Friday, November 21, 2025

அளவிலாப் பெம்மான் (ஆதியோகி: அத்தியாயம் 20)

காலைக் கதிரவன் பீம்பேட்கா சமவெளியின் விளிம்பில் மெதுவாக உயர்ந்து கொண்டிருந்தது. அந்த ஒளி பாறைச் சுவர்களில் தீட்டப்பட்டிருந்த  பழமையான ஓவியங்களைத் தொட்டபோது, அவை உயிர் பெற்று அசைந்தது போலத்  தோன்றியது.  இளஞ் சிவப்பு நிறத்தில் இருந்த  அந்தக்  காலை ஒளி, போர்க்களத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்த படைகள் மீது பட்டு, நீண்டு விரியும் நிழல்களை தரையில் படறவிட்டது. காற்று மிகவும் கனமாகவும் அசைவற்றும் இருந்தது. அது அந்த  சூழ்நிலையின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்திக் காட்டியது. அன்றைய தினத்தில்  பீம்பேட்கா சமவெளி இன்னொரு காவியத்தின் பிறப்பை காணத் தயாராகி கொண்டிருந்தது.

 அந்தப் பிரதேசத்தில்  வீரர்கள் எழுப்பும் காலடித்தடத்தின் ஒலியைத் தவிர வேறு எந்த சப்தமும் எழவில்லை. பறவைகள் கூட எந்த ஓசையையும் எழுப்பவில்லை. இயற்கை முழுவதுமே நிம்மதியின்றி, நடக்கவிருக்கும் நிகழ்வை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. இரு பக்கத்து படை வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிரே,  ஒரு மயான அமைதியில்  நின்றனர். 

ஒரு பக்கம் பீரப்பாவின் படைகள் நின்றன. அவர்கள் குறிஞ்சியின் மலைகளிலும், முல்லையின்  அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.  மலைகளின் பாறைகளைப் போல  உறுதியானவர்கள், மேய்ச்சல் நிலங்களின் நெடிய புயல்களைப் போன்ற வலுவை பெற்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு பழங்குடிகளிலிருந்தும் வந்திருந்தாலும், இன்று அவர்கள் அனைவரும் பீரப்பாவின் கீழ் ஒன்றாகத் திரண்டு  தங்கள் ஒற்றுமையையும் பலத்தையும்  நிரூபிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆயுதங்கள் இதுவரையிலும் இந்த உலகம் கண்ட எந்த உலோகத்தையும் ஒத்திருக்கவில்லை. அவை இதுவரை அந்த மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் அல்ல.  அந்த ஆயுதங்கள் செம்பினாலோ வெண்கலத்தினாலோ செய்யப்பட்டபவை  அல்ல. அவை புனித நெருப்பில் வார்க்கப்பட்டவை.  விஞ்ஞானத்திற்கும் தெய்வீகத்திற்கும்  இடையே பிறந்த ஆயுதங்கள் அவை . 

அந்த ஆயுதங்களைத் தாங்கி நின்ற மக்கள் எவ்வித அசைவையும் காட்டாமல் கல்லைப் போல சமைந்து நின்றனர். மலைப்பாறைகளுக் கூட அஞ்சாத ஒரு அமைதி அவர்கள் முகங்களில் வேரூன்றி இருந்தது. பீரப்பா அவர்கள் முன் நின்றார், அவரது கண்கள் எவ்வித சலனத்தையும் வெளிப்படுத்தவில்லை.

அவருக்கு அருகில் அக்கா மகாகாளி நின்று கொண்டிருந்தார். அவர் பீரப்பாவின் சகோதரி மட்டுமல்ல, அவர்களின் குலத்தின் இதயம், பெண்களின் உயிர், வீரர்களின் துணிவு. அவர் பார்வை, எதிரே நின்ற  படையின் மீது நிலைத்து நின்றது. அவரது பார்வையில் பயமோ கோபமோ தென்படவில்லை. மிகவும் ஆழமான தீர்மானத்தை மட்டுமே அவரது  கண்கள் வெளிப்படுத்தியது. சூரிய ஒளியில் அவரது கருமையான முகம் பிரகாசமாக ஒளிர்ந்தது. அவரது ஒரு கையில் வாளும் மற்றொரு கையில் அரிவாளும் இருந்தது. 

அவர் தனது மக்களுக்கு அன்னையின் அன்பையும் பரிவையும் வற்றாது வழங்குபவர்.அவர் காண்பதற்கு கருங்கல்லில் செதுக்கிய  கொற்றவை போலவே இருந்தார்.  காட்டின் நடுவே  நச்சுப் பாம்புகள் தனது மக்களை தீண்ட வந்தால், முதலில் தன் காலால் அதை மிதித்தவர். கொல்லும் விலங்குகள் வந்தால் அதன் நெஞ்சில் முதல் ஈட்டியை பாய்ச்சியவர்.எதிரிகள் வந்தால், முதலில் எதிர்த்து நின்றவர். 

 அவர் இரக்கத்தின் மறு உருவம். ஆனால் தன் மக்களை , காப்பதில் கடுமையானவர், போரில் இரக்கமற்றவர்.   கொல்லப்பட்ட எதிரிகளின் மண்டையோடுகளை பெருமிதத்தோடு ஆபரணங்களாக அணிந்து கொண்டிருக்கும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தின்  நாகர் பழங்குடியினரை போலவே, அவரும் மண்டையோடுகளை அணிந்தபடி காட்சியளித்தார்.

 அவர் இப்பொழுது தனது சகோதரனுக்குத் துணையாக போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தார்.

 அவர்களுக்கு எதிரே நிற்கும் படை அளவில் பெரியது. அந்தப் படை   தங்களது ரத்தத்தை வேண்டுவதை அவர்கள் அறிந்தே இருந்தனர். ஆனால் அவர்கள்  நெஞ்சில் ஒரே ஒரு தீர்மானம் மட்டுமே இருந்தது. இந்தப் போரில் அவர்கள் நிச்சயம் வென்றாக வேண்டும். ஏனெனில் இன்று அவர்கள் தங்கள் நிலத்திற்காக மட்டுமல்ல; தங்கள் மரபுக்காகவும், தங்கள் நிலத்தின் உயிரின் மூச்சாகிய எதிர்காலத்திற்காகவும் போராடுகின்றனர்.

அவர்களுக்கு எதிரே பசவண்ணா தலைமையில் நின்றது விவசாயப் படை. ஒரு காலத்தில் பரிவையும் பாசத்தையும் மட்டுமே கொண்டிருந்த  தலைவராக இருந்தவர் அவர். இப்போது தனது மகனின் மரணத்திற்கு வஞ்சம் தீர்ப்பதற்காக போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தார்.  அவரது கண்கள் காளியை வெறுப்புடன் பார்த்தது.

“நான் அவனைக் கொல்ல வேண்டும்,” என்று பசவண்ணா உரக்க கூறினார்.

“நாங்கள் இரத்தம் சிந்த விரும்பவில்லை, ஆனால் பகைக்கு பயந்தவர்கள் அல்ல  நாங்கள். எதற்கும் தயாராக இருக்கிறோம்.” என்று பீரப்பா கூறினார்.

"நானும் தயாராக இருக்கிறேன்,” என்று பசவண்ணா கூறி ஒரு படி முன்னேறினார்.

காளியின் குரல் கூர்மையாக எழுந்தது, “என் சகோதரன் அமைதியைத் தேர்ந்தெடுக்கிறான். அவனுக்கு உங்களைக் கண்டு  பயம் இல்லை.

நான் உயிர்களை மதிப்பவள். ஆனால் எங்களில் ஒருவரைத் தொட்டால், உங்கள் ஒருவரையும் நான் விட்டு வைக்க மாட்டேன் ” என உரக்கக் கூறினாள்.

மலையின் மேலிருந்து தக்ஷனின் சேனாதிபதி இரு படைகள் கூடியிருப்பதை கவனித்துக் கொண்டிருந்தான். 

அவனது முகம் பாறையில் செதுக்கப்பட்டது போல, உணர்ச்சியற்று இருந்தது.“அவர்கள் அதிகம் பேசுகிறார்கள்,” என்று அவன் கூறினான். 

அவனது வீரர்கள் அவன் வார்த்தைகளை பதற்றத்துடன் கவனித்தனர். 

திடீரென்று அவனது முகம் அதிர்ச்சியின் ரேகைகளை வெளிப்படுத்தியது.

“அவர்களின் கத்திகள்… அவை வெண்கலம் இல்லை. இவை என்ன ஆயுதங்கள்? 
இந்தக் வனவாசிகள் இப்படிப்பட்ட ஆயுதங்களை எங்கிருந்து பெற்றார்கள்?” என்று அவன் வியப்போடு கேட்டான்.

“ ராட்சசர்களிடையே ஒரு புதிய கடவுள் உருவாகி இருப்பதாக ஒற்றர்கள் தெரிவித்துள்ளனர், ஒருவேளை அவரது வேலையாக இருக்கக்கூடும்" என்று அவனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வீரன் கூறினான்.

பின்னர் அது தொடங்கியது...  வரலாறுகளில் பதிவாகாத ஒரு யுத்தம், ஆனால் பீம்பேட்காவின் உயிர்ப்புள்ள சுவர்களில் பொறிக்கப்பட உள்ள ஒரு பெரும் போர். 

விவசாயப் படை, மெருகேற்றப்பட்ட வெண்கலத்தில் செய்யப்பட்ட ஆயுதங்களுடனும், செப்பு முனையுடன் கூடிய அம்புகளுடனும் முன்னேறியது.

 ஆனால் அவர்களின் வெண்கலம் பழங்குடியினரின் கத்திகளைத் தாக்கியபோது, வெண்கலம் உடைந்தது. புனித ஆயுதங்கள் உறுதியாக நின்றன.

காளி, தீப்பிழம்பின் உருவாக, போர்க்களத்தின் நடுவில் புயல் போல இருந்தார்.

 அவர் ஒரு தேர்ந்த வேட்டையாடி. இப்பொழுது அவர் மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருந்தார். 

அவர் தளைகளில் இருந்து  விடுவிக்கப்பட்ட ஒரு போர்க்கடவுள் போலக் காட்சியளித்தார் .
 
ஒரு விவசாய குல பெருவீரன்,  அவர் மீது வெண்கலக் கோடரியை உயர்த்தினான். அவர் குனிந்து, புழுதியில் சறுக்கி, பாய்ந்து வரும் புலியைக் கூட நிறுத்த வல்ல ஒரு கூச்சலுடன்,  வாளை  அவன் வயிற்றில் குத்தி மேலே இழுத்தார். அவன் நைந்து போன துணியைப் போல போர்க்களத்தில் வீழ்ந்தான்.

 அவரது கோபம் காட்டுமிராண்டித்தனமாக இல்லை. அது ஒழுங்கானது... பழமையானது...

சாம்பலின் கீழ் உள்ள நெருப்பைப் போல அவரது கோபம் கனன்று கொண்டிருந்தது. 

அவர் தனது கோபத்தையும் வீரத்தையும் நேர்த்தியாக வாள் வீச்சின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

 காளியின் வாள்வீச்சு அழகான ஒரு அப்சரசினுடைய அசைவுகளின் நளினத்தைக் கொண்டிருந்தது.

எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், பழங்குடி வீரர்கள் விவசாயப் படையை அடி மேல் அடி எதிர்கொண்டனர். போர் சமநிலையில் இருந்தது. 

 இதுவரை மழையை மட்டுமே அருந்திக் கொண்டிருந்த  அந்த நிலத்தில் ரத்தம் வழிந்தோடியது. பீரப்பாவும் காளியும் எதிரிப்படைகளை சாய்த்துக் கொண்டிருந்தனர்.

 இதை கண்ணுற்ற சேனாதிபதி கடும் ஆவேசம் கொண்டான். அவனது பார்வை காளியின் மீது நிலை குத்தி இருந்தது  

 “ கரிய நிறத்தில் இருக்கும் அந்தப் பெண் யார் ?” என்று அவன் கோபத்துடன் கேட்டான்.

 சேனாதிபதியின் அருகில் இருந்த ஒரு படை வீரன், " அவர்தான் அக்கா மகாகாளி. அவர் உஜ்ஜைனியின் பழங்குடி மக்கள் தலைவி, பீரப்பாவின் சகோதரி " என்று கூறினான்.

“நாம் இந்த ராட்சசர்களை குறைத்து மதிப்பிட்டு விட்டோம்… அவர்கள் பூதகணங்களைப் போல போரிடுகிறார்கள்.” என்று கூறிவிட்டு கோபத்தில் சேனாதிபதி தனது வாளின் கைப்பிடியை இறுக்கிப்பிடித்தான்.

 “ இதற்கு மேலும் நாம் அமைதி காத்தால் பசவண்ணாவின் படை வீழ்ந்துவிடும். 

 இந்த மண் இதுவரை குதிரைப்படைகளை பார்த்ததில்லை. குதிரைப் படையின் வேகத்தையும் வாள் வீச்சையும், நிலத்தில் நின்று போராடும் இந்த மக்களுக்குக் காண்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது .” என்று கூறிவிட்டு  அவன் கையை உயர்த்தினான்.

 “தேர்களையும் குதிரை வீரர்களையும் விடுவியுங்கள். போரின் தாளத்தை, குதிரைகளின் வேகத்தை ,  அவர்கள் உணரட்டும்.”

பின்னர் அவன் ஒரு தளபதியிடம் நெருங்கி, “ அங்கே காமரதியோடு பீம்பெட்கா குகைகளில் காத்துக் கொண்டிருக்கும் நமது வீரர்களுக்கு செய்தி அனுப்பு. காமரதியின் தலையை எனக்கு விரைவில் கொண்டு வா. அது குழப்பத்தை உருவாக்கும். பீரப்பா மற்றும் பசவண்ணா இருவரும்  கட்டுப்பாட்டை இழப்பார்கள். அவர்கள் ஒருவரையொருவர் ஆவேசத்தோடு தாக்கிக் கொள்வார்கள் . பசவண்ணாவின் படையும் இதில் வீழ்ந்தால், இன்னும் சிறப்பு. நம் அரசனுக்கு இரட்டை வெற்றி. அவர்களின் நிலம் எளிதில் நம் வசப்படும்” என்று கூறினான்.

------------------------------------------

பீம்பெட்காவின் பழமையான குகைகளுக்குள், பல்லாயிரமாண்டுகள் பழமையான ஓவியங்களின் பார்வையில், காமரதி தக்ஷனின் ஐம்பதற்கும் மேற்பட்ட  வீரர்களால் சூழப்பட்டு நின்றாள். அவர்கள் தங்கள் கத்திகளைத் தீட்டிக் கொண்டிருந்தனர்.

“ஒரு பெண்ணை ஐம்பது கத்திகளால் சூழ்கிறீர்கள், இதுதான் உங்கள் வீரமா?” என்று காமரதி கேட்டாள்.

ஒரு ஆணும் அசையவில்லை.

“நீங்கள் கோழைகள். பீரப்பாவின் நிழலுக்குக் கூட நீங்கள் சமமாக மாட்டீர்கள்” என்று அவள் வெறுப்புடன் கூறினாள்.

 அவளின் பேச்சை அங்கு இருக்கும் யாரும் மதித்ததாகத் தெரியவில்லை ஒருவன் அவளை நோக்கி ஒரு ஏளனப் புன்னகையை வீசிவிட்டு, கூர்தீட்டப்பட்ட வாளை அவள் கழுத்தை நோக்கி உயர்த்தினான்.

 அப்போது... தூரத்தில் உடுக்கையின் ஒலி சன்னமாகக்  கேட்டது...

 காற்று நடுங்கியது...

 அந்தக் காற்றின் ஊடே  ஒரு மிருகத்தின் குளம்பொலி எதிரொலித்தபடி இருந்தது. ஆனால் அது குதிரையின் குளம்பொலி இல்லை. அதைவிட வலுவான ஏதோ ஒன்றின் குளம்பொலி.

 வீரர்கள் சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தனர்.

 காற்று  வேகமாக சுழன்று, அந்த பிரதேசம் முழுவதும் புழுதி மயமாகக் காட்சியளித்தது. அவர்கள் கண்களுக்கு வருவது யார் என்று தெளிவாகத் தெரியவில்லை.

 பின்னர் காற்றைக் கிழித்துக்கொண்டு  புழுதிக்கு  மத்தியில் வெண்ணிறக் காளை ஒன்று புயல் போல் வந்தது. அதன் மேல் மனித வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட ஒருவர் அமர்ந்திருந்தார்.

 அவர் மின்னலின் வடிவில்  இருந்தார்.  அவரது முடிக் கற்றைகள்   கரிய பாம்புகள் போல சுருண்டிருந்தது, அவரது உடல் சாம்பல் மற்றும் காட்டு மூலிகைகளின் மணத்தால் சூழப்பட்டிருந்தது. அவரது கண்கள்  எரியும் இரு சூரியன்கள் போல இருந்தது. புலித்தோல் அவர் பின்னால் பறந்தது. அவரது ஒரு கையில் மழுவும் மற்றொரு கையில் திரிசூலமும் இருந்தது.

