்’தான், முதன்முதலில் பருவத்தை ஊன்றி அனுமானித்தவர்கள். நமது நாட்டிற்கு பாய்மரங்கள் மூலம் வருவதற்கு காற்றின் துணை அவசியம். வருடங்களின் சில மாதத்தில் வீசும் பருவக்காற்றை அனுமானித்தே அவர்கள் அச்சமயத்தில் எளிதில் பயணம் செய்தனர். அதனாலேயே பருவக் காற்றுக்கு Trade winds என்று பெயர் வைக்கப்பட்டது. வைகாசி மாதந்தொடங்கி மூன்று நான்கு மாதங்கள் வரையில் சேரநாட்டுக் கடற்கரையின்மேல் வந்து மோதும் தென்மேற்குப் பருவக்காற்றை முதன்முதல் கண்டறிந்தவர் ஹிப்பாலஸ் (கி. பி. 45) என்ற கிரேக்கர் எனக் கூறுவர். இப் பருவக்காற்றின் துணைகொண்டு படகுகள் பல தமிழகத்தின் மேலைக்கரைத் துறைமுகங்களை அடைந்து நங்கூரம் பாய்ச்சின.
தமிழகத்து நறுமணப் பொருள்களின் சுவையையும், ஏனைய ஏற்றுமதிப் பண்டங்களின் பெருமையையும் கிரேக்கர்களின் மூலமே ரோமாபுரி மக்கள் அறிந்துகொண்டனர். எனினும் கி.பி. முதலாம் நூற்றாண்டுவரையில் ரோமரின் வாணிகம் பெருமளவு விரிவடையவில்லை. இக்கால வரம்புக்கு முற்பட்ட ரோம மன்னரின் நாணயங்கள் தமிழ்நாட்டில் இதுவரையில் கிடைக்கவில்லை என்பது அதற்கு ஒரு சான்றாகும். ரோமாபுரிச் சக்கரவர்த்தி அகஸ்டஸ் என்பவர் கி. மு. 80-ல் எகிப்தை வென்று அதன்மேல் தம் ஆட்சியை நிலைநாட்டினார். இவ்வெற்றி எதிர்பாராத ஒரு நலனையும் அவருக்குப் பயந்தது. இதனால் அவருக்குத் தமிழகத்துடன் நேர்முக வாணிகத் தொடர்பு கிட்டியது. தமிழகத்தோடு நேரடி வாணிபத் தொடர்பு கொள்ளுதலே அக்காலத்தையும் மேற்கத்திய நாகரீகங்களின் உச்சபட்ச லட்சியம். வெள்ளையர்களுக்கு பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்த தொடர்பு சாத்தியப்படவில்லை
ரோமாபுரிச் சக்கரவர்த்தி அகஸ்டஸின் உடன்காலத்தவர், ஸ்டிராபோ என்ற நூலாசிரியர். இவர் பூகோள நூல் ஓன்றை எழுதியுள்ளார். ‘எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ்” என்று அழைக்கப்படும் வேறொரு வரலாற்று நூலும் (கி. பி. 60) கிடைத்துள்ளது. பிளினி என்பார் உயிரியல் நூல் ஒன்றையும் (கி. பி. 70), தாலமி பூகோள நூல் ஒன்றையும் எழுதிவைத்துள்ளனர். இந் நூல்களில் பண்டைய தமிழகத்தின் கடல் வாணிகத்தைப் பற்றிய சான்றுகள் பல காணப்படுகின்றன. புதுச்சேரிக்கு அண்மையில் உள்ள அரிக்கமேடு என்னும் இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் பல வகையான புதைபொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் சிறப்பானவை ரோமாபுரியின் நாணயங்கள். பழந்தமிழகத்துடன் ரோமாபுரி மேற்கொண்டிருந்த கடல் வாணிகத்தின் விரிவை இந்நாணயங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ரோமாபுரி ஆசிரியர்கள் எழுதிய நூல்களின் வாயிலாகத் தமிழகத்தின் துறைமுகங்களைப்பற்றித் தெரிந்துகொள்கின்றோம். அவற்றில் பல துறைமுகங்களின் பெயர்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங்களான தொண்டியைத் ‘திண்டிஸ்’ என்றும், முசிறியை ‘முஸிரிஸ்’ என்றும், பொற்காட்டைப் ‘பகரி ‘என்றும், என்றும் ரோமர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றைப் போலவே, கடற்கரைத் துறைமுகங்களான கொற்கையைக் ‘கொல்சாய்’ என்றும், நாகப்பட்டினத்தை ‘நிகாமா’ என்றும், காவிரிப்பூம்பட்டினத்தைக் ‘கமரா’ என்றும், மரக்காணத்தைச் ‘சோ-பட்மா’ என்றும், மசூலிப்பட்டினத்தை ‘மசோலியா’ என்றும் குறிப்பிடுகின்றன. சேரநாட்டுத் துறைமுகங்கள் அனைத்தும் கண்ணனூருக்கும் கொச்சிக்குமிடையில் அமைந்து இருந்தன.
