Saturday, November 29, 2025

இலகுலீசர் (ஆதியோகி: அத்தியாயம் 21)

வயல்கள் மீண்டும் அமைதியாகின.  
 போரில் சிந்திய இரத்தம் உலர்ந்தது. நிலத்தில் ஒரு புனித மௌனம் திரும்பியது. 

 அந்த நிலத்தில் இருந்த ஒரு  பள்ளத்தாக்குக்கு மேலே உள்ள சிறிய மேட்டில் பசவண்ணா நின்று கொண்டிருந்தார். அவரது பார்வை கீழே இருந்த இரு இளம் உருவங்களின் மீது நிலைத்து இருந்தது. அரசமரத்தின் பரந்த கவிகையின் கீழ் உறவினர்களும் சுற்றத்தார்களும் புடை சூழ பீரப்பாவும் காமரதியும் நின்று கொண்டிருந்தனர். 

பீரப்பா, ஒரு அமைதியான புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார், அவருக்கு அருகில் காமரதி அன்பின் வடிவாக நின்று கொண்டிருந்தாள். 

அவர்களின் திருமணம் எளிமையாக காளியின் ஆசீர்வாதத்துடன் நடந்தது. திருமணம் நடந்த பின்பு  சிவன் பீரப்பாவை நோக்கி முன்னேறி, தன் திரிசூலத்தை பீரப்பாவின் கைகளில் வைத்தார். அவர்களை வாழ்த்தி விட்டு சிவன் தனியாக நடந்து சென்றார்.

அவர் விரும்பிய இணைப்பு இங்கு நிகழ்ந்துவிட்டது. இந்தத் திருமணம் வெறும் இரு மனங்களின் இணைப்பு மட்டும் அல்ல. அது போரினால் அழியவிருந்த இரு தரப்பு மக்களின் இணைப்பு.

 விவசாயத்தை முன்னெடுத்த விவசாய குல மக்களும் கால்நடைகளை ஓட்டிச் செல்லும் ஆயர் குல மக்களும், நிலம் என்னும் முதற்பொருளோடு, பொழுது என்னும் மற்றொரு  முதற்பொருளின் ஒத்திசைவில்,  கருப்பொருளாக இணைந்து வாழவிருக்கும் ஒரு அற்புத நிகழ்வு அந்த திருமணத்தின் மூலம் தொடங்கியது.

 ஆயர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில்  மழையின் முதல் சாரல் தொடங்கும் முன்னர், அவர்கள் தங்கள் புனித இடம்பெயர்வைத் தொடங்கினர். அவர்கள் மழையின் தாளத்தை பின்பற்றினர். போகும் இடம் எங்கும் வளத்தை விதைத்துச் சென்றனர்.நிலம் அதற்கு ஏற்ப பதிலளித்தது. விவசாய குலமக்கள் அந்த வளத்தினால் செழித்தனர்.

 நிலத்தில் வாழ்ந்து வந்த எரும்பில் தொடங்கி ஓநாய்கள் வரை அங்கு இருக்கும் அனைத்து உயிரிகளும் அங்கு வாழ்ந்து வந்த மக்களால் மதிக்கப்பட்டன.  அனைத்து உயிர்களும் அங்கு சமமாகக் கருதப்பட்டன. சாம்பல் நிற ஓநாய்களைக் கண்டு கூட அவர்கள் அஞ்சவில்லை. அவற்றைக் கொல்லவும் அவர்கள் எண்ணம் கொள்ளவில்லை. ஒரு ஓநாய் முன்னால் ஓடினால், மூன்று நாட்களில் அடுத்த பள்ளத்தாக்கில் மழை வரும்  என்று ஆயர்கள் நம்பினார்கள். அவை தங்கள் ஆடுகளை உணவாகக் கொண்டால், இறைவன் தங்களை ஆசீர்வதித்ததாக எண்ணி மகிழ்ந்தனர்.

 அந்த நிலத்தில் ஓநாய்கள் முதலிய கொலுண்ணி விலங்குகள் மனிதர்கள் தொந்தரவு இன்றி தங்குவதற்கு ஏற்ப ஒரு காடு இருந்தது. அது தெய்வம் உலாவும் காடு... தேவரு காடு.

 தமிழில் கோயில் காடு என அழைக்கப்படுபவை அந்தக் காடுகள். அவை மிகவும் புனிதமான காடுகள். 

 இங்கனம் மல்லப்பா என்றும் கண்டோபா என்றும் அவர்களால் அழைக்கப்பட்ட கடவுள் காட்டிய புனித பாதையின் வழி தலைமுறை தலைமுறையாக பயணித்தபடி இருந்தனர் அந்த ஆயர்கள்.  எத்தனை நகரங்கள் முளைத்தாலும், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் அவர்களின் அந்த புனித நகர்வு நிற்பதே இல்லை.

இந்த இடம்பெயர்வைக் குறிக்க ஏடுகள் இல்லை...  
சுவடிகள் இல்லை....
கொடிகள் இல்லை... 
மன்னர்கள் இல்லை...

எந்த ராஜ்ஜியத்தையும் விட இவை பழமையானவை. எந்த தெய்வத்தை விடவும் இவை புனிதமானவை.   

 இதை அவர்கள் தங்கள் தொழில் முறையாக பின்பற்றவில்லை  வாழும் முறையாக பின்பற்றினார். இறைவனால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியாக இந்தத்தொழிலை அவர்கள் கருதினர். 
 
அந்தப் பணியை செவ்வன மேற்கொண்ட  அவர்களை சந்ததிகள் பல கடந்தும்  இந்த நிலம் வாழ்வாங்கு வாழ வைத்தது. 

ராஜ்ஜியங்கள் பேராசையால் மண்ணை எரித்தபோதும், இந்நாட்டில் போர்கள் பல நிகழ்ந்த போதும், ஆயர்கள் இந்தப் பாதையின் வழி நடப்பதை மறக்கவில்லை.

அவர்கள் இந்த புனித நிலத்தை  உணவளிக்கும் இயந்திரமாக பார்க்கவில்லை. 

 நிலத்தோடு உரத்தை சேர்ப்பது அதிக விளைச்சலை தரும் என்பதே தற்போதைய அறிவியலின் எண்ணமாக இருக்கிறது.

அது உண்மைதான். ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டு தான் வரும். ஆனால் ஆயர்கள் பின்பற்றிய கணக்கில், ஒன்றும் ஒன்றும் உறவாடி மூன்றாகியது.

 ஒன்று ஒன்றும் சேர்வதினால் இரண்டு வரும் என்பது ஒரு எளிய கூட்டல் கணக்கு. ஆனால் ஆயர்கள் பின்பற்றியது வாழ்வுக்கான கணக்கு.

 இந்தக் கணக்கில் பரிணாமங்களின் உறவாடல் நிகழ்ந்தது.

 இந்த நிலத்தில் சிவனின் முன்னெடுப்பால் நிலம் எனும் பரிணாமம் பொழுது எனும்  பரிணாமத்தோடு உறவாட வைக்கப்பட்டு, விளைச்சல் வேகம் என்னும் மூன்றாம் பரிணாமம் உச்சமடைய வைக்கப்பட்டது. 

 பொதுவாக நாம் பிரபஞ்சத்தை மூன்று பரிணாமங்களில் பார்க்கின்றோம். சரியாக சொல்வதென்றால் வெளியின் மூன்று பரிணாமங்கள் மற்றும் காலத்தின் ஒரு பரிணாமம் . 

வெளியின் பரிணாமங்களில் நாம் முன்னும்  பின்னும் மேலும் கீழும் நகரலாம். ஆனால் காலத்தில் நாம் முன்னோக்கி மட்டுமே நகர முடியும். நடந்ததை நம்மால் மாற்ற முடியாது. எனவே இந்தக் கால பரிணாமத்தை அனுமானித்து, ஆறாம் அறிவு  கொண்டு சிந்தித்து, பொழுதை நமக்கு உகந்ததாக பயன்படுத்திக் கொள்வதே எந்த ஒரு நாகரிகத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

 நிலம் என்னும் பரிணாமத்தோடு பொழுது என்னும் பரிணாமம் உறவாடும் பொழுது, உயிர்கள் அந்த நிலத்தில் நிலைத்து நீடித்து வாழ வழிவகை செய்யப்பட்டது . 

நிலம் + பொழுது = உயிர்ப்பு.

இது ஒரு எளிய கூட்டல் இல்லை, ஒரு புனிதத் தாளம். 

வெளி மற்றும் காலத்தின் இணக்கம். 

வெளியும் காலமும்  பிரபஞ்சம் நெய்யப்பட்டதும் பிறந்த முதல்  பரிமாணங்கள்.

  நமது தற்போதைய இயற்பியல் விதிகள் செல்லுபடியாகாத  சுத்த சிவ  நிலையிலிருந்து தான் அனைத்தும் ஆரம்பித்தது. இன்று நமக்குத் தெரிந்த வெளியும் காலமும் தோன்றுவதற்கு முன்பு, ஒரு ஒற்றை புள்ளியில் இருந்து தான் இந்த பிரபஞ்சம் பிறந்தது.

பின்னர்,  ஆரம்ப பிரபஞ்சத்தை நீட்டி, மூன்று 'வெளிப் பரிமாணங்களையும்' ஒரு 'காலப் பரிமாணத்தையும்' நிலைப்படுத்தி, இன்று நாம் காணும் பிரபஞ்சம்  உருவாகியது. 

இந்த வெளி மற்றும் காலம் என்னும் நாடக மேடையில் தான் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்களின்  வாழ்வு அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இந்த இணைப்பு வெறும் பயிர்களைத் தாங்கவில்லை; அது உயிரையே சாத்தியமாக்கியது.

இவை வெறும் வளங்கள் இல்லை.  

இவை  நாகரிகத்தின் முதன்மையான முன்னுரிமைகள்.  

இதைப் புறக்கணித்த என்ன நாகரிகமும் நம்முடன் இப்போது இல்லை.

இவற்றை புறக்கணித்தால், தெய்வங்களும் வீழ்ச்சியடையும். 

இவற்றை மதித்தால், உயிர் சமநிலையில் மலரும்.

இது ஒரு கூட்டல் சமன்பாடு இல்லை.  
இது ஒரு ஆற்றல் நடனம்!

இது ஒரு சிவ சக்தித் தாண்டவம்!!

 நிலமானது பெரும் பொழுதுடன்  இணக்கமாக  சமநிலையில் சந்தித்தபோது,  செழிப்பு எழுந்தது

இந்தத் தாண்டவம் ஒத்திசைத்து நடக்கும்  இடத்தில் தான் தெய்வங்களும் குடியேற முடியும். அந்த தெய்வமே அங்கிருக்கும் கருப்பொருட்களில் முதன்மையான கருப்பொருளாக இருந்து  மற்றேனைய கருப்பொருட்களை காத்து நிற்கும்.  

 மக்களும் அந்த கருப்பொருட்களில் ஒன்றாக இணக்கமாக வாழத் துவங்கினர்.  

 கருப்பொருள் என்பது ஒவ்வொரு நிலப்பரப்புடனும் பிணைந்த வாழ்க்கையின் குறியீட்டு சாரம்:   அவர்கள் வணங்கிய கடவுள்கள்,  அவர்கள் உண்ட உணவு,
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்,  அங்கு வாழ்ந்த மக்கள்,  அவர்கள் பின்பற்றிய தொழில்கள்,  அவர்களது பாடல்கள், சடங்குகள்,  அனைத்தும் அதற்குள் அடக்கம்.

 இதுவே சிவன்  நமக்கு கட்டமைத்துத் தந்த  வாழ்வு முறை.

 இந்த வாழ்வு முறையே நமது நாகரிகத்தின் அடிப்படைக் கூறு. தென்னகம் முழுவதும் இந்த வாழ்வு முறையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்து வரத் துவங்கின.

 இதை  கட்டமைத்த அந்த சிவனை மக்கள்  மஹாகாலேஸ்வரில் தட்சிணாமூர்த்தியாக வணங்கினர்.
 தட்சிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாமூர்த்தி என்றால் 
 தெற்கு நோக்கி நிற்கும் கடவுள். 

 மக்கள் அவரை கடவுளாக வணங்கினாலும் அவர் அடிப்படையில் ஒரு மனிதன் தான். அந்த மனிதனுக்குள்  ஒரு ஆழமான வலி இருந்தது, வெளியே சொல்ல முடியாத உயிர் நாடியில் ஏற்பட்டிருக்கும் துன்பம் மிகு வலி அது. பிறவியில் இருந்தே அவரைத் துரத்தும் சாபம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் போர் அது. அவரின் உயிர்நாடி எழுச்சி, மக்களால் ஆண்மையின் ஆற்றல் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டது.  ஆனால் அது அவருக்குள் இருக்கும் நோயின் ஒரு அறிகுறி. அவர் எடுத்த நஞ்சின் பக்க விளைவு அது. 

 அந்த அறிகுறியின் காரணமாக அவர் மக்களுடன் புழங்குவதைத் தவிர்த்தார்.   தனது அறிகுறிகளின் வாதையை தணிக்கும் ஒரு குளிர்ந்த இடத்தை நோக்கி அவர் பயணப்பட்டார். அமர்கண்டக்கை நோக்கி அவரது பயணம் அமைந்தது. அது புனித நர்மதை நதியின் பிறப்பிடம்.

ஒரு ஆலமரத்தின் கீழ் அவர் தெற்கு நோக்கி அமர்ந்தார். அவரது உயிர் நாடிக்கு திருப்பி விடப்பட்ட இரத்தத்தின் காரணமாக தாங்கொணா  வலி அவருக்கு நேர்ந்தது.  உயிர்நாடியை நோக்கி குவிக்கப்பட்ட ரத்தத்தை மடை மாற்றுவதற்கு அவர் கால்களை அகற்றி, குதிகால்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி அமர்ந்தார். அந்த ஆசனத்தில் அவர் அமரும் பொழுது அவரது வலி கட்டுப்பட்டது. 

 இதுவே அவர் கண்ட முதல் ஆசனம்! அதுவே அவர் கண்டறிந்த ஆதியோகம்!! அவர்தான் இந்த நிலத்தின் ஆதியோகி!!!

 இந்த யோக ஆசனங்கள் ஆற்றலின் காரணமாக பிறக்கவில்லை, தேவையால் பிறந்தது. வலிகளைத் தீர்க்கப் பிறந்தது.

அந்த நிலையில், நெருப்பு உள்நோக்கி திரும்பியது.  
வலி மறையவில்லை, ஆனால் அது திசை மாற்றப்பட்டது .  அந்த வலியை அவர் உடலில் கரைய விட்டார், மூச்சின் வழியாக வெளியேற்றினார். அவர் யாருடனும் பேச விரும்பவில்லை.
மௌனம் அவரது குணமாக மாறியது.  
அவர் தியானிக்கத் தொடங்கினார்.  

 அவர்  அமர்ந்திருந்த அந்த ஆசனத்தின் பெயர் 'மூலபந்தாசனம் '.

 மூலம் என்றால் , "வேர்... அடித்தளம்..."; பந்தம் என்றால் பூட்டு என்று பொருள்படும்.

 இந்த ஆசனத்தின்  தொடர்புடைய மூலகம் -  நிலம், தொடர்புடைய புலன் - தொடுதல் உணர்வு.

 உலகில் முதன் முதலில் பிறப்பெடுத்தவை ஓருயிர் உயிரினங்கள். ஓருயிர் உயிர்களுக்கு இருந்த ஒரே அறிவு 'தொடுதல் அறிவு'. அந்தத் தொடுதல் அறிவைக் கொண்டுதான் அது தனது இரையைத் தேடியது, இணையைத் தேடியது. இந்த அறிவைக் கொண்டு மட்டுமே அது தனது சந்ததிப் பெருக்கத்தை நிகழ்த்தியது.

ஓறறிவாகிய தொடு உணர்வே, காமத்தின் நிலைக்கண்!

உடல் முழுவதும் இரத்தம் ஓடிக்கொண்டு இருந்தாலும் அதற்கு இயக்க மையமாக இருதயம் இருப்பதுபோல்,  இந்த உயிரின் இயக்க மையமாக இருப்பது  மூலாதாரம். ஆனால் தீண்டல் இச்சையினால் உந்தப் பட்டு இருக்கும் வரை, மூலாதாரத்தில்  மையம் கொண்டு இருக்கும்  உயிரின் இருப்பை மனது அறிவதில்லை.

படைப்புத் தொழிலின் ஆதாரம் இங்குதான் ஒரு பாம்பு போல் உறங்குகிறது. தொடுதல் உணர்வு தரும் இன்பத்தில் மயங்கி, அந்த ஆற்றல் அங்கு மட்டும்  செயல்படும்போது, ஓறறிவு உயிராக மட்டுமே நாம் இருக்கிறோம். இந்த உண்மை அவருக்கு தியானத்தின் மூலம் உணர்த்தப்பட்டது. 

 அதிகப்படியான பாலியல் ஆசையைக் கட்டுப்படுத்த முலாபந்தாசனம் உதவுகிறது என்றும்,  இந்த ஆசனம் மூல சக்கரமான மூலாதாரத்தை செயல்படுத்துகிறது என்பதையும் அவர் கண்டறிந்தார் . 

 அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அவர் தியானிக்கத் தொடங்கியதும் அந்த வனத்தில் இருக்கும் விலங்குகள் அனைத்தும் தெய்வீக வாக்கிற்கு கட்டுப்பட்டது போல் அவரை சூழத் தொடங்கின.
 அவர் தனிமையை விரும்பி தியானத்தில் அமர்ந்தாலும், மனிதர்கள் அவரை தனித்து இருக்க விடவில்லை.

ஹரப்பாவில், ஒரு காலத்தில் துடிப்பாக இருந்த நகரங்களில் நோய்கள் பரவத் தொடங்கின. கழிவு நீரால் வியாதிகள் பரவின. எனவே, அவர்கள் தங்களைக் காக்க வேண்டி மற்ற நாடுகளுக்கு தூதர்களை அனுப்பினர். வேளிர்களும்  யாதவர்களும் தம்மைக் காக்க அவதரித்த கடவுளை பற்றி ஹரப்பர்களுக்கு செய்தி அனுப்பினர். ஹரப்பர்கள் நர்மதியின் பாதை வழியே பயணப்பட்டு சிவனை அடைந்தனர்.

அவர்கள் சிவனை  மரங்களிடையே விலங்குகளுக்கு மத்தியில் கண்டனர். அவர் அவர்களை அறிவால் குணப்படுத்தினார்.  அவர் அந்த மக்களுக்கு  கழிவு நீர் குழாய்களை அமைக்கவும், மூலிகைகள் மற்றும் நஞ்சுக்களால்  சிகிச்சையளிக்கவும், உடலை பலப்படுத்தும் யோக முறைகளையும் கற்றுக் கொடுத்தார் . 

 அவரது முன்னேற்பாடுகளால் அந்த நாகரீகம் அழிவிலிருந்து மீண்டது. புதிய கடவுளின் புகழ் மேலும் பரவத் தொடங்கியது.

ஆனால் அவர்கள் சிவனை தவறாகப் புரிந்து கொண்டனர்.

 சிந்து நதி நாகரிக மக்கள்,  ஆயர்களாக இருந்த பொழுதும், பசுக்களை விட   காளைகளே அவர்களை அதிகம் கவர்ந்தது. அவர்களது  சின்னங்கள் முழுக்க காளைகளே நிரம்பி இருந்தன. 

 காளைகள் ஆண்மையின் அடையாளம். ஆற்றலில் வெளிப்பாடு.

 ஆண்மையையும், வீரத்தையும், ஆற்றலையுமே அவர்கள் போற்றத்தக்கதாக கருதினர். சிவனையும் அவர்கள் ஆற்றலின் மறு உருவமாகத்தான் கருதினர். அவரது உயிர்நாடி எழுச்சி அதீத ஆற்றலின் பிரதிபலிப்பாகக் கருதப்பட்டது.

 தமிழர்களின் ஆதி குடிகளுக்குச் செய்யப்படும் அலங்காரமாகிய கொம்பு மற்றும் தோகை தலைப்பாகையுடன்  கூடிய, மூன்று முகங்கள் கொண்ட அவரது உருவத்தை ஆண்மை எழுச்சி அறிகுறியுடன் அவர்கள் அச்சில்  வடித்து வணங்கத் தொடங்கினர். 

 ஆனால் சிவன் தனது உருவத்தை வணங்குவதை விரும்பவில்லை. எனவே உருவம் அற்ற லிங்கத்தை அந்த மக்கள் ஆற்றலின் உருவமாக வணங்க ஆரம்பித்தனர்.

ஆனால் சிவனை ஏற்கனவே வெறுப்புடன் பார்த்த வடக்கு மன்னன் தக்ஷன், இதை தெய்வ அவமதிப்பாகக் கண்டான்.

லிங்கச் சின்னங்கள் தக்ஷனை  அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.
“இந்த சிஷ்ணதேவர்கள்,” அவன் இகழ்ந்தான், “அவர்கள் ஆண்மையை வணங்கத் துணிகிறார்கள். அசிங்கத்தை பின்பற்றுகிறார்கள்… புனிதத்தை அவமானமாக மாற்றுகிறார்கள்.” என்று ஆவேசப்பட்டான்.

//ரிக்வேதம் VII. 21-5. சிஷ்ணதேவனை (லிங்கத்தினை) தெய்வமாகக் கொண்டோர் எமது புனித (வழிபாட்டிற்கு) இடத்திற்கு வராதிருக்கக் கடவர்.//


மூன்று முகம் கொண்ட சிவனை காணும் பொழுதெல்லாம் தஷனுக்கு கோபம் பொங்கியது. அவனது தந்தைக்கு ஐந்து முகங்கள் இருந்தன. அதில் ஒரு முகமான  தன்முனைப்பை சிவன் அழித்து விட்டதாக அவன் கருதினான் 

  இந்த முகங்கள் ஒரு மனிதனின் கோபம் சாந்தம் போன்றவற்றை குறிப்பன என்றும் ஆக்கல் அழித்தல் காத்தல் போன்றவற்றை குறிப்பன என்றும் குறிப்பிடுகின்றனர். உண்மையில் சிவனுக்கு இருப்பதும்  ஐந்து முகங்கள் தான். 

இந்து சைவ ஆகமப் பாரம்பரியத்தின் படி, சிவன் ஐந்து தெய்வீக செயல்களை நிகழ்த்துவதாக சைவர்கள் நம்புகின்றனர்: ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (பாதுகாப்பு), ஸம்ஹாரம் (அழிவு), அனுகிரகம் (அருள்), திரோகணா/அவித்யா (மாயை).

இந்த ஐந்து செயல்களில் முதல் மூன்று செயல்கள் சிவனின் முகங்களோடு தொடர்புபடுத்தப்படுகின்றன: ஹரப்ப சின்னத்தில் இருக்கும் மூன்று முகங்களைத் தவிர பின்னாலும் முகம் மறைந்துள்ளது.

 ஆனால் ஆதியில் வழிபடப்பட்டது வெறும் லிங்கம் மட்டுமே. அந்த லிங்கமும் ஆவுடையில்லாத லிங்கம். அது வெறும் ஆண்மையின் ஆற்றலைக் குறிக்கும் லிங்கம்.

 தமிழர்கள் ஆதியில் வழிபட்ட ஐவகை நிலத்தின் தெய்வங்கள் அனைத்தும் தொழில் நிமித்த அல்லது ஆற்றல் நிமித்த வெளிப்பாடுகள். 

