Friday, October 24, 2025

மல்லண்ணா (ஆதியோகி: அத்தியாயம் 16)

அது ஒரு  குன்று. அதன் உச்சியில் பெரும் பாறைகள் செங்குத்தாக இருந்தன. அதன் உச்சியை அடைவது  அவ்வளவு எளிதல்ல. அந்த குன்றின் உச்சியில் சிவன் நிலவொளியின் கீழ்  நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அவர் எண்ணமெங்கும் மாயத் தோற்றங்களால் நிரம்பி இருந்தது. அவரது உடலில் அனல் கொதித்துக் கொண்டிருந்தது.  அவரது குருதியில்  இருந்த தாதுக்கள் உடலிலும் மனதிலும்  விபரீத விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அவரது  அனல் கொதிக்கும் உடல், வலி மிகுந்த எழுச்சி அறிகுறிகளை காட்டிக் கொண்டிருந்தது. பித்துப் பிடித்தது போல் உடல் சோர்வடையும் வரை வியர்வை வெள்ளம் பொங்க அவர் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் வலி மிகுந்த  எழுச்சி மட்டுப்படத் தொடங்கியது.

 உடல் சோர்வடைந்தாலும்  சிவனுக்கு உள்ளம் தெளிவடையவில்லை.  தெளிவடையாத சிவன் நந்தனுக்கு அருகில் அமர்ந்தார்,  அவரது விரல்கள் காளையின்  காயமடைந்த கழுத்தைத் தொட்டன.  நந்தனின் காயங்களை பார்த்த பின்பு, சிவனுக்கு நந்தன் நிகழ்த்திய அந்த வீரம் மிகுந்த கோரத்தாண்டவம் நினைவுக்கு வந்தது. 
“நந்தா, நீ வெறும் மிருகமல்ல, ஒரு வீரன். நீ நெருப்பைப் போல் முன்னேறினாய்.  அந்த வீரனை  புராணமாக்கினாய்” என்று பெருமை பொங்கக் கூறினார்.

சிவன் முன்னோக்கிச் சாய்ந்து, நந்தனின் கொம்பைத் தொட்டார்
“இவை... வெறும் கொம்புகள் இல்லை... ஆற்றல் மிகு திரிசூலங்கள். என்னுடைய திரிசூலத்தை விட இவை வலிமையானவை” என்று கூறினார்.

சிவன் அருகில் இருந்த பாறையை நோக்கிச் சென்றார். ஒரு கூர்மையான கல்லை எடுத்துக் கொண்டு, பாறையின் மேல் செதுக்கத் தொடங்கினார்.

முதலில் அவர் பாறையில் காளையின் உருவத்தை அழகாக வரைந்தார். பின்னர் காளையின் கொம்பினை வரையும் பொழுது, அவருக்கு தனது திரிசூலத்தின் ஞாபகம் வந்தது.  தனது திரிசூலத்திற்கு சமமானது அந்த கொம்பு என்பது அவரது எண்ணம். அந்த எண்ணத்தின் உந்துதலால் ஜோடிக் கொம்புகளை வரைவதற்குப் பதிலாக திரிசூலம் போல் மூன்று கொம்புகளை பாறையில் செதுக்கினார். மாய தோற்றங்களினால் பீடிக்கப்பட்டிருந்த அவர் அந்த திரிசூலமாக வரைந்த மூன்று கொம்புகளையும்  ஒவ்வொரு தனித்தனி  திரிசூலமாக வடிவமைத்தார்.  
ஒரு கொம்பு. பின்னர் அது மூன்றாக பிரிந்தது. ஒவ்வொரு கிளையும் மீண்டும் மூன்றாக பிளந்தது. நடுங்கும் கைகளால் அவர் செதுக்கிக் கொண்டே இருந்தார். 

 நந்தனின் மீது பீரப்பா நின்று ஒரு வீரனை குத்தி சாய்ப்பது  போல் அந்தப் படத்தை சிவன் வரைந்து முடித்தார். கொற்றவையின் கலைமான்களையும் மயிலையும் அவர்  அந்தப் பாறையில் செதுக்கினார்.

 இவ்வனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நந்தன், சிவனின்  செயல்களை புரிந்து கொண்டவனைப் போல் தலையை ஆட்டி ஒரு மெல்லிய உறுமல் ஓசையை  வெளிப்படுத்தினான் .

 சிவனுக்கு நந்தனின் ஓசைகள் எளிதாகப் புரியும். அதை அங்கீகரிப்பது போல ஒரு மெல்லிய புன்னகையை அவர் நந்தனை நோக்கி வீசினார். மெல்ல அவர் மனம் ஆனந்தத்தில் சுழலத் தொடங்கியது. நோயின் வேகத்தால் அவர் காணும் ஒவ்வொரு பொருளும் மாயத் தோற்றமாக மாறத் தொடங்கியது. 