ரோமர்கள் மட்டுமன்றிக் கிரேக்கரும், சிரியரும், யூதரும் தமிழகத்துடன் வாணிகத் தொடர்பை வளர்த்துக் கொள்ளலானார்கள். தமிழகத்தில் ரோமாபுரி மக்கள் குடியேறி வாழ்ந்துவந்த இடங்களிலெல்லாம் அவர்களும் இணைந்து வாழலானார்கள். அவர்களுள் பலர் தமிழகத்திலேயே நீண்டகாலம் தங்கிவிட்டனர். அப்படித் தங்கியிருந்தவர்களிடமிருந்தே தமிழகத்தினைப்பற்றிய செய்திகளைக் தாம் கேட்டறிந்ததாகப் பிளினி கூறுகின்றார். வாணிகம் விரிவடைய விரிவடையத் தமிழ்நாட்டிலேயே குடியேறிவிட்ட ரோமாபுரியினரின் தொகையும் வளர்ந்து வந்தது. அவர்களுடைய சேரி ஒன்று மதுரை மாநகருடன் இணைந்திருந்ததாகத் தெரிகின்றது. அவர்கள் வழங்கி வந்த பொன், வெள்ளி நாணயங்களும், செப்புக் காசுகளும் இப்போது புதைபொருள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப் படுகின்றன. அகஸ்டஸ் பேரரசனின் கோயில் ஒன்றும் இங்கு வழிபாட்டில் இருந்து வந்ததாகப் பியூட்டிங்கரின் அட்டவணைகளிலிருந்து அறிகின்றோம்.
“சுள்ளிஅம் பேரியாற்று .வெண்நுரை கலங்க யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளம் கெழு முறி ஆர்ப்பு எழ...” (ஒடிந்த மரச் சுள்ளிகளை ஏந்தி வரும் பேரியாற்றில் குமிழ்த்தெழும் வெள்ளைவெளேரென்று மின்னிய நுரைகள் கலங்கும்படி _ யவனர் செய்து முற்றிய அழகிய வேலைப்பாடமைந்த உறுதியான மரக்கலங்கள் பொன்னைக்கொண்டு வந்து கொட்டிவிட்டு மிளகு மூட்டைகளை ஏந்திச்செல்லும் பேரொலி எழும் வளம் மிகுந்த முசிறிப்பட்டினம்...) என்று அகநாறூறு* குறிப்பிடுகின்றது.
ரோமாபுரியில் இறக்குமதியான சரக்குகளின் அளவு ஆண்டுதோறும் ஏறிக்கொண்டே போயிற்று. அதனால், ஆண்டுதோறும் 6,00,000 பவுன் மதிப்புள்ள ரோமாபுரித் தங்கம் தமிழரின் கைக்கு மாறிக்கொண்டே வந்தது. இவ்வளவு பெருந் தொகையில் தம் நாட்டுச் செல்வம் வடிந்து வருவதைக் கண்டு வெருவிய ரோமாபுரி மக்களில் சிலர், தமிழகத்துடன் நடை பெற்றுவந்த வாணிகத்தையும் தமிழகத்துப் பண்டங்களின்மேல் ரோமருக்கிருந்த ஆரா வேட்கையையும் வன்மையாகக் கண்டித்தனர்.
