Monday, July 6, 2026

ஏர் முன்னது எருது 12 - பித்தம்


இந்தப்படத்தை பாருங்களேன்!

இந்தப் பட்டாம்பூச்சி ஏன் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது?


இந்த மீனும் பல்லியும் ஏன் நிழலை நாடுகின்றன?

இந்த உயிரினங்களுக்கு வெயில் சூட்டுக்கு ஏற்ப உடல் வியர்க்குமா?

உங்களுக்கு குளிரில் உடல் நடுங்குகிறதே, அதே போல் இவற்றிற்கும் உடல் நடுங்குமா?

மழைக்கு ஒதுங்கிய இந்த  அந்துப்பூச்சிக்கு உடல் நடுக்கம் ஏதுமில்லையே?

மழைக்கு உடல் ஜில்லிட்டு, உடல் சூடு குறைந்து இது இறக்க நேரிடுமா?

உடல் சூடு என்பது என்ன?

உனக்கு சூடு சுரணை ஏதாவது உண்டா என கேட்கிறார்களே, சூட்டுக்கும் சுரணைக்கும் என்ன சம்பந்தம்?

சூடு கொண்ட உடலாக இருப்பதன் பயன் என்ன?

உடல் சூடு எங்கிருந்து பெறப்படுகிறது? 

அடுப்பு எரிப்பது போல் உடலுக்குள் ஏதேனும் தகனம் நடக்கிறதா?

--------

"உந்துவளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
செந்தீ சுடரிய ஊழியும்
பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும்."

— பரிபாடல்

நமது முன்னோர்கள் இயற்கையை ஐம்பூதங்களின் அடிப்படையில் புரிந்துகொண்டனர். 

ஐம்பூதங்கள் :

விலகி அசைவது காற்று; கரைத்து எடுத்துச் செல்வது நீர் ; அனைவரையும் தாங்குவது நிலம்; பரந்து விரிந்தது ஆகாயம்; ஆற்றலை வெளிப்படுத்துவது நெருப்பு. 

இந்த மாற்றங்கள் அனைத்தின் மையத்தில் இருப்பது வெப்பமாகும். விதை முளைப்பதிலிருந்து நட்சத்திரங்கள் ஒளிர்வது வரை, செல்களில் உள்ளே நடக்கும் வேதிவினைகளிலிருந்து  புவியியல் நிகழ்வுகள் வரை வெப்பத்தின் பங்கு உள்ளது.

நெருப்பை கட்டுப்படுத்தி பயன்படுத்தக் கற்றது முதல்தான் மனித இனம் தனது முன்னேற்றத்தைத் தொடங்கியது. 

நெருப்பு உணவைச் சமைத்தது; நோய்க்கிருமிகளை அழித்தது; இருளை அகற்றியது; குளிரிலிருந்து பாதுகாத்தது; உலோகங்களை உருக்கியது. 

வெப்பம்:

இதே வெப்பம் தான் உயிரினங்களின் உடலிலும் இடைவிடாமல் செயல்படுகிறது. நாம் உண்ணும் உணவானது உடலில் வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு ஆற்றலாக மாறுகிறது. இந்த வளர்சிதை மாற்றங்களின் போது உருவாகும் வெப்பம் தான் நமது உடலின் செயல்பாடுகளை நடத்துகிறது. இதயத்தின் துடிப்பு, தசைகளின் இயக்கம்,  செரிமானம், போன்ற அனைத்திற்கும் வெப்பம் மிகவும் அவசியம். எனவே நமது உடல் வெப்பத்தை தொடர்ந்து உருவாக்கி, பயன்படுத்தி, கட்டுப்படுத்தும் ஒரு இயக்கமிகு அமைப்பாகும்.

உடலுக்குள் நடக்கும் வளர்சிதை மாற்றங்கள் வெப்பத்தை உருவாக்குகின்றன; குருதியானது அந்த வெப்பத்தை அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கிறது. அதிகப்படியான வெப்பத்தை உடலானது மூச்சு, வியர்வை போன்றவற்றின் மூலம் வெளியேற்றுகிறது. இவ்வாறாக வெளிப்புற சூழலுக்கு ஏற்ப உடல் தனது வெப்பநிலையை தொடர்ந்து சரிசெய்துக்கொள்கிறது. இந்த  சமநிலையே உயிர் வாழ்வின் அடிப்படையாகும்.

உடலின் வெப்பத்தைத் தாமாகவே உருவாக்கும் திறன் விலங்குகளின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான முன்னேற்றமாகும். தவளைகள் போன்ற இருவாழ்விகள், மீன்கள், பெரும்பாலான ஊர்வன மற்றும் பெரும்பாலான பூச்சிகள் சுற்றுப்புற வெப்பத்தையே சார்ந்து வாழ்கின்றன. இதனால் அவற்றிற்கு குறைந்த உணவே போதுமானதாக இருக்கிறது; எனவே அவற்றால் நீண்ட நாட்கள் உணவின்றி உயிர்வாழ முடியும். ஆனால் குளிரான சூழலில் அவற்றின் தசைகள் - நரம்புகள் போன்றவற்றின் செயல் வேகம், செரிமானம் மற்றும் உடலின் அனைத்து செயல்பாடுகளும் மந்தமடைகின்றன. அதனால் அவை குறைவாக நகரும், அவற்றின் வேட்டையாடும் திறனும் குறையும், இனப்பெருக்கமும் வளர்ச்சியும் மெதுவாகும். 

தவளைகள் குளிர்காலத்தில் சுறுசுறுப்பை இழக்கின்றன; பல்லிகள் வெயிலில் காய்ந்து உடல் வெப்பத்தை உயர்த்திக்கொள்கின்றன; பெரும்பாலான மீன்களின் நீந்தும் வேகமும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்தே அமைகிறது. பூச்சிகளும் குளிர் இரத்தப் பிராணிகளே; இருப்பினும் தேனீக்கள், வண்டுகள் போன்ற சில பூச்சிகள் பறப்பதற்கு முன் தங்களின் பறக்கும் தசைகளை அதிரவைத்து தற்காலிகமாக வெப்பத்தை உருவாக்குகின்றன. 

 வேகமாக நீந்தும் சில சுறாக்கள் உடலின் சில பகுதிகளை சுற்றுப்புற நீரை விட வெப்பமாக வைத்துக்கொள்ளும் திறனை பரிணாம வளர்ச்சியில் பெற்றன.இதன் காரணமாக அவற்றால் குளிர்சூழலில் அதிகம் நகராமலிருந்த மற்ற உயிரினங்களை எளிதாக வேட்டையாட முடிந்தது.

இதற்கு மாறாக, பறவைகளும் பாலூட்டிகளும் அதிக வளர்சிதை மாற்றத்தின் மூலம் உடலின் வெப்பத்தை எப்போதும் நிலையாக வைத்திருக்கின்றன. இதனால் அவற்றின் தசைகள் வேகமாகச் செயல்படுகின்றன; நரம்புத் தகவல்கள் விரைவாகக் கடத்தப்படுகின்றன; செரிமானமும் நோய் எதிர்ப்பும் திறம்பட நடைபெறுகின்றன. எனவே பகல், இரவு, கோடை, குளிர்காலம் என்ற வேறுபாடின்றி தொடர்ந்து இயங்கி, வேட்டையாடி, நீண்ட தூரம் இடம்பெயர்ந்து, குட்டிகளைப் பராமரித்து, துருவப் பகுதிகளிலிருந்து பாலைவனங்கள் வரை பல்வேறு வாழிடங்களில் இவற்றால் வெற்றிகரமாக வாழ முடிகிறது.  இதன் காரணமாகவே இவை வெப்ப இரத்தப்பிராணிகள் எனப்பட்டன. 

இவ்வாறாக பரிணாமத்தில் இரண்டு வெற்றிகரமான உத்திகள் உருவாகின: குறைந்த ஆற்றலைச் செலவழித்து சுற்றுப்புற வெப்பத்தைச் சார்ந்து வாழும் குளிர் இரத்த முறை, மற்றும் அதிக ஆற்றலைச் செலவழித்தாலும் தொடர்ந்து உயர் செயல்திறனுடன் வாழ வழிவகுக்கும் வெப்ப இரத்த முறை.

பித்தம்:

இப்பொழுது நாம் சித்த மருத்துவம் கூறும் பித்தம் எனும் கருதுகோளைப் பற்றி பார்ப்போம்.

பித்தம், தூய தமிழில் 'அழல்' என்று அழைக்கப்படுகிறது. அழல் என்றால் சூடு என்று நாம் அறிவோம்.

 உணவின் முதல் நோக்கம் எரிசக்தி. இதில் மாவுச்சத்தும் கொழுப்புச்சத்தும் எரிசக்தியை அடிப்படையாகக் கொண்டவை. புரதம் உடலின் கட்டுமானத்திற்கு உதவுகிறது, ஒரு நாளைக்கு ஒரு கிலோவிற்கு சராசரியாக 0.8 கிராம் புரதம் தேவைப்படுகிறது.

புரதத்தின் முதன்மை பணி கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு. ஆனால் தேவைக்கு அதிகமான புரதத்தை நாம் எடுத்துக்கொண்டால், அதன் அமினோ அமிலங்கள் உடைக்கப்பட்டு, மீதமுள்ள கார்பன் அமைப்பு எரிக்கப்பட்டு ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது.

 அமினோ அமிலங்களில் இருக்கும் நைட்ரஜன் யூரியாவாக சிறுநீர் வழி வெளியே தள்ளப்பட்டு விடுகிறது. மீதம் இருக்கும் மூலக்கூறுகள் உடலுக்கு எரிசக்தியாக பயன்படுகிறது. 

இந்த உடல் சூடு எவ்வாறு பெறப்படுகிறது என்பதை   கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வேதிவினை செயல்பாடு விளக்குகிறது. சர்க்கரை ஆக்சிஜனோடு வினைபுரிந்து கார்பன்டையாக்சைடாக உடைக்கப்பட்டு ஆற்றல் வெளியிடப்படுவதை இந்த வேதிவினை விளக்குகிறது.

உணவை ஆற்றலாக எரிப்பதில் தகனமேடையாம் மைட்டோகாண்ட்ரியா தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பின்வரும் படத்தைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். 

நீங்கள் பட்டினியாய் இருக்கும் போது glycogen  அதன் பின்பு கொழுப்பு முதலியன தகனமேடையாம் மைட்டோ கான்ட்ரியாவில் எரிக்கப்பட்டு, ஆற்றலாம் அழலை உற்பத்தி செய்து, உடல் சூட்டைப்பேணுகின்றன. 

ஒரு கிராம் கார்ப், அல்லது ஒரு கிராம் புரதம் எரிக்கப்படும் போது 4 கிலோ கலோரி ஆற்றல் பெறப்படுகிறது. ஆனால் ஒரு கிராம் கொழுப்பை எரித்தால் 9 கிலோ கலோரி ஆற்றல் கிடைக்கிறது. சிறுகுடலில் கணைய மற்றும் பித்த நொதிகள் துணையுடன் தான் ஆற்றல் மூலக்கூறுகள் பிரித்து உறிஞ்சப்பட்டு பின் தகனம் நடக்கிறது. எனவே மேற்கூறிய நொதிகள்தான் தகனத்தின் அடிப்படை. ஆதலால் அழலில் குறியீடாக பித்தம் குறிக்கப்பட்டிருக்கிறது எனலாம்.

உணவானது உணவுப் பாதையில் பயணிக்கும் பொழுது சிறு குடலுக்கு அருகில் மஞ்சள் நிற திரவம் கலக்கிறது என்பதை பிணங்களை அறுத்து ஆய்வு செய்தால் யார் வேண்டுமானாலும் கண்டுபிடித்து விடலாம். வெள்ளை நிற பரோட்டா வாய் வழியாக சென்று பின்னர் மஞ்சள் நிற மலமாக வெளியேறுவதற்கு அந்த மஞ்சள் நிற திரவமே காரணம் என்பதை எளிதாக அறிந்து விடலாம். இதை அக்காலத்தில் தமிழர்கள் கண்டுபிடித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஆனால் சித்தர்கள் எனப்பட்டவர்கள் எந்தெந்த உணவுகளை உண்டால் பித்தம் அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அந்த உணவுகளில் ஐந்து பூதங்களின் எவற்றின் சாராம்சம் மிகுந்து இருக்கிறது என்பதையும் பகுத்து இருக்கிறார்கள். எந்தெந்த சுவை பித்தத்தை தூண்டும் என்பதையும் கண்டறிந்து இருக்கிறார்கள். இங்குதான் சித்த மருத்துவம் ஒரு மேம்பட்ட அணுகு முறையை கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது.  

நவீன அறிவியல் 'குறைப்பியம்' என்னும் முறையை கையாள்கிறது. இது பகுப்பாய்வை ஊக்குவிக்கிறது. 'பகுப்பாய்வு அறிவியல்' அனைத்தையும் எந்திரத்தின் பகுதிகளாக பார்க்கச் சொல்கிறது. அது உடலையும் எந்திரமாகத் தான் பார்க்கிறது. 

அது உடலின் ஒவ்வொரு பகுதியையும் நுணுக்கமாக ஆராய்கிறது. ஆனால் சித்த மருத்துவம் உடலை முழுமையான ஒன்றாக அணுகுகிறது. எதையும் குறைக்காமல் விளக்காமல் முழுதாக அணுகும் முறைக்கு 'முழுமை' - wholeness என்று பெயர்.

சித்த மருத்துவம் உடலையும், உணவையும், உலகையும் ஐம்பூதங்களின் கலவையாகத்தான் பார்க்கிறது. அண்டத்தில் இருப்பதைக் கொண்டு வளர்ந்த உயிர் மற்றும் உணர்வினை கொண்ட பூதமாகத்தான் உடல் இருப்பதாக சித்த மருத்துவம் கருதுகிறது.

"உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும்

உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் 

அவ்வவ் பூத வழி அவை பிறக்கும்- மணிமேகலை"

அந்த உடலில் இருக்கும் மூன்று குற்றங்களில் ஒன்றான அழலைப் பற்றித்தான்  நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சூரியன் உற்பத்தி செய்த அதே வெப்பம் தான்; செடிகள் வழியாக உங்களை அடைந்து உங்கள் உடலில் அழலாக இருக்கிறது.

 அழல்  செரிமானத்தோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. நொதிகள் மற்றும் ஹார்மோன்கள் உதவியுடன் உணவை செரித்துப்பெறப்படும் ஆற்றலே அழல் எனப்படுகிறது. எனவே உணவை ஆற்றலாக மாற்றும் முழு மாற்றச்செயலின் குறியீடாக பித்தத்தை பார்க்கலாம். 

சித்தமருத்துவம் கூறும் பித்தம் என்பது உடலின் மூன்று தோஷங்களில் (வாதம், பித்தம், கபம்) ஒன்று. 'பித்தம் அடங்கிடில் பேசாமல் போய்விடு' என மருத்துவரை எச்சரிக்கிறது சித்தமருத்துவம்.உடல் சூடு அவ்வளவு முக்கியம்.இதன் முக்கிய பண்புகள் சூடு, கூர்மை, மாற்றம் (வளர்சிதை மாற்றம்), செரிமானம், பசி,அறிவின் தெளிவு ஆகியவையாகும். பித்தத்தின் இயல்பு நெருப்புத் தன்மையுடன் தொடர்புடையது. அதனால் பித்தம் அதிகரித்தால் உடலில் வெப்பம் அதிகமாக உணரப்படலாம், வாய்ப்புண், கண் எரிச்சல், அதிக தாகம், மஞ்சள் நிற உடல் மாற்றம், எரிச்சல், கோபம், B.P போன்ற அறிகுறிகள் தோன்றலாம். (இதைத்தான் நமது மக்கள் சூடு சுரணை என்கின்றனர் போலும்). 

அதாவது கழுத்துக்கு கீழே தொடங்கி; தொப்புளுக்கு மேலே இருக்கும் பகுதி வரையில் இருக்கும் உருப்புகள் பித்தத்தின் தொடர்பில் உள்ளவை. செரிமானம் மற்றும் இதயம் சம்பந்தமான கோளாறுகள் முதலியவை இதற்குக் கீழ் வருகின்றன.

எந்தப்‌ பொருளானது புசிக்கப்பட்டு அது சீரணமாகும் போதோ அதற்குப்பின்னரோ   வயிற்றை புரட்டல், வாந்தி, புத்திமாறுதல்‌ முதலியவற்றை ஏற்படுத்துகிறதோ  அவற்றை பித்தப்  பொருளென்பர்‌. 

உப்பும் கசப்புமே பித்தத்தை தூண்டுவன என்கிறது சித்த மருத்துவம். உப்பானது நீர், தீ  எனும் இரண்டு பூதங்களின் கலவை. கசப்பு என்பது வளி, விண் ஆகிய பூதங்களின் கலவை. உப்பும் இனிப்பும் நட்பு சுவைகள். எனவே இனிப்பும் பித்ததோடு தொடர்புடையதாகிறது. இதுதான் பித்தத்தோடு தொடர்புடைய சித்த மருத்துவ அனுமானங்கள். 

சித்த மருத்துவத்தின் இந்த கருத்துக்களை தற்போதைய அறிவியல் பார்வையில் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
------

நாமெல்லாம் வெப்ப இரத்தப் பிராணிகள். நமது உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். அதற்குக் கீழே போனாலும் பிரச்சனை தான், மேலே போனாலும் பிரச்சனை தான்.

 வெளியே பத்து டிகிரி குளிர் இருந்தாலும் உடல் எவ்வாறு முப்பத்தியேழு டிகிரியில் இருக்கிறது என்றால் தைராய்டு ஹார்மோன் தான் காரணம்.  உடலின் கொழுப்பையோ கிளைக்கோஜன் போன்ற சர்க்கரை மூலக்கூறுகளையோ எரித்து; அது உடலின் வெப்பநிலையை நிலை நிறுத்துகிறது.