 ஹரப்பர்கள் லிங்கத்தையும் ஒரு மனிதனது ஆற்றல் வெளிப்பாடாகக்  கருதினர் 

 இந்த வழிபாட்டு முறைகளைக் கண்டு சிவனும் வருத்தம் கொண்டார். தன்னை பின்பற்றுபவர்களும் சரி, தன்னை எதிர்ப்பவர்களும் சரி, தனது கொள்கைகளை புரிந்து கொள்ளாதது சிவனுக்கு வருத்தத்தை அளித்தது. மேலும் மன ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் அவர் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். அந்த வருத்தத்துடன் அவர் நர்மதி நதிக்கரையில் உலாவிய பொழுது லிங்க வடிவில் ஒரு கல்லைக் கண்டார்.

 வெள்ளை மற்றும் பழுப்பு நிற கோடுகளுடன்  அது காட்சியளித்தது. அது இரு வேறு கற்களின் இணைப்பு.

  அதைக் காணும் பொழுது சிவனுக்கு சமநிலை தத்துவம் நினைவுக்கு வந்தது.
இது பின்னர் மக்களால் பாண லிங்கம் என அழைக்கப்பட்டது.  இதையும் மக்கள் லிங்கம் வழிபடத் தொடங்கினர்.

 சிவன் முன்னிறுத்தியது கொள்கைகளை தான். அந்தக் கல்லின் மூலம் உணர்த்தப்படும் உருவகமான உண்மையைத்தான் அவர் வலியுறுத்தினார். அந்தக் கல் உணர்த்திய தத்துவம் தான் சிவனின் கொள்கை. சிவனின் சித்தாந்தம்.

 சிவனுக்கு வழிபடக்கூடிய கற்களில் சக்தி இல்லை என்பது தெரியும்.

 மக்கள் வழிபட வேண்டியது, அது போதிக்கும் பாடம். 

அந்தக் கல்லை அவர் எதிர் துருவங்களின் இணைப்பாக கருதினார். இரு வேறு ஆற்றல்களின் சங்கமமாக கருதினார். 

தெய்வீகம் என்பது அதீதமான ஒன்றல்ல. தெய்வீகம் என்பது இரு அதீத  ஆற்றல்களின் ஒத்திசைவினால் பிறந்த சமநிலை.  

இரவும் பகலும்...
ஆணும் பெண்ணும்...
வீரமும் காதலும்...
சிவனும் சக்தியும்.  

 என்று அதீத ஆற்றல்களின் சங்கமம் நிகழும் பொழுதுதான் தெய்வீகம் பிறப்பெடுக்கும்.

 இந்த இணைப்பு  இல்லாமல், படைப்பு இல்லை. 

இதுவே சிவனின் முதன்மையான சித்தாந்தம்.  

 அதீத ஆற்றலின் வாதையை அனுபவித்துக் கொண்டிருந்த சிவனை இன்னும் சக்தி  அரவணைக்கவில்லை . அந்த அரவணைப்பினால் மட்டுமே அவரது உடல் சமநிலையை அடையும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

 அந்த அரவணைப்பின் அடித்தளம் 'அன்பு' எனும் உரிப்பொருள்.

 முதற் பொருளையும் கருப்பொருளையும் ஆதாரமாகக் கொண்டு ஜீவித்திருக்கச் செய்யவல்ல உரிப்பொருள் 'காதல்' மட்டுமே.

அதுவே புனிதம். 

அன்பே தொழத்தக்கது.

அன்பே சிவம்.

 சிவனது அடிப்படைக் கொள்கையான சமநிலை மற்றும் காதலை ஒரு சேர வலியுறுத்தும்  முக்கிய சின்னமே ஆவுடையோடு கூடிய லிங்கம். 
.  
ஆனால் சிவனின் இந்த சித்தாந்தம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த சித்தாந்தம்  வேதாந்தத்திற்கு எதிரான கருத்தாகக் கருதப்பட்டது.

 அதனால் அந்த லிங்கங்கள் உடைக்கப்பட்டன,  அவரது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. அவரது சித்தாந்தங்கள் மாற்றியும் மறுத்தும்  எழுதப்பட்டன. 

 இதன் காரணமாக அவரது கொள்கைகள் சிதறடிக்கப்பட்டன... நீர்த்துப் போக வைக்கப்பட்டன... மழுங்கடிக்கப்பட்டன...

 இறுதியில் மறக்கப்பட்டன.

ஆனால் முற்றிலுமாக இழக்கப்படவில்லை!

அவரது சித்தாந்தம் எந்தக் கலப்படமும் செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 அவர் தனது சித்தாந்தங்களை பாதுகாக்க மொழியை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார்.

தனது சித்தாந்தங்களை அவர்   தனக்கு ஒருபோதும் துரோகம் செய்யாத... இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காமல் நினைத்துக் கொண்டிருக்கின்ற  ஒரு மண்ணின் மொழியில் அவர் விதைத்துள்ளார்.  

 அந்த மண்... தமிழ் மண்! 
அந்த மொழி... தமிழ் மொழி!!

அதன் இலக்கணம் அவர் கூறிய உண்மைகளை, யுகங்கள் பல கடந்தும் தூய்மையாகத் தாங்கியது. 
 
 தமிழ் மண்ணே அவரது சித்தாந்தத்தின் விதை நெல் பாதுகாக்கப்படும் இடம். 
 தமிழ் மொழியின் இலக்கணமே அவரது சித்தாந்தத்தின் மூலப்பிரதி.

இந்தக் கொள்கைகளை தமிழர்கள் தங்கள் மொழியோடு  கலந்துப் பழகி, பயின்று, வாழ்ந்து வருகின்றனர் 

 தமிழர்களால் தங்கள் மொழியையும் கொள்கைகளையும் நீர்த்துப்போகச் செய்யும் எதையும் அனுமதிக்க மனம் ஒப்பவில்லை. 

 சிவன் தங்களில் ஒருவன் தங்களுடையவன் என்பதில் தமிழர்களுக்கு எள்ளளவும்  சந்தேகம் இல்லை.  

இருப்பினும் அவன் தங்களுக்கானவன் என்று மட்டும் சுயநலமாக அவர்கள் எண்ணவில்லை. 

சிவனது சித்தாந்தங்கள் அனைத்து நாட்டினருக்கும்  உரித்தானவை. அனைத்து நாட்டினருக்கும் அவசியமானவை. ஏனெனில் உலகினை காக்கக்கூடிய சித்தாந்தங்கள் அவை.

இன்றும் உலகம், விளைச்சலுக்காக வேகமாக ஓடுகிறது...
சமநிலையை மறந்து தீவிரங்களைத் துரத்துகிறது... அதீதங்களின் பின் அலைகிறது.

அது ஓநாயைக் கொல்கிறது.  
மண்ணை விஷமாக்குகிறது.  
ஆடுகளின் இடம்பெயர்வின் தாளத்தை புறக்கணிக்கிறது.
மழைப் பாதைகளின் புனிதத்தை அது மறுதலிக்கிறது. 

இதன் விளைவாக அழிவை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

 அந்த அழிவில் இருந்து காக்க வல்லவை சிவனின் கொள்கைகள்.

அவரது கொள்கைகளால் தான் இந்த உலகம் காக்கப்படப் போகிறது. 

 தென்னாட்டு சிவனது சித்தாந்தம்,  எல்லா உயிர்களையும் காக்க வல்லது!

 அந்த சித்தாந்தம்  எந்நாட்டவர்க்கும் பொதுவானது!!

 அதுவே இறையாகத் தொழத்தக்கது!!!
        
                                                                      -------===------

                                          தென்னாடுடைய சிவனே போற்றி!
                             எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. போற்றி!!




                                                                    -------===------
                                                         முதல் பாகம் முற்றும்.

Friday, November 21, 2025

அளவிலாப் பெம்மான் (ஆதியோகி: அத்தியாயம் 20)

காலைக் கதிரவன் பீம்பேட்கா சமவெளியின் விளிம்பில் மெதுவாக உயர்ந்து கொண்டிருந்தது. அந்த ஒளி பாறைச் சுவர்களில் தீட்டப்பட்டிருந்த  பழமையான ஓவியங்களைத் தொட்டபோது, அவை உயிர் பெற்று அசைந்தது போலத்  தோன்றியது.  இளஞ் சிவப்பு நிறத்தில் இருந்த  அந்தக்  காலை ஒளி, போர்க்களத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்த படைகள் மீது பட்டு, நீண்டு விரியும் நிழல்களை தரையில் படறவிட்டது. காற்று மிகவும் கனமாகவும் அசைவற்றும் இருந்தது. அது அந்த  சூழ்நிலையின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்திக் காட்டியது. அன்றைய தினத்தில்  பீம்பேட்கா சமவெளி இன்னொரு காவியத்தின் பிறப்பை காணத் தயாராகி கொண்டிருந்தது.

 அந்தப் பிரதேசத்தில்  வீரர்கள் எழுப்பும் காலடித்தடத்தின் ஒலியைத் தவிர வேறு எந்த சப்தமும் எழவில்லை. பறவைகள் கூட எந்த ஓசையையும் எழுப்பவில்லை. இயற்கை முழுவதுமே நிம்மதியின்றி, நடக்கவிருக்கும் நிகழ்வை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. இரு பக்கத்து படை வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிரே,  ஒரு மயான அமைதியில்  நின்றனர். 

ஒரு பக்கம் பீரப்பாவின் படைகள் நின்றன. அவர்கள் குறிஞ்சியின் மலைகளிலும், முல்லையின்  அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.  மலைகளின் பாறைகளைப் போல  உறுதியானவர்கள், மேய்ச்சல் நிலங்களின் நெடிய புயல்களைப் போன்ற வலுவை பெற்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு பழங்குடிகளிலிருந்தும் வந்திருந்தாலும், இன்று அவர்கள் அனைவரும் பீரப்பாவின் கீழ் ஒன்றாகத் திரண்டு  தங்கள் ஒற்றுமையையும் பலத்தையும்  நிரூபிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆயுதங்கள் இதுவரையிலும் இந்த உலகம் கண்ட எந்த உலோகத்தையும் ஒத்திருக்கவில்லை. அவை இதுவரை அந்த மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் அல்ல.  அந்த ஆயுதங்கள் செம்பினாலோ வெண்கலத்தினாலோ செய்யப்பட்டபவை  அல்ல. அவை புனித நெருப்பில் வார்க்கப்பட்டவை.  விஞ்ஞானத்திற்கும் தெய்வீகத்திற்கும்  இடையே பிறந்த ஆயுதங்கள் அவை . 

அந்த ஆயுதங்களைத் தாங்கி நின்ற மக்கள் எவ்வித அசைவையும் காட்டாமல் கல்லைப் போல சமைந்து நின்றனர். மலைப்பாறைகளுக் கூட அஞ்சாத ஒரு அமைதி அவர்கள் முகங்களில் வேரூன்றி இருந்தது. பீரப்பா அவர்கள் முன் நின்றார், அவரது கண்கள் எவ்வித சலனத்தையும் வெளிப்படுத்தவில்லை.

அவருக்கு அருகில் அக்கா மகாகாளி நின்று கொண்டிருந்தார். அவர் பீரப்பாவின் சகோதரி மட்டுமல்ல, அவர்களின் குலத்தின் இதயம், பெண்களின் உயிர், வீரர்களின் துணிவு. அவர் பார்வை, எதிரே நின்ற  படையின் மீது நிலைத்து நின்றது. அவரது பார்வையில் பயமோ கோபமோ தென்படவில்லை. மிகவும் ஆழமான தீர்மானத்தை மட்டுமே அவரது  கண்கள் வெளிப்படுத்தியது. சூரிய ஒளியில் அவரது கருமையான முகம் பிரகாசமாக ஒளிர்ந்தது. அவரது ஒரு கையில் வாளும் மற்றொரு கையில் அரிவாளும் இருந்தது. 

அவர் தனது மக்களுக்கு அன்னையின் அன்பையும் பரிவையும் வற்றாது வழங்குபவர்.அவர் காண்பதற்கு கருங்கல்லில் செதுக்கிய  கொற்றவை போலவே இருந்தார்.  காட்டின் நடுவே  நச்சுப் பாம்புகள் தனது மக்களை தீண்ட வந்தால், முதலில் தன் காலால் அதை மிதித்தவர். கொல்லும் விலங்குகள் வந்தால் அதன் நெஞ்சில் முதல் ஈட்டியை பாய்ச்சியவர்.எதிரிகள் வந்தால், முதலில் எதிர்த்து நின்றவர். 

 அவர் இரக்கத்தின் மறு உருவம். ஆனால் தன் மக்களை , காப்பதில் கடுமையானவர், போரில் இரக்கமற்றவர்.   கொல்லப்பட்ட எதிரிகளின் மண்டையோடுகளை பெருமிதத்தோடு ஆபரணங்களாக அணிந்து கொண்டிருக்கும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தின்  நாகர் பழங்குடியினரை போலவே, அவரும் மண்டையோடுகளை அணிந்தபடி காட்சியளித்தார்.

 அவர் இப்பொழுது தனது சகோதரனுக்குத் துணையாக போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தார்.

 அவர்களுக்கு எதிரே நிற்கும் படை அளவில் பெரியது. அந்தப் படை   தங்களது ரத்தத்தை வேண்டுவதை அவர்கள் அறிந்தே இருந்தனர். ஆனால் அவர்கள்  நெஞ்சில் ஒரே ஒரு தீர்மானம் மட்டுமே இருந்தது. இந்தப் போரில் அவர்கள் நிச்சயம் வென்றாக வேண்டும். ஏனெனில் இன்று அவர்கள் தங்கள் நிலத்திற்காக மட்டுமல்ல; தங்கள் மரபுக்காகவும், தங்கள் நிலத்தின் உயிரின் மூச்சாகிய எதிர்காலத்திற்காகவும் போராடுகின்றனர்.

அவர்களுக்கு எதிரே பசவண்ணா தலைமையில் நின்றது விவசாயப் படை. ஒரு காலத்தில் பரிவையும் பாசத்தையும் மட்டுமே கொண்டிருந்த  தலைவராக இருந்தவர் அவர். இப்போது தனது மகனின் மரணத்திற்கு வஞ்சம் தீர்ப்பதற்காக போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தார்.  அவரது கண்கள் காளியை வெறுப்புடன் பார்த்தது.

“நான் அவனைக் கொல்ல வேண்டும்,” என்று பசவண்ணா உரக்க கூறினார்.

“நாங்கள் இரத்தம் சிந்த விரும்பவில்லை, ஆனால் பகைக்கு பயந்தவர்கள் அல்ல  நாங்கள். எதற்கும் தயாராக இருக்கிறோம்.” என்று பீரப்பா கூறினார்.

"நானும் தயாராக இருக்கிறேன்,” என்று பசவண்ணா கூறி ஒரு படி முன்னேறினார்.

காளியின் குரல் கூர்மையாக எழுந்தது, “என் சகோதரன் அமைதியைத் தேர்ந்தெடுக்கிறான். அவனுக்கு உங்களைக் கண்டு  பயம் இல்லை.

நான் உயிர்களை மதிப்பவள். ஆனால் எங்களில் ஒருவரைத் தொட்டால், உங்கள் ஒருவரையும் நான் விட்டு வைக்க மாட்டேன் ” என உரக்கக் கூறினாள்.

மலையின் மேலிருந்து தக்ஷனின் சேனாதிபதி இரு படைகள் கூடியிருப்பதை கவனித்துக் கொண்டிருந்தான். 

அவனது முகம் பாறையில் செதுக்கப்பட்டது போல, உணர்ச்சியற்று இருந்தது.“அவர்கள் அதிகம் பேசுகிறார்கள்,” என்று அவன் கூறினான். 

அவனது வீரர்கள் அவன் வார்த்தைகளை பதற்றத்துடன் கவனித்தனர். 

திடீரென்று அவனது முகம் அதிர்ச்சியின் ரேகைகளை வெளிப்படுத்தியது.

“அவர்களின் கத்திகள்… அவை வெண்கலம் இல்லை. இவை என்ன ஆயுதங்கள்? 
இந்தக் வனவாசிகள் இப்படிப்பட்ட ஆயுதங்களை எங்கிருந்து பெற்றார்கள்?” என்று அவன் வியப்போடு கேட்டான்.

“ ராட்சசர்களிடையே ஒரு புதிய கடவுள் உருவாகி இருப்பதாக ஒற்றர்கள் தெரிவித்துள்ளனர், ஒருவேளை அவரது வேலையாக இருக்கக்கூடும்" என்று அவனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வீரன் கூறினான்.

பின்னர் அது தொடங்கியது...  வரலாறுகளில் பதிவாகாத ஒரு யுத்தம், ஆனால் பீம்பேட்காவின் உயிர்ப்புள்ள சுவர்களில் பொறிக்கப்பட உள்ள ஒரு பெரும் போர். 

விவசாயப் படை, மெருகேற்றப்பட்ட வெண்கலத்தில் செய்யப்பட்ட ஆயுதங்களுடனும், செப்பு முனையுடன் கூடிய அம்புகளுடனும் முன்னேறியது.

 ஆனால் அவர்களின் வெண்கலம் பழங்குடியினரின் கத்திகளைத் தாக்கியபோது, வெண்கலம் உடைந்தது. புனித ஆயுதங்கள் உறுதியாக நின்றன.

காளி, தீப்பிழம்பின் உருவாக, போர்க்களத்தின் நடுவில் புயல் போல இருந்தார்.

 அவர் ஒரு தேர்ந்த வேட்டையாடி. இப்பொழுது அவர் மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருந்தார். 

அவர் தளைகளில் இருந்து  விடுவிக்கப்பட்ட ஒரு போர்க்கடவுள் போலக் காட்சியளித்தார் .
 
ஒரு விவசாய குல பெருவீரன்,  அவர் மீது வெண்கலக் கோடரியை உயர்த்தினான். அவர் குனிந்து, புழுதியில் சறுக்கி, பாய்ந்து வரும் புலியைக் கூட நிறுத்த வல்ல ஒரு கூச்சலுடன்,  வாளை  அவன் வயிற்றில் குத்தி மேலே இழுத்தார். அவன் நைந்து போன துணியைப் போல போர்க்களத்தில் வீழ்ந்தான்.

 அவரது கோபம் காட்டுமிராண்டித்தனமாக இல்லை. அது ஒழுங்கானது... பழமையானது...

சாம்பலின் கீழ் உள்ள நெருப்பைப் போல அவரது கோபம் கனன்று கொண்டிருந்தது. 

அவர் தனது கோபத்தையும் வீரத்தையும் நேர்த்தியாக வாள் வீச்சின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

 காளியின் வாள்வீச்சு அழகான ஒரு அப்சரசினுடைய அசைவுகளின் நளினத்தைக் கொண்டிருந்தது.

எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், பழங்குடி வீரர்கள் விவசாயப் படையை அடி மேல் அடி எதிர்கொண்டனர். போர் சமநிலையில் இருந்தது. 

 இதுவரை மழையை மட்டுமே அருந்திக் கொண்டிருந்த  அந்த நிலத்தில் ரத்தம் வழிந்தோடியது. பீரப்பாவும் காளியும் எதிரிப்படைகளை சாய்த்துக் கொண்டிருந்தனர்.

 இதை கண்ணுற்ற சேனாதிபதி கடும் ஆவேசம் கொண்டான். அவனது பார்வை காளியின் மீது நிலை குத்தி இருந்தது  

 “ கரிய நிறத்தில் இருக்கும் அந்தப் பெண் யார் ?” என்று அவன் கோபத்துடன் கேட்டான்.

 சேனாதிபதியின் அருகில் இருந்த ஒரு படை வீரன், " அவர்தான் அக்கா மகாகாளி. அவர் உஜ்ஜைனியின் பழங்குடி மக்கள் தலைவி, பீரப்பாவின் சகோதரி " என்று கூறினான்.

“நாம் இந்த ராட்சசர்களை குறைத்து மதிப்பிட்டு விட்டோம்… அவர்கள் பூதகணங்களைப் போல போரிடுகிறார்கள்.” என்று கூறிவிட்டு கோபத்தில் சேனாதிபதி தனது வாளின் கைப்பிடியை இறுக்கிப்பிடித்தான்.

 “ இதற்கு மேலும் நாம் அமைதி காத்தால் பசவண்ணாவின் படை வீழ்ந்துவிடும். 

 இந்த மண் இதுவரை குதிரைப்படைகளை பார்த்ததில்லை. குதிரைப் படையின் வேகத்தையும் வாள் வீச்சையும், நிலத்தில் நின்று போராடும் இந்த மக்களுக்குக் காண்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது .” என்று கூறிவிட்டு  அவன் கையை உயர்த்தினான்.

 “தேர்களையும் குதிரை வீரர்களையும் விடுவியுங்கள். போரின் தாளத்தை, குதிரைகளின் வேகத்தை ,  அவர்கள் உணரட்டும்.”

பின்னர் அவன் ஒரு தளபதியிடம் நெருங்கி, “ அங்கே காமரதியோடு பீம்பெட்கா குகைகளில் காத்துக் கொண்டிருக்கும் நமது வீரர்களுக்கு செய்தி அனுப்பு. காமரதியின் தலையை எனக்கு விரைவில் கொண்டு வா. அது குழப்பத்தை உருவாக்கும். பீரப்பா மற்றும் பசவண்ணா இருவரும்  கட்டுப்பாட்டை இழப்பார்கள். அவர்கள் ஒருவரையொருவர் ஆவேசத்தோடு தாக்கிக் கொள்வார்கள் . பசவண்ணாவின் படையும் இதில் வீழ்ந்தால், இன்னும் சிறப்பு. நம் அரசனுக்கு இரட்டை வெற்றி. அவர்களின் நிலம் எளிதில் நம் வசப்படும்” என்று கூறினான்.

------------------------------------------

பீம்பெட்காவின் பழமையான குகைகளுக்குள், பல்லாயிரமாண்டுகள் பழமையான ஓவியங்களின் பார்வையில், காமரதி தக்ஷனின் ஐம்பதற்கும் மேற்பட்ட  வீரர்களால் சூழப்பட்டு நின்றாள். அவர்கள் தங்கள் கத்திகளைத் தீட்டிக் கொண்டிருந்தனர்.

“ஒரு பெண்ணை ஐம்பது கத்திகளால் சூழ்கிறீர்கள், இதுதான் உங்கள் வீரமா?” என்று காமரதி கேட்டாள்.

ஒரு ஆணும் அசையவில்லை.

“நீங்கள் கோழைகள். பீரப்பாவின் நிழலுக்குக் கூட நீங்கள் சமமாக மாட்டீர்கள்” என்று அவள் வெறுப்புடன் கூறினாள்.

 அவளின் பேச்சை அங்கு இருக்கும் யாரும் மதித்ததாகத் தெரியவில்லை ஒருவன் அவளை நோக்கி ஒரு ஏளனப் புன்னகையை வீசிவிட்டு, கூர்தீட்டப்பட்ட வாளை அவள் கழுத்தை நோக்கி உயர்த்தினான்.

 அப்போது... தூரத்தில் உடுக்கையின் ஒலி சன்னமாகக்  கேட்டது...

 காற்று நடுங்கியது...

 அந்தக் காற்றின் ஊடே  ஒரு மிருகத்தின் குளம்பொலி எதிரொலித்தபடி இருந்தது. ஆனால் அது குதிரையின் குளம்பொலி இல்லை. அதைவிட வலுவான ஏதோ ஒன்றின் குளம்பொலி.