“நீ வெறும் காளை மட்டுமில்லை,” என்று அவர் மெதுவாகச் சொன்னார். “நீ தேவதைகளின் ஆயுதம்... சக்தியின் சக்கரம்.”

 நந்தன்  அவரது எண்ணத்தில்  இரண்டாக... மூன்றாக... நான்காக மலர் போல் விரிந்து... வட்ட வடிவில் சக்கரமாக சுழலத் தொடங்கினான்.
சிவன் மீண்டும் செதுக்கினார்...ஒரு நந்தன்... இரண்டு நந்தன்... நான்கு நந்தன்.. பாறையின் மேல் சுழன்று விரிந்தது போல தனது மாயத் தோற்றங்களை அப்படியே பாறையில் அவர் வரையத் தொடங்கினார். அவை ஒன்றாக இணைந்து ஒரு அழகான வடிவமானது.  எண்ணத்தின் வண்ணங்கள் அனைத்தும் கைகள் வழியாக வெளிப்பட்டு அந்தப் பாறையில் ஒரு அழகிய வரைபடமானது. அவர் வரைந்த அந்தப் படம் எருதுமலர் ஒன்று பாறையில் பூத்தது போல் இருந்தது. 
 ஐந்து காளைகள் ஒன்றாக இணைந்து மலர் போல மாறியது. ஒவ்வொன்றும் வீரப்பாவின் கையில் இருந்த கூர்முனை கொண்ட கணிச்சியை போல் கால்களை கொண்டிருந்தன .  பிற்காலத்தில் சண்டிகேசுவரரின் கைகளை அலங்கரித்த மான் மற்றும் மழு ஒன்றிணைந்தது  போன்ற வடிவில் அது காட்சியளித்தது. அது ஒரு காளை வடிவ மழு. 
மீண்டும் அவர் அதைக் கண்டார்... நந்தன் மீது பீரப்பா... நெருப்பு மற்றும் புழுதி  வழியாக இருவரும் பாய்ந்து போர் புரிந்த நிகழ்ச்சியை அவரால் மறக்க இயலவில்லை. அது உண்மையில் சரித்திரம் மறந்த ஒரு புராண யுத்தம். பழங்குடியினரது பாடல்களில் மட்டுமே அந்தப் போர்  நினைவு கூறப்படுகிறது. அவர்களை எதிர்த்த எதிரிகள் காகங்களைப் போல் சிதைந்து விழுந்தார்கள். எதிரிகளின் முறிந்த கைகள், வளைந்த கால்கள், அவரது கண்கள் முன்பு நிழலாடின. சிவனின் விரல்கள் நடுங்கின. அவர் அந்த நினைவைப் பாறைகளில் வரையத் தொடங்கினார்.
சிவனைச் சுற்றி, டோலரைட் பாறைகள் முணுமுணுத்தன. சிவன் அவற்றைத் தட்டினார், அவை ஆலய மணியைப் போல்  ஒலித்தன. அந்த ஒலி  யுகங்கள் கடந்தும்  எதிரொலிக்கும் உடுக்கை ஒலி  போல இருந்தது.

 அந்த மலையில் கற்களால் ஆயுதங்களை செய்வதற்கு  ஏற்படுத்தப்பட்ட சிறு குழிகள் இருந்தன. கற்களின் மேல் இருந்த அந்த சிறு குழிகள், அவருக்குப் புனிதமாகத் தோன்றின. கல் கோடரி  அவருக்கு லிங்கம் போல தோன்றினது, அது தீட்டப்படும் குழி அவருக்கு ஆவுடையாகத் தோன்றியது.  அது இரு சக்திகளின் இணைப்பாக அவருக்கு தோன்றியது. ஆவுடையின் மேல் லிங்கத்தின் இணைப்பாக அவருக்கு அது தோன்றியது. 
அவர் வெண்பாஷாண தூண்டுதலால் எழுந்த பாலுணர்ச்சி வேகத்தில் இன்னும் பல சித்திரங்களை  பாறைகளில் வடித்தார். தனது வலி மிகு உயிர்நாடி எழுச்சி அறிகுறிகளையும் ஆங்காங்கே கோட்டோவியமாய்  பாறைகளில் செதுக்க ஆரம்பித்தார். 
 அரை மயக்க நிலையில் கண்கள் சொருக உடுக்கையை அடித்தபடி அவர் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டே இருந்தார்.

 ஒவ்வொரு இரவிலும் இது தொடர்ந்தது. வீரப்பாவின் மக்களுக்கு இது அச்சத்தையும் பயத்தையும் கொடுத்தது. மலையின் உச்சியில் ஒரு காளையும் மனிதனும் இருப்பதை மட்டும் அவர்களால் தூரத்தில் இருந்து பார்க்க முடிந்தது. யாராலும் அந்த உச்சியை அடைய முடியாது என்பதால் அங்கு இருக்கும் அந்த உருவம், மனித சக்திகளுக்கு அப்பாற்பட்டது என அவர்கள் எண்ணினர்.  அதிலும் பாறை அதிர்வினால்  ரீங்கரித்து ஒலிக்கும்  ஓசையும் நடனமும் அவர்களுக்கு பெரும் பீதியை அளித்தது.
 