உடலின் வெப்பநிலையை நிலையாக வைத்திருப்பதில் தைராய்டு ஹார்மோன்கள் மட்டுமல்ல, உடலில் இருக்கும் ஒரு சிறப்பு கொழுப்பு திசுவும் (Brown fat – பழுப்பு கொழுப்பு) பங்கு வகிக்கிறது.

நாம் பொதுவாக கொழுப்பை உடலின் சேமிப்பு கிடங்கு என்று நினைக்கிறோம். ஆனால் பழுப்பு கொழுப்பு ஒரு சிறிய “அக்னிக்கூடு” போல செயல்படுகிறது. குறிப்பாக குளிர்ச்சியான சூழலில், இது சேமித்து வைத்துள்ள கொழுப்பை எரித்து வெப்பத்தை உருவாக்குகிறது.

நமது செல்களின் உள்ளே இருக்கும் மைட்டோகாண்ட்ரியா (Mitochondria) என்பவை உணவிலிருந்து கிடைக்கும் மூலக்கூறுகளை எரித்து ATP எனப்படும் ஆற்றலை உருவாக்கும் தகன மேடைகள் போன்றவை. ஆனால் பழுப்புக் கொழுப்பில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியாக்களில் ஒரு சிறப்பு செயல்முறை உள்ளது. இதற்கு “மைட்டோகாண்ட்ரியல் இணைப்பு தளர்வு” (Mitochondrial uncoupling) என்று பெயர்.இதன் மூலம் உடல் குளிரை எதிர்த்து தனது வெப்பநிலையை பாதுகாக்கிறது.

குளிரான சூழலை உணரும் போது, மூளையின் ஹைப்போதலாமஸ் அதனை உணர்ந்து, நரம்பு மற்றும் ஹார்மோன் வழியாக உடலுக்கு தகவல் அனுப்புகிறது. அதன் தொடர்ச்சியாக தைராய்டு ஹார்மோன்களும், பழுப்பு கொழுப்பின் செயல்பாடுகளும் அதிகரித்து, உடலின் “அழல்” நிலையை பராமரிக்க உதவுகின்றன.

இதுவே இயற்கை உருவாக்கிய நுண்ணறிவு.
வெளியில் குளிர் இருந்தாலும், உள்ளே உள்ள நெருப்பு அணையாமல் காக்கும் அமைப்பு.

வெப்பம் ஆற்றலின் வெளிப்பாடு.

அதிக ஆற்றலை கொண்ட விலங்கே வனத்தில் வெற்றியாளராக கருதப்படும். அந்த ஆற்றலை உடலில் நிலை நிறுத்த பரிணாம வளர்ச்சியில் பல படிநிலைகளைத் தாண்டி தகவமைப்பை பெற்று இருக்கின்றன பாலூட்டி விலங்குகள்.

வனத்தில் விலங்குகளின் தேவை மூன்றே மூன்று தான்.

 உணவு (Food)

இணை (Mate / Reproduction)

இருப்பிடம் (Shelter / Territory)

இந்தத் தேவைகளைப் பெறுவதற்கு விலங்குகள் பெரும்பாலும் வன்முறை அல்லது போட்டி (competition & aggression) மூலமே முயல்கின்றன. இதனால் இரண்டு முக்கிய உணர்ச்சி நிலைகள் உருவாகின்றன:

கோபம் / ஆக்ரோஷம் (Anger / Aggression) – எதிரியை எதிர்கொள்ள

பயம் / தப்பி ஓடல் (Fear / Flight) – ஆபத்திலிருந்து தப்பிக்க

ஆபத்தை எதிர்கொள்ளவும் சரி; தப்பி ஓடவும் சரி; உடல் அதிக ஆற்றலை கோருகிறது அதை நிகழ்த்த உடல் அதிகமாக தகனம் செய்யத் தொடங்குகிறது

ஆனால் மருத நிலத்தின் மனிதர்கள் சண்டையைக் கொண்டு எதையும் பெறுவதற்கான அவசியம் அற்றவர்கள். மருத நிலம் என்பது மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழும் சமத்துவ பூமி. அங்கே கோபம் வன்முறை முதலியவை அவசியமற்றது. வன்முறை என்பது மனிதன் எனும் சிந்திக்கத் தெரிந்த உயிரி சிந்தனையை மேற்கொள்ளாததின் வெளிப்பாடு.

ஆனால் நவீன மனிதனின் தேவைகள் நகரத்திற்குள் பல்வகையில் இருக்கின்றன இந்த கோபம் ஆக்ரோஷம் முதலியன பல வகைகளில் ஏற்பட இங்கே வாய்ப்புள்ளது 

கோபம் (Acute Anger) → உடனடி உணர்ச்சி வெளிப்பாடு

வஞ்சம் (Chronic Resentment) → இருப்பு வைக்கப்பட்ட சினம் 

சோகம் / ஆற்றாமை (Depression / Helplessness) → தீர்க்க முடியாத கோபத்தின் விளைவு

சினம் ஒரு சேர்ந்தாரைக் கொல்லி என்கிறார் வள்ளுவர்.அது உயிரியல் ரீதியாகவும் உண்மை. சினமும் அதை சார்ந்த மற்ற உணர்ச்சிகளும்   சிம்பதட்டிக் நரம்பு மண்டலத்தை தூண்டி, உடலை தொடர்ந்து “உயர் ஆற்றல்” நிலையில் வைத்திருக்கின்றன. 

கடுமையான பதட்டம் – அட்ரினலின் (Adrenaline / Epinephrine)

படபடப்பு மற்றும் பதட்டத்தின் போதும் நம்மை யாரேனும் திட்டும் போதும் சிம்பதட்டிக் நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது என்று பார்த்தோம்.

புலி முன் தோன்றுவது, முதலாளி “வேலையை விட்டு தூக்கி விடுவேன்” என்று மிரட்டுவது, அல்லது காதலி “என் கண் முன்னால் முழிக்காதே” எனக் கூறுவது, இவை அனைத்தும் உடலுக்கு உடனடி ஆபத்து சமிக்ஞையாகப் பதிவாகின்றன.

இவை அனைத்தும் நமக்கு பெரும் பதட்டத்தை தூண்டும். அப்போது சுரப்பது அட்ரினலின். அது ஒரு வனவாசியை வனத்தில் தப்புவிக்க செய்த ஒரு ஆதார செயல்பாடு. இது மில்லியன் ஆண்டுகளாக வன விலங்குகளை உயிர் பிழைக்க உதவிய அதே பழங்கால உடலியக்க முறை.

மில்லியன் வருடங்களாக உங்களை காப்பாற்றி வந்த இந்த ஹார்மோன்களுக்கு, உங்கள் முன்னால் நிற்பது காதலியா முதலாளியா என்றெல்லாம் தெரியாது. எப்படியேனும் உங்களின் உடலின் ஆற்றலை அதிகரித்து உங்களை அந்த ஆபத்தில் இருந்து தப்புவிக்க வைக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருக்கிறது.

மிதமான / நீடித்த பதட்டம் – கார்டிசோல் (Cortisol)

 இது போன்ற பெரும் பதட்டம் மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறு சிறு பதட்டச் சூழலும் நமது வாழ்வில் அடிக்கடி நேருகின்றது.

காட்டில் இருக்கும் பொழுது சிறு புதரில் ஏற்படும்  அசைவு ஒரு வனவாசியை ஓடச் செய்யவில்லை என்றாலும் வருவது 'புதருக்குள் இருப்பது புலியாக இருக்குமோ?' என்கின்ற சிறு பதட்டத்தை அவனுக்குள் தூண்டிவிடும்.

 “என்ன தம்பி ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்குற” என முதலாளி சொல்வது,  “என்ன ஒழுங்கா ரிப்ளை பண்ண மாட்டேங்குற”என காதலி சொல்வது - இவை அனைத்தும்  மிதமான பதட்டத்தைத் தூண்டக்கூடியது. இந்த மிதமான பதட்டம் விரைவாக தப்புவிக்க செய்ய அல்லது சண்டையிடுவதற்கு உங்கள் உடலை தயார் செய்கிறது.  சர்க்கரையையும் உப்பையும் குருதியில் அதிகப்படுத்துவதே இதன் வேலை. 

 இந்த மிதமான பதட்டத்தின் விளைவாக கார்டிகோ-ஸ்டீராய்டுகள் எனப்படும் ஹார்மோன்கள் அட்ரினல்  சுரப்பியின் பட்டையிலிருந்து சுரக்கும். ஓடுவதற்குத் தேவையான குளுக்கோசை உடலில் அதிகரிப்பதும், உப்பின் மூலம் பிரஷரை அதிகரிப்பதும் இவற்றின் வேலை. உப்பானது இனிப்பை உடலுக்குள் அனுப்பும் வேலையை செய்கிறது. உப்பும் இனிப்பும் நட்பு சுவைகள்.

உப்பு நேரடியாக உடலில் வெப்பத்தை உருவாக்குவதில்லை. ஆனால் உடலின் நீர்–உப்பு சமநிலை, இரத்த அழுத்தம் மற்றும் செல்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த வகையில், உப்பு தனியாக “அழலை உருவாக்கும் பொருள்” அல்ல; மாறாக, உடலின் உள் சமநிலையை பராமரிக்கும் ஒரு துணை காரணியாக செயல்படுகிறது. உடலின் நரம்பு–ஹார்மோன் அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் போது, உயிர் இயக்கத்தை (metabolic activity) நிலைநிறுத்துவதில் பங்கு பெறுகிறது.

சித்தமருத்துவப் பார்வையில் கூறப்படும் “உப்பு அழலைத் தூண்டும்” என்ற கருத்தை, நவீன அறிவியல் மொழியில் பார்க்கும்போது, உடலின் திரவ சமநிலை, நரம்பு தூண்டல் மற்றும் மாற்றச்செயல் செயல்பாடுகளுடன் உப்பின் தொடர்பு இருப்பதாக புரிந்து கொள்ளலாம்.

சூழலானது குளிர்காணும் பொழுது; மூளையின் ஹைப்போதலாமஸ் அதை உணர்ந்து கொண்டு பிட்யூட்டரியிடம் அது தகவல் சொல்கிறது. பிட்யூட்டரி தைராய்டைத் தூண்டி உடலின் அழலை அதிகரிக்கிறது. நரம்பும் ஹார்மோனும் இவ்வாறு இணைந்து வேலை செய்வதை நியூரோ எண்டோகிரைன் செயல்பாடு என அறிவியல் அழைக்கிறது. நரம்பை வலுப்படுத்தும் கசப்பு பொருட்கள் இவ்வாறு நரம்பின் மூலம் அழலை  உருவாக்குவதில் துணை புரிகின்றன.

 எனவே உப்பு கசப்பு இரண்டுமே அழல் என்னும் பித்தத்தை தூண்டவல்லவை எனும் சித்த மருத்துவத்தின் கருதுகோள் அறிவியல் உண்மைகளுக்கு மிக அருகில் உள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது.

சிவன் உப்பு, சக்தி கசப்பு என்று பார்த்தோம். இவை இரண்டும் இணைந்து உயிர் வளர்ப்பன. உப்பு அதிகமானால் வரும் விஷக்காய்ச்சலுக்கு கசப்பே மருந்து. சிவத்தின் சூட்டை சக்தி தணிக்கிறது என இதை நம் மக்கள் உருவகமாக வர்ணித்தனர்.

 இப்படித்தான் உப்பு அதிகரிப்பதால் வரும் அம்மை முதலிய நோய்களை வேப்பிலை மஞ்சள் போன்ற கசப்புகளின் துணையோடு  நாம் வெற்றிக் கொண்டிருக்கிறோம். வெயில் காலங்களில் மாடுகளுக்கு வரும் கோமாரி நோயை இன்னும் தமிழகத்தின் பல இடங்களில் கசப்பு என்றுதான் அழைக்கின்றனர்.

தமிழர் பார்வையில் 'அழல்' என்பது வெறும் வெப்பநிலை அல்ல; உயிரை உருவாக்கும் ஆற்றல். அது காமத்தோடு தொடர்புடையது. பூப்படைதல் அந்த ஆற்றலின் எழுச்சி; திருமணச் சேர்க்கை அந்த ஆற்றலை ஒழுங்குபடுத்தி, குடும்பம் மற்றும் சந்ததியினூடாக சமூகத்திற்கு வழிநடத்தும் சடங்கு என்கிறார் brenda எனும் பிருந்தா அம்மையார்*(இவர் ஒரு கனடிய மானுடவியலாளர்).

                 Brenda E.F. Beck
 அதாவது ஆவுடையோடு இணைந்து காமத்தீயை இலிங்கம் தணிக்கும் பொழுது, உடல் தானாக குளிர்ந்துவிடும். அதனால் தான் பருவம் எய்தும் நிகழ்வு 'சமைதல்' என்றும், திருமணச் சேர்க்கை நிகழ்வு, குளிர்விக்கும் பொருள்படும் 'சாந்திமுகூர்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது என்பது இவர் முன்வைக்கும் ஆய்வு முடிவுகள் ஆகும்.

அழல் என்பது இவ்வாறாக நம் உடலைப்பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட அழல் மிகினும் குறையினும் உடலுக்கு நல்லதல்ல.

அழல்  அதிகமானால் உடல் உருகிவிடும், அழல்   குறைந்தால் உடல் பெருக்கும்.  இதன் காரணமாகத்தான் தைராய்டு குறைபாடு உள்ளவர்களின் உடல் குண்டாக இருக்கிறது. மேலும் அவர்களுக்கு உடல்சூடும் கம்மியாக இருக்கிறது. 

ஆனால் அதிகரிக்கும் உடல் சூடு மூளையை பாதித்து வலிப்பை வரவைக்க வல்லது. பித்த நீர் உடலில் அதிகரித்தாலும் இறுதியில் மூளையை  பாதிக்க வல்லது. இதுபோல உடலின் அழலை அதிகம் உடையவர்கள் உடலை சமநிலைப்படுத்த வேண்டி, ஒவ்வொரு பொருளையும் சுவைத்து உணர்ந்து, உடலை சமநிலைப்படுத்தி,  சித்த மருத்துவத்தின் இந்தக் கொள்கைகளை கண்டறிந்திருக்க நிறைய வாய்ப்பு உள்ளது.


Colour and Heat in South Indian Ritual. Brenda E.F. Beck. 1969 . 

 A qualitative study of adolescent girls' experiences of menarche and menstruation in rural Tamil Nadu, India. Int J Qual Stud Health Well-being. Gold-Watts A, Hovdenak M, Daniel M, Gandhimathi S, Sudha R, Bastien S. 2020

 

Friday, June 26, 2026

இயற்கையின் குரல் - புத்தகத் திறனாய்வு

ஒரு மொழியை கற்பதற்கு இதுவரையிலும் நாம் பல புத்தகங்களை படித்திருப்போம்.  நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு அது போன்றதொரு புத்தகத்தை படித்திருக்கிறேன். அது ஒரு கையடக்க புத்தகம். புத்தகத்தின் தலைப்பு '30 நாட்களில் ஹிந்தி பாஷை'.

 கால்நடை மருத்துவத்தில் உயர் படிப்பு படிக்க, வட இந்தியா சென்ற பொழுது நான் வாங்கிச் சென்ற புத்தகம் அது.  அந்தப் புத்தகத்தின் உதவியால்  ஹிந்தி மொழியில் சில வினா வாக்கியங்களை அமைக்க கற்றுக்கொண்டேன்.   வேறு எந்த வகையிலும் அந்த புத்தகம் எனக்கு பயன்படவில்லை.  

சிகிச்சைக்காக கால்நடைகளை அழைத்து வரும் விவசாயிகள் ஹிந்தி மற்றும் போஜ்பூரியை  தங்கள் தொடர்பு மொழியாகக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் அறவே தெரியாது.  இருப்பினும்  அங்கே எனக்கு ஹிந்தி பெரிதாகத் தேவைப்படவில்லை. ஏனெனில் எனது நோயாளிகள் வாயில்லா ஜீவன்கள். எனது நோயாளிகளால் ஹிந்தியை பேசி விட முடியாது. 

 பிறகு எதற்கு எனக்கு ஹிந்தி?  

மாட்டிற்கு என்ன வியாதி என்று மாட்டின் உரிமையாளர்கள் சொல்வதற்கு முன்னமே மாட்டின் துயரம் மிகு கண்கள்  என்னிடம் பேசி விடுகிறதே? பிறகு எதற்கு எனக்கு மற்றொரு மொழி?

  விலங்குகளின் துன்பங்களை அறிவதற்கு எந்தவித  பாஷையும் தேவையில்லை.  Empathy என்கின்ற ஒரு அடிப்படை பண்பு இருந்தால் மட்டுமே போதுமானது.  சக உயிர்கள் மீது அன்பு செலுத்தும் எந்த ஒருவருக்கும், தனது உணர்வுகளை கடத்துவதற்கு; வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட மொழி என்பது அவசியமற்றது.  இதுவே கால்நடை மருத்துவத்தின் பால பாடம்.

நிற்க . Chat gpt, google translate போன்ற செயலிகள் வந்த பிறகு, பிற மொழிகளை கற்பது என்பது கிட்டத்தட்ட தேவையற்றதாகிவிட்டது. இருப்பினும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு மொழியை கற்கும் நோக்கில், மற்றுமொரு புத்தகத்தை வாசிக்க கையில் எடுத்தேன். 

ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்தை இவ்வளவு சுவாரசியமாக படிப்பேன் என நான் நினைத்துப் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புத்தகம் தான் நான் படிப்பதற்கு தேர்ந்தெடுத்த புத்தகம். 

அப்படி என்ன மொழியை அந்த புத்தகம் கற்பிக்கிறது என்று நீங்கள் கேட்க கூடும். 

அது அனுதினமும் நம்மைச் சுற்றி பேசப்பட்டு வரும் ஒரு மொழி! 

நம்மை சுற்றிலும் பேசப்பட்டு வந்தாலும் நாம் கேட்க மறந்த ஒரு மொழி!! 

அது மண்ணுலகின் மறக்க பட்ட உயிர்ப்பின் மொழி!!! 

 நாம் அறிந்த வரையில் , சுவாசத்தை குரல்வளையால் அதிர வைத்து, ஒரு ஆன்மாவின் எண்ணத்தை மற்றொரு ஆன்மாவுக்கு குரல் வழியாக கடத்துவதே மொழி எனப்படுகிறது. 

அப்படிப் பார்த்தால் சில்வண்டுகளின் ரீங்காரங்கள் குரல்வளையால் எழுப்பப்படும் ஒலி அல்லவே?  அது குரலோசை கிடையாதே? அப்படியானால் அது மொழி என்ற பிரிவிற்குள் வராதா? 

நிச்சயமாக இல்லை. 

 சில்வண்டிற்கு அந்த ரீங்காரமே தொடர்பு கொள்ளும் சாதனம். எனவே அந்த ரீங்காரமே சில்வண்டின் மொழியாகும். 

சப்வேயில் துண்டை விரித்து தூங்கிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி உங்களிடம் எந்த வார்த்தையையும் பேசவில்லை.  இருப்பினும் நீங்கள் ஏன் அவருக்கு யாசகம் அளித்தீர்கள்? 

உங்களை யாசகம் அளிக்கத் தூண்டியது யாருடைய குரல்? 

அது எவ்வகை மொழி? 

கணித வாத்தியாரின் கோபம் மிகு கண்கள்,  காதலியின் கடைக்கண் பார்வை, கை தூக்கி விடும் நண்பனின் கரங்கள்,  இவை அனைத்தையும் நம்மால்  கோபம் என்றும், காதல் என்றும், நட்பு என்றும் மொழிபெயர்க்க முடிந்திருக்கிறது. 

ஆனால் தொட்டாசிணுங்கியின் சுணக்கத்தை எப்பொழுதாவது நாம் மொழிபெயர்த்திருக்கிறோமா? 

குறைந்தபட்சம் அந்த தாவரத்தை உயிருள்ள ஒரு ஜீவன் என்ற வகையில் அணுகி இருக்கிறோமா? 

உண்மையில் தாவரங்களால் தங்களை உண்ண வருபவர்களின் குரலை கேட்க முடியும். அண்டை தாவரங்களின் மணத்தை நுகர முடியும். தங்களை நேசிப்பவர்களின் வடிவத்தை போல மாற்றிக் கொள்ள முடியும் என்ற உண்மையை இந்த புத்தகம் எனக்கு போதித்தது. 

நான் படித்த அந்த புத்தகத்தின் பெயர் 'இயற்கையின் குரல்'.அதன் ஆசிரியர் அய்யா பாமயன். 


இயற்கை நம்மிடம் தினமும் பேசிக்கொண்டே இருக்கிறது.
வெறும் வார்த்தைகளால் அது நம்மிடம் பேசவில்லை; அசைவுகளால், ஒளியால், மணத்தால், காலத்தின் மாற்றங்களால் அது நம்முடன் உரையாடிக்கொண்டிருக்கிறது.

மகுடியின் இசைக்கு பாம்பு அசைவது போல, சூரியனின் பயணத்தை நோக்கி சூரியகாந்தி மலர் திரும்புவது போல, இயற்கையின் மெல்லிய சமிக்கைகளுக்கு ஏற்ப நமது உடலும் தனது இயக்கங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது.

நாம் உறக்கத்தில் இருந்தாலும், விடியலின் வருகையை இயற்கை நமக்கு அறிவித்துவிடுகிறது. பறவைகளின் கீதங்கள், காற்றின் தட்பவெப்ப மாற்றங்கள், வெளிச்சத்தின் மெல்லிய தீண்டல், இவை அனைத்தும் நமது கண்கள், காதுகள், சருமம் போன்ற புலன்களின் வழியாக மூளையை அடைந்து, “இது பகலின் நேரம்” என்று உடலுக்குச் சொல்லுகின்றன. அதற்கேற்ப விழிப்பு, செயல்பாடு, ஆற்றல் ஆகியவற்றை இயக்கும் ஹார்மோன்களை நமது உடல் சுரக்கத் தொடங்குகிறது.

இயற்கையோடு இசைந்து வாழ்வதற்காகவே நமது உடல் பரிணமித்திருக்கிறது.

ஆனால், இன்று மனிதன் இயற்கையிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள முயல்கிறான்.
நாம் எழுப்பிய சுவர்கள் பறவைகளின் பாடல்களை நம்மிடமிருந்து ஒதுக்கி வைக்கின்றன.
நாம் அமைத்த சாளரங்கள் சூரியனின் ஒளியைத் தடுக்கின்றன.
குளிரூட்டப்பட்ட அறைகள் காலத்தின் வெப்பத்தையும், பருவங்களின் மாற்றத்தையும் நம்மிடம் இருந்து பிரித்து வைக்கின்றன.

நிலத்தோடும், பொழுதோடும், பருவங்களோடும் இணைந்து வாழ மறுக்கும் இந்த வாழ்க்கை முறை உண்மையில் நமக்கு நன்மை தருகிறதா?

எனது தொழில் கால்நடை மருத்துவம். அது உயிர்களின் அவத்தையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டது. விலங்குகளின் துன்பத்தையும், மனிதர்களின் துன்பத்தையும் ஒரே உயிரியல் பார்வையில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அந்த எண்ணத்திலிருந்து, இந்த புத்தகம் எனக்குள் எழுப்பிய சிந்தனையை ஒரு ஒப்பீடாக பார்க்க விரும்புகிறேன்.

நிலத்தோடும் காலத்தோடும் இயைந்து வாழும் ஒரு எளிய உயிரினத்தோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்போமா?

ஒரு பட்டாம்பூச்சியின் வாழ்க்கையையும் நமது நகர வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

நாம் வாழும் நகரங்களில் உணவு, உடை, உறைவிடம் என அனைத்து வசதிகளும் குவிந்து கிடக்கின்றன. ஒரு சொடக்கில் உணவு வீடு தேடி வருகிறது. குளிரூட்டப்பட்ட அறைகள், மென்மையான படுக்கைகள், வசதியான வாழ்க்கை என இயற்கை வழங்காத பல வசதிகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் ஒரு பட்டாம்பூச்சி தனது உணவிற்காக மலர்கள் தோறும் பறக்க வேண்டும். அதன் உணவு உறுதி செய்யப்பட்டதல்ல. மலர்கள் வழங்கும் மது மட்டுமே அதன் வாழ்வாதாரம்.

ஆயினும், நாம் அன்போடு வளர்க்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளும், பெரியவர்களுக்கு நீரிழிவு நோயும் அதிகரித்து வருவதை நாம் காணமுடிகிறது.

ஆனால் வாழ்நாள் முழுவதும் மலர்களின் மதுரத்தை மட்டுமே சுவைக்கும் பட்டாம்பூச்சிக்கு எந்த ஊட்டச்சத்துகுறைபாடும் வருவதில்லை. மதுமேகம் அதை அண்டுவதில்லை.
ஏனெனில் இயற்கை அதற்குத் தேவையானதை, சரியான அளவில், சரியான நேரத்தில் வழங்குகிறது.

அந்தப் பட்டாம்பூச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தாவரங்கள் அன்போடு வழங்குகின்றன. அதற்கு பதிலாக, அந்தப் பட்டாம்பூச்சி தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் துணை நிற்கிறது.

வனத்தால் பட்டாம்பூச்சி வாழ்கிறது.
பட்டாம்பூச்சியால் வனமும் வாழ்கிறது.

இதுவே இயற்கையின் சமநிலை.

இவ்வாறு இயற்கையோடு இணைந்து வாழ்வதே நலமான வாழ்வு என்பதை இந்த புத்தகம் முன்வைக்கிறது. இயற்கையிலிருந்து மனிதன் விலகிச் செல்வதால் ஏற்படும் விளைவுகளை அறிவியல் ஆதாரங்களுடன் இந்த நூல் விளக்குகிறது.

ஆனால், இயற்கையை விட்டு விலகிய மனிதன் இன்று நுகர்வு வெறியிலும், முடிவில்லாத போட்டியிலும் சிக்கி, தனது நலனையும் சூழலின் நலனையும் ஒருசேர இழந்து கொண்டிருக்கிறான்.

இயற்கையிலிருந்து மனிதனின் பிரிவு உருவாக்கும் முக்கியமான விளைவுகளில் மன அழுத்தமும் பதட்டமும் முன்னிலை பெறுகின்றன என்பதை ஆசிரியர் தெளிவாக எடுத்துரைக்கிறார். இயற்கையற்ற சூழலில் வளரும் குழந்தைகள் மனச்சோர்வு, எதிர்மறை சிந்தனைகள் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். மண்ணைத் தொடுதல், வெட்டவெளியில் ஓடுதல், இயற்கையின் மத்தியில் விளையாடுதல் போன்ற அனுபவங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன.

வெயிலிலும் மண்ணிலும் விளையாடுவது என்பது ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் ஒரு செயல். அனால் வெறும் மண்ணில் குழந்தைகளை நாம் விளையாட விடுவதில்லை.

 உண்மையில் மண் என்பது வெறுக்கப்பட வேண்டிய ஒன்றா?

கண் பேசும் வார்த்தைகளை புரிந்துகொள்ள முடியாமல் காதலர்கள் தவிக்கும் போது, மண் பேசும் மொழியை இந்த புத்தகம் நமக்குக் கற்றுத் தருகிறது.

மரங்களுக்கு மட்டுமல்ல, மண்ணுக்கும் அறிவு உண்டு என்பதை ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த பகுதி  “இயற்கையின் நுண்ணறிவு” என்ற தலைப்பு.
அதன் கீழ் மண்ணின் மதி, அதன் நினைவு, அதன் உயிர்ப்புத் தன்மை குறித்து ஆசிரியர் விளக்கியிருப்பது, இயற்கையை ஒரு வளமாக அல்லாமல்; ஒரு உயிருள்ள உறவாக பார்க்கச் செய்கிறது.

இயற்கை நம்மைச் சுற்றி இருப்பதல்ல.
நாம் இயற்கையின் ஒரு பகுதி.

அதை உணர்ந்தால் மட்டுமே மனிதன் மீண்டும் முழுமையான வாழ்வை நோக்கி திரும்ப முடியும்.


யாரையேனும் திட்டும் போது கூட மண்ணோடு ஒப்பிட்டு திட்டும் வழக்கமுடைய நமக்கு, மண் ஒரு ஞானி என்பதை  எடுத்துரைக்கிறார் ஆசிரியர். மண் உயிருள்ளது, மனிதர்களைவிட எண்ணிக்கையில் நிறைய உயிரினங்களைக்கொண்டது. நமது கணிணி நெட்வொர்க்கைக்காட்டிலும் மேம்பட்ட நெட்வொர்க்கை கொண்டது மண். மண் மீள்திறன் மிக்கது. அறிவாற்றல் மிக்கது என்று ஆசிரியர் நமக்கு புரியும்படி எளிதாக விளக்குகிறார்.

ஆறாம் அறிவு... செயற்கை நுண்ணறிவு... என அறிவின் எல்லைகளை நாம் விஸ்தரித்துக் கொண்டிருக்கும் வேளையிலே, அறிவு என்பது மனித மனங்களுக்கோ அல்லது தொழில்நுட்ப அமைப்புகளுக்கோ மட்டும் சொந்தமானது அல்ல என்பதை மண் உள்ளிட்ட இயற்கையின் ஒவ்வொரு கூறும் நமக்கு நினைவூட்டிகொண்டு இருக்கின்றது.
இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் ஒன்றோடொன்று இணைந்து,  ஒத்துழைத்து,  தகவமைந்து இயங்குகிறது.  இவை அழிவன அல்ல. மீள் உருவாக்கம் பெற வல்லவை.இவ்வாறு தனக்கே உரிய ஞான வடிவங்களை இயற்கை கொண்டுள்ளது  என்று ஆசிரியர் நமக்கு அறிவிக்கும் போது; அறிவு என்பது என்னவென்று தெரியாமலேயே வெறும் புத்தகங்களில்  மட்டுமே அறிவை தேடுகிறோமே என்று நமக்கே நம் மீது கழிவிறக்கம் வருகிறது. 

ஒன்றுக்கொன்றான ஒத்துழைப்பு மூலமே வாழ்க்கை செழித்து வளர்கிறது என்பதை,  மண் உட்பட இயற்கையின் அனைத்து கூறுகளும் நமக்கு கற்பிக்கின்றது.மனித குலம் பூமியின் உயிருள்ள அமைப்புகளுக்குள் தமக்கான இடத்தை புரிந்து கொள்வதற்கு மண்ணின் இந்த ஞானம் உதவும் என்கிறார் ஐயா பமையன்.

ஒவ்வொரு உயிரினமும் இந்த இயற்கையில் இருந்தே பிறக்கிறது. இயற்கையின் துணை கொண்டே உயிர் வளர்க்கிறது. பிரிதொரு நன்னாளில் இயற்கையோடு கலந்து இயற்கை எய்துகிறது. பின்னர் அந்த உயிர் புதைவுற்ற இடத்திலிருந்து இன்னொரு உயிர் பிறக்கிறது. இயற்கையில் இறந்துபட்ட உடலோ, சாணமோ, எதுவும் கழிவு அல்ல. இயற்கையில் ஒன்றன் 'கழிவு மற்றொன்றின் உணவு'. 

                                                One man's trash is another man's treasure. 

இந்த 'ஊட்டச் சுழற்சி'யில் பூகோள வலை பின்னல் முழுவதும் ஆற்றலும் பொருளும் தொடர்ந்து பரிமாற்றம் செய்யப்படுகின்றன . இவ்வாறு இயற்கை 'கழிவில்லா வாழ்க்கை' என்ற கொள்கையை நமக்கு கற்றுத் தருகிறது அது 'அழிவில்லா வாழ்வு'க்கும் வழிகாட்டுகிறது என்கிறார் நூல் ஆசிரியர்.

ஆனால் இது போல் அல்லாமல் இயற்கையின் மூலங்களை சுரண்டி எடுத்தல், பொருட்களை உருவாக்குதல், நுகர்தல், கழிவுகளைக் கொட்டி வைத்தல் என்ற அணுகுமுறையை இந்த இன்றைய தொழில்மய வளர்ச்சி மாதிரிகள் பின்பற்றுகின்றன என்கின்றார் ஆசிரியர். இந்த 'நேர்கோடு வளர்ச்சி' மாதிரியானது இயற்கையை எல்லையற்ற கிடங்காகவும் கழிவுகளை கொட்டும் முடிவற்ற இடமாகவும் கருதுகிறது என்கின்றார்  ஆசிரியர்.

மனிதனின் இடம்பெயர்வு இன்று கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி நகர்கிறது. நகரம் என்ற பெரும் குழந்தையின் முடிவில்லாத பசியைத் தீர்க்க இயற்கையின் மடியில் இருக்கும் வளங்களால் மட்டும் இனி தீனி போட முடியாத நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் நகரம் என்பது மனிதன் உருவாக்கிய 'நேர்கோட்டு அமைப்பு'; ஆனால் இயற்கை என்பது சுழற்சியின் அடிப்படையில் இயங்கும் ஜீவனுள்ள அமைப்பு. இயற்கை தனித்தன்மையை அழிப்பதில்லை; பன்மயத்தை அரவணைத்து இயங்குகிறது. அங்கு வெற்றி என்பது மற்றொன்றை அழிப்பதில் இல்லை; ஒன்றோடு ஒன்று இணைந்து வாழ்வதில் உள்ளது. இயற்கையின் உலகில் போட்டியை விட கூட்டுறவு மேலோங்குகிறது. ஒரு காடு என்பது தனித்தனி மரங்களின் கூட்டம் மட்டுமல்ல; வேர்கள், பூஞ்சைகள், நுண்ணுயிர்கள், விலங்குகள், நீர், காற்று என அனைத்தும் இணைந்து உருவாக்கும் ஒரு உயிரியல் சமூகமாகும் என்பதை ஆசிரியர் நமக்கு தெளிவுற புரிய வைக்கிறார்.

நகர வாழ்க்கை மனிதனுக்கு பல வசதிகளை வழங்கியுள்ளது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம், தொழில்நுட்பம் போன்றவை மனித வாழ்வை எளிதாக்கியுள்ளன. இவை அனைத்தும் மனிதனின் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளங்கள்.

ஆனால், இந்த முன்னேற்றங்களோடு இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பழங்குடி சமூகங்களின் அறிவையும் நாம் மறந்துவிட முடியாது. அவர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ கற்றுக்கொண்டவர்கள்.

ஆசிரியர் பழங்குடி வாழ்க்கையை உயர்த்திப் பேசவும் இல்லை; நவீன அறிவியலை மறுக்கவும் இல்லை. மனித அறிவியலும், இயற்கையோடு வாழ்ந்த மக்களின் அனுபவ அறிவும் ஒன்றோடு ஒன்று இணைந்தால் மட்டுமே முழுமையான முன்னேற்றம் சாத்தியம் என்பதையே வலியுறுத்துகிறார்.

