Saturday, October 11, 2025

பரம் பாண்டியனார் (ஆதியோகி: அத்தியாயம் 14)


வேந்தன் தனது நாட்டிற்கு அவசரமாகத் திரும்பினான் , ஆனால் அவனது மணக்கண்ணில், கல் இச்சி மரத்தின் கீழ் வீற்றிருந்த அழல் தாங்கிய உடலையும் கருணை மிகு கண்களையும் கொண்டிருந்த அந்த அந்த மனிதனின் உருவம் நிழலாடியபடி இருந்தது.

 வேந்தனின் நாடு முழுவதும்   பயங்கரத்தின் பாரத்தால் நடுங்கியது. குழந்தைகள் சுவாசிக்கத் திணறினர் . முதியவர்களின் இருமல் ஒளி சீரிய தாளகதியில் நகர் முழுவதும் எதிரொலித்தபடி இருந்தது. வயது பேதமின்றி அனைவரும் அந்தக் கோர நோயின் பிடிக்கு மடிந்து கொண்டிருந்தனர். உயிருடன் இருப்பவர்களோ  தங்களை அந்த நோய் எப்பொழுது பீடிக்குமோ என்ற பயத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

 இந்த காட்சியை கண்டபடி வேந்தன் தனது மாளிகைக்கு திரும்பினான். அங்கே வேந்தனின் மகன் மெல்லிய மூச்சு விட்டபடி  அரை மயக்க நிலையில் கிடந்தான். மூப்பர்கள் அவன் இன்றைய நாளை தாண்ட மாட்டான் என கை விரித்து விட்டனர்.  வேந்தனுக்கு அன்றைய பொழுது சூனியமாக கழிந்தது. அவனால் செய்யக்கூடியது எதுவும் இல்லை. இறப்பினை அறிவிக்கும் பறையின் ஒலி அந்த நகர் முழுவதும் எதிரொலித்தபடி இருந்தது. 
 அந்தப் பறை இசையினூடாக மெல்லிய உடுக்கை ஒலி ஒன்று கேட்டது. வேந்தன் இதயம் படபடக்க ஓசை வந்த திசையை நோக்கிப் பார்த்தான். 

பிரகாசமான நிலவு ஒளியின் கீழ், காளையின் மீது அமர்ந்தபடி அந்த மனிதர் நகரத்தை நோக்கி  வந்தார். அவரது இடுப்பில் மூலிகைச் செடிகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன, மலை ஊற்று நீர் நிரம்பிய கொம்புக் குடுவையையும், பின் நாட்களில் விஷம் என அறியப்படும் விசித்திர உப்பு படிகங்களையும் அவர் கொண்டு வந்திருந்தார் .

 அவர் நேராக வேந்தனின் மாளிகைக்குள் நுழைந்தார் அவர் எதுவும் பேசவில்லை. கையை நீட்டி, பையனின் மணிக்கட்டில் விரல்களை வைத்து நாடியின் துடிப்பைப் படித்தார். பின்னர் அவர் தன் வேலையைத் தொடங்கினார்.

 அவர் இலைகளை உள்ளங்கைகளில் நசுக்கி, பசும்பால் மற்றும் சாம்பலுடன் கலந்து, அதோடு சில படிக உப்புக்களையும் கலந்தார். அந்தக் கலவையை ஐந்து உலோகங்களின் கலவையால் ஆன வெண்கலப் பாத்திரத்தில் ஊற்றி அதை மெதுவாக எரியும் நெருப்பில்  சிறிது நேரம் காட்டினார்.  

 பின்னர் அவர் அந்தக் கலவையை சூடான நீருடன் கலந்து சிறுவனுக்கு புகட்டினார்.  விடியற்காலையில் சிறுவனை ஆக்கிரமித்திருந்த  காய்ச்சல் விலகியது.

 இவ்வனைத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேந்தன் சிவனை நோக்கி “ நீங்கள் அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைத்து விட்டீர்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.

"நான் நெருப்பை அணைக்க வில்லை" என்றார் சிவன்.

"பின்னர் அது எப்படி தணிந்தது?" என வேந்தன் ஆச்சரியத்துடன் வினவினான். 

“நான் அதற்கு வேறு ஒன்றை எரிக்கக் கொடுத்தேன்” என்றார் சிவன்.

“பையன்… அவன் உயிர் பிழைப்பானா?” வெந்தன் தன் மகனருகில் மண்டியிட்டு கேட்டான்.