 இதை அவர்கள் பீரப்பாவின் பார்வைக்கு எடுத்துச் சென்றனர். மங்கலான நிலவு ஒளியின் கீழ், ஒரு கட்டுமஸ்தான உருவம் சூரத்தனமாக ஆடுகிறது. யாரும் எளிதில் ஏற முடியாத பாறை உச்சியில் அவ்வுருவம் ஆடிக்  கொண்டிருக்கிறது. 
 அது  மனிதர்களுக்கு எட்டாத ஒரு சக்தி என்று அவர்கள் பீரப்பாவிடம் கூறினர்.

"அது ஒன்றும் எளிதில் அடைய முடியாத உச்சி அல்ல. அங்கே இருப்பது ஏதோ ஒரு மனித உருவம் தான். நான்  இன்றைக்கு அங்கே செல்கிறேன். யாரும் அஞ்ச வேண்டாம்"என்று பீரப்பா தனது மக்களுக்கு உறுதி அளித்தான்.
 
இரவில், பீரப்பா அந்த மலையின் மீது  ஏறினான்.

விசித்திரமான இசை அவனை இழுத்தது. இருளில் மறந்துபோன கடவுளின் இதயத் துடிப்பு போல் உடுக்கை ஒலியும்,  பாறைகளின் ரீங்கார ஓசையும் அந்தப் பிரதேசம் முழுவதும் எதிரொலித்தது. அவன் எச்சரிக்கையுடன் நகர்ந்தான், பெரும் பிரயத்தனத்துடன் அவன் அந்த மலையின் உச்சியை அடைந்தான்.

 அது ஒரு முழு நிலவு நாள்.  ஆயினும் நிலவொளியை மேகம் மறைத்திருந்தது. 

 மேகத்தின் நிழல்களில், அவன் அந்த  உருவத்தைக் கண்டான். அந்த உருவம் ஒரு மனிதன் தான். ஆனால்  கற்களால் செதுக்கப்பட்டது போன்ற உடலை அவன் கொண்டிருந்தான். இருளில் அவனது முகத்தை பீரப்பாவால் தெளிவாகக் காண முடியவில்லை.

 ஆனால் அந்த உருவத்தின் நடனம்  பனங்கள்ளின் போதையில்   இருப்பவனது  தள்ளாட்டத்தைக் கொண்டிருந்தது. ஆயினும் அவனது அசைவுகள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. அந்த வேகத்தில் சாதாரண ஒரு மனிதன்; இந்தப் பாறையின் மீது ஆடி இருந்தால், நிச்சயம் அவன் நிலை தவறி கீழே விழுந்திருப்பான். ஆனால் இந்த உருவத்தின் நடனமோ மிகவும் நேர்த்தியாகவும், அதேசமயம் பித்துப் பிடித்தது போல  அசுரத்தனமாகவும் இருந்தது  

அவன் அந்த உருவத்தைக் கூப்பிட்டான்.

பதில் இல்லை!

 காட்டுத்தனமாக,  மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வேகத்தில், நளினத்தோடு கூடிய ஒரு சிவ தாண்டவம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது 

 அவன் திரும்பவும் அழைத்தான்.அந்த அழைப்பை சிவன் காது கொடுத்து கேட்டது போல் தெரியவில்லை. நடனத்தைத் தடுக்கும் நோக்கத்தோடு அருகில் சென்று, அவன் சிவனின் தோளில் கையை வைத்தான்.

 மாய உருவங்களுக்கு மத்தியில் ஆடிக் கொண்டிருந்த சிவனுக்கு பீரப்பாவின் உருவம் நிழலா, நிஜமா, அல்லது மாயத் தோற்றமா என்று பிரித்தறியத் தெரியவில்லை. அதிவேகமாக அவர் சுழன்று சுழன்று நடனம் ஆடிக் கொண்டிருந்தார். சுழற்சி வேகத்தில் அவரது கரங்கள் அருகில் இருந்த பீரப்பாவின் மீது பட்டது. 

 அந்த வேகத்தில் பீரப்பா தூக்கி வீசப்பட்டான். வேறொரு மனிதனாக இருந்திருந்தால், அவன் அந்தப் பாறையின் சரிவில் விழுந்து சிதறி இருப்பான். வனத்தின் ஆதி மகனான வீரப்பாவோ உடல்வலு மிக்கவன். அவன் சட்டென்று சுதாரித்துக் கொண்டு தனது நிலை குலையாமல் பார்த்துக் கொண்டான். 

 கோபம் கொண்ட பீரப்பா சிவனோடு மல்யுத்தம் புரியத் தொடங்கினான்.