மனிதன் தனது ஆறாம் அறிவால் பல கண்டுபிடிப்புகளை செய்துள்ளான். ஆனால் இயற்கை கோடிக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவாக்கிய தீர்வுகள் நமக்கு இன்னும் பல பாடங்களை கற்றுத் தருகின்றன.

உதாரணமாக, கரையான் புற்றுகள் மிகக் குறைந்த ஆற்றலை பயன்படுத்தி உள்ளே காற்றோட்டத்தையும் குளிர்ச்சியையும் பராமரிக்கின்றன. இதை ஆராய்ந்த மனிதன், இயற்கையை பின்பற்றி நிலையான கட்டிட வடிவமைப்புகளை உருவாக்கினான்.

அதேபோல், மீன்கொத்தியின் அலகு வடிவம் தண்ணீரில் வேகமாக நுழையும் போது ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு அதிவேக ரயில்களின் வடிவமைப்பும் மேம்படுத்தப்பட்டது.


இதனால் இயற்கை என்பது வெறும் வளங்களை தரும் இடம் மட்டுமல்ல; அது நமக்கு அறிவையும் ஞானத்தையும் வழங்கும் ஒரு ஆசிரியர்.

ஆனால் இயற்கை நமக்கு கற்றுத் தருவது மட்டுமல்ல, சில நேரங்களில் நம்மை பாதுகாக்கவும் செய்கிறது.

2004-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் சுனாமி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. நவீன கருவிகள் கடலின் ஆழத்தில் ஏற்பட்ட மாற்றங்களை உடனடியாக உணர முடியாத நிலையில், இயற்கையுடன் நெருக்கமாக வாழ்ந்த சில பழங்குடி சமூகங்கள், கடலின் பின்வாங்கல், விலங்குகளின் அசாதாரண நடத்தை, இயற்கையின் மாற்றமான ஒலிகள் போன்ற அறிகுறிகளை கவனித்து ஆபத்தை உணர்ந்தனர்.

அவர்களின் தலைமுறை அனுபவ அறிவு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர உதவியது.


மனித அறிவும் இயற்கை அறிவும் இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டியதன் அவசியத்தையும் பகரும் ஒரு எடுத்துக்காட்டு இந்நிகழ்வு. நவீன அறிவியல் கருவிகள் இயற்கையின் மாற்றங்களை அளவிட உதவுகின்றன; ஆனால் இயற்கையோடு நீண்ட காலம் வாழ்ந்த சமூகங்களின் பாரம்பரிய அறிவு, அந்த மாற்றங்களை உணர்ந்து கொள்ளும் நுண்ணுணர்வை வழங்குகிறது.

இயற்கை நமக்கு வெறும் பாடங்களை மட்டும் கற்பிப்பதில்லை; அது நம்மை பாதுகாக்கும் ஒரு உயிருள்ள அமைப்பு. அதை கேட்கவும், புரிந்துகொள்ளவும் கற்றுக்கொண்டால், இயற்கையின் ஞானமும் மனிதனின் அறிவியலும் இணைந்து எதிர்காலத்தை பாதுகாக்க முடியும். 


பழங்குடி அறிவு அமைப்புகள் ஆதிக்கத்திலிருந்து கூட்டுறவுக்கும், சுரண்டலிலிருந்து பகிர்வுக்கும், துண்டிக்கப்பட்ட பார்வையிலிருந்து முழுமையான புரிதலுக்கும், தனிமனித மையத்திலிருந்து சமூக மையத்திற்கும் நம்மை அழைத்துச் செல்கின்றன. இது தமிழருக்கு புதிதான சிந்தனை அல்ல; அள்ளித்தந்த பூமியை அன்னையாகவும், சொல்லித்தந்த வானத்தையும் தந்தையாகவும் பார்த்த மரபில் வந்தவர்கள் தமிழர்கள்.

சங்க இலக்கியத்தில் வெளிப்படும் 'திணை சிந்தனை'யின் தொடர்ச்சியே இந்த சிந்தனை என்கிறார் ஆசிரியர். நிலம், காலம், உயிர்கள், மனித உணர்வுகள் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் அந்த வாழ்வியல் பார்வை, இன்று உலகம் எதிர்கொள்ளும் சூழலியல் சிக்கல்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும் என்பதை ஆசிரியர் இந்தபுத்தகத்திலும் நிறுவுகிறார்.

ஆசிரியரின் முந்தைய நூலான “திணையியம்” வரலாற்று ஆதாரங்கள், சங்க இலக்கிய சான்றுகள் மற்றும் உலகின் மெய்யியல் கோட்பாடுகளோடு தமிழரின் சிந்தனையை ஒப்பிட்டு, ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் ஒழுகலாறை விளக்கும் ஒரு ஆழமான ஆய்வு நூலாக அமைந்திருந்தது. அந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் கனமான சிந்தனைகளை சுமந்திருந்தது. ஒவ்வொரு வரியும் புதிய கேள்விகளை எழுப்பி, வாசகனை சிந்தனையின் ஆழத்திற்கு அழைத்துச் சென்றது.

ஆனால் இந்த நூல் வேறொரு தன்மை கொண்டது. இது வாசிப்பதற்கு எளிதானது; ஆனால் சிந்தனையில் ஆழமானது. இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் கேட்க மறந்த இயற்கையின் குரலை ஆசிரியர் நமக்குக் கேட்க வைக்கிறார். அதன் பரிபாஷைகளை நமக்கு புரிய வைக்கிறார். நாம் புறக்கணித்த அந்தக் குரல் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கான பதில்களையும், நாளை எதிர்கொள்ளப்போகும் சவால்களுக்கான விடைகளையும் பகன்று கொண்டிருப்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.

ஆசிரியரின் எழுத்துகளில் ஒரு தனித்தன்மை தெரிகிறது. அவர் மனிதர்களிடம் உரையாடியதை விட இயற்கையிடம் அதிகம் உரையாடியிருக்கிறார் என்பதை புத்தகத்தின் ஒவ்வொரி வரியிலும் நாம் உணர முடிகிறது. இயற்கை அவரிடம் தனது ரகசியங்களைப் பகிர்ந்திருக்கிறது; தனது மகிழ்ச்சியையும், வேதனையையும்,  எச்சரிக்கைகளையும் அவரிடம் வெளிப்படுத்தியிருக்கிறது. அந்த உரையாடலை மிக எளிய மொழியில் இந்த புத்தகத்தில் நமக்குக் கடத்தியிருக்கிறார் ஆசிரியர். அதுமட்டுமல்லாமல் நம்மையும் இயற்கையோடு உரையாடத் தூண்டுகிறார் ஆசிரியர்.

இயற்கையோடு கொண்ட உறவிலிருந்தே உண்மையான அறிவு பிறக்கிறது என்பது ஆசிரியரின் எழுத்துகளின் அடிப்படைச் செய்தியாக உள்ளது. இயற்கை என்பது வெறும் வளங்களின் களஞ்சியம் அல்ல; அது ஒரு உயிருள்ள ஆசிரியர். அது மனிதனுக்கு தகவலை மட்டும் வழங்குவதில்லை; வாழ்வதற்கான ஞானத்தையும் வழங்குகிறது என்பதை தனது நூன்முகத்திலேயே தெளிவுபடுத்திவிடுகிறார் ஆசிரியர்.

மனிதனின் ஆறாம் அறிவும் அறிவியல் முன்னேற்றங்களும் பல சிக்கல்களைத் தீர்த்துள்ளன. ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவான இயற்கையின் தீர்வுகள் இன்னும் ஆழமான அறிவையும், சமநிலையையும், நிலைத்த வாழ்விற்கான ஞானத்தையும் நமக்கு கற்றுத் தருகின்றன.

இயற்கையை வெல்ல வேண்டிய ஒன்றாக அல்லாமல்; புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாக, இணைந்து வாழ வேண்டிய ஒன்றாகப் பார்க்கும் பார்வையை நமக்கு உணர்த்துவதே  இந்த நூலின் நோக்கமாக நான் புரிந்து கொள்கிறேன்.

 
அறிவு என்பது கட்டுப்படுத்த விரும்புகிறது ஆனால் ஞானம் என்பது இணைந்து வாழ கற்றுக் கொடுக்கிறது. அந்த ஞானத்தை பெற நாம் இயற்கையோடு உரையாட வேண்டும். இயற்கையின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். மண்ணின் மொழியை மனிதன் மறந்த நிலையில் மீண்டும் இயற்கையுடன் உரையாட துவங்கும் சிறு முயற்சியே இந்த நூல் என்கிறார் ஆசிரியர். 

எனவே சக மனிதர்களின் மொழியை கற்றுக் கொள்வதை விட, தேவ பாஷைகளை படிப்பதை விட, கணினி மொழிகளை மனனம் செய்வதை விட, இயற்கையின் மொழியை நாம் முதலில் புரிந்து கொள்ளத் துவங்க வேண்டும். அந்த இயற்கையின் குரலை புரிந்து கொள்ள எண்பதே பக்கங்களைக் கொண்ட இந்த சிறு புத்தகம் நமக்கு மிகவும் அழகாக  வழிகாட்டுகிறது. 



Wednesday, June 24, 2026

இலகுலீசர் (ஆதியோகி: அத்தியாயம் 21)

வயல்கள் மீண்டும் அமைதியாகின.  
 போரில் சிந்திய இரத்தம் உலர்ந்தது. நிலத்தில் ஒரு புனித மௌனம் திரும்பியது. 

 அந்த நிலத்தில் இருந்த ஒரு  பள்ளத்தாக்குக்கு மேலே உள்ள சிறிய மேட்டில் பசவண்ணா நின்று கொண்டிருந்தார். அவரது பார்வை கீழே இருந்த இரு இளம் உருவங்களின் மீது நிலைத்து இருந்தது. அரசமரத்தின் பரந்த கவிகையின் கீழ் உறவினர்களும் சுற்றத்தார்களும் புடை சூழ பீரப்பாவும் காமரதியும் நின்று கொண்டிருந்தனர். 

பீரப்பா, ஒரு அமைதியான புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார், அவருக்கு அருகில் காமரதி அன்பின் வடிவாக நின்று கொண்டிருந்தாள். 

அவர்களின் திருமணம் எளிமையாக காளியின் ஆசீர்வாதத்துடன் நடந்தது. திருமணம் நடந்த பின்பு  சிவன் பீரப்பாவை நோக்கி முன்னேறி, தன் திரிசூலத்தை பீரப்பாவின் கைகளில் வைத்தார். அவர்களை வாழ்த்தி விட்டு சிவன் தனியாக நடந்து சென்றார்.

அவர் விரும்பிய இணைப்பு இங்கு நிகழ்ந்துவிட்டது. இந்தத் திருமணம் வெறும் இரு மனங்களின் இணைப்பு மட்டும் அல்ல. அது போரினால் அழியவிருந்த இரு தரப்பு மக்களின் இணைப்பு.

 விவசாயத்தை முன்னெடுத்த விவசாய குல மக்களும் கால்நடைகளை ஓட்டிச் செல்லும் ஆயர் குல மக்களும், நிலம் என்னும் முதற்பொருளோடு, பொழுது என்னும் மற்றொரு  முதற்பொருளின் ஒத்திசைவில்,  கருப்பொருளாக இணைந்து வாழவிருக்கும் ஒரு அற்புத நிகழ்வு அந்த திருமணத்தின் மூலம் தொடங்கியது.

 ஆயர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில்  மழையின் முதல் சாரல் தொடங்கும் முன்னர், அவர்கள் தங்கள் புனித இடம்பெயர்வைத் தொடங்கினர். அவர்கள் மழையின் தாளத்தை பின்பற்றினர். போகும் இடம் எங்கும் வளத்தை விதைத்துச் சென்றனர்.நிலம் அதற்கு ஏற்ப பதிலளித்தது. விவசாய குலமக்கள் அந்த வளத்தினால் செழித்தனர்.

 நிலத்தில் வாழ்ந்து வந்த எரும்பில் தொடங்கி ஓநாய்கள் வரை அங்கு இருக்கும் அனைத்து உயிரிகளும் அங்கு வாழ்ந்து வந்த மக்களால் மதிக்கப்பட்டன.  அனைத்து உயிர்களும் அங்கு சமமாகக் கருதப்பட்டன. சாம்பல் நிற ஓநாய்களைக் கண்டு கூட அவர்கள் அஞ்சவில்லை. அவற்றைக் கொல்லவும் அவர்கள் எண்ணம் கொள்ளவில்லை. ஒரு ஓநாய் முன்னால் ஓடினால், மூன்று நாட்களில் அடுத்த பள்ளத்தாக்கில் மழை வரும்  என்று ஆயர்கள் நம்பினார்கள். அவை தங்கள் ஆடுகளை உணவாகக் கொண்டால், இறைவன் தங்களை ஆசீர்வதித்ததாக எண்ணி மகிழ்ந்தனர்.

 அந்த நிலத்தில் ஓநாய்கள் முதலிய கொலுண்ணி விலங்குகள் மனிதர்கள் தொந்தரவு இன்றி தங்குவதற்கு ஏற்ப ஒரு காடு இருந்தது. அது தெய்வம் உலாவும் காடு... தேவரு காடு.

 தமிழில் கோயில் காடு என அழைக்கப்படுபவை அந்தக் காடுகள். அவை மிகவும் புனிதமான காடுகள். 

 இங்கனம் மல்லப்பா என்றும் கண்டோபா என்றும் அவர்களால் அழைக்கப்பட்ட கடவுள் காட்டிய புனித பாதையின் வழி தலைமுறை தலைமுறையாக பயணித்தபடி இருந்தனர் அந்த ஆயர்கள்.  எத்தனை நகரங்கள் முளைத்தாலும், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் அவர்களின் அந்த புனித நகர்வு நிற்பதே இல்லை.

இந்த இடம்பெயர்வைக் குறிக்க ஏடுகள் இல்லை...  
சுவடிகள் இல்லை....
கொடிகள் இல்லை... 
மன்னர்கள் இல்லை...

எந்த ராஜ்ஜியத்தையும் விட இவை பழமையானவை. எந்த தெய்வத்தை விடவும் இவை புனிதமானவை.   

 இதை அவர்கள் தங்கள் தொழில் முறையாக பின்பற்றவில்லை  வாழும் முறையாக பின்பற்றினார். இறைவனால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியாக இந்தத்தொழிலை அவர்கள் கருதினர். 
 
அந்தப் பணியை செவ்வன மேற்கொண்ட  அவர்களை சந்ததிகள் பல கடந்தும்  இந்த நிலம் வாழ்வாங்கு வாழ வைத்தது. 

ராஜ்ஜியங்கள் பேராசையால் மண்ணை எரித்தபோதும், இந்நாட்டில் போர்கள் பல நிகழ்ந்த போதும், ஆயர்கள் இந்தப் பாதையின் வழி நடப்பதை மறக்கவில்லை.

அவர்கள் இந்த புனித நிலத்தை  உணவளிக்கும் இயந்திரமாக பார்க்கவில்லை. 

 நிலத்தோடு உரத்தை சேர்ப்பது அதிக விளைச்சலை தரும் என்பதே தற்போதைய அறிவியலின் எண்ணமாக இருக்கிறது.

அது உண்மைதான். ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டு தான் வரும். ஆனால் ஆயர்கள் பின்பற்றிய கணக்கில், ஒன்றும் ஒன்றும் உறவாடி மூன்றாகியது.

 ஒன்று ஒன்றும் சேர்வதினால் இரண்டு வரும் என்பது ஒரு எளிய கூட்டல் கணக்கு. ஆனால் ஆயர்கள் பின்பற்றியது வாழ்வுக்கான கணக்கு.

 இந்தக் கணக்கில் பரிணாமங்களின் உறவாடல் நிகழ்ந்தது.

 இந்த நிலத்தில் சிவனின் முன்னெடுப்பால் நிலம் எனும் பரிணாமம் பொழுது எனும்  பரிணாமத்தோடு உறவாட வைக்கப்பட்டு, விளைச்சல் வேகம் என்னும் மூன்றாம் பரிணாமம் உச்சமடைய வைக்கப்பட்டது. 

 பொதுவாக நாம் பிரபஞ்சத்தை மூன்று பரிணாமங்களில் பார்க்கின்றோம். சரியாக சொல்வதென்றால் வெளியின் மூன்று பரிணாமங்கள் மற்றும் காலத்தின் ஒரு பரிணாமம் . 

வெளியின் பரிணாமங்களில் நாம் முன்னும்  பின்னும் மேலும் கீழும் நகரலாம். ஆனால் காலத்தில் நாம் முன்னோக்கி மட்டுமே நகர முடியும். நடந்ததை நம்மால் மாற்ற முடியாது. எனவே இந்தக் கால பரிணாமத்தை அனுமானித்து, ஆறாம் அறிவு  கொண்டு சிந்தித்து, பொழுதை நமக்கு உகந்ததாக பயன்படுத்திக் கொள்வதே எந்த ஒரு நாகரிகத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

 நிலம் என்னும் பரிணாமத்தோடு பொழுது என்னும் பரிணாமம் உறவாடும் பொழுது, உயிர்கள் அந்த நிலத்தில் நிலைத்து நீடித்து வாழ வழிவகை செய்யப்பட்டது . 

நிலம் + பொழுது = உயிர்ப்பு.

இது ஒரு எளிய கூட்டல் இல்லை, ஒரு புனிதத் தாளம். 

வெளி மற்றும் காலத்தின் இணக்கம். 

வெளியும் காலமும்  பிரபஞ்சம் நெய்யப்பட்டதும் பிறந்த முதல்  பரிமாணங்கள்.