 நிலைமையை புரிந்து கொண்ட ஒரு வீரன் வேகமாக செயல்பட்டான்... அவன் காமரதியின் கரழுத்தை நோக்கி கத்தியை உயர்த்தினான். ஆனால் அதை அவன் வீசுவதற்குள்...

 பறந்து வந்த திரிசூலம் அவனது நெஞ்சில் பாய்ந்தது . புயலின் சிக்கிய மரம் போல் அவன் தூக்கி வீசப்பட்டான்.

காமரதி தலையை உயர்த்தி மேலே பார்த்தாள். அவளது மூச்சு தடைபட்டது. வார்த்தைகள் விம்மியபடி வெளிவந்தது.

 “மகாதேவா... நீங்கள் நிச்சயம் வருவீர்கள் என்பதை நான் அறிவேன் " என்று கண்ணீர் மல்கக் கூறினாள்.

 சிவன் வீரர்களை சிதறடித்தார். அவர் இடி போலத் தாக்கினார், கத்திகள் உடைந்தன.  வீரர்கள்  சிதறினர். 

சாதுமிரண்டால் என்னவாகும் என்பதை உலகம் அன்று கண்ணுற்றது. 


காமரதியை அவர் நந்தனின் மீது ஏற்றிக்கொண்டார். பின்னர் அவர் குகையை விட்டு நீங்கினார். குகை, அவர் பின்னால்  பயத்தில் எரிந்தது.

இதற்கிடையில், பழங்குடிப் படைகள் ஆற்றை எதிர்க்கும் அணையைப் போல போராடின. வெண்கல கத்திகள் இரும்புக்கு எதிராக உடைந்தன. அம்புகள் சீறிப்பாய்ந்தன. கூச்சல்கள் எழுந்தன.

ஆனால் நிலம் நடுங்கத் தொடங்கியது. சேனாதிபதியின் குதிரைப்படை சமவெளியில் இடியோசையுடன்  இறங்கி வந்தது.

பழங்குடி வீரர்கள் அச்சத்துடனும் வியப்புடனும் இந்தக் காட்சியை பார்த்தனர்.  இந்த நிலத்தில் இருக்கும் யாரும் அதுவரை குதிரைகளை பார்த்ததில்லை. தரையின் மீது  நின்று கொண்டு போர் புரியும் வழக்கம் கொண்ட அந்த மக்களுக்கு, குதிரைகளின் மீது வந்து கொண்டிருக்கும் வீரர்களை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. யாரும் இதற்கு முன் இப்படி ஒரு படையை  எதிர்கொண்டதுமில்லை.

இப்போது இரு பக்கங்களிலிருந்து, காளியும் பீரப்பாவும் சூழப்பட்டனர். முன்னால் பசவண்ணாவின் படை, பின்னால் தக்ஷனின் குதிரைப்படை.

“இறக்கத் தயாரா, பீரப்பா?” சேனாதிபதி  ஆவேசமாக கத்தினான், அவரது வாள் உயர்ந்து.

ஆனால் வானம் வேறு பதிலை வைத்திருந்தது.அப்போது,  எருதுகளால் இழுக்கப்பட்ட தேர்கள் காட்சிக்கு வந்தன.

 வேளிர் குலங்கள் வந்துவிட்டன.முன்னணி தேரில் வேள், வேளிர் குலத்தின் அரசன், மேருவைப் போல் நின்று கொண்டிருந்தான்.


:“இது எங்கள் நிலம்! இது எங்களுக்கு இடையேயான பிரச்சனை. எந்த அந்நிய வாளும் எங்கள் மண்ணை உரிமை கொள்வதை நான் அனுமதிக்க மாட்டேன். இங்கு, நான் துரோகத்தின் வாசனையை உணர்கிறேன்.”அவர் குதிரைப்படையை நோக்கி கண்களைச் சுருக்கினார். “ஒரு அடி முன்னேறினால், வேளிர்களின் கோபத்தை எதிர்கொள்வீர்கள்” என்று அவர் சேனாதிபதியை நோக்கி எச்சரித்தார்.

சேனாதிபதி முன்னேறினான், பின்னர் அவன் தனது குரலை உயர்த்தினான், பசவண்ணாவின் வீரர்கள், வேளிர்கள், பழங்குடி வரிசைகள் அனைவரும் கேட்கும் வண்ணம் பேச ஆரம்பித்தான் :“ வேளிர்களின் அரசே... என்னை உண்மையைப் பேச அனுமதியுங்கள்,”  அவரது குரல் அளவாக இருந்தது, ஆனால் வார்த்தைகள் விஷத்துடன் கலந்து இருந்தது. “நாங்கள் இந்த மண்ணை  அழிக்க வரவில்லை... பாதுகாக்க வந்துள்ளோம்.”

“இந்த மனிதன்... பீரப்பா,” அவர் பழங்குடித் தலைவரை கூர்மையாக சுட்டிக்காட்டி, “நீதியின் பெயரில் மறைந்து நிற்கிறான். ஆனால் அவன் உண்மையில் விரும்புவது… பசவண்ணாவின் நிலம்.”

சேனாதிபதி தனது புதிய திட்டத்தை விரிவாக்கத் தொடங்கினான்,

 வேளிர்களையும் மற்றவர்களையும் தாங்கள் பசவண்ணாவுக்கு உதவ வந்ததாக நினைக்க வைக்க, அவன் பீரப்பாவை பசவண்ணாவின் நிலத்தை ஆக்கிரமிக்க எண்ணம் கொண்டதாகவும், அதன் காரணமாகவே  அவரது மகனைக் கொன்றதாகவும், இப்போது காமரதியை கொன்றுவிட முயல்வதாகவும் குற்றம் சாட்டினான். 

 காமராதியை பீரப்பா பீம்பெட்கா  குகைகளில் கடத்தி வைத்திருப்பதாகவும், தக்ஷனின் வீரர்கள் அவளைக் காப்பாற்ற சென்றிருப்பதாகவும், அவர்கள் திரும்பும்போது உண்மை வெளிப்படும் என்றும் கூறினார். 

குழப்பம் பரவியது.காளியின் கண்கள் சுருங்கின. வேளிர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். வேள் அமைதியாக நின்றார், அவரது மனம் சந்தேகத்திற்கும் கோபத்திற்கும் இடையில் சலனமாடியது.

பசவண்ணா, பெரும் வேதனையுடன் பீரப்பாவைப் பார்த்தார். அவரது குரல் துக்கத்தில் நடுங்கியது.“நீ என் மகனைக் கொன்றாய். இப்போது என் மகளையும் பறிக்க நினைக்கிறாய்!” அவர் பெரும் கோபத்துடன் தன் வாளை உருவினார்.

“நான் சொல்வதை சற்றே செவி மடுத்துக் கேளுங்கள்” என்று பீரப்பா பசவண்ணாவிடம் மன்றாடினார். 

ஆனால் பசவண்ணா ஆவேசத்துடன் முன்னேறினார். அவர் வெறிகொண்டு பீரப்பாவை தாக்கினார். பீரப்பா பசவண்ணாவை தாக்கவில்லை. அவர் 
தயக்கத்தோடும் எச்சரிக்கையோடும் அவரது வாள் வீச்சை தடுத்துக் கொண்டிருந்தார், காளி செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தார்.

சேனாதிபதி நடப்பதனைத்தையும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பொறி வேலை செய்தது. எதிரிகளின் ஒற்றுமை உடைந்து கொண்டிருந்தது.

 ஆனால் சேனாதிபதியின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை...

அதுவரை இந்தக் குழப்பங்களை பிரதிபலிப்பது போல் மங்கலாகவும் மேகமூட்டத்துடனும்
 காணப்பட்டிருந்த வானம், தெளிவடையத் தொடங்கியது ... 

உலகின் மூச்சு நின்றது போல, காற்று அடங்கியது...

கதிரவனின் ஒளிக்கீற்று மேகங்களுக்கிடையே ஊடுருவி,  ஒரு ஒற்றைக் கீற்றை வெளிப்படுத்தியது...

அந்த ஒளிக்கீற்றின்  வெளிச்சத்தின் வழியே, மின்னும் கொம்புகளைக் கொண்ட  காளை ஒன்றின் மீது அவர் வந்தார். 

அவரது நெற்றியிலும் உடலிலும் புனித விபூதி பூசப்பட்டிருந்தது, அவரது தசைகள் புயல்களின் வலிமையுடன் அசைந்தன. அவரது நெற்றியில்,  மிளிரும் கண்களுக்கு மேலே, மூன்றாவது கண் ஒன்று  உலகை அமைதியாக உற்று நோக்கியது. மறுபிறவி எடுத்த கடவுளைப் போல அவர் காட்சியளித்தார்.  

 சிறிது நேரத்திற்கு முன்பு வரை கூச்சல்களாலும் மரண ஓலங்களாலும் நிரம்பி இருந்த போர்க்களம், விசித்திரமான அமைதியில் ஆழ்ந்தது. போர் கூட அவரது முன்னிலையில் மூச்சுவிடத் துணியவில்லை.

காமரதி அவருடன், எவ்வித சேதாரமும் இன்றி அமர்ந்திருந்தார். 

இதைக் கண்ட  பீரப்பாவின் முகம் ஆனந்தத்தால் பிரகாசமாகியது.

பசவண்ணாவின் கைகளில் இருந்து வாள் நழுவியது.

 சேனாதிபதியின்  கண்கள்  வியப்பினால்  விரிந்தன. அவனது முகத்தில் அச்சத்தின் ரேகைகள் படரத் துவங்கின. அவன் பொய்களால் கட்டி எழுப்பிய கோபுரம் சரிந்து கொண்டிருந்தது.

 வேளிர் வீரர்களின் முகங்கள் ஆச்சரியத்தில் விரிந்தது . 

அனைவரின் பார்வையும் சிவனின் மேல் பதிந்தது.

அந்த கணத்தில் தங்களின் காப்பாளர் வந்துவிட்டார் என்பதை  உலகம் அறிந்தது. போர்க்களம் முழுவதும் அமைதியாக அவரை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

 ஒருவன் மட்டும் அந்தப் புனித அமைதியை பயன்படுத்திக் கொண்டு விரைவாக செயல்பட்டான். 

தான் தோல்வியடைந்ததை சேனாதிபதி அறிந்து கொண்டான். அவனது முகம் பயத்தின் ரேகைகளை வெளிக்காட்டியது. கதை அவன் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருந்ததை அவன் அறிந்தான்.

 ஆயினும் அந்தக் கதையின் இறுதி வரிகளை அவன் எழுதி விட எண்ணம் கொண்டான்.

 அவன் யாரும் அறியா வண்ணம் ஒரு சிறிய குறுவாளை உரையிலிருந்து வெளியே எடுத்தான். அந்தக் குருவாள் ஒரு கொடிய நெஞ்சினை தாங்கியிருந்தது.

 தேர்ந்த வீரனான அவன், அதை நேராக பீரப்பாவின் முதுகை நோக்கி வீசினான். அது பறக்கும் ஒரு நாகத்தை போல்  சீறிப்பாய்ந்து பீரப்பாவின்  முதுகில் பதிந்தது.

 கத்தியை முதுகில் தாங்கியதும் கோபமடைந்த பீரப்பா கத்தி வந்த  திசையை நோக்கி திரும்பினார். 

 " முன் நின்று தாக்காமல், பின் நின்று தாக்கும் நீ வீரனா? கோழையே... உனது கதையை முடிக்கிறேன்" என்று ஆவேசத்துடன் சேனாதிபதியை நோக்கி பீரப்பா முன்னேறினார். 

 இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் கால்கள் தளர்ந்து பூமியில் விழுந்தார் பீரப்பா. அவரது உடலில் நீலம் பாயத் துவங்கியது.

 சேனாதிபதி ஒரு ஏளனப் பார்வையை பீரப்பாவை நோக்கி வீசினான். 

 இதைக் கண்ட காளி கடும் கோபம் கொண்டார்.  

அவர் கோபத்தில் கொற்றவையைப் போலப் பாய்ந்து, சேனாதிபதியின் நெஞ்சில் உதைத்தார். அவன் பின்னால் பறந்து, புழுதியில் மோதி விழுந்தான். காளி அவனது கூந்தலைப் பற்றி, வாள் கொண்டு ஒரே  வீச்சில்  அவனது தலையை வெட்டினார்.

தக்ஷனின் வீரர்கள் பயத்தில் பின்வாங்க ஆரம்பித்தனர். பின்னர் அவனது   படை வடக்கு நோக்கி ஓடியது, 

காளி பதட்டத்துடன் பீரப்பாவின் பக்கம் ஓடினார். பீரப்பாவின்  உடல் ஜில்லிட ஆரம்பித்தது, தோல் அசாதாரணமாக நீல நிறத்தில்  இருந்தது. 

பீரப்பாவின் முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று தோன்றியது.  .“பசவண்ணா… இறுதியாக… உங்களது  சந்தேகங்களுக்கு… விடை கிடைத்துவிட்டது.... இனி நான் நிம்மதியாக மரணிப்பேன்...” என்று வலியோடும் வேதனையோடும் கூறினார்.

பசவண்ணாவின் வாள் நழுவியது. அவர் மண்டியிட்டார், அவரால் பேச முடியவில்லை.

பீரப்பா சிவனையும் காளியையும் பார்த்து பேசத் துவங்கினார் "என் சகோதரி… காளி… என் சகோதரர்… மல்லப்பா… உங்கள் முன் இறப்பது… எனக்குப் பெருமை .”

 பின்னர்  அவர் பலவீனமாக காமரதியை நோக்கித் திரும்பினார். “நாம் இந்த முறை… ஒன்று சேர முடியவில்லை… என்னை மன்னித்து விடு காமரதி... " அவரது கண்கள் மூடத் துவங்கியது.

சிவன் பீரப்பாவிற்கு அருகில்  மண்டியிட்டார். அவர் மணிக்கட்டில் விரல்களை வைத்து  பீரப்பாவின்
நாடியைப் பரிசோதித்தார். அவர் சில மூலிகைகளை நசுக்கி,  பாஷாணங்களின் கலவையை கரைத்து  பீரப்பாவின் நாக்கின் கீழ் வைத்தார்.

பீரப்பாவின் உடல் தெளிவடைந்தது... அவர் மூச்சு விடத் துவங்கினார்.

 இதைக் கண்ட  வேளிர்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது...

" மரணிப்பவர்களை எழுப்புபவர் வந்துவிட்டார்"

“அவர் மனிதர் இல்லை” 

“அவர் மாயோனின்… மறுபிறவி"

வேளிர்கள் பிரமிப்பில் தங்களுக்கு இடையே பேசிக்கொண்டனர். 

"அந்த நீல நிறக்கழுத்து...அவர்... மிடற்றண்ணல்!!!"

" நமது பழைய ஓலைச் சுவடிகள் முன்னறிவித்தவர்."

"கடற்கோளால் அழியவருக்கும் நமது குலத்தை காக்க வந்த அளவில்லாப் பெம்மான் அவர் "வேளிர்களின் தலைவன் வேள் உரக்கக் கூறினான்.

 பின்பு அவன் சிவனின் முன்பு  மண்டியிட்டான். அவனைத் தொடர்ந்து அனைத்து வீரர்களும் சிவனின் முன்பு மண்டியிட்டனர்.
-------

 இவ்வாறு பீம்பேட்காவின் போர் முடிவுக்கு வந்தது. நிலம் தூக்கத்தில் இருந்து மீண்டது. நிலத்திற்கான சண்டை முடிவடைந்தது.

 வளத்திற்கான சண்டையே இந்த பூமியில் பல கோடி ஆண்டுகளாக உயிர்களிடையே  இதுவரையிலும் நிகழ்ந்து வந்திருந்தது. அப்படி நிலத்திற்கான போட்டியாக ஆரம்பித்த இந்தப் பெரும் போர், இணக்கத்திற்கான அச்சாரமாக அமைந்தது இந்த நாளில்தான். 

அந்த நாள் வெறும் போரின் முடிவை மட்டும் குறிக்கவில்லை. அது இந்தியாவின் கற்றல் காலத்தின் தொடக்கம். ஆறறிவு உயிரினங்கள் சிந்திக்கத் தொடங்கிய காலத்தின் ஆரம்பம். 

அது, கடவுள்கள் மண்ணில் அவதரித்து, கற்காலத்தைய மனிதர்களை நாகரிகத்திற்கு உயர்த்திய காலம்!

 நமது முன்னோர்களின் அறிவு விழித்தெழத் தொடங்கிய காலம்!

கடவுள்கள் மனிதர்களுடன் கைகோர்த்து நடந்த காலம்!

அது இந்தியாவின் பொற்காலம்.