பொருளாதாரம் சார்ந்த தொழில்களில் முதன்மை நிலையினைப் பெறுவது வணிகத்தொழிலாகும். ஒரு நாட்டின் வணிகத்தொழில் மேம்பாட்டின் அடிப்படையிலேயே அந்நாட்டின் பொருளாதார வளம் கணக்கிடப்படுகிறது. பழந்தமிழர் வணிகத்தை, உள்நாட்டு வணிகம் மற்றும் வெளிநாட்டு வணிகம் என இருவகையாகக் காணலாம். உள்நாட்டு வணிகம் பெரும்பாலும் நிலம் சார்ந்த பொருள்களையும், தொழில்களையும் அடிப்படையாகக் கொண்டும், வெளிநாட்டு வணிகம் இயற்கைப்பொருள்கள் மற்றும் கைவினைப் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் நடைபெற்றன. கடல்வழிப் போக்குவரத்து வெளிநாட்டு வணிகத்திற்கு ஏற்றதாக அமைந்திருந்தது. தரைவழி வணிகனின் பெயர் நாயகன் எனப்பட்டது. பெரியவணிகன் என்றால் மாநாயகன் கடல்வழி வணிகம் செய்தவன் சாத்தன். கோவலன் மற்றும் கண்ணகி இருவரின் தந்தையரின் பெயர்கள் முறையே மாநாயகன் மற்றும் மாசாத்தன் ஆகும். எனவே கண்ணகி கோவலனின் திருமணம்; இருபெரும் வணிகக் குடும்பத்தின் திருமணம் என நமக்குத்தெரிய வருகிறது.
பின்வரும் பாடல் வரிகளை கவனியுங்களேன்.
மீனொடூத்து நெற்குவைஇ
மிசையம்பியின் மனைமறுக்குந்து
மனைக்குவைஇய கறிமூடையாற்
கலிச்சும் மையகரைகலக் குறுந்து
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணி யாற்கரை சேர்க்குந்து
மலைத்தாரமுங் கடற்றாரமும்
தலைப்பெய்து வருநர்க்கீயும்'
இதில், மீனானது நெல் மாற்றாகப் பெறப்பட்டதும், ஏற்றுமதிக்காய் மிளகு மூட்டைகள் கரையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும், இறக்குமதிப் பொருள்களாகிய பொற்பரிசங்கள் கலங்களில் இருந்து தோணிகளில் கரை சேர்க்கப்பட்டதும், மலையில் விளைந்த பொருள்களும், கடலில் விளைந்த பொருள்களும் நிறைந்திருந்தமையும் காட்சியாக்கப் பட்டுள்ளது. இப்பாடல் பண்டைத்தமிழர் வணிகச் சிறப்பைக் காட்டும் மிகச்சிறந்த சான்றாக அமைகிறது.
பழந்தமிழரின் ஏற்றுமதிப் பொருள்களில் கைவினைப் பொருள்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொன்னாலும், மணியாலும், முத்தாலும், பவளத்தாலும் செய்யப்பெற்ற மாலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்வகைப் பொருள்கள் கிடைத்த இடங்களையும், அவற்றை ஒன்றுசேர்த்து மாலையாக்கிய செய்தியையும், “பொன்னுந் துகிரு முத்து மன்னிய. மாமலை பயந்த காமரு மணியும் இடைபடச்சேய வாயினும் தொடைபுணர்ந்து அருவிலை நன்கல. மமைக்குங் காலை “ என்ற புறநானூற்றுப் பாடலடிகள் காட்டுகின்றன.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டே மிகப் பெரிய கப்பல்களைக் கட்டக்கூடிய ஆற்றலையும், நுண்ணறிவையும் தமிழார் பெற்றுவிட்டனர். இக் கப்பல்கள் ஒவ்வொன்றும் முப்பத்து மூன்று டன் எடைச் சரக்குகளை ஏற்றிச் செல்லக்கூடியவை. பிற்காலத்தில் சோழ மன்னர்கள் காலத்தில் இவற்றைவிடப் பெரிய கலங்களும் கட்டப்பெற்றன. பிற்காலத்தவர்களான பல்லவர்கள் இரட்டைப்பாய் விரித்த கப்பல்களையும் வாணிகத்தில் ஈடுபடுத்தியிருந்தனர்.
தமிழகம் ஏற்றுமதி செய்த சரக்குகளில் சாலச் சிறந்தவை இலவங்கம், மிளகு, இஞ்சி, ஏலம், அரிசி, நுண்வகைக் “கலிங்கங்கள், தேக்கு, கருங்காலி, நூக்கு, சந்தனம் ஆகிய கட்டட மரவகைகள் முதலியன, மிளகும் இஞ்சியும் மருந்துகள் செய்யப் பயன்பட்டன. மேலைநாட்டினர் மருத்துவமுறைகளில் சித்த மருத்துவத்தின் தாக்கம் பெருமளவு இருந்திருக்கிறது. ஹிப்பாகிரேட்டஸ் என்ற புகழ் பெற்ற கிரேக்க மருத்துவர் கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் இந்திய மருத்துவ முறைகளையும், மருந்து வகைகளையும் கையாண்டு வந்தார். அவர் மிளகை “இந்திய மருந்து” என்றே குறிப்பிடுகின்றார். நல்லெண்ணெயின் பயனைக் கிரேக்கர்கள் கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே நன்கு அறிந்திருந்தனர். நல்லெண்ணெய் பண்டைய தமிழரின் உணவுப் பண்டங்களுள் ஒன்றாகும்.