 பீரப்பாவால் அந்த வீரனை அசைக்க முடியவில்லை.

 இதுவரையிலும் தன்னை மிஞ்சிய ஒரு வீரனை அவன் சந்தித்ததில்லை. அவனை இதுவரை யாரும் வீழ்த்தியதும் இல்லை. மல்லப்ப கொண்டாவில் மிகவும் மதிக்கப்பட்ட மல்லன் அவன்.

 இப்பொழுது அவனுடன் சமர் செய்து கொண்டிருந்த வீரன், மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட வீரத்தைக் கொண்டிருந்தான். இருப்பினும் பீரப்பா தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.

 இருவரும் மல்யுத்தம் புரிந்தனர். சிவன் புலன் மயக்கத்தால்  மதி மயங்கி  வீரப்பாவுடன் மோதிக்கொண்டிருந்தார்.
 பீரப்பா, கோபமும் குழப்பமும் நிறைந்தவனாக, திருப்பி அடித்தான். நந்தன் சுற்றி நின்று, யாரைக் காப்பாற்றுவது என்று தெரியாமல் இருந்தான்.

அவர்கள் ஒரு செங்குத்தான பாறையின் விளிம்பில் மல்யுத்தம் புரிந்து கொண்டிருந்தனர்.

 பீரப்பா பிடி தளர்ந்தது அவன் பாறையில் விளிம்புக்கு தள்ளப்பட்டான். கீழே விழாமல் இருக்க அவன் ஒரு பாறையை இறுக்கப் பிடித்துக் கொண்டான். பாறையை பிடித்திருந்த அவன் பிடி கொஞ்சம் கொஞ்சமாக தளர ஆரம்பித்தது. அப்பொழுது மேகங்கள் விலகி நிலவின் ஒளி அந்தப் பிரதேசம் முழுவதும் வெளிச்சத்தை பரப்பியது.  நிலவின் பிரகாசமான ஒளியில் சிவனின் அழகிய முகம் தெரிந்தது 

பீரப்பா அந்த முகத்தைக் கண்டான். அது அவனுக்கு பரிச்சயமான முகம் . தன்னையே அச்சில் பார்த்தார் போல் இருந்த அந்த முகம் அவனுக்கு அவனது பெரியதந்தையை நினைவூட்டியது. 

மூச்சு விடாமல், பீரப்பா வாய்விட்டு கூறினான் , “மல்லண்ணா!!!”

அந்த வார்த்தை நெருப்பிலிருந்து  எழுந்தது, அது வெறும் பெயர் இல்லை. அது ஒரு நினைவு.  
அவர்களின் மொழியில், மல்லன்  என்றால் தைரியம் நிறைந்த ஒரு மல்யுத்த வீரன், ஒருபோதும் தலைவணங்காதவன். ஒரு காலத்தில் அவர்களில் மல்யுத்தத்தில் வலிமையானவருக்கு வழங்கப்பட்ட பட்டம் அது.  அந்தப் பெயர் சிவனின் நினைவு அடுக்குகளில் புதைந்து தொலைந்து போயிருந்த  பழைய நினைவுகளைக் கிளறி விட்டது. அது சிவனின் தந்தைக்கு கொடுக்கப்பட்ட பட்டம்.

 அந்தப் பெயரைக் கேட்டதும் சிவனைச்  சுற்றி இருந்த  மாய உருவங்கள் மறைந்து நிஜ உலகத்திற்கு திரும்பினார். புலப்படாத புலன்களின் வழியாக மாய உருவங்களை தரிசித்தபடி இருந்த சிவன் தற்பொழுது நிஜத்திற்கு திரும்பினார். அவர் நிகழ்த்திய விபரீத மல்யுத்தம் முடிவுக்கு வந்தது. அவரது கண்கள் தெளிந்தன. அவரின் முன் இருந்த அந்த இளைய வீரனை அவர் கண்டார்.
மலையின் விளிம்பில் விழ இருந்த பீரப்பாவை அவர் கை கொடுத்து தூக்கி விட்டார். நந்தன் வீரப்பாவின் அருகில் வந்து நின்றான். 

 நந்தன் பீரப்பாவின் கைகளை நக்கிக் கொடுக்க ஆரம்பித்தான். சிவன் குழப்பம் மேலிட அவனை உற்றுப் பார்த்தார். இது முன்பு போர்க்களத்தில் கண்ட நிகழ்வு அல்ல. இந்த வீரன் நிஜத்தில் இருப்பவன். இவன் மாயத் தோற்றம் அல்ல .

இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் அன்பு பொங்க பார்த்துக் கொண்டனர் . 