---------


The Rock Art of the Bhimbetka Area in India - Meenakshi Dubey-Pathak

Friday, November 14, 2025

நந்தியாவருத்தனன் (ஆதியோகி: அத்தியாயம் 19)

இன்னும் சில நாட்களில் போர் துவங்க இருந்தது. பசவண்ணாவின் வீரர்களும், அவரது நட்பு நாட்டின் வீரர்களும்   பீம்பேட்காவிலிருந்து வடக்கே  இரண்டு யோசனை தூரத்திற்கு அப்பால் இருந்த பரந்த சமவெளியில் ஒன்று கூடத் துவங்கினர்.

பீம்பேட்கா, பாறைக் குன்றுகளால் நிறைந்த பகுதி. பாறைக் குன்றுகள் பழமையான காவலர்களைப் போல அங்கே நின்று கொண்டிருந்தன. 


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களின் உயர்வையும் வீழ்ச்சியையும் அந்தப் பாறை குன்றுகள் பார்த்துக் கொண்டிருந்ததற்கு சாட்சியாக பல படங்கள் அங்கே தீட்டப்பட்டுள்ளன. அவற்றின் குகைகளின் சுவற்றில் காலச்சுழலில் மறக்கடிக்கப்பட்ட வேட்டையாடிகளின் வாழ்வும், கனவுகளும், கதைகளும் சித்திரங்களாக  தீட்டப்பட்டுள்ளது.

 அங்கே வாழ்ந்து வந்த சாமானிய மக்கள்  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முதலாக இப்பொழுது வரைக்கும், பல்வேறு காலகட்டங்களில் அந்த நிலத்தில் நிகழ்ந்ததை, தங்கள் வாழ்விடங்களில் சித்திரமாக பதிவு செய்யத் தவறவில்லை.
இங்கே இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் கதையும் அந்த கற்குகைகளின் சுவற்றில்  சித்திரமாக தீட்டப்பட உள்ளது. 

வரலாற்றினால் இந்தக் கதை மறக்கடிக்கப்பட்டாலும், செவி  வழியாகவும், பாடல்கள் வழியாகவும்  மக்கள் மத்தியில் புழங்கிய இந்த புனிதக் கதை, சில நூற்றாண்டுகளுக்கு பின்பு மக்களால் அங்கே சித்திரமாக தீட்டப்பட்டன. அங்கே நிகழ்ந்தவற்றை வடிக்க ஏடுகள் மறந்தாலும், அந்தப் பாறைகள் இந்த புனிதக்  கதையை சாஸ்வதமாக சுமந்து கொண்டிருக்கும். 

 அப்படிப்பட்ட அந்த நிலத்திற்கு அருகே உள்ள சமவெளியில்  கூடாரங்களில் வீரர்கள் முகாமிட்டிருந்தனர்.

 போருக்கான ஆயத்த வேலைகள் அங்கே நடந்து கொண்டிருந்தன. மறையும் சூரியனின் பொன்னொளியானது ஈட்டிகளில் மிளிரியது. கேடயங்கள் புளிய மரத்  தண்டுகளின் மேல் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன, போர் முரசுகள் அமைதியாக காத்திருந்தன. எண்ணெய், வியர்வை மற்றும் பழமையான ஏதோவொரு வாசனையால் காற்று கனமாக இருந்தது.

 கூடாரத்திற்குள் தீபங்கள் ஏற்றப்பட்டன. நெருப்பு மெதுவாக எரிந்து, அசையும் அமைதியற்ற நிழல்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. அந்த நிழல்கள் ஆவிகளைப் போல் நடனமாடின.  விவசாயக் குலங்களின் தலைவர் பசவண்ணா, ஒரு கூடாரத்தினுள் எரியும் தீபத்தின்  முன் அசையாமல் உட்கார்ந்திருந்தார். ஒரு காலத்தில் சால் மரத்தைப் போல் அகலமாகவும்,  நேராகவும் இருந்த அவரது உருவம், இப்போது கூனிக் குறுகி காணப்பட்டது. துக்கமும் கோபமும் ஒரு சேர  அவரைச் சூழ்ந்திருந்தது. ஒரு காலத்தில் மழையை மதிப்பிடவும், மண்ணைப் படிக்கவும்  அலைந்து கொண்டிருந்த அவரது கண்கள், இப்போது எதையும் பார்க்காமல் சூனியத்தை வெறித்தன. அவரது மகனின் மரணம், எந்த அறுவடையாலும் நிரப்ப முடியாத காயத்தை அவருள் விட்டுச் சென்றிருந்தது. 

அவருக்கு எதிரே, அவர்களது மண்ணைச் சேராத ஒரு மனிதன் நின்றுகொண்டிருந்தான். விந்திய மலைக்கு அப்பால்  இருந்து வந்திருந்த ஒரு சேனாதிபதி அவன். அவனது அடையாளங்கள் அங்கு இருப்பவர்களை விட மிகவும் அன்னியமாய் இருந்தன. அவன் அனுபவமிக்க வீரர்களையும் கூட வாய்மூட வைக்கும் ஆகிருதியுடன் இருந்தான்.

“பசவண்ணா... உங்களது சோகத்தின் ஆழத்தை எங்களால் உணர முடிகிறது. உங்களுக்கு நேர்ந்த துயரத்திற்கு அவர்கள் நிச்சயம் பதில் கூறியாக வேண்டும்,” என்று அவன் பசவண்ணாவிடம் கூறினான், அவனது கண்கள் நாகத்தின் கண்களைப்போல் மின்னின. 


அவன்  தனது வாளை உரையிலிருந்து எடுத்து அதன் மேல் விரலை நீவியபடி பேசத் துவங்கினான்," ஆயர்கள் தங்கள் உடல் வலுவின் மேல் உள்ள நம்பிக்கையில் போரிடுகின்றனர். எந்த வலுவும் எங்களுடைய இந்த வெண்கல ஆயுதத்திற்கு ஈடாகாது.

உங்கள் ஆட்கள் எங்களின் இந்த ஆயுதங்களை  பயன்படுத்தும்போது, அவை எதிரிகளின் தோல் கேடயங்களை  வாழைத்தண்டை வெட்டுவது போல் வெட்டும்.”

அவன் கூடாரத்தின் மூலையில் மூடி வைக்கப்பட்டிருந்த ஒரு குவியலை நோக்கி சைகை செய்தான். அவனது வீரர்கள் அந்தக் குவியலின் மேல் போர்த்தப்பட்டிருந்த தோலால் ஆன போர்வையை இழுத்தனர்.

கீழே, புதிதாக வார்க்கப்பட்ட வெண்கல ஆயுதங்கள் மின்னின. குறுவாள்கள், பிறை-கத்தி வாள்கள், கோடாரிகள் மற்றும் கூரிய  முனைகள் கொண்ட அம்புகள் போன்றவை அங்கே  இருந்தன. தெற்கே இருந்த மக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த கல் ஆயுதங்களுக்கு  மாறாக, இவை விசித்திரமான பொன்னிற ஒளியுடன்  மின்னின.

“இவை மனித கைவினைஞர்களால் உருவாக்கப்படவில்லை,” சேனாதிபதி கூறினான். “துவாஷ்ட்ரியின் பிள்ளைகளால், தெய்வீக கைவினைஞரால். ஒவ்வொரு கத்தியும் புனித எண்ணெயில் தணிக்கப்பட்டு, விண்ணியல் தாளத்தில் செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை இவை. இவற்றின் விளிம்புகள் மின்னலின் ஒளியை தாங்குகின்றன. இவற்றைக் கொண்டு தாக்கினால் சதைத் துண்டுகள் எலும்பிலிருந்து எளிதில் பிரித்து எடுக்கப்பட்டு விடும். உங்கள் எதிரிகள் தாக்குவது எதுவென்று அறிவதற்குள்  மரணித்து விடுவார்கள்.”

" இந்த அம்புகள் ஒவ்வொன்றும் மிகவும் கூரானவை. காற்றைக் கிழித்துக்கொண்டு வெகுதூரம் பறக்க வல்லவை. இவை எளிதாக பீரப்பாவின்  இருதயத்தை ஊடுருவி விடும். " என்று அவன் கூறினான்.  
பசவண்ணா முன்னேறி, ஒரு வாளை  கையில் ஏந்தி காற்றில் வெட்டுவது போல் வீசி பார்த்தார். அது சரியாக சமநிலையில் இருந்தது. புல்லைப் போல் இலேசாக இருந்தது. ஆனாலும் அதன் வலுவில் எந்தக் குறையும் இல்லை.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சேனாதிபதி பசவண்ணாவை நோக்கி வந்தான்.

அவன் எதுவும் கூறவில்லை, 
அவன் முன்னேறி, ஒரு சிறிய குறு வாளை வெளியெடுத்தான். அதை பசவண்ணாவிடம் நீட்டினான். நெருப்பின் ஒளியில் அதன் விளிம்பு மென்மையாக மின்னியது.

 பின்னர் அவன் குரலைத் தாழ்த்தினான்.“இந்தக் கத்தி ஒரு கொடிய விஷத்தைத் தாங்குகிறது. ஒரே ஒரு கீறல் போதும்...
 நுரையீரல் மூச்சை மறந்துவிடும். இது பீரப்பாவிற்கான சிறப்பு பரிசு.”

பசவண்ணா அந்தக் கத்தியை நீண்ட நேரம் பார்த்தார். பின்னர் மெதுவாக சேனாதிபதியை நோக்கி அதைத் தள்ளினார்.

“ இது எனக்கு அவசியம் இல்லை ,” என்று அவர் கூறினார், அவரது குரல் உலர்ந்து இருந்தது. “என் மகன் ஒரு வீரனைப் போல்  போரில் வீழ்ந்தான். நான் பீரப்பாவை அதே வழியில் எதிர்கொள்வேன்."

சேனாதிபதி தனது புருவத்தை உயர்த்தினான். ஒரு கணம் அவன் அசையாமல் இருந்தான். பின்னர் அவன் உதட்டில் இருந்து மெல்லிய  புன்னகை ஒன்று வெளிப்பட்டது .

“நன்று,” என்று அவன் உரைத்தான். பின்னர் கத்தியை உறைக்குள் திருப்பி வைத்தான். “உங்கள் போர்,உங்கள் நெறி. ஆனால்  எங்கள் ஆயுதங்கள் மட்டுமல்ல, நாங்களும் உங்களுக்காக இந்த போரில் துணை நிற்கிறோம் என்பதை மறந்து விட வேண்டாம். நாங்கள் வழங்கியவற்றுடன், எங்கள் வீரர்களும் உங்களது அழைப்புக்காக மலைக்கு அப்பால் காத்துக் கொண்டு இருப்போம்.

எங்கள் குதிரைப் படையின் வேகத்தை  இந்த நிலத்தை சேர்ந்த எவரும் இதுவரை கண்டதில்லை.  நிலத்தில் நின்று கொண்டிருந்து போர் புரியும் வழக்கம் கொண்டிருக்கும் அவர்களால், ஒரு கணம் கூட குதிரையின் வேகத்தோடு வரும் வாள் வீச்சை எதிர்கொள்ள முடியாது."

சேனாதிபதி மேலும் கூறினான். “உங்கள் பழிவாங்கல் விரைவாக இருக்கும். உங்களுக்கு நாங்கள் தேவைப்பட மாட்டோம் என்று நம்புகிறேன். ” என்று கூறிவிட்டு அவன் கூடாரத்தை விட்டு வெளியேறினான்.

அவன் வெளியேறுவதற்கு முன் ஒரு முறை பசவண்ணாவை நோக்கித் திரும்பினான். “பீரப்பா இன்னும் இது சமமான போர் என்று நம்புகிறான். அவனை நம்ப விடுங்கள்.” என்று கூறினான்.

நெருப்பொளியின் எல்லைக்கு அப்பால், ஒரு உருவம் அசைந்தது. பசவண்ணாவின் மகள் காமரதி, ஒரு தாழ்ந்த புதருக்குப் பின்னால் ஒளிந்து நின்று இதை கேட்டுக் கொண்டிருந்தாள், அவளது இதயத்துடிப்பு அதிகரித்தது . 

அவள் அமைதியாக யாரும் அறியா வண்ணம்  தனது கூடாரத்தை நோக்கி ஓடினாள்,  அங்கு அவளது பணிப்பெண் அவளுக்காக காத்திருந்தாள், அவளது வெளுத்த முகத்தைக் கண்டு பணிப்பெண்  திடுக்கிட்டாள்.  

“என்ன நடந்தது,?”  என்று பணிப்பெண் கேட்டாள்.

“என் தந்தை தவறாக வழிநடத்தப்படுகிறார்,” என காமரதி கூறினாள். “இது போர் இல்லை. இது ஒரு பொறி.”  

பணிப்பெண் கவலையுடன் பார்த்தாள்.

“அவர்கள் பல்வேறு தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு போரிட திட்டமிடுகின்றனர். மேலும் தக்ஷனின்  ஆயுதமேந்திய குதிரைப் படைகள், யாரும் எதிர்பாரா சமயம் திடீரென்று தாக்குதலை மேற்கொள்ள இருக்கிறது.. பீரப்பாவுக்கு இது தெரியாது. இது நியாயமான போர் என்று அவர் நினைக்கின்றார். இரு பக்கங்களும் சமமாக உள்ளன என்று அவர் நம்புகின்றார். அவர்  போர் என்று நினைத்து  சிங்கத்தின் வாய்க்குள் நடக்கிறார்.”  

பணிப்பெண் தலையசைத்தாள். “ஆனால் நாம் என்ன செய்ய முடியும்? தற்போது அவரால் உதவிக்கு  மற்றொரு படையை சேகரிக்க முடியாது. இப்பொழுது அதற்கு அவகாசமும் இல்லை.”  

காமரதியின் கண்கள் சோகத்தை வெளிப்படுத்தின “ மாயோனை வழிபடும் அனர்தாவின் வேளிர்களும் யதுக்களும் நீதியின் பக்கம் நிற்பவர்கள். ”  

அவள் உறுதியாக கூறினாள், “அவர்கள் நிச்சயமாக அயல்நாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நிற்பார்கள். போர் துவங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. நாம் சரியான நேரத்தில் செய்தி அனுப்பினால், அவர்கள் பீரப்பாவிற்கு  ஆதரவாக வரக்கூடும்.”  

 “நீங்கள் எப்படி அவர்களுக்கு செய்தி அனுப்புவீர்கள்?”  என்று  பணிப்பெண் கேட்டாள்.

“வேளிர்களுக்கு செய்தி அனுப்ப விரைவாக பறக்கும் புறாக்களைப் பயன்படுத்துவோம். ஆனால் பீரப்பாவுக்கு பறை அறைந்து செய்தி அனுப்பலாம். நீ பீரப்பாவின் குலத்தை சேர்ந்தவள் தானே? உனக்கு பறை மூலம் செய்தி அனுப்பத் தெரியுமல்லவா?” என்றாள் காமரதி .

 “பறையின் மூலம் செய்து அனுப்பினால் விரைவாக  செய்தி சென்று சேரும்.”  
“ஆனால் அந்தச் செய்தி மற்றவர்களால் கேட்கப்படலாம்,” பணிப்பெண் எச்சரித்தாள்.  

காமரதி தலையசைத்தாள். “ஆம். நம்மைச் சுற்றி சூழ்ச்சி வலை பின்னப்பட்ட வருகிறது, தவறான காதுகள் இந்தச் செய்தியை கேட்க கூடும். எனவே புறாக்களை மட்டுமே அனுப்புவது உசிதமாகும்.”  

புறாக்களின் காலில் செய்திகள் கட்டப்பட்டன. 

காமரதியின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்த பணிப்பெண் அவளுக்கு  ஆறுதல் கூறும் விதமாக ," கவலை வேண்டாம் இளவரசி, பீரப்பாவிற்கு ஒன்றும் ஆகாது. பீரப்பாவை தெய்வீக சக்தி ஒன்று காப்பதாக எனது அன்னை கூறினார்."

“தெய்வீக சக்தி?”  

“ஒரு விசித்திரமான தெய்வீக உருவம் அவரைக் காக்கிறது. அந்த உருவம் பேசுவது குறைவு, ஆனால் மலைபோல் நிற்கிறவர் அவர். 
அவரை... மல்லண்ணா என்று எங்கள் மக்கள் அழைக்கிறார்கள்.” 

காமரதியின் முகம் பிரகாசமடைந்தது,
" அவரே  இந்தப் போர் சூழலில் நம்மைக் காக்க இருக்கும் நந்தியாவருத்தனன். எதிரிகளின் சூழ்ச்சியை பற்றிய செய்தி அவரையும் சென்று சேர வேண்டும்.”  

  "கிழக்கில் இருக்கும் முல்லைவனத்தில் அவர் தியானத்தில் இருப்பதாக எனது அன்னை கூறினார். நான் நேரில் சென்று அவரிடம் தகவல் தெரிவிக்கிறேன் . " என்றாள் பணிப்பெண்.

