சுமார் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன், நமது முன்னோர்களான ஹோமோ சேபியன்ஸ் முதன்முதலில் பூமியில் நடந்தனர். அவர்களது வாழ்வியல் மற்றும் பண்பாடு முதலியவை வரலாற்றில் எங்கும் பெரிதாக பதிவு செய்யப்படவில்லை.
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் நமது முன்னோர்கள் தங்களின் வாழ்வியலை கற்களில் செதுக்க ஆரம்பித்தனர், பானையில் கீற, ஆரம்பித்தனர், குகைகளில் வரைய ஆரம்பித்தனர். அதற்கு முந்தைய காலத்தில் இருந்த நமது முன்னோர்களின் காதல், வீரம், பாசம் போன்றவை எதுவும் பதிவு செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட நமது முன்னோர்களின் 97 சதவீத வாழ்வியல் வரலாறானது காலத்தின் மணலில் புதைந்து கிடக்கின்றது . அவர்களின் கதைகள், பாடல்கள், துயரங்கள், ரகசியங்கள் அனைத்தும் காலத்தால் மறைந்து, மறந்துபோயின.அந்தக் கதைகள் இப்பொழுது எந்த ஒரு மனிதனாலும் நினைவு கூறப்படவில்லை.
ஆனால், எல்லா கதைகளும் மறக்கப்படவில்லை...
வங்காள விரிகுடாவின் பண்டைய கரையோரத்தில், இன்றைய தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில், இந்தக் கதையின் ஆரம்பகட்ட அத்தியாயத்தினை உயிர்பிக்க ஹோலோசீன் காலத்து சூரியன், வெளிச்சத்தை பரப்பியபடி உதயமானது. இதே காலகட்டத்தில் பூமியின் வடக்குப் பகுதி பெரு வெள்ளத்தால் சூழப்பட்டது . அந்த நிகழ்வினை பற்றி; வடக்கே இருந்த மேற்கத்திய மக்கள், மனு என்பவர் தங்கள் வாழ்வினை எப்படி வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினார் என்பதைப் பற்றியும், அழியவிருந்த உயிர்களைக் காக்க நோவா எடுத்த முன்னெடுப்புகளை பற்றியும் கதைகளாகவும் புராணங்களாகவும் பேசி வந்தனர். ஆனால் இந்தியாவின் தெற்கே கதை வேறுவிதமாக இருந்தது.
அது பெரிதாக பேசப்படாத கதை... காலத்தால் மறக்கப்பட்ட கதை...
சுமார் 11,700 ஆண்டுகளுக்கு முன், பிளைஸ்டோசீன் காலத்தின் கடைசி பனியுகம் ஹோலோசீன் காலத்திற்கு மாறியபோது, உலகைப் போர்த்தி இருந்த பனி உருகி, வெள்ளம் பெருக்கெடுத்தது. பல மக்களும் உயிரினங்களும் வெள்ளத்தால் அழிந்து போயின. இந்த உலகளாவிய நிகழ்வு ஆரம்பகால மனிதர்களை இடம்பெயரச் செய்தது. உலகெங்கிலும் வெள்ளத்திற்கு தப்பிய மக்களால் இந்த நிகழ்வு செவி வழிக் கதைகளாக சொல்லப்பட்டுள்ளது . பைபிளில் கூறப்பட்டுள்ள நோவாவின் பேழை மற்றும் இந்துக்களுடைய மத்ஸ்ய புராணத்தின் மனுவின் படகு ஆகியவை இந்த பேரழிவு நிகழ்வுகளின் பொதுவான நினைவுகளைப் பிரதிபலிக்கும் கதைகளே ஆகும்.
தமிழ்நாட்டில், இதே காலகட்டத்தில் இந்த மண்ணில் வெள்ளம் ஏதும் நிகழவில்லை. மாறாக கடல் உள்வாங்கியது. நீருக்குள்ளே புதைந்து கிடந்த வளம் மிக்க நிலமானது வெளிப்பட்டது.
கொற்கை மற்றும் தேரிக்காடு போன்ற இடங்கள், ஒரு காலத்தில் நீரில் மூழ்கியிருந்தவை, அவை தற்போது வளமான சமவெளிகளாக உருவாகின, அவற்றின் மண் இரும்பு ஆக்சைடுகளால் செந்நிறமாக காணப்பட்டது.