  நமது தற்போதைய இயற்பியல் விதிகள் செல்லுபடியாகாத  சுத்த சிவ  நிலையிலிருந்து தான் அனைத்தும் ஆரம்பித்தது. இன்று நமக்குத் தெரிந்த வெளியும் காலமும் தோன்றுவதற்கு முன்பு, ஒரு ஒற்றை புள்ளியில் இருந்து தான் இந்த பிரபஞ்சம் பிறந்தது.

பின்னர்,  ஆரம்ப பிரபஞ்சத்தை நீட்டி, மூன்று 'வெளிப் பரிமாணங்களையும்' ஒரு 'காலப் பரிமாணத்தையும்' நிலைப்படுத்தி, இன்று நாம் காணும் பிரபஞ்சம்  உருவாகியது. 

இந்த வெளி மற்றும் காலம் என்னும் நாடக மேடையில் தான் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்களின்  வாழ்வு அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இந்த இணைப்பு வெறும் பயிர்களைத் தாங்கவில்லை; அது உயிரையே சாத்தியமாக்கியது.

இவை வெறும் வளங்கள் இல்லை.  

இவை  நாகரிகத்தின் முதன்மையான முன்னுரிமைகள்.  

இதைப் புறக்கணித்த என்ன நாகரிகமும் நம்முடன் இப்போது இல்லை.

இவற்றை புறக்கணித்தால், தெய்வங்களும் வீழ்ச்சியடையும். 

இவற்றை மதித்தால், உயிர் சமநிலையில் மலரும்.

இது ஒரு கூட்டல் சமன்பாடு இல்லை.  
இது ஒரு ஆற்றல் நடனம்!

இது ஒரு சிவ சக்தித் தாண்டவம்!!

 நிலமானது பெரும் பொழுதுடன்  இணக்கமாக  சமநிலையில் சந்தித்தபோது,  செழிப்பு எழுந்தது

இந்தத் தாண்டவம் ஒத்திசைத்து நடக்கும்  இடத்தில் தான் தெய்வங்களும் குடியேற முடியும். அந்த தெய்வமே அங்கிருக்கும் கருப்பொருட்களில் முதன்மையான கருப்பொருளாக இருந்து  மற்றேனைய கருப்பொருட்களை காத்து நிற்கும்.  

 மக்களும் அந்த கருப்பொருட்களில் ஒன்றாக இணக்கமாக வாழத் துவங்கினர்.  

 கருப்பொருள் என்பது ஒவ்வொரு நிலப்பரப்புடனும் பிணைந்த வாழ்க்கையின் குறியீட்டு சாரம்:   அவர்கள் வணங்கிய கடவுள்கள்,  அவர்கள் உண்ட உணவு,
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்,  அங்கு வாழ்ந்த மக்கள்,  அவர்கள் பின்பற்றிய தொழில்கள்,  அவர்களது பாடல்கள், சடங்குகள்,  அனைத்தும் அதற்குள் அடக்கம்.

 இதுவே சிவன்  நமக்கு கட்டமைத்துத் தந்த  வாழ்வு முறை.

 இந்த வாழ்வு முறையே நமது நாகரிகத்தின் அடிப்படைக் கூறு. தென்னகம் முழுவதும் இந்த வாழ்வு முறையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்து வரத் துவங்கின.

 இதை  கட்டமைத்த அந்த சிவனை மக்கள்  மஹாகாலேஸ்வரில் தட்சிணாமூர்த்தியாக வணங்கினர்.
 தட்சிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாமூர்த்தி என்றால் 
 தெற்கு நோக்கி நிற்கும் கடவுள். 

 மக்கள் அவரை கடவுளாக வணங்கினாலும் அவர் அடிப்படையில் ஒரு மனிதன் தான். அந்த மனிதனுக்குள்  ஒரு ஆழமான வலி இருந்தது, வெளியே சொல்ல முடியாத உயிர் நாடியில் ஏற்பட்டிருக்கும் துன்பம் மிகு வலி அது. பிறவியில் இருந்தே அவரைத் துரத்தும் சாபம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் போர் அது. அவரின் உயிர்நாடி எழுச்சி, மக்களால் ஆண்மையின் ஆற்றல் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டது.  ஆனால் அது அவருக்குள் இருக்கும் நோயின் ஒரு அறிகுறி. அவர் எடுத்த நஞ்சின் பக்க விளைவு அது. 

 அந்த அறிகுறியின் காரணமாக அவர் மக்களுடன் புழங்குவதைத் தவிர்த்தார்.   தனது அறிகுறிகளின் வாதையை தணிக்கும் ஒரு குளிர்ந்த இடத்தை நோக்கி அவர் பயணப்பட்டார். அமர்கண்டக்கை நோக்கி அவரது பயணம் அமைந்தது. அது புனித நர்மதை நதியின் பிறப்பிடம்.

ஒரு ஆலமரத்தின் கீழ் அவர் தெற்கு நோக்கி அமர்ந்தார். அவரது உயிர் நாடிக்கு திருப்பி விடப்பட்ட இரத்தத்தின் காரணமாக தாங்கொணா  வலி அவருக்கு நேர்ந்தது.  உயிர்நாடியை நோக்கி குவிக்கப்பட்ட ரத்தத்தை மடை மாற்றுவதற்கு அவர் கால்களை அகற்றி, குதிகால்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி அமர்ந்தார். அந்த ஆசனத்தில் அவர் அமரும் பொழுது அவரது வலி கட்டுப்பட்டது. 

 இதுவே அவர் கண்ட முதல் ஆசனம்! அதுவே அவர் கண்டறிந்த ஆதியோகம்!! அவர்தான் இந்த நிலத்தின் ஆதியோகி!!!

 இந்த யோக ஆசனங்கள் ஆற்றலின் காரணமாக பிறக்கவில்லை, தேவையால் பிறந்தது. வலிகளைத் தீர்க்கப் பிறந்தது.

அந்த நிலையில், நெருப்பு உள்நோக்கி திரும்பியது.  
வலி மறையவில்லை, ஆனால் அது திசை மாற்றப்பட்டது .  அந்த வலியை அவர் உடலில் கரைய விட்டார், மூச்சின் வழியாக வெளியேற்றினார். அவர் யாருடனும் பேச விரும்பவில்லை.
மௌனம் அவரது குணமாக மாறியது.  
அவர் தியானிக்கத் தொடங்கினார்.  

 அவர்  அமர்ந்திருந்த அந்த ஆசனத்தின் பெயர் 'மூலபந்தாசனம் '.

 மூலம் என்றால் , "வேர்... அடித்தளம்..."; பந்தம் என்றால் பூட்டு என்று பொருள்படும்.

 இந்த ஆசனத்தின்  தொடர்புடைய மூலகம் -  நிலம், தொடர்புடைய புலன் - தொடுதல் உணர்வு.

 உலகில் முதன் முதலில் பிறப்பெடுத்தவை ஓருயிர் உயிரினங்கள். ஓருயிர் உயிர்களுக்கு இருந்த ஒரே அறிவு 'தொடுதல் அறிவு'. அந்தத் தொடுதல் அறிவைக் கொண்டுதான் அது தனது இரையைத் தேடியது, இணையைத் தேடியது. இந்த அறிவைக் கொண்டு மட்டுமே அது தனது சந்ததிப் பெருக்கத்தை நிகழ்த்தியது.

ஓறறிவாகிய தொடு உணர்வே, காமத்தின் நிலைக்கண்!

உடல் முழுவதும் இரத்தம் ஓடிக்கொண்டு இருந்தாலும் அதற்கு இயக்க மையமாக இருதயம் இருப்பதுபோல்,  இந்த உயிரின் இயக்க மையமாக இருப்பது  மூலாதாரம். ஆனால் தீண்டல் இச்சையினால் உந்தப் பட்டு இருக்கும் வரை, மூலாதாரத்தில்  மையம் கொண்டு இருக்கும்  உயிரின் இருப்பை மனது அறிவதில்லை.

படைப்புத் தொழிலின் ஆதாரம் இங்குதான் ஒரு பாம்பு போல் உறங்குகிறது. தொடுதல் உணர்வு தரும் இன்பத்தில் மயங்கி, அந்த ஆற்றல் அங்கு மட்டும்  செயல்படும்போது, ஓறறிவு உயிராக மட்டுமே நாம் இருக்கிறோம். இந்த உண்மை அவருக்கு தியானத்தின் மூலம் உணர்த்தப்பட்டது. 

 அதிகப்படியான பாலியல் ஆசையைக் கட்டுப்படுத்த முலாபந்தாசனம் உதவுகிறது என்றும்,  இந்த ஆசனம் மூல சக்கரமான மூலாதாரத்தை செயல்படுத்துகிறது என்பதையும் அவர் கண்டறிந்தார் . 

 அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அவர் தியானிக்கத் தொடங்கியதும் அந்த வனத்தில் இருக்கும் விலங்குகள் அனைத்தும் தெய்வீக வாக்கிற்கு கட்டுப்பட்டது போல் அவரை சூழத் தொடங்கின.
 அவர் தனிமையை விரும்பி தியானத்தில் அமர்ந்தாலும், மனிதர்கள் அவரை தனித்து இருக்க விடவில்லை.

ஹரப்பாவில், ஒரு காலத்தில் துடிப்பாக இருந்த நகரங்களில் நோய்கள் பரவத் தொடங்கின. கழிவு நீரால் வியாதிகள் பரவின. எனவே, அவர்கள் தங்களைக் காக்க வேண்டி மற்ற நாடுகளுக்கு தூதர்களை அனுப்பினர். வேளிர்களும்  யாதவர்களும் தம்மைக் காக்க அவதரித்த கடவுளை பற்றி ஹரப்பர்களுக்கு செய்தி அனுப்பினர். ஹரப்பர்கள் நர்மதியின் பாதை வழியே பயணப்பட்டு சிவனை அடைந்தனர்.

அவர்கள் சிவனை  மரங்களிடையே விலங்குகளுக்கு மத்தியில் கண்டனர். அவர் அவர்களை அறிவால் குணப்படுத்தினார்.  அவர் அந்த மக்களுக்கு  கழிவு நீர் குழாய்களை அமைக்கவும், மூலிகைகள் மற்றும் நஞ்சுக்களால்  சிகிச்சையளிக்கவும், உடலை பலப்படுத்தும் யோக முறைகளையும் கற்றுக் கொடுத்தார் . 

 அவரது முன்னேற்பாடுகளால் அந்த நாகரீகம் அழிவிலிருந்து மீண்டது. புதிய கடவுளின் புகழ் மேலும் பரவத் தொடங்கியது.

ஆனால் அவர்கள் சிவனை தவறாகப் புரிந்து கொண்டனர்.

 சிந்து நதி நாகரிக மக்கள்,  ஆயர்களாக இருந்த பொழுதும், பசுக்களை விட   காளைகளே அவர்களை அதிகம் கவர்ந்தது. அவர்களது  சின்னங்கள் முழுக்க காளைகளே நிரம்பி இருந்தன. 

 காளைகள் ஆண்மையின் அடையாளம். ஆற்றலில் வெளிப்பாடு.

 ஆண்மையையும், வீரத்தையும், ஆற்றலையுமே அவர்கள் போற்றத்தக்கதாக கருதினர். சிவனையும் அவர்கள் ஆற்றலின் மறு உருவமாகத்தான் கருதினர். அவரது உயிர்நாடி எழுச்சி அதீத ஆற்றலின் பிரதிபலிப்பாகக் கருதப்பட்டது.

 தமிழர்களின் ஆதி குடிகளுக்குச் செய்யப்படும் அலங்காரமாகிய கொம்பு மற்றும் தோகை தலைப்பாகையுடன்  கூடிய, மூன்று முகங்கள் கொண்ட அவரது உருவத்தை ஆண்மை எழுச்சி அறிகுறியுடன் அவர்கள் அச்சில்  வடித்து வணங்கத் தொடங்கினர். 

 ஆனால் சிவன் தனது உருவத்தை வணங்குவதை விரும்பவில்லை. எனவே உருவம் அற்ற லிங்கத்தை அந்த மக்கள் ஆற்றலின் உருவமாக வணங்க ஆரம்பித்தனர்.

ஆனால் சிவனை ஏற்கனவே வெறுப்புடன் பார்த்த வடக்கு மன்னன் தக்ஷன், இதை தெய்வ அவமதிப்பாகக் கண்டான்.

லிங்கச் சின்னங்கள் தக்ஷனை  அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.
“இந்த சிஷ்ணதேவர்கள்,” அவன் இகழ்ந்தான், “அவர்கள் ஆண்மையை வணங்கத் துணிகிறார்கள். அசிங்கத்தை பின்பற்றுகிறார்கள்… புனிதத்தை அவமானமாக மாற்றுகிறார்கள்.” என்று ஆவேசப்பட்டான்.

//ரிக்வேதம் VII. 21-5. சிஷ்ணதேவனை (லிங்கத்தினை) தெய்வமாகக் கொண்டோர் எமது புனித (வழிபாட்டிற்கு) இடத்திற்கு வராதிருக்கக் கடவர்.//


மூன்று முகம் கொண்ட சிவனை காணும் பொழுதெல்லாம் தஷனுக்கு கோபம் பொங்கியது. அவனது தந்தைக்கு ஐந்து முகங்கள் இருந்தன. அதில் ஒரு முகமான  தன்முனைப்பை சிவன் அழித்து விட்டதாக அவன் கருதினான் 

  இந்த முகங்கள் ஒரு மனிதனின் கோபம் சாந்தம் போன்றவற்றை குறிப்பன என்றும் ஆக்கல் அழித்தல் காத்தல் போன்றவற்றை குறிப்பன என்றும் குறிப்பிடுகின்றனர். உண்மையில் சிவனுக்கு இருப்பதும்  ஐந்து முகங்கள் தான். 

இந்து சைவ ஆகமப் பாரம்பரியத்தின் படி, சிவன் ஐந்து தெய்வீக செயல்களை நிகழ்த்துவதாக சைவர்கள் நம்புகின்றனர்: ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (பாதுகாப்பு), ஸம்ஹாரம் (அழிவு), அனுகிரகம் (அருள்), திரோகணா/அவித்யா (மாயை).

இந்த ஐந்து செயல்களில் முதல் மூன்று செயல்கள் சிவனின் முகங்களோடு தொடர்புபடுத்தப்படுகின்றன: ஹரப்ப சின்னத்தில் இருக்கும் மூன்று முகங்களைத் தவிர பின்னாலும் முகம் மறைந்துள்ளது.

 ஆனால் ஆதியில் வழிபடப்பட்டது வெறும் லிங்கம் மட்டுமே. அந்த லிங்கமும் ஆவுடையில்லாத லிங்கம். அது வெறும் ஆண்மையின் ஆற்றலைக் குறிக்கும் லிங்கம்.

 
தமிழர்கள் ஆதியில் பெருந்தெய்வங்களாய் வணங்கியது மாயோன், சேயோன், வருணன், வேந்தன் எனும் நா நில தெய்வங்களும் கொற்றவை எனப்படும் பெண் தெய்வமும் தான். இந்தத் தெய்வங்கள் அனைத்தும் அந்தந்த நிலங்களின் ஆற்றல் அல்லது தொழில் நிமித்த வெளிப்பாடுகள். தொல்காப்பியர் காலம் வரை இது தான் தமிழகத்தில் நிலவரம். 
ஆனால் கடைச் சங்க காலத்தில் மற்ற சமூகத்தினரின் தாக்கம் தமிழகத்தில் ஊடுறுவும் பொழுது மாயோன் சேயோன் இருவரும் திருமால் முருகன் என மாற்றமடைகின்றனர். துவாரகை தெய்வங்களான பலதேவன் வழிபாடு, காமன் வழிபாடுகள் ஆரம்பிக்கின்றன. திருமால்‌ வழிபாட்டில்‌  ‘செங்கட்காரி' (வாசுதேவன்‌), ‘கருங்கண்‌ வெள்ளை’ (சங்‌ கருடணன்‌), 'பொன்கண்‌ பச்சை” (பிரத்தியும்தன்‌), ‘பைங்கண்‌ மால்’ (அநிருத்தன்‌) என்னும்‌ பெயர்கள்‌ பரிபாடலில்‌ வழங்குகின்றன. 
ரிக் வேதத்தில் “சிவன்” என்பது ஆதியில் ஒரு தனிப்பட்ட கடவுளின் பெயராக இல்லை; அது “மங்களமானவன்”, “நன்மை தருபவன்” என்ற பொருளுடைய ஒரு சிறப்புப் பெயராக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் அந்த “சிவன்” என்ற அடைமொழி ரிக்வேதத்தில் காணப்பட்ட “ருத்ரன்” என்ற கடவுளோடு தொடர்புபடுத்தப்பட்டு வந்தது, புதிய தெய்வ அடையாளமாக மாறியது.

ஶ்வேதாஶ்வதர உபநிஷத் மற்றும் மகாபாரத காலத்தில், “சிவன்” என்பவர் முழுமுதற்கடவுள் .நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதை நாம் காணமுடிகிறது. புதிய கடவுளின் கொள்கைகளால் உடல் மற்றும் உள்ளம் நலமடைவதை கண்ட வேதாந்திகள் தங்களின் பழைய கடவுள்கள் பலரை கைவிட்டு விட்டு சிவனை முதற்கடவுளாக வழிபட ஆரம்பித்ததை நாம் அறிய முடிகிறது.

வேதாந்திகளால் இறைவனாக்கப்பட்டார் அவர். வேதாந்திகளின் பிறமொழிக் கலப்பு நம்மிடம் ஊடுருவுகையில் நமது மக்களும் அவரை இறைவனாக பார்க்க ஆரம்பித்தனர். கடைச்சங்க நூல்களில் சிறிது சிறிதாக அவருக்கு இறைவனுக்கான பதவி கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. 

