Friday, August 1, 2025

மழவெள்ளை விடையான் (ஆதியோகி: அத்தியாயம் 8)

அது ஒரு கோடை மாலை. தொலைவில், யானைகள் அடர்ந்த காட்டில் சாம்பல் நிற ஆறு போல மெதுவாக நகர்ந்தன. முன்னால், கூட்டத்தைத் தலைமை தாங்கிய பெண் யானை; தன் துதிக்கையை உயர்த்தி, நீர் இருக்கும் திசையை முகர ஆரம்பித்தது. 

 நீர் இருக்கும் திசையை நோக்கி தனது கூட்டத்தை அது வழி நடத்திச் சென்றது.

அவை முன்னேறும்போது, முட்புதர்களையும் செடிகளையும் கிழித்து, பரந்த திறந்தவெளிகளை அந்த யானைகள் ஏற்படுத்திச் சென்றது. அவற்றின் பாதையில், யானையின் கழிவுகள் எரு வடிவில் வெதுவெதுப்பாக தரையெங்கும் விழுந்தன. 

 அந்த யானைகள் தாகமுள்ள மண்ணில் வளத்தை விதைத்தன.

காலப்போக்கில், அந்தப் பாதை ஒரு  புல்வெளியாக மாறியது.

 அப்படிப்பட்ட ஒரு புல்வெளியில் பசுக்கள், பசுமையையும் மணத்தையும் பின்தொடர்ந்து, யானை பாதையில் மேய்ந்து, மெதுவாக காட்டின் விளிம்பிற்குள் நுழைந்தன. அவற்றின் குளம்புகள் முல்லை நிலம் குறிஞ்சி நிலத்தை சந்திக்கும் இடத்தில் வந்து நின்றன. அந்த இடத்தில் முல்லை நிலம் குறிஞ்சி நிலத்தை ஆரத் தழுவியது  போலத் தோன்றியது.

 பசுக்கள் கூட்டத்துடன் சிவனும் நடந்தான். 

பசுக்கள் அவனது இருப்பை உணர்ந்தன.  அவை அதை வரவேற்றன. அவனது இருப்பு அவைகளுக்கு மிகவும் பாதுகாப்பு அளித்தது.

 மேய்ந்து கொண்டே நகர்ந்து கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் இருந்து ஒரே ஒரு பசு மட்டும் திடீரென நகராமல் பின்தங்கத் தொடங்கியது. 

 அந்தப் பசுவின் வயிறு பெரிதாக காணப்பட்டது. அது சினையுற்றிருந்தது.

 அதன் கால்கள் தள்ளாடின , நடப்பதற்கு  தயங்கின. 

 சிறிது நேரத்தில் அந்த பசுவின் நீர்க் குடம் உடைந்து கீழே உள்ள மண்ணை நனைத்தது.

 அந்தப் பசு ஒரு முனகல் ஒலியை வெளிப்படுத்தியது. அந்தக் கூட்டத்தின் தலைவியாக இருந்த வயதான ஒரு பசு அவளை நோக்கி முன்னேறியது. கன்றை ஈனும் பசுவினை  அது சுற்றி வந்தது. நாவால் அதன் நெற்றியை வருடியது.

 மற்றேனைய பசுக்களும் அந்த பசுவிற்கு ஆதரவாக சூழ்ந்து கொண்டன.

பனிக்குடம் உடைந்ததும் பசுவின் வாலின் கீழ் இருந்து, ஒரு சிறிய கன்றினது முகம் தோன்றியது. ஆனால் கன்றின் உடல் பின்தொடரவில்லை.அது சிக்கியிருந்தது. 

 தாய்ப் பசு முடிந்த மட்டும் முக்கி கன்றினை வெளித்தள்ளப் பார்த்தாள்.

 அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தொடங்கியது. அவள் பக்கவாட்டில் சரிந்தாள்.

அவளது மூச்சு வேகமாகவும் மெலிந்ததாகவும் வந்தது.

தலைவிப் பசு அவளருகில் இருந்தாள், இன்னும் நக்கிக் கொண்டிருந்தாள், ஆனால் அவளால் செய்ய முடிந்தது எதுவும் இல்லை.

சிவா அமைதியாக, உறுதியாக முன்னோக்கி நகர்ந்தான்.அவன் பசுவுக்கு அருகில் மண்டியிட்டு, அவளது அவளது அறைக்குள் கையை நுழைத்து பசுவின் பிஞ்சுக் கால்களை தேடத் துவங்கினான். 