அவள் நிலவொளியில் வெளியேறினாள். இரண்டு வெள்ளைப் புறாக்கள் அவளது மணிக்கட்டில் பறந்து வந்தன. நடுங்கும் கைகளால், அவள் புறாக்களின் காலில் செய்திகளைக் கட்டினாள். 

ஒன்று வேளிர்களுக்கு, ஒன்று பீரபாவிற்கு.  

அவை இரவு வானத்தில் காமரதியின் பணிப்பெண்ணால் பறக்க விடப்பட்டன .  இரண்டு வெள்ளை புறாக்களும் வானின் இருளை கிழித்துக்கொண்டு  இறக்கைகள் படபடக்க பறந்து சென்றன. 

ஆனால் வேறு யாரோ புறாக்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்வதை  பார்த்தனர்.  

தொலைவில் உள்ள ஒரு  கூடத்தில், ஒரு மனிதன் நிலவொளியில் நின்று கொண்டிருந்தான். அவனருகில் இருந்த அவனது பணியாள் ஒருவன், பயிற்சி பெற்ற இராசாளி ஒன்றை வானில் பறக்க விட்டான். அது உயரமாகவும் வேகமாகவும் பறந்து,  ஒரு புறாவை அதன் கூர்மையான கால்களில் பிடித்துக் கொண்டு வந்து  அவனிடம் சேர்ந்தது.

எதிரி அமைதியாக புறாவின் காலில் கட்டப்பட்டிருந்த செய்தி மடலைப் படித்தான். அவனது உதடுகள் ஒரு புன்னகையை வெளிப்படுத்தியது.
“ காமரதி பீரப்பாவை  நேசிக்கிறாள்,” என்று அவன் கூறினான்.

அவன் தன் ஆட்களை நோக்கி திரும்பினான். “அவள் நமது முக்கிய ஆயுதம். பசவண்ணாவுக்கும் பீரப்பாவுக்கும் எதிராக நாம் பயன்படுத்தக்கூடிய பகடைக்காய்.”  

மற்றொருவன் நெருங்கினான். “நீங்கள் என்ன கட்டளையிடுகிறீர்கள்?”  

“இரு நாட்களில் போர் துவங்கவிருக்கிறது, இந்தப் பதட்டமான சூழலில் யாருக்கும் தெரியாமல் நாம்  அவளை அமைதியாக சிறை பிடிக்க வேண்டும். போர் வெறித்தனமாக இருக்கட்டும். எந்தப் பக்கம் வெற்றி பெறுகிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இறுதியில்... வெற்றி நம்முடையதாக இருக்க வேண்டும். நமது அந்த வெற்றிக்கு காமரதி  மிகவும் உதவியாக இருப்பாள் .”

------
Pictures courtesy

1. Rock Shelters of Bhimbetka
Continuity through Antiquity, Art & Environment

2. http://www.dsource.in/resource/bhimbetka

Saturday, November 8, 2025

கண்டோபா (ஆதியோகி: அத்தியாயம் 18)

 வெப்பமிகு  உலர்ந்த காற்றினால் தக்காண பீடபூமி நெருப்பு உலையென  எரிந்து கொண்டிருந்தது.  சிவனால் முன்பு எரிக்கப்பட்ட  சாம்பல் குவியல்கள், இப்போது தங்கள் வெப்பத்தை மெல்லிதாக  வெளியிட்டன.  சிவனது தோல், வெப்ப மிகுதியால் வாடிக் கொண்டிருந்தது. அவரது தோல் காய்ச்சலால் எரிந்தது. ஒரு காலத்தில் பல்வேறு முயற்சிகளால் கட்டுப்படுத்தப்பட்ட அவரின்  அழலானது இப்போது ஆவேசம் கொண்டு  திரும்பியது. பித்தத்தின் பற்றெரிவால் உந்தப்பட்ட அவரது உடல், கபத்தின் குளிர்ந்த தீண்டலுக்காக ஏங்கியது.

 மனிதர்களை விட்டு விலகி இருக்க நினைத்த அவர்; திரும்பவும் மனிதர்களோடு உறவாட வேண்டிய நிர்பந்தத்தில் சிக்கிக்கொண்டார். ஆனால் அதை தடை செய்யும் விதமாக, வில்சனின் நோய்  அவரது மனநிலையை ஆட்டம் கொள்ள வைத்துக் கொண்டிருந்தது. தவறும் மனநிலையோடு அவர் மனிதர்கள் மத்தியில் இருப்பதை விரும்பவில்லை. எனவே அவரது நரம்புப் பிரச்சனைகளை தணிப்பதற்காக மருந்தினை உட்கொள்ள எண்ணம் கொண்டார். ஆனால் அந்த மருந்தை உட்கொள்வதினால் ஏற்படும்  வலிமிகு  உயிர்நாடி எழுச்சியையும் அவரது மனம் வேதனையோடு நினைவு கூறத் தவறவில்லை.

 அவர்  பெல்லாரியில் இரும்பு ஆயுதங்களை செய்த பொழுது தாரம்,கௌரி பாசாணம் மற்றும் வீரம் முதலிய பாஷாணங்களையும் எடுத்தார். இந்த பாஷாணங்களையும் வேறு சில மூலிகைகளையும் பயன்படுத்தி தனது நரம்பு சம்பந்தமான அறிகுறிகளையும் தோல் சம்பந்தமான அறிகுறிகளையும் மட்டுப்படுத்த முயன்று  கொண்டிருந்தார். தாரம் எனப்படும் அரிதாரம் அவருக்கு மிகவும் சாந்தத்தை அளித்தது. அது ஹரிதாளம், ஹரி பீஜம் என்று வடமொழியில்  அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் பக்க விளைவுகளை பற்றி சிவன் அறிந்தே இருந்தார்.  ஹரி பீஜம் சிவனின் பாலுணர்வு சம்பந்தப்பட்டது என்று பண்டைய ஆயுர்வேத ஏடுகள் தெளிவாக குறிப்பிடுகின்றன. இந்த அரிதாரம்  அவர் கண்டறிந்த எண்ணற்ற மருந்துகளில் முக்கியமான ஒன்று.

இந்த ஹரி தாளத்தைக் கொண்டு தான் அவர் பரதத்தை உயிர்த்தெழ வைத்தார். 

பரதம் (Pārada, சமஸ்கிருதத்தில்: पारदः) = "பர" (அப்பால்) + "தா" ( தருவது). பரதம் என்றால் விடுதலை தருவது, மோட்சத்தை அளிப்பது எனும் பொருள் தரும். 

 பரதம் எனும் சொல் ஒரு உலோகத்தைக் குறிக்கும். அந்த சொல் முக்தியையும் குறிக்கும். அந்த உலோகம் சிவ வீர்யம், சிவ ரேதஸ், சிவ தேஜஸ் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. 

 சிவன் தரும் பரதம் ( பாதரச வகை உலோகம்) உடலைத் தாண்டி ஆன்மாவை மோட்சத்திற்கு ஏற்றும் என்பது நம்பிக்கை.  அதனால்தான் சிவனை ரசேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். சித்தர்களைப் பொறுத்தமட்டில் பரதமே அமிர்தம் ஆகும். அதுவே அமரத்துவத்தை அளிக்க வல்லது என்று ரச சாஸ்திர வரிகள் கூறுகின்றன.

पारदः परदो ज्ञेयो यतः संसारपारदः

ஆனால் சிவன் இன்னும் பரதத்தை கண்டெடுக்கவில்லை. அது இமயத்தின் ஆழத்தில்  சிவனின் கரங்களால் தீண்டப்படுவதற்காக  காத்துக் கிடக்கின்றது.

 அதனை கண்டெடுப்பதற்கு முன் அவர் பல சோதனைகளைத் தாண்ட வேண்டி இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சோதனைக் களத்தில் தான் அவர் நின்று கொண்டிருக்கிறார். 

 இந்த சோதனைக்களம் கடும்  வெயிலினால் வாட்டப்பட்டுக் கொண்டிருந்தது. நிலம் வறண்ட புழுதிக்  காற்றால் மூடப்பட்டிருந்தது.  அங்கிருந்த செடிகள் அனைத்தும் வாடி இருந்தன. வறண்ட காற்று குடக்குப் பக்கமாக வீசிக் கொண்டிருந்தது.

குடக்குப் பக்கமாக வீசிக் கொண்டிருந்த வறண்ட காற்று மெல்ல மெல்ல திசை மாறத் துவங்கியது. பின்னர் மெல்லிய தென்றல் காற்று  அவரது மேனியை தொட்டது. சட்டென்று மேனியில் ஒரு சிலிர்ப்பு... அவரது அழல் தணியத் தொடங்கியது.

 அந்தக் காற்றை பின் தொடர்ந்து  தட்டான்கள் கூட்டம் கூட்டமாக தரையை ஒட்டி பறக்க ஆரம்பித்தன. மாயோனின்  நிறத்தைக் கொண்ட கொண்டல் மேகங்கள் திரண்டு  எழுந்து வானத்தை வியாபித்தன. அமுர் வல்லூறுகள் அங்கே வட்டமிட ஆரம்பித்தன. 

விசிறித்தொண்டை ஓணான் ஒன்று வேட்டையாடிகளைப் பற்றிய பயம் ஏதும் இன்றி  தைரியமாக சமவெளிக்கு வந்தது. அது வல்லூறுகளை லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. அது தனது நீல நிறத் தொண்டையை விசிறி போல விரிக்க ஆரம்பித்தது. அதன் ஒளிரும் நீலத் தொண்டை சிவனின் நீல மிடற்றைப் போல்  மின்னியது .   

 அந்த விசிறியால் மழையையும் தனது துணையையும்  அது அழைக்க ஆரம்பித்தது.

தொலைவில், பனங்காடைகள்  காற்றில் சுழன்றன, அவற்றின் நீலமணி இறக்கைகள் கருமேகம் சூழ் வானத்திற்கு நடுவே அழகாக மின்னின.

 நீலக்கழுத்தை கொண்டிருந்த மயில்கள் மழையின் வரவை அறிவிக்கும் வண்ணம் அகவின.

 இவ்வுயிரினங்களின் அழைப்பை ஏற்று, மலடாகி இருந்த மண்ணை உயிர்ப்பிக்கும் விதமாக, மேகத்தின் ஸ்கலிதமென, மழைநீர் விண்ணிலிருந்து இறங்கி நிலத்தை ஆலிங்கனம் செய்தது.

 மழைத்துளிகள் நிலத்தைத் தொட்ட  மாத்திரத்தில் பூமியின் வெப்பத்தால் ஆவியாகியது. பின்னர் மெல்ல மெல்ல வெப்பம் தணியத் தொடங்கியது. மயக்கும் மண்வாசனை காற்றை அடர்த்தியாக்கியது. 

 வெப்பத்தில் எரிந்து கொண்டிருந்த சிவனின் மணிபூரகம் சாந்தமடைந்தது. சிவனது அழல் தணியத் தொடங்கியது. இந்த மோனநிலையால் உந்தப்பட்ட சிவன், தனது இடது காலை சம பாதமாகவும், வலது காலை வளைத்தும், வலது கையை ஹம்ஸ பட்சமாகவும், இடது கையைத் தொங்கவிட்டும், மாறிமாறி ஆடத் துவங்கினார். அந்த ஆனந்த நடனத்தில் காற்றும் மழையும் இணைந்து கொண்டன. 
 இது சிவன் தோற்றுவித்த 108 சிவதாண்டவ  கரணங்களில் ஒருவகை. 

 இதைக் கண்ட வரகுக் கோழி  ஒன்று   கூக்குரலிட்டுக் குதித்து, அதுவும் களியாட்டம் புரிய ஆரம்பித்தது.

Source: https://roundglasssustain.com
மழையானது  வேகமெடுக்கத் தொடங்கியது. மழைத்துளிகள் சிவனின் மேனியில் பட்டுச் சிதறின.
நிலம் என்னும் இயக்கமற்றிருந்த சிவம், இயக்க சக்தியான பொழுதினால் அரவணைக்கப்பட்டது .

 நிலம் அந்த நீரை உள்வாங்கியது.

 நிலம் உயிர் பெற்றது. புற்கள் முளைத்தன, மரங்கள் மலர்ந்தன, காட்டுத் தினைகள் உயிர்பெற்றன.  

புற்றில் இருந்து ஈசல்கள் கிளம்பின. அவை வதந்திகளை விட வேகமாக வனம் முழுவதும் பரவின. அவற்றை பின் தொடர்ந்து நீல நிறத் தொண்டை ஓணான்கள் படை எடுத்தன. ஓணான்களை நாகங்களும் பனங்காடைகளும் வேட்டையாடத் துவங்கின.  

மழை என்பது ஜனனத்திற்கான நேரம், புதிய உலகம் பிறக்கும் சமயம். ஆனால் பழையன கழிதலும் இங்கே நடந்து கொண்டிருந்தது. ஆற்றலில் குறைவான பழைய இரை விலங்குகளும் சரி, வயதான பழைய வேட்டையாடிகளும் சரி... இந்த போட்டி மிகு வனத்தில் உயிர்பிழைத்தல் கடினம். 
புதியவர்களுக்கு வழி விடுதலே வலுமிகு சந்ததிகள் வாழ வழிவகுக்கும். 

 இந்த கோட்பாட்டை உரக்க அறிவிக்கும் வண்ணம் கானமயில் இறக்கைகளை விரித்து நடனமாடியது. கருநெஞ்சுக்காடை மழையில் பாடல் இசைத்தது. வனம் உயிர் கொண்டது. மரங்கள் புதிய பசும் இலைகளை துளிர்க்கச் செய்தன.

 மான்கள் அந்த வனத்திற்கு திரும்பின. அவைகள் தங்கள் முன்னங்கால்களை மேலே உயர்த்தியபடி  இலைகளை உண்ணத் தொடங்கின. புதியதாக  முளைத்த பசுமையான இளம் இலைகள் மேலே இருக்க, கிளைகளின் கீழே தொங்கிக் கொண்டிருந்த  வயதான பழைய இலைகளை மான்கள் உண்டன.

சந்ததிப் பெருக்கம் என்பது ஒரு ஆடம்பரமான செயல். அந்த ஆடம்பரத்தை நிகழ்த்த, உயிரினங்கள் தங்கள் உடல் ஆற்றலை நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கும். என்னதான்  ஆடம்பரமாயினும் அது ஒரு அத்தியாவசியமான செயல். வனம் வளம் கொண்டிருக்கும் பொழுது தான் அந்த ஆடம்பரத்தை உயிரினங்கள் நிகழ்த்தத் துணியும்.  

 இந்த வனத்தைப் பொருத்தமட்டில் இந்த சமயம் தான் அந்த ஆடம்பரத்தை நிகழ்த்த சரியான தருணம் என்பதை அனைத்து விலங்குகளும் அறியும். எனவே இணை சேர்வதற்கு அவை ஆயத்தமாயின.

 ஆனால் இணை கூடுவதற்கான வாய்ப்பு எல்லா ஆண்களுக்கும் கிடைப்பதில்லை. இணை சேருவதற்கு முன் ஆண்கள் தங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டி இருந்தது. 

 தங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டி, இரண்டு இரலைகள் ஒன்றுக்கு ஒன்று மோதத் தொடங்கின. இது பெண்ணுக்கான போட்டி. 
 வனத்தைப் பொறுத்த மட்டில், பிரச்சனைகளுக்கு வன்முறையால் மட்டுமே தீர்வு காணப்படும். வன விலங்குகளுக்கு பிரச்சனைகளை பேசித் தீர்க்கவோ, மாற்று வழிகளை யோசிக்கவோ  சிந்தனை ஆற்றல் என்பது இல்லை.

 இவை அனைத்தையும் கண்ணுற்ற  சிவன் தனது நடனத்தை நிறுத்திவிட்டு  பெய்யும் மழையில் தியானத்தில் ஆழ்ந்தார்.  மழைத்துளிகள் சிவனின் சிரசைத் தீண்டின. சிவனின் நெற்றிக்கண் அதிர்வுகளை  வெளிப்படுத்த துவங்கியது. வன உயிர்கள் அனைத்தும்  சிவனைச் சூழ்ந்தன.

 அந்த அமைதியை குலைப்பது போல் சாம்பல் நிற ஓநாய் கூட்டம் ஒன்று அங்கே வந்தது. 
picture by Himansu gupta

 அதைக் கண்ட  மான்கள் அனைத்தும் சிதறி ஓடின. மரணத் தருவாயில் இருக்கும் ஓடவியலா  ஒரு வயதான மானை அவைகள் குறி வைத்தன .
 அதிவேகமாக ஓடிய அந்த மான், இப்போது அதிக வயதினால் மந்தமாகிவிட்டது. அது கூட்டத்திலிருந்து சற்றே பிரிந்து நின்றது . 