சங்க காலப் பாடல்களில் மணிமிடற்றோன் என குறிப்பிடத் தொடங்கப் படுகிறார் அவர். காந்திக்கு தமிழகம் ‘அண்ணல்’ பட்டம் கொடுத்தது போல் அவருக்கும்  அண்ணல் பட்டம் கொடுக்கப்படுகிறது. பாடல்களில் “மிடறண்ணல்” எனப்படுகிறார். இறுதியில் “காரியுண்டிக்கடவுள்‌” என்றும்‌, “மாற்றருங்‌ கணிச்சி மணிமிடற்றோன்‌”என்றும்‌வழிபட்டு வந்ததைக்‌ காண்கிறோம்‌. ‘மணி’ என்பது நீலநிறத்தைக் குறிக்கும். காரி என்பது கருப்புநிறத்தையும் குறிக்கும், விஷத்தையும் குறிக்கும்.
ஹரப்ப சின்னங்களில் கொம்பு வைத்த ஒரு மனிதரும், அவருக்கு அருகில் மும்முனை சூலம் – திரிசூலம், அல்லது பலமுனை சூலம் அடிக்கடி காணப்படுகிறது. இந்த சின்னத்தின் பெயர் ‘மகாதேவன்’ என்று ஆய்வாளர் ‘ஐராவதம் மஹாதேவன்’ அவர்கள் குறிப்பிடுகிறார்.

 ஐராவதம் மஹாதேவன் அவர்கள் இச்சின்னத்தை ‘நீல கண்டன்’ எனவும் மொழிபெயர்க்கிறார். கழுத்தைச் சுற்றி நாக வடிவில் அவர் அணிந்திருந்த உலோகம் அல்லது உலோகக்கலவை ஏற்படுத்திய கறையாகவே இது இருந்திருக்கவேண்டும். செப்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் இவற்றின் கலவையான ஐம்பொன் உலோகக் கலவை சித்தர்கள் கண்டறிந்தது என்பதை நாம் அறிவோம். செம்பு, நிக்கல், நாகம், இரும்பு, மற்றும் வெள்ளி முதலிய உலோகங்கள் அல்லது அவை இருக்கும் கலவைகள், தோலில் கறையை ஏற்படுத்த வல்லவை.

’அணியலும் அணிந்தன்று நஞ்சினது கறுப்பு திருமிடற்றை’ 
‘கறை மிடறும் அணியலும் அணிந்தன்று’ போன்ற வரிகள் இக்கருத்திற்கு வலுசேர்க்கின்றன.
படம்: வெள்ளி மற்றும் வெள்ளிகலந்துள்ள ஆபரணத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் localized argyria – நீலக்கறை
 
பண்டைய தமிழ் மற்றும் ஹரப்ப நாகரிகரிகங்கள் இவ்வாறு சிவனது ஆரம்ப கால வாழ்வை நமக்குக் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இந்த இரு நாகரிக மக்களுமே; சிவன் – தஷிணாமூர்தியாக குருவின் ஸ்தானத்தில் இருந்து அவர்களுக்கு போதித்த போதனையால் செழித்தவர்கள். அதனால் இருநாகரிக மக்களும் அவரைத் தொழ ஆரம்பித்தனர். அதிலும் ஹரப்பர்கள் லிங்கத்தையும் சிவனது ஆற்றல் வெளிப்பாடாகக்  கருதினர். அதனை வணங்க ஆரம்பித்தனர். அந்த வழிபாட்டு முறைகள் தக்ஷன் முதலிய வேதாந்திகளை சினம் கொள்ள வைத்தது.

 இந்த வழிபாட்டு முறைகளைக் கண்டு சிவனும் வருத்தம் கொண்டார். தன்னை பின்பற்றுபவர்களும் சரி, தன்னை எதிர்ப்பவர்களும் சரி, தனது கொள்கைகளை புரிந்து கொள்ளாதது சிவனுக்கு வருத்தத்தை அளித்தது. மேலும் மன ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் அவர் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். அந்த வருத்தத்துடன் அவர் நர்மதி நதிக்கரையில் உலாவிய பொழுது லிங்க வடிவில் ஒரு கல்லைக் கண்டார்.
 வெள்ளை மற்றும் பழுப்பு நிற கோடுகளுடன்  அது காட்சியளித்தது. அது இரு வேறு கற்களின் இணைப்பு.
  அதைக் காணும் பொழுது சிவனுக்கு சமநிலை தத்துவம் நினைவுக்கு வந்தது.

இது பின்னர் மக்களால் பாண லிங்கம் என அழைக்கப்பட்டது.  இதையும் மக்கள் லிங்கம் வழிபடத் தொடங்கினர்.
 சிவன் முன்னிறுத்தியது கொள்கைகளை தான். அந்தக் கல்லின் மூலம் உணர்த்தப்படும் உருவகமான உண்மையைத்தான் அவர் வலியுறுத்தினார். அந்தக் கல் உணர்த்திய தத்துவம் தான் சிவனின் கொள்கை. சிவனின் சித்தாந்தம்.
 சிவனுக்கு வழிபடக்கூடிய கற்களில் சக்தி இல்லை என்பது தெரியும்.
 மக்கள் வழிபட வேண்டியது, அது போதிக்கும் பாடம். 

அந்தக் கல்லை அவர் எதிர் துருவங்களின் இணைப்பாக கருதினார். இரு வேறு ஆற்றல்களின் சங்கமமாக கருதினார். 

தெய்வீகம் என்பது அதீதமான ஒன்றல்ல. தெய்வீகம் என்பது இரு அதீத  ஆற்றல்களின் ஒத்திசைவினால் பிறந்த சமநிலை.  

இரவும் பகலும்...
ஆணும் பெண்ணும்...
வீரமும் காதலும்...
சிவனும் சக்தியும்.  
 என்று அதீத ஆற்றல்களின் சங்கமம் நிகழும் பொழுதுதான் தெய்வீகம் பிறப்பெடுக்கும்.

 இந்த இணைப்பு  இல்லாமல், படைப்பு இல்லை. 

இதுவே சிவனின் முதன்மையான சித்தாந்தம். 

 அதீத ஆற்றலின் வாதையை அனுபவித்துக் கொண்டிருந்த சிவனை இன்னும் சக்தி  அரவணைக்கவில்லை. அந்த அரவணைப்பினால் மட்டுமே அவரது உடல் சமநிலையை அடையும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
 அந்த அரவணைப்பின் அடித்தளம் 'அன்பு' எனும் உரிப்பொருள்.
 முதற் பொருளையும் கருப்பொருளையும் ஆதாரமாகக் கொண்டு ஜீவித்திருக்கச் செய்யவல்ல உரிப்பொருள் 'காதல்' மட்டுமே.

அதுவே புனிதம்.
அன்பே தொழத்தக்கது.
அன்பே சிவம்.

 சிவனது அடிப்படைக் கொள்கையான சமநிலை மற்றும் காதலை ஒரு சேர வலியுறுத்தும்  முக்கிய சின்னமே ஆவுடையோடு கூடிய லிங்கம். 

ஆனால் சிவனின் இந்த சித்தாந்தம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த சித்தாந்தம்  வேதாந்தத்திற்கு எதிரான கருத்தாகக் கருதப்பட்டது.
 அதனால் அந்த லிங்கங்கள் உடைக்கப்பட்டன,  அவரது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. அவரது சித்தாந்தங்கள் மாற்றியும் மறுத்தும்  எழுதப்பட்டன. 
 இதன் காரணமாக அவரது கொள்கைகள் சிதறடிக்கப்பட்டன... நீர்த்துப் போக வைக்கப்பட்டன... மழுங்கடிக்கப்பட்டன...
இறுதியில் மறக்கப்பட்டன.

ஆனால் முற்றிலுமாக இழக்கப்படவில்லை!

அவரது சித்தாந்தம் எந்தக் கலப்படமும் செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 அவர் தனது சித்தாந்தங்களை பாதுகாக்க மொழியை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார்
தனது சித்தாந்தங்களை அவர்   தனக்கு ஒருபோதும் துரோகம் செய்யாத... இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காமல் நினைத்துக் கொண்டிருக்கின்ற  ஒரு மண்ணின் மொழியில் அவர் விதைத்துள்ளார்.  

 அந்த மண்... தமிழ் மண்! 
அந்த மொழி... தமிழ் மொழி!!

அதன் இலக்கணம் அவர் கூறிய உண்மைகளை, யுகங்கள் பல கடந்தும் தூய்மையாகத் தாங்கியது. 
ஒருவர் இடத்தில் பிறந்தாலும், அங்கே எந்த தெய்வம் குடியிருந்தாலும், அந்நிலத்தின் முதற்பொருள் நிலமும் பொழுதும் மட்டுமே. அதுவே அடித்தளம். அந்த அடித்தளத்தை அச்சாரமாகக்கொண்டு கருப்பொருட்கள் ஜனித்திருக்க, உரிப்பொருளாம் அன்பெனும் ஜோதி அணையாவிளக்காக அங்கே ஒளிவீசத்தொடங்கும் என்பதே சிவன் நமக்களித்த வாழ்வுக்காண இலக்கணம்.

ஆன்மாவை அறிய முயலும் இயக்கங்களே ஆன்மீக இயக்கங்கள். அவற்றின் கொள்கைகள் பலவிதம்.ஆனால் தமிழர்களின் உயிர் அல்லது ஆன்மாவைப்பற்றிய புரிதல் மிக எளிதானது.

 “அன்பின் வழியது உயிர்நிலை” என்பதே தமிழர்களின் புரிதல்.
 சக உயிர்கள் மீதான அன்பு மற்றும் தன் உடம்பின் மீதான அன்பு ஒன்றே தன்னையும் தான் சாந்த சமூகத்தையும் காக்கவல்லது. ஆனால் உயிரை விட மேலானது ஒழுக்கம். 
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.
அந்த ஒழுகலாறை திணையியமாக நமக்கு வடிவைமைத்துக்கொடுத்தது ஆதிசிவன்.

வாழ்வை இந்தவகையில் அனுகும் முறையை தமிழர்கள் மட்டுமே பின்பற்றினர் எனக்கூறிவிட முடியாது. 
பின்வரும் ஹரப்ப அச்சில் முதலில் இருக்கும் சின்னத்தை ஜாடி அல்லது கமண்டலம் என்கின்றனர், சிலர் அதை உரிப்பொருளாம் அன்பைக்குறிக்கும் ஆவுடை லிங்கம் எனவும் மொழிபெயர்க்கின்றனர். அந்த அச்சில் அடுத்து காணப்படுவது பலபல் சூலத்தைக் கொண்ட கருப்பொருளாம் தெய்வம், அதற்கடுத்தது இருமீன் எனும் பொழுதின் சின்னம்.
கடைசியாக கட்டத்திற்குள் கட்டம் இருக்கும் சின்னத்தை இல்லத்தில் இருக்கும் தலைவனைக் குறிப்பிடுகிறது என்கின்றனர். இதை வலதில் இருந்து இடதாகப் படிக்கும் போது; இல்லம் எனும் நிலம், இருமீன் எனும் பொழுது, தெய்வம் எனும் கருப்பொருள், காதல் எனும் உரிப்பொருள் எனக் குறிப்பிட்டுருக்கலாம் எனக் கருதவும் இடமிருக்கிறது.எனவே ஹரப்பர்களும் இதே ஒழுகலாறைப் பின்பற்றி இருந்திருக்கின்றனர்.
ஆனால் அவர் போதித்த இந்த வாழ்வுமுறைக்கான இலக்கணம் இன்றும் நிலைத்திருப்பது தமிழகத்தில் மட்டும் தான். 

 தமிழ் மண்ணே அவரது சித்தாந்தத்தின் விதை நெல் பாதுகாக்கப்படும் இடம். 
 தமிழ் மொழியின் இலக்கணமே அவரது சித்தாந்தத்தின் மூலப்பிரதி.
இந்தக் கொள்கைகளை தமிழர்கள் தங்கள் மொழியோடு  கலந்துப் பழகி, பயின்று, வாழ்ந்து வருகின்றனர் 
 தமிழர்களால் தங்கள் மொழியையும் கொள்கைகளையும் நீர்த்துப்போகச் செய்யும் எதையும் அனுமதிக்க மனம் ஒப்பவில்லை. 

 சிவன் தங்களில் ஒருவன் தங்களுடையவன் என்பதில் தமிழர்களுக்கு எள்ளளவும்  சந்தேகம் இல்லை.  

இருப்பினும் அவன் தங்களுக்கானவன் என்று மட்டும் சுயநலமாக அவர்கள் எண்ணவில்லை. 

சிவனது சித்தாந்தங்கள் அனைத்து நாட்டினருக்கும்  உரித்தானவை. அனைத்து நாட்டினருக்கும் அவசியமானவை. ஏனெனில் உலகினை காக்கக்கூடிய சித்தாந்தங்கள் அவை.
இன்றும் உலகம், விளைச்சலுக்காக வேகமாக ஓடுகிறது... 

சமநிலையை மறந்து தீவிரங்களைத் துரத்துகிறது... அதீதங்களின் பின் அலைகிறது.

அது ஓநாயைக் கொல்கிறது.  
மண்ணை விஷமாக்குகிறது.  
ஆடுகளின் இடம்பெயர்வின் தாளத்தை புறக்கணிக்கிறது.
மழைப் பாதைகளின் புனிதத்தை அது மறுதலிக்கிறது. 

இதன் விளைவாக அழிவை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
 அந்த அழிவில் இருந்து காக்க வல்லவை சிவனின் கொள்கைகள்.
அவரது கொள்கைகளால் தான் இந்த உலகம் காக்கப்படப் போகிறது. 
 தென்னாட்டு சிவனது சித்தாந்தம்,  எல்லா உயிர்களையும் காக்க வல்லது!
 அந்த சித்தாந்தம்  எந்நாட்டவர்க்கும் பொதுவானது!!
அதுவே இறையாகத் தொழத்தக்கது!!
                                                                      -------===------
                                          தென்னாடுடைய சிவனே போற்றி!
                             எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. போற்றி!!






                                                                    -------===------
                                                         முதல் பாகம் முற்றும்.

Saturday, June 20, 2026

ஏர் முன்னது எருது 11 - கருப்பொருள்

 கருப்பொருள் - 2

உணவு :

சித்த மருத்துவம் உணவின் பண்பாக மூன்றினை குறிப்பிடுகிறது

அவை முறையே குணம், சுவை மற்றும் உயிர்த்தாது ஆகும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

உணவின் முதல் பண்பு - குணம்

சமநிலையில் இருக்கும் எந்தப் பொருளும் இயக்கம் பெறும் போது அது குணமாற்றம் அடையும். உதாரணத்திற்கு  நீர்‌ நிலையிலுள்ள தண்ணீரின்‌ அசைவற்ற பரப்பின்மேல்‌ கல்லை எரிந்தால்‌ கல்‌ விழுந்த இடத்தின்‌ மையத்திலிருந்து சுற்றி அலைகள்‌ ஏற்படும். ஓர்‌ அலையின்‌ எழுச்‌சிக்கும்‌ அடுத்த அலையின்‌ எழுச்சிக்கும் இடையில் ஒரு யூகக்கோடு‌ வரைந்தால்‌ கோட்டினின்று உச்சியை அடையும்‌ பாகத்தை இரசோ  குணம்‌ என்றும்‌, உச்சியிலிருந்து இறங்கும்‌ கோட்டைத்‌ தமோ குணம்‌ என்றும், அலையின்‌ ‌ இவ்விரண்டு கோட்டினைத்‌ தொட்டுக்‌ கொண்டிருக்கும்‌ கோட்டை சத்துவ குணம்‌ என்றும்‌ சித்தர்கள்‌ கூறியுள்‌ளார்கள்‌. அலைகளின்‌ முக்கோணத்தில்‌ மூன்று குணங்கள்‌ உள்ளன. இம்முக்கோணத்துன்‌ மையத்தில்‌ இருக்கும்‌ நிர்குணம்‌ சலனமுற்றால்‌ குணங்களின்‌ பேதா பேதங்களுக்கேற்ப புத்தி/ அறிவு என்னும்‌ தத்துவம்‌ தோன்றுகின்றதென்பர்‌. உணவிலும் இம்மூன்று குணங்களும் உள்ளனவாம். உணவுக்கும் மனத்திற்கும் தொடர்பு உள்ளது அது உங்கள் குண நலனை மாற்றும் என்பது சித்தமருத்துவத்தின் கூற்று. இதே தத்துவத்தை தான் உயிரைப் பற்றி விளக்கும் போதும் கூறுகின்றனர். இத்தத்துவத்தின் படி நாம் அனைவரும் பேரறிவு எனும் கடலின் அலைகளாக உருகப்படுத்தப்பட்டுள்ளோம்.

உணவின் இரண்டாம் பண்பு - சுவை

சுவை பற்றி அறிவியலின் பார்வை:

சுவை என்றால் என்ன? எதற்காக சுவைகள் உள்ளன? சுவைகள் அனைத்தும் உடலில் ஒரே வேலையைத்தான் செய்கின்றனவா?

சுவை என்பது நாவிற்கு உணர்த்தப்படுவது கண்ணுக்கு தோன்றும் படி தனித்து இல்லாமல் உணவோடு கலந்து இருக்கும் உணவின் பண்பு. எல்லா சுவைகளும் நாக்கினால் உணரப்பட்டு மூளையின் செயல்பாடுகளில் கட்டுப்படுத்தப்படும் உணர்வுகளே.

அறிவியல் சுவைகளை ஐந்தாகக் கூறுகிறது.