அவன் தனது கைகளை உள்ளே நழுவவிட்டு, மடங்கி இருந்த கால்களை லாவகமாக நிமிர்த்தி வெளியே இழுக்கத் தொடங்கினான். இரத்தமும் பிரசவ திரவங்களும் அவனது கைகளை நினைத்தன.

 திடீரென்று காற்றில் மெல்லியதொரு சலனம்...

அவனது மூன்றாவது கண் துடித்தது...

 பசுக் கூட்டங்கள் பயத்தில் சிதறி ஓடத் துவங்கின.

 செந்நாய்கள் வித்தியாசமான ஒளியை எழுப்பிய படி அவர்களை சூழத் தொடங்கியது.

 அவற்றின் மணம் வலுவாக இருந்தது.

 அவற்றின் பசி இன்னும் வலுவாக இருந்தது.

 நிலைமையை கவலைக்கிடமாக்கும் வண்ணம் மற்றொரு  அழையா விருந்தாளியும் அந்த இடத்தில் நுழைந்தது.

தொலைவில் உள்ள  மூங்கில் நிழல்களால் மறைக்கப்பட்ட ஒரு இடத்திலிருந்து ஒரு உருவம் தோன்றியது.

புலி!!!

சிவனின் பழைய எதிரி... காட்டின் புதிய அரசன்.

 இரத்த  வாடை அதை இங்கே அழைத்து வந்திருக்க வேண்டும்.

 அதன் கண்களின் முன்பு காட்டின் இதயத்தில் வெளிப்படையாக வைக்கப்பட்ட ஒரு உணவு தயாராக இருந்தது.

சிவா உறைந்தான்.

 தூரத்தில் பசுக்களின் அலறல்...

 அருகிலே பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் தள்ளாடும் ஒரு தாய்...

 அவனது சூலம் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  

அவனுக்கு முன்னால் புலி தாழ்ந்து குனிந்தது. பின்னங்கால்களை பாய்வதற்குத் தயாராக அழுத்தி ஊன்றியது.

காடு அமைதியாகியது. 

பறவைகள் கூட மௌனமாகின.

 ஜனனம் , மரணம்...

 வேட்டையாடிகள், பாதுகாவலன்...

 இவற்றிற்கு இடையே உள்ள நிச்சயமற்ற சுவாசம்  அங்கே அந்த இடத்தைச் சூழ்ந்தது.

 பசுக்களின் கூட்டம் எப்படியும் தப்பி விடும் என்ற நம்பிக்கை அவனுக்குள் இருந்தது.

 நிற்கதியாய் நிற்கும் இந்த பசுவிற்கு  அவனது துணை அவசியம் .

 அடர்ந்த மூங்கில் காடுகளுக்கு இடையில்  இருந்து, புலி திறந்தவெளியில் அடியெடுத்து வைத்தது. 

 சிவனின் தங்க நிறத்தில் ஒளிரும் கண்கள் அந்த புலியின் கண்களுடன் பொருந்தின.

சிவா அசையவில்லை. 

 அவனது திரிசூலம் கைக்கு எட்டும் தொலைவில் தான் இருந்தது. ஆனால் அதை எடுப்பதற்கு தற்பொழுது அவகாசம் இல்லை.

அவன் புலிக்கும் பிரசவிக்கும் பசுவுக்கும் இடையில் தன்னை நிறுத்தினான்.

சிவாவின் இதயம் உரத்துத் துடித்தது, ஆனால் அவன் உறுதியாக இருந்தான்.

காடு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.

 உலர்ந்த காற்றில் மரணத்தின் ஏவலாள் போல புலி பாய்ந்தது.

சிவாவின் உடல் உள்ளுணர்வின் அறிவுறுத்தலில் விலகியது. விலகிய வேகத்தில் அவன் தனது முஷ்டியை புலியின் தாடையில் பதித்தான்  அவனது தந்தை அவன் வழியாக அந்தப் புலியை தாக்கியது போல இருந்தது அந்தத் தாக்குதல்.

 அந்த ஒரு தாக்குதல் புலியை சற்றே தள்ளி புழுதியிலும் உலர்ந்த இலைகளிலும் சறுக்கி விழச் செய்தது

அந்த கணம் மிக சுருக்கமாக இருந்தது.சிவா திரும்பி, திரிசூலத்தை நோக்கித் தாவினான்.