சிவன் அமைதியாகத் தூங்கும் அந்தச் சிறுவனைப் பார்த்தார் . “அவன் உயிர் பிழைப்பது மட்டுமல்ல,” என்று மென்மையாகக் கூறினார்...“  இந்தக் காளையைப் போல் வீரமிக்கவனாக...  பாண்டியனாக இருப்பான்” என்று நந்தனை வருடியபடி கூறினார் 

“பாண்டியன் ” என்ற வார்த்தை காற்றில் தங்கியது. தமிழில் பாண்டி என்றால் காளை,வலிமை, அசைக்க முடியாத உறுதியின் அடையாளம்.

அன்று முதல், அந்தக் குழந்தை பாண்டியன் எனப் பெயரிடப்பட்டான். பின்நாட்களில் அவன் தன் இரு சகோதரர்களுடன்,  தமிழகத்தை ஒரு வலிமையான காலகட்டத்திற்கு வழிநடத்தினான். 

பின்னர் வந்த வாரங்களில், சிவனின் மருந்து கிராமத்தை குணப்படுத்தியது. இறப்புகள் நின்றன. மாசடைந்த நீரே காரணம் என சிவன் வேந்தனை எச்சரித்தார். மண்ணில் கோடுகள் வரைந்து, வடிகால் கால்வாய்கள் தோண்டவும், மண்  படுக்கைகள் அமைக்கவும் அவர்களுக்கு சிவன் கற்றுக் கொடுத்தார். அவையே பின்னாட்களில் கீழடி மற்றும் ஹரப்பாவில் எதிரொலித்த சுகாதார முறைகளில் முன்னோடி வடிவமாகும். 

 வேந்தன் சிவனிடம்  இரும்பு மற்றும் வெண்கலத்தைப் பற்றியும்  மூலிகைகளைப் பற்றியும் கேட்டான். சிவன் அவனுக்கு தாதுக்களைப் படிக்கவும், உலைகள் கட்டவும், உலோகங்களை உருக்கவும்  கற்றுக்கொடுத்தார்.

 வேந்தனின் கனிவும் வீரமும் மெச்சத்தக்க வகையில் இருந்ததை சிவன் கண்டு கொண்டார். தந்தையின் கண்டிப்பும் தாயின் அரவணைப்பும் ஒருங்கே அமைந்த மருத நிலத்தின் வேந்தன் இறைவனுக்கு சமமானவன் என்பதை சிவன் உணர்ந்து கொண்டார். 
 எனவே சிவன் வேந்தனுக்கு வீரத்தையும் அன்பையும் ஒரு அரசன் கைவிடலாகாது என்று போதித்தபடி இருந்தார்.

இந்த வார்த்தைகளை கேட்டுகொண்டிருந்த இளம் பாண்டியன் தனக்கும் அரசாட்சியைப் பற்றி கற்பிக்குமாறு சிவனிடம் அடிபணிந்து நின்றான். பாண்டியனிடம் சிவன் “எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பதே வேந்தர்களின் முதல் கடன்,” என்று கூறி, மென்மையாக பையனின் தோளில் கை வைத்தார்.

அந்த வார்த்தைகள் பாண்டியனின் இதயத்தில் ஆழமாகப் பதிந்தன, அவனது வழித்தோன்றல்கள் பல தலைமுறைகளாக அந்த வார்த்தைகளை எப்போதும் அணையாத ஒரு தீபமென இதயத்தின் அருகில் வைத்துப் பாதுகாத்தனர்.

 அந்தப் பாண்டிய குல வழித்தோன்றல்களில் ஒருவர்  மலையத்வஜன். குருக்ஷேத்திரப் போரில் உண்மையின் பக்கம் நின்றவர் அவர். பாண்டவர்களுக்கு அசைக்க முடியாத ஆதரவு அளித்தவர். அவர் ஒரு மன்னராக மட்டுமல்ல, நீதியின் அடையாளமாகவும் நின்றார், உண்மையை நிலைநாட்ட பெருவீரர்களை எதிர்த்து அவர் போரிட்டார். 

 அவர் மறைந்தாலும் அந்த மஹாஅதிரதனின் மரபு அவரது மகள் மூலம் தொடர்ந்தது. அவள் மீன்  போன்ற ஒளிரும் கண்களுடைய  அழகிய இளவரசி.  இன்றுவரை, அவளது இருப்பு மதுரையில்  ஒவ்வொரு வீதியிலும் உணரப்படுகிறது. ஆட்சிகள் மாறலாம் காட்சிகள் மாறலாம் ஆனால் அவள் தான் என்றும் மதுரையின் நிரந்தர அரசி. அந்தப் பாண்டிய  குல மன்னர்கள் தான் உலகின் நீண்ட நாட்கள் அரசாட்சி செய்த மன்னர் குழுவினர். அவர்கள் அனைவரும் ஆதி வேந்தனின் வழித்தோன்றல்கள்.  அவர்களை வழிநடத்தியது ஆதி சிவன்.