 வீரர்கள் சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தனர்.

 காற்று  வேகமாக சுழன்று, அந்த பிரதேசம் முழுவதும் புழுதி மயமாகக் காட்சியளித்தது. அவர்கள் கண்களுக்கு வருவது யார் என்று தெளிவாகத் தெரியவில்லை.

 பின்னர் காற்றைக் கிழித்துக்கொண்டு  புழுதிக்கு  மத்தியில் வெண்ணிறக் காளை ஒன்று புயல் போல் வந்தது. அதன் மேல் மனித வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட ஒருவர் அமர்ந்திருந்தார்.

 அவர் மின்னலின் வடிவில்  இருந்தார்.  அவரது முடிக் கற்றைகள்   கரிய பாம்புகள் போல சுருண்டிருந்தது, அவரது உடல் சாம்பல் மற்றும் காட்டு மூலிகைகளின் மணத்தால் சூழப்பட்டிருந்தது. அவரது கண்கள்  எரியும் இரு சூரியன்கள் போல இருந்தது. புலித்தோல் அவர் பின்னால் பறந்தது. அவரது ஒரு கையில் மழுவும் மற்றொரு கையில் திரிசூலமும் இருந்தது.

 நிலைமையை புரிந்து கொண்ட ஒரு வீரன் வேகமாக செயல்பட்டான்... அவன் காமரதியின் கரழுத்தை நோக்கி கத்தியை உயர்த்தினான். ஆனால் அதை அவன் வீசுவதற்குள்...

 பறந்து வந்த திரிசூலம் அவனது நெஞ்சில் பாய்ந்தது . புயலின் சிக்கிய மரம் போல் அவன் தூக்கி வீசப்பட்டான்.

காமரதி தலையை உயர்த்தி மேலே பார்த்தாள். அவளது மூச்சு தடைபட்டது. வார்த்தைகள் விம்மியபடி வெளிவந்தது.

 “மகாதேவா... நீங்கள் நிச்சயம் வருவீர்கள் என்பதை நான் அறிவேன் " என்று கண்ணீர் மல்கக் கூறினாள்.

 சிவன் வீரர்களை சிதறடித்தார். அவர் இடி போலத் தாக்கினார், கத்திகள் உடைந்தன.  வீரர்கள்  சிதறினர். 

சாதுமிரண்டால் என்னவாகும் என்பதை உலகம் அன்று கண்ணுற்றது. 


காமரதியை அவர் நந்தனின் மீது ஏற்றிக்கொண்டார். பின்னர் அவர் குகையை விட்டு நீங்கினார். குகை, அவர் பின்னால்  பயத்தில் எரிந்தது.

இதற்கிடையில், பழங்குடிப் படைகள் ஆற்றை எதிர்க்கும் அணையைப் போல போராடின. வெண்கல கத்திகள் இரும்புக்கு எதிராக உடைந்தன. அம்புகள் சீறிப்பாய்ந்தன. கூச்சல்கள் எழுந்தன.

ஆனால் நிலம் நடுங்கத் தொடங்கியது. சேனாதிபதியின் குதிரைப்படை சமவெளியில் இடியோசையுடன்  இறங்கி வந்தது.

பழங்குடி வீரர்கள் அச்சத்துடனும் வியப்புடனும் இந்தக் காட்சியை பார்த்தனர்.  இந்த நிலத்தில் இருக்கும் யாரும் அதுவரை குதிரைகளை பார்த்ததில்லை. தரையின் மீது  நின்று கொண்டு போர் புரியும் வழக்கம் கொண்ட அந்த மக்களுக்கு, குதிரைகளின் மீது வந்து கொண்டிருக்கும் வீரர்களை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. யாரும் இதற்கு முன் இப்படி ஒரு படையை  எதிர்கொண்டதுமில்லை.

இப்போது இரு பக்கங்களிலிருந்து, காளியும் பீரப்பாவும் சூழப்பட்டனர். முன்னால் பசவண்ணாவின் படை, பின்னால் தக்ஷனின் குதிரைப்படை.

“இறக்கத் தயாரா, பீரப்பா?” சேனாதிபதி  ஆவேசமாக கத்தினான், அவரது வாள் உயர்ந்து.

ஆனால் வானம் வேறு பதிலை வைத்திருந்தது.அப்போது,  எருதுகளால் இழுக்கப்பட்ட தேர்கள் காட்சிக்கு வந்தன.

 வேளிர் குலங்கள் வந்துவிட்டன.முன்னணி தேரில் வேள், வேளிர் குலத்தின் அரசன், மேருவைப் போல் நின்று கொண்டிருந்தான்.


:“இது எங்கள் நிலம்! இது எங்களுக்கு இடையேயான பிரச்சனை. எந்த அந்நிய வாளும் எங்கள் மண்ணை உரிமை கொள்வதை நான் அனுமதிக்க மாட்டேன். இங்கு, நான் துரோகத்தின் வாசனையை உணர்கிறேன்.”அவர் குதிரைப்படையை நோக்கி கண்களைச் சுருக்கினார். “ஒரு அடி முன்னேறினால், வேளிர்களின் கோபத்தை எதிர்கொள்வீர்கள்” என்று அவர் சேனாதிபதியை நோக்கி எச்சரித்தார்.

சேனாதிபதி முன்னேறினான், பின்னர் அவன் தனது குரலை உயர்த்தினான், பசவண்ணாவின் வீரர்கள், வேளிர்கள், பழங்குடி வரிசைகள் அனைவரும் கேட்கும் வண்ணம் பேச ஆரம்பித்தான் :“ வேளிர்களின் அரசே... என்னை உண்மையைப் பேச அனுமதியுங்கள்,”  அவரது குரல் அளவாக இருந்தது, ஆனால் வார்த்தைகள் விஷத்துடன் கலந்து இருந்தது. “நாங்கள் இந்த மண்ணை  அழிக்க வரவில்லை... பாதுகாக்க வந்துள்ளோம்.”

“இந்த மனிதன்... பீரப்பா,” அவர் பழங்குடித் தலைவரை கூர்மையாக சுட்டிக்காட்டி, “நீதியின் பெயரில் மறைந்து நிற்கிறான். ஆனால் அவன் உண்மையில் விரும்புவது… பசவண்ணாவின் நிலம்.”

சேனாதிபதி தனது புதிய திட்டத்தை விரிவாக்கத் தொடங்கினான்,

 வேளிர்களையும் மற்றவர்களையும் தாங்கள் பசவண்ணாவுக்கு உதவ வந்ததாக நினைக்க வைக்க, அவன் பீரப்பாவை பசவண்ணாவின் நிலத்தை ஆக்கிரமிக்க எண்ணம் கொண்டதாகவும், அதன் காரணமாகவே  அவரது மகனைக் கொன்றதாகவும், இப்போது காமரதியை கொன்றுவிட முயல்வதாகவும் குற்றம் சாட்டினான். 

 காமராதியை பீரப்பா பீம்பெட்கா  குகைகளில் கடத்தி வைத்திருப்பதாகவும், தக்ஷனின் வீரர்கள் அவளைக் காப்பாற்ற சென்றிருப்பதாகவும், அவர்கள் திரும்பும்போது உண்மை வெளிப்படும் என்றும் கூறினார். 

குழப்பம் பரவியது.காளியின் கண்கள் சுருங்கின. வேளிர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். வேள் அமைதியாக நின்றார், அவரது மனம் சந்தேகத்திற்கும் கோபத்திற்கும் இடையில் சலனமாடியது.

பசவண்ணா, பெரும் வேதனையுடன் பீரப்பாவைப் பார்த்தார். அவரது குரல் துக்கத்தில் நடுங்கியது.“நீ என் மகனைக் கொன்றாய். இப்போது என் மகளையும் பறிக்க நினைக்கிறாய்!” அவர் பெரும் கோபத்துடன் தன் வாளை உருவினார்.

“நான் சொல்வதை சற்றே செவி மடுத்துக் கேளுங்கள்” என்று பீரப்பா பசவண்ணாவிடம் மன்றாடினார். 

ஆனால் பசவண்ணா ஆவேசத்துடன் முன்னேறினார். அவர் வெறிகொண்டு பீரப்பாவை தாக்கினார். பீரப்பா பசவண்ணாவை தாக்கவில்லை. அவர் 
தயக்கத்தோடும் எச்சரிக்கையோடும் அவரது வாள் வீச்சை தடுத்துக் கொண்டிருந்தார், காளி செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தார்.

சேனாதிபதி நடப்பதனைத்தையும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பொறி வேலை செய்தது. எதிரிகளின் ஒற்றுமை உடைந்து கொண்டிருந்தது.

 ஆனால் சேனாதிபதியின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை...

அதுவரை இந்தக் குழப்பங்களை பிரதிபலிப்பது போல் மங்கலாகவும் மேகமூட்டத்துடனும்
 காணப்பட்டிருந்த வானம், தெளிவடையத் தொடங்கியது ... 

உலகின் மூச்சு நின்றது போல, காற்று அடங்கியது...

கதிரவனின் ஒளிக்கீற்று மேகங்களுக்கிடையே ஊடுருவி,  ஒரு ஒற்றைக் கீற்றை வெளிப்படுத்தியது...

அந்த ஒளிக்கீற்றின்  வெளிச்சத்தின் வழியே, மின்னும் கொம்புகளைக் கொண்ட  காளை ஒன்றின் மீது அவர் வந்தார். 

அவரது நெற்றியிலும் உடலிலும் புனித விபூதி பூசப்பட்டிருந்தது, அவரது தசைகள் புயல்களின் வலிமையுடன் அசைந்தன. அவரது நெற்றியில்,  மிளிரும் கண்களுக்கு மேலே, மூன்றாவது கண் ஒன்று  உலகை அமைதியாக உற்று நோக்கியது. மறுபிறவி எடுத்த கடவுளைப் போல அவர் காட்சியளித்தார்.  

 சிறிது நேரத்திற்கு முன்பு வரை கூச்சல்களாலும் மரண ஓலங்களாலும் நிரம்பி இருந்த போர்க்களம், விசித்திரமான அமைதியில் ஆழ்ந்தது. போர் கூட அவரது முன்னிலையில் மூச்சுவிடத் துணியவில்லை.

காமரதி அவருடன், எவ்வித சேதாரமும் இன்றி அமர்ந்திருந்தார். 

இதைக் கண்ட  பீரப்பாவின் முகம் ஆனந்தத்தால் பிரகாசமாகியது.

பசவண்ணாவின் கைகளில் இருந்து வாள் நழுவியது.

 சேனாதிபதியின்  கண்கள்  வியப்பினால்  விரிந்தன. அவனது முகத்தில் அச்சத்தின் ரேகைகள் படரத் துவங்கின. அவன் பொய்களால் கட்டி எழுப்பிய கோபுரம் சரிந்து கொண்டிருந்தது.

 வேளிர் வீரர்களின் முகங்கள் ஆச்சரியத்தில் விரிந்தது . 

அனைவரின் பார்வையும் சிவனின் மேல் பதிந்தது.

அந்த கணத்தில் தங்களின் காப்பாளர் வந்துவிட்டார் என்பதை  உலகம் அறிந்தது. போர்க்களம் முழுவதும் அமைதியாக அவரை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

 ஒருவன் மட்டும் அந்தப் புனித அமைதியை பயன்படுத்திக் கொண்டு விரைவாக செயல்பட்டான். 

தான் தோல்வியடைந்ததை சேனாதிபதி அறிந்து கொண்டான். அவனது முகம் பயத்தின் ரேகைகளை வெளிக்காட்டியது. கதை அவன் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருந்ததை அவன் அறிந்தான்.

 ஆயினும் அந்தக் கதையின் இறுதி வரிகளை அவன் எழுதி விட எண்ணம் கொண்டான்.

 அவன் யாரும் அறியா வண்ணம் ஒரு சிறிய குறுவாளை உரையிலிருந்து வெளியே எடுத்தான். அந்தக் குருவாள் ஒரு கொடிய நெஞ்சினை தாங்கியிருந்தது.

 தேர்ந்த வீரனான அவன், அதை நேராக பீரப்பாவின் முதுகை நோக்கி வீசினான். அது பறக்கும் ஒரு நாகத்தை போல்  சீறிப்பாய்ந்து பீரப்பாவின்  முதுகில் பதிந்தது.

 கத்தியை முதுகில் தாங்கியதும் கோபமடைந்த பீரப்பா கத்தி வந்த  திசையை நோக்கி திரும்பினார். 

 " முன் நின்று தாக்காமல், பின் நின்று தாக்கும் நீ வீரனா? கோழையே... உனது கதையை முடிக்கிறேன்" என்று ஆவேசத்துடன் சேனாதிபதியை நோக்கி பீரப்பா முன்னேறினார். 

 இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் கால்கள் தளர்ந்து பூமியில் விழுந்தார் பீரப்பா. அவரது உடலில் நீலம் பாயத் துவங்கியது.

 சேனாதிபதி ஒரு ஏளனப் பார்வையை பீரப்பாவை நோக்கி வீசினான். 

 இதைக் கண்ட காளி கடும் கோபம் கொண்டார்.  

அவர் கோபத்தில் கொற்றவையைப் போலப் பாய்ந்து, சேனாதிபதியின் நெஞ்சில் உதைத்தார். அவன் பின்னால் பறந்து, புழுதியில் மோதி விழுந்தான். காளி அவனது கூந்தலைப் பற்றி, வாள் கொண்டு ஒரே  வீச்சில்  அவனது தலையை வெட்டினார்.

தக்ஷனின் வீரர்கள் பயத்தில் பின்வாங்க ஆரம்பித்தனர். பின்னர் அவனது   படை வடக்கு நோக்கி ஓடியது, 

காளி பதட்டத்துடன் பீரப்பாவின் பக்கம் ஓடினார். பீரப்பாவின்  உடல் ஜில்லிட ஆரம்பித்தது, தோல் அசாதாரணமாக நீல நிறத்தில்  இருந்தது. 

பீரப்பாவின் முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று தோன்றியது.  .“பசவண்ணா… இறுதியாக… உங்களது  சந்தேகங்களுக்கு… விடை கிடைத்துவிட்டது.... இனி நான் நிம்மதியாக மரணிப்பேன்...” என்று வலியோடும் வேதனையோடும் கூறினார்.

பசவண்ணாவின் வாள் நழுவியது. அவர் மண்டியிட்டார், அவரால் பேச முடியவில்லை.

பீரப்பா சிவனையும் காளியையும் பார்த்து பேசத் துவங்கினார் "என் சகோதரி… காளி… என் சகோதரர்… மல்லப்பா… உங்கள் முன் இறப்பது… எனக்குப் பெருமை .”

 பின்னர்  அவர் பலவீனமாக காமரதியை நோக்கித் திரும்பினார். “நாம் இந்த முறை… ஒன்று சேர முடியவில்லை… என்னை மன்னித்து விடு காமரதி... " அவரது கண்கள் மூடத் துவங்கியது.

சிவன் பீரப்பாவிற்கு அருகில்  மண்டியிட்டார். அவர் மணிக்கட்டில் விரல்களை வைத்து  பீரப்பாவின்
நாடியைப் பரிசோதித்தார். அவர் சில மூலிகைகளை நசுக்கி,  பாஷாணங்களின் கலவையை கரைத்து  பீரப்பாவின் நாக்கின் கீழ் வைத்தார்.

பீரப்பாவின் உடல் தெளிவடைந்தது... அவர் மூச்சு விடத் துவங்கினார்.

 இதைக் கண்ட  வேளிர்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது...

" மரணிப்பவர்களை எழுப்புபவர் வந்துவிட்டார்"

“அவர் மனிதர் இல்லை” 

“அவர் மாயோனின்… மறுபிறவி"

வேளிர்கள் பிரமிப்பில் தங்களுக்கு இடையே பேசிக்கொண்டனர். 

"அந்த நீல நிறக்கழுத்து...அவர்... மிடற்றண்ணல்!!!"

" நமது பழைய ஓலைச் சுவடிகள் முன்னறிவித்தவர்."

"கடற்கோளால் அழியவருக்கும் நமது குலத்தை காக்க வந்த அளவில்லாப் பெம்மான் அவர் "வேளிர்களின் தலைவன் வேள் உரக்கக் கூறினான்.

 பின்பு அவன் சிவனின் முன்பு  மண்டியிட்டான். அவனைத் தொடர்ந்து அனைத்து வீரர்களும் சிவனின் முன்பு மண்டியிட்டனர்.
-------

 இவ்வாறு பீம்பேட்காவின் போர் முடிவுக்கு வந்தது. நிலம் தூக்கத்தில் இருந்து மீண்டது. நிலத்திற்கான சண்டை முடிவடைந்தது.

 வளத்திற்கான சண்டையே இந்த பூமியில் பல கோடி ஆண்டுகளாக உயிர்களிடையே  இதுவரையிலும் நிகழ்ந்து வந்திருந்தது. அப்படி நிலத்திற்கான போட்டியாக ஆரம்பித்த இந்தப் பெரும் போர், இணக்கத்திற்கான அச்சாரமாக அமைந்தது இந்த நாளில்தான். 

அந்த நாள் வெறும் போரின் முடிவை மட்டும் குறிக்கவில்லை. அது இந்தியாவின் கற்றல் காலத்தின் தொடக்கம். ஆறறிவு உயிரினங்கள் சிந்திக்கத் தொடங்கிய காலத்தின் ஆரம்பம். 

அது, கடவுள்கள் மண்ணில் அவதரித்து, கற்காலத்தைய மனிதர்களை நாகரிகத்திற்கு உயர்த்திய காலம்!

 நமது முன்னோர்களின் அறிவு விழித்தெழத் தொடங்கிய காலம்!

கடவுள்கள் மனிதர்களுடன் கைகோர்த்து நடந்த காலம்!

அது இந்தியாவின் பொற்காலம்.

---------


The Rock Art of the Bhimbetka Area in India - Meenakshi Dubey-Pathak

Friday, November 14, 2025

நந்தியாவருத்தனன் (ஆதியோகி: அத்தியாயம் 19)

இன்னும் சில நாட்களில் போர் துவங்க இருந்தது. பசவண்ணாவின் வீரர்களும், அவரது நட்பு நாட்டின் வீரர்களும்   பீம்பேட்காவிலிருந்து வடக்கே  இரண்டு யோசனை தூரத்திற்கு அப்பால் இருந்த பரந்த சமவெளியில் ஒன்று கூடத் துவங்கினர்.

பீம்பேட்கா, பாறைக் குன்றுகளால் நிறைந்த பகுதி. பாறைக் குன்றுகள் பழமையான காவலர்களைப் போல அங்கே நின்று கொண்டிருந்தன. 


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களின் உயர்வையும் வீழ்ச்சியையும் அந்தப் பாறை குன்றுகள் பார்த்துக் கொண்டிருந்ததற்கு சாட்சியாக பல படங்கள் அங்கே தீட்டப்பட்டுள்ளன. அவற்றின் குகைகளின் சுவற்றில் காலச்சுழலில் மறக்கடிக்கப்பட்ட வேட்டையாடிகளின் வாழ்வும், கனவுகளும், கதைகளும் சித்திரங்களாக  தீட்டப்பட்டுள்ளது.

 அங்கே வாழ்ந்து வந்த சாமானிய மக்கள்  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முதலாக இப்பொழுது வரைக்கும், பல்வேறு காலகட்டங்களில் அந்த நிலத்தில் நிகழ்ந்ததை, தங்கள் வாழ்விடங்களில் சித்திரமாக பதிவு செய்யத் தவறவில்லை.
இங்கே இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் கதையும் அந்த கற்குகைகளின் சுவற்றில்  சித்திரமாக தீட்டப்பட உள்ளது. 

வரலாற்றினால் இந்தக் கதை மறக்கடிக்கப்பட்டாலும், செவி  வழியாகவும், பாடல்கள் வழியாகவும்  மக்கள் மத்தியில் புழங்கிய இந்த புனிதக் கதை, சில நூற்றாண்டுகளுக்கு பின்பு மக்களால் அங்கே சித்திரமாக தீட்டப்பட்டன. அங்கே நிகழ்ந்தவற்றை வடிக்க ஏடுகள் மறந்தாலும், அந்தப் பாறைகள் இந்த புனிதக்  கதையை சாஸ்வதமாக சுமந்து கொண்டிருக்கும். 

 அப்படிப்பட்ட அந்த நிலத்திற்கு அருகே உள்ள சமவெளியில்  கூடாரங்களில் வீரர்கள் முகாமிட்டிருந்தனர்.

 போருக்கான ஆயத்த வேலைகள் அங்கே நடந்து கொண்டிருந்தன. மறையும் சூரியனின் பொன்னொளியானது ஈட்டிகளில் மிளிரியது. கேடயங்கள் புளிய மரத்  தண்டுகளின் மேல் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன, போர் முரசுகள் அமைதியாக காத்திருந்தன. எண்ணெய், வியர்வை மற்றும் பழமையான ஏதோவொரு வாசனையால் காற்று கனமாக இருந்தது.

 கூடாரத்திற்குள் தீபங்கள் ஏற்றப்பட்டன. நெருப்பு மெதுவாக எரிந்து, அசையும் அமைதியற்ற நிழல்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. அந்த நிழல்கள் ஆவிகளைப் போல் நடனமாடின.  விவசாயக் குலங்களின் தலைவர் பசவண்ணா, ஒரு கூடாரத்தினுள் எரியும் தீபத்தின்  முன் அசையாமல் உட்கார்ந்திருந்தார். ஒரு காலத்தில் சால் மரத்தைப் போல் அகலமாகவும்,  நேராகவும் இருந்த அவரது உருவம், இப்போது கூனிக் குறுகி காணப்பட்டது. துக்கமும் கோபமும் ஒரு சேர  அவரைச் சூழ்ந்திருந்தது. ஒரு காலத்தில் மழையை மதிப்பிடவும், மண்ணைப் படிக்கவும்  அலைந்து கொண்டிருந்த அவரது கண்கள், இப்போது எதையும் பார்க்காமல் சூனியத்தை வெறித்தன. அவரது மகனின் மரணம், எந்த அறுவடையாலும் நிரப்ப முடியாத காயத்தை அவருள் விட்டுச் சென்றிருந்தது. 

அவருக்கு எதிரே, அவர்களது மண்ணைச் சேராத ஒரு மனிதன் நின்றுகொண்டிருந்தான். விந்திய மலைக்கு அப்பால்  இருந்து வந்திருந்த ஒரு சேனாதிபதி அவன். அவனது அடையாளங்கள் அங்கு இருப்பவர்களை விட மிகவும் அன்னியமாய் இருந்தன. அவன் அனுபவமிக்க வீரர்களையும் கூட வாய்மூட வைக்கும் ஆகிருதியுடன் இருந்தான்.

“பசவண்ணா... உங்களது சோகத்தின் ஆழத்தை எங்களால் உணர முடிகிறது. உங்களுக்கு நேர்ந்த துயரத்திற்கு அவர்கள் நிச்சயம் பதில் கூறியாக வேண்டும்,” என்று அவன் பசவண்ணாவிடம் கூறினான், அவனது கண்கள் நாகத்தின் கண்களைப்போல் மின்னின. 