ஆனால் புலி அவனைவிட வேகமாக இருந்தது. அது மீண்டும் அவனை நோக்கிப் பாய்ந்தது, அவனது காலை பிடித்தது. அவனது காலில் புலியின் பற்கள் ஆழமாகப் பதிந்தன. 

அவன் விழுந்தான், அவனது இரத்தம் கீழே இருந்த சருகுகளை நனைத்தது.

 அவர்கள் மல்லுக்கட்டினர்.

 ஒளிரும் தெய்வீகக் கண்களைக் கொண்ட இளைஞன் ஒருவனும் காட்டின் அரசனும் கட்டி உருண்டனர்.

 நகங்கள் அவனது தோலைக் கிழித்தன. அவனது முஷ்டிகள் புலியின் எலும்பை பதம் பார்த்தன. 

 அங்கு நடந்த போராட்டம் இரு உயிர்களுக்கு இடையே ஆனது மட்டுமல்ல...

 இரு பழமையான உயிர்கள் நித்திய சோதனையில் ஒன்றிணைந்து துடித்தது போல இருந்தது அந்த காட்சி.

 சிவன் தனது பலம் கொண்ட மட்டும் கால்களால் உதைத்து புலியை வீசி எறிந்தான்.

 அவனது கைகள் திரிசூலத்தை கைப்பற்றின.

 அந்தத் திரிசூலம் அவனது உன்னத  கண்டுபிடிப்பு. 

அது அவனது பாதுகாவலன்.

 அவனது துணைவன்.

 எதிர்க்கவியலா மாபெரும் அஸ்திரம்.

 திரிசூலத்தை ஏந்திய தைரியத்தில் காட்டின் அரசனை எதிர்க்க அவன் தயாரானான்.

 புலி  கவ்விய கால்களில் இருந்து இன்னும் குருதி வழிந்து கொண்டிருந்தது. சதைத் துணுக்குகள் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு கால் கிட்டத்தட்ட பயனற்றதாக ஆகிவிட்டது.

 அவன் சூலத்தை ஊன்றி ஒற்றை காலை பூமியில் நன்றாக அழுத்தி மற்றொரு காலை சற்றே தொங்கவிட்டபடி உறுதியாக நின்றான்.

 பிறகு பாய்ந்து வரும் புலியின் முகத்தை   நோக்கி சூலத்தை விட்டெறிந்தான்

 பாய்ந்து வந்து கொண்டிருந்த புலி சற்றே தனது முகத்தை நகர்த்தியது.

 புலி முழுதாகத் தப்பவில்லை...

 முகத்தின் பக்கவாட்டில் விரைந்து சென்ற சூலமானது  அதன் ஒற்றைக் கண்ணை கிழிக்கத் தவிறவில்லை.

 பக்கவாட்டில் காற்றைக் கிழித்துச் சென்ற அந்த சூலம் பின்னால் இருந்த பாறையில் மோதியது. 

 சூலத்தின் ஒரு பல் கண்ணாடித் துண்டைப் போல்  நொறுங்கியது

 ஒரு காலத்தில் ஒளிர்ந்த ஆயுதம், இப்போது முனைகள்  உடைந்து கிடந்தது.

சிவா மூச்சு வாங்கினான்.அவனது மனம் தடுமாறியது.

 அந்த ஒரு தெய்வீக கணத்தில் அவனது தந்தையின் குரல் அவனுக்குள் ஒரு அசரீரி போல ஒலித்தது

“ வீரன் தன் பலத்தை மட்டுமே நம்புவான் ஆயுதங்களை அல்ல .”

சிவா எழுந்தான். தோள்பட்டை, கால்,  ஆகியவற்றில் இரத்தம் வடிந்தது.புலி, காயமடைந்து, ஒரு கண் குருடாகி, இப்போது ஆவேசத்துடன் உறுமியது.

அது மீண்டும் முன்பை விட பயங்கரமாகப் பாய்ந்தது.

 அப்பொழுது அங்கே இடி முழங்குவது போல  குளம்புகளின் ஒலி பூமியில் அதிர்ந்தது.

 சூலத்தின் முனைகளை விட கூர்மையான கொம்புகளை உடைய அந்த வெள்ளை நிறக்  காளை, கூற்றுவனைப் போல் பாய்ந்து வந்தது.