 பீரப்பாவை காண்கையில்  சிவனுக்கு தன்னையே தெளிந்த ஓடையில்  பார்த்தார் போல் இருந்தது. அந்த வீரனைக் கண்டதும் சிவனுக்கு மனதில் இனம் புரியாத சகோதர பாசம் பொங்கியது. அதே கொப்பளிக்கும் அன்பை வெளிப்படுத்தியவாறு வீரப்பாவும் நின்றிருந்தான் . அவர்களுக்குள் வார்த்தைகள் ஏதும் பெரிதாக பரிமாறப்படவில்லை. அவர்கள் பேச்சு குறைவாக இருந்தது. வார்த்தைகள் அவர்களுக்கு தேவையாய் இருக்கவில்லை .

 பீரப்பா, தாங்கள் சந்திக்கும் இன்னல்களைப் பற்றி சிவனிடம் விவரிக்கத் தொடங்கினான். 
“முதலில், நாங்கள் ஆயர்களாக இருந்தோம். ஆனால் இந்த நிலம் எங்களைக் கைவிட ஆரம்பித்தது. மழை எங்களை மறந்தது. நிலம் வறண்டது . பிழைப்புக்காக இந்த நிலத்தின் இரு குடிகளும் மோதிக்கொண்டோம். இப்பொழுது குடியானவர்களின் வாரிசு இறந்துவிட்டான். அவர்கள் பழி தீர்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.”

 "அவர்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ளவர்கள், மேலும் அவர்களிடம் மேம்பட்ட ஆயுதங்கள் இருக்கின்றன. எங்களிடம் வெறும் கல்லாயுதங்களே  உள்ளன. அவர்கள் செம்பு முனையை கொண்ட ஈட்டிகளை கொண்டிருக்கின்றனர். எங்களின் கல்லாயுதங்களை விட அவை கூர்மையானவை.நடந்த போரில் எங்கள் பக்கம் இழப்பு அதிகம். எங்களுக்கு ஆயுதங்கள் தேவை. வெற்றி பெறுவதற்கல்ல, எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு.”

 அவன் சிவனின் திரிசூலத்தின் கூர்மையை பார்த்தவாறு கூறினான். "அண்ணா எங்களுக்கு இதைப் போன்ற ஆயுதங்கள் தேவை."  

 சிவன் பீரப்பாவிற்கு அமைதியை போதித்தார். ஆயினும் வீரப்பாவோ " இது தவிர்க்க முடியாத ஒரு போர்.இது நடந்தே தீரும். எங்களுக்கு வேறு வழி இல்லை. நீங்கள் எங்களுக்கு நிச்சயம் உதவ வேண்டும் அண்ணா, இது எனது வேண்டுகோள்" என்றான்.

 மருத நிலத்தில் அவரது ஞானம் உயிர்களைக் காக்கப் பயன்பட்டது. இப்பொழுது இந்தப் பாலை நிலத்தில், அந்த ஞானம் வேறு ஓரு விலையைக் கோருகிறது.

 வேந்தன் சிவனின் ஞானத்தின் உதவியால்  இரும்பை உருக்கி வேளாண் கருவிகளைச் செய்தார். ஆனால் இங்கு இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சிவனின் முன்னே இருந்தது.

இரும்பு இந்த நிலத்தில் அதிகம் இருப்பதை சிவன் உணர்ந்தார். ஆனால் இந்த இரும்பை வெளிக்கொணர அதிக வெப்பம் தேவை. அதற்கான எரிபொருள் இங்கு இல்லை. அந்தப் பாலை நிலத்தில்   மரங்கள் அதிகம் இல்லை.

 சிவன் அந்த இடத்தை நோக்கினார். இரண்டு வருடங்களாக வெயிலையே காணாத பாலை நிலமாக அது இருந்தது . அந்த நிலம் அழல் மிகுந்த அவரது உடலைப் போலவே காட்சி அளித்தது.

"வற்றாத தாமிரபரணியின் கொடையால் செழிப்புற்றிருந்த   மருத நிலம் இல்லை இது.
 
இது அளவுக்கதிகமான வெப்பத்தால்  பிளவுபட்ட பாலை.  இங்கிருக்கும் நிலத்திற்கும் சரி... இங்கு வசிக்கும் உயிர்களின் உடலுக்கும் சரி... வெப்பம்  வறட்சியை உண்டு பண்ணுகிறது.

  வெவ்வேறு வாழ்வு முறைகள் கொண்ட மக்கள்  இங்கு இணைந்து வாழ்வது சாத்தியமா? "என சிவன் சிந்தித்தவாறு இருந்தார்.

 மக்களின் இணைப்பு என்பது இங்கு சாத்தியமில்லை. இணக்கமாக வாழும் எண்ணம் இப்பொழுது இங்கு யாரிடமும் இல்லை.  இப்பொழுது நடந்து கொண்டிருப்பது பழிவாங்கும் படலம். இங்கு இருப்பவர்களின் தேவையெல்லாம் ஒரு மேம்பட்ட இரும்பு ஆயுதம்.