அவன்  தனது வாளை உரையிலிருந்து எடுத்து அதன் மேல் விரலை நீவியபடி பேசத் துவங்கினான்," ஆயர்கள் தங்கள் உடல் வலுவின் மேல் உள்ள நம்பிக்கையில் போரிடுகின்றனர். எந்த வலுவும் எங்களுடைய இந்த வெண்கல ஆயுதத்திற்கு ஈடாகாது.

உங்கள் ஆட்கள் எங்களின் இந்த ஆயுதங்களை  பயன்படுத்தும்போது, அவை எதிரிகளின் தோல் கேடயங்களை  வாழைத்தண்டை வெட்டுவது போல் வெட்டும்.”

அவன் கூடாரத்தின் மூலையில் மூடி வைக்கப்பட்டிருந்த ஒரு குவியலை நோக்கி சைகை செய்தான். அவனது வீரர்கள் அந்தக் குவியலின் மேல் போர்த்தப்பட்டிருந்த தோலால் ஆன போர்வையை இழுத்தனர்.

கீழே, புதிதாக வார்க்கப்பட்ட வெண்கல ஆயுதங்கள் மின்னின. குறுவாள்கள், பிறை-கத்தி வாள்கள், கோடாரிகள் மற்றும் கூரிய  முனைகள் கொண்ட அம்புகள் போன்றவை அங்கே  இருந்தன. தெற்கே இருந்த மக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த கல் ஆயுதங்களுக்கு  மாறாக, இவை விசித்திரமான பொன்னிற ஒளியுடன்  மின்னின.

“இவை மனித கைவினைஞர்களால் உருவாக்கப்படவில்லை,” சேனாதிபதி கூறினான். “துவாஷ்ட்ரியின் பிள்ளைகளால், தெய்வீக கைவினைஞரால். ஒவ்வொரு கத்தியும் புனித எண்ணெயில் தணிக்கப்பட்டு, விண்ணியல் தாளத்தில் செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை இவை. இவற்றின் விளிம்புகள் மின்னலின் ஒளியை தாங்குகின்றன. இவற்றைக் கொண்டு தாக்கினால் சதைத் துண்டுகள் எலும்பிலிருந்து எளிதில் பிரித்து எடுக்கப்பட்டு விடும். உங்கள் எதிரிகள் தாக்குவது எதுவென்று அறிவதற்குள்  மரணித்து விடுவார்கள்.”

" இந்த அம்புகள் ஒவ்வொன்றும் மிகவும் கூரானவை. காற்றைக் கிழித்துக்கொண்டு வெகுதூரம் பறக்க வல்லவை. இவை எளிதாக பீரப்பாவின்  இருதயத்தை ஊடுருவி விடும். " என்று அவன் கூறினான்.  
பசவண்ணா முன்னேறி, ஒரு வாளை  கையில் ஏந்தி காற்றில் வெட்டுவது போல் வீசி பார்த்தார். அது சரியாக சமநிலையில் இருந்தது. புல்லைப் போல் இலேசாக இருந்தது. ஆனாலும் அதன் வலுவில் எந்தக் குறையும் இல்லை.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சேனாதிபதி பசவண்ணாவை நோக்கி வந்தான்.

அவன் எதுவும் கூறவில்லை, 
அவன் முன்னேறி, ஒரு சிறிய குறு வாளை வெளியெடுத்தான். அதை பசவண்ணாவிடம் நீட்டினான். நெருப்பின் ஒளியில் அதன் விளிம்பு மென்மையாக மின்னியது.

 பின்னர் அவன் குரலைத் தாழ்த்தினான்.“இந்தக் கத்தி ஒரு கொடிய விஷத்தைத் தாங்குகிறது. ஒரே ஒரு கீறல் போதும்...
 நுரையீரல் மூச்சை மறந்துவிடும். இது பீரப்பாவிற்கான சிறப்பு பரிசு.”

பசவண்ணா அந்தக் கத்தியை நீண்ட நேரம் பார்த்தார். பின்னர் மெதுவாக சேனாதிபதியை நோக்கி அதைத் தள்ளினார்.

“ இது எனக்கு அவசியம் இல்லை ,” என்று அவர் கூறினார், அவரது குரல் உலர்ந்து இருந்தது. “என் மகன் ஒரு வீரனைப் போல்  போரில் வீழ்ந்தான். நான் பீரப்பாவை அதே வழியில் எதிர்கொள்வேன்."

சேனாதிபதி தனது புருவத்தை உயர்த்தினான். ஒரு கணம் அவன் அசையாமல் இருந்தான். பின்னர் அவன் உதட்டில் இருந்து மெல்லிய  புன்னகை ஒன்று வெளிப்பட்டது .

“நன்று,” என்று அவன் உரைத்தான். பின்னர் கத்தியை உறைக்குள் திருப்பி வைத்தான். “உங்கள் போர்,உங்கள் நெறி. ஆனால்  எங்கள் ஆயுதங்கள் மட்டுமல்ல, நாங்களும் உங்களுக்காக இந்த போரில் துணை நிற்கிறோம் என்பதை மறந்து விட வேண்டாம். நாங்கள் வழங்கியவற்றுடன், எங்கள் வீரர்களும் உங்களது அழைப்புக்காக மலைக்கு அப்பால் காத்துக் கொண்டு இருப்போம்.

எங்கள் குதிரைப் படையின் வேகத்தை  இந்த நிலத்தை சேர்ந்த எவரும் இதுவரை கண்டதில்லை.  நிலத்தில் நின்று கொண்டிருந்து போர் புரியும் வழக்கம் கொண்டிருக்கும் அவர்களால், ஒரு கணம் கூட குதிரையின் வேகத்தோடு வரும் வாள் வீச்சை எதிர்கொள்ள முடியாது."

சேனாதிபதி மேலும் கூறினான். “உங்கள் பழிவாங்கல் விரைவாக இருக்கும். உங்களுக்கு நாங்கள் தேவைப்பட மாட்டோம் என்று நம்புகிறேன். ” என்று கூறிவிட்டு அவன் கூடாரத்தை விட்டு வெளியேறினான்.

அவன் வெளியேறுவதற்கு முன் ஒரு முறை பசவண்ணாவை நோக்கித் திரும்பினான். “பீரப்பா இன்னும் இது சமமான போர் என்று நம்புகிறான். அவனை நம்ப விடுங்கள்.” என்று கூறினான்.

நெருப்பொளியின் எல்லைக்கு அப்பால், ஒரு உருவம் அசைந்தது. பசவண்ணாவின் மகள் காமரதி, ஒரு தாழ்ந்த புதருக்குப் பின்னால் ஒளிந்து நின்று இதை கேட்டுக் கொண்டிருந்தாள், அவளது இதயத்துடிப்பு அதிகரித்தது . 

அவள் அமைதியாக யாரும் அறியா வண்ணம்  தனது கூடாரத்தை நோக்கி ஓடினாள்,  அங்கு அவளது பணிப்பெண் அவளுக்காக காத்திருந்தாள், அவளது வெளுத்த முகத்தைக் கண்டு பணிப்பெண்  திடுக்கிட்டாள்.  

“என்ன நடந்தது,?”  என்று பணிப்பெண் கேட்டாள்.

“என் தந்தை தவறாக வழிநடத்தப்படுகிறார்,” என காமரதி கூறினாள். “இது போர் இல்லை. இது ஒரு பொறி.”  

பணிப்பெண் கவலையுடன் பார்த்தாள்.

“அவர்கள் பல்வேறு தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு போரிட திட்டமிடுகின்றனர். மேலும் தக்ஷனின்  ஆயுதமேந்திய குதிரைப் படைகள், யாரும் எதிர்பாரா சமயம் திடீரென்று தாக்குதலை மேற்கொள்ள இருக்கிறது.. பீரப்பாவுக்கு இது தெரியாது. இது நியாயமான போர் என்று அவர் நினைக்கின்றார். இரு பக்கங்களும் சமமாக உள்ளன என்று அவர் நம்புகின்றார். அவர்  போர் என்று நினைத்து  சிங்கத்தின் வாய்க்குள் நடக்கிறார்.”  

பணிப்பெண் தலையசைத்தாள். “ஆனால் நாம் என்ன செய்ய முடியும்? தற்போது அவரால் உதவிக்கு  மற்றொரு படையை சேகரிக்க முடியாது. இப்பொழுது அதற்கு அவகாசமும் இல்லை.”  

காமரதியின் கண்கள் சோகத்தை வெளிப்படுத்தின “ மாயோனை வழிபடும் அனர்தாவின் வேளிர்களும் யதுக்களும் நீதியின் பக்கம் நிற்பவர்கள். ”  

அவள் உறுதியாக கூறினாள், “அவர்கள் நிச்சயமாக அயல்நாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நிற்பார்கள். போர் துவங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. நாம் சரியான நேரத்தில் செய்தி அனுப்பினால், அவர்கள் பீரப்பாவிற்கு  ஆதரவாக வரக்கூடும்.”  

 “நீங்கள் எப்படி அவர்களுக்கு செய்தி அனுப்புவீர்கள்?”  என்று  பணிப்பெண் கேட்டாள்.

“வேளிர்களுக்கு செய்தி அனுப்ப விரைவாக பறக்கும் புறாக்களைப் பயன்படுத்துவோம். ஆனால் பீரப்பாவுக்கு பறை அறைந்து செய்தி அனுப்பலாம். நீ பீரப்பாவின் குலத்தை சேர்ந்தவள் தானே? உனக்கு பறை மூலம் செய்தி அனுப்பத் தெரியுமல்லவா?” என்றாள் காமரதி .

 “பறையின் மூலம் செய்து அனுப்பினால் விரைவாக  செய்தி சென்று சேரும்.”  
“ஆனால் அந்தச் செய்தி மற்றவர்களால் கேட்கப்படலாம்,” பணிப்பெண் எச்சரித்தாள்.  

காமரதி தலையசைத்தாள். “ஆம். நம்மைச் சுற்றி சூழ்ச்சி வலை பின்னப்பட்ட வருகிறது, தவறான காதுகள் இந்தச் செய்தியை கேட்க கூடும். எனவே புறாக்களை மட்டுமே அனுப்புவது உசிதமாகும்.”  

புறாக்களின் காலில் செய்திகள் கட்டப்பட்டன. 

காமரதியின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்த பணிப்பெண் அவளுக்கு  ஆறுதல் கூறும் விதமாக ," கவலை வேண்டாம் இளவரசி, பீரப்பாவிற்கு ஒன்றும் ஆகாது. பீரப்பாவை தெய்வீக சக்தி ஒன்று காப்பதாக எனது அன்னை கூறினார்."

“தெய்வீக சக்தி?”  

“ஒரு விசித்திரமான தெய்வீக உருவம் அவரைக் காக்கிறது. அந்த உருவம் பேசுவது குறைவு, ஆனால் மலைபோல் நிற்கிறவர் அவர். 
அவரை... மல்லண்ணா என்று எங்கள் மக்கள் அழைக்கிறார்கள்.” 

காமரதியின் முகம் பிரகாசமடைந்தது,
" அவரே  இந்தப் போர் சூழலில் நம்மைக் காக்க இருக்கும் நந்தியாவருத்தனன். எதிரிகளின் சூழ்ச்சியை பற்றிய செய்தி அவரையும் சென்று சேர வேண்டும்.”  

  "கிழக்கில் இருக்கும் முல்லைவனத்தில் அவர் தியானத்தில் இருப்பதாக எனது அன்னை கூறினார். நான் நேரில் சென்று அவரிடம் தகவல் தெரிவிக்கிறேன் . " என்றாள் பணிப்பெண்.

அவள் நிலவொளியில் வெளியேறினாள். இரண்டு வெள்ளைப் புறாக்கள் அவளது மணிக்கட்டில் பறந்து வந்தன. நடுங்கும் கைகளால், அவள் புறாக்களின் காலில் செய்திகளைக் கட்டினாள். 

ஒன்று வேளிர்களுக்கு, ஒன்று பீரபாவிற்கு.  

அவை இரவு வானத்தில் காமரதியின் பணிப்பெண்ணால் பறக்க விடப்பட்டன .  இரண்டு வெள்ளை புறாக்களும் வானின் இருளை கிழித்துக்கொண்டு  இறக்கைகள் படபடக்க பறந்து சென்றன. 

ஆனால் வேறு யாரோ புறாக்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்வதை  பார்த்தனர்.  

தொலைவில் உள்ள ஒரு  கூடத்தில், ஒரு மனிதன் நிலவொளியில் நின்று கொண்டிருந்தான். அவனருகில் இருந்த அவனது பணியாள் ஒருவன், பயிற்சி பெற்ற இராசாளி ஒன்றை வானில் பறக்க விட்டான். அது உயரமாகவும் வேகமாகவும் பறந்து,  ஒரு புறாவை அதன் கூர்மையான கால்களில் பிடித்துக் கொண்டு வந்து  அவனிடம் சேர்ந்தது.

எதிரி அமைதியாக புறாவின் காலில் கட்டப்பட்டிருந்த செய்தி மடலைப் படித்தான். அவனது உதடுகள் ஒரு புன்னகையை வெளிப்படுத்தியது.
“ காமரதி பீரப்பாவை  நேசிக்கிறாள்,” என்று அவன் கூறினான்.

அவன் தன் ஆட்களை நோக்கி திரும்பினான். “அவள் நமது முக்கிய ஆயுதம். பசவண்ணாவுக்கும் பீரப்பாவுக்கும் எதிராக நாம் பயன்படுத்தக்கூடிய பகடைக்காய்.”  

மற்றொருவன் நெருங்கினான். “நீங்கள் என்ன கட்டளையிடுகிறீர்கள்?”  

“இரு நாட்களில் போர் துவங்கவிருக்கிறது, இந்தப் பதட்டமான சூழலில் யாருக்கும் தெரியாமல் நாம்  அவளை அமைதியாக சிறை பிடிக்க வேண்டும். போர் வெறித்தனமாக இருக்கட்டும். எந்தப் பக்கம் வெற்றி பெறுகிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இறுதியில்... வெற்றி நம்முடையதாக இருக்க வேண்டும். நமது அந்த வெற்றிக்கு காமரதி  மிகவும் உதவியாக இருப்பாள் .”

------
Pictures courtesy

1. Rock Shelters of Bhimbetka
Continuity through Antiquity, Art & Environment

2. http://www.dsource.in/resource/bhimbetka

Saturday, November 8, 2025

கண்டோபா (ஆதியோகி: அத்தியாயம் 18)

 வெப்பமிகு  உலர்ந்த காற்றினால் தக்காண பீடபூமி நெருப்பு உலையென  எரிந்து கொண்டிருந்தது.  சிவனால் முன்பு எரிக்கப்பட்ட  சாம்பல் குவியல்கள், இப்போது தங்கள் வெப்பத்தை மெல்லிதாக  வெளியிட்டன.  சிவனது தோல், வெப்ப மிகுதியால் வாடிக் கொண்டிருந்தது. அவரது தோல் காய்ச்சலால் எரிந்தது. ஒரு காலத்தில் பல்வேறு முயற்சிகளால் கட்டுப்படுத்தப்பட்ட அவரின்  அழலானது இப்போது ஆவேசம் கொண்டு  திரும்பியது. பித்தத்தின் பற்றெரிவால் உந்தப்பட்ட அவரது உடல், கபத்தின் குளிர்ந்த தீண்டலுக்காக ஏங்கியது.

 மனிதர்களை விட்டு விலகி இருக்க நினைத்த அவர்; திரும்பவும் மனிதர்களோடு உறவாட வேண்டிய நிர்பந்தத்தில் சிக்கிக்கொண்டார். ஆனால் அதை தடை செய்யும் விதமாக, வில்சனின் நோய்  அவரது மனநிலையை ஆட்டம் கொள்ள வைத்துக் கொண்டிருந்தது. தவறும் மனநிலையோடு அவர் மனிதர்கள் மத்தியில் இருப்பதை விரும்பவில்லை. எனவே அவரது நரம்புப் பிரச்சனைகளை தணிப்பதற்காக மருந்தினை உட்கொள்ள எண்ணம் கொண்டார். ஆனால் அந்த மருந்தை உட்கொள்வதினால் ஏற்படும்  வலிமிகு  உயிர்நாடி எழுச்சியையும் அவரது மனம் வேதனையோடு நினைவு கூறத் தவறவில்லை.

 அவர்  பெல்லாரியில் இரும்பு ஆயுதங்களை செய்த பொழுது தாரம்,கௌரி பாசாணம் மற்றும் வீரம் முதலிய பாஷாணங்களையும் எடுத்தார். இந்த பாஷாணங்களையும் வேறு சில மூலிகைகளையும் பயன்படுத்தி தனது நரம்பு சம்பந்தமான அறிகுறிகளையும் தோல் சம்பந்தமான அறிகுறிகளையும் மட்டுப்படுத்த முயன்று  கொண்டிருந்தார். தாரம் எனப்படும் அரிதாரம் அவருக்கு மிகவும் சாந்தத்தை அளித்தது. அது ஹரிதாளம், ஹரி பீஜம் என்று வடமொழியில்  அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் பக்க விளைவுகளை பற்றி சிவன் அறிந்தே இருந்தார்.  ஹரி பீஜம் சிவனின் பாலுணர்வு சம்பந்தப்பட்டது என்று பண்டைய ஆயுர்வேத ஏடுகள் தெளிவாக குறிப்பிடுகின்றன. இந்த அரிதாரம்  அவர் கண்டறிந்த எண்ணற்ற மருந்துகளில் முக்கியமான ஒன்று.

இந்த ஹரி தாளத்தைக் கொண்டு தான் அவர் பரதத்தை உயிர்த்தெழ வைத்தார். 

பரதம் (Pārada, சமஸ்கிருதத்தில்: पारदः) = "பர" (அப்பால்) + "தா" ( தருவது). பரதம் என்றால் விடுதலை தருவது, மோட்சத்தை அளிப்பது எனும் பொருள் தரும். 

 பரதம் எனும் சொல் ஒரு உலோகத்தைக் குறிக்கும். அந்த சொல் முக்தியையும் குறிக்கும். அந்த உலோகம் சிவ வீர்யம், சிவ ரேதஸ், சிவ தேஜஸ் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. 

 சிவன் தரும் பரதம் ( பாதரச வகை உலோகம்) உடலைத் தாண்டி ஆன்மாவை மோட்சத்திற்கு ஏற்றும் என்பது நம்பிக்கை.  அதனால்தான் சிவனை ரசேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். சித்தர்களைப் பொறுத்தமட்டில் பரதமே அமிர்தம் ஆகும். அதுவே அமரத்துவத்தை அளிக்க வல்லது என்று ரச சாஸ்திர வரிகள் கூறுகின்றன.

पारदः परदो ज्ञेयो यतः संसारपारदः

ஆனால் சிவன் இன்னும் பரதத்தை கண்டெடுக்கவில்லை. அது இமயத்தின் ஆழத்தில்  சிவனின் கரங்களால் தீண்டப்படுவதற்காக  காத்துக் கிடக்கின்றது.

 அதனை கண்டெடுப்பதற்கு முன் அவர் பல சோதனைகளைத் தாண்ட வேண்டி இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சோதனைக் களத்தில் தான் அவர் நின்று கொண்டிருக்கிறார். 

 இந்த சோதனைக்களம் கடும்  வெயிலினால் வாட்டப்பட்டுக் கொண்டிருந்தது. நிலம் வறண்ட புழுதிக்  காற்றால் மூடப்பட்டிருந்தது.  அங்கிருந்த செடிகள் அனைத்தும் வாடி இருந்தன. வறண்ட காற்று குடக்குப் பக்கமாக வீசிக் கொண்டிருந்தது.

குடக்குப் பக்கமாக வீசிக் கொண்டிருந்த வறண்ட காற்று மெல்ல மெல்ல திசை மாறத் துவங்கியது. பின்னர் மெல்லிய தென்றல் காற்று  அவரது மேனியை தொட்டது. சட்டென்று மேனியில் ஒரு சிலிர்ப்பு... அவரது அழல் தணியத் தொடங்கியது.

 அந்தக் காற்றை பின் தொடர்ந்து  தட்டான்கள் கூட்டம் கூட்டமாக தரையை ஒட்டி பறக்க ஆரம்பித்தன. மாயோனின்  நிறத்தைக் கொண்ட கொண்டல் மேகங்கள் திரண்டு  எழுந்து வானத்தை வியாபித்தன. அமுர் வல்லூறுகள் அங்கே வட்டமிட ஆரம்பித்தன. 

விசிறித்தொண்டை ஓணான் ஒன்று வேட்டையாடிகளைப் பற்றிய பயம் ஏதும் இன்றி  தைரியமாக சமவெளிக்கு வந்தது. அது வல்லூறுகளை லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. அது தனது நீல நிறத் தொண்டையை விசிறி போல விரிக்க ஆரம்பித்தது. அதன் ஒளிரும் நீலத் தொண்டை சிவனின் நீல மிடற்றைப் போல்  மின்னியது .   

 அந்த விசிறியால் மழையையும் தனது துணையையும்  அது அழைக்க ஆரம்பித்தது.

தொலைவில், பனங்காடைகள்  காற்றில் சுழன்றன, அவற்றின் நீலமணி இறக்கைகள் கருமேகம் சூழ் வானத்திற்கு நடுவே அழகாக மின்னின.

 நீலக்கழுத்தை கொண்டிருந்த மயில்கள் மழையின் வரவை அறிவிக்கும் வண்ணம் அகவின.

 இவ்வுயிரினங்களின் அழைப்பை ஏற்று, மலடாகி இருந்த மண்ணை உயிர்ப்பிக்கும் விதமாக, மேகத்தின் ஸ்கலிதமென, மழைநீர் விண்ணிலிருந்து இறங்கி நிலத்தை ஆலிங்கனம் செய்தது.

 மழைத்துளிகள் நிலத்தைத் தொட்ட  மாத்திரத்தில் பூமியின் வெப்பத்தால் ஆவியாகியது. பின்னர் மெல்ல மெல்ல வெப்பம் தணியத் தொடங்கியது. மயக்கும் மண்வாசனை காற்றை அடர்த்தியாக்கியது. 

 வெப்பத்தில் எரிந்து கொண்டிருந்த சிவனின் மணிபூரகம் சாந்தமடைந்தது. சிவனது அழல் தணியத் தொடங்கியது. இந்த மோனநிலையால் உந்தப்பட்ட சிவன், தனது இடது காலை சம பாதமாகவும், வலது காலை வளைத்தும், வலது கையை ஹம்ஸ பட்சமாகவும், இடது கையைத் தொங்கவிட்டும், மாறிமாறி ஆடத் துவங்கினார். அந்த ஆனந்த நடனத்தில் காற்றும் மழையும் இணைந்து கொண்டன. 
 இது சிவன் தோற்றுவித்த 108 சிவதாண்டவ  கரணங்களில் ஒருவகை. 

 இதைக் கண்ட வரகுக் கோழி  ஒன்று   கூக்குரலிட்டுக் குதித்து, அதுவும் களியாட்டம் புரிய ஆரம்பித்தது.

Source: https://roundglasssustain.com
மழையானது  வேகமெடுக்கத் தொடங்கியது. மழைத்துளிகள் சிவனின் மேனியில் பட்டுச் சிதறின.
நிலம் என்னும் இயக்கமற்றிருந்த சிவம், இயக்க சக்தியான பொழுதினால் அரவணைக்கப்பட்டது .

 நிலம் அந்த நீரை உள்வாங்கியது.

 நிலம் உயிர் பெற்றது. புற்கள் முளைத்தன, மரங்கள் மலர்ந்தன, காட்டுத் தினைகள் உயிர்பெற்றன.  