தேரிக்காட்டின் நிலப்பரப்பு ஒரு புவியியல் அதிசயமாக இருந்தது. ஆரம்ப ஹோலோசீன் காலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து ஆரல்வாய்மொழி மற்றும் மகேந்திரகிரி பள்ளத்தாக்குகள் வழியாக, தென்மேற்கு பருவமழையால் பெருக்கெடுத்த ஆற்று வெள்ளமும் சுழன்றடிக்கும் காற்றும், மலைகளின் கனிமங்களை கரைத்துக் கொண்டு வந்து இந்த நிலப்பரப்பில் சேர்த்தன. இவை ப்ரீகேம்ப்ரியன் உருமாற்ற பாறைகளிலிருந்து பெறப்பட்டவை. இல்மனைட், ரூட்டைல், கார்னெட் ஜிர்கான், சிலிமனைட், மோனசைட் மற்றும் மாக்னடைட் போன்ற கனமான கனிமங்களால் நிறைந்திருந்தன அந்த மணல் துகள்கள். கரையோர நீரோட்டங்கள் இந்த கனமான துகள்களை வரிசைப்படுத்தி, கடற்கரை நிலங்களையும் தேரிக்காடு மணல் மேடுகளையும் செறிவாக்கின. தேரிக்காட்டின் செந்நிறம் ஹெமாடைட் துகள்களால் உருவானது. இப்போது பாலை நிலத்தை போல வறண்ட மணல்களால் காட்சியளிக்கும் தேரிக்காடானது முன்பு அப்படி இருந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
பண்டைய தேரிக்காடு செந்நிற மலைகள், முள் காடுகள் மற்றும் வளமான மண் மேடுகளாக காட்சியளித்தது. மேலும் அது பல்லுயிர்ப் பெருக்கத்துடன் கூடிய ஒரு பசுமையான இடமாக இருந்தது.
செவ்வாய் கிரகத்தின் செந்நிறத்திற்கான காரணம் அங்கே இருக்கும் ,இரும்பு ஆக்சைடு. இந்த சிவப்பு வண்ணத்தின் காரணமாக இரவு வானில் அது சிவப்பாக காட்சியளித்தது. சிகப்பு நிறமானது ; நெருப்பு, இரத்தம் போன்றவற்றை குறிப்பதாக அக்காலத்தைய மக்கள் கருதினர். இதனால் செவ்வாய் கிரகமானது; உலகெங்கிலும் உள்ள நாகரிகங்களில் போர், நெருப்பு மற்றும் அழிவு தொடர்புடைய கடவுளாக உருவகப்படுத்தப்பட்டது. இதே போல சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் தேரிக்காடும், நெருப்பு மற்றும் ஆயுதம் தொடர்புடைய ஒரு கடவுளை வளர்த்தெடுத்தது. ஆயினும், அந்தக் கடவுள் வெறும் நெருப்பு மற்றும் ஆயுதங்களை மட்டும் உருவாக்கவில்லை. அவன் உலகம் அனைத்திற்கும் தேவையான ஒன்றை போதித்தான்.
அந்த நிகழ்விற்கான அச்சாரம் இந்த நிலப்பரப்பில் தான் இடப்பட்டது .
இந்த மாறிவரும் தேரிக்காட்டின் நிலப்பரப்பிற்கு மத்தியில், நிலவின் மங்கிய ஒளியில், அந்த மனிதன் தான் எடுத்த காரியத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் அலைந்து திரிந்தான்.
அவன் இன்னும் கோயில்களில் தெய்வமாக வழிபடத் தொடங்கப்படவில்லை. அதற்கு முன் அவனுக்கு முக்கியமான ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டி இருந்தது.
அவன் தேரிக்காட்டின் செந்நிற மண்ணில் மறைந்திருந்த இரும்பை நோக்கி ஈர்க்கப்பட்டான். ஆனால், ஆக்சைடுகளில் பிணைக்கப்பட்ட இரும்பு, வெப்பத்தாலும் புத்திக் கூர்மையாலும் விடுவிக்கப்பட வேண்டியிருந்தது.
அவனும் அவனது பிரியமான தோழனுமான ஆற்றல் பொருந்திய காளையும் ஒவ்வொரு இரவும் இந்த மணற்பரப்பில் சுற்றி வந்தனர். ஒவ்வொரு இரவும், மக்கள் உறங்கிய பிறகு, காளையின் குளம்போசை அந்த நிலத்தில் இடியென இருளைத் துளைத்தது.