இரும்பினை  உருக்குவதற்கு எரிபொருள் அவசியம் என்பதை சிவன் பீரப்பாவிடம்  விளக்கினார்.

 பீரப்பா அவருக்கு முல்லை நிலம் ஒன்று அருகில் இருப்பதாக கூறினான். அங்கே இவ்வாயுதத்தை செய்வதற்கு ஏற்ற மரங்கள் கிட்டும் என்றான்.

  அவர் பீரப்பா கூறிய அந்த முல்லை நிலத்திற்கு பயணப்பட்டார். வெப்ப மிகுதியால் சமநிலை இழந்து கொண்டிருந்த சிவனுக்கு மரங்கள் சூழ்ந்த அந்த முல்லை நிலம்  அமைதியை வழங்கிது. அந்த நிலத்தில் அவரது உடலின்  அனல்  தணிந்தது.

 இந்தப் பாலை நிலத்திலும் உயிர்ப்பாக இருக்கும்  மரங்களை அழித்தா  ஆயுதம் செய்ய வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. 

கேள்விகளால் சூழப்பட்ட அவர்  தியான நிலையில் அமர்ந்தார். அவர் எழுப்பிய ஓங்கார ஓசை வனம் முழுவதும் எதிரொலித்தது.அங்கே வெப்பத்தைத் தாங்கி வாழும் உயிரினங்கள்  பல இருந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை நீளக் கொம்பு கொண்ட ஆவினங்கள். ஓங்கார ஓசையினால் ஈர்க்கப்பட்டு  அவை சிவனைச் சூழ்ந்தன. 

அவை அங்கிருந்த மரங்களின் இலைகளை உணவாகக் கொண்டன. சிவன் வெட்ட வேண்டாம் என நினைத்த மரங்களை அவை உண்டு வாழ்ந்தன.
 மாடுகளினால் மட்டும் அந்த மரங்களின் இலைகள் சேதப்படுத்தப் படவில்லை.  அங்கே   வெயில் மிகுதியாலும் மரங்கள் தங்கள் இலைகளை உதிர்த்தன. அந்த இலைகள் பூமிக்கு உரமாகும் முன்னரே வெப்ப மிகுதியால் வாடிப்போயின. 

 இவற்றையெல்லாம் கண்டு கொண்டிருந்த  அவருக்குள் பல கேள்விகள் எழுந்தன.

  பசுக்கள் இங்கிருக்கும் மரங்களுக்கு  பகைவர்களா? 

மரங்கள் செழிக்க  உரம் வேண்டுமே... அதை இங்கே இருக்கும் மரங்கள் எவ்வாறு பெருகின்றன?

 இந்தப் பாலை நிலத்தில் பசுக்களின் தாக்குதல்களை மீறியும் எவ்வாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த மரங்கள் இங்கே பிழைத்திருக்கின்றன?

 தியான நிலையில் இருந்து அவர் அந்த சூழலை அவதானித்தார் . மெல்ல மெல்ல அவருக்குள் இருந்த கேள்விகளுக்கு விடை கிடைக்க ஆரம்பித்தது. 

மரத்தின் இலைகளைத் தின்ற ஆவினங்கள் சாணம் வழியாக அந்த வனத்திற்கு உரம் தந்து செடிகளுக்கு உயிரூட்டின. 

தன் உடலை வருத்தும் சூரியனது அழல் தான் செடிகளில் உயிராக இருக்கிறது. செடிகளில்  உயிராற்றலாய் இருக்கும்   அழல்தான் மாடுகளை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது. அந்த அழலின் துகள்கள் தான் சாணத்தில் ஆற்றலாக இருக்கிறது. சாணமே இங்கு உரம். சாணமே இங்கு எரிபொருள். 

 பசுபதியாகிய சிவனைச் சூழ்ந்த ஆவினங்கள் அவர் செல்லும் இடமெல்லாம் அவரைப்பின் தொடர்ந்தன. அழல் மிகுந்த தக்காண பீடபூமியில் வசிப்பதற்கேற்ற உடல் அமைப்பு பெற்றவை  இந்த மாட்டினம்.

வறட்சியைத் தாங்கும் அந்த ஹள்ளிகார் இன மாடுகள், கடினமான பாலைநிலத்தின் பீடபூமியை பிளக்கும் வலிமையுடையவை, சூரியனைத் தாங்கும் பொறுமையுடையவை, நிலம் இழந்த  வளத்தை மீட்டெடுக்கும் திறன் மிகுந்தவை. அதோடு இயைந்து வாழ  ஆயர் குழுவினர் முடிவெடுத்தனர்.