புற்றில் இருந்து ஈசல்கள் கிளம்பின. அவை வதந்திகளை விட வேகமாக வனம் முழுவதும் பரவின. அவற்றை பின் தொடர்ந்து நீல நிறத் தொண்டை ஓணான்கள் படை எடுத்தன. ஓணான்களை நாகங்களும் பனங்காடைகளும் வேட்டையாடத் துவங்கின.  

மழை என்பது ஜனனத்திற்கான நேரம், புதிய உலகம் பிறக்கும் சமயம். ஆனால் பழையன கழிதலும் இங்கே நடந்து கொண்டிருந்தது. ஆற்றலில் குறைவான பழைய இரை விலங்குகளும் சரி, வயதான பழைய வேட்டையாடிகளும் சரி... இந்த போட்டி மிகு வனத்தில் உயிர்பிழைத்தல் கடினம். 
புதியவர்களுக்கு வழி விடுதலே வலுமிகு சந்ததிகள் வாழ வழிவகுக்கும். 

 இந்த கோட்பாட்டை உரக்க அறிவிக்கும் வண்ணம் கானமயில் இறக்கைகளை விரித்து நடனமாடியது. கருநெஞ்சுக்காடை மழையில் பாடல் இசைத்தது. வனம் உயிர் கொண்டது. மரங்கள் புதிய பசும் இலைகளை துளிர்க்கச் செய்தன.

 மான்கள் அந்த வனத்திற்கு திரும்பின. அவைகள் தங்கள் முன்னங்கால்களை மேலே உயர்த்தியபடி  இலைகளை உண்ணத் தொடங்கின. புதியதாக  முளைத்த பசுமையான இளம் இலைகள் மேலே இருக்க, கிளைகளின் கீழே தொங்கிக் கொண்டிருந்த  வயதான பழைய இலைகளை மான்கள் உண்டன.

சந்ததிப் பெருக்கம் என்பது ஒரு ஆடம்பரமான செயல். அந்த ஆடம்பரத்தை நிகழ்த்த, உயிரினங்கள் தங்கள் உடல் ஆற்றலை நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கும். என்னதான்  ஆடம்பரமாயினும் அது ஒரு அத்தியாவசியமான செயல். வனம் வளம் கொண்டிருக்கும் பொழுது தான் அந்த ஆடம்பரத்தை உயிரினங்கள் நிகழ்த்தத் துணியும்.  

 இந்த வனத்தைப் பொருத்தமட்டில் இந்த சமயம் தான் அந்த ஆடம்பரத்தை நிகழ்த்த சரியான தருணம் என்பதை அனைத்து விலங்குகளும் அறியும். எனவே இணை சேர்வதற்கு அவை ஆயத்தமாயின.

 ஆனால் இணை கூடுவதற்கான வாய்ப்பு எல்லா ஆண்களுக்கும் கிடைப்பதில்லை. இணை சேருவதற்கு முன் ஆண்கள் தங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டி இருந்தது. 

 தங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டி, இரண்டு இரலைகள் ஒன்றுக்கு ஒன்று மோதத் தொடங்கின. இது பெண்ணுக்கான போட்டி. 
 வனத்தைப் பொறுத்த மட்டில், பிரச்சனைகளுக்கு வன்முறையால் மட்டுமே தீர்வு காணப்படும். வன விலங்குகளுக்கு பிரச்சனைகளை பேசித் தீர்க்கவோ, மாற்று வழிகளை யோசிக்கவோ  சிந்தனை ஆற்றல் என்பது இல்லை.

 இவை அனைத்தையும் கண்ணுற்ற  சிவன் தனது நடனத்தை நிறுத்திவிட்டு  பெய்யும் மழையில் தியானத்தில் ஆழ்ந்தார்.  மழைத்துளிகள் சிவனின் சிரசைத் தீண்டின. சிவனின் நெற்றிக்கண் அதிர்வுகளை  வெளிப்படுத்த துவங்கியது. வன உயிர்கள் அனைத்தும்  சிவனைச் சூழ்ந்தன.

 அந்த அமைதியை குலைப்பது போல் சாம்பல் நிற ஓநாய் கூட்டம் ஒன்று அங்கே வந்தது. 
picture by Himansu gupta

 அதைக் கண்ட  மான்கள் அனைத்தும் சிதறி ஓடின. மரணத் தருவாயில் இருக்கும் ஓடவியலா  ஒரு வயதான மானை அவைகள் குறி வைத்தன .
 அதிவேகமாக ஓடிய அந்த மான், இப்போது அதிக வயதினால் மந்தமாகிவிட்டது. அது கூட்டத்திலிருந்து சற்றே பிரிந்து நின்றது . 

வேட்டை புத்திசாலித்தனமாகத் தொடங்கியது. இரண்டு ஓநாய்கள் வயதான அந்த மானுக்கு  தென்படாதவாறு பிரிந்து சென்றன.  அந்த பரந்த வெளியில் மானை காணாதது போல் அதன் பார்வைக்கு எட்டும் தூரத்தில் ஒரே ஒரு ஓநாய் தனித்து  நடக்கத் தொடங்கியது 

 வயதான மான் அந்த ஓநாயை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. ஓநாயானது சற்று அசைந்தாலும் இது ஓடுவதற்கு தயாராக  தனது வலுவை திரட்டி கொண்டு நின்றது. இதற்கிடையில் மற்றொரு ஓநாய் புல்வெளியின் மறைவில் மெதுவாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து வயதான மானை நெருங்கிக் கொண்டிருந்தது 

இப்போது இரண்டாவது ஓநாய் சரியான இடத்துக்கு வந்தவுடன், மானின் முன் நின்ற ஓநாய்  சிறிது முன்னேறியது. மான் அபாயத்தை உணர்ந்து ஓட முயன்றது, ஆனால்  நிலைமை கை மீறிப் போய் இருந்தது. இரண்டாவது ஓநாய் பாய்ந்து வந்து, சில வினாடிகளில் மானை அடைந்தது . அது மானின் கண்களை நேருக்கு நேர் சந்தித்த பொழுது, வயதான அந்தமான்  ஒரு அறிதுயில் நிலைக்குச் சென்றது. 

 பின்பு ஒரு இறுதிப் பாய்ச்சல்... ஓநாய் மானை நெருங்கியது... அதன் கழுத்தை ஆழமாக கவ்வியது. அறிதுயில் நிலையிலிருந்து மானானது  வலிக்கான எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல்  உயிர் நீத்தது.

இது இயற்கையின் விதி. ஓநாய்கள் முதியதும் பலவீனமுமான மான்களை வேட்டையாடுவதால், கூட்டத்தில் வலிமையான மான்கள் மட்டுமே வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால் கூட்டம் ஆரோக்கியமாகவும், புல்வெளி சமநிலையுடனும் இருக்க வைக்கப்படுகிறது.

சூரியன் மறைந்து, வானம் மங்கும் போது, ஓநாய்கள் அமைதியாக தங்கள் வேட்டையை உண்டன. வளங்கள் பெருகும் இந்த மழை பொழுதே அவைகளும் இனப்பெருக்கம் செய்வதற்கான சரியான சமயம். இவ்வண்ணம் ஐவகை நிலப்பரப்பிலும் அந்த நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற வகையில் உயிரினங்கள் நிலத்தோடும் பொழுதோடும் பொருந்தி, சந்ததி சந்ததிகளாக வாழ்ந்து வருகின்றன.

சிவனுக்கு இந்த இயற்கையின் பரிபாஷைகள் புரியத் துவங்கின.

 வறண்ட நிலம், மேகங்கள், குளம்புகள், வேட்டையாடிகள் போன்றவற்றின்  ஒத்திசைவில் அவர் ஒரு புனித தாளத்தைக் கண்டார்.

 இந்த ஒத்திசைவில் தக்காண பீடபூமியின் ஆயர்களும் விவசாயிகளும் இணைந்து கொள்ள இடம் இருக்கிறது என்ற உண்மை அவருக்குப் புரிய வந்தது.

 மழைக்கால மாதங்களில் தங்கள் கிராமங்களில் விவசாயம் செய்யும் ஆயர்கள்,  மழைக்கு முன் மேற்கு நோக்கி கர்நாடகாவின் மழை பெய்யும் பள்ளத்தாக்குகளுக்கு அல்லது மழைக்கு பின் கிழக்கு நோக்கி நல்லமலை காடுகளுக்கு தங்கள் மந்தைகளை வழிநடத்தலாம்.  

அவர்களின் பாதையில், அவர்கள் தங்கள் மந்தையின் வளமான எருவை விட்டுச் செல்வார்கள். மந்தைகளும், பயிரிடப்படாத நிலத்தில் முளைத்திருக்கும் களைகளை உண்ணலாம். அவர்களின் விலங்குகள் திறந்த நிலங்களில் மேய்ந்து, பயிரிடப்படாத வயல்களில் தங்கும் போது, மழையால் கரைந்த மேல் மண்ணை இந்த புனித எரு பலப்படுத்தும் .  
விவசாயிகள், பதிலுக்கு, தானியங்களையும் தங்குமிடத்தையும் வழங்குவார்கள்.

பெல்லாரி நிலம் மழையில் பசுமையாக மாறும்போது, மந்தைகள் வடக்கு நோக்கி மஹாராஷ்டிராவின் திறந்த சமவெளிகளுக்கு அல்லது கிழக்கு நோக்கி மராத்வாடாவில் உள்ள லத்தூர் மற்றும் பீட் மாவட்டங்களுக்கு திரும்பலாம்.  இந்த இடம்பெயர்வு, இந்த புனித பாதை ஆயர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இணக்கத்தை  உருவாக்கும் .

 இந்த இணக்கத்தில் அனைத்து உயிர்களும்  பங்கு பெறும், பலனும் பெறும், 

 மண், மழை, பசி, விலங்கு ஆகியவை தனித்தனி சக்திகள் இல்லை, ஒரு பரந்த துணியில் நெய்யப்பட்ட நூல்கள் என்பதை சிவன் கண்டுகொண்டார்.

சாம்பல் நிற ஓநாய் கூட, மந்தைகளைப் பின்தொடர்ந்து, அதன் தெய்வீக பங்கை வகிக்கும்.  அது எதிரி இல்லை, ஆனால் சமநிலையின் காவலன்.

 இந்த மழையால் அவரது உடல் மட்டுமல்ல, அலை மோதிக் கொண்டிருந்த உள்ளமும் அமைதி கொண்டது 

அவர் இந்தக் கருத்தை கடவுளாக அல்லாமல், இயற்கையுடன் உரையாடிய ஒருவனாக முன்னெடுப்பார். ஆனால் அவரை பின்பற்றியவர்களால்... அவரால் பயனடைந்தவர்களால்... அவர் கடவுளாக தொழப்படுவார்.

தங்கர், குருமா, கொல்லா, குருபா போன்ற பாரம்பரிய மேய்ப்பர் சமூகங்கள், சிவன் காட்டிய வழியினை பின்பற்றி,  ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்வாங்கு வாழ்வார்கள்.ஓநாய்கள் ஆடுகளைத் தாக்கினாலும், அவை மந்தையைப் பாதுகாக்க உதவுவதாகவும், இழந்த ஆட்டுக்குட்டிகள் கடவுளுக்கு பலியாகக் கருதப்படுவதாகவும் மேய்ப்பர்கள் நம்புவார்கள். அந்த இறைவனே மண்ணில் இறங்கி வந்து மல்லப்பாவாகவும் கண்டோபாவாகவும் தங்களுடனே வாழ்ந்து, தங்களுக்கு இந்தப் பணியை மேற்கொள்ள கேட்டுக் கொண்டதாக நம்புவார்கள். சந்ததி சந்ததியாக தங்கள் மக்களுக்கு கண்டோபாவின் இந்த புனிதக் கதையை கூறுவார்கள்.

 ஆனாலும் இந்த இணக்கத்திற்கு  பசவண்ணா உடன்படவில்லை.

 ஆயர்கள் இணக்கத்தை வேண்டினாலும் பசவண்ணாவின் மனதில் வஞ்சம் எரிந்து கொண்டிருந்தது  

விவசாயக் குலத்தின் தலைவன், தன் கொல்லப்பட்ட மகனுக்காக துக்கத்தில் குருடாகி இருந்தான், அவன் இணக்கத்தைப் பற்றி செவிகொடுத்து கேட்கத் தயாராக இருக்கவில்லை.
அவன் இரத்தத்தை வேண்டினான்... பழிவாங்கலை வேண்டினான், 

சிவன் மட்டும் போரைத் தடுக்க விரும்பியவராக இல்லை.
மற்றொரு ஆன்மாவும் போரைத் தவிர்த்து விட முயற்சிகளை மேற்கொண்டது.
அந்த ஆன்மாவின் பெயர் காமரதி.  விவசாயத் தலைவனின் மகள் .

 அவள் பீரப்பாவின் மீது காதல் கொண்டிருந்தாள்.

பீரப்பாவின் மீதான காமரதியின் காதல் கிளர்ச்சியால் பிறக்கவில்லை, அங்கீகாரத்தால் பிறந்தது. அவனிடம் அவள் தன் சகோதரனுக்கு ஒரு காலத்தில் இருந்த அதே நெருப்பைக் கண்டாள். பீரப்பாவும் அவளிடம் தனது தாயின் வாஞ்சையைக் கண்டான்.

 ஏற்கனவே அவள் தன் சகோதரனை இழந்திருந்தாள். இப்போது, போர் அவளது தந்தையையோ… அல்லது அவள் நேசித்த பீரப்பாவையோ,
அல்லது இருவரையுமோ பறிக்கக் காத்திருந்தது.

போரை நோக்கிய ஒவ்வொரு அடியும் நிலத்தின் அழிவை மட்டுமல்ல, தனது காதலின் அழிவையும் நோக்கிய பாதை என்பதை அவள் அறிவாள்.  

வன்முறை என்பது சிந்திக்கவியலா உயிரினங்களால், தமக்குள் எழும் பிணக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றது. 

 ஒரு தனி மனிதனோ அல்லது சமுதாயமோ பிரச்சனைகளுக்கு தீர்வாக வன்முறையை கையில் எடுப்பது என்பது, 
 மனிதன் எனும்  சிந்திக்கும் விலங்கு  சிந்தனையை மேற்கொள்ளவில்லை என்பதற்கான அறிகுறி. 

 போர் என்பது ஆறாம் அறிவு கொண்ட உயிரினங்களுக்கு தேவையற்ற ஒன்று.

 போர் என்னும் கொடுஞ்செயல், வளத்தை வழங்கும்  நிலத்தை சாம்பலாக்கும். அது வாழ்வாதாரங்களை வேரறுக்கும்.

கோபத்தில் விதைக்கப்பட்ட  விதைகள், துக்கம் எனும் விளைச்சலை மட்டுமே வழங்கும்.

----








Reference: NITYA SAMBAMURTHY GHOTGE and SAGARI R. RAMDAS. Black sheep and gray wolves. 

Saturday, November 1, 2025

நெய்தல் நிலம் - ஏர் முன்னது எருது - 7

நெய்தல் நிலம்

காலம்: புதிய கற்காலம்

இடம்: காவிரியின் கழிமுகம்

நம் மக்கள் தங்க நிரந்தர உணவு தரும் இடத்தினைத் தேடி இந்நிலப்பரப்பு முழுவதும் அலைந்தாயிற்று. இந்த எல்லைக்கு மேல் பரந்து விரிந்த நீர்ப்பரப்பு மட்டுமே உள்ளது. இதற்கு மேல் நிலமும் இல்லை. நாம் வாழ வழியும் இல்லை.”

ஏன் நண்பா அப்படி சொல்கிறாய்? நாம் வாழ இங்கே வழியேதும் கிட்டாதா என்ன?”

இந்த மணலைப் பார் நண்பா. பாலை நிலத்து மணற்துகள்கள் போலவே உள்ளது. இங்கு மரங்களும் வரப்போவதில்லை, நாம் வாழ்வதற்கு வழியும் கிடைக்கப்போவதில்லை.”

இங்கே வேறு எந்த உயிரும் வாழவில்லையா என்ன? உன்னை சுற்றியுள்ள சூழலை கவனி நண்பா! கூட்டம் கூட்டமாய் பறவைகள் பல கூடிக் களிக்கின்றனவே, உன் கண்களுக்கு தெரியவில்லையா என்ன?”

நெய்தல் நிலம்

காலம்: புதிய கற்காலம்

இடம்: காவிரியின் கழிமுகம்

நம் மக்கள் தங்க நிரந்தர உணவு தரும் இடத்தினைத் தேடி இந்நிலப்பரப்பு முழுவதும் அலைந்தாயிற்று. இந்த எல்லைக்கு மேல் பரந்து விரிந்த நீர்ப்பரப்பு மட்டுமே உள்ளது. இதற்கு மேல் நிலமும் இல்லை. நாம் வாழ வழியும் இல்லை.”

ஏன் நண்பா அப்படி சொல்கிறாய்? நாம் வாழ இங்கே வழியேதும் கிட்டாதா என்ன?”

இந்த மணலைப் பார் நண்பா. பாலை நிலத்து மணற்துகள்கள் போலவே உள்ளது. இங்கு மரங்களும் வரப்போவதில்லை, நாம் வாழ்வதற்கு வழியும் கிடைக்கப்போவதில்லை.”

இங்கே வேறு எந்த உயிரும் வாழவில்லையா என்ன? உன்னை சுற்றியுள்ள சூழலை கவனி நண்பா! கூட்டம் கூட்டமாய் பறவைகள் பல கூடிக் களிக்கின்றனவே, உன் கண்களுக்கு தெரியவில்லையா என்ன?”

ஆம், அவை கயல் உண்டு களித்து இருக்கின்றன. மீன் ஒரு அற்புத உணவாயிற்றே! குட்டைகளில் நாம் மூன்றுமுனை கொண்ட ஈட்டியால் குத்திப்பிடித்த மீன்களின் சுவையை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா என்ன?”

இந்த மீன்களை நாம் ஏன் பிடித்துச் சுவைக்கக் கூடாது? அற்புத உணல்லவா அவை?’

சுவைக்கலாம் தான், ஆனால் அலைகள் வீசும் கரையைத் தாண்டி, பறந்து சென்று மீன்பிடிக்க நமக்கு பறவைகள் போல் சிறகுகள் இல்லையே?”

உண்மைதான். ஆனால் இந்த மீன்களை எப்படியேனும் பிடிக்கும் உபாயம் அறிந்தால், என்றுமே வற்றாத இந்த பரந்த குட்டையிலிருந்து நமக்கு வாழும் மட்டும் உணவு கிட்டும் அல்லவா? நாம் வேறெங்கும் உணவைத் தேடி அலைய வேண்டிய அவசியமும் இல்லையே

ஆனால் இந்த கடலுக்குள் நாம் எப்படி நீந்திச் செல்வது?”

இதோ உன் அருகில் தேங்கியிருக்கும் இந்த நீரைப்பார். அதில் மிதக்கும் இந்த பூச்சிகளுக்கு இறகுகள் ஏதுமில்லை, அவை நீருக்குள் நீந்தவும் இல்லை. ஆனால் நீர்ப்பரப்பில் எவ்வளவு விரைவாக நகர்கின்றது பார்த்தாயா? நாமும் இதுபோல் மிதந்தாலே போதுமே.”

அவற்றின் உடல்வாகு தக்கையைப் போல் மிதப்பதற்கு தக்கவாறு உள்ளது. நாம் இவ்வுடல் கொண்டு எவ்வாறு தக்கையைப் போல் மிதக்க முடியும்?”

 “தக்கை போல் உடல்வாகு எதற்கு? தக்கை ஒன்றின் மேலேயே மிதந்து செல்லலாமே? அப்பூச்சியின் கால்களைப்போலே குச்சிகளைக் கொண்டு தக்கையை நகரச் செய்யலாமே?”

மிதக்கும் தக்கையின் உதவியுடன் கடலில் செல்லலாம் தான், ஆனால் வற்றிய குட்டைகளில் மீன்களை மும்முனை சூலத்தால் எளிதில் பிடிக்க முடிந்தது. இந்த கடலின் அளப்பரியா நீரின் ஊடே செல்லும் மீன்களை எவ்வாறு பிடிக்க முடியும்?”

அளப்பரியா காற்றின் ஊடே பறக்கும் பூச்சிகளை, சிலந்தி 'வலை' கொண்டு வடிகட்டி பிடிக்கவில்லையா? வா நண்பா வலை செய்து கடலை வடிகட்டி மீன் பிடிப்போம்.”

அற்புத உபாயம். இதைப் பரீட்சை செய்துபார்க்க இந்த இடம் ஏற்றதல்ல. அலைகள் குறைவான பகுதியில் இவ்வுபாயத்தை முயற்சித்துப் பார்க்கலாம். அதோ அங்கே கடலின் ஓரம் உள்ள அந்தக் காடு அலைகளை ஆற்றிக்கொண்டிருக்கிறது. அங்கே மீன் வளமும் நிரம்ப உள்ளது. வா நண்பா அங்கிருந்து நாம் துவங்குவோம்.”

…. .. . ….    …. .

"அது என்ன கடலில் அலைகளை ஆற்றும் காடு? காடு என்பது கடலில் சாத்தியமா? மரங்கள் உப்புநீரில் எவ்வாறு முளைக்கும்? "

 முளைக்கும்.

அப்படிப்பட்ட நிலப்பரப்பு ஒன்றை பார்க்கலாமா நண்பர்களே?

சதுப்புநிலம் என்பது கடல்நீர் மற்றும் நன்னீர் ஆகிய இரண்டும் கலப்பதால் ஏற்படும் என்றும், இதில் சில குறிப்பிட்ட வகை தாவரங்கள் மட்டுமே வளரும் என்றும் நற்றிணை பதிவு செய்துள்ளது.

கடலிலிருந்து வான் முகந்த நீர் குறிஞ்சியில் மோதி, நதிகளாய் பெருகி, நிலத்தில் தவழ்ந்து, திரும்ப கடலைச் சேரும் நதிமுகத்துவாரத்தில் வீற்றிருக்கின்ற அலைகளை ஆற்றவல்ல காடுகளாகியஅலையாத்திக்காடுகள்’.  இவை கடலுக்கும் நிலத்துக்கும் இடையில் ஒரு பாலமாய் விளங்குகின்றன. இவை ஆர்ப்பரித்து வரும் அலைகளை அடக்கி வைக்கின்றன. இவை எல்லா நாடுகளிலும் இருப்பதில்லை நம்மைப்போல்  பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.



 இங்குள்ள மரங்களுக்கு மற்ற மரங்களைக் காட்டிலும் சில சிறப்பியல்புகள் உள்ளன. சவால்களுக்கு பயந்த சாதாரணமானவன் சராசரி மனிதனாய் இருக்கிறான். ‘ஜங்கில் புக்படம் பார்த்தோமேதாய் தந்தை யாருமில்லா குழந்தை ஒன்று வனவிலங்குகள் துணையோடு சவால்களைச் சந்தித்து வளர்ந்ததல்லவா? அது போல சவால்களை உறுதியோடு சந்திப்பவன்தான் சரித்திரம் படைக்கிறான். இங்குள்ள மரங்களின் சிறப்புகளுக்கு காரணம் அவை இங்கு சந்திக்கும் சவால்கள்.

 சவால் ஒன்று- கலங்கலான நீர்- மற்றும் நீரில் குறைந்த அளவே உள்ள பிராணவாயு.