வேட்டை புத்திசாலித்தனமாகத் தொடங்கியது. இரண்டு ஓநாய்கள் வயதான அந்த மானுக்கு  தென்படாதவாறு பிரிந்து சென்றன.  அந்த பரந்த வெளியில் மானை காணாதது போல் அதன் பார்வைக்கு எட்டும் தூரத்தில் ஒரே ஒரு ஓநாய் தனித்து  நடக்கத் தொடங்கியது 

 வயதான மான் அந்த ஓநாயை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. ஓநாயானது சற்று அசைந்தாலும் இது ஓடுவதற்கு தயாராக  தனது வலுவை திரட்டி கொண்டு நின்றது. இதற்கிடையில் மற்றொரு ஓநாய் புல்வெளியின் மறைவில் மெதுவாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து வயதான மானை நெருங்கிக் கொண்டிருந்தது 

இப்போது இரண்டாவது ஓநாய் சரியான இடத்துக்கு வந்தவுடன், மானின் முன் நின்ற ஓநாய்  சிறிது முன்னேறியது. மான் அபாயத்தை உணர்ந்து ஓட முயன்றது, ஆனால்  நிலைமை கை மீறிப் போய் இருந்தது. இரண்டாவது ஓநாய் பாய்ந்து வந்து, சில வினாடிகளில் மானை அடைந்தது . அது மானின் கண்களை நேருக்கு நேர் சந்தித்த பொழுது, வயதான அந்தமான்  ஒரு அறிதுயில் நிலைக்குச் சென்றது. 

 பின்பு ஒரு இறுதிப் பாய்ச்சல்... ஓநாய் மானை நெருங்கியது... அதன் கழுத்தை ஆழமாக கவ்வியது. அறிதுயில் நிலையிலிருந்து மானானது  வலிக்கான எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல்  உயிர் நீத்தது.

இது இயற்கையின் விதி. ஓநாய்கள் முதியதும் பலவீனமுமான மான்களை வேட்டையாடுவதால், கூட்டத்தில் வலிமையான மான்கள் மட்டுமே வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால் கூட்டம் ஆரோக்கியமாகவும், புல்வெளி சமநிலையுடனும் இருக்க வைக்கப்படுகிறது.

சூரியன் மறைந்து, வானம் மங்கும் போது, ஓநாய்கள் அமைதியாக தங்கள் வேட்டையை உண்டன. வளங்கள் பெருகும் இந்த மழை பொழுதே அவைகளும் இனப்பெருக்கம் செய்வதற்கான சரியான சமயம். இவ்வண்ணம் ஐவகை நிலப்பரப்பிலும் அந்த நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற வகையில் உயிரினங்கள் நிலத்தோடும் பொழுதோடும் பொருந்தி, சந்ததி சந்ததிகளாக வாழ்ந்து வருகின்றன.

சிவனுக்கு இந்த இயற்கையின் பரிபாஷைகள் புரியத் துவங்கின.

 வறண்ட நிலம், மேகங்கள், குளம்புகள், வேட்டையாடிகள் போன்றவற்றின்  ஒத்திசைவில் அவர் ஒரு புனித தாளத்தைக் கண்டார்.

 இந்த ஒத்திசைவில் தக்காண பீடபூமியின் ஆயர்களும் விவசாயிகளும் இணைந்து கொள்ள இடம் இருக்கிறது என்ற உண்மை அவருக்குப் புரிய வந்தது.

 மழைக்கால மாதங்களில் தங்கள் கிராமங்களில் விவசாயம் செய்யும் ஆயர்கள்,  மழைக்கு முன் மேற்கு நோக்கி கர்நாடகாவின் மழை பெய்யும் பள்ளத்தாக்குகளுக்கு அல்லது மழைக்கு பின் கிழக்கு நோக்கி நல்லமலை காடுகளுக்கு தங்கள் மந்தைகளை வழிநடத்தலாம்.  

அவர்களின் பாதையில், அவர்கள் தங்கள் மந்தையின் வளமான எருவை விட்டுச் செல்வார்கள். மந்தைகளும், பயிரிடப்படாத நிலத்தில் முளைத்திருக்கும் களைகளை உண்ணலாம். அவர்களின் விலங்குகள் திறந்த நிலங்களில் மேய்ந்து, பயிரிடப்படாத வயல்களில் தங்கும் போது, மழையால் கரைந்த மேல் மண்ணை இந்த புனித எரு பலப்படுத்தும் .  
விவசாயிகள், பதிலுக்கு, தானியங்களையும் தங்குமிடத்தையும் வழங்குவார்கள்.

பெல்லாரி நிலம் மழையில் பசுமையாக மாறும்போது, மந்தைகள் வடக்கு நோக்கி மஹாராஷ்டிராவின் திறந்த சமவெளிகளுக்கு அல்லது கிழக்கு நோக்கி மராத்வாடாவில் உள்ள லத்தூர் மற்றும் பீட் மாவட்டங்களுக்கு திரும்பலாம்.  இந்த இடம்பெயர்வு, இந்த புனித பாதை ஆயர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இணக்கத்தை  உருவாக்கும் .

 இந்த இணக்கத்தில் அனைத்து உயிர்களும்  பங்கு பெறும், பலனும் பெறும், 

 மண், மழை, பசி, விலங்கு ஆகியவை தனித்தனி சக்திகள் இல்லை, ஒரு பரந்த துணியில் நெய்யப்பட்ட நூல்கள் என்பதை சிவன் கண்டுகொண்டார்.

சாம்பல் நிற ஓநாய் கூட, மந்தைகளைப் பின்தொடர்ந்து, அதன் தெய்வீக பங்கை வகிக்கும்.  அது எதிரி இல்லை, ஆனால் சமநிலையின் காவலன்.

 இந்த மழையால் அவரது உடல் மட்டுமல்ல, அலை மோதிக் கொண்டிருந்த உள்ளமும் அமைதி கொண்டது 

அவர் இந்தக் கருத்தை கடவுளாக அல்லாமல், இயற்கையுடன் உரையாடிய ஒருவனாக முன்னெடுப்பார். ஆனால் அவரை பின்பற்றியவர்களால்... அவரால் பயனடைந்தவர்களால்... அவர் கடவுளாக தொழப்படுவார்.

தங்கர், குருமா, கொல்லா, குருபா போன்ற பாரம்பரிய மேய்ப்பர் சமூகங்கள், சிவன் காட்டிய வழியினை பின்பற்றி,  ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்வாங்கு வாழ்வார்கள்.ஓநாய்கள் ஆடுகளைத் தாக்கினாலும், அவை மந்தையைப் பாதுகாக்க உதவுவதாகவும், இழந்த ஆட்டுக்குட்டிகள் கடவுளுக்கு பலியாகக் கருதப்படுவதாகவும் மேய்ப்பர்கள் நம்புவார்கள். அந்த இறைவனே மண்ணில் இறங்கி வந்து மல்லப்பாவாகவும் கண்டோபாவாகவும் தங்களுடனே வாழ்ந்து, தங்களுக்கு இந்தப் பணியை மேற்கொள்ள கேட்டுக் கொண்டதாக நம்புவார்கள். சந்ததி சந்ததியாக தங்கள் மக்களுக்கு கண்டோபாவின் இந்த புனிதக் கதையை கூறுவார்கள்.

 ஆனாலும் இந்த இணக்கத்திற்கு  பசவண்ணா உடன்படவில்லை.

 ஆயர்கள் இணக்கத்தை வேண்டினாலும் பசவண்ணாவின் மனதில் வஞ்சம் எரிந்து கொண்டிருந்தது  

விவசாயக் குலத்தின் தலைவன், தன் கொல்லப்பட்ட மகனுக்காக துக்கத்தில் குருடாகி இருந்தான், அவன் இணக்கத்தைப் பற்றி செவிகொடுத்து கேட்கத் தயாராக இருக்கவில்லை.
அவன் இரத்தத்தை வேண்டினான்... பழிவாங்கலை வேண்டினான், 

சிவன் மட்டும் போரைத் தடுக்க விரும்பியவராக இல்லை.
மற்றொரு ஆன்மாவும் போரைத் தவிர்த்து விட முயற்சிகளை மேற்கொண்டது.
அந்த ஆன்மாவின் பெயர் காமரதி.  விவசாயத் தலைவனின் மகள் .

 அவள் பீரப்பாவின் மீது காதல் கொண்டிருந்தாள்.

பீரப்பாவின் மீதான காமரதியின் காதல் கிளர்ச்சியால் பிறக்கவில்லை, அங்கீகாரத்தால் பிறந்தது. அவனிடம் அவள் தன் சகோதரனுக்கு ஒரு காலத்தில் இருந்த அதே நெருப்பைக் கண்டாள். பீரப்பாவும் அவளிடம் தனது தாயின் வாஞ்சையைக் கண்டான்.

 ஏற்கனவே அவள் தன் சகோதரனை இழந்திருந்தாள். இப்போது, போர் அவளது தந்தையையோ… அல்லது அவள் நேசித்த பீரப்பாவையோ,
அல்லது இருவரையுமோ பறிக்கக் காத்திருந்தது.

போரை நோக்கிய ஒவ்வொரு அடியும் நிலத்தின் அழிவை மட்டுமல்ல, தனது காதலின் அழிவையும் நோக்கிய பாதை என்பதை அவள் அறிவாள்.  

வன்முறை என்பது சிந்திக்கவியலா உயிரினங்களால், தமக்குள் எழும் பிணக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றது. 

 ஒரு தனி மனிதனோ அல்லது சமுதாயமோ பிரச்சனைகளுக்கு தீர்வாக வன்முறையை கையில் எடுப்பது என்பது, 
 மனிதன் எனும்  சிந்திக்கும் விலங்கு  சிந்தனையை மேற்கொள்ளவில்லை என்பதற்கான அறிகுறி. 

 போர் என்பது ஆறாம் அறிவு கொண்ட உயிரினங்களுக்கு தேவையற்ற ஒன்று.

 போர் என்னும் கொடுஞ்செயல், வளத்தை வழங்கும்  நிலத்தை சாம்பலாக்கும். அது வாழ்வாதாரங்களை வேரறுக்கும்.

கோபத்தில் விதைக்கப்பட்ட  விதைகள், துக்கம் எனும் விளைச்சலை மட்டுமே வழங்கும்.

----








Reference: NITYA SAMBAMURTHY GHOTGE and SAGARI R. RAMDAS. Black sheep and gray wolves. 

Friday, October 31, 2025

பூதப்படையோன் (ஆதியோகி: அத்தியாயம் 17)

ஒவ்வொரு உயிரினமும் இரு ஆதி இச்சைகளை கொண்டிருக்கிறது. 

- ஒன்று, உயிர் பிழைத்தலுக்கான உந்துதல்.
- இரண்டு, தன் இரத்தத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கான  பாலுணர்வு.

 இந்த இச்சைகளின் தூண்டுதலால்  உயிர் பிழைக்க வேண்டியும், சந்ததியை பெருக்க வேண்டியும், உண்ணுதல், நீர் அருந்துதல், காதல் புரிதல், இணைதல், ஓய்வு எடுத்தல் போன்ற செயல்களை ஒவ்வொரு உயிரியும் சந்ததி சந்ததியாக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றது. இது ஒரு முடிவே இல்லாத சுழல். இந்தச் சுழலில் இருந்து விடுபடுவதே மனிதப்பிறப்பின் நோக்கம் என்று அனைத்து மதங்களும் போதிக்கின்றன. 

 இவை அனைத்தும் ஒவ்வொரு உயிரினத்தின் அடிப்படை தேவைகள்.

 வனத்தில் இந்தத் தேவைகள்; ஆதிக்கம், போட்டி, பலம் ஆகியவற்றின் துணையால் நிறைவேற்றப்பட்டன. நகங்கள், பற்கள், வேகம், ஆற்றல், விஷம், ஆக்ரோஷம் ஆகியவற்றின் துணையால் தான், அந்த நாளில் யார் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்றும் யாரின் சந்ததி பெருக வேண்டும் என்றும் வனத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகி இறுதியில் ஆறறிவு பெற்ற மனிதனாக உருக்கொண்ட  பின்பாவது இந்த இச்சை; வன்முறை இன்றி நிறைவேற்றப்பட்டதா என்றால் இல்லை. ஆறறிவு கொண்ட  மனிதர்களின் வாழ்வும்; குறிஞ்சி நிலத்தில் இதே போல் தான் நிகழ்ந்து கொண்டிருந்தது.

 ஆனால் தங்களுக்கான உணவை மனிதர்கள்  தாங்களே உற்பத்தி செய்ய தலைப்பட்ட பிறகு, இந்த நிலை மாறத் வாங்கியது.  குறிப்பாக வளமான மருத நிலங்களில் இந்தக் கதை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கியது.  
அங்கு தானியங்கள் செழிப்பாக வளர்ந்தன.  நதிகளில் நீர் பாய்ந்தது.  
 இயற்கையின் கொடையால்  மனிதர்களின் இச்சையானது அங்கே இரத்தம் சிந்தப்படாமல் நிறைவேறத் துவங்கியது.

மருதம் அமைதியாக இருந்ததற்கு முக்கிய காரணம் மக்கள் மென்மையாக இருந்ததால் அல்ல,  நிலம் மென்மையாக இருந்ததால் தான் அங்கே அமைதி நிலவுவதற்கான சூழல் அமைந்தது.

ஆனால் எல்லா நிலங்களும் இத்தகைய கருணையை வழங்கவில்லை.

 பாலை நிலத்தில் அமைதியை நிலை நிறுத்த,  மக்களின் ஒழுக்கமும் நல்லெண்ணமும் மட்டும் போதுமானதாக இல்லை.

 அறிவு, இணக்கம், மற்றும்  இயற்கையைப் பற்றிய தெளிவான புரிதல் போன்றவற்றைக் கொண்டே பாலை நிலத்தில் அமைதியை நிலை நிறுத்த முடியும்.
 
பாலை நிலத்தை பொறுத்தவரை; அங்கு வாழும் மக்கள், வெறும் நிலத்தை பயன்படுத்துபவர்களாக மட்டுமே  இருப்பது பயனைத் தராது.

  மனிதர்கள் அங்கே நிலத்தை பராமரிப்பவர்களாக  இருக்க வேண்டும். நிலத்தின் சூழலில் சேர்ந்து இணைந்து, இயைந்து  வாழ்பவர்களாக இருத்தல்  வேண்டும். இயற்கையையும் பருவத்தையும் பற்றிய தெளிவான புரிதலை கொண்டிருக்க வேண்டும். ஒன்றன் கழிவு மற்றொன்றின் உணவாக இருக்கும் வண்ணம் அந்த சூழல் வடிவமைக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவர்கள் அந்த நிலத்தில் சந்ததி சந்ததியாய் நீடித்து வாழ முடியும்.

 குறிஞ்சியில் வாழ்ந்து வந்த மனிதன், பரந்துபட்ட  சமநிலத்திற்கு இறங்கி வாழ தலைபட்ட போது; அவனது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய, முக்கியமான இரு வாய்ப்புகள் அவன் முன் இருந்தன. 

 ஒன்று மேய்ச்சல்  வாழ்வு முறை, மற்றொன்று பயிர் விளைவிக்கும்  வாழ்வு முறை.

 இந்த இரு வாழ்வு முறைகளையும்  முன்னெடுத்துக் கொண்டு இருவகையான குடிகள் உருவாயின.

 ஒன்று மேய்ச்சலை தொழிலாகக் கொண்ட ஆயர் சமூகம், மற்றொன்று தானியங்களை விளைவிக்கும் மருத சமூகம்.
 
இருவகையான மக்கள்... 
இரு வகையான வாழ்வு முறைகள்....

 ஒரு சமூகம் உழவைப் பின்பற்றியது. மற்றொரு சமூகம் மந்தைகளைப் பின்பற்றியது.

எண்ணிக்கையில் இரு சமூகமும் பெருகிய பொழுது, அவர்கள் இருவரும் ஒரே நிலத்தில் வசிக்கத் தலைப்பட்டனர். அது நிலத்திற்கான போட்டியாக மாறியது.

விவசாயிகள்  தாவரங்களை தங்கள் மூச்சைப் போல் பாதுகாத்தனர்.  
ஆயர்கள்  கால்நடைகளை தங்கள் உறவினர்களைப் போல் காத்தனர்.  விவசாயத்தின் ஆதாரமாக செடிகளை, கால்நடைகள் மேய்த்துவங்கிய பொழுது 
குரோதம் அவர்களுக்கு இடையே  நெருப்பை போல் வளர ஆரம்பித்தது.  

 விவசாயிகள், இளந்தளிர்களை மிதிக்கும் குளம்புகளையும், இலைகளை  அசைபோடும் ஆவினங்களையும் கண்டு  அஞ்சினர்.  மேய்பர்கள், மேய்ச்சலை தடை செய்யும் வேலிகளைக் கண்டு  சினம் கொண்டனர்.

 பல கோடி ஆண்டுகளாக  தாவரங்களும் ஆவினங்களும், வேலிகள் தடை ஏதும் இல்லாமல் தான், இணக்கத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறன.