அங்கே சுற்றிக் கொண்டிருந்த சிவனின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அந்த மணலுக்குள் கட்டுண்டு கிடக்கும் இரும்பினை எப்படியேனும் வெளிக்கொணர்ந்து ஒரு ஆற்றல்மிக்க ஆயுதமாக செய்வது மட்டுமே அவனது நோக்கம்.
ஹெமாடைட் (Fe₂O₃) மற்றும் மாக்னடைட் (Fe₃O₄) போன்றவை , இயற்கையாகக் கிடைக்கும் தாதுக்கள், இந்த தாதுக்களில் இரும்பானது ஆக்சிஜனுடன் இணைந்து, சிவப்பு வண்ண மணற்சிறையில் அடைக்கப்பட்டிருந்தது . அதை விடுவிப்பதற்கான முதல் முயற்சியை சிவன் எளிதாகத் தொடங்கினான். மரத்தை அடுக்கி, செந்நிற மணலை குழியில் குவித்து, அதைப் பற்றவைத்தான். ஆனால் இந்த முயற்சியில் பெறப்பட்ட வெப்பம் இரும்பை வெளிக்கொணர போதப்படவில்லை.
சிவனது ஆரம்பகட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. தீப்பிழம்புகள் பலவீனமாக இருந்தன, தாது செயலற்று இருந்தது. காற்று வெப்பத்தை சிதறடித்தது, திறந்த வெளியில் அலையாடிய நெருப்பானது ஆக்சிஜனை மீண்டும் ஆக்சிஜனேற்றம் செய்ய அனுமதித்தது.
அதனால் மணலுடன் கிடந்த இரும்பு வெளிப்பட மறுத்தது. அதை வெளிக்கொணர அவனுக்கு கட்டுப்பாடுடன் கூடிய காற்றோட்டம் தேவைப்பட்டது.
நெருப்புக்கு மூன்று கூறுகள் தேவை: எரிபொருள், ஆக்சிஜனேற்றி (காற்று), மற்றும் வெப்பம். இந்த அடிப்படை அறிவியலை அவன் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ளத் தொடங்கினான்.
ஒரு நாள் இரவு, காட்டில் கடுமையான ஓட்டத்திற்கு பிறகு, நந்தன் மூச்சு வாங்கிய படி நின்று கொண்டிருந்தான் . அவனது மார்பு உயர்ந்து தாழ்ந்தது. நுரையீரல்கள் காற்றை இழுத்து உடலுக்குள் அனுப்பியபடி இருந்தன. அவனது உடல் வெப்பமாக காணப்பட்டது.
உடலின் வெப்பத்தை சுவாசம் தூண்டுகிறது!
கட்டுப்பாடான வகையில் செயல்படும் இந்த மூச்சின் தாளத்தை பின்பற்றினால் அதிக வெப்பத்தை பெறலாம் என்று சிவனுக்கு தோன்றியது.
இந்த இயற்கையின் வடிவமைப்பைப் பின்பற்றி, சிவன் ஒரு நெருப்புத் துருத்தியை உருவாக்கினான். அவன் இறந்த ஒரு விலங்குத் தோலை மரச் சட்டத்தில் பொருத்தி, நுரையீரல் போன்ற ஒரு நெகிழ்வான துருத்தியை உருவாக்கினான். துருக்கியை இயக்கும் பொழுது நந்தனின் ஆவேசம் மிகுந்த மூச்சு வெளியேறுவதைப் போல துருத்தியானது ஆக்ஸிஜனை வெளியேற்றி அனலைக்
கூட்டியது.
ஒவ்வொரு முறை சிவன் துருத்தியை அழுத்தி விடுவிக்கும் பொழுதும் ஆக்சிஜன் நிறைந்த காற்றை அந்த துருத்தி உலையில் செலுத்தியது. இந்த அடிப்படை துருத்தி வெப்பத்தை பெருக்கி, ஆக்சிஜன் வழங்கலை அதிகரித்து, வெப்பநிலையை பெருமளவு உயர்த்தியது.
நந்தனின் உயிரியல் அமைப்பு இங்கு ஒரு துருத்தியை உருவாக்குவதற்கு சிவனுக்கு உறுதுணையாக இருந்தது. இது இயற்கையை பாவித்து சிவன் உருவாக்கிய ஒரு அமைப்பு. இயற்கையின் புதிர்களுக்கு இயற்கையிலேயே விடைகள் கிடைக்கும் என்பதை சிவன் இதன் மூலம் அறிந்து கொண்டான்.