தீர்வு: ஏரியல் வேர்கள். ஆலமரம் போன்று கிளைகளில் இருந்து இறங்கும் வேர்கள், ஒரு வலைப்பின்னலைபோல் நிலத்தில் பதிந்து, சல்லடை போல  கலங்கல் நீரிலிருந்து நல்ல நீரை வடிகட்டுகின்றன, மேலும் வேர்களின் மூலம் அவை  சுவாசிக்கின்றன.


சவால் 2- ஏறி இறங்கும் நீர்மட்டத்தில் விதைகள்  மூழ்கி செத்துபோகும் அபாயம் .

தீர்வுகூரிய ஈட்டி போன்ற வால் முளைத்த விதைகள். விதைகள் விழுந்தவுடன் கூர் முனை கொண்ட வால் மண்ணில் நங்கூரமிட்டுவிடும். விதை, நீரின் மேலே இருக்குமாறு ஒரு அமைப்பு.

.

பின்னர் மேல் உள்ள ஓடு கழன்று செடி முளைக்க ஆரம்பிக்கும், இது அவிசென்னா தாவர வகையில் உள்ள சிறப்பு.

  மேலும் சிலவகைச் செடிகள் குறிப்பிட்ட அளவுவரை குட்டிச்செடிகளை தாய்ச்செடியிலேயே வளர விட்டு, நீர் மட்டத்திற்கு வெளியே மண்டையை நீட்டி வளரும் அளவுக்கு பெரிய பையனானதும், அவற்றை நீரில் வளர அனுமதிக்கும். அதாவது இது குட்டி போடும் வகை தாவர இனம்.

சவால் 3- அதிகப்படியான உப்பு நீர்.

தீர்வு: அதிகப்படியான உப்புநீரை சில இலைகளில் தேக்கி, அவற்றை பழுத்து விழச்செய்கின்றன.


அந்த இலைகள் மக்கி, ஒரு organic சூழ்நிலையை அந்த இடத்தை சுற்றி உருவாக்குகின்றன, அவை சின்னஞ்சிறிய உயிரினங்களை வசீகரிக்கின்றன. மேலும் காற்றில் இருக்கும் காரியமிலவாயுவானது இவ்வாறு மட்கும் இலைகள் மூலம் நிலத்திற்கு திருப்பி அளிக்கப்படுகிறது. எனவே இவ்வகை காடுகளை சிறந்த கார்பன் scrubber என்கின்றனர். சுரபுன்னை கண்டல் போன்ற மரங்கள் இருக்கும் காடுகள் வழியாக வேகமாக வரும் புயல் காற்று; வேர்ப்பின்னல்களுக்கும் செடிகளுக்கும் ஊடாக வரும்பொழுது, வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது. சுனாமி போன்ற பேரலைகளின் வேகமும் இவற்றால் குறைக்கப்படுகிறது.

மேலும் இங்குதான் கடலின் நுரையீரலாகக் கருதப்படும்  பவளப்பாறைகள் அதிகம் உள்ளன. நாம் வெளியேற்றும் கரியமிலவாயுவில் 30% பவளப்பாறைகளால் தான் உறிஞ்சப்படுகின்றன. மேலும் கடலில் உள்ள உயிரினங்களில் கால்பங்கு இங்கு தான் வசிக்கின்றன. பல வகை உயிரினங்கள் இங்கு வசிப்பதால் பல வகை வேட்டையாடும் உயிரினங்கள் இங்கு உலாவும். அவற்றிடமிருந்து தப்பிக்க, மீன் குஞ்சுகள் அருகிலிருக்கும் அலையாதிக்காடுகளில் தஞ்சம் புகும். இங்கே அவை கிட்டத்தட்ட ஏழு மடங்கு பெரிதாக ஆன பின்னர்தான்  பவளப்பாறைகளுக்குத் திரும்பும்.

படம்: வேட்டையாடி பறவைகள் நெருங்க முடியா வலைபின்னல் வேர்களுக்குள் மீன்குஞ்சுகள்.


படம்: மட்க்கிகொண்டிருக்கும் இலைகளால் ஒரு ஆரோக்கியமான organic சூழலில் மீன் குஞ்சுகள் .


அலையாத்திகாடுகள் இருக்குமிடத்தில் அருகிலுள்ள பவளப்பாறைகளின் வளர்ச்சியும் அதை சார்ந்த உயிரினங்களின் வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கும்.

-------------------------

நீர்தான் உயிர்களின் பிறப்பிடம். இந்த உலகில் நீர்தான் பெரும்பான்மை உயிர்களின் வாழ்விடம். நீர் ஒரு அற்புதப்பொருள், உயிர்கள் ஜனித்திருக்கத் தேவையான பண்புகள் நிரம்ப உண்டு அதனிடம். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால்; நிலத்தில் இருக்கும் மரங்களைக் காட்டிலும் கடல் உயிரிகள் தான் அதிக ஆக்ஸிஜனை வெளியிடுகிறதுஓரிடத்தில் குவியும் சூரிய வெப்பத்தை உலகம் முழுவதும் பகிர்ந்தளிக்கும் வேலையையும் கடல்கள் செய்கின்றன. இதன் விளைவாலேயே நமக்கு பருவமழை கிட்டுகிறது.

வளமிகு குறிஞ்சி நிலத்தில், மினரல் மிக்க நிலத்தை ஆதாரமாகக் கொண்டு சூரியனை எட்ட அணியணியாய் அணியணியாய் செங்குத்தாய் விரவியுள்ளன மரங்கள் மற்றும் அதை சார்ந்த உயிர்கள். ஆனால் நீரில் கரைக்கப்பட்ட மினரல்கள் சமமாய் பரவியிருக்க, கிடைமட்டமாக பரவியுள்ளன கடல்வாழ் உயிர்கள். அதன் காரணமாய் பரந்துபட்ட நீர்பரப்பு பல்வகை உயிரினங்களைக் கொண்டுள்ளது.

சூரியமண்டலத்தில் பூமி மட்டுமே (தரவுகள் அடிப்படையில்) அதிகளவு நீரைக் கொண்டுள்ளது. அதன்காரணமாகவே உயிர்கள் இங்கே தோன்றின. நீரின் சிறப்பியல்புகள் பல. நீரின் பாகுத்தன்மை அதிகம். அதனால் அது உராய்வினை வெகுவாகக் குறைக்கிறது. காற்றுஊடகத்தில் பறவைகள் பறப்பதை விட, நீர் ஊடகத்தில் மீன்கள் நீந்துவதற்கு குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது. நீருக்கு, மேற்பரப்பு அழுத்தம் அதிகம். அதனால்தான் பொருட்கள் மிதப்பதற்கு வசதியாக உள்ளது, இதன் காரணமாகத்தான் நாம் கப்பலை நீரின் மேல் எளிதாகச் செலுத்த முடிகிறது.

நிலம் எளிதில் வெப்பம் அடையும், ஆனால் நீர் அப்படியல்ல. அதிக வெப்பம் நீரில் படும்பொழுது நீர் ஆவியாகி விடும். ஆவியான நீர் குளிர்ச்சியடையும் பொழுது நீராகி விடுகிறது, அதிகக் குளிர்ச்சியின் பொழுது பனிக்கட்டி ஆகிவிடுகிறது. நீரும் பனிக்கட்டியும் வேதியியல் அடிப்படையில் வேறு வேறு அல்ல. ஆனால் பனிக்கட்டி நீரின் மேல் மிதக்க வல்லது. பூமியின் நன்னீரில் பெரும்பகுதி இவ்வாறு பனிக்கட்டியாய் சிறைபட்டுள்ளது. பூமியின் துருவப் பகுதியில் சிறைபட்டுக் கிடக்கும் பனிக்கட்டிகள் உருகிவிட்டால் உலகின் பல நாடுகளின் கடற்கரை நகரங்கள் அழிந்துவிடும்.

நீர் இவ்வாறு வெப்பத்தை எடுத்துக்கொண்டு மேகமாகி, மேகம் குளிர்ந்து   மழையாய் நிலத்தில் பொழிவதால்தான் நிலத்தில் நமது இருப்பு உறுதி செய்யப்படுகிறது.

மேலும் நீர் ஒரு நல்ல கரைப்பான். பல்லாயிரம் வருடங்களாக நிலத்திலிருந்து நீர் கரைத்த மினரல்கள் மற்றும் உப்புகள் தான் கடலில் நிறைந்துள்ளன. உப்புத்தன்மை என்பது கடல் நீரில் நிறைய உள்ளது. ஆனால் ஆறு குளம் குட்டை போன்ற நன்னீரில் அவை மிகவும் குறைவு. ஆயினும் நன்னீரில் வாழும்  மீன் மற்றும் ஈரிடவாழ்விகளான தவளைகள் வெளியிடும் நைட்ரஜன் சத்து மிகுந்த கழிவுகளை அந்த நீர் கொண்டுள்ளது.

இடைக்கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள்ஆற்று ஓரங்களிலும்‌, மலை அடிவாரங்களிலும்வாழ்ந்தார்கள்என்பது கருவிகள்கிடைக்கும்இடங்களை வைத்துக்கொண்டு உய்த்துணரவேண்டியிருக்கிறது. இப்பொழுது கூட பழனிக்கு அருகே அவர்கள் பல குழிகளை நோண்டி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுமிக உயர்ந்த மலைகளுக்கு இவர்கள்செல்லவில்லை. திருநெல்வேலிக்கடற்கரையில்கிடைக்கும்கருவிகளை வைத்தும்‌, அதேபோல வடக்கே பம்பாய்க்கு அருகில்இக்கருவிகள்கிடைக்கும்இடத்தை வைத்தும்ஓரளவுக்கு இவர்கள்கடல்ஓரங்களில்வாழ்ந்து, மீன்பிடிக்கும்தொழிலையும்மேற்கொண்டிருந்தார்கள்என்று சொல்லலாம்‌.

இந்தியாவில்காணப்படும்கடைக்கற்கால நிலைகளில்திருநெல்வேலி நிலைகள்முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. முதன்முதலாக வில்லும்அம்பும்வழக்கத்துக்கு வந்தது இந்தக்காலத்திலேயே. இதற்கு முன்னால்வேல்கள்தான்வழக்கத்தில்இருந்திருக்க முடியும்‌. ஆய்வாளர்கள் இவர்கள் காட்டுத்தானியங்களை அறுத்துப்பயன்படுத்தினார்கள்எனக்கருதுகின்றனர். இலங்கையிலும்திருநெல்வேலிக் கடற்கரையிலும்கிடைக்கும்இது போன்ற கருவிகளின்ஒற்றுமையை வைத்து ஒருவேளை இந்த இரண்டு பகுதிகளுக்கும்கடல்மூலமாகத்தொடர்பு இருந்ததோ என்று உய்த்துணரவும்இடமிருக்கிறது என்று ஆல்சின்அம்மையார்கருதுகிறார். அல்லது கடற்கோள் நிகழ்வதற்கு முன்பு இரண்டு நிலப்பகுதிகளும் ஒன்றிணைந்து இருந்திருக்க வேண்டும் எனவும் அனுமானிப்பதற்கு இடம் உள்ளது. மீன்கள் தான் ஹரப்பர்களின் முக்கிய உணவு என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது.

நெய்தல் நிலத்தில் குடியேறிய பரதவர்களின் முக்கிய உணவு மீன். மேலும் கடல்தந்த உப்பின் துணைகொண்டு மீனை, கருவாடாக ஆக்கியும் அவர்கள் பதப்படுத்தி உண்டனர். மீன்பிடிக்க இயலாத புயல் காலங்களில் கூட பதப்படுத்திய அந்த உணவு அவர்களுக்கு ஊட்டமளித்தது. தமிழர்களின் நிலையான உணவுக்கான கனவு இவ்வாறு நெய்தல் நிலத்தில் நிறைவேறத் தொடங்கியது.

உண்டது போக மீதமுள்ள கழிவுகளைக் குவித்த இடங்களில் செடிகள் செழிப்பாக வளர்வதை அம்மக்கள் கண்டனர். தங்களுக்கு விருப்பமான பழம்நல்கும் தாவரங்களை, மீன் கழிவுகளையும் நைட்ரஜன் சத்துநிறைந்த நீரையும் கொண்டு வளர்க்க ஆரம்பித்தனர் பரதவப்பெண்கள்.

பயிர்களை விளைவித்து விளைச்சலைக் கொள்ளும் வழக்கம் குறிஞ்சியிலேயே இருந்தது. ஆயினும் குறிஞ்சி நிலம் நல்ல மண்வளத்தை கொண்டுள்ளதால் மிகுந்த பிரயாசம் இன்றி விளைச்சலை விளைவித்திருந்தனர் மலைவாழ்மக்கள். இதை 'தொய்யாது வித்திய துளர் படு துடவைஅதாவது உழாது விளைந்த நல்ல விளைநிலம் என்கிறது கடைச்சங்கநூலான மலைபடுகடாம்.

Ecotone  என்பது இருவேறு சூழல்கள் அருகருகே இருக்கையில், அவற்றிற்கு இடையில் இருக்கும் இருசூழலையும் இணைக்கும் வண்ணம் தகவமைப்பு கொண்ட பிரதேசம் என்பதை குறிஞ்சியிலேயே கண்டோம். இதுவும் அதுபோன்ற ஒரு இடமே. ஒரு சூழலின் ஓரத்தில் இருந்து அடுத்த சூழலலுக்கு மாறும் Edge effect எனப்படும் 'ஓர  விளைவு' நடைபெறும் இடம் இது.

நதி கலக்கும் நன்னீர் பகுதியாம் கழிமுகங்களில் விளைச்சலுக்குத் தேவையான நல்லநீர் மற்றும் அதிக வண்டல்மண் இருக்க, நிலத்தை வளமாக்கும் மீன் கழிவுகள் துணையோடு வேளாண்மைக்கான அடித்தளம் நெய்தலில் ஓரவிளைவு நடக்கும் இடங்களில் இடப்பட்டது.

நெய்தல் நிலத்தில் மழை பெய்தால் நெல் விளையும். மழை பெய்யாவிட்டால் உப்பு விளையும்.’ என்று நற்றிணை குறிப்பிடுவதைக் கொண்டு இவ்விடங்களில் விவசாய முன்னெடுப்புகள் நடைபெற்றதை நாம் அறியமுடிகிறது.

நன்னீரும் கடல்நீரும் இணையும் இந்தப்பகுதிகள் உற்பத்தித் திறனைப் பெருக்க வல்லவை. சங்க காலங்களில் மீன்கள் நீந்தும் நன்னீர் சூழலில் விவசாயம் செய்வது வழக்கில் இருந்துள்ளது.“ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல்எனும் ஆண்டாளின் வரிகள் இதை நமக்கு மெய்ப்பிக்கின்றன.

வயல் அருகில் உள்ள மாமரத்திலிருந்துபழுத்துத் தானாக விழுகின்ற இனிய பழங்களைக் கவ்வி உண்ணும் வாளை மீன்கள் வாழும் ஊரை உடைய தலைவன் என்ற பாடலின் மூலம் மீன் வளம் மருதநிலம் முழுவதும் இருந்ததை நாம் அறிய முடிகிறது.

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்

வயல் முழுதும் இருந்த கயல்கள் அவர்களுக்கு புரதம் அளித்து வந்திருக்கிறது. இது போல இருவேறு வேளாண் முறைகளின் கூட்டுபண்ணைய முறைகளுக்கான அடித்தளம் இங்கே இடப்பட்டது. இந்த கூட்டுபண்ணைய முறையைபழனம்’ (rice fish culture) என்று சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

மீன்கள் பூச்சித்தாக்கத்தை கட்டுப்படுத்துவதோடு தமது கழிவால் நிலத்தையும் வளமாக்கியதுஇதே முறையில் நிலத்தின் வளம்கூட்டி பயிரை விளைவித்தால், பரந்துபட்ட நிலப்பரப்பை நிரந்தரமாய் உணவுவழங்கச்செய்து ஒரு பெரும் சமூகமாய் வாழலாம் என்பதை இந்த ஆரம்பகால விவசாய முன்னெடுப்புகள் தமிழர்களுக்கு உணர்த்தி இருக்கக்கூடும்.

நிரந்தரமாய் ஓரிடத்தில் தங்குவதில் இருந்த நன்மைகள் பல. மனித உயிர்களுக்கு குழந்தை வளர்ப்பிற்கு அதிக நாள் தேவைப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம். நாடோடிகளாய் இருந்த சமூகத்திற்கு, அலைச்சல் காரணமாக ஐந்து வருடங்களுக்கு ஒரு குழந்தை என்கின்ற அளவிலேயே மனிதப்பெருக்கம் இருந்தது. ஆனால் நிரந்தரமாய் ஓரிடத்தில் தங்குவதன் மூலம் குழந்தைவளர்ப்பு மனிதர்களுக்கு எளிதாய் இருந்தது. அதனால் 2 வருடத்திற்கு ஒரு குழந்தை என்கின்ற அளவில் மனிதப்பெருக்கம் அதிகரிக்கத் துவங்கியது. அந்தகாலங்களில் மனிதப்பெருக்கம் என்பது ஒவ்வொரு சமூகத்தின் கட்டாயமாக இருந்தது. ஃபெர்டிலிடி ரேட் எனப்படும் மனித இனப்பெருக்கத்தைக் குறிக்கும் எண்ணின் அளவு 2.5 க்கும் மேல் இருந்தால் தான் ஒரு இனம் அழிவில் இருந்து காக்கப்படும். இதன்காரணமாய் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் பெண்கள் போற்றுதலுக்கு உரியவராகக் கருதப்பட்டனர். ‘மக்களைப் பெற்ற மகராசிஎன்கின்ற கிராமவழக்கு ஒன்றினை இந்தக் கருத்தோடு ஒப்பிட்டு நோக்கலாம். மக்களுக்காக உயிர் நீத்த வீரர்களை வழிபட்டது போலவே, பிள்ளை பேரின் போது உயிரை விட்ட பெண்களும், பல மக்களை பெற்றெடுத்த பெண்களும் போற்றுதலுக்கு உரியவர்களாக ஆக்கப்பட்டனர். தாய்தெய்வ வழிபாடு இவ்வாறாக உருவாக ஆரம்பித்தது.

உதாரணத்திற்கு சூலி (சூலம் தரித்தவள்/கர்ப்பவதி) என்கிற முச்சூலி/திரிசூலி. மூன்று குலங்களை தோற்றுவித்த மூத்தவள். மூன்று மக்களைப்பெற்று வளர்த்தெடுத்தவள். அல்லது ஒரே பேறில் மூன்று பிள்ளைகளைப்பெற்று ஆளாக்கியவள். பெற்ற மூன்று குலங்களை காட்டில் எதிரிகளிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் காக்க மூர்க்கத்துடன் போராடி பெருக்கியவள்

கிட்டத்தட்ட இதே போல் ஒரு தோற்றம் கொண்ட பெண் தெய்வம், வடஇந்தியாவில் வழிபடப்பட்டு வந்துள்ளது. அவளின் பெயர் பீம காளி. கோப உருவம் கொண்ட அவளுக்கு நான்கு கைகள். அவளது ஒரு கையில் கதிர் அரிவாள் உள்ளது.  இன்னொரு கையில் வெட்டுப்பட்ட  ஆணின் தலை ஒன்று உள்ளது. அதில் வழியும் இரத்தத்தை இன்னொரு கையில் வைத்திருக்கும் கபாலத்தில் பிடித்துக் கொண்டிருப்பது போல உக்கிர உருவமைப்பு கொண்ட தெய்வம் அவள்.

 தக்ஷினகாளி என்று ஒருவர் இருக்கிறார் அவர் சிவனை நெஞ்சில் ஏறி மிதித்தபடி காட்சியளிக்கிறார்.

தமிழகத்தில் நாடார்கள் பத்ரகாளியை வழிபடுகின்றனர். இவர் ஒரு செவிலித் தாயாக இருந்திருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்பேய்ச்சியம்மன் வழிபாடும் தமிழகத்தில் பச்சிளம் குழந்தையை  காப்பாற்றி வளர்க்கும் கதைகளை ஒட்டியே வருகிறது. பேச்ய்சியம்மனும் ஒரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து, குடலை கையில் ஏந்திய படியும் ஒரு ஆணின் நெஞ்சில் காலை வைத்தவாரே கையில் குழந்தையை ஏந்தியபடி  காட்சியளிக்கிறார் .

Oggu கதையில்  மகாகாளி ஒருவர் வருகிறாள். அவள் உஜ்ஜெயினியின் அரசி. வீரபத்திரன் எனும் வீரப்பாவிடம் சகோதரன் போல் பாசம் காட்டுகிறாள்.  மருத நில அரசியான காளியின் நிலத்தை வீரப்பரின் மேய்ச்சல் சமூகம் பலப்படுத்தி, அதனால் வீரப்பர் நற்பெயர் பெற்று இருக்கக்கூடும்.

சகோதரரிடம் இருந்த பாசமிகுதியால்; வீரப்பாவை உஜ்ஜைனியின் அரசனாக ஆக்க விரும்பிய அவள்; வீரப்பாவிடம்அரசனாக விருப்பமா?” எனக்கேட்கையில், தனது கடமை மேய்ச்சல் புரிவதுதான்  என்று அக்கோரிக்கையை மறுத்து விடுகிறார் வீரபத்திரர்

காளியின் கையில்கதிர் அருவாள்எனும் விவசாய ஆயுதம் உள்ளதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இவற்றைக் காணும்பொழுது இக்கதைகள் அனைத்தும், மருதநில குடிகளாக மக்கள் நாகரிக முன்னேற்றம்  அடைந்த  பொழுது நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளவை எனக் கருதத் தோன்றுகிறது.

மேற்கூறிய அனைத்து கதைகளிலும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், காளி என்பவள் பெரும் வீரமும் பெரும் கோபமும் கொண்டிருந்தாலும், அடிப்படையில்  தாயன்பு கொண்டவளாக காட்சியளித்திருக்கிறார்.

போரில் இறந்தால் நடுகல், தாயன்பு கொண்டவருக்கு நடுகல், பிள்ளைப் பேற்றில் இறந்தால் சுமைதாங்கிக் கல் என சமூகம் தழைத்தோங்க அரும்பாடுபட்ட ஆண்களைப் போற்றியது போலவே பெண்களையும் போற்றுதலுக்கு உரியவர்களாய்க் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறது நம் சமூகம் என்பது இதன் மூலம் நாம் பெறும் செய்தி.

……..

நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க நெய்தல் நிலம் பயன்பட்டதை மறுக்க இயலாது. ஆனால் நெய்தல் நிலம், பெரியஅளவில் உணவு இருப்பைக்கொண்ட நீரையும், சிறிய அளவில் பாலை நிலத்தை ஒத்த மணற்பரப்பையும் கொண்டது. அது பெரும் சமூகத்தைக் கொள்ளும் அளவிற்கு பரந்த நிலமல்ல.

 ‘பெரு நீர் விளையுள் எம் சிறுநல் வாழ்க்கைஎனும் தலைவியின் வரிகள் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கிறது.

தமிழகத்தில் குறிஞ்சிக்கும் கடலுக்கும் இடையே பரந்துபட்ட நிலப்பரப்பு இருக்கிறது. அங்கே நெய்தலில் பழகிய விளைச்சல் முறையை பரீட்சித்துப் பார்க்கலாம். ஆனால் வருடத்தில் சில மாதங்களில் மட்டுமே நீரைக் காணக் கூடியவை அந்த நிலங்கள். அந்த நிலத்தில் நீரை எப்படியேனும் வருடம் முழுவதும் நிலைப்படுத்திக் கொள்ளும் உபாயம் பழகினால் நிலத்தை நம் சொல் கேட்க வைக்கலாம் அல்லவா?