Sweet- இனிப்பு

Bitter- கசப்பு

Sour- புளிப்பு

Salty- உப்பு

Savory taste/ Umami சுவை என்று ஒன்று உள்ளது. இது Glutamate மற்றும் சில புரத மூலக்கூறுகளால் ஏற்படுவது. இது ஒரு ஜப்பானிய வார்த்தை. சூப்புகளில் Monosodium glutamate (MSG) எனும் பொடியை சேர்த்து சுவைகூட்டுவார்களே. அது தரும் சுவைதான் இது. வெகு காலமாக நான்கு சுவை மட்டுமே அறிவியலால் ஒப்புக்கொள்ளப்பட்டது. பிற்பாடு தான்  உமாமி ஒரு சுவையாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

இது அல்லாமல் சுவை போன்றவை என ஆங்கில மருத்துவம் சிலவற்றைக் குறிப்பிடுகிறது.

Metallic taste/ astringency – இதை கிட்டத்தட்ட துவர்ப்பு எனக்கொள்ளலாம். வாயில் உலர் உணர்வு ஏற்படுத்துவது. சருமத்தை பாதுகாக்கவும், வயிற்றுப்புண்களை ஆற்றவும் பயன் தருபவை என ஆங்கில மருத்துவம் இதைக் குறிப்பிடுகிறது. (சித்தமருத்துவம் குறிப்பிடும் துவர்ப்புக்கும் இதற்கும் வித்தியாசங்கள் உள்ளன).

இதுல காரம் எங்கே?

காரம் என்பதை ஒரு வலி உணர்ச்சியாகத்தான் அறிவியல் பார்க்கிறது. இனிப்பை வாயில் போட்டால் சுவைக்கும், கண்ணில் போட்டால் சுவைக்காது. ஆனால் காரத்தை வாயில் போட்டாலும் எரியும் கண்ணில் போட்டாலும் எரியும். எனவே அது ஒரு வலிஉணர்ச்சி தான். காரத்தைத்தரும் ஸ்பைசஸ் முதலியன; நம்மைப்போன்ற விதைப்பரப்பிகளை  குறி வைத்து உருவாக்கப்பட்டன இல்லை என்றாலும், நமக்கு பலன் அளிக்கக்கூடிய மைக்ரோக்கள் மற்றும் அறிவியலால் இன்னும் முழுதாக புரிந்து கொள்ளப்படாத பல ஊட்டச்சத்து பொருட்களை அது கொண்டிருக்கிறது. காரம் என்பது நாவின் வலி உணர் TRPV1 ஏற்பிகளால் உணர்த்தபடுவது. இந்த ஏற்பிகள் பறவைகளுக்கு இல்லை. அதனால் அவற்றினால் இக்காரத்தை உணர முடியாது. அதிகக்காரம் நாவை மரத்துப்போகச் செய்யுமல்லாவா? எனவே இது ஒருவகை வலிதான். Pungency/ piquancy/ Spicy எனப் பல தொடர்புச்சொற்கள் காரத்தை குறிப்பனவாகும்.

இவ்வாறு பல்வகை செயல்பாடுகளால் நம்மால் உணரப்படும் சுவை என்பது மூளையினால் நிகழத்தப்படும் ஒரு மாயை.

இதை அறிய ஒரு பரிசோதனையை மேற்கொள்வோமா?

ஒரு மேசையின் மீது மீன், புல், மாம்பழம், மிளகாய் ஆகிவற்றை வைத்துவிட்டு பசியோடு இருக்கும் பூனை, ஆடு, குழந்தை மற்றும் கிளி ஆகிவற்றை இந்த உணவுகள் இருக்கும் அறைக்குள் அனுப்பிப் பாருங்கள்.

பூனை மீனை நோக்கிப் பாயும்.

ஆடு புல்லைத் தேடும்.
குழந்தை மாம்பழத்தை எடுக்கும்.
கிளி மிளகாயைத் தின்னத் தொடங்கும்.

“இதில் எது இனிப்பு?” என்று கேட்டால், குழந்தை மாம்பழத்தைக் காட்டும். ஆனால் கிளிக்கு மிளகாயே விருப்பமானதாக இருக்கும். பூனைக்கு மீனே சுவையான உணவாக இருக்கும்.

பறவைகளுக்கும் பூனைகளுக்கும் நாம் இனிப்பு எனக்கருதுவதைக் கொடுத்தால் அவற்றிற்கு இனிக்காது. உங்களுக்கு நன்மை செய்யும் உணவை நீங்கள் உண்ணவேண்டும் என்று, மூளை அவ்வுணவு உண்ணப்படும் பொழுது மகிழுணர்வைத் தோற்றுவிக்கிறது. அதை நாம் இனிப்பென அழைக்கிறோம்.


கழுதைக்கு பேப்பர் இனிக்கக் கூடும்… இரந்துண்ணும் விலங்குகளுக்கு  அழுகியது இனிக்கக் கூடும்.

ஆனால் அழுகியதை நாம் உண்டால் அது நமக்கு கசப்புப் போன்ற சுவையை அறிவிக்கும். கசப்பு என்பது கெட்டுப்போன உணவு, பழுக்காத காய்கள் மற்றும் விஷக்கனிகள் தரும் ஒரு நாவின் உணர்வாகும். அது மூளையின் எச்சரிக்கை.

“பிறகு ஏன் பாகற்காய் மிளகாய் போன்றவை நாம் விரும்பாச் சுவையில் இருந்தாலும் நமக்கு நன்மை அளிக்கின்றன?”

அதை அறிய நாம் சித்தமருத்துவத்தின் கொள்கைகளை ஆராயவேண்டியுள்ளது.

சித்தமருத்துவம் சுவையைப் பற்றி கூறுவது என்ன?

உணவு என்பதை ஆங்கில மருத்துவம் மேக்ரோ மைக்ரோவாகப் பார்க்கிறது ஆனால் சித்த மருத்துவம் அவற்றை அறுசுவையாகப் பார்க்கிறது.

இப்பூமியிலுண்டாகிற எந்தப்‌ பொருளும்‌ நாவிற்‌ போட்ட மாத்திரத்தில்‌ நாவிற்கு ஓர்வித அறிவு அல்லது உணர்ச்சியை  உணர்த்துகின்றது. அவ்வாறு உணர்த்தும்‌ உணர்ச்சிக்குச்‌ சுவை என்று பெயர்‌. இச்சுவைகள்‌ நாவிற்கு உருசியைக்‌ கொடுப்பதற்கென்று மாத்திரமே ஏற்படாமல்‌ உடல்‌ தத்துவங்களில்‌ ஒன்றாகிய பஞ்ச பூதங்களுக்கு இரையாகவும்‌ அமைக்கப்பட்டிறுக்கின்றன என்கிறது சித்த மருத்துவம்.

இச்சுவைகள்‌ கைப்பு(கசப்பு), இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு என ஆறு வகைப்படுகின்றன. இவைகளில்‌ ஒவ்வொன்றும்‌ ஒவ்வொரு உணவுப்பொருள்களிலும்‌ தனித்திருப்பதோடல்லாமல்‌ இரண்டு அல்லது அதிகமான சுவைகளுடன் ஒருமித்திருக்கும்‌.

இனிப்பு:

பழங்களில் இருக்கும் sucrose, குளுக்கோஸ், fructose போன்றவை இனிப்புச்சுவை கொண்டவை. சாதம் மற்றும் கிழங்குகளில் இருப்பது ஸ்டார்ச். இதில் இருப்பதும் அடிப்படையில் குளுக்கோஸ்தான் என்பதை நாம் அறிவோம். ஆனால் அவை சிறுகுடலுக்கு அருகில்தான் குளுக்கோஸ் மூலக்கூறாக உடைக்கப்படும். அதனை உடைக்கும் வேலை அமைலேஸ் துணையுடன் வாயிலேயே ஆரம்பிக்கிறது.

காரத்தன்மைகொண்ட உமிழ்நீரில் பல்வேறு நொதிகள் உள்ளன. எனவே உணவை அரைத்துக் கூழாக்கி நொதிகளுடன் கலந்தால் தான் செரிமானம் சிறக்கும். அதனால் தான் உணவு ‘அருந்த’ வாருங்கள் எனச் சொல்கிறோம். எனவேதான் ‘சாதத்தை குடிக்க வேண்டும் நீரினை மெல்ல வேண்டும் ‘ என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மாம்பழம் நறுமணத்தை தூக்கலாகக் கொண்டிருக்கிறது. ஏனெனில் நீங்கள் மாம்பழத்தை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே அது மணத்தை தூக்கலாகக் கொண்டிருக்கிறது

 வருடத்தில் ஒருமுறை மட்டுமே சீசன் சமயம் மாம்பழம் கிடைக்கும். அதனால் முடிந்த மட்டும் அதன் மைக்ரோக்கள் முதலிய ஊட்டச்சத்தை பெறவேண்டி; உங்கள் மூளை இனிப்புச்சுவை நிறை சீசன்பழங்களை அதிகம் உண்ணவைக்க  உங்களை ஊக்கப்படுத்துகிறது. மேலும் பசியை அதிகரிக்கரிக்கிறது. முடிந்த மட்டும் சாப்பிடு என்று அது உங்களை தூண்டி விடுகிறது. அந்த தூண்டுதலுக்கு ஆதாரம் இனிப்பு மற்றும் மணம்.

மாம்பழத்தின் நார்ச்சத்தானது கார்ப்பை பிடித்துவைத்துக்கொண்டு  உங்கள் உடம்பில் அக்கார்ப்பை மெதுவாக ரிலீஸ் செய்யும். சொல்லப்போனால் இந்த நார்சத்து உங்கள் டயாபடிஸ்க்கு மற்றும் இதய நோய்க்கு ஒரு நல்ல தீர்வு .மேலும் நார்ச் சத்தால் மலம் எளிதாக வெளியேறுகிறது, இது நச்சுக்களையும் வெளியேற்றுகிறது மற்றும் சில வகை கேன்சரையும் தவிர்க்க உதவுகிறது.  இதனால் சில பல விட்டமின்கள் மற்றும் இதர சத்துக்களும் உங்களுக்கு கிடைக்கின்றன. மேலும் இது உடல் இளைக்கவும் உதவுகிறது  .

 இதில் மாம்பழத்தின் நிறத்தையும்  மணத்தையும் மட்டும் வைத்துக் கொண்டு, மூளையைத் தூண்டிவிடும் இனிப்பைக் கொட்டி, மைக்ரோக்களை தவிர்த்துவிட்டு, சுவை எனும் வலையை விரித்து துட்டு பார்க்கின்றனர் கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனிக்கள்.

நாவு என்பது மெட்டல் டிடெக்ட்டரை வைத்து பரிசோதித்து உள்ளே அனுமதிக்கும் பாதுகாவலர் போன்றது. கிட்டத்தட்டே இதேபோல ஒரு பாதுகாவலர்தான் மூக்கும். உணவானது மூக்கைத்தாண்டித் தான் நாக்கிற்கு வழங்கப்படும். அதனால் தான் வாய்க்கு மேலேயே மூக்கு உள்ளது.

மூக்கு பேக்கில் இருந்தால் என்னவாகி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.  அப்படி இருந்தால்  பேக்கில் மோந்து விட்டு பின்னர் வாயில் வைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கும்.

குரங்குக்கு அது இதுவரை பார்க்காத ஒரு புதிய வெளிநாட்டுப்பழத்தைக் கொடுத்துப்பாருங்களேன். அது முதலில் அப்பழத்தை நுகர்ந்து பின்னர்தான் உண்ண ஆரம்பிக்கும். 

ஐந்தறிவு கொண்டது குரங்கு. 

பழம் என்பது உயிரோடு இருக்கும் ஒரு உணவு. 

உயிர் எனப்படும் ஐந்தாம் பூதமாகிய வெளியை நாசியைக்கொண்டும் சுவையைக்கொண்டும் உணர்கிறது  குரங்கு. உயிரற்ற பழமாய் இருந்தால் அழுகல் கசப்புச் சுவை மூலம்  குரங்கிற்கு அறிவிக்கப் படும்.

“அப்பொழுது கசப்பு என்பது தவிர்க்கப்படவேண்டிய ஒரு சுவையா?”

கசப்பு:

 ஊமத்தையைப் போல் கொன்றுவிடும்  நோக்கில் அல்லாமல் தன்னை மனிதர்கள் தின்னக்கூடாது என்று மட்டும் முடிவு செய்தவை தான் கைப்புச் சுவை நிறைந்த பாகற்காய் போன்ற காய்கறிகள். ஆனாலும் அவற்றில் மைக்ரோக்கள் நிரம்பி இருந்ததால் அவற்றையும் நாம் உண்ணத் தலைப்பட்டோம். பாகல் போன்ற கசப்பு சுவை கொண்ட பழங்கள் மனிதனால் விரும்பப்படும் சுவை கொண்டவை அல்ல. ஆனால் மனிதனுக்கு நுகரும் திறன் கம்மி என்பதால் மனிதனால் எளிதில் நுகரவியலா வாசனைகள் கொண்டு  மற்ற விலங்குகளை அது கவர முயற்சிக்கிறது.  எனவே கசப்புச் சவை உடையனவற்றை  கசக்கி நுகர்வதன் மூலம்; அதன் நல்ல தன்மையை அறிந்து கொள்ளலாம் என்றனர் சித்தமருத்துவ முன்னோடிகள்.

 இதுபோல நேரடியாக கசப்பை உணர்த்தாமல், கசக்கினாலோ நெருப்பில் இட்டாலோ நறுமணம் தரக்கூடிய அனைத்து இயற்கைதரும் தாவரப்பொருட்களுமே உடலுக்கு கசப்பை உணர்த்துவன. அவற்றில் நரம்பை பலப்படுத்தும் பொருட்கள் நிரம்ப உள்ளது என்பது சித்தமருத்துவத்தின் கருதுகோள். இனிப்பு தருவது நியூட்ரா சூட்டிகிள்ஸ்(nutraceuticals) என்றால் கசப்புப் பொருட்கள் தருவது pharmaceuticals  எனப்படும் மருந்துகள் மற்றும் கிடைப்பதற்கரிய மைக்ரோக்கள்.

சில கசப்புகள் நம்மை அடிமையாக்குபவை. காப்பியின் கசப்பு முதலில் பிடிக்காது. பிறகு மூளை அதற்கு அடிமையாகும். நிக்கோடின் போன்ற லாகிரி வஸ்துக்களும் இதுபோன்ற பிரிவில்தான் வரும். எனவே இதுபோன்ற லாகிரி கசப்பினை மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும்.

உப்பு:

நீர் நிறை பொருட்கள் உப்புச்சுவை கொண்டவை. இவற்றைப்பிழிந்தால் நீர் வரும். உதாரணம்: பூசணி, முளைக்கீரை. நீர்மிகு உப்புப்பண்டங்கள் கொழகொழப்புத்தன்மையையும் சேர்த்து கொண்டிருந்தால் உப்போடு புளிப்பும் கலந்துள்ளது என்று பொருள். குழகுழப்பு மிகுந்தவை புளிப்புப் பண்டங்கள். உதாரணம்: வெண்டை. உப்பு என்பவை சோடியம் குளோரடை மட்டும் குறிப்பதல்ல. அனைத்து மினரல்களும் இதில் அடங்கும்.

உப்பு என்பது நம்மை ஒருங்கிணைத்த ஒரு சாதனம். உப்பு விற்பவர்கள் நெய்தல் நிலத்திலிருந்து பலஊர்களுக்கு சென்று அதை விற்று வந்தனர். அவர்களாலே பல ஊர்களுக்கிடையிலான தகவல்கள் பரிமாறப்பட்டன. இந்த உப்பு வணிகத்தைக்கூட பொறுக்க முடியாத வெள்ளையர்கள் உப்பின் மீது வரி விதித்தனர். உப்பைக் கொண்டு மட்டும் பதினாறு லட்சரூபாய் சம்பாதித்திருக்கிறார்கள் வெள்ளையர்கள். அப்பொழுது ஆசிரியரின் வருமானமே மூன்றுரூபாய் தான் என்றால் இதன் மதிப்பை பார்த்துக்கொள்ளுங்கள்.

உப்புக்குப் பின்னால் நம் தேசத்தின் கதையே இருக்கிறது. உணவு ருசிப்பது உப்பால்தான். உப்பு தான் உணர்ச்சிக்கு அடிப்படை என்கின்றார்கள் (சோத்துல உப்பு போட்டுதானே சாப்பிடுற?) உணர்ச்சிக்கான மினரலோ கார்டிக்காய்ட், உப்பைக் கொண்டு தான் வேலை செய்கின்றன.

புளிப்பு:

புளிப்புச்சுவை மற்ற சுவைகள் போலல்லாமல்  H+  அயனியால் உணரப்படுவதாகும். உதாரணம், எலுமிச்சை, புளி, தயிர் போன்றவை புளிப்பின் கீழ் வரும். மாவுப்பொருட்கள் சர்க்கரை மூலக்கூறுகளால் ஆனாலும், அவை புளிக்கும் தன்மை உடையவை ஆதலால் அவற்றையும் புளிப்பில்தான்  சேர்த்திருக்கின்றனர். லாட்டிக் அமிலம் நிறைந்த புளிப்புச்சுவை மிகுந்த மோர் தயிர் முதலியவன  செரிமானத்திற்கு உதவி செய்யும் நல்ல கிருமிகளைக் கொண்டுள்ளது. இந்த நல்ல கிருமிகள் அனைத்தும் உங்களுக்கு பி மற்றும் கே விட்டமின்கள் முதலியவற்றைத் தரக்கூடியவை.

காரம்:

பெப்பர் எனப்படும் மிளகானது பறவைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்துவிட்டு, பறவையின் குடலில் மெதுவாகச் சென்று விதை நேர்த்தி செய்யப்பட்டு வெளியே வந்து விழுகிறது. நேர்த்தி செய்யப்பட்ட விதையை பறவைகள் பறந்து சென்று பரப்புகின்ற.