 இயற்கையானது பல வழிகளில் இந்த இணக்கத்தைப் பற்றி; தக்காண பீடபூமியில் முரண்பட்டு நிற்கும் இரு குடிகளிடமும் பேச முயற்சித்தது. ஆனால் அதை செவிக்கொண்டு கேட்க அங்கே யாரும் இல்லை. நிலம் இணக்கத்தை வேண்டுவதை அவர்கள் இன்னும் செவிகொடுத்து கேட்கவில்லை. 

இயற்கை என்பது ஒரு கோபுரம் என்றும்,  அந்தக் கோபுரத்தின் உச்சியில் 'தான்' இருப்பதாகவும் மனிதன் எண்ணிக் கொள்கிறான்.  வர்ணாசிரம தர்மத்தை போன்ற உயர்வு தாழ்வு அடுக்குகளால் அமையப்பெற்றது அல்ல இயற்கை. அது ஒரு சுழற்சி. அந்த சுழற்சியில் இருக்கும் உயிரினங்கள் அனைத்தும்,  பங்களிப்பாளர்களாகவும் பயனாளர்களாகவும்  செயல்படுகின்றன. 

பயிர்களின் நுனி வழங்குவது மனிதர்களுக்கு உணவாகும். பயிர்களின் பச்சை பாகங்கள் கால்நடைகளுக்கு உணவாகும். அனைத்து உயிரினங்களின் கழிவுகளும் நிலத்திற்கு உணவாகும். ஒன்றன் கழிவு மற்றொன்றின் உணவாகும். இதுவே இயற்கையின் சுழற்சி. இதுவே நாம் வாழும் நிலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

 நிலம் என்னும் இயக்கமற்ற சிவத்தை, பொழுது என்னும் இயக்கம் கொண்ட சக்தி தழுவும் பொழுது தான் உயிர்கள் ஜனிக்கும், பல்கிப் பெருகும், இணக்கத்தோடு வாழும். 

இணக்கத்தோடு உயிரினங்கள் வாழும் நிலத்தில் தான் இயற்கையின் சுழற்சி சீராகச் சுழலும். இயற்கையை  பொருத்தமட்டில், பிறப்பினால் அனைத்து உயிர்களும் சமம். அங்கே உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. அனைத்து உயிர்களும் இணக்கத்துடன் வாழ்ந்தால் மட்டுமே, இந்த உலகில் நாம் சந்ததி சந்ததியாய் நீடித்து வாழ முடியும். 

ஆனால் இத்தகைய இணக்கம்; தக்காண பீடபூமியில் போருக்காக காத்திருக்கும் இரு குடிகளுக்கும் இன்னும் ஒரு கனவாகவே இருந்தது. அவர்களை  இணக்கமாக வாழச் சொல்லி இயற்கை மெல்லிய குரலில் வேண்டுகோள் விடுத்துக்  கொண்டிருந்தது. ஆனால் மனிதர்களின் சினத்தின் விளைவால் எழுந்த அறைகூவல்கள், இயற்கையின் மெல்லிய முணுமுணுப்பை கேட்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

 தக்காண  பீடபூமியில்  முரண்பட்டு நிற்கும் மனிதர்களது சினம், ஒரு நெருப்பைப் போல மற்ற நிலங்களுக்கும்   பரவ ஆரம்பித்தது. 

சினம் ஒரு சேர்ந்தாரைக் கொல்லி. அந்த சினம் இப்பொழுது சுற்றத்தாரையும் கொல்ல ஆவல் கொண்டது.

 விவசாய குடிகள் தங்களுக்கு ஆதரவான ராஜ்ஜியங்களுக்கு உதவி கேட்டு தூதர்களை அனுப்பினார்கள்.

கிழக்கு முனையிலிருந்து விதர்பாவும் அஸ்மகாவும் விவசாய குலங்களுடன் நின்றனர்.  
பீரப்பாவின் பக்கம், அவரது சகோதரி  உஜ்ஜயினியின் காளி,  மற்றும் அவந்தி, மஹிஷ்மதி வாழ்  வேட்டை இன மக்கள் இணைந்தனர்.

பீரப்பா, மேற்கு நோக்கி  பயணித்து, யதுக்களையும் வேளிர்களையும் சந்தித்தான். அவர்கள் கரிய தெய்வமான மாயோனை வணங்கும் ஆயர் குலத்தவர்கள். அவர்கள் போருக்கு பதிலாக  அமைதியை மதித்து, நடுநிலையைத் தேர்ந்தெடுத்தனர்.

எப்படி ஒரு குடும்பத்திற்கு பெண்ணின் பரிவான அன்பும் ஆணின் தைரியமும்  தேவையோ,  அதேபோல் ஒவ்வொரு  நாகரிகத்திற்கும்  காதல் மற்றும் வீரம் இரண்டும் அத்தியாவசியமானது. 

காதல், நாகரிகத்தின் சுபீட்சத்தை உறுதி செய்கிறது. வீரம், நாகரிகத்தின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

 ஒரு குடும்பம் நெருக்கடியில் இருக்கும் பொழுது அண்டை அயலவர்கள் அந்தக் குடும்பத்திற்கு உறுதுணையாய் நிற்பது போல, ஒரு நாகரிகத்தின் துணைக்கு அயல் நாகரிகங்கள்  நிற்பதும் மிகவும் அவசியம். அது நட்பின் வெளிப்பாடு.

ஆனால் எல்லா நட்புகளும் நேர்மையானவை இல்லை...

 தன் மகனின் மரணத்தால் குமைந்து கொண்டிருந்த விவசாயக் குடியிருப்புகளின் தலைவன் பசவண்ணா, எப்படியேனும் பீரப்பாவை பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, யாரும் எதிர்பாராத ஒரு இடத்தில் உதவியைக் கோரி பயணப்பட்டான். 

 அவன்  பயணப்பட்டது வடக்கே இருந்த ஒரு ராஜ்ஜியத்தை  நோக்கி...

 அந்த ராஜ்ஜியத்தின் தலைவன் பெயர் தக்ஷன். 
 
தக்ஷன், வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்தவன். படைக்கும் கடவுள் பிரம்மாவே  அனைத்து உயிர்களுக்கும் தந்தை என எண்ணுபவன். அவன் பசவண்ணாவிற்கு உதவுவதாக வாக்களித்தான். பூத கணங்கள் போல் போர் புரியும் இந்தப் படைகளை வெல்லுவதற்கான சமயம் இதுவென்று அவன் மகிழ்ச்சி கொண்டான்.

துக்கத்தாலும் கோபத்தாலும் குருடாக்கப்பட்ட பசவண்ணா, தக்ஷனின் உண்மையான நோக்கங்களை அறியவில்லை. தக்ஷன் நீதிக்காக அல்லாமல், நிலத்திற்காக ஏங்குவதை அவன் காணவில்லை. 

'தானே' பிரம்மாவின் நேரடி வாரிசு என எண்ணுபவன் தக்ஷன். அதனால் படைப்புகள் அனைத்தும் 'தனது' என்பது அவனது கொள்கை.

 தேவைக்கு ஈவதே இயற்கையின் குணம்.  ஆசைகளை பூர்த்தி செய்வதற்கு இயற்கையிடம் இடம் இருக்கிறது.  ஆனால் பேராசை என்பது ஈசனின் கபாலம் போன்றது. அதற்கு உலகையே கொடுத்தாலும் போதாது. 

 'தான்' மற்றும் 'தனது' என்ற தன்முனைப்பு எண்ணம் மேலோங்கியவன் தக்ஷன். தான் மற்றும் தனது என்ற  தம்பதிகள் இருக்கும் இடத்தில், அந்தத் தம்பதிகளுக்கு காமம், குரோதம், லோபம், மோகம், மதம் மற்றும் மாத்சர்யம் என ஆறு குழந்தைகள் பிறக்கும். 

காமம் – கட்டுப்பாடற்ற பாலுணர்வு, முறையற்ற பால்கவர்ச்சி.
க்ரோதம் – பகுத்தறிவை எரிக்கும் கோபம்.  
லோபம் – மற்றவர்களின் பங்கை விழுங்கும் பேராசை.  
மோகம் – ஞானத்தை குருடாக்கும் பற்று.  
மதம் – மனிதர்களை மனிதர்களுக்கு மேல் வைக்கும் பெருமை.  உயர்வுதாழ்வு மனப்பான்மை.
மாத்சர்யம் – மகிழ்ச்சியை விஷமாக்கும் பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி.

இவை நாகரிகங்களை உள்ளிருந்து அழிக்கின்றன.  இவை மனிதனின் உணர்ச்சிகளை தூண்டி விடுகின்றன. இந்த ஆறு குணங்களின் விளைவாகத்தான் பஞ்சமா பாதகங்கள் தோன்றுகின்றன. இந்த குணங்கள் மேலோங்கும் நாகரிகங்களில்  அமைதி நிலைக்க முடியாது.

 இவ்வாறு, ஆயர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான போர்
தக்ஷனின் பேராசைக்கான மேடையாக மாறியது. அவனின் மதப்பற்றும்; அவன் கொண்ட கொள்கைப் பற்றும், மனிதர்கள் மீதான உயர்வு தாழ்வு மனப்பான்மைக்கு வித்திட்டது. புல் மற்றும் தானியத்திற்கான சண்டையாகத் தொடங்கியது, வம்சங்களின் போராக மாறியது.

இந்த ஆறு குணங்கள்  ஆட்சி செய்யும்போது, முந்தைய பல நாகரிகங்களில் நிகழ்ந்ததைப் போலவே, இங்கே இந்த நிலத்திலும் அழிவு பின் தொடர ஆரம்பித்தது.

 நாம் காணும்  இந்தப் பழமையான போர், இன்றைய உலகிற்கு கூறுவதற்கென ஒரு முக்கியமான செய்தியைக்  கொண்டிருக்கிறது.

நாம் இன்னும் நிலத்தையும் பொழுதையும் புரிந்து கொள்ளாமல் நாடுகளை நிர்மாணிக்கின்றோம். நாம் இன்னும் சமநிலைக்கு பதிலாக வெற்றியை நாடுகிறோம்.  நாம்  நமது முன்னோர் வழங்கிய ஞானத்தை புறக்கணிக்கிறோம்.

இந்தக் கதை மறந்துபோன கடந்த காலத்தில் அமைந்திருக்கலாம்,  
ஆனால் அதன் உண்மை நித்தியமானது.

 அமைதி என்பது, நிலங்கள் வழங்கும் செழிப்பிலிருந்து பிறப்பதில்லை.  அது மனிதனது மனக்கட்டுப்பாட்டிலிருந்து பிறக்கிறது. அப்படி மனக்கட்டுப்பாடு கொண்ட மக்கள் வாழும் ராஜ்ஜியத்தில் தான் அன்பு பெருக்கெடுக்கும்... உயிர்களின் உள்ளத்தில் கருணை நிலைத்திருக்கும். அந்த அன்பின் வழியாகத்தான் நாம் இறைவனை காண முடியும் என்று அனைத்து மதங்களும் கூறுகின்றன.

 இந்த உண்மை சிவனுக்கு உணர்த்தப்பட்டது இந்த மண்ணில் தான். 

 இந்த தக்காண பீடபூமியில் தான் அவர் இயற்கையிடம் பேசினார். இயற்கையும் அவரது கேள்விகளுக்கு பதில் அளித்தது. இதே நிலத்தில்தான் இயற்கை  தனது ரகசியங்களை சிவனுக்கு உணர்த்தியது. அந்த உண்மையை உணர்ந்த பிறகு தான் அவர் இறைவனானார்.

ஒவ்வொரு மனிதனது  வாழ்விலும் அதிகபட்சம் நேரக்கூடிய இன்னல்களை அவரும் சந்தித்துள்ளார்.  தான் மற்றும் தனது என்ற மாயையின் பிடியில் சிக்காமல், உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தி,  அந்த இன்னல்களை எதிர்கொண்டு, அவர் இறுதியில் இறைநிலையை அடைந்தார்.

அந்த இறை நிலையில் இருந்து; இந்த மானுடர்களை இறைநிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளை, பல வழிகளில் மனிதர்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார் அந்த மானிடமேந்தி .

நம்மிடமும் இயற்கை  இதே உண்மைகளை பேச முயற்சிக்கிறது. இறை நிலையானது இயற்கையின் வழி நம்முடன் தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. நாம் தான் நம்மை கண்காணிப்பார் யாருமில்லை என்ற குருட்டுதைரியத்தில் மென்மேலும் தவறிழைத்துக் கொண்டிருக்கிறோம்.  

-------

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்; 
கண்காணி இல்லா இடமுமில்லை, காணுங்கால்; 
கண்காணியாக கலந்தெங்கு நின்றானை; 
கண்காணி கண்டார் களவொழிந்தாரே.
-திருமூலர்
 

Friday, October 24, 2025

மல்லண்ணா (ஆதியோகி: அத்தியாயம் 16)

அது ஒரு  குன்று. அதன் உச்சியில் பெரும் பாறைகள் செங்குத்தாக இருந்தன. அதன் உச்சியை அடைவது  அவ்வளவு எளிதல்ல. அந்த குன்றின் உச்சியில் சிவன் நிலவொளியின் கீழ்  நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அவர் எண்ணமெங்கும் மாயத் தோற்றங்களால் நிரம்பி இருந்தது. அவரது உடலில் அனல் கொதித்துக் கொண்டிருந்தது.  அவரது குருதியில்  இருந்த தாதுக்கள் உடலிலும் மனதிலும்  விபரீத விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அவரது  அனல் கொதிக்கும் உடல், வலி மிகுந்த எழுச்சி அறிகுறிகளை காட்டிக் கொண்டிருந்தது. பித்துப் பிடித்தது போல் உடல் சோர்வடையும் வரை வியர்வை வெள்ளம் பொங்க அவர் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் வலி மிகுந்த  எழுச்சி மட்டுப்படத் தொடங்கியது.

 உடல் சோர்வடைந்தாலும்  சிவனுக்கு உள்ளம் தெளிவடையவில்லை.  தெளிவடையாத சிவன் நந்தனுக்கு அருகில் அமர்ந்தார்,  அவரது விரல்கள் காளையின்  காயமடைந்த கழுத்தைத் தொட்டன.  நந்தனின் காயங்களை பார்த்த பின்பு, சிவனுக்கு நந்தன் நிகழ்த்திய அந்த வீரம் மிகுந்த கோரத்தாண்டவம் நினைவுக்கு வந்தது. 
“நந்தா, நீ வெறும் மிருகமல்ல, ஒரு வீரன். நீ நெருப்பைப் போல் முன்னேறினாய்.  அந்த வீரனை  புராணமாக்கினாய்” என்று பெருமை பொங்கக் கூறினார்.

சிவன் முன்னோக்கிச் சாய்ந்து, நந்தனின் கொம்பைத் தொட்டார்
“இவை... வெறும் கொம்புகள் இல்லை... ஆற்றல் மிகு திரிசூலங்கள். என்னுடைய திரிசூலத்தை விட இவை வலிமையானவை” என்று கூறினார்.

சிவன் அருகில் இருந்த பாறையை நோக்கிச் சென்றார். ஒரு கூர்மையான கல்லை எடுத்துக் கொண்டு, பாறையின் மேல் செதுக்கத் தொடங்கினார்.

முதலில் அவர் பாறையில் காளையின் உருவத்தை அழகாக வரைந்தார். பின்னர் காளையின் கொம்பினை வரையும் பொழுது, அவருக்கு தனது திரிசூலத்தின் ஞாபகம் வந்தது.  தனது திரிசூலத்திற்கு சமமானது அந்த கொம்பு என்பது அவரது எண்ணம். அந்த எண்ணத்தின் உந்துதலால் ஜோடிக் கொம்புகளை வரைவதற்குப் பதிலாக திரிசூலம் போல் மூன்று கொம்புகளை பாறையில் செதுக்கினார். மாய தோற்றங்களினால் பீடிக்கப்பட்டிருந்த அவர் அந்த திரிசூலமாக வரைந்த மூன்று கொம்புகளையும்  ஒவ்வொரு தனித்தனி  திரிசூலமாக வடிவமைத்தார்.  
ஒரு கொம்பு. பின்னர் அது மூன்றாக பிரிந்தது. ஒவ்வொரு கிளையும் மீண்டும் மூன்றாக பிளந்தது. நடுங்கும் கைகளால் அவர் செதுக்கிக் கொண்டே இருந்தார். 

 நந்தனின் மீது பீரப்பா நின்று ஒரு வீரனை குத்தி சாய்ப்பது  போல் அந்தப் படத்தை சிவன் வரைந்து முடித்தார். கொற்றவையின் கலைமான்களையும் மயிலையும் அவர்  அந்தப் பாறையில் செதுக்கினார்.

 இவ்வனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நந்தன், சிவனின்  செயல்களை புரிந்து கொண்டவனைப் போல் தலையை ஆட்டி ஒரு மெல்லிய உறுமல் ஓசையை  வெளிப்படுத்தினான் .