அப்படிப்பட்ட அரிய நீர்மேலாண்மை வித்தையில் விற்பனர் ஆனார்கள் சங்ககாலத் தமிழர்கள். அதன் காரணமாய் உறங்கிக்கிடந்த தமிழகத்தின் வறண்ட நிலங்கள் சிலிர்த்து எழுந்தன. கூடவே எழுந்தது தமிழ்க்குடியும் பல்லுயுர் கூட்டமைப்பும்.

சங்ககால அரசுகளில் ஒன்று பாண்டிய அரசு. அவர்கள் மருத நிலத்தைப் போற்றிய அதேவேளையில், நெய்தல்நிலத்தை ஒதுக்கிவிடாமல் அந்நிலத்தின் துணைகொண்டு அரசினை வளப்படுத்தினர். அதன் காரணமாய்கயல் அவர்கள் கொடியில் குடியேறியது. முத்துக்குளியல் பாண்டியநாட்டு பரதவர்களின்  சிறப்புத்தொழிலாய் இருந்தது.

கடலில் வழித்தடங்களை அறிய வானியல்  மற்றும் பொழுதினைப் பற்றிய புரிதல் மிக அவசியம். இதை பல பரதவ நாகரிங்களின் முன்னேற்பாடுகளால் நாம் அறியலாம். உதாரணத்திற்கு டோலமி போன்ற பண்டைய வானியலாளர்களால்  போலரிஸ் துருவ நட்சத்திரம் அறியப்பட்டிருந்தது, ஆனால் அதன் முக்கியத்துவம் இடைக்காலத்திலும் அதற்கு அப்பாலும் தான் வளர்ந்தது. டோலமி போலாரிஸை "வடக்கு நட்சத்திரம்" என்று அங்கீகரிக்கவில்லை, ஏனெனில் உத்தராயண காலங்களில் அது மெதுவாக முன்னோக்கி செல்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளில் மட்டுமே போலரிஸ் உண்மையான வடக்கு நிலைக்கு அருகில் இருந்தது. அதனாலேயே அதனை திசை அறிய பயன்படுத்தினர் ஆங்கிலேயர்கள். இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் துருவநட்சத்திரம் வட நட்சத்திரமாக இருக்காது; அது வேகா போன்ற பிற நட்சத்திரங்களால் மாற்றப்படும். அது ஏன் என்பதைப்பற்றி பிறகு காண்போம்.

பறவைகள் மற்றும் விலங்குகள் காந்தப் புலனை பார்க்க அல்லது உணர வல்லவைஆர்டிக் டர்ன் என்னும் பறவை ஒரு வருடத்தில் உலகையே சுற்றி வந்துவிடும். இது எப்படி அச்சிறிய பறவைக்கு சாத்தியப்படுகிறது என நாம் வியப்படையக்கூடும்.

 ஆமைகள் பறவைகள் போன்றவை காந்தப் புலனை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் வலசை செல்கின்றன. பாலைவன எறும்புகள் சூரியனை மட்டும் வைத்து திசைகளை அறிந்துகொண்டு, இரையை சேகரித்து, பிறகு பத்திரமாக கூடு திரும்புகின்றன.

 இந்த செய்திகள் உங்களை ஆச்சரியமூட்டி இருக்கலாம். ஆனால் பின்வரும் நிஜங்கள் வியப்பின் எல்லைக்கு உங்களை கொண்டு சென்று விடும்.

 சாலமன் மீன்கள் நன்னீர் ஏரிகளில்  முட்டை இடுகின்றன. முட்டைகளில் இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கு தனது தாய் யார், தந்தை யார் என்று தெரியாது. தன்னிச்சையாக வளரும் அவை தனது உள்ளுணர்வின் உந்துதலால், நதி வழியாக கடலை அடைகின்றன. பெரியவனான பின்பு யாரும் சொல்லாமலேயே நதியின் போக்கை எதிர்த்து, தாம் பிறந்த ஏரிகளை அடைந்து, முட்டைகளை இட்டுவிட்டு செத்துப் போகின்றன. காந்தப்புலன் அடிப்படையிலான வரைபடம் அதன் மரபணுவிலேயே பதிந்திருக்கிறது போலும். ஆமைகளின் பிறப்பும் வளர்ச்சியும் கிட்டத்தட்ட இது போலவே நிகழ்கிறது. இவற்றிற்கு அடிப்படை காந்தப்புலன் என்பது அறிவியலின் மூலம் ஓரளவிற்குத் தெரியவருகிறது. இயற்கையோடுமூன்றாவது கண்ணைஇணைத்து விட்டால், காந்தப்புலன் முதற்கொண்டு அனைத்தையும் உணர்ந்து கொள்ளலாம் என தமிழர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். அறிவியலின்படி இந்த காந்தப்புலனை அறிந்து கொள்வதற்குமூன்றாவது கண்மிகவும் உபயோகமாக இருக்கிறது. மூன்றாவது கண் எனும் செல்லப் பெயரால் அழைக்கப்படுவது பினியல் சுரப்பி.

பாரிட்டல் கண் (மூன்றாவது கண், பினியல் கண்) என்பது சில முதுகெலும்பு பிராணிகளில் உள்ள எபிதாலமஸின் ஒரு பகுதியாகும். மூன்றாவது கண் தலையின் உச்சியில் உள்ளது; இது பினியல் சுரப்பியுடன் தொடர்புடையது. இது சர்க்காடியன் சுருதிலயம் மற்றும் உடல்வெப்ப சமநிலைக்கான ஹார்மோன் உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது.’மடகாஸ்கர் ஸ்விஃப்ட்எனும் பிராணியின் பாரிட்டல் கண்ணானது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தால் சூழப்பட்டுள்ளது.  இது "மூன்று கண்கள்" இருப்பது போன்ற தோற்றத்தை அந்த உயிரிக்கு அளிக்கிறது. எகிப்து நாகரிகத்திலும், பண்டைய சித்த முறைகளிலும் இந்த மூன்றாவது கண்ணை விழிப்படைய வைத்து இறைநிலையோடு இணைதல் பற்றிய குறிப்புகள் மறைபொருளாக அறியக்கிடைக்கின்றன.

படம்: மடகாஸ்கர் ஸ்விஃப்ட்



இருவாழ்விகளான கடல்ஆமைகள், முட்டையிட நிலத்தையே நாடியுள்ளன. அதன் காரணமாய் நீரில் இருக்கும் அவை, மேற்கூறிய வகைகளில் காந்தப்புலனை அறிந்து கொண்டு கடலின் நீரோட்டத்தைப் பயன்படுத்தி எளிதான வழிகளில் நிலத்தை அடைந்து இனப்பெருக்கம் செய்யும் பழக்கம் கொண்டவை. 

ஆஸ்ட்ரோனேசியர்கள் ராபா நுய், ஹவாய், மார்குவேஸ் மற்றும் மடகாஸ்கர் தீவுகளை அந்த காலத்திலேயே எப்படி கண்டடைந்தனர் என ஆய்வாளர்கள் ஆய்வு செய்த பொழுது, ஆஸ்ட்ரோனேசியர்கள் கடல் ஆமைகளின் இடம்பெயர்வு முறைகளைப் பற்றிய புரிதலைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொலைதூர மற்றும் அறியப்படாத தீவுகளைக் கண்டறிய இந்த அறிவைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனும் முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.

தமிழர்களும் இவ்வாறே ஆமைகளின் வழித்தடங்களினைப் பின்பற்றி எளிய கடல்வழிகளை அறிந்துகொண்டு நாடுகள் பலவற்றில் நாவாய் மீதேறி கால் பதித்தனர். நாவாய்க் கொண்டு பயணித்தலை அடிப்படையாக கொண்டேNavigation’ எனும் சொல் உருவானது. ஆரியர்களுக்கு அவர்கள் சமூகம் கடல்பயணங்களை தடை செய்திருந்த அதேவேளையில், திரைகடலோடி திரவியம் தேடி வணிகம் வளர்த்தனர்  தமிழர்கள். வணிகம் வளர துறைமுகங்கள் உதவின.  தமிழர்களின் வாணிபம் பழங்காலம் தொட்டு இருந்து வருவதற்கான சான்றுகள் பல உள்ளன.

970 - 931 BC இல் வாழ்ந்த சாலமன் அரசன் தமிழர்களுடன் வாணிபத்தொடர்பில் இருந்தார் என  பழைய ஏற்பாடு குறிப்பிடுகிறது. [‘அரசரின்வணிகக் கப்பல்கள்,ஈராமின் கப்பல்களோடு சென்று கடல் வாணிபம் செய்தன. வணிகக் கப்பல்கள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பொன், வெள்ளியையும் தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றையும் கொண்டு வந்தன’] (1 அரசர்கள் அதிகாரம் – 10 – திருவிவிலியம்) இதில் ஹீப்ரூவில் மயில் என்பதை tuki என எழுதியுள்ளனர். இது தோகை எனப்படும் தமிழ் வார்த்தையிலிருந்து பெறப்பட்ட சொல்லாகும்.

துமிழகத்துக்கும்எகிப்துக்குமிடையே ஏற்பட்டிருந்த வாணிகத்தொடர்பு மிகப்பழைமையானதாகும்‌. அது எப்போது தொடங்கியிருக்கும்என்னும்கேள்விக்குப்பலவாறான விடைகள்அளிக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட 'எரித் திரியக்கடலின்பெரிப்ளூஸ்‌” என்னும்நூலை டபிள்யூ. எச்‌. ஸ்காபி என்பார்பதிப்பித்துள்ளார்‌. தம்பதிப்புரையில்அவ்வாசிரியர்கிரேக்க மக்கள்அநாகரிகத்தினின்றும்விழித்தெழுவதற்குப்பல்லாயிரம்ஆண்டுகட்கு முன்பே எகிப்தும்பண்டைய இந்திய நாடுகளும்வாணிகத்தொடர்பு கொண்டிருந்தன என்று கூறுகின்றார்‌.

உலகம் முழுவதும் இருந்த பரதவர்கள்தான், முதன்முதலில் பருவத்தை ஊன்றி அனுமானித்தவர்கள். நமது நாட்டிற்கு பாய்மரங்கள் மூலம் வருவதற்கு காற்றின் துணை அவசியம். வருடங்களின் சில மாதத்தில் வீசும் பருவக்காற்றை அனுமானித்தே அவர்கள் அச்சமயத்தில் எளிதில் பயணம் செய்தனர். அதனாலேயே பருவக் காற்றுக்கு Trade winds என்று பெயர் வைக்கப்பட்டது. வைகாசி மாதந்தொடங்கி மூன்று நான்கு மாதங்கள்வரையில்சேரநாட்டுக்கடற்கரையின்மேல்வந்து மோதும்தென்மேற்குப்பருவக்காற்றை முதன்முதல்கண்டறிந்தவர்ஹிப்பாலஸ்‌ (கி. பி. 45) என்ற கிரேக்கர்எனக்கூறுவர்‌. இப்பருவக்காற்றின்துணைகொண்டு படகுகள் பல தமிழகத்தின்மேலைக்கரைத்துறைமுகங்களை அடைந்து நங்கூரம்பாய்ச்சின.

தமிழகத்து நறுமணப்பொருள்களின்சுவையையும்‌, ஏனைய ஏற்றுமதிப்பண்டங்களின்பெருமையையும்கிரேக்கர்களின்மூலமே ரோமாபுரி மக்கள்அறிந்துகொண்டனர்‌. எனினும்கி.பி. முதலாம்நூற்றாண்டுவரையில்ரோமரின்வாணிகம்பெருமளவு விரிவடையவில்லை. இக்கால வரம்புக்கு முற்பட்ட ரோம மன்னரின்நாணயங்கள்தமிழ்நாட்டில்இதுவரையில்கிடைக்கவில்லை என்பது அதற்கு ஒரு சான்றாகும்‌. ரோமாபுரிச்சக்கரவர்த்தி அகஸ்டஸ்என்பவர்கி. மு. 80-ல்எகிப்தை வென்று அதன்மேல்தம்ஆட்சியை நிலைநாட்டினார்‌. இவ்வெற்றி எதிர்பாராத ஒரு நலனையும்அவருக்குப்பயந்தது. இதனால்அவருக்குத்தமிழகத்துடன்நேர்முக வாணிகத்தொடர்பு கிட்டியது. தமிழகத்தோடு நேரடி வாணிபத் தொடர்பு கொள்ளுதலே அக்காலத்தையும் மேற்கத்திய நாகரீகங்களின் உச்சபட்ச லட்சியம். வெள்ளையர்களுக்கு பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்த தொடர்பு சாத்தியப்படவில்லை

ரோமாபுரிச்சக்கரவர்த்தி அகஸ்டஸின்உடன்காலத்தவர்‌, ஸ்டிராபோ என்ற நூலாசிரியர்‌. இவர்பூகோள நூல்ஓன்றை எழுதியுள்ளார்‌. ‘எரித்திரியக்கடலின்பெரிபுளூஸ்‌” என்று அழைக்கப்படும்வேறொரு வரலாற்று நூலும்‌ (கி. பி. 60) கிடைத்துள்ளது. பிளினி என்பார்உயிரியல்நூல்ஒன்றையும்‌ (கி. பி. 70), தாலமி பூகோள நூல்ஒன்றையும்எழுதிவைத்துள்ளனர்‌. இந்நூல்களில்பண்டைய தமிழகத்தின்கடல்வாணிகத்தைப்பற்றிய சான்றுகள்பல காணப்படுகின்றன. புதுச்சேரிக்கு அண்மையில்உள்ள அரிக்கமேடு என்னும்இடத்தில்நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்மூலம்பல வகையான புதைபொருள்கள்கிடைத்துள்ளன. அவற்றுள்சிறப்பானவை ரோமாபுரியின்நாணயங்கள்‌. பழந்தமிழகத்துடன்ரோமாபுரி மேற்கொண்டிருந்த கடல்வாணிகத்தின்விரிவை இந்நாணயங்கள்எடுத்துக்காட்டுகின்றன. ரோமாபுரி ஆசிரியர்கள்எழுதிய நூல்களின்வாயிலாகத்தமிழகத்தின்துறைமுகங்களைப்பற்றித்தெரிந்துகொள்கின்றோம்‌. அவற்றில்பல துறைமுகங்களின்பெயர்கள்உருக்குலைந்து காணப்படுகின்றன. சேரநாட்டுத்துறைமுகப்பட்டினங்களான தொண்டியைத்‌ ‘திண்டிஸ்‌’ என்றும்‌, முசிறியைமுஸிரிஸ்‌’ என்றும், பொற்காட்டைப்‌ ‘பகரிஎன்றும்‌, என்றும்ரோமர்கள்குறிப்பிட்டுள்ளனர்‌. அவற்றைப்போலவே, கடற்கரைத்துறைமுகங்களான கொற்கையைக்‌ ‘கொல்சாய்‌’ என்றும்‌, நாகப்பட்டினத்தைநிகாமாஎன்றும்‌, காவிரிப்பூம்பட்டினத்தைக்‌ ‘கமராஎன்றும்‌, மரக்காணத்தைச்‌ ‘சோ-பட்மாஎன்றும்‌, மசூலிப்பட்டினத்தைமசோலியாஎன்றும்குறிப்பிடுகின்றன. சேரநாட்டுத்துறைமுகங்கள்அனைத்தும்கண்ணனூருக்கும்கொச்சிக்குமிடையில்அமைந்து இருந்தன.

ரோமர்கள்மட்டுமன்றிக்கிரேக்கரும்‌, சிரியரும்‌, யூதரும்தமிழகத்துடன்வாணிகத்தொடர்பை வளர்த்துக்கொள்ளலானார்கள்‌. தமிழகத்தில்ரோமாபுரி மக்கள்குடியேறி வாழ்ந்துவந்த இடங்களிலெல்லாம்அவர்களும்இணைந்து வாழலானார்கள்‌. அவர்களுள்பலர்தமிழகத்திலேயே நீண்டகாலம்தங்கிவிட்டனர்‌. அப்படித்தங்கியிருந்தவர்களிடமிருந்தே தமிழகத்தினைப்பற்றிய செய்திகளைக்தாம்கேட்டறிந்ததாகப்பிளினி கூறுகின்றார்‌. வாணிகம்விரிவடைய விரிவடையத்தமிழ்நாட்டிலேயே குடியேறிவிட்ட ரோமாபுரியினரின்தொகையும்வளர்ந்து வந்தது. அவர்களுடைய சேரி ஒன்று மதுரை மாநகருடன்இணைந்திருந்ததாகத்தெரிகின்றது. அவர்கள்வழங்கி வந்த பொன்‌, வெள்ளி நாணயங்களும்‌, செப்புக்காசுகளும்இப்போது புதைபொருள்அகழ்வாய்வில்கண்டெடுக்கப்படுகின்றன. அகஸ்டஸ்பேரரசனின்கோயில்ஒன்றும் இங்கு வழிபாட்டில்இருந்து வந்ததாகப்பியூட்டிங்கரின்அட்டவணைகளிலிருந்து அறிகின்றோம்‌.

சுள்ளிஅம்பேரியாற்று .வெண்நுரை கலங்க யவனர்தந்த வினை மாண்நன்கலம்பொன்னொடு வந்து கறியொடு பெயரும்வளம்கெழு முறி ஆர்ப்பு எழ...” (ஒடிந்த மரச்சுள்ளிகளை ஏந்தி வரும்பேரியாற்றில்குமிழ்த்தெழும்வெள்ளைவெளேரென்று மின்னிய நுரைகள்கலங்கும்படி _ யவனர்செய்து முற்றிய அழகிய வேலைப்பாடமைந்த உறுதியான மரக்கலங்கள்பொன்னைக்கொண்டு வந்து கொட்டிவிட்டு மிளகு மூட்டைகளை ஏந்திச்செல்லும்பேரொலி எழும்வளம்மிகுந்த முசிறிப்பட்டினம்‌...) என்று அகநாறூறு* குறிப்பிடுகின்றது.

ரோமாபுரியில்இறக்குமதியான சரக்குகளின்அளவு ஆண்டுதோறும்ஏறிக்கொண்டே போயிற்று. அதனால்‌, ஆண்டுதோறும்‌ 6,00,000 பவுன்மதிப்புள்ள ரோமாபுரித்தங்கம்தமிழரின்கைக்கு மாறிக்கொண்டே வந்தது. இவ்வளவு பெருந்தொகையில்தம்நாட்டுச்செல்வம்வடிந்து வருவதைக்கண்டு வெருவிய ரோமாபுரி மக்களில்சிலர்‌, தமிழகத்துடன்நடை பெற்றுவந்த வாணிகத்தையும்தமிழகத்துப்பண்டங்களின்மேல்ரோமருக்கிருந்த ஆரா வேட்கையையும்வன்மையாகக்கண்டித்தனர்‌. ‌

பொருளாதாரம்சார்ந்த தொழில்களில்முதன்மை நிலையினைப்பெறுவது வணிகத்தொழிலாகும்‌. ஒரு நாட்டின்வணிகத்தொழில்மேம்பாட்டின்அடிப்படையிலேயே அந்நாட்டின்பொருளாதார வளம்கணக்கிடப்படுகிறது. பழந்தமிழர்வணிகத்தை, உள்நாட்டு வணிகம்மற்றும்வெளிநாட்டு வணிகம்என இருவகையாகக்காணலாம்‌. உள்நாட்டு வணிகம்பெரும்பாலும்நிலம்சார்ந்த பொருள்களையும்‌, தொழில்களையும்அடிப்படையாகக்கொண்டும்‌, வெளிநாட்டு வணிகம்இயற்கைப்பொருள்கள்மற்றும்கைவினைப்பொருள்களை அடிப்படையாகக்கொண்டும்நடைபெற்றன. கடல்வழிப்போக்குவரத்து வெளிநாட்டு வணிகத்திற்கு ஏற்றதாக அமைந்திருந்தது. தரைவழி வணிகனின் பெயர் நாயகன் எனப்பட்டது. பெரியவணிகன் என்றால் மாநாயகன் கடல்வழி வணிகம் செய்தவன் சாத்தன். கோவலன் மற்றும் கண்ணகி இருவரின் தந்தையரின் பெயர்கள் முறையே மாநாயகன் மற்றும் மாசாத்தன் ஆகும். எனவே கண்ணகி கோவலனின் திருமணம்; இருபெரும் வணிகக் குடும்பத்தின் திருமணம் என நமக்குத்தெரிய வருகிறது.

பின்வரும் பாடல்வரிகளை கவனியுங்களேன்.

 

மீனொடூத்து நெற்குவைஇ

மிசையம்பியின்மனைமறுக்குந்து

மனைக்குவைஇய கறிமூடையாற்

கலிச்சும்மையகரைகலக்குறுந்து

கலந்தந்த பொற்பரிசம்

கழித்தோணி யாற்கரை சேர்க்குந்து

மலைத்தாரமுங்கடற்றாரமும்

தலைப்பெய்து வருநர்க்கீயும்‌'

 இதில்‌, மீனானது நெல்மாற்றாகப்பெறப்பட்டதும்‌, ஏற்றுமதிக்காய்மிளகு மூட்டைகள்கரையோரம்அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும்‌, இறக்குமதிப்பொருள்களாகிய பொற்பரிசங்கள்கலங்களில்இருந்து தோணிகளில்கரை சேர்க்கப்பட்டதும்‌, மலையில்விளைந்த பொருள்களும்‌, கடலில்விளைந்த பொருள்களும்நிறைந்திருந்தமையும்காட்சியாக்கப் பட்டுள்ளது. இப்பாடல்பண்டைத்தமிழர்வணிகச்சிறப்பைக்காட்டும்மிகச்சிறந்த சான்றாக அமைகிறது.

பழந்தமிழரின்ஏற்றுமதிப்பொருள்களில்கைவினைப்பொருள்கள்முக்கியப்பங்கு வகிக்கின்றன. பொன்னாலும்‌, மணியாலும்‌, முத்தாலும்‌, பவளத்தாலும்செய்யப்பெற்ற மாலைகள்வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்வகைப்பொருள்கள்கிடைத்த இடங்களையும்‌, அவற்றை ஒன்றுசேர்த்து மாலையாக்கிய செய்தியையும்‌, “பொன்னுந்துகிரு முத்து மன்னிய. மாமலை பயந்த காமரு மணியும்இடைபடச்சேய வாயினும்தொடைபுணர்ந்து அருவிலை நன்கல. மமைக்குங்காலைஎன்ற புறநானூற்றுப்பாடலடிகள்காட்டுகின்றன.

கி.மு. ஐந்தாம்நூற்றாண்டு முதற்கொண்டே மிகப்பெரிய கப்பல்களைக்கட்டக்கூடிய ஆற்றலையும்‌, நுண்ணறிவையும்தமிழார்பெற்றுவிட்டனர்‌. இக்கப்பல்கள்ஒவ்வொன்றும்முப்பத்து மூன்று டன்எடைச்சரக்குகளை ஏற்றிச்செல்லக்கூடியவை. பிற்காலத்தில்சோழ மன்னர்கள்காலத்தில்இவற்றைவிடப்பெரிய கலங்களும்கட்டப்பெற்றன. பிற்காலத்தவர்களான பல்லவர்கள்இரட்டைப்பாய்விரித்த கப்பல்களையும்வாணிகத்தில்ஈடுபடுத்தியிருந்தனர்‌.