மேலைநாடுகளுடன் மட்டுமின்றிக் கீழைநாடுகளான சனம், மலேசியா, ஜாவா. (சாவகம்), வடபோர்னியா ஆகிய நாடுகளுடனும்களுடனும் தமிழகமானது மிகவும் வளமானதொரு கடல் வாணிகம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கதாகும். சீனத்துடன் தமிழகம் மேற்கொண்டிருந்த வாணிகத் தொடர்பானது மிகவும் பழைமையானதாகும். இத்தொடர்பு கி.மு. ஆயிரம் ஆண்டளவிலேயே தொடங்கிவிட்டதெனக் தெரிகின்றது. தமிழகத்துப் பண்டங்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே சீனத்தில் இறக்குமதியாயின என்று அந்நாட்டு வரலாறுகள் அறிவிக்கின்றன. சீனத்துப் பட்டாடைகளையும் சர்க்கரையையும் தமிழகம் ஏற்றுக் கொண்டது. இதனால் இன்றளவும் சர்க்கரைக்குச் சீனி என்று பெயர் வழங்கி வருகின்றது. சீனக் கண்ணாடி, சீனக் கற்பூரம், சீனக் களிமண், சீனக் காரம், சீனக் கிழங்கு, சீனப் பட்டாடை, சீன வங்கம், சீனாக் கற்கண்டு, சீனாச் சுருள் என்னும் சொற்கள் இன்றளவும் தமிழ்மொழியில் உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற புலவர்கள்; துருக்கியின் இஸ்லாமிய வியாபாரிகளை குறிக்கும் ‘துருக்கர்’ எனும் சொல்லை உபயோகப்படுத்தியுள்ளனர். இதுவே துலுக்கர் என்றானது. இந்த அரபு வணிகர்கள் மூலம் நமக்கு குதிரைகள் இறக்குமதியாகின. குதிரைகளை இலகுவாகக் கையாளத் தெரிந்த அவர்களை, நமது மன்னர்கள் குதிரை படைத்தளபதியாக ஆக்கி, ‘ராவுத்தர்’ எனும் பட்டத்தை கொடுத்திருக்கின்றனர். சிவனே ‘குதிரை ராவுத்தராக’ வந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. வாணிபம் புரிய கப்பல் செலுத்தி வந்த இஸ்லாமியர்களை ‘மரக்கல ராயர்’ என்று அழைத்தனர் இவர்கள்தான் ‘மரைக்காயர்’ எனும் பெயர் பெற்றனர். சேர மன்னர் ஒருவரே இஸ்லாத்தை தழுவியுள்ளார். மேலும் பாண்டியர்களோடு சேர்ந்து முகலாயர்களை எதிர்த்தவர்கள் தமிழக இஸ்லாமியர்கள். ‘காவிரி நீரோவியம்’ எனும் நூலில் மேலதிக தகவல்கள் இதைப் பற்றி காணக் கிடைக்கின்றன
வடமொழிக்கு இலக்கணம் வகுத்த பாணினி என்பவர் வடநாட்டுப் பூகோள அமைப்பை நன்கு அறிந்தவர். அவர் நர்மதைக்குத் தெற்கில் கலிங்கத்தை மட்டும் குறிப்பிடுகின்றார்; ஆனால்; தென்னாட்டைக் குறிப்பிடவில்லை. அவருக்குக் காலத்தால் பிற்பட்டவரான காத்தியாயனர் (கி.மு. 4ஆம் நூற்றாண்டு) தம் இலக்கண நூலில் தென்னிந்திய நாடுகள். அனைத்தையுமே குறிப்பிடுகின்றார். இதைக் கொண்டு ஆரியர்கள் கி. மு. 600-க்குப் பிறகே தமிழகத்திற்கு வந்து குடியேறியிருக்கவேண்டும் என்று கருதவேண்டியுள்ளது. மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் கி. மு மூன்றாம், இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