 சிவனுக்கு நந்தனின் ஓசைகள் எளிதாகப் புரியும். அதை அங்கீகரிப்பது போல ஒரு மெல்லிய புன்னகையை அவர் நந்தனை நோக்கி வீசினார். மெல்ல அவர் மனம் ஆனந்தத்தில் சுழலத் தொடங்கியது. நோயின் வேகத்தால் அவர் காணும் ஒவ்வொரு பொருளும் மாயத் தோற்றமாக மாறத் தொடங்கியது. 

“நீ வெறும் காளை மட்டுமில்லை,” என்று அவர் மெதுவாகச் சொன்னார். “நீ தேவதைகளின் ஆயுதம்... சக்தியின் சக்கரம்.”

 நந்தன்  அவரது எண்ணத்தில்  இரண்டாக... மூன்றாக... நான்காக மலர் போல் விரிந்து... வட்ட வடிவில் சக்கரமாக சுழலத் தொடங்கினான்.
சிவன் மீண்டும் செதுக்கினார்...ஒரு நந்தன்... இரண்டு நந்தன்... நான்கு நந்தன்.. பாறையின் மேல் சுழன்று விரிந்தது போல தனது மாயத் தோற்றங்களை அப்படியே பாறையில் அவர் வரையத் தொடங்கினார். அவை ஒன்றாக இணைந்து ஒரு அழகான வடிவமானது.  எண்ணத்தின் வண்ணங்கள் அனைத்தும் கைகள் வழியாக வெளிப்பட்டு அந்தப் பாறையில் ஒரு அழகிய வரைபடமானது. அவர் வரைந்த அந்தப் படம் எருதுமலர் ஒன்று பாறையில் பூத்தது போல் இருந்தது. 
 ஐந்து காளைகள் ஒன்றாக இணைந்து மலர் போல மாறியது. ஒவ்வொன்றும் வீரப்பாவின் கையில் இருந்த கூர்முனை கொண்ட கணிச்சியை போல் கால்களை கொண்டிருந்தன .  பிற்காலத்தில் சண்டிகேசுவரரின் கைகளை அலங்கரித்த மான் மற்றும் மழு ஒன்றிணைந்தது  போன்ற வடிவில் அது காட்சியளித்தது. அது ஒரு காளை வடிவ மழு. 
மீண்டும் அவர் அதைக் கண்டார்... நந்தன் மீது பீரப்பா... நெருப்பு மற்றும் புழுதி  வழியாக இருவரும் பாய்ந்து போர் புரிந்த நிகழ்ச்சியை அவரால் மறக்க இயலவில்லை. அது உண்மையில் சரித்திரம் மறந்த ஒரு புராண யுத்தம். பழங்குடியினரது பாடல்களில் மட்டுமே அந்தப் போர்  நினைவு கூறப்படுகிறது. அவர்களை எதிர்த்த எதிரிகள் காகங்களைப் போல் சிதைந்து விழுந்தார்கள். எதிரிகளின் முறிந்த கைகள், வளைந்த கால்கள், அவரது கண்கள் முன்பு நிழலாடின. சிவனின் விரல்கள் நடுங்கின. அவர் அந்த நினைவைப் பாறைகளில் வரையத் தொடங்கினார்.
சிவனைச் சுற்றி, டோலரைட் பாறைகள் முணுமுணுத்தன. சிவன் அவற்றைத் தட்டினார், அவை ஆலய மணியைப் போல்  ஒலித்தன. அந்த ஒலி  யுகங்கள் கடந்தும்  எதிரொலிக்கும் உடுக்கை ஒலி  போல இருந்தது.

 அந்த மலையில் கற்களால் ஆயுதங்களை செய்வதற்கு  ஏற்படுத்தப்பட்ட சிறு குழிகள் இருந்தன. கற்களின் மேல் இருந்த அந்த சிறு குழிகள், அவருக்குப் புனிதமாகத் தோன்றின. கல் கோடரி  அவருக்கு லிங்கம் போல தோன்றினது, அது தீட்டப்படும் குழி அவருக்கு ஆவுடையாகத் தோன்றியது.  அது இரு சக்திகளின் இணைப்பாக அவருக்கு தோன்றியது. ஆவுடையின் மேல் லிங்கத்தின் இணைப்பாக அவருக்கு அது தோன்றியது. 
அவர் வெண்பாஷாண தூண்டுதலால் எழுந்த பாலுணர்ச்சி வேகத்தில் இன்னும் பல சித்திரங்களை  பாறைகளில் வடித்தார். தனது வலி மிகு உயிர்நாடி எழுச்சி அறிகுறிகளையும் ஆங்காங்கே கோட்டோவியமாய்  பாறைகளில் செதுக்க ஆரம்பித்தார். 
 அரை மயக்க நிலையில் கண்கள் சொருக உடுக்கையை அடித்தபடி அவர் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டே இருந்தார்.

 ஒவ்வொரு இரவிலும் இது தொடர்ந்தது. வீரப்பாவின் மக்களுக்கு இது அச்சத்தையும் பயத்தையும் கொடுத்தது. மலையின் உச்சியில் ஒரு காளையும் மனிதனும் இருப்பதை மட்டும் அவர்களால் தூரத்தில் இருந்து பார்க்க முடிந்தது. யாராலும் அந்த உச்சியை அடைய முடியாது என்பதால் அங்கு இருக்கும் அந்த உருவம், மனித சக்திகளுக்கு அப்பாற்பட்டது என அவர்கள் எண்ணினர்.  அதிலும் பாறை அதிர்வினால்  ரீங்கரித்து ஒலிக்கும்  ஓசையும் நடனமும் அவர்களுக்கு பெரும் பீதியை அளித்தது.
 
 இதை அவர்கள் பீரப்பாவின் பார்வைக்கு எடுத்துச் சென்றனர். மங்கலான நிலவு ஒளியின் கீழ், ஒரு கட்டுமஸ்தான உருவம் சூரத்தனமாக ஆடுகிறது. யாரும் எளிதில் ஏற முடியாத பாறை உச்சியில் அவ்வுருவம் ஆடிக்  கொண்டிருக்கிறது. 
 அது  மனிதர்களுக்கு எட்டாத ஒரு சக்தி என்று அவர்கள் பீரப்பாவிடம் கூறினர்.

"அது ஒன்றும் எளிதில் அடைய முடியாத உச்சி அல்ல. அங்கே இருப்பது ஏதோ ஒரு மனித உருவம் தான். நான்  இன்றைக்கு அங்கே செல்கிறேன். யாரும் அஞ்ச வேண்டாம்"என்று பீரப்பா தனது மக்களுக்கு உறுதி அளித்தான்.
 
இரவில், பீரப்பா அந்த மலையின் மீது  ஏறினான்.

விசித்திரமான இசை அவனை இழுத்தது. இருளில் மறந்துபோன கடவுளின் இதயத் துடிப்பு போல் உடுக்கை ஒலியும்,  பாறைகளின் ரீங்கார ஓசையும் அந்தப் பிரதேசம் முழுவதும் எதிரொலித்தது. அவன் எச்சரிக்கையுடன் நகர்ந்தான், பெரும் பிரயத்தனத்துடன் அவன் அந்த மலையின் உச்சியை அடைந்தான்.

 அது ஒரு முழு நிலவு நாள்.  ஆயினும் நிலவொளியை மேகம் மறைத்திருந்தது. 

 மேகத்தின் நிழல்களில், அவன் அந்த  உருவத்தைக் கண்டான். அந்த உருவம் ஒரு மனிதன் தான். ஆனால்  கற்களால் செதுக்கப்பட்டது போன்ற உடலை அவன் கொண்டிருந்தான். இருளில் அவனது முகத்தை பீரப்பாவால் தெளிவாகக் காண முடியவில்லை.

 ஆனால் அந்த உருவத்தின் நடனம்  பனங்கள்ளின் போதையில்   இருப்பவனது  தள்ளாட்டத்தைக் கொண்டிருந்தது. ஆயினும் அவனது அசைவுகள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. அந்த வேகத்தில் சாதாரண ஒரு மனிதன்; இந்தப் பாறையின் மீது ஆடி இருந்தால், நிச்சயம் அவன் நிலை தவறி கீழே விழுந்திருப்பான். ஆனால் இந்த உருவத்தின் நடனமோ மிகவும் நேர்த்தியாகவும், அதேசமயம் பித்துப் பிடித்தது போல  அசுரத்தனமாகவும் இருந்தது  

அவன் அந்த உருவத்தைக் கூப்பிட்டான்.

பதில் இல்லை!

 காட்டுத்தனமாக,  மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வேகத்தில், நளினத்தோடு கூடிய ஒரு சிவ தாண்டவம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது 

 அவன் திரும்பவும் அழைத்தான்.அந்த அழைப்பை சிவன் காது கொடுத்து கேட்டது போல் தெரியவில்லை. நடனத்தைத் தடுக்கும் நோக்கத்தோடு அருகில் சென்று, அவன் சிவனின் தோளில் கையை வைத்தான்.

 மாய உருவங்களுக்கு மத்தியில் ஆடிக் கொண்டிருந்த சிவனுக்கு பீரப்பாவின் உருவம் நிழலா, நிஜமா, அல்லது மாயத் தோற்றமா என்று பிரித்தறியத் தெரியவில்லை. அதிவேகமாக அவர் சுழன்று சுழன்று நடனம் ஆடிக் கொண்டிருந்தார். சுழற்சி வேகத்தில் அவரது கரங்கள் அருகில் இருந்த பீரப்பாவின் மீது பட்டது. 

 அந்த வேகத்தில் பீரப்பா தூக்கி வீசப்பட்டான். வேறொரு மனிதனாக இருந்திருந்தால், அவன் அந்தப் பாறையின் சரிவில் விழுந்து சிதறி இருப்பான். வனத்தின் ஆதி மகனான வீரப்பாவோ உடல்வலு மிக்கவன். அவன் சட்டென்று சுதாரித்துக் கொண்டு தனது நிலை குலையாமல் பார்த்துக் கொண்டான். 

 கோபம் கொண்ட பீரப்பா சிவனோடு மல்யுத்தம் புரியத் தொடங்கினான்.

 பீரப்பாவால் அந்த வீரனை அசைக்க முடியவில்லை.

 இதுவரையிலும் தன்னை மிஞ்சிய ஒரு வீரனை அவன் சந்தித்ததில்லை. அவனை இதுவரை யாரும் வீழ்த்தியதும் இல்லை. மல்லப்ப கொண்டாவில் மிகவும் மதிக்கப்பட்ட மல்லன் அவன்.

 இப்பொழுது அவனுடன் சமர் செய்து கொண்டிருந்த வீரன், மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட வீரத்தைக் கொண்டிருந்தான். இருப்பினும் பீரப்பா தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.

 இருவரும் மல்யுத்தம் புரிந்தனர். சிவன் புலன் மயக்கத்தால்  மதி மயங்கி  வீரப்பாவுடன் மோதிக்கொண்டிருந்தார்.
 பீரப்பா, கோபமும் குழப்பமும் நிறைந்தவனாக, திருப்பி அடித்தான். நந்தன் சுற்றி நின்று, யாரைக் காப்பாற்றுவது என்று தெரியாமல் இருந்தான்.

அவர்கள் ஒரு செங்குத்தான பாறையின் விளிம்பில் மல்யுத்தம் புரிந்து கொண்டிருந்தனர்.

 பீரப்பா பிடி தளர்ந்தது அவன் பாறையில் விளிம்புக்கு தள்ளப்பட்டான். கீழே விழாமல் இருக்க அவன் ஒரு பாறையை இறுக்கப் பிடித்துக் கொண்டான். பாறையை பிடித்திருந்த அவன் பிடி கொஞ்சம் கொஞ்சமாக தளர ஆரம்பித்தது. அப்பொழுது மேகங்கள் விலகி நிலவின் ஒளி அந்தப் பிரதேசம் முழுவதும் வெளிச்சத்தை பரப்பியது.  நிலவின் பிரகாசமான ஒளியில் சிவனின் அழகிய முகம் தெரிந்தது 

பீரப்பா அந்த முகத்தைக் கண்டான். அது அவனுக்கு பரிச்சயமான முகம் . தன்னையே அச்சில் பார்த்தார் போல் இருந்த அந்த முகம் அவனுக்கு அவனது பெரியதந்தையை நினைவூட்டியது. 

மூச்சு விடாமல், பீரப்பா வாய்விட்டு கூறினான் , “மல்லண்ணா!!!”

அந்த வார்த்தை நெருப்பிலிருந்து  எழுந்தது, அது வெறும் பெயர் இல்லை. அது ஒரு நினைவு.  
அவர்களின் மொழியில், மல்லன்  என்றால் தைரியம் நிறைந்த ஒரு மல்யுத்த வீரன், ஒருபோதும் தலைவணங்காதவன். ஒரு காலத்தில் அவர்களில் மல்யுத்தத்தில் வலிமையானவருக்கு வழங்கப்பட்ட பட்டம் அது.  அந்தப் பெயர் சிவனின் நினைவு அடுக்குகளில் புதைந்து தொலைந்து போயிருந்த  பழைய நினைவுகளைக் கிளறி விட்டது. அது சிவனின் தந்தைக்கு கொடுக்கப்பட்ட பட்டம்.

 அந்தப் பெயரைக் கேட்டதும் சிவனைச்  சுற்றி இருந்த  மாய உருவங்கள் மறைந்து நிஜ உலகத்திற்கு திரும்பினார். புலப்படாத புலன்களின் வழியாக மாய உருவங்களை தரிசித்தபடி இருந்த சிவன் தற்பொழுது நிஜத்திற்கு திரும்பினார். அவர் நிகழ்த்திய விபரீத மல்யுத்தம் முடிவுக்கு வந்தது. அவரது கண்கள் தெளிந்தன. அவரின் முன் இருந்த அந்த இளைய வீரனை அவர் கண்டார்.
மலையின் விளிம்பில் விழ இருந்த பீரப்பாவை அவர் கை கொடுத்து தூக்கி விட்டார். நந்தன் வீரப்பாவின் அருகில் வந்து நின்றான். 

 நந்தன் பீரப்பாவின் கைகளை நக்கிக் கொடுக்க ஆரம்பித்தான். சிவன் குழப்பம் மேலிட அவனை உற்றுப் பார்த்தார். இது முன்பு போர்க்களத்தில் கண்ட நிகழ்வு அல்ல. இந்த வீரன் நிஜத்தில் இருப்பவன். இவன் மாயத் தோற்றம் அல்ல .

இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் அன்பு பொங்க பார்த்துக் கொண்டனர் . 

 பீரப்பாவை காண்கையில்  சிவனுக்கு தன்னையே தெளிந்த ஓடையில்  பார்த்தார் போல் இருந்தது. அந்த வீரனைக் கண்டதும் சிவனுக்கு மனதில் இனம் புரியாத சகோதர பாசம் பொங்கியது. அதே கொப்பளிக்கும் அன்பை வெளிப்படுத்தியவாறு வீரப்பாவும் நின்றிருந்தான் . அவர்களுக்குள் வார்த்தைகள் ஏதும் பெரிதாக பரிமாறப்படவில்லை. அவர்கள் பேச்சு குறைவாக இருந்தது. வார்த்தைகள் அவர்களுக்கு தேவையாய் இருக்கவில்லை .

 பீரப்பா, தாங்கள் சந்திக்கும் இன்னல்களைப் பற்றி சிவனிடம் விவரிக்கத் தொடங்கினான். 
“முதலில், நாங்கள் ஆயர்களாக இருந்தோம். ஆனால் இந்த நிலம் எங்களைக் கைவிட ஆரம்பித்தது. மழை எங்களை மறந்தது. நிலம் வறண்டது . பிழைப்புக்காக இந்த நிலத்தின் இரு குடிகளும் மோதிக்கொண்டோம். இப்பொழுது குடியானவர்களின் வாரிசு இறந்துவிட்டான். அவர்கள் பழி தீர்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.”

 "அவர்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ளவர்கள், மேலும் அவர்களிடம் மேம்பட்ட ஆயுதங்கள் இருக்கின்றன. எங்களிடம் வெறும் கல்லாயுதங்களே  உள்ளன. அவர்கள் செம்பு முனையை கொண்ட ஈட்டிகளை கொண்டிருக்கின்றனர். எங்களின் கல்லாயுதங்களை விட அவை கூர்மையானவை.நடந்த போரில் எங்கள் பக்கம் இழப்பு அதிகம். எங்களுக்கு ஆயுதங்கள் தேவை. வெற்றி பெறுவதற்கல்ல, எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு.”

 அவன் சிவனின் திரிசூலத்தின் கூர்மையை பார்த்தவாறு கூறினான். "அண்ணா எங்களுக்கு இதைப் போன்ற ஆயுதங்கள் தேவை."  