 சிவனின் இருப்பால் வேந்தனின் நகரம் செழிக்க தொடங்கியது.
சிவனைப் பின்தொடர்ந்த கால்நடைகள் வேந்தனது நாட்டில் தங்கியிருந்தன. அவை தங்கள் பாலை மக்களுக்கு வாரி வழங்கின, அவற்றின் எரு சிவப்பு மண்ணை உரமாக்கி, அவை மேய்ந்த இடங்களில் உயிரைக் கொண்டுவந்தன. ஒரு புதிய ஒத்திசைவு தொடங்கியது. ஒரு நாகரிகம் எழுந்தது.

  நகரத்தில் மகிழ்ச்சி பெருக ஆரம்பித்தது. ஆனால் சிவனின் உடல் நோயின் தாக்கத்தால் சீற்றம் கொள்ள  ஆரம்பித்தது. நோயின் தாக்கத்தை சிவன் வெண்பாஷானத்தால் கட்டுப்படுத்தத் தொடங்கினார். ஆனால் வெண்பாஷானம் வேறு ஒரு பக்க விளைவை கொண்டு வந்தது. அது மிகவும் வலி மிகுந்த ஒரு பக்க விளைவு.

 பிரையாபிசம் எனப்படும் வலி மிகுந்த உயிர் நாடி எழுச்சி அவ்வப்போது சிவனுக்கு நேர ஆரம்பித்தது. சிவன் அவ்வலியை அமைதியாகத் தாங்கினார்.  அவரால் மக்களோடு இயல்பாக இருக்க முடியவில்லை.
 இம் மக்களோடு அவருக்கான தொடர்பு முடிவதை அவர் அறிந்து கொண்டார். அவர் இவ்விடத்தை விட்டு புறப்படுவதற்கு தயாரானார். 

 அவருக்கும் தமிழர்களுக்கும் இடையேயான நேரடித் தொடர்பு முடிவடையும் நேரம் நெருங்கி விட்டது. அவர் தமிழர்களுக்கு போதித்த  உலோகவியல், வாழ்வு முறைகள், மருத்துவ முறைகள் அனைத்துமே அவர்களை வழிநடத்தும். பிற்காலத்தைய மனிதர்கள் சிவகளையில் இரும்புகளின் எச்சங்களை கண்டெடுக்கும் பொழுது ஆதித்தமிழனது  பெருமையை இந்த உலகம் உணரும். ஆனால் இவை அனைத்திற்கும்  அடித்தளம் வித்திட்ட சிவன் தற்பொழுது வடக்கு நோக்கி புறப்பட தயாரானார்.

ஒரு அமைதியான இரவில், அவர் நந்தனின் மீது ஏறி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மறைந்தார். அவர் செல்வதை யாரும் பார்க்கவில்லை. மண்ணில் குளம்புத் தடங்கள் மட்டுமே இருந்தன.

 அவர் விட்டுச் சென்ற போதனைகள் தமிழகத்தை வழி நடத்தியது. அவர் விட்டுச் சென்ற கால்நடைகள் நிலங்களை வளப்படுத்தியது. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற வெற்றிடம் அகத்தியர் வரும் வரையிலும் நிரப்பப்படாமலேயே இருந்தது. உலகம் அவரை பல்வேறு வழிபாட்டு முறையில் தொழுதாலும் அவரது போதனை நீர்த்து போக வைக்கப்படடாலும் அகத்தியர் வழி வந்த சித்தர் சமூகம் அப்போதனைகளை... அவர் காட்டிய இறைவனை அடையும் வழிமுறைகளை... இறைவனாகவே ஆகும் பயிற்சிகள் அனைத்தையும் நீர்த்துப் போகாமல் காத்து வந்தனர்.  நட்ட கல்லில் அவரை செதுக்கி கருவறைக்குள்  அடைத்து தமிழர்களிடம் இருந்து அவரை பிரிக்க முயற்சிகள் பல நடந்தன. ஆனால் சித்தர் சமூகம் தமிழர்களுக்கு இறை எனப்படுவது என்ன என்பதை அடையாளம் காட்டிடத் தவறவில்லை.
--------

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

சிவவாக்கியர்

No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

பரம் பாண்டியனார் (ஆதியோகி: அத்தியாயம் 14)

வேந்தன் தனது நாட்டிற்கு அவசரமாகத் திரும்பினான் , ஆனால் அவனது மணக்கண்ணில், கல் இச்சி மரத்தின் கீழ் வீற்றிருந்த அழல் தாங்கிய உடலையும் கருணை மி...