அக்காலத்திலேயே சமணசமயம் தமிழகத்தில் பரவிவிட்டதற்கு இவை சான்று பகர்கின்றன. வடநாட்டில் சந்திரகுப்தர் காலத்தில் மிகக்கொடியதொரு பஞ்சம் ஏற்பட்டதாகவும், அதனால் பத்திரபாகு என்ற சமண முனிவர் ஒருவர், சமணர் பலர் தம்மைப் பின்தொடர, தெற்கு நோக்கி வந்து மைசூரில் குடியேறினார் என்றும் செவிவழிச் சமண வரலாறுகள் கூறுகின்றன. பிறகு விசாகாசாரியார் என்ற திகம்பர முனிவர் ஒருவரும் அவருடைய மாணவரும் சோழ பாண்டிய நாடுகளில் பல இடங்களுக்கு வந்து சமண சமயத்தைப் பரப்பலானார்கள். முதன்முதல் தமிழகத்தை நாடி வந்தவர்களான சமணர்கள் தனித்திருந்து தவம் புரிவதையே தம் நோக்கமாகக் கொண்டிருந்தனர்.. அனால், அவர்களைத் தொடர்ந்து பிறகு தமிழகத்திற்கு வந்தவர்கள் சமண சமயத்தின் விரியவையே தம் குறிக்கோளாகக் கொண்டனர். அவர்களுள் தலைசிறந்து விளங்கியவர் குந்தா- குந்தாசாரியார் என்ற புகழ் பெற்ற சமண முனிவராவர். தமிழகத்தில் ஆண், பெண் ஆகிய இருபால் துறவிகட்கும் சமணப் பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்த செய்திகளைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறுகின்றன. சமண முனிவர்கள் கர்நாடகம் முழுவதும் பரவினார்கள். அப்பகுதியில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கங்கர்களின் ஆட்சி தோன்றுமுன்பே சமண சமயம் வேரூன்றிவிட்டது. மேலும் சேர நாட்டிலும், கடற்கரையோரம் சமணர், பெளத்தர் ஆகிய இரு சமயத் துறவிகளும் சமயப் பணிகளைத் தொடங்கிவிட்டனர். இவர்கள் தங்கியிருந்த குகைகள் பல திருவிதாங்கூர்ப் பகுதியில் காணப்படுகின்றன. இதில் தமிழ்மன்னர் ஒருவர்; சமண மதத்தின் கொள்கைகளை சீரமைத்து; தமிழர் கொள்கைகளைப் புகுத்தி; ஆசீவகம் எனும் மதத்தைத் தோற்றுவித்தார்.
இவ்வாறு தமிழர்கள் ஆரியர்கள் உட்பட தம்மை நோக்கி வந்த அனைவரின் ஏற்புடைய கருத்துக்களையும் சுவீகரித்துக்கொண்டனர். (ஆனால் அவற்றில் சில கருத்துக்கள் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிகோலின என்பதே துயரச்செய்தி). ஆனால் அதற்குப் பின் வந்த மேலை நாட்டவர்கள் அனைவரின் நோக்கமும் நம் நாட்டினை அடைய எளிய வழிகளைக் கண்டறிவது; அதன் மூலம் பெரும் பொருள் ஈட்டுவது எனும் ஆசை. மேற்கத்திய நாடுகளுக்கிடையேயான இந்தியாவை எளிய வழிகளில் அடையும் இந்த போட்டியில் அவர்கள் கண்டறிந்தது தான் அமெரிக்கா. அதன் காரணமாகவே ஆதி அமெரிக்கர்களை சிவப்பிந்தியர்கள் என்றனர். அதன் பின்பு அவர்கள் கோழிக்கோட்டை கண்டடைந்தனர். அதன் பின்னர் அவர்கள் ஆசை ‘பேராசையாய்’ மாறத்துவங்கியது. பேராசை என்பது துன்பவிளைவை ஏற்படுத்தும் முறையற்ற ஆசை. பேராசையின் விளைவால் பேக்கரியையே அடைய நினைத்த வீரபாகு போல கடைசியில் அந்த வணிகர்கள் நாட்டையே அடிமைப்படுத்திவிட்டனர்.
ஆனால் சங்க கால தமிழகமோ எதிற்கவியலா பெரும் கடற்படையை கொண்டிருந்ததால் யாரும் நம்மை சீண்டத்துணியவில்லை. இதன் காரணமாய் உலகின் பணக்கார நாடாகவும் பேரரசாகவும் தமிழகம் விளங்கியது.