 சிவன் பீரப்பாவிற்கு அமைதியை போதித்தார். ஆயினும் வீரப்பாவோ " இது தவிர்க்க முடியாத ஒரு போர்.இது நடந்தே தீரும். எங்களுக்கு வேறு வழி இல்லை. நீங்கள் எங்களுக்கு நிச்சயம் உதவ வேண்டும் அண்ணா, இது எனது வேண்டுகோள்" என்றான்.

 மருத நிலத்தில் அவரது ஞானம் உயிர்களைக் காக்கப் பயன்பட்டது. இப்பொழுது இந்தப் பாலை நிலத்தில், அந்த ஞானம் வேறு ஓரு விலையைக் கோருகிறது.

 வேந்தன் சிவனின் ஞானத்தின் உதவியால்  இரும்பை உருக்கி வேளாண் கருவிகளைச் செய்தார். ஆனால் இங்கு இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சிவனின் முன்னே இருந்தது.

இரும்பு இந்த நிலத்தில் அதிகம் இருப்பதை சிவன் உணர்ந்தார். ஆனால் இந்த இரும்பை வெளிக்கொணர அதிக வெப்பம் தேவை. அதற்கான எரிபொருள் இங்கு இல்லை. அந்தப் பாலை நிலத்தில்   மரங்கள் அதிகம் இல்லை.

 சிவன் அந்த இடத்தை நோக்கினார். இரண்டு வருடங்களாக வெயிலையே காணாத பாலை நிலமாக அது இருந்தது . அந்த நிலம் அழல் மிகுந்த அவரது உடலைப் போலவே காட்சி அளித்தது.

"வற்றாத தாமிரபரணியின் கொடையால் செழிப்புற்றிருந்த   மருத நிலம் இல்லை இது.
 
இது அளவுக்கதிகமான வெப்பத்தால்  பிளவுபட்ட பாலை.  இங்கிருக்கும் நிலத்திற்கும் சரி... இங்கு வசிக்கும் உயிர்களின் உடலுக்கும் சரி... வெப்பம்  வறட்சியை உண்டு பண்ணுகிறது.

  வெவ்வேறு வாழ்வு முறைகள் கொண்ட மக்கள்  இங்கு இணைந்து வாழ்வது சாத்தியமா? "என சிவன் சிந்தித்தவாறு இருந்தார்.

 மக்களின் இணைப்பு என்பது இங்கு சாத்தியமில்லை. இணக்கமாக வாழும் எண்ணம் இப்பொழுது இங்கு யாரிடமும் இல்லை.  இப்பொழுது நடந்து கொண்டிருப்பது பழிவாங்கும் படலம். இங்கு இருப்பவர்களின் தேவையெல்லாம் ஒரு மேம்பட்ட இரும்பு ஆயுதம்.

இரும்பினை  உருக்குவதற்கு எரிபொருள் அவசியம் என்பதை சிவன் பீரப்பாவிடம்  விளக்கினார்.

 பீரப்பா அவருக்கு முல்லை நிலம் ஒன்று அருகில் இருப்பதாக கூறினான். அங்கே இவ்வாயுதத்தை செய்வதற்கு ஏற்ற மரங்கள் கிட்டும் என்றான்.

  அவர் பீரப்பா கூறிய அந்த முல்லை நிலத்திற்கு பயணப்பட்டார். வெப்ப மிகுதியால் சமநிலை இழந்து கொண்டிருந்த சிவனுக்கு மரங்கள் சூழ்ந்த அந்த முல்லை நிலம்  அமைதியை வழங்கிது. அந்த நிலத்தில் அவரது உடலின்  அனல்  தணிந்தது.

 இந்தப் பாலை நிலத்திலும் உயிர்ப்பாக இருக்கும்  மரங்களை அழித்தா  ஆயுதம் செய்ய வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. 

கேள்விகளால் சூழப்பட்ட அவர்  தியான நிலையில் அமர்ந்தார். அவர் எழுப்பிய ஓங்கார ஓசை வனம் முழுவதும் எதிரொலித்தது.அங்கே வெப்பத்தைத் தாங்கி வாழும் உயிரினங்கள்  பல இருந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை நீளக் கொம்பு கொண்ட ஆவினங்கள். ஓங்கார ஓசையினால் ஈர்க்கப்பட்டு  அவை சிவனைச் சூழ்ந்தன. 

அவை அங்கிருந்த மரங்களின் இலைகளை உணவாகக் கொண்டன. சிவன் வெட்ட வேண்டாம் என நினைத்த மரங்களை அவை உண்டு வாழ்ந்தன.
 மாடுகளினால் மட்டும் அந்த மரங்களின் இலைகள் சேதப்படுத்தப் படவில்லை.  அங்கே   வெயில் மிகுதியாலும் மரங்கள் தங்கள் இலைகளை உதிர்த்தன. அந்த இலைகள் பூமிக்கு உரமாகும் முன்னரே வெப்ப மிகுதியால் வாடிப்போயின. 

 இவற்றையெல்லாம் கண்டு கொண்டிருந்த  அவருக்குள் பல கேள்விகள் எழுந்தன.

  பசுக்கள் இங்கிருக்கும் மரங்களுக்கு  பகைவர்களா? 

மரங்கள் செழிக்க  உரம் வேண்டுமே... அதை இங்கே இருக்கும் மரங்கள் எவ்வாறு பெருகின்றன?

 இந்தப் பாலை நிலத்தில் பசுக்களின் தாக்குதல்களை மீறியும் எவ்வாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த மரங்கள் இங்கே பிழைத்திருக்கின்றன?

 தியான நிலையில் இருந்து அவர் அந்த சூழலை அவதானித்தார் . மெல்ல மெல்ல அவருக்குள் இருந்த கேள்விகளுக்கு விடை கிடைக்க ஆரம்பித்தது. 

மரத்தின் இலைகளைத் தின்ற ஆவினங்கள் சாணம் வழியாக அந்த வனத்திற்கு உரம் தந்து செடிகளுக்கு உயிரூட்டின. 

தன் உடலை வருத்தும் சூரியனது அழல் தான் செடிகளில் உயிராக இருக்கிறது. செடிகளில்  உயிராற்றலாய் இருக்கும்   அழல்தான் மாடுகளை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது. அந்த அழலின் துகள்கள் தான் சாணத்தில் ஆற்றலாக இருக்கிறது. சாணமே இங்கு உரம். சாணமே இங்கு எரிபொருள். 

 பசுபதியாகிய சிவனைச் சூழ்ந்த ஆவினங்கள் அவர் செல்லும் இடமெல்லாம் அவரைப்பின் தொடர்ந்தன. அழல் மிகுந்த தக்காண பீடபூமியில் வசிப்பதற்கேற்ற உடல் அமைப்பு பெற்றவை  இந்த மாட்டினம்.

வறட்சியைத் தாங்கும் அந்த ஹள்ளிகார் இன மாடுகள், கடினமான பாலைநிலத்தின் பீடபூமியை பிளக்கும் வலிமையுடையவை, சூரியனைத் தாங்கும் பொறுமையுடையவை, நிலம் இழந்த  வளத்தை மீட்டெடுக்கும் திறன் மிகுந்தவை. அதோடு இயைந்து வாழ  ஆயர் குழுவினர் முடிவெடுத்தனர்.

அந்த நாளிலிருந்து, அவர்கள் வெறும் ஆயர்கள் மட்டுமல்ல.  
அவர்கள் புனித மந்தையின் காவலர்களாக மாறினர். சிவனை தங்கள் தேவனாகக் கருதினர். இன்னும் அங்கிருக்கும் பழங்குடியினர் வருடம் தோறும் சிவன் நடனம் புரிந்த அந்த மலையில் வந்து Pitlappa வை வணங்குகின்றனர். பித்தம் கொண்ட உடலை உடையதால் அந்தப் பெயர் அவருக்கு வைக்கப்பட்டதா அல்லது பித்தளையைக் கொண்ட குருதியை உடையதால் அந்தப் பெயர் வைக்கப்பட்டதா என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது.

 வீட்டு விலங்குகளை பழக்கிய ஒவ்வொரு சமூகமும் அவற்றின் கழிவுகளில் இருந்து பரவும் நோய்களுக்கு தப்பியதில்லை. ஆனால் சிவன் சாணத்தைக் கழிவாகக் கருதாமல் ஆற்றலாகக் கருதினார். அதை ஒரு எரிபொருளாக உபயோகிக்கத் தொடங்கினார். மேலும் நெருப்பில் எந்த கிருமிகளும் உயிர் வாழாது.  நெருப்பின் வாயில் அகப்பட்டுக் கொண்ட எதுவும்  ஒருபோதும் வியாதியை பரப்பாது.

சிவனுக்கு இப்போது ஆயுதங்கள் செய்ய சாணம் எனும் சிறந்த எரிபொருள் கிட்டியது.

அவர் சாண எருக் குவியல்களை அடுக்கடுக்காக சதுர வடிவில் சேகரித்து, மெதுவாகவும் ஆழமாகவும் எரிய வைத்தார்.  அந்த வெப்பத்தை கடத்தவும், மென்மேலும் அதிகரிக்கவும் துருத்தி போன்ற அமைப்பை அவர் உருவாக்கினார். இரவு முழுவதும் அது இயக்கப்பட்டு நெருப்பின் வெப்பம் அதிகரிக்கப்பட்டது. அவர் உருவாக்கிய அத்துருத்தி மிகவும் வித்தியாசமானது, அது காலத்தால் மறக்கப்பட்டாலும் அக்கருவி அக்காலத்தைய அறிவியலின் உச்சம். அது இரவு முழுவதும் சீராகவும் நிதானமாகவும் வெப்பத்தை அதிகரிக்க வைத்தது. முடிவில் அவர் உருவாக்கிய அமைப்பில் இரும்பு  உருக்கப்பட்டு சேகரிக்கப்பட்டது.
அவர் பிரித்தெடுத்த இரும்பு முழுமையாக பயன்படுத்தப்பட்டது.ஒவ்வொரு துண்டும் அரிவாள்களாகவும் ஈட்டிகளாகவும் கத்திகளாகவும்  மாறியது.  

ஆயுதங்களை உருவாக்கத் தேவையான இரும்பை பிரித்தெடுத்த பின்பு மிஞ்சியது வெறும் சாம்பல் குவியல் கொண்டசாம்பல் மேடுகள்.
படம்: சாம்பல் மேடுகள்.
Source: journey to perhaps the largest ash-mound of Hallur, Karnataka, evidence for iron working. Bharatkalyan97

 அந்தச் சாம்பலை அள்ளி சிவன் பூசிக் கொண்டார். அதை பூசியவுடன் அவரது உடலின் அழல் மிகவும் மட்டுப்பட்டது.

 இந்த இரும்பு உருக்கும் முறையை யாராலும் பிற்காலத்தில் மீளுருவாக்கம் செய்ய இயலவில்லை. சிலர் இதை இழந்த அறிவியலால் உருவாக்கப்பட்டது என்றனர்.  மற்றவர்கள் இது தெய்வீகச் செயல் என்றனர்.  ஆனால் இந்த புதிர் யாராலும் விடுவிக்கப்படாமலேயே  இருக்கிறது.
 
இன்றும், புதிஹால் மற்றும் சங்கனகல்லுவில், அந்த சாம்பல் குவியல்கள் இருக்கின்றன.
இன்றைய அறிவியலாளர்கள்  கூட, அதன் பயன்பாடு எத்தகையது என்பதை பற்றிய அனுமானங்களை மட்டுமே கூற முடிந்திருக்கிறது.

 இப்பொழுது வெறும் சாம்பல் மேடாக காட்சியளிக்கும் இந்த இடம் ஒரு காலத்தில் உயிர்ப்போடு இருந்தது. அது ஒரு வெப்பம் சூழ்ந்த இடம். 

 வெப்பத்தினால் அவதியுறும் சிவன் அந்த சாம்பல் மேட்டில் ஒரு முக்கியமான இயற்கை ரகசியத்தை அறிந்து கொண்டார்.

நெருப்புக்கு மேல் படர்ந்திருந்த  சாம்பல்  ஒரு காப்புப் பொருளாக இருந்தது.  வெப்பத்தினால் அந்தச் சாம்பலைக்   கடந்து செல்ல முடியவில்லை.  அந்த சாம்பலின் வெப்பத்தைத் தடுக்கும் திறனை பரிசோதிக்க, யாரும் துணியாத காரியத்தை சிவன் செய்தார்.
 நீறு எனும் சாம்பலின் மகத்துவத்தை பரிசோதிக்க வெறும் கால்களோடு நெருப்பின் மீது அவர் நடந்தார். அந்த வெப்பம் சற்றும் அவரது உடலுக்குக் கடத்தப்படவில்லை. நெருப்பின் மேல் பூத்திருந்த நீறு வெப்பத்தைத் தடுத்தது. மேலும் அவர் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொண்டார். அவ்வாறு பூசிக் கொண்ட பின்னர் சூரியனின் அழல் அவரை சிறிதும்   தீண்டவில்லை. 

இது வெறும் சாம்பல் இல்லை. இது மருந்து.... நினைவு...அறிவு.... புத்தி.

இன்றும் இங்கே உள்ள கிராமங்களின் பலவற்றின் பெயர்கள்  பூதி என்று முடிகின்றன. உதாரணத்திற்கு Budihal, Buditippa, அதிலும் பூதிகுண்ட்டா பகுதியில் தான் 46 அடி உயர சாம்பல் மேடு இருந்துள்ளது. 

பூதி எனும் வேர்சொல் சாம்பலைக்குறிப்பது. இதிலிருந்தே விபூதி எனும் பெயர் தோன்றியது.  விபூதி என்பது சிவனை பொருத்த மட்டிலும் ஒரு புனிதப் பூச்சு. அமைதியின் அடையாளம். ஒரு பாதுகாப்புக்கவசம்.

 சிவனைப் பின்தொடர்ந்து பீரப்பாவும் நெருப்பின் மேல் நடந்து பார்த்தான். அவனுக்கும் ஆச்சரியம் தாங்க இயலவில்லை. அவனும் அந்த விபூதியை எடுத்து கையிலும் நெற்றியிலும் பூசிக் கொண்டான். அதைத்தொடர்ந்து நந்தனும் அதன் மேல் ஓடினான்.

இன்றுவரை, அந்த பழங்குடி வீரனின் வழித்தோன்றல்கள்  நெருப்பின் மீது வெறுங்காலுடன் நடக்கின்றனர்,  நீறு பூத்த நெருப்பு அவர்களின் பாதங்களைக் காக்கிறது என்பதை உணர்த்திய அந்தச் செயல், மதப்பூச்சு பூசப்பட்டு மதச் சடங்காக தற்போதும் தென்னிந்தியாவில் பின்பற்றப்படுகிறது.

 இன்றும்கூட அவர்களின் கால்நடைகளும், காளைகளும், பசுக்களும்  நெருப்பில் நடக்க வைக்கப்படுகின்றன.

 இவ்வாறு நீறு எனப்படும் அந்தச் சாம்பல்   அவர்களின் மத அடையாளமாகியது. இன்றும் மௌனமாக, மர்மமாக , தக்காண பீடபூமி முழுவதும், அந்த சாம்பல் குவியல்கள் காணக் கிடைக்கின்றன. 
ஒரு காலத்தில் நெருப்பு இல்லாமல் எரிந்த நெருப்பின் சான்று அது...மறந்துபோன ஒரு தொழில்நுட்பம் அது...  அந்தத் தொழில்நுட்பம் பற்றி இப்போது இருக்கும் யாருக்கும் தெரியாது. அது தக்காண பீடபூமியால்  மட்டுமே நினைவுகூறப்படக் கூடிய ஒரு தெய்வீக நாடகம். 
-------

 “…However it [the ashmound tradition of the Deccan] may ultimately be found to relate to the cult of cattle throughout India, and however humble the theme may appear beside the grander flights of Indian religious thought, at least we may assert that what we have been able to reconstruct is something unique and hitherto undreamed of; and as such it adds a new and peculiarly Indian chapter to the history of human institutions” (Allchin - British archeologist).

-------
Pictures courtesy : Sensual, material, and technological understanding: exploring prehistoric soundscapes in south India
Nicole bolvin. University of Cambridge.

Goddess Worship and Dance in Indian Prehistory: Interrogating Neolithic and Iron Age Evidence for Roots of Hindu Ritual Practice.Srinivasan, Sharada.

Rock art and rock music: Petroglyphs of
the south Indian Neolithic
Nicole Boivin

Prehistoric Petroglyphs of Kappagallu - part II,Journeys across Karnataka blog.

Landscape, Monumental Architecture, and Ritual: A Reconsideration of the South Indian Ashmounds by Nicole Boivin

அளவிலாப் பெம்மான் (ஆதியோகி: அத்தியாயம் 20)

காலைக் கதிரவன் பீம்பேட்கா சமவெளியின் விளிம்பில் மெதுவாக உயர்ந்து கொண்டிருந்தது. அந்த ஒளி பாறைச் சுவர்களில் தீட்டப்பட்டிருந்த  பழமையான ஓவியங்...