அந்த நாளிலிருந்து, அவர்கள் வெறும் ஆயர்கள் மட்டுமல்ல.  
அவர்கள் புனித மந்தையின் காவலர்களாக மாறினர். சிவனை தங்கள் தேவனாகக் கருதினர். இன்னும் அங்கிருக்கும் பழங்குடியினர் வருடம் தோறும் சிவன் நடனம் புரிந்த அந்த மலையில் வந்து Pitlappa வை வணங்குகின்றனர். பித்தம் கொண்ட உடலை உடையதால் அந்தப் பெயர் அவருக்கு வைக்கப்பட்டதா அல்லது பித்தளையைக் கொண்ட குருதியை உடையதால் அந்தப் பெயர் வைக்கப்பட்டதா என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது.

 வீட்டு விலங்குகளை பழக்கிய ஒவ்வொரு சமூகமும் அவற்றின் கழிவுகளில் இருந்து பரவும் நோய்களுக்கு தப்பியதில்லை. ஆனால் சிவன் சாணத்தைக் கழிவாகக் கருதாமல் ஆற்றலாகக் கருதினார். அதை ஒரு எரிபொருளாக உபயோகிக்கத் தொடங்கினார். மேலும் நெருப்பில் எந்த கிருமிகளும் உயிர் வாழாது.  நெருப்பின் வாயில் அகப்பட்டுக் கொண்ட எதுவும்  ஒருபோதும் வியாதியை பரப்பாது.

சிவனுக்கு இப்போது ஆயுதங்கள் செய்ய சாணம் எனும் சிறந்த எரிபொருள் கிட்டியது.

அவர் சாண எருக் குவியல்களை அடுக்கடுக்காக சதுர வடிவில் சேகரித்து, மெதுவாகவும் ஆழமாகவும் எரிய வைத்தார்.  அந்த வெப்பத்தை கடத்தவும், மென்மேலும் அதிகரிக்கவும் துருத்தி போன்ற அமைப்பை அவர் உருவாக்கினார். இரவு முழுவதும் அது இயக்கப்பட்டு நெருப்பின் வெப்பம் அதிகரிக்கப்பட்டது. அவர் உருவாக்கிய அத்துருத்தி மிகவும் வித்தியாசமானது, அது காலத்தால் மறக்கப்பட்டாலும் அக்கருவி அக்காலத்தைய அறிவியலின் உச்சம். அது இரவு முழுவதும் சீராகவும் நிதானமாகவும் வெப்பத்தை அதிகரிக்க வைத்தது. முடிவில் அவர் உருவாக்கிய அமைப்பில் இரும்பு  உருக்கப்பட்டு சேகரிக்கப்பட்டது.
அவர் பிரித்தெடுத்த இரும்பு முழுமையாக பயன்படுத்தப்பட்டது.ஒவ்வொரு துண்டும் அரிவாள்களாகவும் ஈட்டிகளாகவும் கத்திகளாகவும்  மாறியது.  

ஆயுதங்களை உருவாக்கத் தேவையான இரும்பை பிரித்தெடுத்த பின்பு மிஞ்சியது வெறும் சாம்பல் குவியல் கொண்டசாம்பல் மேடுகள்.
படம்: சாம்பல் மேடுகள்.
Source: journey to perhaps the largest ash-mound of Hallur, Karnataka, evidence for iron working. Bharatkalyan97

 அந்தச் சாம்பலை அள்ளி சிவன் பூசிக் கொண்டார். அதை பூசியவுடன் அவரது உடலின் அழல் மிகவும் மட்டுப்பட்டது.

 இந்த இரும்பு உருக்கும் முறையை யாராலும் பிற்காலத்தில் மீளுருவாக்கம் செய்ய இயலவில்லை. சிலர் இதை இழந்த அறிவியலால் உருவாக்கப்பட்டது என்றனர்.  மற்றவர்கள் இது தெய்வீகச் செயல் என்றனர்.  ஆனால் இந்த புதிர் யாராலும் விடுவிக்கப்படாமலேயே  இருக்கிறது.
 
இன்றும், புதிஹால் மற்றும் சங்கனகல்லுவில், அந்த சாம்பல் குவியல்கள் இருக்கின்றன.
இன்றைய அறிவியலாளர்கள்  கூட, அதன் பயன்பாடு எத்தகையது என்பதை பற்றிய அனுமானங்களை மட்டுமே கூற முடிந்திருக்கிறது.

 இப்பொழுது வெறும் சாம்பல் மேடாக காட்சியளிக்கும் இந்த இடம் ஒரு காலத்தில் உயிர்ப்போடு இருந்தது. அது ஒரு வெப்பம் சூழ்ந்த இடம். 

 வெப்பத்தினால் அவதியுறும் சிவன் அந்த சாம்பல் மேட்டில் ஒரு முக்கியமான இயற்கை ரகசியத்தை அறிந்து கொண்டார்.