செட்டியார்கள் கடல் கடந்து வாணிபம் செய்தவர்கள். வாணிபத்தில் நேர்மை கொண்டவர்கள். அவர்களிடம் அரசனைக் காட்டிலும் செல்வம் மிகுந்து இருந்தது. அப்படிப்பட்ட ஒரு செல்வந்தர் தான் பட்டினத்தார். அவர் அந்த அனைத்து செல்வங்களையும் உதறிவிட்டு துறவறம் மேற்கொண்டார். துறவியான அவர் பிச்சையெடுத்து சாப்பிட்டு வந்தார்.
தங்கையின் பிள்ளைக்குத் தாய்மாமனாகிய பட்டினத்தார் பிச்சையெடுப்பதைக் கருத்தில்கொண்டு தங்கையின் வீட்டில் சம்பந்தம் செய்ய வந்தவர்கள் சம்பந்தத்தை தட்டிக் கழித்துவிட்டனர். கடுப்பான தங்கை; பட்டினத்தாரைக் கொன்றுவிட திட்டம் போட்டாள். ஒருநாள், "அண்ணா, உனக்கு மிகவும் பிடித்த அப்பம் சுட்டு வைத்திருக்கிறேன். வந்து சாப்பிட்டுவிட்டுப் போ" என்று வீட்டிற்கு அழைத்தாள்.
அந்த அப்பத்தில் விஷத்தை கலந்துவிட்டாள்.
அப்பத்தைக் கையில் வாங்கிய மாத்திரத்தில் அதில் விஷம் கலந்திருப்பது முக்காலமும் உணர்ந்த பட்டினத்தாருக்குத் தெரிந்துவிட்டது.
உடனே, "தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" என்று சொல்லியவாறு அப்பத்தைத் தங்கையின் வீட்டின் கூரையின்மீது வீசி எறிந்தார். அப்பம் காய்ந்ததும் வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது.
(பாஸ்பரஸ் 1669இல் சிறுநீறில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது காற்றில் எரியக்கூடியது. வெள்ளை பாஸ்பரஸ் மிகவும் வினைத்திறன் கொண்டது மற்றும் ஆக்ஸிஜன் முன்னிலையில் 30 ° C வெப்பநிலையில் எரியக்கூடியது. பட்டினத்தாரின் தங்கை பயன் படுத்திய ‘தீமுருகல் பாஷாணம்’ இதே தன்மையை கொண்டிருந்தது வியப்பளிக்கிறது).
வியாபரம் மற்றும் வணிகம் ஆகிவற்றில் கிடைத்த செல்வம் எத்தகையது என்பதை பற்றி பட்டினத்தார் கதையின் மூலம் நமக்கு ஒரு சித்திரம் கிடைக்கிறது.
வியாபாரத்தினால் பணம் பெருகியதென்னவோ உண்மைதான். ஆனால் வெளிநாட்டில் வணிகம் புரிய; தலைவன் தூரதேசம் சென்றுவிடுகிறானே. மேலும் நம் நாட்டில் குவிந்துள்ள செல்வம் எதிரிகள் கண்களை உறுத்துகின்றதே. இதன் விளைவு, ஒரு கண்ணில் காதலும் மற்றொரு கண்ணில் வீரமுமாய் திரியவேண்டிய சூழலுக்கு ஆளானார்கள் தமிழர்கள்.
சந்ததிப் பெருக்கமும், பெருகிய சந்ததிகளைக் காப்பதுமே நாகரிகக் கட்டமைப்பின் முக்கியத் தேவை என்பது நாம் அறிந்ததே. அதனால் காதலையும் வீரத்தையும் வாழ்வின் அடிப்படையாகக் கொண்டனர் தமிழர்கள். அதைத்தான் அகத்திணை புறத்திணை என தொல்காப்பியம் நிலத்தின் உரிப்பொருளாய் பிரித்துக்கூறுகின்றது.
முதற்பொருள் மற்றும் கருப்பொருட்களைப்பற்றி நாம் அறிவோம். முதற்பொருள் நிலமும் பொழுதும். கருப்பொருள் நிலத்தின் சூழலைக் குறிப்பவை. உரிப்பொருள் என்பது மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கம் பற்றியதாகும்.
ஆரியர்களின் வாழ்வியலில் நான்கு அடிப்படைகள் இருந்தது. அவை தர்மா(அறம்), அர்த்தா (பொருள்), காமா (இன்பம்) மற்றும் மோக்ஷா (வீடுபேறு). இதில் இன்பம் அகத்திணையைக் குறிக்கிறது, அறமும் பொருளும் புறத்திணையைக் குறிக்கிறது.