இந்தக் கருவியுடன், சிவன் தனது அமைப்பைச் செம்மைப்படுத்தினான். களிமண்ணால் உலையைக் கட்டி, வெப்ப இழப்பை குறைத்தான். காட்டுத்தீயில் எரிந்து கிடந்த மரங்களின் கரித்துண்டுகளை சிவன் கவனமாக சேகரித்தான். அவற்றில் சாம்பல் குறைந்தும் கார்பன் அதிகமாகவும் காணப்பட்டது. கரி மற்றும் தாதுவை அடுக்கி, பற்றவைத்து, துருத்தியை இயக்கினான். காற்று நந்தனின் மூச்சு போல உள்ளே பாய்ந்து, நெருப்பு உறுமியது. வெப்பநிலை உயர்ந்த பொழுது அதிலிருந்து கசடு உருகி பிரிந்தது. கசடிலிருந்து நுண்ணிய உலோக இரும்பு தோன்றியது.
சிவன் சூடான உலோகத்தை கல் அடுப்பில் தட்டி, கசடை அகற்றி, உலோகத்தை ஒருங்கிணைத்தான். அதை ஒரு திரிசூலமாக அவன் உருவாக்கினான். அந்த ஆயுதம் நிலவின் ஒளியில் சிவனது தாமிரக் கண்களைப் போலவே மின்னியது. ஆனால், அவன் செய்த இரும்பில் குறைபாடுகள் தெளிவாக இருந்தன: அது எளிதில் வளைந்தது, விரைவில் மழுங்கியது, மேலும் அது துருபிடித்தது.
"இது போதாது," என்று சிவன் முணுமுணுத்தான்.
தேரிக்காட்டின் செங்கதிர் மணலில், பூமியின் இரும்பின் இரகசியங்களை அடைய தன் தீவிர முயற்சியில் சிவன் அயராது உழைத்தான். மண்ணால் மூடப்பட்ட அடுப்புகளில், ஹீமடைட் நிறைந்த மணலையும் கரியையும் அடுக்கி எரித்தான். தன் புதுமையான காற்றாடிகளால் காற்றை கட்டுப்படுத்தி, அக்கினியின் மூச்சை தன் விருப்பப்படி வழிநடத்தினான். பலமுறை தோல்வி அடைந்தாலும் அவன் தனது முயற்சியை கைவிடவில்லை. வெப்பம், தாது, எரிபொருள் ஆகியவற்றின் வித்தியாசமான கலவைகள் உலோகத்தின் தன்மைகளை எவ்வாறு மாற்றுகின்றன என்பதை அவன் கூர்ந்து கவனித்தான்.
ஒரு இரவில், நீண்ட நேரம் அதிக வெப்பத்தில் உருக்கப்பட்ட இரும்பில், கரியிலிருந்து வரும் கார்பன் கரைந்து கலந்து விட்டது. இதனால், மென்மையான, எளிதில் வளைந்துவிடும் இரும்பு, அதிக வலிமையுடைய, உறுதியான பொருளாக—எஃகாக மாறியது.
சிவன் அதைக் கடுமையாக சோதித்தான். தூய இரும்பு சூடாகி, விரைவாக குளிர்ந்தது. வார்ப்பு இரும்பு உடையக்கூடியது. ஆனால், எஃகு நெகிழ்ச்சி மற்றும் கடினத்தன்மையை சமநிலைப்படுத்தியது. அந்த இரும்பை நெருப்பில் தணித்து, ஆற்று நீரில் குளிர வைத்த போது , மார்ட்டென்சைட் படிகங்கள் உருவாகி, சூலத்தின் விளிம்புகள் மிளிர்ந்தன .
சிவன் தான் உருவாக்கிய அந்த மின்னும் ஆயுதத்தை ஆற்று நீரில் தணித்தான். அதை நீரில் தணிக்கும் போது ஆவேசம் கொண்ட விரியன் பாம்பு சீறுவது போல ஸ்ஸென்ற ஒலி எதிரொலித்தது.
துருவை எதிர்க்க, அவன் அதை நெய்யால் பூசினான். பின்னர், அதை உயர்த்தி, அதன் கழுத்தில் தனது பறையை கட்டி தொங்க விட்டான்.
இப்போது அவனது ஆயுதம் முழுமை பெற்றது!