குளம்புகள் இடியாக ஒலித்தன. கொம்புகள் மின்னின.

 ஒரே பாய்ச்சலில் காளை புலியை குத்தித் தள்ளியது.

புலி தூக்கி வீசப்பட்டது, 

இந்த முறை கர்ஜனையின்றி அது விழுந்து. தோல்வியை ஒப்புக்கொண்டது போல தடுமாறி ஓடியது .

திறந்தவெளி மௌனமாகியது.

 ரத்தம் வழியும் தேகத்துடன் ஒரு இளைஞனும்... உக்கிரத்தின் உருவெடுத்த ஒரு காளையும் நேருக்கு நேர் நின்றனர்.

 தூரத்தில் செந்நாய்களின் கெக்களிப்பும் பசுக்களின் கதறலும் சன்னமாகக் கேட்டது

 பசுக்களுக்கு ஆபத்து!!!

 சிவா தாமதிக்கவில்லை சட்றென்று தனது திரிசூலத்தை எடுத்துக் கொண்டு பசுக்களை நோக்கி ஓடத் தொடங்கினான்.

 ஒவ்வொரு முறை அவன் பாதத்தை பூமியில் வைக்கும் பொழுது கிழிபட்ட அந்தக் காலின் சதைகளில் இருந்து குருதி வழிந்தது

 அவன் அதை பொருட்படுத்தாமல் விந்தி விந்தி ஓடினான்.

காளை அவன் தடுமாறுவதைப் பார்த்தது.

பின்னர், மௌனமாக, அது அவனை நோக்கித் திரும்பியது.தன் உடலைத் தாழ்த்தியது.தன் தலையைக் குனிந்தது.

 அது வார்த்தைகள் ஏதுமற்ற மௌனமான அழைப்பு.


சிவன் காளையின் கண்களைப் பார்த்தான்.

 அந்தப் பார்வையில்...

பயமில்லை...

சந்தேகமில்லை...

 பரஸ்பர நம்பிக்கை உணர்வு மட்டுமே அங்கே நிலவியது.

அவன் அந்தக் காளையின் மீது ஏறினான்.

 சிவனின் இரத்தம் தோய்ந்த கைகள் காளையின் பெரிய திமில் மேட்டைப் பற்றியது, 

 சிவன் உடைந்த திரிசூலத்தை கையில் உயர்த்தினான்

 இருவரும் பசுக்களின் கூச்சல் சத்தத்தை நோக்கி புயல் வேகத்தில் நகரத் தொடங்கினர்.

 கீழே இடியின் உருவில் காளை

 மேலே புயலின் உருவில் சிவன்

அவர்களது பயணம் அங்கு தொடங்கியது.

அது ஒரு முடிவற்ற பயணம்.

உலகம் அதை  என்றென்றும் நினைவு கூறும்.

 வெறும் மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலான பந்தமாக மட்டுமல்ல... ஆனால் ஏதோ நித்தியமான ஒன்றின் தொடக்கமாக.

அந்த நாளில், பசுக்கூட்டம் இரட்சிக்கப்பட்டது.  உலகைக் காண தவித்துக் கொண்டிருந்த கன்று  எந்தவித சேதாரமும் இன்றி வெளியே எடுக்கப்பட்டது, 

 அன்று பிறந்தது வெறும் பசுவின் கன்று மட்டுமல்ல, இந்த நிலத்தின் தெய்வீகக் கதையில் ஒரு புதிய அத்தியாயம். 


நெருப்பும் காற்றும்...

 சூரியனும் சந்திரனும்...

காளையும் கடவுளும்...

 ஒன்றாக இணைந்து பயணிக்க ஆரம்பித்த ஒரு அத்தியாயம். 

 அது இந்த உலகத்தின்  பாதுகாவலர்களுடைய நித்தியப் பயணத்தின் தொடக்கம்.

----------

சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச்சூழப்

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை

விடையானே விரிபொழில் சூழ்பெருந்துறையாய் அடியேன் நான்

உடையானே உனையல்லாது உறுதுணைமற்று அறியேனே.


----


No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

ஓங்காரன்

தனது தாய் தந்தையரை இழந்து, இந்த முல்லை நிலத்திற்கு வந்த பிறகு, கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக சிவன் யாருடனும் பேசவில்லை.  ஆனால் இப்போது, முதல் ம...