“அப்ப, தமிழர்கள் மோட்சம் எனும் வீடுபேறு பற்றி கவலைப்பட வில்லையா?”
முதல் மூன்று பொருளையும் கடைப்பிடிக்கும் ஒருவருக்கு வீடுபேறு பற்றிப் போதிப்பது தேவையில்லை என விட்டுவிட்டதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். இதை மறுப்பதற்கில்லை, காரணம் முதல் குறளிலிலேயே தெய்வத்தை கும்பிட்டு விட்டு ‘அறம் பொருள் இன்பம்’ எனும் முப்பாலையும் திருக்குறளாக வடித்த தெய்வபக்தி மிகுந்த திருவள்ளுவரே, “சாமியே உனக்கு கொடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாலும், நீ உன்னோட கடமையை ஒழுங்கா செஞ்சின்னா, உனக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும், ஒழுங்கா போய் பொழப்ப சரியா பாரு தம்பி,” எனக் கூறுகிறார்.
“தெய்வத்தான்
ஆகா தெனினும்
முயற்சிதன்
மெய்வருத்தக்
கூலி தரும்.”
இதிலிருந்து நாம் பெறும் செய்தி என்னவென்றால்… வீட்டிலும் சரி நாட்டிலும் சரி, நாம் ஒழுக்கத்தை சரிவரப் பேணவேண்டும் என்பதே. அதுவே நமது குடும்பத்தையும், நமது சமுதாயத்தையும் சிதையாமல் காக்கும். இதைச் செய்தால் வீடுபேறு தானாகக் கிட்டும்.
ஒரு நிலத்தின் தனித்தன்மை மிகுந்து வெளிப்படும் நேரத்தை நிலத்திற்குறிய சிறுபொழுதாக தொல்காப்பியர் கூறுகிறார். அந்நிலத்தின் உரிப்பொருள் என்பது அந்நிலத்தில் அந்தந்த சிறுபொழுது நேரத்தில் நடக்கும் ஒழுக்கம்.
குறிஞ்சி ஒரு இயற்கை எழில் கொஞ்சும் சொர்க்கபுரி. கூதிர், முன்பனி என்னும் பெரும் பொழுதுகளும் யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக்குரிய பொழுதுகளாகும். மலர் வனமும், குளிர் யாமமும் ஹனிமூனுக்கான சிச்சுவேசன் அல்லவா? அதனால் புணர்தலும், புணர்தல் நிமித்தமும் அதன் உரிப்பொருளாய் அமைந்தது. சுரத்தோடு வளம் குன்றிய பாலை பிரிதல் நிமித்தம் கொண்டது எனக் கண்டோம். முல்லையில் கால்நடைகளை மேய்க்கச் சென்ற தலைவன் வீடுதிரும்பும் வரை தலைவி அவனுக்காக காத்திருப்பதால் இருத்தலும், இருத்தல் நிமித்தத்தை உரிப்பொருளாக கொண்டுள்ளது முல்லை. நெய்தல் நிலத்தில் தலைவி தலைவனின் பிரிவைப் பொருத்துக்கொண்டு இருத்தலால், நெய்தல் பிரிதல் நிமித்தம் கொண்டுள்ளது.
குடும்பத்திற்குப் பொருளீட்டும் நோக்கத்தில் கடல்வழிப் பிரிந்த தலைவனை நினைத்துத் தலைவி வருந்துவது, திருமணத்திற்காகப் பொருள் ஈட்டும் நோக்கத்தில் சென்ற தலைவனை எண்ணி வருந்தும் தலைவியும் நெய்தலில் உண்டு.
புறவாழ்க்கை பெரும்பாலும் வீரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை புறத்திணையின் மூலம் அறியமுடிகிறது. அகநானூறு மற்றும் புறநானூறு நூல்களில் இருக்கும் பாடல்கள் மூலம் நம் மக்களின் அகத்தையும் புறத்தையும் நாம் விரிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
நெய்தல் நிலத்தில் நமக்கு செல்வங்களை வாரிக்கொடுத்த கடல் அவ்வப்போது சீறிக்கெடுக்கவும் தயங்கவில்லை. சங்க காலத்தில் தமிழகம் மூன்று கடற்கோள்களை சந்தித்துள்ளது.