அவனது மனம் முழுவதும் எதையோ சாதித்த திருப்தி பரவியது. சிவன் ஆனந்தத்தில் ஆடினான், அவனது மகிழ்ச்சி இரவு வானத்தை நிரப்பியது.
இவ்வாறு, திரிசூலம் உருவாக்கப்பட்டது. படைப்பு, பாதுகாப்பு, அழிவு ஆகியவற்றைக் குறிக்கும் மூன்று முனைகள் கொண்ட ஆயுதம் அது.
அது ஒரு அழிக்கும் போர்க்கருவியல்ல, அபயம் அளிக்கும் பாதுகாவலரின் கருவி,
இது பூமி, நெருப்பு, காற்று, மற்றும் நீர் ஆகியவற்றின் ஒத்திசைவால் பிறந்த ஒரு ஆயுதம்.
அதை உருவாக்கிய ஆனந்தத்தில், பறை இசையை இசைக்கத் தொடங்கினான் சிவன். அந்தப் பறையின் அதிர்வினால் மணல்கள் அதிர்ந்தன, சிவன் ஆனந்தத்தில் ஆடினான்.
ஆனால் சிவனின் ஆனந்தத்தை அந்த மருத நிலம் பிரதிபலித்தது போல் தெரியவில்லை.
அந்த நிலத்தில் இருந்த மக்கள் தங்களது ஆனந்தத்தை இழந்து கொண்டிருந்தனர். அந்த நிலத்தை துன்பத்தின் நிழல்கள் பீடிக்கத் தொடங்கியிருந்தது.
அந்த மருத நிலம் மரணம் என்னும் இருளால் சூழப்பட்டுக் கொண்டிருந்தது .
சிவன் அதை கவனிக்கத் தவறவில்லை
ஆதிச்சநல்லூரின் இடுகாட்டில் , பிணங்கள் பெருகின. வயதானவர்கள் மட்டுமல்ல, இளைஞர்களும் குழந்தைகளும், ஒரு கொடிய நோயால் வீழ்ந்தனர்.
மருத நில சமவெளிகளில் மக்களின் அடர்த்தி அதிகமாக இருந்தது.இது நாகரிகத்தின் ஆதிக் குறை.
அடர்த்தியும் மக்கள் பெருக்கமும் நோய் பரவலை அனுமதித்தன.
மருத நிலம் என்பது தானியங்களின் களஞ்சியம். மக்கள் சேமித்த அந்த தானியங்களை நோக்கி எலிகள் ஈர்க்கப்பட்டன. மக்கள் வெளியேற்றிய கழிவு நீரில் ஈக்கள் செழிக்கத் தொடங்கின. நீர் தேங்கிய இடங்களில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்தன.
குறிஞ்சி நிலத்தில் இறப்பானது சண்டையினாலும் வேட்டையினாலும் பாம்பின் நஞ்சினாலும் மட்டுமே நிகழ்ந்து வந்தது. ஆனால் மருத நிலத்தில் இறப்பானது தொற்று நோய்களால் நிகழ ஆரம்பித்தது. இந்த நோய் எவ்வாறு பரவுகிறது, எதன் மூலம் வருகிறது, ஏன் வருகிறது, என்பதற்கான விடை அவர்களுக்கு கிடைக்கவில்லை.
விடை கிடைப்பதற்கு முன்னர் மக்களில் பலர் இந்த உலகத்தை விட்டே விடைபெறத் தொடங்கினர்.
அந்த மருத நிலத்தில் இருந்த வீடுகளின் உறுதி மிக்க கதவுகளால் காலனின் வருகையை தடுக்க முடியவில்லை.
அவர்களைக் காக்க அங்கு யாருமே இல்லை.
தங்களைக் காக்க வேண்டி மக்கள் பல தெய்வங்களை தொழுதனர். ஆனால் அவர்களுக்கு எந்த தெய்வமும் பதிலளிக்கவில்லை.
எந்த ஒரு கடவுளும் தங்களை கண்கொண்டு பார்க்கவில்லை என்பதை அந்த மக்கள் உணரத் தொடங்கினர்.
ஆனால் நடப்பவற்றை எல்லாம் மூன்றாம் கண் ஒன்று பார்த்துக் கொண்டிருந்ததை அவர்கள் அறிய மாட்டார்கள்.
--------
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன்ஓலை வந்தபோது கையகன்று நிற்பிரே
ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே.
No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...