பறக்க இயலா உங்களை அது விதைபரவலுக்கு தேர்ந்தெடுக்கவில்லை. எனவே அது உங்கள் குடலால் விதை நேர்த்தி செய்வதற்கு ஏற்றவாறு பரிணமிக்கப்படவில்லை 

இதன் காரணமாக அது உங்களுக்கு காரச்சுவை அளித்து; நீங்கள் அதை உண்ணாமல் பார்த்துக்கொள்கிறது. மீறி அதை உட்கொண்டீர்கள் என்றால் காரத்தினால் அந்த விதை உங்கள் குடலிலிருந்து வேகமாக வெளித் தள்ளப்பட்டு விடும்.

 அறுசுவைப் பந்தியில் முதல் ரவுண்டிலேயே மூக்குப்பிடிக்க உண்டுவிட்டு உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு, மிளகு தட்டிய ரசத்தை பரிமாறும் பொழுது,  காரத்தின் எரிச்சலால் குடல் வேகமாக நகர ஆரம்பித்து வயிற்றை காலியாக்கி  மோர் சாதத்திற்கு தயார்படுத்துகிறது.

காரச்சுவை கொண்டவை மாவாக மசியாத பகுதிகளை உடையவையாகவும், நார் உடையவையாகவும் இருக்கின்றன. இதுபோல தன்மையை உடையது கருணைக்கிழங்கு. இது நாவுக்கு காரத்தை உணர்த்தாத போதும், இதையும் காரத்தில் தான் சேர்த்திருக்கின்றனர்.

டச்சுக்காரர்கள் இங்கிலாந்தில் அநியாய விலையில் மிளகு கிராம்பு போன்ற காரம் மற்றும் கசப்புச் சுவை பண்டங்களை விற்றுக் கொண்டிருந்தனர். இந்த மிளகு கிராம்பு போன்ற சமையல் பொருட்களை இங்கிலாந்து இந்தியர்களிடம் நேரடியாக வாங்க முடிவெடுத்தது. இங்கிலாந்தில் சில வணிகர்கள் அரசரை கூட்டு சேர்த்துக் கொண்டு ஒரு கம்பெனி ஆரம்பித்தனர் அதன் பெயர் தான் கிழக்கிந்திய கம்பெனி. பின்பு நடந்தது எல்லாம் வரலாறு. இந்த மிளகைக் கொண்டு கிரேக்கர்கள் பல மருந்துகளை உருவாக்கினர்.

பொங்கலில் இருக்கும் மிளகை நாம் ஒதுக்கி வைக்கும் பொழுது தேசத்தின் ஒரு கதையையே நாம் ஒதுக்கி வைக்கின்றோம். இப்படிப்பட்ட மகத்துவம் மிக்க உணவுப் பொருட்களால் தான் அந்நியர்கள் இந்தியாவை அடைய நினைத்தனர் என்பதை நாம் மனதில் கொள்வோம்.

துவர்ப்பு என்பது இரத்தத்தை ஊறவைக்கும் சுவை என்கிறது சித்தமருத்துவம்.

சுவைகள் பெரும்பாலும் ஒன்றிரண்டு கலந்தே இருக்கும். உதாரணத்திற்கு நெல்லிக்கனியை எடுத்துக்கொள்வோம்.

 மூத்தோர் சொல் போல முன்னால் கசந்து பின்னால் இனிப்பது நெல்லிக்கனியின் பண்பு. நீர்நிறை காய்கறிகளில் உப்பு இருக்கும் எனப்பார்த்தோமே இதுவும் பிழிந்தால் நீர்வரக்கூடியதே. எனவே இதில் உப்பு உள்ளது, மேலும் சிட்ரிக் அமில புளிப்புச்சுவையும், கொஞ்சமாக பழச்சர்க்கரையையும் கொண்ட கனி அது. அதனால் தான் நாவில் போட்டவுடன் உப்பும் புளிப்பும் இணைந்து; கசப்பது போன்ற தோற்றமயக்கத்தை மூளைக்கு அளிக்கின்றன. நீங்கள் நீர் அருந்தியபின்னர் அமிலங்கள் நீர்க்கப்பட்டு சர்க்கரைச்சுவை உணரப்படுகிறது. அதனால் தான் நெல்லிக்கனி நீர் அருந்திய பின்னர் இனிக்கிறது. இப்படிக்கலவையான சுவையைக் கொண்டிருந்தாலும் அது இரத்தவிருத்திக்கு உகந்தது. எனவே சித்த மருத்துவம் இதை துவர்ப்பில் வகைப்படுத்துகிறது. இதிலேயே சில அரிய வகை மலைநெல்லிகள் உள்ளன. அவை நீண்ட ஆயுளுக்கு உறுதுணை புரிவனவாம். எனவே தான் அதியமான் தான் வாழாவிட்டாலும் தமிழ் வாழவேண்டும் எனும் நோக்கில் அவ்வைக்கு  கிடைத்தற்கரிய அக்கனியைத் தந்தான்.

நாவிற்கு வெவ்வேறு சுவைகளை உணர்த்தினாலும் அது உடலுக்கு எவ்வகை நன்மையை செய்கிறது எனும் அடிப்படையிலே தான் சித்தமருத்துவத்தில் சுவைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

 பூ  வழங்குவது நெக்ட்டர் எனும் மது. ஆனால் தேன் என்பது தேனீக்கள்(மதுநக்கிகள்) வாயில் சுமந்து, வயிற்றில் சேகரித்து, கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதன் நொதிகளைக் கலந்து பின்னர் தனது கூட்டில் பாதுகாத்துவைக்கும் பொருள். மேலும் தேனில் ஹைட்ரஜன் பெராக்ஸைட், பிளேவனாய்டுகள், பாலி ஃபீனால்கள், விட்டமின்கள், மினரல்கள் போன்றவை அடர்த்தியாக்கப்பட்டு விடுகின்றன

 எனவே நெக்ட்டர்(மது) என்பது இனிப்பு. ஆனால் தேன் என்பது நாவிற்கு இனிப்பானாலும் உடலுக்கு கசப்பே  என்பது சித்தமருத்துவத்தின் புரிதல்.

குறிஞ்சியில் தேனை எடுத்தல் கிழங்குகளை அகழ்தல் முதலியனதான் முக்கியமான தொழிலாக இருந்தது. குறிஞ்சியில் நாம் மிகவும் தேடியது இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையையே.

குறிஞ்சியை விட்டு மற்ற திணைகளுக்கு நகர்ந்தவர்களுக்கு அந்தச் சுவை மறக்கவே இல்லை. இனிப்பின் மீதான ஆசை மருதத்தில் கரும்புகளை விளைவித்த பொழுது தான் அடங்கியது. இருப்பினும் கரும்பு என்பது அளவாக உண்ணப்பட வேண்டும். எனவே தான் ஆசையின் குறியீடாக பட்டினத்தார் அதைக் கையில் ஏந்தியபடி திரிந்தார்.

 குறிஞ்சியில் தினைகளை விதைப்பது வழக்கில் இருந்தாலும் மிகப் பெரிய அளவில் அது அங்கே பயிர்செய்யப்படவில்லை. மருதத்தில் நெல் வகைகளும் மானாவாரி நிறத்தில் பல்வகை தினைகளும் அதிக அளவில் விளைவிக்கப்பட்டன.  

 முல்லையில் மாடுகள் மூலம் நமக்கு கிடைத்த  பால் ஆறு சுவைகளையும் கொண்டது. அதில் லாக்டோஸ் எனும் சர்க்கரை இருக்கிறது. மேலும் மினரல்களும், கொழுப்பும் இருக்கிறது. அதோடே புரதமும் அதில் இருக்கிறது. தேவையான சத்துப் பொருட்கள் நிரம்ப உண்டு அதில். எனவே அது அறுசுவையும் கொண்டதாகக் கருதப்படுகிறது. இவ்வாறு நெய்தலின் உப்பு, குறிஞ்சியின் தேன் மற்றும் கிழங்குகள், முல்லையின் பால் பொருட்கள் மற்றும் தானியங்கள் முதலிய அனைத்தும் மக்களுக்குக்கிட்டும் வகை மருதத்தில் செய்யப்பட்டது.

உடலை சமநிலையில் வைத்திருப்பதே உணவின் நோக்கம். உடலின் சமநிலை தவறுவதே நோய் எனப்படும். தமிழர்கள் ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு உயிர்த்தாதுவாக மாறுகின்றன எனும் கொள்கையின் அடிப்படையில் அறுசுவையையும் கொண்டு உடலின் சமநிலையை நிலைநிறுத்தியிருக்கின்றனர்.

உணவின் மூன்றாவது பண்பு – உயிர்த்தாது:

மருத நில வாழ்வு வாழ்ந்தபொழுது அரிசி முதலாய் பல்வகை உணவுப்பொருள்கள் தமிழர்களது உணவுப்பட்டியலில் இருந்தன. அவற்றில் ஒவ்வொரு உணவுப்பண்டத்திலும் சில சுவைகள் மிகுந்தும், குறைந்தும், கலந்தும் இருந்ததை அவர்கள் சுவைத்தறிந்தனர். ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு உயிர்த்தாதுவாய் மாறுவதை உடற்கூறாய்வின் மூலம் அவர்கள் அறிந்திருக்கக் கூடும்.

 உதாரணத்திற்கு இனிப்புச் சுவை ‘தசை’ (glycogen)  எனும் தாதுவாக மாறுவதைக் கண்டனர். அகோரி போல் சதையைச் சுவைத்தால் ஒழிய இதைக் கண்டுபிடிப்பதற்கு அக்காலத்தில் வாய்ப்பில்லை. அப்படி சுவைப்பதும் தப்பு  இல்லை. ஏனென்றால் ஆங்கில மருத்துவர்களே முந்தைய காலகட்டங்களில் சிறுநீரைச் சுவைத்துதான் மதுமேக நோயைக் கண்டறிந்திருக்கின்றனர்.

 Diabetes mellitus என்ற வியாதியின் பொருள் என்ன தெரியுமா?

 லத்தினில் அதன் பொருள் "sweet urine".

வைத்தியன் என்பவன் கடவுளுக்கு சமானம். அவனுக்கு எதுவுமே அசிங்கம் அல்ல.

 மாவாய் ஆக்கும் பண்டங்களான தானியங்கள், கிழங்குகள் முதலியனவற்றைக் கரைத்து வைக்கும் போது புளிப்பேறுவதைக் கண்ட அவர்கள், இவைகளை புளிப்புச் சுவைப் பண்டம் என வகுத்தனர். இவைகளை அதிகம் உண்ணும் போது கொழுப்பாக (Triglycerides) மாறுவதைக் கண்டு புளிப்பு உணவின் தாது ‘கொழுப்பு’ என்றனர்.

உண்ணும் உணவனைத்தும் அன்ன இரசமாய் மாறி, பிறகு இரத்தமாய் விருத்தியாவதாய் கருதினர். நோயற்ற ஒருவனுக்கு எதை உண்டாலும் இரத்தமாகுமாயினும் இரத்த தாதுவிற்கு துவர்ப்பே உவப்பு என்பது அவர்கள் கணிப்பு. உடலில்‌ நிகழும்‌ எல்லா மாறுதல்களையும்‌ பிரதிபலித்துக்‌ காட்டும்‌ கண்ணாடிபோல்‌ குருதி விளங்குகிறது.

கசக்கினாலோ, நீரிலோ நெருப்பிலோ போட்டாலோ வாசனை தரும் பொருள்களை கசப்பு என்றனர். கசப்பு விண்(வெளி) மற்றும் வளியின் கலவை. சுவைகளிலேயே வெளி எனும் விண்ணின் ஆற்றல் கசப்பிடம் மட்டுமே உள்ளது.  எனவே கசப்பு, நரம்பு எனும் தாதுவிற்கு துணைபுரியும் எனக் கூறினர்.

எவ்வளவு மசித்தாலும் மசியாத பகுதி கொண்டதையும், நார் உடையவற்றையும் நாவிற்கு அறிவிக்கவில்லை என்றாலும் காரச்சுவைமிக்கன என்றனர். மிளகு போன்றவற்றை உண்ணும் போதும், வயிற்றின் அமிலம் மிகும்போதும் காரத்தன்மை கொண்ட எச்சில் சுரப்பதைக் கொண்டு  காரத்தின் (alkali) தாது உமிழ்நீர் என்றனர். காரம் வளி மற்றும் தீயின் கலவை .

இனிப்புச்சுவை என்பது நிலம் மற்றும் நீர் (நிலத்தொடு நீர்) ஆகியவற்றின் கலவையாகும். இது உங்கள் உடலில் வாதம் மற்றும் பித்தம் ஆகியவற்றை பேலன்ஸ் செய்கிறது. ஆனால் இனிப்புச்சுவையை அதிகமாக சாப்பிடும் பொழுது உடலில் கபம் அதிகரிக்கிறது.

இனிப்பு மண் மற்றும் நீரின் கலவை என்றனர். 

ஆனால் உப்பு, நீர் மற்றும் நெருப்பின் கலவை என்றனர். 

நீர்சத்து மிகுந்த காய்கறிகள் உப்பினைக் கொண்டுள்ளன. அவை நிலத்தின் அழல் அதிகரிக்கும் கோடைகாலங்களில் தான் தாவரங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. உப்புக்கள்(minerals) எலும்போடு தொடர்புடையன என்பது செத்து எரிந்து சுண்ணம்பாய் மிஞ்சிய சாம்பல்பொடியால் அவதானித்தனர் (மனிதச் சாம்பலில் அதிகம் இருப்பது சுண்ணம்புச் சத்து எனும் கால்சியம் – ‘செத்து சுண்ணாம்பு ஆகிவிட்டான்’ எனும் வழக்கோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்). சாம்பல் ஆற்றலின் குறியீடு.

 மினரல்கள் பூமியை விட வயது முதிர்ந்தவை. தாவர உண்ணிகளால் உப்பை அதிகம் உடலில் சேர்த்துவைக்க இயலாது. அதனால் உப்புச்சுவை மிகுந்த மினரல் கட்டிகளை அவை மிகுவிருப்பத்தோடு நக்கிச்சுவைக்கும். உப்பானது எளிதாய் உடலை விட்டு நீங்க அதிக வாய்ப்புள்ளது. வியர்வை, வாந்தி முதலிய இதற்கு எடுத்துக்காட்டு. தசைபிடிப்பு ஆரம்பித்து உயிர் சேதம் வரைக்கும் உப்புச்சேதம் இட்டுச்செல்லும்.

 உடலில் உப்பு குறையும் போது அதை நீங்கள் உண்டால் நாவிற்கு அது மதுரமாகும். உடலில் உப்பு அதிகரித்தால் நாவுக்கு கரிப்புச்சுவை ஏற்படுத்தும். அளவினைப்பொருத்தே இதன் சுவை என்பது தீர்மானிக்கப்படுகிறது. மேலும் உலோகங்களும் உப்பு வடிவில் உடலில் அதிகரித்து உடலுக்கு ஊறு விளைவிக்கலாம்.

உடலின் சூட்டுக்கு சர்க்கரை எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு உப்பும் அவசியம் ஏனெனில் உப்பு தான் சர்க்கரையை உடலுக்குள் இழுத்து உள்ளே போடுகிறது.  அந்த சர்க்கரை தகனத்தால் தான் உடலில் வெப்பம் பெறப்படுகிறது.


சில சுவைகள் ஒன்றுக்கொன்று நட்பு பாராட்டும், சில சுவைகள் ஒன்றை ஒன்று எதிர்க்கும். உதாரணத்திற்கு உப்பும் கசப்பும் இணைந்து உயிர் வளர்ப்பன. ஆனால் இவை மிகின் தூக்கம் கெடும். இவை இரண்டும் பித்தத்தை வளர்ப்பன. பித்தம் என்பது உடல் சூட்டைக் குறிப்பது.

உடலில் கசப்பு அதிகம் உள்ளவர்கள் குளிர் பிரதேசத்தில் வசிப்பது நல்லது. அல்லது ஆறு வேளை குளிப்பது நல்லது.  சிவன் கோவிலில் ஆவுடையாரோடு கூடிய லிங்கத்திற்கு வெயிற்காலத்தில் ஆறு வேளை அபிஷேகம் நடக்கும். ஏனெனில் சிவன் உப்பு, சக்தி கசப்பு (என்று ச. கந்தசாமி முதலியார் தனது உணவு மருத்துவம் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்).

ஏற்கனவே கனசூடு மிகுந்தவர்கள் உடலில் பித்தமும் அதிகரித்து; அதுவும் மூன்றாம் நிலைக்குச் சென்றால், பித்தம் மூளையை பாதித்து hepato encephalopathyக்கு வழிவகுத்துவிடும். இதைத்தான் பித்தம் தலைக்கேறிவிட்டது என்கின்றனர். அப்படிப்படவர்களை பித்தன் என்று தான் அழைப்பார்கள். அவர்கள் அக்காலத்தில் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று அலைந்து, சித்த மருத்துவ கருதுகோள்களை உருவாக்கியிருக்க வாய்ப்புள்ளது.

இந்த 'வாதம் பித்தம் கபம்' எனும் வார்த்தைகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம், கடந்து வருகிறோம். இவை தான் இந்திய மருத்துவ முறைகளின் ஆதாரமாய் இருப்பதையும் நாம் பார்த்தோம்.

அடுத்த பதிவில் இவற்றையும் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.


ஏர் முன்னது எருது 12 - பித்தம்

இந்தப்படத்தை பாருங்களேன்! இந்தப் பட்டாம்பூச்சி ஏன் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது? இந்த மீனும் பல்லியும் ஏன் நிழலை நா...