நெருப்புக்கு மேல் படர்ந்திருந்த  சாம்பல்  ஒரு காப்புப் பொருளாக இருந்தது.  வெப்பத்தினால் அந்தச் சாம்பலைக்   கடந்து செல்ல முடியவில்லை.  அந்த சாம்பலின் வெப்பத்தைத் தடுக்கும் திறனை பரிசோதிக்க, யாரும் துணியாத காரியத்தை சிவன் செய்தார்.
 நீறு எனும் சாம்பலின் மகத்துவத்தை பரிசோதிக்க வெறும் கால்களோடு நெருப்பின் மீது அவர் நடந்தார். அந்த வெப்பம் சற்றும் அவரது உடலுக்குக் கடத்தப்படவில்லை. நெருப்பின் மேல் பூத்திருந்த நீறு வெப்பத்தைத் தடுத்தது. மேலும் அவர் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொண்டார். அவ்வாறு பூசிக் கொண்ட பின்னர் சூரியனின் அழல் அவரை சிறிதும்   தீண்டவில்லை. 

இது வெறும் சாம்பல் இல்லை. இது மருந்து.... நினைவு...அறிவு.... புத்தி.

இன்றும் இங்கே உள்ள கிராமங்களின் பலவற்றின் பெயர்கள்  பூதி என்று முடிகின்றன. உதாரணத்திற்கு Budihal, Buditippa, அதிலும் பூதிகுண்ட்டா பகுதியில் தான் 46 அடி உயர சாம்பல் மேடு இருந்துள்ளது. 

பூதி எனும் வேர்சொல் சாம்பலைக்குறிப்பது. இதிலிருந்தே விபூதி எனும் பெயர் தோன்றியது.  விபூதி என்பது சிவனை பொருத்த மட்டிலும் ஒரு புனிதப் பூச்சு. அமைதியின் அடையாளம். ஒரு பாதுகாப்புக்கவசம்.

 சிவனைப் பின்தொடர்ந்து பீரப்பாவும் நெருப்பின் மேல் நடந்து பார்த்தான். அவனுக்கும் ஆச்சரியம் தாங்க இயலவில்லை. அவனும் அந்த விபூதியை எடுத்து கையிலும் நெற்றியிலும் பூசிக் கொண்டான். அதைத்தொடர்ந்து நந்தனும் அதன் மேல் ஓடினான்.

இன்றுவரை, அந்த பழங்குடி வீரனின் வழித்தோன்றல்கள்  நெருப்பின் மீது வெறுங்காலுடன் நடக்கின்றனர்,  நீறு பூத்த நெருப்பு அவர்களின் பாதங்களைக் காக்கிறது என்பதை உணர்த்திய அந்தச் செயல், மதப்பூச்சு பூசப்பட்டு மதச் சடங்காக தற்போதும் தென்னிந்தியாவில் பின்பற்றப்படுகிறது.

 இன்றும்கூட அவர்களின் கால்நடைகளும், காளைகளும், பசுக்களும்  நெருப்பில் நடக்க வைக்கப்படுகின்றன.

 இவ்வாறு நீறு எனப்படும் அந்தச் சாம்பல்   அவர்களின் மத அடையாளமாகியது. இன்றும் மௌனமாக, மர்மமாக , தக்காண பீடபூமி முழுவதும், அந்த சாம்பல் குவியல்கள் காணக் கிடைக்கின்றன. 
ஒரு காலத்தில் நெருப்பு இல்லாமல் எரிந்த நெருப்பின் சான்று அது...மறந்துபோன ஒரு தொழில்நுட்பம் அது...  அந்தத் தொழில்நுட்பம் பற்றி இப்போது இருக்கும் யாருக்கும் தெரியாது. அது தக்காண பீடபூமியால்  மட்டுமே நினைவுகூறப்படக் கூடிய ஒரு தெய்வீக நாடகம். 
-------

 “…However it [the ashmound tradition of the Deccan] may ultimately be found to relate to the cult of cattle throughout India, and however humble the theme may appear beside the grander flights of Indian religious thought, at least we may assert that what we have been able to reconstruct is something unique and hitherto undreamed of; and as such it adds a new and peculiarly Indian chapter to the history of human institutions” (Allchin - British archeologist).

-------
Pictures courtesy : Sensual, material, and technological understanding: exploring prehistoric soundscapes in south India
Nicole bolvin. University of Cambridge.

Goddess Worship and Dance in Indian Prehistory: Interrogating Neolithic and Iron Age Evidence for Roots of Hindu Ritual Practice.Srinivasan, Sharada.

Rock art and rock music: Petroglyphs of
the south Indian Neolithic
Nicole Boivin

Prehistoric Petroglyphs of Kappagallu - part II,Journeys across Karnataka blog.

Landscape, Monumental Architecture, and Ritual: A Reconsideration of the South Indian Ashmounds by Nicole Boivin

No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

மல்லண்ணா (ஆதியோகி: அத்தியாயம் 16)

அது ஒரு  குன்று. அதன் உச்சியில் பெரும் பாறைகள் செங்குத்தாக இருந்தன. அதன் உச்சியை அடைவது  அவ்வளவு எளிதல்ல.  அந்த குன்றின் உச்சியி...