தமிழகம்ஏற்றுமதி செய்த சரக்குகளில்சாலச்சிறந்தவை இலவங்கம்‌, மிளகு, இஞ்சி, ஏலம்‌, அரிசி, நுண்வகைக்‌ “கலிங்கங்கள்‌, தேக்கு, கருங்காலி, நூக்கு, சந்தனம்ஆகிய கட்டட மரவகைகள்முதலியன, மிளகும்இஞ்சியும்மருந்துகள்செய்யப் பயன்பட்டன. மேலைநாட்டினர் மருத்துவமுறைகளில் சித்த மருத்துவத்தின் தாக்கம் பெருமளவு இருந்திருக்கிறது. ஹிப்பாகிரேட்டஸ்என்ற புகழ்பெற்ற கிரேக்க மருத்துவர்கி. மு. ஐந்தாம்நூற்றாண்டில்வாழ்ந்தவர்‌. அவர்இந்திய மருத்துவ முறைகளையும்‌, மருந்து வகைகளையும்கையாண்டு வந்தார்‌. அவர்மிளகைஇந்திய மருந்துஎன்றே குறிப்பிடுகின்றார்‌. நல்லெண்ணெயின்பயனைக்கிரேக்கர்கள்கி. மு. ஐந்தாம்நூற்றாண்டிலேயே நன்கு அறிந்திருந்தனர்‌. நல்லெண்ணெய்பண்டைய தமிழரின்உணவுப்பண்டங்களுள்ஒன்றாகும்‌.

மேலைநாடுகளுடன்மட்டுமின்றிக்கீழைநாடுகளான சனம்‌, மலேசியா, ஜாவா. (சாவகம்‌), வடபோர்னியா ஆகிய நாடுகளுடனும்களுடனும்தமிழகமானது மிகவும்‌  வளமானதொரு கடல்வாணிகம்நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்‌. சீனத்துடன்தமிழகம்மேற்கொண்டிருந்த வாணிகத்தொடர்பானது மிகவும்பழைமையானதாகும்‌. இத்தொடர்பு கி.மு. ஆயிரம்ஆண்டளவிலேயே தொடங்கிவிட்டதெனக்தெரிகின்றது. தமிழகத்துப்பண்டங்கள்கி.மு. ஏழாம்நூற்றாண்டிலேயே சீனத்தில்இறக்குமதியாயின என்று அந்நாட்டு வரலாறுகள்அறிவிக்கின்றன. சீனத்துப்பட்டாடைகளையும்சர்க்கரையையும்தமிழகம்ஏற்றுக்கொண்டது. இதனால்இன்றளவும்சர்க்கரைக்குச்சீனி என்று பெயர்வழங்கி வருகின்றது. சீனக்கண்ணாடி, சீனக்கற்பூரம்‌,  சீனக்களிமண்‌, சீனக்காரம்‌, சீனக்கிழங்கு, சீனப்பட்டாடை, சீன வங்கம்‌, சீனாக்கற்கண்டு, சீனாச்சுருள்என்னும்சொற்கள்இன்றளவும்தமிழ்மொழியில்உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற புலவர்கள்; துருக்கியின் இஸ்லாமிய வியாபாரிகளை குறிக்கும்துருக்கர்எனும் சொல்லை உபயோகப்படுத்தியுள்ளனர். இதுவே துலுக்கர் என்றானது. இந்த அரபு வணிகர்கள் மூலம் நமக்கு குதிரைகள் இறக்குமதியாகின. குதிரைகளை இலகுவாகக் கையாளத் தெரிந்த அவர்களை, நமது மன்னர்கள் குதிரை படைத்தளபதியாக ஆக்கி, ‘ராவுத்தர்எனும் பட்டத்தை கொடுத்திருக்கின்றனர். சிவனேகுதிரை ராவுத்தராகவந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. வாணிபம் புரிய கப்பல் செலுத்தி வந்த இஸ்லாமியர்களைமரக்கல ராயர்என்று அழைத்தனர் இவர்கள்தான்மரைக்காயர்எனும் பெயர் பெற்றனர். சேர மன்னர் ஒருவரே இஸ்லாத்தை தழுவியுள்ளார். மேலும் பாண்டியர்களோடு சேர்ந்து முகலாயர்களை எதிர்த்தவர்கள் தமிழக இஸ்லாமியர்கள். ‘காவிரி நீரோவியம்எனும் நூலில் மேலதிக தகவல்கள் இதைப் பற்றி காணக் கிடைக்கின்றன

வடமொழிக்கு இலக்கணம்வகுத்த  பாணினி என்பவர்வடநாட்டுப்பூகோள அமைப்பை நன்கு அறிந்தவர்‌. அவர்நர்மதைக்குத்தெற்கில்கலிங்கத்தை மட்டும் குறிப்பிடுகின்றார்‌; ஆனால்‌; தென்னாட்டைக்குறிப்பிடவில்லை. அவருக்குக்காலத்தால்பிற்பட்டவரானகாத்தியாயனர்‌ (கி.மு. 4ஆம்நூற்றாண்டு) தம்இலக்கண நூலில்தென்னிந்திய நாடுகள்‌. அனைத்தையுமே குறிப்பிடுகின்றார்‌. இதைக்கொண்டு ஆரியர்கள்கி. மு. 600-க்குப்பிறகே தமிழகத்திற்கு வந்து குடியேறியிருக்கவேண்டும்என்று கருதவேண்டியுள்ளது. மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில்கி. மு மூன்றாம்‌, இரண்டாம்நூற்றாண்டுக்கல்வெட்டுகள்கிடைத்துள்ளன.

அக்காலத்திலேயே சமணசமயம்தமிழகத்தில்பரவிவிட்டதற்கு இவை சான்று பகர்கின்றன. வடநாட்டில்சந்திரகுப்தர்காலத்தில்மிகக்கொடியதொரு பஞ்சம்ஏற்பட்டதாகவும்‌, அதனால்பத்திரபாகு என்ற சமண முனிவர்ஒருவர்‌, சமணர்பலர்தம்மைப்பின்தொடர, தெற்கு நோக்கி வந்து மைசூரில்குடியேறினார்என்றும்செவிவழிச்சமண வரலாறுகள்கூறுகின்றன. பிறகு விசாகாசாரியார்என்ற திகம்பர முனிவர்ஒருவரும்அவருடைய மாணவரும்சோழ பாண்டிய நாடுகளில்பல இடங்களுக்கு வந்து சமண சமயத்தைப்பரப்பலானார்கள்.‌ முதன்முதல்தமிழகத்தை நாடி வந்தவர்களான சமணர்கள்தனித்திருந்து தவம்புரிவதையே தம்நோக்கமாகக்கொண்டிருந்தனர்‌.. அனால்‌, அவர்களைத்தொடர்ந்து பிறகு தமிழகத்திற்கு வந்தவர்கள்சமண சமயத்தின்விரியவையே தம்குறிக்கோளாகக்கொண்டனர்‌. அவர்களுள்தலைசிறந்து விளங்கியவர்குந்தா- குந்தாசாரியார்என்ற புகழ்பெற்ற சமண முனிவராவர்‌. தமிழகத்தில்ஆண்‌, பெண்ஆகிய இருபால்துறவிகட்கும்சமணப்பள்ளிகள்அமைக்கப்பட்டிருந்த செய்திகளைச்சிலப்பதிகாரமும்மணிமேகலையும்கூறுகின்றன. சமண முனிவர்கள்கர்நாடகம்முழுவதும்பரவினார்கள்‌. அப்பகுதியில்கி.பி. 8 ஆம்நூற்றாண்டில்கங்கர்களின்ஆட்சி தோன்றுமுன்பே சமண சமயம்வேரூன்றிவிட்டது. மேலும் சேர நாட்டிலும்‌, கடற்கரையோரம்சமணர்‌, பெளத்தர்ஆகிய இரு சமயத்துறவிகளும்‌‌ சமயப்பணிகளைத்தொடங்கிவிட்டனர்‌. இவர்கள்தங்கியிருந்த குகைகள்பல திருவிதாங்கூர்ப்பகுதியில்காணப்படுகின்றன. இதில் தமிழ்மன்னர் ஒருவர்; சமண மதத்தின் கொள்கைகளை சீரமைத்து; தமிழர் கொள்கைகளைப் புகுத்தி; ஆசீவகம் எனும் மதத்தைத் தோற்றுவித்தார்.

இவ்வாறு தமிழர்கள் ஆரியர்கள் உட்பட தம்மை நோக்கி வந்த அனைவரின் ஏற்புடைய கருத்துக்களையும் சுவீகரித்துக்கொண்டனர். (ஆனால் அவற்றில் சில கருத்துக்கள் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிகோலின என்பதே துயரச்செய்தி). ஆனால் அதற்குப் பின் வந்த மேலை நாட்டவர்கள் அனைவரின் நோக்கமும் நம் நாட்டினை அடைய எளிய வழிகளைக் கண்டறிவது; அதன் மூலம் பெரும் பொருள் ஈட்டுவது எனும் ஆசை. மேற்கத்திய நாடுகளுக்கிடையேயான இந்தியாவை எளிய வழிகளில் அடையும் இந்த போட்டியில் அவர்கள் கண்டறிந்தது தான் அமெரிக்கா. அதன் காரணமாகவே ஆதி அமெரிக்கர்களை சிவப்பிந்தியர்கள் என்றனர். அதன் பின்பு அவர்கள் கோழிக்கோட்டை கண்டடைந்தனர். அதன் பின்னர் அவர்கள் ஆசைபேராசையாய்மாறத்துவங்கியது. பேராசை என்பது துன்பவிளைவை ஏற்படுத்தும் முறையற்ற ஆசை. பேராசையின் விளைவால் பேக்கரியையே அடைய நினைத்த வீரபாகு போல கடைசியில் அந்த வணிகர்கள் நாட்டையே அடிமைப்படுத்திவிட்டனர்.

ஆனால் சங்க கால தமிழகமோ எதிற்கவியலா பெரும் கடற்படையை கொண்டிருந்ததால் யாரும் நம்மை சீண்டத்துணியவில்லை. இதன் காரணமாய் உலகின் பணக்கார நாடாகவும் பேரரசாகவும் தமிழகம் விளங்கியது.

செட்டியார்கள் கடல் கடந்து வாணிபம் செய்தவர்கள். வாணிபத்தில் நேர்மை கொண்டவர்கள். அவர்களிடம் அரசனைக் காட்டிலும் செல்வம் மிகுந்து இருந்தது. அப்படிப்பட்ட ஒரு செல்வந்தர் தான் பட்டினத்தார். அவர் அந்த அனைத்து செல்வங்களையும் உதறிவிட்டு துறவறம் மேற்கொண்டார். துறவியான அவர் பிச்சையெடுத்து சாப்பிட்டு வந்தார்.

தங்கையின் பிள்ளைக்குத் தாய்மாமனாகிய பட்டினத்தார் பிச்சையெடுப்பதைக் கருத்தில்கொண்டு தங்கையின் வீட்டில் சம்பந்தம் செய்ய வந்தவர்கள் சம்பந்தத்தை தட்டிக் கழித்துவிட்டனர். கடுப்பான தங்கை; பட்டினத்தாரைக் கொன்றுவிட திட்டம் போட்டாள். ஒருநாள், "அண்ணா, உனக்கு மிகவும் பிடித்த அப்பம் சுட்டு வைத்திருக்கிறேன். வந்து சாப்பிட்டுவிட்டுப் போ" என்று வீட்டிற்கு அழைத்தாள்.

அந்த அப்பத்தில் விஷத்தை கலந்துவிட்டாள்.

அப்பத்தைக் கையில் வாங்கிய மாத்திரத்தில் அதில் விஷம் கலந்திருப்பது முக்காலமும் உணர்ந்த பட்டினத்தாருக்குத் தெரிந்துவிட்டது.

உடனே, "தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" என்று சொல்லியவாறு அப்பத்தைத் தங்கையின் வீட்டின் கூரையின்மீது வீசி எறிந்தார். அப்பம் காய்ந்ததும் வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது.

(பாஸ்பரஸ் 1669இல் சிறுநீறில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது காற்றில் எரியக்கூடியது. வெள்ளை பாஸ்பரஸ் மிகவும் வினைத்திறன் கொண்டது மற்றும் ஆக்ஸிஜன் முன்னிலையில் 30 ° C வெப்பநிலையில் எரியக்கூடியது. பட்டினத்தாரின் தங்கை பயன் படுத்தியதீமுருகல் பாஷாணம்இதே தன்மையை கொண்டிருந்தது வியப்பளிக்கிறது).

வியாபரம் மற்றும் வணிகம் ஆகிவற்றில் கிடைத்த செல்வம் எத்தகையது என்பதை பற்றி பட்டினத்தார் கதையின் மூலம் நமக்கு ஒரு சித்திரம் கிடைக்கிறது.

வியாபாரத்தினால் பணம் பெருகியதென்னவோ உண்மைதான். ஆனால் வெளிநாட்டில் வணிகம் புரிய; தலைவன் தூரதேசம் சென்றுவிடுகிறானே. மேலும் நம் நாட்டில் குவிந்துள்ள  செல்வம் எதிரிகள் கண்களை உறுத்துகின்றதே. இதன் விளைவு, ஒரு கண்ணில் காதலும் மற்றொரு கண்ணில் வீரமுமாய் திரியவேண்டிய சூழலுக்கு ஆளானார்கள் தமிழர்கள்.

சந்ததிப் பெருக்கமும், பெருகிய சந்ததிகளைக் காப்பதுமே நாகரிகக் கட்டமைப்பின் முக்கியத் தேவை என்பது நாம் அறிந்ததே. அதனால் காதலையும் வீரத்தையும் வாழ்வின் அடிப்படையாகக் கொண்டனர் தமிழர்கள். அதைத்தான் அகத்திணை புறத்திணை என தொல்காப்பியம் நிலத்தின் உரிப்பொருளாய் பிரித்துக்கூறுகின்றது.

முதற்பொருள் மற்றும் கருப்பொருட்களைப்பற்றி நாம் அறிவோம். முதற்பொருள் நிலமும் பொழுதும். கருப்பொருள் நிலத்தின் சூழலைக் குறிப்பவை. உரிப்பொருள் என்பது மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கம் பற்றியதாகும்

ஆரியர்களின் வாழ்வியலில் நான்கு அடிப்படைகள் இருந்தது. அவை தர்மா(அறம்), அர்த்தா (பொருள்), காமா (இன்பம்) மற்றும் மோக்ஷா (வீடுபேறு). இதில் இன்பம் அகத்திணையைக் குறிக்கிறது, அறமும் பொருளும் புறத்திணையைக் குறிக்கிறது.

அப்ப, தமிழர்கள் மோட்சம் எனும் வீடுபேறு பற்றி கவலைப்பட வில்லையா?”

 முதல் மூன்று பொருளையும் கடைப்பிடிக்கும் ஒருவருக்கு வீடுபேறு பற்றிப் போதிப்பது தேவையில்லை என விட்டுவிட்டதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். இதை மறுப்பதற்கில்லை, காரணம் முதல் குறளிலிலேயே தெய்வத்தை கும்பிட்டு விட்டுஅறம் பொருள் இன்பம்எனும் முப்பாலையும் திருக்குறளாக வடித்த தெய்வபக்தி மிகுந்த திருவள்ளுவரே, “சாமியே உனக்கு கொடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாலும், நீ உன்னோட கடமையை ஒழுங்கா செஞ்சின்னா, உனக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும், ஒழுங்கா போய் பொழப்ப சரியா பாரு தம்பி,” எனக் கூறுகிறார்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.”

இதிலிருந்து நாம் பெறும் செய்தி என்னவென்றால்வீட்டிலும் சரி நாட்டிலும் சரி, நாம் ஒழுக்கத்தை சரிவரப் பேணவேண்டும் என்பதே. அதுவே நமது குடும்பத்தையும், நமது சமுதாயத்தையும் சிதையாமல் காக்கும். இதைச் செய்தால் வீடுபேறு தானாகக் கிட்டும்.

ஒரு நிலத்தின் தனித்தன்மை மிகுந்து வெளிப்படும் நேரத்தை நிலத்திற்குறிய சிறுபொழுதாக தொல்காப்பியர் கூறுகிறார். அந்நிலத்தின் உரிப்பொருள் என்பது அந்நிலத்தில் அந்தந்த சிறுபொழுது நேரத்தில் நடக்கும் ஒழுக்கம்.

குறிஞ்சி ஒரு இயற்கை எழில் கொஞ்சும் சொர்க்கபுரி. கூதிர், முன்பனி என்னும் பெரும் பொழுதுகளும் யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக்குரிய பொழுதுகளாகும். மலர் வனமும், குளிர் யாமமும் ஹனிமூனுக்கான சிச்சுவேசன் அல்லவா? அதனால் புணர்தலும், புணர்தல் நிமித்தமும் அதன் உரிப்பொருளாய் அமைந்தது. சுரத்தோடு வளம் குன்றிய பாலை பிரிதல் நிமித்தம் கொண்டது எனக் கண்டோம். முல்லையில் கால்நடைகளை மேய்க்கச் சென்ற தலைவன் வீடுதிரும்பும் வரை தலைவி அவனுக்காக காத்திருப்பதால் இருத்தலும், இருத்தல் நிமித்தத்தை உரிப்பொருளாக கொண்டுள்ளது முல்லை. நெய்தல் நிலத்தில் தலைவி தலைவனின் பிரிவைப் பொருத்துக்கொண்டு இருத்தலால், நெய்தல் பிரிதல்  நிமித்தம் கொண்டுள்ளது.

குடும்பத்திற்குப் பொருளீட்டும் நோக்கத்தில் கடல்வழிப் பிரிந்த தலைவனை நினைத்துத் தலைவி வருந்துவது, திருமணத்திற்காகப் பொருள் ஈட்டும் நோக்கத்தில் சென்ற தலைவனை எண்ணி வருந்தும் தலைவியும் நெய்தலில் உண்டு.

புறவாழ்க்கை பெரும்பாலும் வீரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை புறத்திணையின் மூலம் அறியமுடிகிறது. அகநானூறு மற்றும் புறநானூறு நூல்களில் இருக்கும் பாடல்கள் மூலம் நம் மக்களின் அகத்தையும் புறத்தையும் நாம் விரிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

நெய்தல் நிலத்தில் நமக்கு செல்வங்களை வாரிக்கொடுத்த கடல் அவ்வப்போது சீறிக்கெடுக்கவும் தயங்கவில்லை. சங்க காலத்தில் தமிழகம் மூன்று கடற்கோள்களை சந்தித்துள்ளது.

மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வவ்வலின்எனும் கலித்தொகைக் கூற்று இதை உறுதிசெய்கிறது.

சுனாமி தாக்கியபோது அலையாத்திக்காடுகளை கொண்ட கடற்கரைகள்  தப்பித்தது கண்கூடு. தற்போதைய தமிழகத்தில் அலையாத்திக் காடுகள் குறைந்து கொண்டிருக்கும் அதே வேளையில் பவளப்பாறைகளும் மரிக்க ஆரம்பித்துவிட்டன. வருடத்திற்கு இரண்டு சென்டிமீட்டர் என்ற அளவிலேயே பவளப்பாறைகளின் வளர்ச்சி இருக்கும். இவ்வாறு வருடக்கணக்கில் வளர்ந்து ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் அளவிற்கு பெரிய பாறைகளாக பரவியிருக்கின்றன அவைகள். இவைகள்தான் உலகின் பெரிய உயிர்களால் ஆன அமைவு. இவை மிதமான ஆழமும் வெளிச்சமும் உள்ள இடங்களில் மட்டுமே வளரும் தன்மை கொண்டவை. அப்படிப்பட்ட சூழல் நாம் இருக்கும் வெப்பமண்டல கடல்பகுதியாகும். இவற்றை நம்பி பல உயிர்கள் இங்கு  வாழ்வதைக் கண்டோம். பல்லுயிர்சூழல் பேணும் கடலின் குறிஞ்சிநில சோலைக்காடுகள் போன்றவை இவை.

தற்போதைய மனித செயல்பாடுகளின் காரணமாக அதிகப்படியான செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனக் கழிவுகள் போன்றவற்றை; நல்ல கரைப்பானான நீர் கரைத்துக் கொண்டு போய் கடலில் சேர்க்கின்றது. மேற்பரப்பு அழுத்தம் அதிகம் உள்ள நீரில், நெகிழிகள் மிதந்து கடலில் சேர்க்கப்பட்டு, பெரும் தீவுகளாக கடலில் உலா வருகின்றன. மேலும் அதிகரித்து வரும் நீரின் அமிலத்தன்மை காரணமாக பவளப்பாறைகள் மரணிக்க ஆரம்பித்துவிட்டன.

 எங்கோ கடலின் மூலையில் தவிக்கும் ஒரு மீனின் துயரம் உங்கள் காதுகளில் விழாமல் போகலாம். நீங்கள் அவற்றிற்கு அனுப்பிய; நச்சு உணவுச் சங்கிலியின் மூலம் வீரியம் அதிகரித்து, உங்களிடம் திரும்ப வரும் என்பதை மறவாதீர்கள்.

நிலத்தடி நீர் மாசடைதல் பற்றி ஏற்கனவே நாம் பார்த்தோம். நீரைப்பொருத்தவரை அடுத்த பிரச்சனை... over exploitation. சக்கையாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பது.

காவேரி பேஸின், முழுக்க முழுக்க over exploitation தான். இதுபோக, கடற்கரையோரம் உப்புநீர் உள்ளே ஏறிக்கொண்டு வருகிறதுபோர் போடும்போது - அந்த இடத்தின் சூழலியல், மண்ணமைப்பு, நீர்வளம் பற்றியெல்லாம் கவலையேபடாமல் ஆழமாக செல்லச்செல்ல, சுற்றி இருக்கும் எல்லா நீரும் போர்வெல்லை நோக்கியே வரும்தானே? இதனால் என்ன நடக்கும்? இதுவே கடற்கரையோரம் போர்போட்டால்? இயற்கையாக கடலைநோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நீர் உள்வாங்கும். அந்த நீர் முடிந்தவுடன்... கடல்நீர் உள்ளே வர ஆரம்பிக்கும். இப்படித்தான் விவசாய நிலங்களில் உப்புநீர் உள்ளே ஏறுவது நடக்கிறது.

விவசாயத்திற்கு நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதை எப்படி குறை சொல்ல முடியும் என்று தோன்றுகிறதல்லவா?

விவசாயத்திற்குத் தேவையான நீர் இதுபோன்ற முறைகளின் மூலமாகவா பண்டையத் தமிழகத்தில் எடுத்தாளப்பட்டது? “

அப்போதைய தமிழகம் எவ்வாறு மருதநிலத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்தது?”

இவற்றிற்கான விடையை அறிய நாம் மருத நிலத்திற்குச் செல்லவேண்டியுள்ளது.

இலகுலீசர் (ஆதியோகி: அத்தியாயம் 21)

வயல்கள் மீண்டும் அமைதியாகின.    போரில் சிந்திய இரத்தம் உலர்ந்தது. நிலத்தில் ஒரு புனித மௌனம் திரும்பியது.   அந்த நிலத்தில் இருந்த ஒரு  பள்ளத்...