‘மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வவ்வலின்’ எனும் கலித்தொகைக் கூற்று இதை உறுதிசெய்கிறது.
சுனாமி தாக்கியபோது அலையாத்திக்காடுகளை கொண்ட கடற்கரைகள் தப்பித்தது கண்கூடு. தற்போதைய தமிழகத்தில் அலையாத்திக் காடுகள் குறைந்து கொண்டிருக்கும் அதே வேளையில் பவளப்பாறைகளும் மரிக்க ஆரம்பித்துவிட்டன. வருடத்திற்கு இரண்டு சென்டிமீட்டர் என்ற அளவிலேயே பவளப்பாறைகளின் வளர்ச்சி இருக்கும். இவ்வாறு வருடக்கணக்கில் வளர்ந்து ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் அளவிற்கு பெரிய பாறைகளாக பரவியிருக்கின்றன அவைகள். இவைகள்தான் உலகின் பெரிய உயிர்களால் ஆன அமைவு. இவை மிதமான ஆழமும் வெளிச்சமும் உள்ள இடங்களில் மட்டுமே வளரும் தன்மை கொண்டவை. அப்படிப்பட்ட சூழல் நாம் இருக்கும் வெப்பமண்டல கடல்பகுதியாகும். இவற்றை நம்பி பல உயிர்கள் இங்கு வாழ்வதைக் கண்டோம். பல்லுயிர்சூழல் பேணும் கடலின் குறிஞ்சிநில சோலைக்காடுகள் போன்றவை இவை.
தற்போதைய மனித செயல்பாடுகளின் காரணமாக அதிகப்படியான செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனக் கழிவுகள் போன்றவற்றை; நல்ல கரைப்பானான நீர் கரைத்துக் கொண்டு போய் கடலில் சேர்க்கின்றது. மேற்பரப்பு அழுத்தம் அதிகம் உள்ள நீரில், நெகிழிகள் மிதந்து கடலில் சேர்க்கப்பட்டு, பெரும் தீவுகளாக கடலில் உலா வருகின்றன. மேலும் அதிகரித்து வரும் நீரின் அமிலத்தன்மை காரணமாக பவளப்பாறைகள் மரணிக்க ஆரம்பித்துவிட்டன.
எங்கோ கடலின் மூலையில் தவிக்கும் ஒரு மீனின் துயரம் உங்கள் காதுகளில் விழாமல் போகலாம். நீங்கள் அவற்றிற்கு அனுப்பிய; நச்சு உணவுச் சங்கிலியின் மூலம் வீரியம் அதிகரித்து, உங்களிடம் திரும்ப வரும் என்பதை மறவாதீர்கள்.
நிலத்தடி நீர் மாசடைதல் பற்றி ஏற்கனவே நாம் பார்த்தோம். நீரைப்பொருத்தவரை அடுத்த பிரச்சனை... over exploitation. சக்கையாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பது.
காவேரி பேஸின், முழுக்க முழுக்க over exploitation தான். இதுபோக, கடற்கரையோரம் உப்புநீர் உள்ளே ஏறிக்கொண்டு வருகிறது. போர் போடும்போது - அந்த இடத்தின் சூழலியல், மண்ணமைப்பு, நீர்வளம் பற்றியெல்லாம் கவலையேபடாமல் ஆழமாக செல்லச்செல்ல, சுற்றி இருக்கும் எல்லா நீரும் போர்வெல்லை நோக்கியே வரும்தானே? இதனால் என்ன நடக்கும்? இதுவே கடற்கரையோரம் போர்போட்டால்? இயற்கையாக கடலைநோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நீர் உள்வாங்கும். அந்த நீர் முடிந்தவுடன்... கடல்நீர் உள்ளே வர ஆரம்பிக்கும். இப்படித்தான் விவசாய நிலங்களில் உப்புநீர் உள்ளே ஏறுவது நடக்கிறது.
விவசாயத்திற்கு நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதை எப்படி குறை சொல்ல முடியும் என்று தோன்றுகிறதல்லவா?
“விவசாயத்திற்குத் தேவையான நீர் இதுபோன்ற முறைகளின் மூலமாகவா பண்டையத் தமிழகத்தில் எடுத்தாளப்பட்டது? “
“அப்போதைய தமிழகம் எவ்வாறு மருதநிலத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்தது?”
இவற்றிற்கான விடையை அறிய நாம் மருத நிலத்திற்குச் செல்லவேண்டியுள்ளது.
No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...